Sunday, November 11, 2012

இனிய தீபாவளி வாழ்த்துகள்

நூறு ரூபாய்க்கு பெரிய பை நிறைய வெடி வாங்குவது என்பது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாக இருந்த காலத்தில், ஐம்பது ரூபாயிலிருந்து வீட்டில் பேரத்தை ஆரம்பித்து நாற்பது ரூபாய்க்கு படிந்து, சோகமாய் முகத்தை வைத்துக் கொண்டு, "யார்ட்டயும் சொல்லாத கூடக் கொஞ்சம் வெடி வாங்கிக்கோ" என்று அம்மாவும் மாமியும் ஆளுக்குத் தரும் இருபது ரூபாயாயையும் சேர்த்து மொத்தம் என்பது ரூபாய்க்கு வெடி வாங்கி, பக்கத்து வீட்டு லெஷ்மி வெடி குப்பையையும் நைஸாக சேர்த்துப் போட்டு "இந்த தரம் மொத்தம் நூறு ருபாய்க்கு வாங்கினேன்டா" என்று உதார் விட்டு வெடிக்கும் பிஜிலியும் சீனி சரமும், ரெட் ஃபோர்ட் யானை சரமும், நாக் அவுட்டும் இன்ன பிறவும் அன்று குடுத்த சந்தோஷத்தை இன்று ஏக விலை குடுத்து வாங்கும் சீன பேன்ஸி அயிட்டங்கள் எனக்குத் தருவதில்லை. அடுத்த நாள் தெருவையே பெருக்கி குமிந்திருக்கும் குப்பையில் ஒரு பிஜிலி வெடி மருந்தைத் தூவி, இரண்டு வெடிக்காத ராக்கெட்டையும் கலந்து கொளுத்தி, விளையும் மாயாஜாலக் காட்சியை - எங்கே வெடித்து விடுமோ என்று பயத்துடன் தூரத்திலிருந்து பார்க்கும் அந்த திரில்க்கு முன் இந்த சீன வெடிகள் கால் தூசு பெறமாட்டா.இருந்தாலும் இவற்றை வெடிக்கும் மகள்களின் முகத்தில் மத்தாப்பாய் மலரும் சந்தோஷத்திற்காகவாவது ஊரில் கொண்டாடி நிஜ தீபாவளியைக் காட்ட வேண்டும்.

இனிய தீபாவளி வாழ்த்துகள்

Wednesday, October 10, 2012

ஜில்பான்ஸ் - 101012

ரொம்ப நாள் கழித்து ஜில்பான்ஸ் எழுதுகிறேன்.

சமீபத்திய சினிமா பர்ஃபி, சுந்தரபாண்டியன் என்று சகட்டு மேனிக்கு எவ்வளவோ படங்கள் பார்த்தாலும் சில படங்கள் மட்டுமே இதை எப்படியாவது நியாபகம் வைத்து ப்ளாகில் போட்டால்,நம்மையும் ரவுடி என்று ஊர் ஒத்துக்கொள்ள உத்தரவாதம் அளிக்கும். அந்த வரிசையில் இங்கே வீடு காலி செய்து ஊருக்கு கிளம்பிய நண்பரிடம் ஆட்டையைப் போட்டு பார்த்த படம் தான் "Valkyrie". இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்களே அவரை போட்டுத் தள்ளப் பார்த்து தோல்வியில் முடிந்த ஒரு நிகழ்வைப் பற்றிய படம். ஹிட்லரை, இத்தோடு சேர்த்து அவர் ஆட்களே மொத்தம் பதினைந்து முறை போட்டுத் தள்ள முயற்சி செய்திருக்கிறார்கள். அவற்றில் இதுவே கடைசி முயற்சி. நிகழ்வு உண்மையென்பதாலும், படத்தில் தடாலடி திருப்பங்களுக்காக மசாலா ரொம்ப சேர்க்காமல் குடுத்திருந்ததாலும் இந்தப் படம் ரொம்பவே பிடித்திருந்தது. டாம் க்ரூய்ஸ் பாத்திரமாகவே மாறிவிட்டார், கரண்டியாகவே மாறிவிட்டார் என்று விமர்சன ஜல்லியடிக்குமளவிற்கு குடுத்த காசுக்கு குறைவில்லாமல் நடித்திருக்கிறார். அதை விட சுவாரசியமான ஒரு விஷயம் அவர் நடித்த அந்த கலோனல் Claus von Stauffenberg  - ஒரிஜினலாகவே சைட் போஸில் டாம் க்ரூஸ் மாதிரி தான் இருக்கிறார். இதற்காகவே டாம் க்ரூஸ் இந்த வேஷம் கட்ட ஒத்துக்கொண்டதாகவும் சிலர் கூறுகிறார்கள். ஹாலிவுட்டில் சோபாவில் இழுத்துப் போட்டு திகட்ட திகட்ட ஆகிருதியை காட்டும் காட்சிகள் இல்லாமல் ஒரு நிஜ நிகழ்வை படமாக்கும் போது ஆவணப் படமாய் உணர்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளம். அதையும் தாண்டி படத்தை விறுவிறுப்பாக்கும் விஷயத்தைத் தான் "குட் ஸ்க்ரீன்ப்ளே" என்று வெள்ளைக்காரன் விளிக்கிறான். அந்த குட் ஸ்க்ரீன் ப்ளே இந்தப் படத்தில் கலையோடு கூட்டணி போட்டு நம்பகத்தன்மையை வெகுவாய் கூட்டி நம்மை ஜெர்மனியில் ஹிட்லரோடு பிரயாணிக்க வைக்கிறது. உலகை கலக்கிய ஒரு சர்வாதிகாரிக்கு எவ்வளவு பாதுகாப்பு இருந்திருக்கும், அவரை போட்டுத் தள்ளி ஆட்சியைப் பிடிப்பதென்பதற்கு எவ்வளவு மெனெக்கெட வேண்டும். அந்த நுணுக்கங்களையெல்லாம் அழகாக படம் எடுத்துக் காட்டுகிறது. சொல்வதற்கு நம்மால் முயற்சி கூட எடுக்க முடியாத அளவுக்கு பெயரில் ஸ்பெல்லிங் உடைவர்கள் எல்லோரும் ஹிட்லரை கொல்ல செய்யும் இந்த ஆப்பரேஷன் "Valkyrie" தோல்வியாகி முயன்றவர்கள் எல்லாரும் போட்டுத் தள்ளப்படுகிறார்கள். இதில் பெரிய சோகம் என்னவென்றால் அடுத்த பதினோராவது மாதத்தில் ஹிட்லர் அவரே தூக்கு போட்டு சுட்டுக் கொண்டு இறந்துவிட்டார். "(ஹிட்லரை கொல்ல முயற்சித்ததின் மூலம்) நீங்கள் அவமானத்தைக் கொண்டு வரவில்லை, (சர்வாதிகாரத்தை) எதிர்த்து உங்கள் உயிரைக் குடுத்து சுதந்திரத்திற்கும், நீதிக்கும் ஒரு அடையாளத்தை கொண்டு வந்தீர்கள்" என்று நச்சென்று படம் முடியும். வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக பாருங்கள் இந்த வரலாற்று த்ரில்லர் உங்களுக்கும் பிடிக்கும்.

தற்போதைய பயம்
இந்த இண்டர்நெட் யுகத்தில் "உலகம் ரொம்பவே சின்னதுங்க" என்று கலிலியோ மாதிரி நிறைய பேர் ஸ்டேட்மெண்ட் விட்டுக் கேட்டிருக்கிறேன். நானும் "wow world is so small " என்று நிறையவே தோளைக் குலுக்கியிருக்கிறேன். சரி மேட்டருக்கு வருகிறேன்.
ஒரு நாளைக்கு நீங்க கண்டிப்பா மூன்று வேளையும் சாப்பாடுக்கு முன்னால் பேஸ்புக் பார்க்கணும், இல்லாட்டா பை பாஸ் சர்ஜரி செய்ய வேண்டியிருக்கும் என்று டாக்டர் சொல்லியிருப்பதால் அடிக்கடி பேஸ்புக்கில் உலக அமைதிக்கு என்னாலான பிரார்த்தனைகளைச்  செய்வேன். என் சேவையை பாராட்டி பேஸ்புக்கும் இவரை உனக்குத் தெரியுமா பாரு என்று என் மனைவி ப்ரொபலை பிரெண்ட் சஜெசன் என்று காட்டும். எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசித்து நானும் அதை டிஸ்மிஸ் செய்வேன். பேஸ்புக்குக்கே போரடித்துவிட்டது போல, சமீபத்தில் வேறொரு பெண்ணுடைய ப்ரொஃபைலை காட்டியது . பெயர் எங்கயோ கேள்விப் பட்டது மாதிரி இருக்கே என்று க்ளிக் செய்து ஃபோட்டோவைப் பார்த்தால்...ஆத்தாடீ.... நான் ஜொள்ளித் திரிந்த காலத்தில் எழுதிய  "குத்துவிளக்கு"  . தலை தெறிக்க ஓடியே வந்துவிட்டேன். கொஞ்ச நாள் முன்னாடி தான் "எங்களப் பத்தி ப்ளாக்ல போஸ்டாடா போடுற"ன்னு ஒரு கும்பல் தொரத்தித் தொரத்தி அடிப்பது மாதிரி கனாக் கண்டேன். நிறைவேறுகிற நாள் ரொம்ப தொலைவில் இல்ல போல.


சமீபத்திய வருத்தம்
இன்னும் என்னால இந்த வருத்தத்தை ஜீரணிக்கவே முடியவில்லை. இப்ப கொஞ்ச நாள் முன்னாடி சில பல பிரச்சனை என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அந்த சமயத்தில் நடந்தது இது. இங்கே லண்டனில் ஒரு தோழி இருக்கிறார். தோழி என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று தொணிக்குமளவுக்கு இசைத் திறமை வாய்ந்த ஒரு வி.ஐ.பி. ஐரோப்பாவில் பல பெரிய பெரிய உலக நிகழ்ச்சிகளிலெல்லாம் பெர்பார்மென்ஸ் குடுப்பவர். இவருக்கு நம்ம இசைஞானி இளையராஜா மிக நெருக்கும். "நீ தானே என் பொன்வசந்தம்" இசைக்கு இங்கே லண்டன் வந்திருந்த போது தோழி தான் கூடவே இருந்து இசையமைப்பில் உதவிகள் செய்து வந்தார். ராஜா சாரும் தோழியும் சேர்ந்து ஒரு வித்தியாசமான இசை நிகழ்ச்சி பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. "எப்படியாவது ஒரு நாள் மீட் பண்ணணும் ஏதோ பார்த்து செய்யுங்க" என்று பிட்டைப் போட்டுவைத்திருந்தேன். "உங்களுக்கில்லாமலா, கவலையே படாதீர்கள் என்று சொல்லி வைத்திருந்தார். பார்க்கும் போதெல்லாம் நீ.தா.என்.போ.வ இசையமைப்பில் நடந்த விவரங்களையெல்லாம் சொல்லுவார் (ஃபோனில் ஒரு பாட்டின் ரெக்கார்டிங்கையும் கூட பார்த்தேன்). ஒரு அசுபயோக தினத்தில், எனக்கிருந்த ஆயிரத்தெட்டு பிரச்சனையில் ஒரு பிரச்சனையின் உச்சகட்டம். இதன் காரணமாக ஆபிஸில் காலை லீவு சொல்லி எல்லா மீட்டிங்களையும் மதியத்திற்கு தள்ளிப் போட்டு வைத்திருந்தேன். மதியம் சரியாய் மீட்டிங்கிற்கு உள்ளே போகப் போகும் போது தோழியிடம் இருந்து ஃபோன். "டுபுக்கு அப்படியே கிளம்பி வாங்க, ராஜா சார், கவுதம் மேனன் எல்லாரும் இங்க இருக்கோம். ராஜா சாருக்கு லண்டன்ல ஷாப்பிங் போனுமாம், என்னைக் கூட்டிப் போகச் சொல்லுகிறார், நீங்க வந்தீங்கண்ணா இன்னிக்கு முழுவதும் எங்க கூட சேர்ந்து இருக்கலாம்னு" அழைப்பு. எனக்கோ உள்ளே மீட்டிங் ரூமில் ஆட்களை வைத்துக் கொண்டு போகவே முடியாத சூழ்நிலை. அப்புறம் தோழியே அவருடைய காரை எடுத்துக்கொண்டு போய் வந்து அன்று நடந்த கதையெல்லாம் சொல்லி ...விடுங்க வயத்தெரிச்சல் இன்னும் தாங்கல. நம்மளுக்குன்னு வந்து சேருமே. பார்ப்போம் அடுத்த வருஷமாவது அதிர்ஷ்டம் இருக்கான்னு.

இந்த வார கேள்வி

sh... கும்கி என்றால் என்ன என்ற ஒரு அருமையான கேள்வியை மயிருலு பதிவில் கேட்டார். "வெரி குட் கொஸ்டின்.. உங்க ஆர்வத்த நான் பாராட்டுறேன்" என்று நைஸாக வாய்தா வாங்கிக்கொண்டு தேடிப் பார்த்ததில் - காட்டு யானைகளை வேலை வாங்கும் போதோ பழக்கப் படுத்தும் போதோ, இல்லை அவை மனித குடியிருப்பு பகுதிகளில் வந்துவிட்டால் அவற்றை எல்லாம் அடக்க /வழிகாட்ட ஒரு பழகிய யானை வைத்திருப்பார்கள். அந்த யானைக்குப் பெயர் தான் கும்கி. இப்படி கேள்வி கேட்டு நானும் விஷய்ம் அறிந்து கொள்ள உதவிய sh...க்கு மிக்க நன்றிங்கோவ்.

Wednesday, October 03, 2012

என் பாட்டு உன் பாட்டு

பெரிய மகளை நான் தான் நிதமும் ஸ்கூலுக்கு கூட்டிப் போவேன். குறுக்கு வழியில் ஒரு பெரிய பார்க் வழியாக நடந்து செல்லலாம் என்றாலும், அந்த ஆள் அரவமற்ற பாதையில் காலையில் அவள் தனியாய் செல்ல வேண்டாமே என்று நான் காரில் ட்ராப் செய்வேன். இதற்காகவே சீக்கிரம் எழும்ப வேண்டிய கட்டாயம். ராத்திரி முழுவதும் கூட தூங்காமல் இருக்க முடியும், ஆனால் படுத்தால் இந்த அதிகாலையில் எழுந்திருப்பது என்பது இன்னமும் ரொம்பவே கஷ்டமான செயலாக இருக்கிறது. அதிகாலையில் எழுந்து ட்ராக் சூட், ஹெட்ஃபோன் சகிதம் ஜாங்கிங் போகவேண்டும் என்பது சின்ன வயதிலிருந்தே ரொம்ப ஆசை. முதலில் ரெண்டு நாள் தங்கமணி எழுப்பிப் பார்த்தார். நடுங்கும் குளிரில் "இல்ல நான் இப்படியே போர்வைக்குள்ளேயே படுத்துக்கொண்டே ஸ்டைலாய் ஜாங்கிங் போய் கொள்கிறேன்" என்று ஆரம்பித்து, டெய்லி ஜாங்கிங் மிஸ் பண்ணவே மாட்டேன். பாதி ஜாங்கிங் போய்க் கொண்டிருக்கும் போது "ஸ்கூலுக்கு நேரமாயிடும் எழுந்திரிங்க" என்று முதல் அலாரம் ஆறரை மணிக்கு அடிக்கும். . "தோ...இன்னும் ஒரு அஞ்சு நிமிஷம்" என்று வாய்தா வாங்கினால், ஆறே முக்காலுக்கு பெரிய மகள், தங்கமணி அவளை எழுப்பிய கடுப்பில், போர்வையைப் பிடுங்கி "தூங்கினது போதும், போய் குளிக்கப் போப்பா"ன்னு ரெண்டாவது அலாரம் அடிப்பாள். "இந்த வீட்டுல யாரு குழந்தைன்னே தெரியலை எல்லாமே உல்டாவா இருக்கு"ன்னு வீடே ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனமாகிக் கொண்டிருக்கும் போது, அப்படியே கண்ணையும் போர்வையையும் மூடிக்கொண்டு அசையாமல் ஒரு பதினைந்து நிமிடம் தியானம் செய்தால், ஏழு மணிக்கு எழுந்து குளித்து அரக்கப் பரக்க ஓடுவதற்கு சரியாய் இருக்கும். அதென்னமோ தெரியவில்லை இந்த காலை ஆறிலிருந்து எட்டு வரை உள்ள இரண்டுமணி நேரம் மட்டும் அரைமணி நேரத்திலேயே ஓடிவிடும். ஆனாலும் இவ்வளவு அதகளத்திலும் டை கட்டிக் கொள்ளும் நாட்களில் மட்டும், ஜன்னல் பக்கம் நின்று கொண்டு மிதப்பாய் ஸ்லோமோஷனில் ஹாட் சாக்லேட்டை குடித்தால் தான் ஜீரணமாகும். மகள் ஸ்கூல் எட்டு மணிக்கென்றால் ஏழு அம்பதுக்கே ஸ்கூலில் இருக்கவேண்டும் என்று அடம் பிடிப்பாள். "ஒரு வேளை ஆஸ்பத்திரில மாத்திட்டாய்ங்களோ"ன்னு சந்தேகம் வருமளவுக்கு நேரம் காப்பதில் பொறுப்பாய் இருப்பாள்.(இந்த விஷயத்தில் அப்படியே தங்கமணி)

வீட்டிலிருந்து மகளின் ஸ்கூல், காரில் ஐந்து நிமிட பிரயாணம் தான். ஆனால் காரில் ஏறிய முதல் மூன்று நிமிடங்களுக்கு என்ன பாட்டு போடுவது என்று எனக்கும் மகளுக்கும் வாய்க்கா தகறாரு ஆகாவிட்டால் அந்த நாள் இனிய நாளாக அமையாது. இளையராஜா, ஏ.ஆர்.ஆர் மற்றும் இன்ன பிற தமிழ் கோஷ்டிகளுக்கும் நிக்கி மினாஜ், ஷகிரா, ரியானா கோஷ்டிகளுக்கும் தர்ம யுத்தம் நடக்கும். அன்றைக்கு இங்கிலீஷ் பாட்டு தான் தீர்ப்பாகிவிட்டால் ஒரு எழவும் புரியாது. எல்லா பாட்டிலும் கிட்டாரை "ங்கொய்ங் ங்யொங்" என்று காது பக்கத்தில் வைத்து ராவுவம் போது ஊரில் பஜனை கோஷ்டியில் பாட்டு தெரியாவிட்டால் பாட்டு சத்தத்தை குறைத்து ஜால்ரா வால்யூமை ஏத்தும் டெக்னிக் தான் நியாபகத்துக்கு வரும். இதெல்லாம் சரிபட்டு வராது என்று என்ன பாட்டு போடுவது என்பதற்கு சில போட்டிகள் வைத்துக் கொண்டோம். முதலில் "கே.வி.மஹாதேவன் இசையமைத்த முதல் படத்தின் பெயர் என்ன","ஆண்ட்ரியாவும் அநிருத்தும் எந்த பாட்டு பாடி பேமஸ் ஆனார்கள்" போன்ற குவிஸ்களில் தமிழே வெற்றி பெற்று தமிழ் கொடியை நாட்டின. ஆனால் அடுத்த வாரம் மகள் சுதாரித்துக்கொண்டாள். நிக்கி மினாஜ் தலை முடியின் ஒரிஜினல் கலர் என்ன போன்ற எதிர் கணைகள் வர ஆரம்பித்தன. கிழிஞ்சுது கிருஷ்ணகிரி, இந்தப் பெயராவது ஆம்பளையா பொம்பளையான்னு க்ளூ குடுக்கிற மாதிரி இருக்கா. எங்கூர்ல மனோஜ்லாம் ஆம்பிளைகள் தான் வைத்துக்கொள்வோம் என்றாலும் மகள் ஒத்துக்கொள்ளவில்லை. இதையும் மீறி  ஆங்கிலம் அரங்கேறும் போது "இப்போ என்ன பிரச்சனையாம் அவனுக்கு..?"என்ற எனது சரமாரியான நொய்ய நொய்ய நச்சரிப்பில் வெறுத்துப் போய், சில நாட்கள் தமிழ் பாட்டுக்கு மீண்டும் வெற்றி கிட்டும். தமிழ் பாட்டு போடும் போதெல்லாம் "பாட்டு கேட்டா மட்டும் போறாது ஜெனரல் நாலெட்ஜ்ஜையும் வளர்த்துக்கணும்" என்று "இந்த படம் ரிலீசான போது எங்க காலேஜுல ஒரு பொண்ணு இருந்தா..." என்று மகளுக்கு டெக்னிகலாய் நிறைய விஷயங்களை விளக்குவேன். அவளும் நான் பீலிங்காய் புன்முறுவலுடன் கோண பார்வை பார்த்து அசை போட்டுக்கொண்டிருக்கும் போது நைஸாக பாட்டை ரியானாவுக்கு மாற்றி விடுவாள்.

நிற்க நான் பொதுவாய் ஆங்கிலத்தில் ஆம்பளைக் கபோதிகள் பாடுவதையெல்லாம் கேட்பதே இல்லை. பாப் உலகில் பெணகள் தான் தேனாய் பாடுவார்கள் மானாய் ஆடுவார்கள். ஷகிரா மாதிரி ஆடிக்கொண்டே பாடினால் மானே தேனே பொன்மானே அடேங்கப்பா..அடுத்த வீட்டுக்காரன் சொத்த அப்படியே கிரயம் பண்ணிக் குடுத்துவிடலாம். ஆம்பளைக் கபோதிகள் வீடியோவில்லெல்லாம் மொட்டையடித்துக் கொண்டு குரங்கு மாதிரி குல்லா போட்டுக் கொண்டு தாவி குதிச்சு பளிச் பளிச்சுன்னு லைட்ட போட்டு கண்ணை மழுங்கடித்துவிடுவார்கள். கூலிங் க்ளாஸ் போட்டால் தான் பார்க்கவே முடியும் என்பதால் மெனெக்கடவே மாட்டேன். ஆனால் சமீபத்தில் காரில் ஒரு பாட்டு கேட்ட மாத்திரத்திலேயே பிடித்துவிட்டது. கொஞம் தமிழ் டியூன் சாயல் இருப்பதால் கூட இருக்கலாம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இதோ...


Wednesday, September 26, 2012

மீசை

தாவணி பாவனாவா இல்லை புடவை ஸ்னேகாவா என்ற வயதுக்கு வந்த பெண்களுக்கு குழப்பமான கெட்டப் தருணம் ஒன்று இருப்பது போல், ஆரம்பகால அரவிந்த்சாமியா இல்லை தற்கால ஹிரிதிக் ரோஷனா என்று வயதுக்கு வந்துகொண்டிருக்கும் எல்லா ஆண்களுக்கும் ஒரு மிக முக்கியமான குழம்பேஸ்வரா மீசை தருணம் கண்டிப்பாக உண்டு.

சமூகத்தில் பெண்களுக்கு ஓலை கட்டி சடங்கு செய்வது போல் இல்லாமல், மீசை மட்டுமே ஆணகள் வயசுக்கு வந்துவிட்டதற்கான அறிகுறியாய் இருப்பது பெரிய இம்சை. "ம்ம்ம்..அரும்பு மீசை.. என்னடா வயசுக்கு வந்தாச்சு போல " என்று பக்கத்து வீட்டு அக்கா நண்பனின் கன்னத்தைக் செல்லமாய் கிள்ளும் போது, எனக்கு மட்டும் ஏன் இன்னும் பாலிஷ் போட்ட மொசைக் மாதிரி மழுமழுவென்று இருக்கு என்று சுரண்டிப் பார்த்திருகிறேன். "கட்டிங் மட்டுமா, இல்ல ஷேவிங்குமா தம்பி" என்று நண்பனை மட்டும் நாவிதர் கேட்கும் போது, தினத்தந்திக்குப் பின்னால் "லா லா லா" என்று விக்ரமன் பட நாயகி மாதிரி உருகியிருக்கிறேன். "இங்க பாரு எனக்கு மீசை இல்லாட்டியும் பரு வந்திருச்சு" என்றாலும் உதாசீனப் படுத்தும் சமூகத்தை எண்ணி வெட்கப் பட்டிருக்கிறேன். மயிர் வளம் கொழிக்கும் கேசவர்த்தினி கூட மகசூலைப் பெருக்கவில்லை என்பதை நினைத்து வேதனைப்பட்டிருக்கிறேன்.

"உம்மேல ஆசை வைச்சேன் ; வேறெதுக்கு மீசை வைச்சேன்" என்று சங்க இலக்கியங்களாகட்டும், "நீ மட்டும் மீசை வைச்ச ஆம்பிளையா இருந்தா.." என்று தொடை தட்டி ராஜ்கிரண், விஜய்குமார் சமஸ்தானங்கள் விடும் உதாராகட்டும் - இந்த இழவெடுத்த ஆண்மைக்கும் மீசைக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. இதில் வயசுப் பையன்களுக்கு மீசை இல்லாவிட்டால் ஆயிரத்தெட்டு சங்கடங்கள் வேறு. தே.சீனா நடிகரும் "ந"ன்னா நடிகையும் நடித்த மேட்டர் படம் தான் இதுவரை வந்த நீலக்காவியங்களிலேயே சிறந்தது என்று தெருவில் யாரோ பார்த்ததாக புருடா விடும் அறிவுப்புரட்சி விவாதங்களுக்கு எண்ட்ரி டிக்கெட்டே மீசை தான். இல்லா விட்டால் "யாராவது இந்தப் பக்கம் வந்தா சொல்லு" என்று கபடி போட்டி சப்ஸ்ட்டியூட் மாதிரி வெளியே உட்கார வைத்துவிடுவார்கள். லேசாகவாவது வளர்வது வரைக்கும் "இன்னும் மொளச்சு நாலு இலை விடலை அதுக்குள்ள" என்று போவோர் வருவோர் உள்ளிட்ட சமுதாய அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டே ஆகவேண்டும்.

"சும்மாவாச்சும்...அடிக்கடி ஒரு தரம் ஷேவ் பண்ணுடா அப்போ தான் வளரும்" என்பது இரண்டும் கெட்டான் பருவத்தின் ஆணித்தரமான ஐதீகம். மாமாவின் ஷேவிங் செட்டை ஆட்டையைப் போட்டு அகல உழாமல் ஆழ உழுது முதல் சவரம் ரத்தம் பார்த்து, ப்ளாஸ்திரி போட்டதாலோ என்னவோ மூக்குக்கு கீழே ரொம்ப நாள் வானம் பார்த்த பூமியாகவே இருந்தது. "கவலப் படாத மச்சி ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள்...உனக்கும்" என்று சக ஐ.ஏஸ்.எஸ்கள் அட்வைஸ் கொடுக்கும் போது, நல்லதங்காள் ஏன் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்தார் என்பது நன்றாகப் புரியும். ஒரு சுபயோக சுபதினத்தில் மூக்குக்கு கீழே முதல் பூனை முடியைப் பார்த்தது வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள். அதற்கப்புறம் தினமும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாலும், தாய்மாமா யாரும் வண்டி பூட்டி நான் வயசுக்கு வந்ததை பாட்டு பாடி கொண்டாததால், மீசை முழுதாக வந்த சரித்திர நாளை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

அரவிந்சாமி, அஜீத், போன்றவர்களைத் தானே பொண்ணுங்களுக்கு பிடிக்கிறது என்று மீசை வளர்வதற்கு முன் செய்த முதல் சவரமே கடைசி சவரமாய் முடிந்து, அதற்கப்புறம் இன்று வரையிலும் மீசையை எடுத்ததே இல்லை. ஆரம்பத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோடு மாதிரி நடுவில் மட்டும் ஒரு சின்ன gap இருந்தது . இரண்டு பக்க மீசைக்கும் நடுவில் இடைவெளி இருக்கிறதே இதனால் பின்னாடி தாம்பத்யத்தில் ஏதாவது பிரச்சினை வருமா என்று "அன்புள்ள சினேகிதனே"க்கு எழுதிப் போடுவதற்குள் அதுவே வளர்ந்துவிட்டது. என்னுடைய வாழ்க்கை இலட்சியத்தைப் போலவே நெல்லை எக்ஸ்பிரஸ் ஸ்டையில், கரடியாண்டி ஸ்டைல் என்று காலத்திற்கேற்ப மீசை பல்வேறு வடிவங்களைப் பார்த்திருக்கிறது.

ஆனால் இந்த மீசையின் அருமை பெருமை அறியாமல் இதை மேற்கத்தியர்களைப் போல் யாரும் பழிக்க முடியாது. சேரிட்டிக்கு பணம் பிரிப்பவர்கள் அதை சுவாரசியமாக்க பல கோமாளித்தனம் செய்வார்கள். அதில் தலையாயது மீசை வளர்க்கிறேன் பேர்வழி என்று வளர்த்துக்கொள்வார்கள். போகட்டும்,. ஆனால் அதற்காக மீசை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் சாக்ஸ் மட்டும் அணிந்து கொண்டு நடிக்கும் நீலப் பட நடிகர்கள் என சித்தரிப்பதை என்னவென்று சொல்வது. அதிலும் ஆபிஸில் எல்லா பெண்களும் இவர்களிடம் இதையே "யூ லுக் லைக் அ போர்ன் ஸ்டார்" என்று கொஞ்சிக் கொஞ்சி சொல்வது இன்னமும் கொடுமை. ஒருவன் என்னிடம் வந்து "நீ வருடம் பூராவும் மீசை வைத்துக்கொண்டிருக்கிறாயே" என்று ஆரம்பித்தான். "அது ஒன்று தான் பாக்கி, இன்னமும் கொடுப்பினை இல்லை, நடிச்சு ரிலீசானா சொல்றேன், போயிட்டு வா ராசா" என்று அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கலாய்க்கிறாராமாம்.

காலையில் இந்த மீசையை ஒரு தேர்ந்த சிற்பியைப் போல் செதுக்குவதற்கு இதுவரை என் வாழ்நாளில் செலவழித்த நேரத்தைக் கணக்கிட்டால்... நடித்து பல ஆஸ்கர்கள் வாங்கியிருக்கலாம். ஆனால் இந்த பெண்கள் இருக்கிறார்களே பெண்கள் இவர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. "ஒரு மீசை வளர்பதற்கு அடேய் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்" யோசித்துப் பார்க்கிறார்களா? அஜீத்தை பிடிக்கிறவர்கள் திடீரென்று மேடி, சித்தார்த், என்று மீசையில்லா பக்கமாய் சரிந்துவிடுகிறார்கள். கூட இருக்கும் சக ஐ.ஏ.எஸ்களும் கன்வேர்ட்டட் மேடியாய் மாறிவிடுகிறார்கள். என்னை மாதிரி இதுவரை ஒரு முறை கூட ஷேவ் செய்யாத வெர்ஜின் மீசைக்காரர்கள் மட்டும் பழைய பாக்யராஜ் பட நாயகி மாதிரி "மீசை எடுத்தா என்னமோ மாதிரி இருக்கு" என்று நிலம் பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் என்னை மாதிரி வெர்ஜின் மீசை நணபன் ஒருவனுடைய மீசை திடீரென்று ஒரு நாள் காணோம். என்ன ஏதென்று பதறிப் போய் கேட்டால், "இல்ல மச்சி, மீசை இருந்தா மதிக்க மாட்டேங்கிறாய்ங்க. பெரிய போஸ்டுக்கெல்லாம் போகனும்னா மீசையை எடுத்தா தான் கன்சிடரே பண்ணுவாங்களாம்" என்ற போது ங்கொய்யால வீரப்பன இப்படி அநியாயமா சுட்டுக் கொண்ணுட்டீங்களேடா என்று வருத்தப் பட்டேன். திடீரென்று ஏதாவது கம்பேனி சி.ஈ.ஓ ஆகவேண்டிய கட்டாயம் வந்தால் என்று, ஃபோட்டோ ஷாப்பில் மீசையை எடுத்துப் பார்த்தேன். தங்கமணி ப்ளாக் அண்ட் வொயிட் பட கதாநாயகி மாதிரி புறங்கையை கடித்துக் கொண்டு வீல்ல்ல்ல்ல் என்று அலறி ஓட்டம் எடுத்துவிட்டார். சே...அப்பவே மீசையை எடுத்து ஹிரிதிக் ரோஷனா அப்கிரேட் ஆகியிருக்கணும். "என்னத்துக்கு இதைப் போய் வளர்த்து..பேசாம மழிச்சிடேன்" என்று அப்பா சொன்னபோது கேக்கலை, ஹும்ம்ம்ம்ம் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

சும்மா ஒரு ரெபரென்ஸுக்கு :)

Wednesday, September 12, 2012

மன்னார் அன்ட் கம்பேனி

மு.கு- இதுவரை நாடக பாணியில் எதுவும் எழுதியதே இல்லை. போன வருடம் இந்தியா வந்திருந்த போது அண்ணன் அப்துல்லா ஏற்பாடு செஞ்ச பிரியாணி மீட் மற்றும் பதிவர் சந்திப்பில் "தல" பாலபாரதி புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒரு நையாண்டி கான்செப்ட் இருக்கு நீங்க ஏன் எழுத ட்ரை பண்ணக் கூடாதுன்னு கேட்க, ஏனோ தானோன்னு போன வருடம் எழுதி குடுத்து, "தூ"ன்னு காறித் துப்பாமல் பால பாரதி "சாரி பாஸ்"ன்னு டீசெண்ட்டாய் ரிஜெக்ட் செய்த குறு நாடகம் தான் இந்த பதிவு. சும்மாத் தானே இருக்குன்னு நீங்களும் காறித் துப்ப எதுவாய் இங்கே பதிந்திருக்கிறேன். நாடகம் மாதிரி என்பதால் அண்ணன் உ.தான்னா பதிவு ரேஞ்சுக்கு இருக்கும். வேற வழியேஇல்லை துப்புவதற்கு உங்களுக்கு கொஞ்சம் டயம் எடுக்கும் :)

கதா பாத்திரங்கள்
மன்னார் – எப்போதாவது வரும் ஒரு கதா பாத்திரம்.(இந்த எப்பிசோடில் இல்லை) வயது 55 - சாப்டுவேரில் எல்லோரும் கோடி கோடியாய் கொட்டுகிறார்கள் என்று மளிகை கடையை நைட்டோடு நைட்டாக சாப்ட்டுவேர் கம்பேனியாக மாற்றிவிட்டு முதல் போணிக்கு நம்பிகையோடு காத்திருக்கும் வியாபாரக் காந்தம்.

“சித்தப்பு” சிதம்பரேசன் - வயது 45. மன்னாரின் மைத்துனர். மளிகைக் கடையில் கல்லாவைப் பார்த்துக் கொண்ட அனுபவத்தில் இப்போது புதுக் கம்பேனியில் ப்ராஜெக்ட் மேனேஜராய் ப்ரமோஷன் வாங்கியவர்.

ச.ரோசா - வயது 35. செவ்வாய் தோஷத்தால் கல்யாணமாகாத முதிர் கன்னி. இந்தியாவிலேயே சாப்ட்வேர் கம்பேனியில் டைப்ரைட்டரில் டைப் அடிக்கும் ஒரே டைப்பிஸ்ட்.

சொர்ணா - வயது 28. கம்பேனியில் சாப்ட்வேர் பற்றி ஏதோ கொஞ்சமூண்டு தெரிந்த ஒரே ”அய்யோபாவம்” ப்ரோக்ராமர்.

“சௌகார்பேட்” சீனு – வயது 30. கம்பெனி மளிகைக் கடையாய் இருந்த போது கணக்கெழுத வந்து தற்போது கம்பெனி மாற்றத்தில் அப்ரசண்டி ப்ரோக்ராமராய் புது அப்பாயிண்ட்மெண்ட் பெற்றவர்.

அழகுராஜா - முன்னாள் மளிகைக் கடையில் பொட்டலம் கட்டி தற்போது ஆபிஸ் பாய். ஆபீஸில் இவர் தான் "ஆல் இன் ஆல்" அழகுராஜா.


காட்சி – 1
ஆபீஸ் உட்புறம்
பகல்


(ஒரு சின்ன அறையில் சித்தப்பு நடுவாந்திரமாக சீட்டில் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் மன்னார் அன்ட் கம்பேனி - தி சாப்பாடுவேர் ஸ்பெஷலிஸ்ட் - கம்பெனி போர்டு தென்படுகிறது. சித்தப்பூ ஆவேசமாய் சர்குலரில் கையெழுத்துப் போட்டு டேபிளில் இருக்கும் மணியடிக்கிறார். அவருக்கு இரண்டு அடி தள்ளி ஸ்டூலில் எதிர்பக்கம் உடகார்ந்திருக்கும் அழகுராஜா மணியடித்தவுடன் திரும்பி சித்தப்புவை நோக்கி உட்கார்ந்து தலையிலடித்துக் கொள்கிறான்)

அழகுராஜா –அழகுன்னு அழகா கூப்பிட்டா திரும்பப்போறேன். இதுக்கு எதுக்கு பெரிய திஹார் ஜெயில் மாதிரி மணியடிச்சு கூப்பிடுறீங்க?

சித்தப்பூ – வாயக் கழுவு.. அபசகுனமா பேசாத. ஏற்கனவே அங்க நம்மூர் பாப்புலேஷன் ஜாஸ்தியாகி புல்லாகிட்டிருக்கு. இதுல நீ வேற. இந்த சர்குலர எல்லார் கிட்டயும் காட்டு.

அழ்குராஜா – என்னாது சரக்கு லெட்டரா..ஏ எல்லோரும் திரும்புங்கப்பா சித்தப்பூ ஏதோ சரக்கு லெட்டர் வைச்சிருக்காராம்

(எல்லோரும் வட்டமாய் அவரவர் சீட்டில் திரும்பி உட்கார அதுவே ஒரு மீட்டிங் வட்டமாகுகிறது)

சித்தப்பு – (அழகுவை நோக்கி) மூதேவி...நான் என்ன உங்க சித்தியவா கல்யாணம் பண்ணிருக்கேன்...என்ன சித்தப்பூன்னு கூப்பிடாதேன்னு எத்தனை தரம் சொல்றது ஒழுங்கா மரியாதையா மேனேஜர் சார்ன்னு கூப்பிடு.

சீனு – (நக்கலாய்) குட்மாரினிங் சித்தப்பூ

(சித்தப்பு எரிச்சலோடு சீனுவை திரும்பிப் பார்க்கிறார்)

அழகுராஜா – நீங்க என்ன அவன் சித்தியவா கல்யாணம் பண்ணியிருக்கீங்க அவன் மட்டும் சித்தப்பூன்னு கூப்பிடறான்?

சித்தப்பூ – சிதம்பரேசன்ங்கிற என் பெயர ஏண்டா சம்பந்தமே இல்லாம சித்த்ப்பூன்னு சுருக்கி உசிர வாங்குறீங்க...

சீனு – அப்போ ரேஷன் ரேஷன்னு சுருக்கி கூப்புடட்டுமா...இலவச அரிசி போடறாங்கன்னு கும்மிருவாஙக பரவாயில்லையா? இன்வெஸ்மெண்ட்டே கடனாகுது இந்த காலத்துல...சிதம்பு சித்தப்பு ஆகக்கூடாதா?

சித்தப்பு – நக்கலு...ஆங்...சரி எல்லோரும் நல்லா கவனிங்க. எங்க மச்சான் பெரிய வியாபாரக் காந்தம். தீர்க்கதரிசி. இந்தியாக்காரன் சாப்ஃட்வேருக்கு அமெரிக்காகாரன் குடுக்கிற மதிப்ப பார்த்து ராவாடு ராவா மளிகைக் கடைய சாப்ட்டுவேர் கடையா மாத்தி என்ன மேனேஜரா போட்டிருகார்னா சும்மாயில்ல. நாம என்ன பண்ணுவோமோ ஏது பண்ணுவோமோ எனக்குத் தெரியாது ரெண்டே மாசத்துல ஆர்டர் வரணும் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டணும்.

சீனு – இதே மாதிரி போர்டு வைச்சா வளைகாப்பு, காது குத்து கல்யாணம்ன்னு சாப்பாடு ஆர்டர் தான் கொட்டும் சாப்ட்டுவேருக்கு பதிலா சாம்பார் வாளியத்தான் தூக்கனும். சாப்ட்வேர் ஸ்பெஷலிஸ்ட்ன்னு போர்டு வைக்க சொன்னா சாப்பாடுவேர் ஸ்பெஷலிஸ்டாம் அழகு இது உன் ஐடியா தானே? கம்பேனி ஓஹோன்னு உருப்பட்ரும்.

அழகு – தோ பாரு சீனு நான் வெறும் அம்பு தான், சித்தப்பூ தான் போர்டு மெம்பர். இதெல்லாம் சித்தப்பூ ஏற்பாடு

சித்தப்பூ – (போர்டை திரும்பப் பார்க்கிறார்) அடப்பாவி ஆரம்பமே மிஸ்டேக்காயி போச்சா... சரி சரி இத முதல் ஆர்டர் வந்தோடன சரி பண்ணிக்கலாம். இப்போ அத விட முக்கியமா நாம விவாதிக்க வேண்டிய ஒரு பிரச்சனை இருக்கு. கம்பெனிய வளர்க்க என்ன செய்யலாம் எல்லோரும் உங்க அபிப்ராயத்தை சொல்லுங்க. சரோசா நீ முதல்ல ஆரம்பிமா

ச.ரோசா – சார் என் பேர் எஸ்.ரோஜா..தமிழ் படுத்தறேன் பேர்வழின்னு இனிஷியலோட சேர்த்து சரோசாவாக்கிறத முதல்ல நிப்பாட்டுங்க. அப்புறம் இந்த டைப்ரைட்டர ஒழிச்சிட்டு நல்ல தெளிவா சினிமா பார்க்கிற மாதிரி ஒரு கம்ப்யூட்டர் வாங்கிப் போடுங்க...என் ஃபிரெண்டு ”ச.மோ.சா” சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்கிறா. தினமும் புது ரிலீஸ் படமா டவுண்லோட் பண்ணிப் பார்க்குறா.. நானும் இருக்கேனே... இந்தியாவுலேயே சாஃப்ட்வேர் கம்பெனில டைப்ரைட்டர்ல டைப் அடிக்கிற ஒரே எம்ப்ளாயியா நான் ஒருத்தி தான் இருப்பேன் போல

சீனு – சரோசா அதுக்கு நீ இன்னும் ஆறு மாசம் பொறுக்கணும். முதல்ல நாம ஆர்டர் பிடிக்கணும். அப்புறம் தப்பு தப்பா ப்ரோக்ராம் எழுதணும் அப்புறம் பண்ணின தப்ப பக் பிக்ஸ் பண்ணணும் அதுக்கும் சேர்த்து மீட்டர் மேல பில்லிங் போடனும். அப்புறம் கம்பெனி எம்ப்ளாயிஸ் ஆஃப் சைட் போறோம்னு கேரளாவுக்கு பஸ் பிடிச்சு போய் ஃபோட்டொ எடுத்து வைப்சைட்டுல போடணும். அதுக்கப்புறம் தான் அத பார்த்து இன்னும் சில ஈன்னா வாயனுங்க ஆர்டர் குடுப்பாங்க..அப்போ நாம புதுசு புதுசா கம்ப்யூட்டர் வாங்கலாம்.

சொர்ணா – உனக்கு கரெக்டாத் தாண்டா பேரு வைச்சிருக்காங்க scene-ன்னு

சீனு – எக்கா சொர்ணாக்கா டேங்கஸ்கா..

சித்தப்பு – இந்தாம்மா சொர்ணாக்கா உங்கிட்ட எதாவது ஐடியா இருந்தா எடுத்து விடறது

சொர்ணா – இந்தியாவிலயே சென்னைல தான் இப்போ பல சாப்ட்வேர் கம்பெனிங்க ஓஹோன்னு வருது. இதுல ஒன்னு கூர்ந்து கவனிச்சா தெரியும். தொன்னூறு சதவீத கம்பெனிங்க மூணெழுத்து சுருக்கெழுத்து கம்பெனிங்க தான். அதுலயும் முக்கால் வாசி கம்பெனிங்க எஸ்ன்னு தான் முடியுது. அதுனால நாம மன்னார் அண்ட் கம்பெனிங்கிற நம்ம கம்பெனி பெயர முதல்ல எம்.ஏ.எஸ்-ன்னு மாத்தனும்.

சீனு – எம்.ஏ.எஸ்ன்னா மாஸ்...இது யோசிக்க வேண்டிய மேட்டர் தான். நான் இந்த ஐடியாவை வழி மொழிகிறேன்.

சித்தப்பூ – ஐடியால்லாம் ஓக்கே ஆனா ஆர்டருக்கு வழி என்னப்பா?

சீனு – (திருவிளையாடல் விநாயகர் பாணியில்) சித்தப்பூ ஆர்டர் என்றால் என்ன? வருமானம் என்றால் என்ன..

சித்தப்பூ – அழகு என்னடா சாப்ட்வேர்காரன்லாம் கஸ்டமரத் தான் குழப்புவான்னு கேள்விப் பட்டிருக்கேன்..இவன் என்னடா மேனேஜரையே குழப்புறான்

சீனு – சித்தப்பூ...நான் சொல்றது என்னான்னா முதல்ல நாம கம்பெனி வருமானத்த பெருக்கனும் அப்புறமா ஆர்டர பெருக்கலாம்....

அழகு – சித்தப்பூ இவன் நமமள குழப்பி குழப்பி கடைசில தெருவ பெருக்கவிட்ருவான் சாக்கிரதை

சித்தப்பூ – டேய் சீனு என்னடா சொல்லவர?

சீனு – சித்தப்பூ நாம சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கிறத விட முதல்ல ஒரு சாஃப்ட்வேர் பார்க் ஆரம்பிக்கலாம்.

எல்லோரும் – சாஃப்ட்வேர் பார்க்கா...??

சீனு – ஆமா இன்னிக்கு சென்னைல ரியல் எஸ்டேட் கொடி கட்டிப் பறக்குத்துன்னா சும்மாவா. திண்டிவனம் தாண்டி தெக்கால 20கிலோமீட்டர்ல சுடுகாடு ஒன்னு இருக்குதாம், நம்ம கண்ணம்மா பேட்டை ப்ரோக்கர் ஒருத்தர் சொன்னார். சல்லிசா அத முதல்ல வாங்குவோம். அப்புறம் அதையும் மெட்ராஸ் அவுட்ஸ்கர்ட்ஸ்ல சேர்த்து, அதுக்கு அமெரிக்கன் சாஃப்ட்வேர் பார்க்குன்னு பேரு வைப்போம். பக்கத்துலயே ஒரு “புஸ்வானம்”ன்னு ஒரு டவுண்ஷிப் ஒன்னு ஆரம்பிப்போம். ரெண்டு மூணு சினிமாகாரங்கள கூட்டிட்டுப் போய் ஃபோட்டோ எடுப்போம். வேற நல்ல சின்ன நியாயமான சாஃப்ட்வேர் கம்பெனிட்ட சொன்னா “Natural Tranquil location, 24 hour Electric facility, Pure Air, Devine, Rest in Peace” ன்னு அழகா கண்ணம்மா பேட்டையவே ஆங்கிலத்துல விவரிச்சு ஃபாரின் பொண்ணுங்க குழந்தைய வண்டில தள்ளிட்டு வாக்கிங் போற மாதிரி போட்டோல்லாம் போட்டு ஒரு வைப் சைட் போட்டுக் குடுப்பாங்க.

சரோசா – இப்போல்லாம் இந்த மாதிரி டவுண்ஷிப்புல உள்ளயே ஸ்கூல், சினிமா தியேட்டர், பாங்க், ஜிம் எல்லாம் இருக்காம்.

சீனு – ஆமா கரெக்ட். மக்கள் எதுக்குமே நூறடிக்கு மேல நடக்கத் தயாரில்லை. அதுனால நாம் அத்தோட நிக்கக்கூடாது. அதுக்கும் ஒரு படி மேல போய் உள்ளயே எலெக்ட்ரிக் சுடுகாடு ஒன்னும் ஆரம்பிக்கனும். வாஸ்து படி எரிக்கிறோம்...வேதப்படி எரிக்கிறோம், தேவையானவங்க அவங்களே போய் படுத்துக்கலாம்ன்னு சொன்னா சேல்ஸ் பிச்சிக்கும்.

சித்தப்பூ - ஐடியா நல்லாத் தான் இருக்கு ஆனா கட்டடம் கட்ட காசு வேண்டாமா?

சீனு – தேவையே இல்லை. ஸ்கூல், பாங்க், ஜிம் எல்லாத்தையும் நல்ல அழகான பொண்ணுங்க ஃபோட்டோவோட வரைபடத்துல போட்டுக் காமிப்போம். அதுக்கே பாதி விக்கும். பாதி வித்த அப்புறம் மிச்சத்த பார்த்துப்போம்

அழகு – ஆங்...பாதி விக்க வேண்டாமா...அது எப்படி விக்கும்?

சீனு – முதல்ல குறைச்ச விலைக்கு Phase 1 ன்னு சொல்லி பத்து ப்ளாட்ட நாமளே பங்கு போட்டு எடுத்துகிட்டு Phase 1 அல்ரெடி சோல்ட் அவுட்ன்னு சொல்லிடுவோம். அப்புறம் பாருங்க இந்த சாஃப்ட்வேர் காரனுங்க வர்ற வரத்தை...Phase 2-வ போட்ட அரை மணி நேரத்துல ஏதவாது ஒரு சாஃப்ட்வேர் dude வாங்குவான். அப்புறம் அவன் மத்த Dudeகளுக்கெல்லாம் “I own a piece of chennai"ன்னு பேஸ்புக் டிவிட்டர் கூகிள் ப்ளஸ்ன்ன் கூவி, மிச்ச சொச்ச ரியல் எஸ்டேட் விலையையும் ஏத்துற ஏத்துல ஊர்ல எவனும் சுடுகாட்டுல கூட வீடு வாங்க முடியாத அளவுக்கு விலைய கொண்டு விட்ருவானுங்க. கம்பெனிக்கும் லாபம் நமக்கும் லாபம், நாட்டுக்கு வளர்ச்சி.

சொர்ணா – எல்லாம் சரி கடைசீல சாஃப்ட்வேர் பார்க் எங்கடான்னான்னா?

சீனு – சுடுகாட்டுக்கு நடுவுல வேலி போட்டு நடேசன் பார்க்கு மாதிரி பத்து மரக்கண்ண நட்டு அதுக்கு அமெரிக்கன் சாஃப்ட்வேர் பார்க்குன்னு பெயர வைச்சிருவோம்.. சி.பி.ஐயே கேள்வி கேக்க முடியாது. நீங்க வேற சித்தப்பு...முத ஃபேஸுக்கு அப்புறம் அவனுங்களே எல்லாருக்கும் வித்துருவானுங்க அதாவது நாம பார்க்க - பார்க்கே பார்க்க வளர்த்துக்கும்.

சித்தப்பு – இந்த ஐடியா நல்லா இருப்பதால் நான் மன்னார் மச்சான் கிட்ட பேசி பார்க்கிறேன். அது வரைக்கும் எல்லாரும் திரும்ப அவங்க இடத்துக்கு போய் படம் பார்க்கிறத கண்டினியூ பண்ணுங்க...

ச.ரோசா – சார் எனக்கு படம் பார்க்க அந்த கம்ப்யூட்டர்...

Thursday, September 06, 2012

போட்டோகிராஃபி

கல்யாணவீட்டு பரபரப்பில் எல்லோரையும் சகட்டு மேனிக்கு அதிகாரம் செய்து கொண்டு "ஹலோ..அந்த தாலிய கொஞ்சம் கழட்டுங்க...அப்படியே இங்க பாருங்க, இப்போ திரும்ப கட்டுங்க" என்று மாப்பிள்ளையையும் பெண்ணையுமே அதிர வைக்கும் போட்டோகிராஃபர்களின் கையில் தான் நான் முதன் முதலில் கேமிராவை அருகில் பார்த்தது. ஆரம்பகாலக் கட்டங்களில் இந்த போட்டோகிராஃபர்களுக்கு இருந்த மதிப்பு அலாதி. மண்டபத்துக்குள் வந்தவுடனே இவர்களின் ஜபர்தஸ்து தாங்காது. "காபி, டிபன் ரெடியா, அப்புறம் ஸ்டில்ஸ் எடுக்கும் போது அவுட் ஆஃப் போகஸ் ஆகிடும் " என்று சம்பந்தமே இல்லாமல் இவர்கள் எடுத்து விடும் ஜார்கனெக்கெல்லாம் "அவாளுக்கு முதல்ல இலைய போடு இல்லைன்னா அவுட் ஆப் போகஸ் ஆகிடுமாம் அப்புறம் அதுக்கு வேற தோஷம் கழிக்கணும்"ன்னு மண்டபம் பரபரக்கும். அவர்கள் சாப்பிடும் போது காமிரா ஸ்டாண்டாக வேலைப் பார்ப்பதற்கு ஒரு அல்லக்கையை கூட்டிக்கொண்டு வருவார்கள். நாதஸ்வரகாரரிடமிருந்து கூட நாதஸ்வர்த்தை ஒரு தரம் பார்த்துவிட்டு தருகிறேன்னு லவட்டி விடலாம், ஆனால் இந்த கேமிரா உதவியாளர்களிடமிருந்து மட்டும் கேமிராவை வாங்கவே முடியாது. அப்புறம் வீடியோ வந்து இவர்களின் அந்தஸ்தை குறைத்தது. அந்த காலக்கட்டத்தில் எனக்கு காமிராவை விட ப்ளாஷ் லைட்டின் மீதே அலாதியான மோகம். அது தான் மெயின் உபகரணம் என்று நினைத்து, மேலே லைட் வெளிச்சம் விழுந்தாலே நம்மைத் தான் எடுக்கிறார்கள் என்று ஏகப்பட்ட சேட்டைகள் செய்து விரயமாகியிருக்கின்றன. என்னுடைய கல்யாண வீடியோவில் நான் எந்த சேட்டையும் செய்யவில்லை என்றாலும், வீடியோகிராஃபர் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை பாட்டைப் போட்டு, கிராபிக்ஸில் ஏரோப்ளேனில் போவது மாதிரி, கடிகாரத்தில் நானும் தங்கமணியும் ஒவ்வொரு முள் மாதிரி, ஒரு கொடியில் இரண்டு மலர்கள் என்று ஏகமாய் புகுந்து விளையாடி விட்டார் (தொழில் கற்றுக்கொண்டுவிட்டார்). இதில் இரண்டு பாட்டுக்கு ஒரு பாட்டு இல்லறத்தைப் பற்றி செண்டி பாட்டு வேறு ஸப்ப்பா...

ரிலீஸாகி பத்து வருடங்கள் கழித்துப் பார்த்த சலங்கை ஒலியில் "இது கேமிரா ..இது டப்பா" என்று கண்ணாடிப் பையன் காமெடி செய்துகொண்டிருந்த போது, குண்டலம் அணிந்துகொண்டிருக்கும் ஜெயப்பிரதாவையே பார்த்துக் கொண்டிருந்ததால் காமிரா அவுட் ஆஃப் போகஸாகிவிட்டது. பின்னொரு காலக்கட்டத்தில் எப்பவோ ரிலிசான டிக் டிக் டிக்-ல் தலைவர் மாதவியையும் ஸ்வப்பனாவையும் சும்மா வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்ததைப் பார்த்த போது தான் எனக்கு போட்டோகிராஃபி மேல ஒரு `இது` வந்தது. எனக்கு இருந்த அளவிற்கு எங்க மாமாவிற்கு கலையார்வம் போதாது. மாதவியையும் ஸ்வப்பனாவையும் வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்க வேண்டும் என்ற காரணங்கள் எல்லாம் காமிரா வாங்க அவருக்கு போதுமானதாக இல்லை. "சித்ரா ஸ்டியோல பத்து ரூபாய் குடுத்தா நிக்க வைச்சு ஜோரா எடுப்பானே" என்று தகித்துக் கொண்டிருந்த கலைத் தணலில் தண்ணியை ஊத்தி விட்டார். எங்க ஊர் சித்ரா ஸ்டுடியோவில் குண்டாவை கவுத்தி வைச்சது மாதிரி இருக்கும் பெரிய லைட்டில் கண்ணைப் பறிக்கிற வெளிச்சத்த்தில், கஞ்சி போட்டு உடம்பை அயர்ன் செய்த்த மாதிரி நிற்கச் சொல்லுவார்கள். "கேமிராவப் பாருங்க"ன்னு எங்கிருந்தோ குரல் வரும். கண்ணுல அடிக்கிற வெளிச்சத்துல கண்ணே திறக்க முடியாது தோராயமாய் ஒரு திசையப் பார்ப்பேன். "அம்பி சோக்கா வந்திருக்காரே" என்று ஓனர் மெச்சிக் கொண்டு, பவுடர் அப்பிய கன்னத்தில் எண்ணெய் ஓரமாய் வழிந்துகொண்டிருக்கும் போட்டோவை கொடுத்து பத்து ரூபாய் கல்லாவில் பார்த்துவிடுவார். போட்டோ எடுப்பதற்கே இந்த பாடு என்றால் கேமிராவாவது கோமியமாவது. "யே கேமிரா தேக்கோ"ன்னு யாராவது ஊரில் இருந்து செழிப்பாய் கேமிராவோடு வந்து ரோல் முடிந்த பிறகு கொடுத்தால், வெறும் பம்மாத்து ப்ளாஷ் போட்டு அடுத்த வீட்டு ஆட்டுக்குட்டியை எடுப்பேன். ஆட்டுக்குட்டியும் கேமிராவில் ரோல் இல்லை என்பது தெரியாமல் ரொம்ப சின்சியராய் போஸ் கொடுக்கும்.

இங்கிலாந்து வந்த புதிதில் பேச்சுலர் நண்பர்களுக்கு பர்ஸில் தெனெவெடுத்து எஸ்.எல்.ஆர் வாங்கலாம் என்று பேச்சு ஆரம்பமாகியது. ஆஹா அது தென்காசியிலிருந்து கடையம் வழியாக போகிற ரூட்டாச்சே, அந்த பஸ்ஸுல அவ்வளவு கூட்டமே வராதே என்று நான் குழம்பி கூர்ந்து கவனித்த போது தான் எஸ்.எல்.ஆர் என்பது கேமிரா சம்பந்தப் பட்ட விஷயம் என்று தெரிய வந்தது. உடனே பாழாய்போன கேமிரா மனசு டிக் டிக் டிக்ன்னு துடித்து " டேய் இந்த எஸ்.எல்.ஆர் டெக்னாலஜி இருக்கே...அதுக்கு முன்னாடி ஜப்பான்ல கே.கே.எஸ்.எல்.ஆர்-ன்னு ஒருத்தர் இருந்தார்.."ன்னு நானும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன். அது டிஜிட்டல் டெக்னாலஜி பிரபலாமாகாத சமயமாகையால் சாதாரண கே.கே.எஸ்.எல்.ஆர் தான் இருந்தது, ஆனால் அதுவே யானை விலை குதிரை விலை. பேச்சுலர் நண்பர்கள் அதுல ஒரு கிலோ போடு இதுல ரெண்டு கிலோ போடுன்னு வாங்கிக் கொண்டிருக்க, நான் பர்ஸுக்கு அடக்கமாய் ஒரு மினோல்டா வாங்கிக்கொண்டேன். அத்தோடு போச்சா... கேமிராவை வைக்க ஒரு பை, அதற்கு ஒரு எக்ஸ்ட்ரா பேட்டரி, துடைக்க ஒரு துணி என்று டிக் டிக் டிக் பட்ஜெட் எகிறிவிட்டது. என்னம்மோ பிறந்ததிலிருந்தே கேமிராமேன் மாதிரி முதல் ரெண்டு ரோலை வாங்கி வந்த ஒரு மணி நேரத்தில் முடித்து விட்டேன். ரோலை கழுவப் போன போது அவர்கள் கேட்ட தொகையைக் கேட்ட பிறகு தான் "ஒரு வேளை தலைவர் டிக் டிக் டிக்-ல் வெறும் ப்ளாஷ் மட்டும் தான் போட்டு எடுத்திருப்பாரோ" மண்டையில் உறைத்தது. அதற்கப்புறம் ஒரு சாதரண டிஜிட்டல் கேமிரா வாங்கி கொஞ்சம் கட்டுப்படியாயிற்று.

இந்த எஸ்.எல்.ஆர் உரிமையாளர்கள் சங்கம் தொல்லை தாங்க முடியாது. கிட்டார் வைத்திருப்பவர்களுக்கும் எஸ்.எல்.ஆர் வைத்திருப்பவர்களுக்கும் குரங்குத்தனத்தில் ஏகப்பட்ட ஒற்றுமை இருக்கும். நின்று கொண்டு எடுப்பார்கள், படுத்துக் கொண்டு எடுப்பார்கள், திருப்பதிக்கு நேர்ந்து விட்டது மாதிரி உருண்டு கொண்டு எடுப்பார்கள். நிறைய பேர் கையில் என்னமோ மெட்டல் டிடெக்டர் வைத்திருப்பது போல் கல், மண், மரம், செடி கொடி புழு பூச்சி எல்லாத்தையும் எஸ்.எல்.ஆர் லென்ஸ் வழியாகத் தான் பார்பார்கள். குழந்தைகள் மூக்கு ஒழுகினால் துடைக்க விடமாட்டாகள். ஊரில் ஒரு தாத்தா பாட்டி தேமேன்னு உட்கார முடியாது. அவர்கள் பராக்க பார்ப்பதை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு நூறு லைக்காவது பார்த்துவிடுவார்கள். ஜூம் லென்ஸ் வேறு வைத்திருந்தார்களானால் போச்சு. ஜூம் லென்ஸ் வழியாக சந்திர மண்டலத்திலேயே நிலத்தடி கச்சா எண்ணையை கண்டுபிடித்து விடுவார்கள். போதாக் குறைக்கு நாம வேற லூசு மாதிரி "எங்கயோ போயிட்டீங்கண்ணே"ன்னு பார்த்துக்கொண்டிருப்போம். "ஏரோப்பிளேன் மாதிரி இவ்ளோ பட்டன் இருக்கே..இதுல போட்டா பிடிக்க எந்த சுவிச்சண்ணே அமுக்கணும்"ன்னு கேட்டீர்களேயானால் அவர்களுக்கு ஜிவ்வுன்னு எகிறும் பாருங்கள். "ஆக்ச்யுவலி இந்த போகல் லென்த குறைச்சு DOF-அ கூட்டி வொயிட் பேலன்ஸ் பண்ணி ஷட்டர் ஸ்பீட அட்ஜெஸ்ட் பண்ணினா..." என்று ஜார்கன் போட்டு உங்களை ஒரு போட்டோ எடுத்து பிரேம் பண்ணி மாலை போட்டுவிடுவார்கள்.

ஹீ ஹீ...இவ்வளவு பெருமையா இவங்களைப் பத்தி எதுக்கு சொல்றேன்னா...நானும் சமீபத்தில் மீண்டும் பித்து தலைக்கேறி டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் வாங்கி உள்ளேன். மேற்கூறிய குரங்குத் தனங்களின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறேன். அதுல பாருங்க கிருஷ்ண ஜெயந்திக்கு எடுத்த அந்த ரெண்டாவது படத்துல போகல் லெந்த குறைச்சு DOF-அ கூட்டி வொயிட் பேலன்ஸ்......ஹலோ ஹலோ...வெயிட் நெசத்துல எனக்கும் அதப் பத்தி ஒன்னும் தெரியாதுங்கோவ்...


Sunday, September 02, 2012

மயிருலு

மு.கு - மஞ்சள்,நாதஸ்வரம்,பசுமாடு போன்ற மங்களகரமான நம்பிக்கையுடைவர்களுக்கு இந்தப் பதிவு உகந்ததல்லாததாக இருக்கலாம்.

தமிழ் மரபும், மொழி வழங்கும் சமூகத்தின் அணுகுமுறையும் என்னை பல சந்தர்பங்களில் ஆச்சரியத்திலும் சங்கடத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியிருக்கின்றன. கணிணி, நிரலி போன்ற பாமரர்கள் அதிகம் புழங்காத மெத்தப் படித்த வட்ட வார்த்தைகளின் பிரயோகம் "எப்படீங்க இதெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க" என்று ஆச்சரியக் குறியில் முடிந்து சுமூகமாய் இருந்திருக்கின்றன. அவை குடுத்த அகந்தையில், ஆர்ப்பரிய ஆர்வத்துடன் காப்பிக்கு "கொட்டை வடி நீர்" என்பதை பிரயோகப் படுத்த ரொம்ப நாளாய் ஆசை. "இந்த கொட்டை வடி நீர்..இருக்குல்லா"ன்னு பாண்டிய நாட்டு அண்ணாச்சி பெட்டிக் கடையில் முயற்சி செய்ததில் "அந்த மூத்திர சந்தில மூனாவது கடைடே, நாலு மணிக்கு வருவாரு, சூரணம் குடுப்பாரு டக்குன்னு கேட்டுரும்லா"ன்னு இலவச மருத்துவ ஆலோசனையில் முடிந்தது. காப்பியே குடிப்பதில்லை இப்போதெல்லாம். தமிழ்ப் பெயரும் ஒரு காரணம். நல்லவேளை தேநீர் எவ்வளவோ தேவலாம்.

நிற்க, நான் சுத்தத் தமிழுக்கு எதிரியல்ல. இந்த பதிவு சுத்தத் தமிழை பேச்சு வழக்கிலும் கடைபிடிப்பவர்களை நையாண்டி செய்யவும் அல்ல. நானும் தமிழை தாய்மொழி என்று சொல்லிக் கொண்டு பல வார்த்தைகளுக்கு சொற்கள் அறியா பெரும்பாண்மையை சேர்ந்தவன் தான் வெட்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன். ஆனாலும் சில பெயர்களை பெயர்களாகவே விட்டுவிடலாமோ எனும் சந்தேகக் கட்சியை சேர்ந்தவன். நமக்கு சாலைகளையும் ஊர்ப் பெயர்களையும் மாற்றவே நேரம் போதவில்லை. "மரியாதைக்குரிய ஐயா, கணிணி தவறாக உங்கள் பெட்டியை மும்பைக்கு அனுப்புவதற்கு பதிலாக பம்பாய் செல்லும் விமானத்தில் ஏற்றிவிட்டது தவறுக்கு வருந்துகிறோம்..அதுவரைக்கும் இத்துடன் இணைத்திருக்கும் காலணா கழிவுச் சீட்டை உபயோகப் படுத்தி கடையில் சென்று உள்ளாடை வாங்கி அணிந்து கொள்ளவும்" போன்ற குழப்பங்கள் பெரும்பாலும் "ங்கொய்யால..எங்க வந்து யார்கிட்ட.." என்று ஆரம்பித்து சுந்தரத் தமிழிலேயே தீர்ப்பாகியிருக்கின்றன.

ரொம்ப விலகிப் போகிறேன், உட்கருத்துக்கு வருகிறேன்.கேசம் என்றும் ரோமம் என்றும் முடி என்றும் பலவிதமான குறியீட்டு சொற்களை உடைய "மயிரு" என்ற வார்த்தைக்கு மட்டும் ஏனோ வழக்குத் தமிழில் இருக்கும் ஓரவஞ்சனை எனக்கு சுத்தமாய் புரியவில்லை. இளம்பிராயத்தில் சுத்த தமிழில் பேசுவதாய் நினைத்துக் கொண்டு "மயிரு வெட்ட போகவேண்டும்" என்று ஒரு முறை மாமாவிடம் சொன்னேன். "இப்படியெல்லாம் கெட்ட வார்த்தை பேச யார் சொல்லிக்குடுத்தா" என்று மாமாவின் முறைப்பில் போய் நின்றது."மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என்று ஐயன் வள்ளுவன் தான் என்றால் "வேண்டாததெல்லாம் கத்துக்கோ...எங்க 144 குறளையும் சொல்லு பார்ப்போம்..அதிகப் பிரசங்கி"ன்னு மண்டையில் கொட்டு விழுந்திருக்கலாம்.பெண்ணின் நடத்தையை சந்தேகிக்கும் வார்த்தைகளைக் கூட அவ்வப்போது அனுமதித்தாலும், மயிரு என்ற வார்த்தைக்கு மட்டும் இன்றளவும் திரைபடங்களில் தணிக்கை குழு "உய்ங்ங்" என்று மணியடித்து மழுங்கடிக்கிறார்கள். எனக்கு என்னவோ போடா முண்டம் என்ற பிரயோகத்திற்கும் இதற்க்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. கிராமுக்கு இரண்டாயிரத்தி சொச்சத்தில் விற்கும் தங்கத்தை பஸ்பமாக்கி டப்பாவில் நூற்றி ஐம்பது ரூபாய்க்கு தரும் பேருந்து நிலைய லேகிய விற்பன்னர் மட்டும் "சாப்பிட்டா தேகம் மின்னும், மயிரு வளரும்" என்று திருத்தமாய் சொல்கிறார். "வளர வேண்டிய இடத்தில வளராமல் வேண்டாத இடத்திலலெல்லாம் எப்போ மசுரு வளர்றதோ அப்போ வயசாக ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம்" என்று சீனாதானா மாமா வட்டதில் மயிரு மருவி மசுரு என்று தத்துவார்த்தமாய் வழங்கப்படும். மற்றபடி முக்கால் வாசி சமூகத்தில் மயிரு இன்னமும் பேட் வேர்ட் தான். "மசுரைக் கட்டி மலையை இழுப்போம் வந்தா மலை போனா...டேஷ்" என்று பல இடங்களில் டேஷாக வழங்கப் பட்டு வருகிறது. பத்து வாக்கியத்திற்கு ஒரு வாக்கியம் "வாட் த...ஃப%%^&" என்று கூவும் நவநாகரீக பேட் கேர்ல்ஸ் கூட இப்போதெல்லாம் "என்ன ஹேருக்குடா லேட்டா வர" என்று மொழி வதை செய்கிறார்கள். இவ்ளோ ஓரவஞ்சனையா...அப்புறம் மண்டையில எப்படி வளரும்ங்கிறேன்.

நானறிந்த ஆந்திர மணவாடுக்கள் மட்டும் இன்றளவும் இந்த வார்த்தையை கெட்டியாய் பிடித்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் "போடா மயிருலு" என்று கூச்சமேயில்லாமல் முழங்குகிறார்கள். காரணம் இல்லாமலா அங்கு முடிவளம் மிகுதியாய் இருக்கிறது.விதை ஒன்று விதைத்தால் சுரையா முளைக்கும்?

ஏன் இந்த வார்த்தைக்கு மட்டும் இவ்வளவு தடா?

Wednesday, July 18, 2012

புலம்பல்கள்

கடந்த சில மாதங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் நிறைய. நிறைய அடி பட்டு, பார்க்கிறவர்களை எல்லாம் நம்பிக் கொண்டு எவ்வளவு ஏமாளியாய் இருந்திருக்கிறேன் எனபதை புரிந்து கொண்டிருக்கிறேன். சமீபத்திய அனுபவங்களில் பலனாய் சக மனித நம்பிக்கை என்பது அடிபட்டு போய்க் கொண்டிருக்கிறது. இங்கே எழுதாததிற்கு இந்த மன உளைச்சல்கள் தான் முக்கிய காரணம். சொல்லாமல் கொள்ளாமல் நான் இப்படி லீவு போடுவதென்பது உங்களுக்கு புதிதொன்றுமில்லை என்றாலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பின்னூட்டத்திலும், மெயிலும் விசாரித்தவர்களுக்கு மனதார நன்றி. குழப்பங்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை என்றாலும் நம்ம கையில் ஒன்றும் இல்லை, எல்லாம் இஷ்ட தெய்வம் கத்ரீனா விட்ட வழி என்று மனம் ஒருமுகப் பட்டிருக்கிறது. விடுங்க பாஸ் பொழப்ப கவனிப்போம்


லண்டன்- ஒலிம்பிக்ஸினால் அதகளப் பட்டுக்கொண்டிருக்கிறது. போன வாரம் எங்க வீட்டுக் கொல்லைப்பக்கத்தில் நாலைந்து ஜாவலின் குச்சிகள் விழுந்து கிடந்தன. யாரோ ஸ்டேடியத்தில் ப்ராக்டீஸ் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.(ஹீ..ஹீ அதாவது யுவர் ஆனர் எங்கவூடு ஸ்டேடியத்திற்கு ரொம்ப பக்கம்ன்னு தாக்கல் செய்யுறோங்கோவ்). நண்பர் குழாமில் பல பேர்கள் ஒப்பனிங் செரிமனி கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்கள். இன்னும் சில பல நண்பர்கள் வாலன்டியர்களாய் நிர்வாகத்தில் பங்கு கொள்கிறார்கள். 100 மீட்டர் ஓட்டப்பந்தய ஃபைனல்ஸில் எனக்கு வைல்ட் கார்ட் எண்ட்ரி தராத காரணத்தினால் நான் வூட்டிலிருந்தபடி பக்கோடாவும் டீயும் குடித்துக் கொண்டே நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்.

விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே சலசலபிற்கு குறைவில்லை. பாதுகாப்பு காண்டிராக்ட் எடுத்த G4S கம்பெனி போதுமான செக்யூரிட்டி ஆட்களை சப்ளை செய்ய முடியாது  என்று அமளி துமளி ஆகி பாதுகாப்பு என்னாவதுன்னு ராணுவத்தினரை கொண்டு வந்திருக்கிறார்கள். எதுக்கும் சேஃப்டிக்கு இருக்கட்டும் என்று மிஸைல் லாஞ்சரை ஒரு வீட்டு மொட்டை மாடியில் வைத்திருக்கிறார்கள். "என்னா விளையாடுறீங்களா...கம்ப்யூட்டர் மிஸ்டேக்ல ராக்கெட் திரி பத்திக்கிட்டு அதுபாட்டுக்கு லாஞ்ச் ஆகிடிச்சின்னா அப்புறம் எங்க ஐயாக்கு யாரு பதில் சொல்றதுன்னு" என்று ஒரு கூட்டம் அலம்பிக்கொண்டிருக்கிறது. பாதுகாப்பு வேணும் ஆனா செக்யூரிட்டி வேண்டாமா என்னடா தெளிவா குழப்புறீங்கன்னு அதிகாரிகள் குழம்பிப் போய் இருக்கிறார்கள். எல்லா நல்லவைய்ங்களும் இங்கே இருப்பது மாதிரி மழை வேறு கொட்டு கொட்டுவென்று இன்னும் கொட்டிக் கொண்டிருக்கிறது. வருகிற கூட்டத்தினால் லண்டனே ஸ்தம்பிக்கப் போகிறது என்று பேப்பர்கள் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் நடுவில் மக்களுக்கு நடுவில் உற்சாகம் என்னவோ கரைபுரண்டு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. ஸ்டேடியத்தை ஓட்டி ஐரோப்பாவின் மிகப் பெரிய ஷாப்பிங் மால் ஒன்றை சமீபத்தில் திறந்துவிட்டார்கள். ஒன்னுமே வாங்காமல் கடை கடையாய் சுத்திப் பார்ப்பதற்கே ஒரு நாள் பிடிக்கும்.பாதாள ரயில் ஸ்டேஷனிலிர்ந்து இந்த மால் வழியாக ஸ்டேடியம் செல்ல வழியமைத்து ஸ்பெஷல் தரைகள் மூலம் மக்கள் நடப்பதிலிருந்தே மின்சாரம் உற்பத்தி செய்ய விவரமாய் டெக்னாலஜியை உபயோகப் படுத்தியிருக்கிறார்கள்.ஆக மொத்தம் இன்னும் ஆட்டம் ஆரம்பிக்கவே இல்லை அதற்குள் விறு விறுப்பாய் இருக்கிறது.


"Fifty Shades of Grey" என்கிற புத்தகத்தைப் பற்றி உங்களில் நிறைய பேர் கேள்விப் பட்டிருக்கலாம். செக்ஸ் கண்டெண்ட் அதிகம் உள்ள  - பெண்களுக்கான மேட்டர் புத்தகம் என்று பெண்களால் ஓகோன்னு கொண்டாடப் படுகிறது. இல்லை இல்லை இது அவ்வளவு எரோட்டிகாய் இல்ல..கொஞ்சம் ராவாய் இருக்கிறது என்று ஒரு கூட்டம் புலம்புகிறது. ஆனாலும் 4 மில்லியன் காப்பிகள் வித்து தீர்ந்து தற்போது சினிமாவாக ஆக்கப்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் தற்போது இந்த டாப்பிக் பயங்கர ட்ரெண்டாகி எல்லா இடங்களிலும் பெண்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. “உங்க வீட்டுல இன்னிக்கு என்ன சமையல்” என்பது போய் “பிஃப்டி ஷேட்ஸ் படிச்சியா அதுல நாலாவது சேப்டர் மூனாவது பக்கத்துல..” என்று சௌஜன்யமாகிக் கொண்டிருக்கிறது. காலங்கார்த்தால ட்ரெயினில் நிறைய பெண்கள் இந்தப் புத்தகத்தை படிப்பதைக் கண்கூடாக காண முடிகிறது. “நல்லாத்தேங் இருக்கு ஆனா இத விட மேட்டர் புஸ்தகமெல்லாம் படிச்சிருக்கேன், அதுனால இது தான் சூப்பர்ன்னு இத்தோட நின்னுடாதீங்கோவ்”ன்னு லண்டன் மெட்ரோ பேப்பர் SMS செக்‌ஷனில் பெண்கள் கலாசிக் கொண்டிருக்கிறார்கள். ங்கொய்யால நானெல்லாம் காலேஜ் ரெக்கார்ட் நோட்ல மறைச்சு வைச்சு படிக்க எவ்ளோ கஷ்டப் பட்டிருக்கேன்..எங்கடா போனீங்க அப்போல்லாம்...? ..ஹூம்

Tuesday, March 13, 2012

விருந்தோம்பல்

மை டியர் டார்லிங் என்று மல்லிகா அன்பாய் கூப்பிடும் சனிக்கிழமை அதிகாலை ஒன்பது மணி (மிட்நைட்) தூக்கத்தில் கண்ணை மூடி தேமேன்னு படுத்துக் கிடவாமல், “ஐயையோ...இன்னிக்கு வீட்டைக் க்ளீன் பண்ணனுமே” என்று ஜெர்க் ஆகி எழுந்தால் அன்றைக்கு வீட்டிற்கு யாரோ விருந்துக்கு வருகிறார்கள் என்று அர்த்தம். “வைச்சது வைச்ச இடத்தில் கலையாம நீட்டா இருக்கிறதுக்கு இதென்ன மியூசியமா? குடியிருக்கிற வீடு அப்பிடி இப்பிடி தான் இருக்கும்” என்ற பார்த்திபன் கனவு டயலாகை மேற்கோள் காட்டி ஹால் கதவை திறந்தால் வீடு மியூசியத்துக்கு வெகுதூரத்தில் சாக்கிசான் சண்டைக் காட்சி நடந்த லொக்கேஷன் மாதிரி கந்த கோளமாய் இருக்கும்.

“அலாவுதீனும் அற்புத விளக்கும்” கதையில் வரும் “ஆலம்பனா” பூதத்தை வீட்டு வைலைக்கு வைக்கலாமா என்று நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, தங்கமணி ஒரு டீ ஒன்றை போட்டு குடுத்து  விட்டு “தம்பி டீயை குடிச்சிட்டு தீயா வேலை செய்யணும். கம்பேனி உன்கிட்டேர்ந்து நிறைய எதிர்பார்க்குது”ன்னு ‘ஆலம்பனா’ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை என் கையில் குடுத்துவிடுவார். முதல்வன் அர்ஜூன் மாதிரி வீட்டோடு எல்லோருக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் ரெடியாக வைத்திருப்பார். கிச்சனும் கிச்சன் சார்ந்த இடங்களும் தங்கமணி அண்ட் கோவிற்கும், டாய்லெட்டும் டாய்லெட் சார்ந்த இடங்களும் எனக்கும் என்று நியாய பாகப்பிரிவினை எல்லாம் முதலிலேயே அரங்கேறிவிடும்.

சினிமாவில்/விளம்பரங்களில் இளம் கதாநாயகிகள் அழகாக குளித்துவிட்டு தலைமுடியை முன்னால் லேசாக கலைத்து விட்டுக் கொண்டு இன்னும் கொஞ்சம் அழகாய் காட்டன் புடவையை இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். வீடும் சமத்தாய் பாஸ்ட் ஃபார்வேட் மோடில் பதினாறு வினாடிகளில் பள பளவென்று ஆகிவிடும். நாயகியும் சுடச் சுட காப்பி போட்டு குடித்துவிட்டு ஜன்னல் கர்டன்களை விலக்கி விடுவார். ஆனால் இந்த நிஜம் இருக்கிறதே நிஜம், ஸ்ப்ப்பா நொங்கெடுத்து நோக வைத்துவிடும். இருக்க வேண்டியது இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது இல்லாதது இருக்கவே இருக்காது.கோப்பில் எடுத்து வைக்காத கடுதாசிகள் 5E பஸ் மாதிரி லெட்டர் ஹோல்டரில் புட்ஃபோர்டில் தொங்கிக் கொண்டிருக்கும்.

“இதான் அன்னன்னிக்கு வந்த லெட்டர அப்பவே எடுத்து வைச்சிருந்தா இப்போ இப்படி முழிக்க வேண்டாம். சொன்னதக் கேட்டா தானே எல்லாம் நான் பார்த்துக்குறேன் நான் பார்த்துக்கிறேன்னு. யாரு வேண்டாம்னா..நல்லா நிறுத்தி நிதானமா பாருங்க”  - தங்கமணி தீவிரமான ராஜ்கிரண் ரசிகர். சமயம் பார்த்து ஆர்பாட்டம் இல்லாமல் அடிக்கிற அடியில் ‘களுக்’ன்னு எலும்பு முறியும் சத்தம் மட்டும் தான் வரும் மிச்சமெல்லாம் இண்டர்னல் ப்ளீடிங் தான்.

“அப்பா நீங்க ரொம்ப நாளா தேடின டார்ச் லைட் இங்க வாஷிங் மெஷின் பின்னாடி விழுந்து இருக்கு” என்று மகள் வேறு சமய சந்தர்ப்பம்  தெரியாமல் எடுத்துக் குடுப்பார். “தெரியும்டா செல்லம் ஆத்திரம் அவசரம்னா எடுக்கறதுக்கு வசதியா இருக்குமேன்னு நான் தான் வாஷிங் மிஷின் பின்னாடி பத்திரமா வைச்சிருக்கேன்”- ஒரு மனுஷன் ஒரே நேரத்துல எவ்வளவு பேரைத் தான் சமாளிப்பான்?

“நீ வாங்கி வைச்சிருக்கிற அந்த ப்ளூ பிரஷ் அவ்வளவு போறலை. என்ன பிரஷ் வாங்கியிருக்க..அத வைச்சு எவ்வளவு தேய்ச்சாலும் பாத்ரூம க்ளீனே ஆக மாட்டேங்குது. உன்னை கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான்னு நினைக்கிறேன்”

“என்னது ப்ளூவா...ஓ மை காட் அது பெடிக்க்யூர் பிரஷ்...அது காலுக்கு வாங்கி வைச்சது..அத வைச்சா பாத்ரூம க்ளின் செஞ்சீங்க”ன்னு தங்கமணி பதறிக் கொண்டு வரும் போது “அதானே பார்த்தேன் இதப் பார்த்தா பாத்ரூம் பிரஷ் மாதிரி இல்லையேன்னு எனக்கு அப்பவே டவுட்டு. நல்ல வேளை யூஸ் பண்றதுக்கு முன்னாடியே உன் கிட்ட கேட்டேன்..நான் காட் ப்ராமிஸா இத வைச்சு க்ளீன் செய்யலமா” உபயோகித்த சுவடே தெரியாமல் ப்ரஷ் இருந்த இடத்திற்கு போய்விடும்.

எங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருவதென்றால் சில பல கண்டிஷன்கள் உண்டு. விருந்தினர் அதை உணராமல் செயல்படுத்த கம்பெனி எல்லாவிதமான முயற்சிகளும் எடுக்கும் . வருவதற்கு ஒரு வாரம் முன்னமே எங்களுக்கு தகவல் சொல்லி விட வேண்டும். “கண்டிப்பா நம்ம வீட்டுக்கு நீங்க வரணும். ஆனா முந்தின வாரமே சொல்லிட்டு வாங்க, ஏன்னா முக்கால்வாசி வாரக் கடைசி நாங்க வீட்டுலயே இருக்க மாட்டோம்.எங்கேயாவது போய் விடுவோம். நீங்க வந்து அப்புறம் நாங்க இல்லாம கதவ தட்டிக்கிட்டு நின்னீங்கன்னா எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும் பாருங்க அதான்”

நடுவில் ஒரு வாரக் கடைசி இருப்பது நலம் பயக்கும். “ஓ..நாளைக்கா...அடடா ரொம்ப சாரிங்க அனுஷ்கா வூட்டுல அவல் சாப்பிட வரச் சொல்லி ஒரே அடம், நீங்க அதுகடுத்த வாரம் கண்டிப்பா வரனும் ப்ளீஸ், இல்லைன்னா நாங்க வேணா அனுஷ்கா வூட்டு அப்பாயிண்மெண்ட கேன்சல் பண்ணிடறோம்”ன்னு ஒரு பிட்ட போட்டால் “சேச்சே...அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை நாங்க அடுத்த வாரம் வரோம், நீங்க அனுஷ்கா வூட்டுல அவல் சாப்பிட்டுவிட்ட வாங்க”ன்னு நீங்களே கண்டிஷனுக்கு டிக் போட்டு விடுவீர்கள்.

சம்பவ நாள் அன்றைக்கு காலையில் பத்து மணி வாக்கில் சுமார் எத்தனை மணிக்கு வந்து சேர்வீர்கள் என்று ஸ்கெட்சு போடுவோம். “சும்மா குட்மார்னிங் சொல்ல தான் ஃபோன் பண்ணினேன்..குட்டீஸ்லாம் எழுந்தாச்சா..இன்னும் இல்லையா, நோ ப்ராபளம் சின்னப் ‘பூ’ங்க அது ... எழுப்பிடாதீங்க. மெதுவா எந்திரிக்கட்டும் நம்ம வீடு தானே எப்போ வேணா வரலாம் ஒன்னும் பிரச்சனையே இல்லை”

“அதிதி தேவோ பவ” என்ற கோட்பாடின் படி உங்களை முதலமைச்சர் ரேஞ்சுக்கு மரியாதையாய் நடத்துவோம். “நீங்க அங்க உங்க வீட்டுலேர்ந்து கிளம்பும் போது கால் பண்ணுங்க ப்ளீஸ். ஏன்னா இங்க வீட்டுக்கு முன்னாடி பார்க்கிங் பிஸியாய் இருக்கும் நாங்க இடத்த ரிசர்வ் செஞ்சு வைச்சிடுவோம் அதுக்குத் தான் பாருங்க. அவங்க கிளம்பியாச்சு, கவலபடாத இன்னும் 30 நிமிஷம் இருக்கு அதுக்குள்ள  எல்லாத்தையும் க்ளியர் பண்ணிடறேன்”

நீங்கள் வந்து கொண்டிருக்கும் போது போதும் இன்னொரு ஃபாலோஅப். “எங்க இருக்கீங்க..இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவீங்களா..இல்ல இங்க ஏ30ல ஒரே ட்ராபிக்குன்னு பக்கத்து வீட்டு வெள்ளக்கார மாமா சொன்னார் அதான் உங்கள உஷார் படுத்தலாமேன்னு. என்னது ட்ராபிக்கே இல்லையா ஓ அப்ப அவர் சொன்னது போன வாரமா இருக்கும்”

“ஒரு துணியை ஒருவர் மடித்து வைக்க இரண்டு நிமிடம்,அப்போ இருபது துணியை இரண்டு பேர் மடித்து வைக்க இன்ன நேரம் ஆகும், கண்டின்ஜென்சிக்கு அதை விட ஒன்றரை மடங்கு நேரம், சோ என்னோட துணிமணியெல்லாம் நானே மடிச்சு வைச்சிக்கிறேன், யாரும் தொட வேண்டாம், நாளை காலை பத்துலேர்ந்து பத்தேகாலுக்குள்ள எல்லாத்தையும் அயர்ன் செய்து மடிச்சு வைச்சிடுவேன்” - ஆபிஸில் கற்றுவந்த ப்ராஜெக்ட் ப்ளானிங்க கோட்பாடுகள் எல்லாம் ஏனோ எனக்கு மட்டும் வீட்டில் வொர்க் அவுட்டே ஆகாது. வீட்டில் எல்லார் துணிமணிகளும் ஒழுங்காய் மடித்து வைக்கப்பட்டிருக்க, என்னுடைய சட்டைகளுக்கு கண்டின்ஜென்சி என்னவோ போர்வையை விரித்து எல்லா துணியையும் அதில் போட்டு இருமுடி மாதிரி கட்டி பீரோவில் அடைத்து பூட்டி வைப்பதாய் தான் இருக்கும்.

"Expect the unexpected" என்று எந்த நாதாரி திருவாய் மலர்ந்தாரோ தெரியாது ஆனால் கரெக்ட்டாய் நடக்கும். தங்கமணி வாங்கி வர சொன்ன சமையல் லிஸ்டில் ஏதாவது முக்கியமாய் விட்டுப் போயிருக்கும்.  “என்னம்மா எந்த காலத்துல இருக்க, முட்டை இல்லாம ஆம்லெட்டே செய்யறாங்க,  புளி இல்லாம புளியோதரை செய்ய முடியாதா? ” போன்ற அதிகப்பிரச்ங்கித்தனத்துக்கெல்லாம் அது வேளையில்லை. “ஓகோ...வருவாங்க.. நீங்க தான் சர்கரைக் கட்டியாய் பேசிப் பேசியே வாயால பாயாசம் விடுவீங்களே, வுடுங்க” என்று ஆபத்தில் முடிந்துவிடும்.

என்னடா சோத்த போட்டுட்டு முகம் அனிச்ச மலர் மாதிரி பூத்திருக்கா வாடியிருக்கான்னு விருந்தோம்பல் விதிகளை கடை பிடிக்காம இப்படி கண்ட மேனிக்கு கண்டிஷன் போடுகிறார்களே என்று நினையாதீர்கள். டென்ஷன் எல்லாம் நீங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் தாங்க. அதுக்கப்புறம் கலகல வென்று ஆகிவிடும். நாம் பேசிக் கொண்டிருப்போம், கேம்ஸ் விளையாடுவோம்,சினிமா பார்ப்போம், அப்புறம் முக்கியமாய் தங்கமணி செய்து வைத்திருக்கும் ருசியான சாப்பாடு சாப்பிடுவோம். நீங்களும் “எப்படிங்க வீட்ட இவ்வளவு சுத்தமா அழகா வைச்சிருக்கீங்க”ன்னு கேட்பீங்க, அப்புறம்  “இந்த வெங்காய சாம்பார் ரொம்ப சூப்பர்ங்க கொஞ்சம் ரெசிபி சொல்லுங்களேன்”ன்னு கேட்பீங்க. “அட அது ரொம்ப ஈசிங்க சும்மா அசால்டா செய்யலாம்”ன்னு வாங்கி வந்த மளிகை சாமான் லிஸ்டை வைத்தே நான் ஒரு ரெசிப்பி சொல்லுவேன், அப்போ தங்கமணி கண்ணால் லேசர் விடு தூது ஒன்னு விடுவாங்க, விடுங்க பாஸூ வீரனோட வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம்  பாஸு :)

Sunday, March 04, 2012

பாலிவுட் டான்ஸ்


பாலிவுட் டான்ஸ் என்றால் “டான்ஸ் ஆடறதுக்கு எதுக்கு பால விடணும்” என்று கேட்கக் கூடிய பத்மா சுப்ரமண்யம் சொசைட்டியில் வளர்ந்த பச்சை மண்ணு நான். எங்கள் டேன்ஸ் சொசைட்டியில் டேன்ஸ் இரண்டே வகைப்படும். ஒன்று தலையில் ராக்குடியும் நெத்திச்சூடியும் அணிந்து  நட்டுவாங்கம் ஜால்ரா சத்தோடு ஆடக் கூடிய பரதநாட்டியம், இன்னொன்று பத்து டார்ச் லைட்டை வெவ்வேறு ஆங்கிளில் வைத்து போட்டு போட்டு அணைத்து ஆடும் “டிஸ்கோ”.

சட்டை கொஞ்சம் பளபளவென்று சில்வர் லைனிங்கோடு இருந்தால் அது டிஸ்கோ சட்டை. இப்பேற்பட்ட சட்டை கிடைப்பதற்கு தவமாய் தவம் இருக்க வேண்டும். ஏகப்பட்ட இக்குகளுக்குப் பிறகு “பரவாயில்லை சார் அம்பி ராத்திரி இருட்டுல ட்யூஷன்லாம் போயிட்டு வரும் போது  லாரிகாரன் லைட்டு வெளிச்சத்துல சட்டை பளபளன்னு தெரியும், வாங்கிக்குடுங்கோ ஒரு சேஃப்டியா இருக்கும்”ன்னு கடைக்காரர் சட்டையின் பாதுகாப்பு பலன்களை விவரித்து ரெக்கமெண்டேஷன் செய்யும் போது அத்திப் பூத்தாற்ப்போல பள பள டிஸ்கோ சட்டை கிடைக்கும். அதை போட்டுக் கொள்ளும் நன்னாளில் ரொம்ப காத்திருந்து, லேசாய் இருட்டிக் கொண்டு வரும் ஆறு ஏழு மணிக்கு படக்கென்று எல்லா லைட்டை அணைத்துவிட்டு கண்ணாடியை பார்த்துக் கொண்டே டார்ச் லைட்டை மினுக்கி “ஐ ஆம் அ டிஸ்கோ டான்சர்” என்று  ஒரு ஆட்டம் போட்டால் “விளக்கேத்துற நேரத்துல லைட்ட அணைக்கிறது பாரு பிரம்மஹத்தி” என்று நட்டுவாங்கம் ஆட்டமேட்டிக்காய் வரும்.

பக்கத்து வீட்டில் குண்டு டீச்சர் பரதநாடியம் சொல்லிக்குடுப்பதை பார்த்த எஃபெக்டோ இல்லை டிஸ்கோ டான்சில் தான் ஜோடியோடு ஆடமுடியும் என்ற கூட்டுறவு தத்துவத்தினாலோ பரதநாட்டியத்தை விட டிஸ்கோ தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். மிருதங்கம் வாசிக்கிற எல்லா பாட்டும் பரதநாட்டியப் பாட்டு, மற்றவை எல்லாம் டிஸ்கோ பாட்டு என்ற எளிமையான கோட்பாடு எங்கள் டேன்ஸ் சொசைட்டியில். ஹிந்தி பாடலாயிருந்தால் ஷெனாய் தான் க்ரைட்டீரியா. ஷெனாய் வாசிக்காத பாடல்கள் டிஸ்கோ ரகத்தில் அடங்கும். குர்பானி படத்தில் வரும் லைலா ஓ லைலா பாட்டெல்லாம் top of the range பாடல். தெரு முக்கு டீ கடையில் இந்தப் பாட்டு போட்டால் நாபிக் கமலத்திலேர்ந்து ஒரு டேன்ஸ் வந்து குலுக் குலுக் குலுக்ன்னு மீசிக் குடுத்துக் கொண்டு வீட்டில் லைட்டை போட்டு போட்டு அணைத்து, பீஸ் போய் தெருவில் நிறைய வீட்டில் அன்றைக்கு வாரந்திர மின்சார விடுமுறை நாளாகிவிடும். இந்த வயதில் இங்கிலீஷ் பாட்டு ரொம்ப கேட்டதில்லை. ஏதாவது குண்ஸா இங்கிலீஸ் பாட்டு இருக்காண்ணேன்னு ஆடியோ கடையில் கேட்டால் “ஏண்டா ஏ படம் பார்க்கிற வயசாடா இது....வீட்டுல சொல்லட்டுமாடா”என்று பாட்டு இல்லை என்பதை விவரமாய் சமாளிப்பார்கள். இருந்தாலும் சின்ன வயதில் தெருவில் ஒருமுறை ஒரு பெண்ணுடன் ஜோடி சேர்ந்து ஆடி டிஸ்கோ டான்ஸராய் அரேங்கேற்றம் ஆகியிருக்கிறது.ஆனால் அதுவே முதலும் கடைசியுமாய் ஆகிவிட்டது என்பது தான் எனது தீராத சோகம்.

இந்த டேன்ஸ் இருக்கே டேன்ஸ், அது இதயம் பட முரளியோட காதல் மாதிரி. மனசுக்குள் தலைவிரித்து தாண்டவமாடும். ஆனால் ஆடும் போது இந்த ஸ்டெப்பு இருக்கே ஸ்டெப்பு அது தான் பல்லுக்கிடையில் மாட்டிக் கொண்ட பக்கோடா தூள் மாதிரி கொஞ்சம் வராது. அதையும் தாண்டி வரும் ஒன்னே முக்கால் ஸ்டெப்பும் மைக்கேல் ஜாக்சன் ரேஞ்சுக்கு ஆடுவதாய் நமக்கு மமதையைக் குடுக்கும்.இந்த மாயையில் சிக்கி சில பேர் தெருவில் ஆடி, அதைப் பார்த்து தெருவே ஆடி,அமுக்கிப் போட்டு சாவிக் கொத்தை கையில் கொடுத்து காக்காவலிப்பு டிரீட்மெண்ட் நடந்த கதையும் உண்டு என்பதால் எனது முதல் டிஸ்கோ அரங்கேற்றத்துக்குப் பிறகு நான் வெறும் பாத்ரூம் டான்சராகவே செட்டில் ஆகிவிட்டேன். இருந்தாலும் “என்னடா டேன்ஸ் ஆடற...  டிஸ்கோன்னா எப்படி ஆடனும்... நல்ல கைய கால ஒடிடா இடுப்ப வெட்டுடா”ன்னு சண்டியர் மாதிரி சவுண்டு விட்டதிற்கு குறைச்சலே இல்லை. விட்ட சவுண்டில் என்னை காலேஜில் மைக்கேல் ஜாக்சன் மைத்துனர் பையன் என்று நினைத்து, பஸ் டே அன்றைக்கு எங்க ஊரில் முக்கியமான ஒரு இடத்தில் பஸ்ஸை நிப்பாட்டி என்னை ஆட வைத்து, “உங்க பையன் காலேஜில ஓகோன்னு படிக்கிறான்”ன்னு வீட்டுக்கு ரிப்போர்ட் போய் - விடுங்க  “மயிலப் பிடிச்சி காலை உடைச்சி ஆடச் சொல்லுகிற உலகம்”ன்னு சின்னத்தம்பில பிரபு சும்மாவா ஃபீலிங்க்ஸாய் பாடி இருக்கிறார்.

ஆனாலும் இந்த டேன்ஸ் தாகம் எனக்கு ஒயவே இல்லை. யாருமே இல்லா மலை முகடுகளைக்குப் பார்க்கும் போதெல்லாம் கண்ணை உருட்டிக் கொண்டு தலயின் “நாத விநோதங்கள்” சலங்கை ஒலி பாட்டுக்கு ஆடியிருக்கலாமே, குண்டலமும், சிகப்பு கலர் ட்ரெஸும், ஜெயப்பிரதாவும் இல்லையே என்று வருத்தம் மேலோங்கும். சில சமயம் வீட்டிற்கு வரும் கல்யாணப் பத்திரிகையை ஓப்பன் பண்ணும் போதெல்லாம் சலங்கை ஒலி டேன்ஸ் இன்விடேஷன் சீன் இளையராஜா பி.ஜி.எம் கேட்கும். இருக்கட்டும்டா சுனா பானா ஒரு நாள் தெறமையக் காட்டுவோம்டான்னு நினைத்துக் கொள்வேன். சமீபத்தில் இங்கே யூ.கேவில் மேடையில் டேன்ஸ் ஆடும் வாய்ப்பு ஒன்று வாசல் வழியாக போக, கப்புன்னு பிடித்துக் கொண்டு மேடையேறி தெறமையைக் காட்டியதில் “அடேங்கப்பா அடி குடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்ன்னா..” என்று ஊர் ஏற்றிவிட்டுவிட்டது. போன வாரம் பனி பெய்த பொழுதில் ஒதுங்கிய இடத்தில் “டேன்ஸ் அக்காடமி” என்று போர்ட் போட்டிருந்தார்கள். அக்காடமின்னா ஹீட்டர் போட்டிருப்பார்களே என்று உள்ளே போனதில் ஜோடி ஜோடியாய் டேன்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். டேன்ஸ் ஆடினால் உடம்பிற்கும் மனதிற்கும் ரொம்ப நல்லது என்று கொப்பெல்லோ என்ற இத்தாலியக் கலைஞர் சொல்லியிருப்பதாய் அங்கே இருந்த அழகான அம்மணி எடுத்துச் சொன்னதால் எனக்குள் இருந்த மைக்கேல் ஜாக்சன் மீண்டும் முழித்துக் கொண்டு  “பேசாம ஜிம்முக்கு பதிலா இனிமே நான் டேன்ஸ் சேரலாம்னு இருக்கேன் உடம்புக்கும் மனதுக்கும் ரொம்ப நல்லதாம் ஆனந்த விகடன்லயும் சொல்லியிருக்காங்களாம்”ன்னு வீட்டில் அப்ளிகேஷன் போட்டிருக்கிறேன். காதில் போட்டுக் கொள்ள கடுக்கனும் கையில் போட்டுக் கொள்ள நல்ல கிளவுசும் வாங்க வேண்டும். ஓம் மைக்கேல் ஜாக்சனாய நமக.