Wednesday, August 27, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.2

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1



ஊரில் கொலு என்றால் ஏதோ பேருக்கு ரெண்டு அடுக்கில் நாலு பொம்மை என்றெல்லாம் வைக்கமாட்டார்கள். பெரும்பாலும் பத்து படிகளுக்கு மேல் இருக்கும். படிக்கு பத்து பன்னிரெண்டு பொம்மைகள் அடுக்கி இருப்பார்கள். அந்த கொலு ஸ்டாண்ட் பெரிய பெரிய உத்திரக் கட்டைகளால் முறுக்கப்பட்டிருக்கும். ஸ்டாண்டை ஒன்று சேர்ப்பதற்கே ஒருநாள் பிடிக்கும். அப்புறம் அதில் அந்த வீட்டு மாமாவின் வெளுத்த வேட்டியை கிழிசல் தெரியாமல் மடித்துப் போட்டு அதன் மேல் பொம்மைகள் பளீரென்று அடுக்கப் பட்டிருக்கும். சில வீடுகளில் எலி கடித்த ஜரிகை வேட்டியெல்லாம் போட்டு பிரமாதப் படுத்தியிருப்பார்கள்.

இந்த கொலு ஸ்டாண்டின் அடியில் இரண்டு மெட்ராஸ் ஒன்டிக் குடித்தனம் நடத்தலாம் - அவ்வளவு பெரியதாக இருக்கும். அதில் தான் அந்த வீட்டு மாமி கொடுக்க வைத்திருக்கும் வெத்தலைப் பாக்கு தட்டுகள், ப்ளவுஸ் பீஸ், சுண்டல் விநியோகம் மற்றும் இன்ன பிற சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கும். முக்கால் வாசி வீட்டு மாமாக்களுக்கு இந்த ஸ்டாண்டின் அடியில்தான் எடுபிடி வேலை. கணகச்சிதமாக உட்கார்ந்து கொண்டு கர்மசிரத்தையாய் வெத்தலையை எண்ணி எண்ணி அடுக்கிக் கொண்டிருப்பார்கள். இந்த வெத்தலையை மட்டும் கூட இரண்டு வைத்துவிட்டால் போதும் "மனசில பெரிய மைசூர் மஹாராஜான்னு நினைப்பு...வெத்தலை விக்கிற விலைக்கு நாலு வைச்சா போறாதா..."ன்னு அடிக்கடி மாமியிடமிருந்து டோஸ் விழும். மைசூர் மஹாராஜா இத்தனை அல்பமாக இப்படி உட்கார்ந்து கொண்டா வெத்தலையை அடுக்கிக் கொண்டிருப்பார் என்று அடிக்கடி எனக்கு டவுட் வரும்.

அன்றைக்கு நாங்கள் போன வீட்டில் நல்லவேளையாக அந்த வீட்டு மாமா ஊரில் இல்லை. சேகர் போன உடனேயே எடுபிடி வேகன்ஸியில் ட்யூட்டி ஜாயின் பண்ணிவிட்டார். எங்களை உள்ளே சரியாக வரக்கூட விடாமல் "டேய் இங்க நிறைய வேலை இருக்கு...மாமிக்கு ஹெல்ப் பண்ணனும், கொலுவ வேற ரீ அரேஞ் பண்ணனும் கொஞ்சம் லேட்டாகும் நீங்க கிளம்புங்க"ன்னு புத்தியைக் காட்டிக்கொண்டிருந்தான். இன்னாடா சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு பார்த்தால் அவனோடு பேவரிட் ஜிகிடி இன்னும் இரண்டு ஜிகிடிகளோடு உட்கார்ந்துகொண்டிருந்தது. அதான் தம்பி, சோலோ சோலையப்பனாக மாற ட்ரை பண்ணுகிறான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது. சேகரை சொல்லி குற்றமில்லை, தெருவில் இருந்த பழக்கம் அப்பிடி. பேவரிட் என்று ஏதாவது ஜொள்ளி ஒரு ஜிகிடி மேல் லேசாக அக்கறை காட்டிவிட்டால் போதும், அந்த ஜிகிடி வரும் போது மற்ற வானரங்கள் நம்மை காய்ச்சு காய்சென்று காய்ச்சி நாற அடித்துவிடும். அப்புறம் அந்த ஜிகிடி மருந்துக்கு கூட நம்மை திரும்பி பார்க்காது. சேகரும் அது நடக்கக் கூடாது என்று பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தான்.

"டேய் ஒத்தையா ரீ அரேஞ்ச் பண்ண முடியாதுடா நாங்களும் ஹெல்ப் பண்றோம்"ன்னு ஒட்டிக்கொண்டோம். "என்னத்த ரீ அரேஞ்ச் பண்ணப் போறேள்....எல்லாம் நல்லாதான் இருக்கு"ன்னு அந்த வீட்டு மாமி வேறு ஜிகிடி கோட்பாடு தெரியாமல் வாரிக்கொண்டிருந்தார். "இல்லை மாமி, சீதா ராமர் பொம்மை இங்கே இருந்தா சிவன் அங்க இருக்கனும், நாய்க்குட்டி இங்க இருக்கனும் பன்னிக்குட்டி படுத்துண்டு இருக்கனும் "ன்னு கொலு அரேஞ்சிங் டெக்னாலஜியில் ஆக்ஸ்போர்ட் ஆர்க்கிடெக்ட் இங்கே அளந்து விட்டுக்கொண்டிருந்தார்.

என் கூட வந்த கன்னுக்குட்டி கணேசனுக்கு கொண்டைக் கடலை சுண்டல் என்றால் உயிர். கொண்டைக் கடலை சுண்டலுக்காக எதையும் தியாகம் செய்வான் - தெரு கிரிக்கெட் பேட்டிங் தவிர. அன்றைக்கு மாமி வீட்டில் கொண்டைக் கடலை சுண்டல். கிட்டத்தட்ட முடிந்துவிடுகிற பதத்தில் அடுக்களையிலிருந்து வந்த சுண்டல் வாசனையை மோப்பம் பிடித்தது முதல் கன்னுக்குட்டி கணேசன் கஞ்சா கணேசனாகிவிட்டான். சேகர் பாடு படு திண்டாடமாகிவிட்டது. சேகர் தனியாக கன்னுக்குட்டியை தள்ளிக்கொண்டு போய் எச்சரித்தும் அவன் கண்டுக்கவே இல்லை.

வேறு வழியில்லாமல் கொலு ஆர்க்கிடெக்ட் ப்ராஜெக்ட் வேலையை ஆரம்பித்து "டேய் இங்க வா இந்த கோபுரத்தை பிடிச்சிக்கோ கீழ போட்டுடாத ஜாக்கிரதை"ன்னு என்னை ஜூனியர் எடுபிடியாய் அப்பாயிண்ட் பண்ணிவிட்டார். ஒரு இத்துப் போன பொம்மையை இரண்டாவது வரிசையிலிருந்து முதல் வரிசைக்கு ஆர்க்கிடெக்ட் மாத்துவார். அப்புறம் ஈசான மூலையில் நின்று கொண்டு "இங்கேர்ந்து பாரு...இப்ப சூப்பரா இருக்கு இல்ல?"ன்னு என்னிடம் கேட்பான், நானும் "ஆமாண்டா கலக்கலா இருக்கு...லேசா ஒரு பத்து டிகிரி திருப்பி வைச்சா இன்னும் ஓஹோன்னு இருக்கும்"ன்னு ஐடியா குடுப்பேன்.

உட்கார்ந்திருக்கும் ஜிகிடிகள் முகத்தில் "இவர்கள் எப்போ கொலுவ ரீ அரேஞ்ச் பண்ணி நாம எப்ப வெத்தலை பாக்கு வாங்கி வீட்டுக்குப் போவது என்று கவலை படர ஆரம்பித்தது.

இதெயெல்லாம் கண்டுக்காமல் செக்கிழுக்கிற மாட்டுக்கு சிவலிங்கம் தெரியுமான்னு கண்ணுக்குட்டி கணேசன் பாட்டுக்கு கொண்டக் கடலை சுண்டலை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தான். மாமி சுண்டலை பதமாய் இறக்கி சுடச் சுட பாத்திரத்தோடு கொலு ஸ்டாண்ட் அடியில் கொண்டு வந்து வைத்துவிட்டார். அவ்வளவு தான் கணேசனுக்கு ஸ்டாண்டுக்கு அடியில் போவதற்க்கு ஒரு சாக்கு தேவைப்பட்டது.

"டேய் என்னடா சொதப்பிக்கிட்டு இருக்கீங்க...அந்த மூனாவது வரிசையில வேஷ்டி சரியா போடலைடா அதான் வரிசையே கோணலா தெரியுது..இரு நான் கொலு ஸ்டாண்ட் அடி வழியா அத சரி பண்றேன் நீங்க மேல கரெக்டா இருக்கான்ன்னு பாருங்கன்னு" உள்ளே புகுந்துவிட்டான். அந்த வரிசையில் செட்டியார் பொம்மை ஒன்று சுத்தி சின்ன சின்ன பாத்திரங்களில் அரிசி, பருப்பு நிரப்பப் பட்டு உண்மையாகவே அழகாக வைக்கப் பட்டிருந்தது. சேகரால் கன்னுக்குட்டியை ஒன்றும் சொல்ல்ல முடியவில்லை.

உள்ளே போன கன்னுக்குட்டி கணேசன் நேராய் போய் அவசர அவசரமாய் ஒரு கரண்டி சுண்டலை வாயில் அள்ளிப் போட்டுக்கொள்ள, இருந்த சூட்டில் வாய் பொள்ளிப் போய்விட்டது. சூடு பட்ட கணேசன் பேருக்கேத்த மாதிரி கன்னுக்குட்டி மாதிரி துள்ள அவன் மண்டை ஸ்டாண்டில் தட்டி பொம்மைகள் குலுகுலுங்க செட்டியார் பொம்மை நங்கென்று தரையில் விழுந்துவிட்டது. நல்ல கணமான பொம்மை என்பதால் நல்ல வேளை நொறுங்கவில்லை. உடைந்திருந்தால் அன்று மாமி எங்களை பின்னிப் பெடலெடுத்து கொலு ஸ்டாண்ட் படிகளாக்கியிருப்பார். பெருமூச்சு விட்டுக் கொண்டே அவசர அவசரமாய் செட்டியார் பொம்மையை நானும் சேகரும் திரும்ப எடுத்த போது தான் பார்த்தோம், கழுத்தில் கீறல் விழுந்து செட்டியார் தலை வேறு உடல் வேறாக ஆகியிருந்தார்.

எனக்கு அந்த மாமியின் தசாவதாரம் பற்றி நன்றாகத் தெரியுமாகையால் கைகால் வெலவெலத்து விட்டது.

"டேய்....!! செட்டியார் மண்டையைப் போட்டுட்டார்டா....."ன்னு நான் பயந்து கொண்டே சொல்லும் போதும் கூட சேகருக்கு ஜிகிடி போதை இறங்கவில்லை.

"டேய் நல்ல நாளும் அதுவுமா இவங்கள்லாம் வெத்தல பாக்கு வாங்கிக்க வந்திருக்கும் போது இப்படி அமங்கலமா சொல்லாதடா...செட்டியார் பொம்மை உடைஞ்சிருச்சுன்னு அழகா சொல்லு"ன்னு ஜிகிடிகள் முன்னால் ஆர்க்கிடெக்ட் எனக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.

எனக்கு கடுப்பாகிவிட்டது. "இப்போ மாமி அடுக்களையிலிருந்து வருவாங்க...நீயே அமங்கலமா இல்லாம இப்ப சொன்ன மாதிரி அழகா விஷயத்தை சொல்லு. எனக்கு சந்தைக்கு போனும் ஆத்தா வையும்"ன்னு திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிட்டேன்.

நல்ல மாட்டுக்குத் தான் ஒரு சூடு என்று கண்ணுக்குட்டி கணேசனும் சுண்டலுக்கு ஆசைப்பட்டு அங்கு தங்கிவிட்டான். அப்புறம் அடுத்த நாள் தெரு கிரிக்கெட்டில் விஷயம் அரசல் புரசலாய் வெளியே வந்தது. மாமிக்கு செட்டியார் பொம்மை கார்த்திகை வகையாக தமையன் வாங்கிக்கொடுத்த சென்டிமென்ட்டாம். ஜிகிடிகள் முன்னால் சேகருக்கும் கன்னுக்குட்டிக்கும், மாமாக்கு விடும் டோஸைவிட இரண்டு மடங்கு அதிகமாக டபுள் ஸ்ட்ராங் டோஸில் மாமி வறுத்து எடுத்துவிட்டாராம். அத்தனை தடபுடலிலும் கன்னுக்குட்டி கணேசன் இரண்டு கரண்டி கொண்டைக் கடலை சுண்டலை உஷார் பண்ணிவிட்டான்.

அதற்கப்புறம் ஜிகிடிகள் வட்டாரத்தில் சீன் போட்டுக்கொண்டிருந்த குல"சேகர்" கொலுசேகர் என்று பெருமையுடன் வழங்கப்பட்டு வந்தார்.

இப்போதும் செட்டியார் பொம்மையைப் பார்த்தால் எனக்கு சேகரின் "செட்டியார் மண்டையைப் போட்ட்டுட்டார்..." அமங்கல அட்வைஸ் தான் நியாபகத்துக்கு வரும்.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்

Monday, August 25, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.1

ஜொள்ளித் திரிந்த காலம் - முதல் பாகம் படிக்க --> இங்கே

ரொம்ப நாளாக கையை அரித்துக்கொண்டு இருந்தது. ஜொள்ளித் திரிந்த காலம் முடித்த போது...சே கொஞ்சம் அவசரப்பட்டு முடித்துவிட்டோமோ...கேவலம் பதினொன்று அத்தியாயங்களில் முடித்துவிடுகிற அளவுக்கா ஜொள்ளு விட்டிருக்கிறோம்...வற்றாத ஜீவ நதியை கேவலப் படுத்திவிட்டோமோ. என்றும்..இல்லை இல்லை அலுத்துப் போயிருக்கும் கரெக்டாய் முடித்ததினால் தான் நிறையபேருக்கு பிடித்தது என்று மனசுக்குள் பட்டிமன்றம் ஓடிக்கொண்டிருந்தாலும், ஓரமாய் நெருப்பு எரிந்து கொண்டே இருந்தது. இந்த வலைப்பதிவு மூலமாக வந்த நண்பர்களும் வேறு அதற்கு அப்போ அப்போ நெய் ஊத்திக் கொண்டிருந்தார்கள். அப்பாடா பழியை அவர்கள் மேல் போட்டு விட்டு நைஸாக ஆரம்பித்துவிடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். எலியன், தி ரிங், போன்ற sequel பெயிலியர்கள் நினைவுக்கு வந்து பயமுறுகின்றன என்றாலும் மனதில் பட்டதை தான் முக்கால் வாசி இந்த வலைப் பக்கத்தில் எழுதியிருக்கிறேன் அது தான் இதுவரை எனக்கு நிறைய நண்பர்களை ஈட்டிக் கொடுத்திருக்கிறது என்பதால் அவ்வழியையே கடை பிடிக்கிறேன். வாரத்திற்கு ஒரு பதிவாவது போடவேண்டும் என்று கொப்புரானே சத்தியமாய் சொல்கிறேன் நானும் முயன்று பார்க்கிறேன். வரப்பு கட்டனும் வாய்க்கால் வெட்டனும்ன்னு ஏதாவது வேலை வந்து விடுகிறது. அத்தோடு அந்த வேலைகள் சம்பந்தமான டென்ஷன் வேறு. மனது டென்ஷனில்லாமல் சந்தோஷமாக இருந்தால் தான் எழுதுவது இயல்பாக வருகிறது இல்லையென்றால் எழுதிவிட்டு படித்தால் பிடிக்கமாட்டேங்கிறது இதில் அதை வேறு போட்டு உங்களிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொள்ளவேண்டுமா?

ஊரில் உள்ளவர்கள், இங்கே படிப்பவர்கள் என்று உங்கள் எல்லார் மேலும் பழியைப் போட்டுவிட்டு ஜொள்ளித் திரிந்த காலத்தை மீண்டும் ஆரம்பிக்கிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பிடிக்காவிட்டால் வழக்கம் போல் காறித் துப்புவதற்கு தடை ஏதுமில்லை...:)
************************************************************

நவராத்திரி வந்தாலே ஊர்ப்பக்கம் கோலாகலம் தான். சாயங்காலம் நாலு மணிக்கே அல்லோலப் பட ஆரம்பித்துவிடும். அரும்பு மல்லீஈஈஈ என்று பூக்காரர் உதிராய் மல்லிகைப் பூவை உழக்கில் அளந்து விற்க ஆரம்பித்துவிடுவார். வயசுப் பெண்கள் இருக்கும் வீட்டிலெல்லாம் உழக்கு உழக்காய் வாங்குவார்கள். அவர்கள் வீட்டில் இருக்கும் அப்பாவி அப்பாவும், உழக்கை விட ஓரடி உசரமாய் இருக்கும் கடைக்குட்டி தம்பியும் தையல்காரர் மாதிரி ஊசி நூல் வைத்துக்கொண்டு பூவைத் தொடுக்க ஆரம்பிப்பார்கள். ஐந்தரை மணிக்கு வயசுப் பெண்களெல்லாம் அழகாக அலங்காரம் செய்து கொண்டு அம்சமான கலரில் பட்டுப்பாவாடை/ பாவாடை தாவணியணிந்து கொண்டு கோவிலுக்கு போவார்கள். சும்மா போக மாட்டார்கள்.

மேற்கு அத்தத்தில்(எல்லையில்) இருக்கும் கோவிலுக்கு போவதற்கு முதலில் ஒரு ஜிகிடி கிழக்குக் கோடிக்கு போய் கோவிலுக்குப் போகலா ரெம்பாவாய் என்று செட் சேர்க்கும். முதலில் போகும் அந்த ஜிகிடி தனியாகப் போகாது, கூடவே ஒரு அல்லக்கை போகும். தெருவில் இருக்கும் வானரங்கள் எல்லாம் ஐந்து மணியோடு தெரு கிரிக்கெட்டை மூட்டை கட்டிவிட்டு ஐந்தரை மணிக்குள் வீட்டில் இருக்கும் பவுடரை கிவுடரை பூசி இல்லாத பெர்ச்னாலிட்டியை ஏத்தி தெருவில் ஸ்டாட்டிஜிக் பொசிஷனில் கூடி இருப்போம். கிங்பெல் சில சமயம் கடமை தவறிவிடுவான். "எண்பத்தி ஏழுல வெஸ்ட் இன்டீஸ் மெட்சில கவாஸ்கர் லாங் ஆன்ல ஒரு வீசு வீசுனார் பாரு"ன்னு என்னம்மோ கவாஸ்கரை கல்யாணம் பண்ணிக்கொள்கிற மாதிரி அவரைப் பற்றி ஸ்லாகித்துப் பேசிக்கொண்டிருப்பான். இதற்க்குள் "டேய் சீக்கிரம் வாடா இதுக்குத் தான் நீ வர வேண்டாம்ன்னு சொன்னேன்"ன்னு கிழக்கே போகும் முதல் ஜிகிடி அல்லக்கையிடம் பேசுவது போல் கடமையை கோடிட்டி காட்டிவிட்டுப் போகும். மெய் வருத்தம் பாரார்,பசி நோக்கார்,கண் துஞ்சார். கருமமே கண்ணாயினார் என்று அப்புறம் எல்லாரும் கடமையில் உஷாராகிவிடுவோம்.

கிழக்கே போன (ஜிகிடி) ரயில், கூட்டம் சேர்ந்து மேற்கில் கோவிலை அடைந்தவுடன் இங்கே கடமை அதீத நிலையை அடையும். "ஓக்கேடா அப்புறம் பார்க்கலாம்...முக்கியமான வேலை இருக்கு...எங்கம்மா டெய்லி சனீஸ்வரனுக்கு அடிப்பிரத்ட்சணம் வைக்கனும்னு சொல்லி இருக்கா" என்று நைஸாக சில வானரங்கள் நழுவப் பார்க்கும். "டேய் சனீஸ்வரனே சனீஸ்வரனுக்கு அடிப்பிரதட்சணம் வைக்கிறத நாங்க பார்த்ததே இல்லைடா நாங்களும் வரோம்"ன்னு கோவிலை நோக்கி படையெடுப்போம். நாலு ஜிகிடிகள் சுத்துவட்டாரத்தில் இருந்தால் போறாதா...சரஸ்வதி சபதம் ஊமை சிவாஜி போல் ஃபீலிங் காட்டி வானரங்கள் மணியடிப்பதும், உதட்டை முனுமுனுத்துக்கொண்டு "சொல்லடி அபிராமி" ரேஞ்சுக்கு பந்தா காட்டுவதும், பக்தி உச்சிக்கேறி கருவரையில் இருக்கும் மூலவரை வேரோடு பிடுங்காமல் விடமாட்டேன் என்று உருக்கி சீன் போடுவதும் என்று சும்மா இருந்த சிரங்கை சொறிந்து விட்டாற் போல் கோவில் ஆகிவிடும். சிலதுகள் அடிப்பிரதட்சணம் வைக்கிறேன் விழுந்து கும்புடுகிறேன் என்று போடும் சீன் இருக்கே...தலையில் ஒரு குடத்தை வைத்தால் மூன்றாம் பிறை கமலஹாசனுக்கு டூப் போட்ட மாதிரி இருக்கும்.

இதில் பெரிய இம்சை என்னவென்றால் போட்ட சீன் வொர்க்கவுட் ஆச்சான்னு சீன் போடுகிற வானரம் அடுத்தவர்களிடம் கேட்டுத் தான் விபரம் தெரிந்து கொள்ளமுடியும். அவ்வளவு டெடிகேஷனோடு சீன் போட்டுக்கொண்டிருக்கும். ஒரு வேளை போட்ட சீன் வொர்கவுட் ஆனாலும் ஒருத்தரும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். "டேய் அவ இன்னிக்கு என்ன பார்த்தாடா...எனக்கு கண்டிப்பா தெரியும்"ன்னு சாதித்தாலும் நடக்காது. "ஆமாண்டா பார்திருப்பா பார்த்திருப்பா நீ கழுத்துல அப்பிண்டிருக்கிற வீபூதியைப் பார்த்து அனுமாருக்கு வெண்ணைக் காப்பு சாத்திருக்கோன்னு அவளுக்கு சந்தேகம் வந்திருக்கும், கண்டிப்பா பார்த்திருப்பா" - வசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி கேஸ் தான்.

இதையெல்லாம் மீறி ஒருவேளை அம்பாள் வரம் குடுத்தாலும் பூசாரி வரம் குடுக்கமாட்டார். "மணியடிச்சா கரெக்ட்டா வந்துருவேளே....சுண்டலுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்! எல்லாம் பூஜையெல்லாம் முடிஞ்ச அப்புறம் தான்" என்று நேரம் பார்த்து மானத்தை வாங்கிவிடுவார். தெருவில் வானர கூட்டத்தின் ரெப்யூடேஷன் அப்படி. நவராத்திரி மற்றும் விசேஷமான காலங்களில் தெருவில் இருக்கும் பெண்மணிகள் எல்லாரும் சேர்ந்து நிறைய ஸ்லோகங்கள் ராகத்தோடு சொல்லுவார்கள். "டேய் நாமளும் அவங்களோடு சேர்ந்து கூட உட்கார்ந்து புஸ்தகத்தை பார்த்து ஸ்லோகம் சொல்லி அசத்தினோம்ன்னு வெச்சிக்கோயேன்... நம்ம பக்திய மெச்சி நாளைக்கு உங்க வீட்டிலயும் நாளக்கழிச்சி எங்க வீட்டுலயும் பொண்ணு குடுக்க வரிசையில நிப்பாங்க"ன்னு முப்பது நாளில் மாப்பிள்ளை ஆவதற்க்கு ஒரு தரம் கூட இருந்த குரங்கு ஒன்று ஐடியா குடுத்தது. ஆஹா சூப்பர் ஐடியா என்று உட்கார்ந்தால் நம்ம நேரம் - அன்று பார்த்து கொஞ்ச நேரத்திலேயே ஜிகிடிகள் கூட்டம் பொறுப்பாய் படிக்க எழுந்து போய் விட்டது.

சரி இப்ப முடிந்துவிடும் நாமும் கிளம்பிவிடலாமென்று பார்த்தால் இங்கே மாமிகள் முடிக்கிற வழியக் காணும். இந்த ஸ்லோகம் இந்த ஸ்லோகம் என்று இழுத்துக் கொண்டே இருக்கிறார்கள். எங்கள் பக்கதிலிருந்த கிங்க் காங்க் மாமி வேறு சந்தேகத்தோடு அடிக்கடி பார்க்கிறாரென்று கூட இருந்த குரங்கு மண்டயை ஆட்டி ஆட்டி சீனாக்காரனுக்கு புரையேறிய மாதிரி மந்திரம் சொல்லி நடித்துக் கொண்டிருந்தது. நானும் அவ்வை ஷண்முகி நாசர் காய்த்த்ரீ மந்திரம் சொல்வது மாதிரி ஏதோ ஆக்ட் குடுத்து நழுவ ஆரம்பிக்கும் போது கரெக்டாய் சீனாதானா மாமா எங்கிருந்தோ வந்துவிட்டார். "ம்ம்ம் அப்படித்தான் ...மந்திரமெல்லாம் நல்ல ஸ்பஷ்டமாய் சொல்லனும்" என்று அவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பித்து நாங்கள் அன்று சொன்ன மந்திரத்தில் தெருவுக்கே கல்யாணம் பண்ணியிருக்கலாம்.

நவராத்திரியில் கோவில் சின்ன அத்தியாயம் தான். தெருவில் முக்கால் வாசி வீட்டில் கொலு வைத்திருப்பார்கள். கொலு வைத்தவர்கள் வீட்டில் இந்த நாளில் இன்னார் என்று எல்லாரையும் நாள் விகிதமாக வெத்தலைபாக்கு வாங்கிக் கொள்ள தெரு முழுவதும் கூப்பிட்டிருப்பார்கள். அப்படி கூப்பிட்ட வீடுகளுக்கு ஜிகிடிகளும் அவர்கள் அம்மாக்களும் போவார்கள். ரொம்ப சின்னப் பையன்களுக்கெல்லாம் இந்த இன்விடேஷன் தேவையில்லை "மாமி கொலு இருக்கா"ன்னு கேட்டுக்கொண்டே உள்ளே போனால் சுண்டல் தருவார்கள். ஆனால் வயதுப் பையன்களுக்கு இதெல்லாம் மானப் பிரச்சனை. கூப்பிடாமல் போக முடியாது. ஆனால் ரொம்ப தெரிந்த மாமியாக இருந்தால் ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு ஜிகிடி போன சமயமாய் உள்ளே கேஷுவல் விசிட் அடிக்கலாம்.

தெருவில் எல்லா மாமிகளுக்கும் ஒரு வம்பான பழக்கம் உண்டு. ஜிகிடிகள் யாராவது வெத்தலைபாக்கு வாங்க வந்தால் பாட்டு பாடினால் தான் உண்டு என்று பிடிவாதம் பிடிப்பார்கள். அதுவும் பாட்டு கற்றுக் கொள்ளும் பெண் என்று தெரிந்துவிட்டால் போதும் பாடினால் தான் எல்லாருக்கும் சுண்டல் கிடைக்கும் அதுவரைக்கும் கொலுவையும் சுண்டலையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கனும். அதிலும் சில மாமிகள் "அலை பாயுதே" பாடுடீன்னு நேயர் விருப்பமெல்லாம் வேறு வைப்பார்கள். சில ஜிகிடிகள் நன்றாக பாடும் சிலதுகள் சுமாராய் பாடும், சிலதுகள் பாடினால் கொலை பாயுதே தான். இருந்தாலும் அந்த வீட்டு மாமி "நிம்மி எங்காத்துல நேத்திக்கு பாடினா பாருங்கோ இடமே தேவலோகமாய் ஆயிடுத்து"ன்னு வீண் ஜம்பம் விடுவார், அப்புறம் நிம்மியின் கொலைபாயுதே கானமழை தெருவெல்லாம் எல்லார் வீட்டிலும் பொழியும்.

மேலே சொன்ன மாதிரி கொஞ்சம் நல்ல பழக்கமான மாமி வீடு என்றால் ஜிகிடிகள் உள்ளே போன ஐந்தாவது நிமிஷத்தில் "கொஞ்சம் தண்ணி தாங்கோ மாமி ...அட உங்காத்துல கொலு வைச்சிருக்கேளா"ன்னு ஏதாவது சாக்கு போக்கு சொல்லி முதல் வானரம் நைஸா இடத்தைப் பிடிக்கும். பின்னாடியே "சேகர் இங்கே வந்தானா.."ன்னு கேட்டுக்கொண்டே அடுத்த இரண்டாவது நிமிஷத்தில் மற்ற வானரங்கள் மடத்தை பிடிக்கும்.

இப்படி ஒருதரம் சேகரை தேடிக்கொண்டு நானும் கன்னுக்குட்டி கணேசனும் போன போது உள்ளே சேகர் ஓவராய் பிலிம் போட்டுக்கொண்டிருந்தார்.

--ஜொள்ளிங்ஸ் தொடரும்

Tuesday, July 29, 2008

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - படங்கள்

...மற்றும் விபரங்கள் என்று தலைப்பு வைத்தால் இந்தப் பதிவைப் போல் நீளமாகிவிடும். அதனால் "எப்பவோ நடந்த"-என்பதை தலைப்பில் தவிர்த்திருக்கிறேன் :)

படங்கள் கீழே கடைசியில் இருக்கின்றன.


ஊருக்கு கிளம்புவதற்கு இரண்டு வாரங்கள் முன் நண்பர் கதிர் வலைப்பதிவை படித்து விட்டு ஒரு மடல் தட்டி இருந்தார். முதல் மடல் என்பதால் மானே தேனே போட்டிருந்தார். ஆஹா ஒரு விக்கெட் விழுந்தாச்சு...சென்னையில் சந்திக்கலாமா (போண்டாக்கு ஆச்சு) என்று நூல்விட்டுப் பார்த்தேன். கண்டிப்பாக என்று தெகிரியம் குடுத்ததில் சரி நெல்லை சந்திப்பு மாதிரி சொந்த செலவில் போண்டா என்று பிசுபிசுக்காது என்று கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அடுத்தடுத்து போண்டா என்ன போண்டா, சாப்பாட்டுக்கே நாங்க கியாரண்ட்டி என்று குரு நிஷா, டோண்டு, பிரகாஷ், உண்மைத் தமிழன், பாபா, பிரபு கார்த்திக் - லிஸ்டு மெதுவாக நீண்டது. எதுக்கும் ஒரு தரம் ஃபோன் பண்ணி கண்பர்ம் பண்ணுவோம் என்று நம்பர் தந்த அனைவருக்கும் டயல் செய்ய ஆரம்பித்த உடனேயே களை கட்ட ஆரம்பித்துவிட்டது.

"சிட்டி சென்டர் சரி சார் ஆனா கரெக்டா எங்க? டி.நகரா, மைலாப்பூரா...எந்த இடம்? என்று டோண்டு கேட்டவுடன் எனக்கு குழம்பிவிட்டது. விட்கோ மாதிரி இல்லையே எனக்கு தெரிந்து சிட்டி சென்டர் ஒரு இடத்தில் தானே இருக்கிறது என்று அப்புறம் நான் சொன்னது நகர மையம் இல்லை ராதாகிருஷ்ணன் சாலை ஷாப்பிங் மால் என்று விளக்கிச் சொல்லி போனை வைத்தால், மனுஷன் அடுத்த இரண்டாவது மணி நேரத்தில் திரும்ப கூப்பிட்டு "சிட்டி சென்டருக்கு நீங்க இங்கேர்ந்து வந்தா இப்படி வரனும், அங்கேர்ந்து வந்தா அப்படி வரனும்"ன்னு ஒரு அல்வா குடுத்தார் பாருங்கள்...கரெக்ட் பதத்தில் வந்திருந்தது.

ஐகாரஸ் பிரகாஷ் மீட்டிங்கில் இருந்ததால் அவர் நண்பர் தான் போனை எடுத்தார். ஆரம்பத்திலிருந்தே அவருக்கு நான் ஐ.சி.ஐ.சியையோ என்று சந்தேகம் என்று நினைக்கிறேன். நான் வேற ஏகப்பட்ட சொதப்பல்

பிரண்டா...? லண்டனா? இப்போ எங்கேர்ந்து பேசறீங்க? உங்க பேரு என்ன? என் பேரு இது..ஆனா டுபுக்கு சொன்னா தான் தெரியும்ன்னு சொன்னவுடன் ஒரு ஐந்து வினாடி மௌனம்....அவர திரும்ப பேசச் சொல்றேங்கன்னு உஷாராக வைத்தார்.

பிரபு கார்த்திக் கரெக்டாக லஞ்ச் டயமில் மாட்டிக்கொண்டார் "இங்கிலீஷ் ப்ளாகெர்ஸ்லாம் நிறைய பேர் இருக்காங்களே..நீங்க ஏன் ஒரு பத்து பேர கூட்டிக்கிட்டு பந்தாவா ப்ளாகர்ஸ் மீட்க்கு வரக்கூடாது" என்று கூட்டத்துக்கு அடியப் போட்டவுடன் பிரபு கார்த்திக் "(ஆபிஸுல) மீட்டிங்க்கு போனும் மேடம் வைய்யும்"ன்னு நழுவிட்டார். இருந்தாலும் உடனே செல் நம்பரை மாற்றாமல் பொறுப்பாய் அடுத்த நாள் சந்திப்புக்கு அவ்யுக்தாவை அழைத்துவந்தார்.

சிட்டி சென்டர் வாசலில் இரண்டு பேர் டுபுக்குன்னு அவர்களுக்குள் விளித்துக்கொண்டது தெரியாமல் அவர்களும் ப்ளாகர்ஸ் மீட் தான் போலன்னு போய் வழிந்து சுதாரித்து அப்புறம் நாலாவது மாடிக்கு எப்படி போகனும்ன்னு வழி கேட்டு அவர்களும் "எல்லா இடத்தையும் மாதிரி இங்கையும் மேலே தான் போகனும்"ன்னு பொறுப்பாய் வழி சொல்லி, நான் போன அப்புறம் துப்புகிறார்களா என்று திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே போனால் தோளை தட்டி "நீங்க டுபுக்கு தானே" என்று ஒருவர் கேட்டார். சரிதான் மூஞ்சியிலேயே எழுதி ஒட்டி இருக்கு போல என்று இந்த தரம் சொதப்பினால் மூனாவது மாடிக்கு வழி கேட்கலாம் என்று கூச்சமே இல்லாமல் ஆமாம் நானே தான் டுபுக்கு என்றவுடன் செந்தில் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார்.


(குரு) நிஷா தவிர , கட்டாயம் வருகிறேன் என்று அடித்து சொன்ன அம்மணிகள் எல்லாரும் கரெக்ட்டாய் டிமிக்கி குடுத்துவிட்டார்கள். சொல்லி வைத்தாற் போல எல்லாருக்கும் கடைசிக்கு முந்தின நிமிடத்தில் வேலை வந்துவிட்டது. அதிலும் நித்யாவிற்கு ஆட்டோவில் ஏறியதுக்கு அப்புறம் ஆபிஸில் கூப்பிட்டு சனிக்கிழமை சாயங்காலம் ஏழு மணிக்கு அப்ரைசல் வைத்துவிட்டார்கள். அம்பிக்கு முந்தின நாளே தங்கமணியிடம் பெர்மிஷன் கிடைக்கவில்லை என்பது எனக்கு தெரியுமாகையால் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் அம்பி போன் போட்டு நங்கநல்லூரில் பனி மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் வரமுடியவில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்தார். விக்கியும் குருவும் ஏன் பெண் பதிவர்கள் ஒருவரும் வரவில்லை என்று என்னிடம் ஏமாற்ற தொனியில் கேட்கவே இல்லை. அதிலும் விக்கிக்கு ஏகப்பட்ட வருத்தம் என்று எனக்குத் தோன்றவே இல்லை. பதினான்கு பேர்கள் வந்திருந்தோம். ஓரிரண்டு பேரைத் தவிர முந்தின நாளே தொலைபேசியிருந்ததால் தெம்பாகவே போயிருந்தேன். போன பிறகு தான் அடுத்த நாள் இன்னோரு மாபெரும் வலைப்பதிவர் கூட்டம் ஒன்று நடக்கப்போவதாக தெரிந்தது. தெரிந்திருந்தால் அந்த நாளிலேயே போய் ஜோதியில் ஐய்க்கியமாகியிருப்பேன்.


குரு நிஷா முதலிலேயே சிட்டி சென்டருக்கு வந்து சாப்பாடுகடையை முடித்துவிட்டார்கள். படு க்யூட்டான குழந்தைகளை பார்த்துக்கொள்ள நிஷா கிளம்ப்பி முதல் மாடிக்குச் செல்ல மெதுவாக எல்லாரும் வந்து சேர்ந்தார்கள். பாபா இரண்டு சேர் தள்ளி முதுகைக் காட்டி உட்கார்ந்து கொண்டு சாப்பாடு ஒரு கட்டு கட்டி முடித்தவுடன் நைஸாக போன் பண்ணி எங்கே இருக்கிறீகள் என்று புதுசா கேட்கிற மாதிரி கேட்டு ஜோதியில் சேர்ந்துகொண்டார்.

கதிர், செந்தில், இகாரஸ் பிரகாஷ், உண்மைத்தமிழன், பாபா, பாபாவின் அண்ணன், விக்கி, சிமுலேஷன், டோண்டு, அவ்யுக்த்தா, குரு, பிரபு கார்த்திக் என்று நீளமேசை மாநாடு தொடங்கியது. சமுதாயம், தமிழ், வலைப்பதிவுகளின் எதிர்காலம் - என்று பொறுப்பில்லாமல் பேசாமல், அனானி ஆட்டம், ஏன் அனானிக்கள் சில பதிவுகளை கண்டுகொள்ளவே மாட்டேன் என்கிறார்கள், இட்லி வடை இந்நேரம் இந்த சந்திப்பு போட்டோக்களை ரிலீஸ் பண்ணியிருப்பாரா? ப்ளாகர்ஸ் மீட் நடத்த சென்னையில் இது மாதிரி கல்ர்புல்லான இடங்கள் வேறென்ன என்று ஆளாளுக்கு பேசிக்கொண்டிருந்தார்கள். உண்மைத்தமிழன் கடமை வீரராக பக்கத்து டேபிளில் உட்கார்ந்திருந்த காதல் ஜோடிகள் ஒரு மணிநேரமாய் ஒரு சூஸை உறிஞ்சிக்கொண்டே கடலைப் பார்த்து கடலை போட்டுக்கொண்டிருந்ததை சொல்லி பெருமூச்சோடு சமூக பிரக்ஞை காட்டினார்.

டோண்டுவுக்கு போரடித்துவிட்டது என்று நினைக்கிறேன், அடிக்காத போனை காதில் வைத்துக்கொண்டு வீட்டிலிருந்து கூப்பிடுவதாக சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். வீட்டில் விருந்தாளிகள் வந்து காத்துக்கொண்டிருப்பார்களே என்று கேட்பதற்கு முன் அவரும் அதையே சொல்லி அப்பீட் ஆகிவிட்டார். சிமுலேஷனும் ஜூட் விட மீதமிருந்த கூட்டம் பீச்சுக்கு போய் காத்தாட உட்கார்ந்து பேசலாம் என்று கிளம்பினோம். நடுவில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளாமல் அப்படி என்ன பீச்சுக்குப் போய் அரட்டை என்று நிஷா குடுத்த மண்டகப்பிடியில் "எனக்கு பீச்சுல கண்டம்" என்று குருவும் ஒதுங்கிக் கொண்டார்.

பீச்சுக்கு போன மிச்சம் பத்துபேரும் ஐ.நா சபை மாதிரி ஒரு முடிவுக்கே வராமல் நிறைய விஷயங்களைப் பேசினோம். பாபாவிற்க்கு ட்விட்டரிலிருந்து எவ்வளவு கமிஷன் என்று கேட்ட மறந்துவிட்டது. டிவிட்டர் பற்றி நிறைய பேசினார். பி.கே, அவ்யுக்தா, விக்கி, கதிர் பிரகாஷ் எல்லாரும் பல்வேறு விஷயங்களில் லெவல் காட்டினார்கள். உண்மைத்தமிழன் இனிமையாக பழகினார். நான் வழக்கம் போல தமிழ் திரையுலகில் மலையாள மற்றும் மும்பை நடிகைகளின் மேலாண்மை குறித்தும், மேற்படி சமூகத்தின் தாக்கத்தை இல்லறம் தாக்காமல் சமச்சீருடன் நெறியாள்கை புரிவது எப்படி என்று கருத்தாடலில் ஈடுபட்டேன்.

மொத்தத்தில் நிறைய பேரை சந்தித்ததில் மிக இனிமையாக இருந்தது ஆனாலும் ஒவ்வொருத்தரையும் தனித்தனியாக சந்தித்திருந்தால் இன்னும் சுவாரசியமாக பேசியிருக்கலாமோ என்று தோன்றியது உண்மை.(அவர்களுக்கும் இதுவே தோன்றியதா தெரியவில்லை).

அடுத்த நாள் நண்பர் ஆடுமாடு-வை சந்திக்க முடிந்தது. மிக சுவாரசியமான மனிதர் சுவாரசியமான வேலை வேறு பார்க்கிறார். என்னுடைய சேலஞ்ச் விஷ்யத்தில் ஏற்கனவே உதவி செய்வதாக வக்களித்ததை மறக்காமல் சினிமாவில் தலையைக் காட்டுவதற்க்கு இயக்குனர் வசந்தபாலனிடம் வேறு பேசி வைத்திருந்தார். அக்டோபரில் திரும்ப வருவேன் அதற்குள் பெர்சனாலிட்டியை ஏத்தி "சார் போஸ்ட்" டயலாக் எல்லாம் பேசி பழகிவருகிறேன் என்று சொல்லி வைத்திருக்கிறேன் என்று உங்களுக்கெல்லாம் முன்னாடியே வார்னிங் கொடுத்துக்கொள்கிறேன் :))

இதில் சந்தித்தவர்களிடம் கேட்க மறந்த இன்ன பிற கேள்விகள்

•பிரகாஷ் - ஐகாரஸ் - காரணப் பெயரா?
•பாபா - ப்ளாகர்ஸ் மீட்டுக்கெல்லாம் முக்கா டவுசர் போட்டுகிட்டு வருகிற இரகசியம் என்ன? இந்த முறையும் என்.ஆர்.ஐ கோட்பாடின் படி ரோட்டோர பாட்டி, சுவரோர போஸ்டர், சூச்சா போகிற நாய்குட்டி நிழற்படங்கள் எடுத்தீர்களா?
•கதிர் - வெறும்ன படித்துவிட்டு ஊக்குவிக்கிற உங்கள் எனர்ஜி எங்கிருந்து சீக்கிரட் என்ன?
•செந்தில் - அடுத்த தரமாவது காராசேவ் வாங்கித் தருவீங்களா?
•பிரபு கார்த்திக் - என்னை வைத்து சூசகமாக He- He சீரிஸில் மேட்டர் ஏதாவது வருமா?








Monday, July 14, 2008

சென்னை

பி.ஏ.வில் தனியாக ஜாலியாக போனால் பக்கத்தில் ஐம்பத்தியைந்து வயது தாண்டிய மாமி பாட்டியும், பின்னால் சீட்டை காலால் அடிக்கடி எட்டி உதைக்கிற வாண்டும் உட்காரக் கடவது என்று எனக்கு எழுதி இருக்கிறது. இது போக நான் உட்கார்ந்திருக்கிற பக்கம் ஆம்பிளை கம்மனாட்டி க்ரூ மெம்பர் தான் உபசாரத்துக்கு வரவேண்டும் என்று தங்கமணியின் சாபம் வேறு பலித்து தொலைகிறது. இதுக்கு பேசாமல் கஜகஸ்தான் ஏர்லைன்சிலேயே போயிருக்கலாம்.

வேறு வழியே இல்லாமல் தூங்கிய மூன்று மணி நேரம் போக மீதி ஏழு மணி நேரத்தை ஓட்ட டாம் ஹான்க்ஸ் நடித்த சார்லி வில்சன்ஸ் வார் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது நல்ல படம். பட ஆரம்பத்தில் ஹாட் டப்பில் வெள்ளைக்கார குழந்தைகள் பிறந்தமேனியாக குளிக்கும் போது மட்டும் பக்கத்தில் வயதான பெண்மணி இருக்கிறாரே என்று கொஞ்சம் நெளிய வேண்டி இருந்தது. அதற்கப்புறம் ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா எப்படி ரஷ்யாவின் முதுகில் குத்தியது என்று படம் சுத்த சைவமாக போனது. அப்புறம் பேச்சு குடுத்ததில் தான் தெரிந்தது பக்கத்திலிருந்தவர் பத்மா ஷேஷாத்திரி பள்ளி முதல்வர். இரண்டாவது முறை படம் ஓட ஆரம்பித்த போது திரும்பவும் ஹாட் டப் சீனெல்லாம் பார்க்காமல் ரொம்ப நல்ல பிள்ளையாக பள்ளி முதல்வரிடம் இந்தக் கால ஸ்டூடன்ட்ஸைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால் ஆச்சரியகரமாக சென்னை தூத்துக்குடி ஏர் டெக்கான் கலக்கலாய் இருந்தது. அனேகமாய் அந்த ப்ளைட் மும்பாயிலிருந்தோ குஜராத்திலிருந்தோ வருகிறது. இத்துனூன்டு ட்வின் ப்ரொப்பெலர் விமானத்துக்கு கண்ணுக்கு குளுமையாய் இரண்டு ஏர்ஹோஸ்டஸ். அருமையான சர்வீஸ் வேறு.

சென்னை சென்னை தான். மைலாப்பூரென்ன, பாண்டி பஜாரென்ன, ஸ்பென்சர், சிட்டி சென்டர் ஷாப்பிங் மால்ஸென்ன...சூப்பராக இருக்கிறது. ஷாப்பிங் மால்கள் எல்லாம் நவநாகரீக நங்கைகள் வலம் வர இன்னமும் மிக அழகாக இருக்கின்றன. என்ன விலைவாசி ஒன்று தான் ஷாக் அடித்தது. "டேக் த ட்வெண்டி பைவ்"ன்னு அசால்ட்டாக மக்கள் பணத்தை வீசி எறிந்து விட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். மீறி பேரம் பேசியதில் "இந்த பேரதுக்கு ...லண்டன்ல இருக்கன்னு மட்டும் மூச்சு விட்டுறாத..கொன்னே போட்ருவாங்க"ன்னு வார்னிங்க தான் கிடைத்தது. ஒன்னே ஒன்னுங்க...நான் பார்த்த வரை ஆட்டோகாரர்கள் தான் ஐய்யோ பாவம். ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பச்சையப்பாவிலிருந்து ஆழ்வார்பேட் சிக்னலுக்கு அறுபது ரூபாய் மூன்று வருடம் முன்னாலேயே வாங்குவார்கள் என்று எனகுத் தோன்றியது. இன்னமும் அதே தான். எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை.

துணிக்கடைகளில் ட்ரெஸ்ஸில் துணி எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அதற்கேற்ற மாதிரி பில்லில் கூட்டி இருந்தார்கள். ஹெம் அடிக்காத கிழித்துவிட்ட முக்கால் டவுசர் அதே துணியில் இருந்த முழுப் பேண்ட்டைவிட விலை கூடுதல். "பேசாம முழு பேண்டை வாங்கி நாமளே கிழிச்சிக்கலாமே என்ற ஐடியா வீட்டில் யாருக்கும் தோணாமல் 'உன்னை எப்படி லண்டன்ல அலோ பண்ணினாங்க..பைல்ட் கிட்ட சொல்லி போற வழியில் அரபிக் கடல்ல தள்ளிட்டு போகச் சொல்லறேன்' என்று சமுதாய அக்கறை தான் விஞ்சியது. ஆழ்வார்பேட் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகத்தை ஏதோ ஒரு பாங்க் ஏற்றுக்கொண்டு டெய்லி சாய்ங்காலம் டிபன் போடுகிறார்கள். வீட்டில் எல்லாரும் அது பிராசதம் என்று பஜனை பாடினாலும் அக்காக்களின் உபயத்தில் கோயிலுக்கு போகாமலேயே டெய்லி டிபன் கிடைத்தது.

அக்கா பசங்களெல்லாம் பெரிய பையன்களாகிவிட்டார்கள். டெஸ்க்டாப்பில் அசின் மற்றும் பெயர் தெரியாத இன்ன பிற மாதுக்கள் மிளிர்கிறார்கள். பிலிம்மி சானல் புண்யத்தில் ஏஞ்சலினா ஜோலிக்கு பிறகு காலியாயிருந்த தன்னிகரலில்லா தலைவி பதவியை ஒருவழியாக நிரப்ப முடிந்தது. கண்டேன் சீதையை ரேஞ்சுக்கு இம்ப்ரெஸ்ஸாகி இந்த புது தலைவி பற்றி விஷயங்கள் சேகரித்தால் "என்ன மாமா நீங்க வேஸ்டாயிருக்கீங்க...இவ எப்பவோ வந்தாச்சு பேரு கத்ரீனா கைப், நாலு ஒன்னுக்கும் ஒப்பேறாத படங்கள்ல நடிச்சிருக்கா...நீங்க வேற தலைவி கொலைவின்னு அகநானூறு மாதிரி புலம்பிகிட்டு ...சல்மான்கான் எப்பவோ உஷார் பண்ணிட்டான்"ன்னு காறித் துப்பிவிட்டார்கள். இதில வேற ஒருத்தன் அவளை எல்லாரும் கூப்பிடுகிறமாதிரி "கேட்"ன்னு செல்லப் பேரு வைச்சு வேறு விளிக்கிறான்.

"டேய் உங்க எல்லாருக்கும் அரும்பு மீசை முளைச்சு பெரிய பசங்களாயிட்டீங்க ஒத்துக்கறேன்...ஏதோ உங்க ரேஞ்சுக்கு எம்மா வாட்சன் படத்தை டெஸ்க்டாப்புல போட்டுக்கோங்க வேணாங்கலை..யார்கிட்டயும் வீட்டுல போட்டுக்குடுக்க மாட்டேன் ஆனா கத்ரீனா கைப்ப மட்டும் எவன் கம்ப்யூட்டர்லயாவது பார்த்தேன்...அப்புறம் பேஜாராகிடுவேன் நானே ரொம்ப நாள் கழிச்சு ஒரு தானைத் தலைவியைக் கண்டுபிடிச்சிருக்கேன் அத்தோட இனிமே எவனாவது செல்லமா 'கேட்'டுன்னு கூப்பிட்டீங்க அப்புறம் நான் Dog-ஆ மாறிடுவேன்னு"னு குடும்பத்தில் சொத்தை பிரிப்பதற்க்குள் போதுபோதுமென்றாகிவிட்டது. தலைவிக்கு சொந்த ஊரு லண்டனாம். அடா அடா அடா....கேட் படம் ஒன்னு கிடைச்சா ஹாலில் ஜோராக மாட்டவேண்டும்.

சென்னை வலை மக்கள் வலை மக்கள் சந்திப்பு நல்லவேளை பிசுபிசுக்காமல் தப்பித்தது. அது பற்றி நிறைய சொல்லவேண்டுமாதலால் படங்களுடன் அடுத்த பதிவில்