Showing posts with label Tortoise Rolling. Show all posts
Showing posts with label Tortoise Rolling. Show all posts

Tuesday, November 05, 2013

தீபாவளி

தீபாவளிக்கு இன்னும் இரண்டே நாட்கள் இருந்தன. ஆறு மாதம் கழித்து ஊருக்குப் போகப் போகிறோம் என்பதை விட, எம்.எஸ்.ஸியை பாதியில் விட்டுவிட்டு வந்த  இரண்டுவருடங்கள் படித்த கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிகிறதே என்பதை விட, அன்று சாயங்காலம் ஆறு மணிக்கு பஸ்ஸில் தீபாவளிக்கு ஊருக்குப் போகப் போகிறோம் என்ற எண்ணமே முன்னோங்கி நிறைந்திருந்தது. காம்பஸ் இண்டர்வியூக்களுக்குத் தயாராக வேண்டுமே, வேலை கிடைக்குமா என்ற மனக் கிலேசங்களை எல்லாம் தீபாவளி சற்று ஓரம் தள்ளிவிட்டிருந்தது. பஸ் ரிசர்வேஷன் திறந்த முதல் நாளே பாரிஸ் கார்னரில் க்யூவில் காத்திருந்து வாங்கிய டிக்கெட் பத்திரமாய் பர்ஸில் இருந்தது. இரண்டே மணிநேரம் தான் எல்லா டிக்கெட்டும் விற்று தீர்ந்து விட்டன. தாமிரபரணித் தென்றல் பஸ் அப்படி. கப்பல் மாதிரி சொகுசாய் மிதந்து போய் காலை ஆறு மணிக்கெல்லாம் திருநெல்வேலி வந்துவிடும்.

அப்போதெல்லாம் என்.ஐ.ஐ.டியில் இரண்டு வருட படிப்பு முடியும் போது ஒரு ப்ராஜெக்ட் செய்து அதன் தீஸிஸ் சமர்பிக்கவேண்டும். அத்தோடு யாரோ மண்டபத்தில் எழுதிக் குடுத்ததைக் கொண்டு வந்துவிடக் கூடாது என்று அது சம்பந்தப்பட்ட ஒரு டெக்னிகல் இண்டர்வியூவும் இருக்கும். காலை ஒன்பதரை மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட். என்னுடன் படித்த நண்பனும் நானும் காத்திருந்தோம்.  நண்பன் அப்போது டி.டி.பி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தான்.  நான் மட்டுமே வெட்டி ஆபிஸர். "நான் ஆபிஸில் பாதி நாள் தான் லீவு சொல்லிட்டு வந்திருக்கேன். இன்னிக்கு முக்கியமான வேலை இருக்கு அதுனால நான் முதல்ல முடிச்சிடறேனே, ஆபிஸுக்கு சீக்கிரம் போக வசதியாய் இருக்கும்" என்று நண்பன் முன்னமே சொல்லி வைத்திருந்தான்.


அன்றைக்கு எங்களுக்கு வாய்த்திருந்த எக்ஸாமினர் ரொம்ப டெக்னிக்கல் என்று கேள்விப் பட்டிருந்தோம். அது எப்படி செஞ்சே இது எப்படி எழுதின என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டுக் குடைவார் என்று கேள்விப் பட்டிருந்ததால்
 மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் சோதித்துக் கொண்டிருந்தோம். மணி பத்தரை -  ஆளை இன்னும் காணவில்லை. பதினொன்று ஆகி பதினொன்றரை ஆன போது நண்பனுக்கு முகம் வெளிறி விட்டது. "டேய் நான் இன்னிக்கு கண்டிப்பா போயே ஆகனும்டா இல்லைன்னா வேலை போயிடும்டா...நான் என்னோட அப்பாயிண்ட்மெண்டை இன்னொரு நாளைக்கு மாத்திக்கிறேன்" என்று கிளம்பிவிட்டான்.  எனக்கு இதை முடித்து விட்டு ஊருக்குப் போனால் இரண்டு வாரம் இருந்துவிட்டு வருவதாய் ப்ளான். பின்னாலிருந்து கணக்கு போட்டு நாலு மணிக்கு முடிந்தால் கூட போதும் என்று காக்க ஆரம்பித்தேன்.

பன்னிரெண்டு மணிக்கு ஆய்வாளர் அவசர அவசரமாய் அவரது கேபினுக்கு ஏதோ ஃபைலும் கையுமாய் வந்தார். கேள்விக் குறியோடு என்னைப் பார்த்தவருக்கு, என் கையிலிருந்த ப்ராஜெக்ட் பைலை பார்த்ததும் தான் என்னுடைய அப்பாயிண்ட்மெண்டே நியாபகத்துக்கு வந்தது. "ஓ மை காட், ஐ ஆம் டோட்டலி சாரி, இன்றைக்கு ஒரு மிக முக்கியமான க்ளையண்ட் மீட்டிங் மறந்தே விட்டேன், இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் முடிந்துவிடும், காத்திருக்கிறாயா.?" என்று கேட்டார். வேகமாய் தலையை ஆட்டினேன்.

மீண்டும் முதல் பக்கத்திலிருந்து ரிப்போர்ட்டை புரட்ட ஆரம்பித்தேன். அவர் திரும்ப வருவதற்கு மணி இரண்டாகிவிட்டது. "வெரி வெரி சாரி, மீட்டிங் முடிய ரொம்ப லேட்டாகிவிட்டது. நீ சாப்பிட்டாயா " என்று கேட்க, என்ன சொல்லலாம் என்று யோசிப்பதற்குள் "நீ போய் சாப்பிட்டுவிட்டு வந்துவிடு நானும் சாப்பிட்டு அரை மணியில் ரெடியாகிவிடுகிறேன் முடித்துவிடலாம்" என்று தீர்பெழுதிவிட்டார். போச்சு... பெட்டியை வேறு எடுத்து வரவில்லையே வீட்டுக்குப் போய்விட்டு 11A பிடித்து பாரிஸ் கார்னர் போவதற்குள் தாவு தீர்ந்துவிடுமே என்று கவலையாகிவிட்டது. சும்மா கீழே போய் ஒரு டீ குடித்துவிட்டு பத்து நிமிஷத்தில் வந்துவிட்டேன். உள்ளே ஆய்வாளர் காரியரை திறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் வந்ததை கண்ணாடி கதவு வழியாக நிமிர்ந்து பார்த்து உள்ளே என்னை அழைத்த போது மணி இரண்டு ஐம்பது. சாப்பிட்ட சாம்பார் மணக்க மணக்க ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தவர், சம்பிரதாயமாக சாப்பிடவில்லையா என்று கேட்டார். பசி காதடைத்து இல்லை பரவாயில்ல நீங்க கேட்டதே வயிறு நிறைந்து விட்டது என்ற ரீதிக்கு ஏதோ உளறினேன். அப்புறம் நேராக டெனிக்கல் கேள்விகளுக்குப் போய்விட்டார். மொத்தம் பத்து கேள்விகள் தான் கேட்டிருப்பார். திடீரென்று நிமிர்ந்து உன்னுடைய எல்லா மார்க் சர்டிபிகேட்ஸும் கொண்டு வந்திருக்கிறாயா என்று கேட்டார். நல்லவேளையாக முழு ஜாதகத்தையும் ஃபைலில் வைத்திருந்ததால் தலையாட்டினேன். காலேஜு நாட்களுக்கு நேர் எதிராய் இங்கே எல்லா செமஸ்டரிலும் மார்க்குகள் முத்து முத்தாய் தொன்னூறுக்குக் குறையாமல் வேறு வாங்கியிருந்தேன்

ஒரு வெள்ளைத் தாளைக் குடுத்து தொன்னூறுகளில் மிகவும் பிரசித்தமான லின்க்ட் லிஸ்ட் டிசிஷன் ட்ரீ அல்காரிதத்தை சி++ல் எழுதச் சொன்னார். மட மடவென்று எழுதினேன். உற்றுப் பார்ததவர், இண்டர்வியூ மாதிரி கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார். அடுத்த அரை மணியில் எழுந்து போனவர், பத்து நிமிடத்தில் திரும்ப வந்து என்னை இன்னொரு அறைக்கு கூட்டிப் போனார். அங்கே இன்னும் இரண்டு ஆய்வாளகள் உட்கார்ந்திருக்க, என்னை நடுவில் ஒரு சீட்டில் உட்காரச்சொன்ன தொனியிலேயே எனக்கு அது காம்பஸ் இண்டர்வியூ என்று தெரிந்துவிட்டது. நல்லவேளை பயம் படபடப்பெல்லாம் காத்திருக்கும் போது தான் வரும், அவர்கள் எனக்கு பயப்பட, பட படக்க சந்தர்ப்பமே அளிக்கவில்லை. பிட்டத்தை நாற்காலில் சாய்ப்பதற்குள்ளாகவே கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்புறம் ஏதோ ஒரு கணக்கு குடுத்து அதை c++ ப்ரோக்ராமில்  எழுதச் சொன்னார்கள். நான் எழுதிக்கொண்டிருக்கும் போதே முன்னால் எழுதிய ப்ரோக்ராமை சரி பார்க்க ஆரம்பித்தார்கள். மார்க் ஷீட்டில் வேறு ஒரு தட்டி ஏதோ சங்கேதம் காண்பித்தார். நான் ப்ரோக்ராம் எழுதிக் குடுக்கஅதை இரண்டு நிமிடம் பார்த்து விட்டு என்னையே திருத்தச் சொன்னார்கள். சும்மா ரெண்டு மூனு சிண்டெக்ஸ் தவறுகளை மட்டும் பென்சிலால் சுழித்து திரும்ப நீட்டினேன். கம்ப்யூட்டரில் ஏத்தியிருந்தால் முஹே பச்சாவ் முஜே பச்சாவ் என்று கதறியிருக்கும். இரண்டு கம்பெனி பெயர்களை சொல்லி எந்த மாதிரி வாய்ப்பை எடுத்துக்கொள்வாய் என்று கேட்டபோது அர்விந்த் சாமி மாதிரி நான் ரோசாவைத் தான் கட்டிப்பேன் என்று பதில் சொன்னேன். ஏன் என்று கேட்ட போது ஏன்னா எனக்கு ரோசாவத் தான் ரொம்ப பிடிச்சிருக்கு என்பதையும் பதவிசாய் டாண்ணு சொல்லிவிட்டேன்.


சிரித்துக் கொண்டே சரி எதுக்கும் நாளைக்கு காலைல எட்டு மணிக்கு இங்க வந்துடுன்னு சொன்ன போது எனக்குப் பகீரென்றது. இன்னும் ஒரு மணிநேரத்துல நான் தாமிரபரணித் தென்றல்ல திருநெல்வேலி போறேன் சார்னு டிக்கட்டை காண்பித்த போது ஒருவர் என் தோளை அணைத்து ரூமை விட்டு வெளியே கூட்டிக் கொண்டுவந்து ராசா உனக்கு வேலை கிடைச்சாச்சு பொண்ணு வேற யாருமில்ல உனக்குப் பிடிச்ச ரோசாவே தான் என்ற போதும் கூட விஷயத்தை உணராமல், சார் நாளக்கழிச்சு தீபாவளி சார்,  இதோ போய்ட்டு இப்படிங்கிறதுக்குள்ள வந்துடறேன், ரோசா அதுவரைக்கும் காத்திருக்க மாட்டாளா என்று தான் கேட்டேன். யோவ் என்னைய்யா பேசற நாளைக்கு காலைல நீ வேலைக்கு சேர்ற சந்தோஷப் படுய்யா என்று அவர் ஒரு அதட்டு போட்ட போது தான் எனக்கு விஷயம் உரைக்க ஆரம்பித்தது.

அப்புறம் அரக்க பரக்க பாரிஸ் கார்னர் போய் கஷ்டப்பட்டு வாங்கிய டிக்கெட்டை விற்க நாய் படாத பாடு பட்டதும், கண்டக்டர் அந்த டிக்கெட்டை ஆட்டையைப் போட பார்த்ததும் அப்புறம் வேறு ஒரு தெகிரியமான அம்மணி நீ குடு ராசா நான் கண்டெக்டர பார்த்துக்கிறேன்னு வாங்கிக் கொண்டதும், ஒன்பது மணிக்கு மேல் எஸ்.டி.டி சார்ஜ் கம்மியானதும் ஊருக்கு ஃபோன் போட்டு தீபாவளிக்கு வரவில்லை என்று தகவல் சொன்னதும், அவர்கள் ஏமாற்றமானதும் அப்புறம் வேலை கிடைச்சாச்சு என்று சொன்னதும் அவர்கள் சந்தோஷப்பட்டதும், நான் ரோசாவோடு தீபாவளி கொண்டாடியதும் படம் முடிந்து டைட்டில் கார்டு போடும் போது சைட்டுல குட்டியாய் ஓட வேண்டிய சீன்கள்.

மெசேஜ் என்னான்னா....ஆயிரம் தீபாவளி வரலாம் ஆனால் எனக்கு அந்த தீபாவளி தான் பொங்கல் அதாவது சர்கரைப் பொங்கல் !!!

Wednesday, December 08, 2010

ஸ்பென்சர் நினைவுகள்

சென்னையில் மாலை ஏழுலிருந்து ஒன்பது வரை முழுநேரமாய் (என்) ..டியில் மாலை படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், பார்ட்டைமாக காலை ஒன்பதிலிருந்து மாலை ஏழு வரை என்ன செய்ய என்று  குழப்பமாக இருக்கும். அப்புறம் நண்பர்களோடு சேர்ந்து ஏதாவது ப்ராஜெக்ட் செய்யலாம் என்று ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து அப்போது மிகப் பிரபலாய் இருந்த  ஸ்பென்சர் ப்ளாசாவில், ஆர்.பி.ஜி அலுவலகத்தில் கூலியில்லா பட்டதாரியாக ஏற்றுக்கொள்ளப் பட்டேன். 

இன்டர்வியூவில் "ஓப்பனிங் சீனில் நேரா நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் போய், கடை கடையா ஏறி இறங்கி பிட்ஸா வாங்கித் திங்கிறோம்"ன்னு நான் போட்ட கம்ப்யூட்டர் சீனில் ஆபீஸ் மேனேஜர் விழுந்துவிட்டார். "தம்பீ .சி கார், ப்யூட்டிபுல் பி.ஏவோட எங்க கம்பெனில எம்.டியா வந்து சேர்ந்துக்கிறியா"ன்னு கேட்பார் என்று நான் மிதந்து கண்டுகொண்டிருந்த வேளையில் "ஏம்பா ஒரு நாள் விட்டு ஒரு நாள் காலம்பற ஏழுலேர்ந்து எட்டு வரைக்கும் எனக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தரியா...முடிச்சுட்டு அப்பிடியே என்னோட ஸ்கூட்டர்ல ஆபிஸ் வந்துடலாம்"ன்னு மனுஷன் வாய் விட்டுக் கேட்கவும், பஸ் சார்ஜ் மிச்சமே என்று ஒத்துக்கொண்டேன். போனஸாய் அவர்கள் வீட்டில் ரெண்டாம் டிகாக்க்ஷனில் காப்பியும் குடுத்தார்கள். கே.கே நகரிலிருந்து கிளம்பி, பனகல் பார்க்கில், பல்லவன் ட்ரைவர்களையும் ஆட்டோகாரர்களையும் அரசியல்வாதிகளையும் ஆயிரத்தெட்டு "...தா"வுக்கு திட்டிவிட்டு மவுண்ட்ரோடில் ஸ்பென்சர் வாசலில் என்னை இறக்கிவிட்டு விட்டு, "சந்துரு கேட்டா வண்டியில சின்ன பிரச்சனை...பார்த்துக்கிட்டு இருக்கேன்...வந்துருவேன்னு சொல்லு"ன்னு சொல்லிவிட்டு தம் அடிக்கப் போய்விடுவார்.

அப்போது தான் திறந்திருந்ததால் பளபளவென்று ஸ்பென்சர் ப்ளாசா ஒரே கலர்புல்லாக இருக்கும். பெண் செக்யூரிட்டியிலிருந்து கடை சிப்பந்திகள் வரை எல்லா யுவதிகளுமே அழகாய் இருக்கும் மாயாலோகமாய்த் திகழும். சென்ட்ரலைஸ்ட் ஏசி, பவுண்டன், எஸ்கலேட்டர், ஃபாரின் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் என்று நுழைந்த மாத்திரத்திலேயே மிரட்டி "மை டேட் இஸ் பீட்டர், மதர் இஸ் மேரி"ன்னு ஆங்கிலம் தானாக நாக்கில் ஒட்டிக்கொள்ளும். முக்கால் கால்ட்ராயரும் சுருக்கம் சுருக்கமாய் கை இல்லாத மேல் சொக்காயும்,காதில் வளையலும், காலுக்கு ரப்பர் செருப்புமாய் வளைய வரும் நவநாகரீக நங்கையர்களை எனக்கு அறிமுகப் படுத்தியது ஸ்பென்ஸர் தான். "மச்சி நேத்து போர்த் ப்ளோர்ல ஒரு ஃபாரின் ஜோடி...இன்னிக்கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம்"ன்னு ஜோடி இல்லாத பசங்கள் கிரவுண்ட் ப்ளோரில் உட்கார்ந்து ஊத்திக்கொண்டிருப்பதை நிறைய கேட்கலாம்சென்னையிலிருக்கும் முக்காலேவாசி மெடிகல் ரெப்ரசென்டேட்டிவ்களுக்கும், சேல்ஸ் மக்களுக்கும் அப்போது ஸ்பென்சர் தான் அக்னி நட்சத்திர சரணாலயம். "க்ளையன்ட்டோட ஆபிஸ்ல தான் சார் இருக்கேன்..அவருக்காத் தான் வெயிட்டிங், உள்ளே மீட்டிங்க்ல இருக்கார்" என்று கூசாமல் சொல்லிவிட்டு கீழே உட்கார்ந்து மேலே நோக்கி பராக்கப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அப்பேற்பட்ட ஸ்பென்சரில் ஆறாவதோ ஏழாவதோ மாடியில் ஆர்.பி.ஜீக்கு அருமையான அலுவலகம். "என் கம்ப்யூட்டர் வொர்க் செய்யி மாட்டுது பார்த்து குடுக்குமா ப்ளீஸ்.."ன்னு கொஞ்சி கொஞ்சி கொச்சைத் தமிழ் பேசும் சேட்டு வீட்டு பைங்கிளிகள் புழங்குகிற இடம். "தோ வரேண்டா செல்லம்"ன்னு சர்விஸ் டெஸ்க் பேர்வழி வருவதற்க்குள் ஓடிப் போய் கம்ப்யூட்டரை ரீ-பூட் செய்வேன். "ஹீ இஸ்   Geek-யா"ன்னு வாய் நிறையப் புகழ்வார்கள். மைக்ரோசஃப்ட் இருக்கும் திசை நோக்கி கும்பிடு போட்டுக் கொள்வேன். .டி சர்விஸ் டெஸ்க் பேர்வழிகளுக்கு என்னுடைய முந்திரிக் கொட்டைத்தனம் பிடிக்காது. "டேய் நீ உன்னோட ப்ராஜெக்ட் வொர்க் மட்டும் பாரு கம்ப்யூட்டர ரீபூட் பண்ணுவதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்"ன்னு ஒடுக்குவார்கள்.

ஆனால் ஆபிஸில் நிறைய சேட்டு வீட்டு பையன்களும் எனக்கு ஃபிரண்டு. "சாப்பாடுக்கு வெளியே சேர்ந்து போகலாமா"ன்னு ஹிந்தியில் எப்படி கேட்பது என்று அவர்களும், "நீ ரொம்ப அழகா இருக்க"ன்னு தமிழில் சொல்வது எப்படின்னு நானும் ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கொடுத்து மொழி வளர்ப்போம்.

அதில் ஒரு சேட்டு வீட்டுப் பிள்ளை மட்டும் என்னிடம் அடிக்கடி "அப்படியே ஜாலியா படுத்துக்கப் போலாம் வர்றியா"ன்னு கேட்டு கலங்கடிப்பான். சீனாதானா மாமா கேட்டார்னா நாக்குல வசம்ப வைச்சு தேய்த்துவிடுவார்..."பிரகஸ்பதி...அது படுத்துக்க இல்லைடா..படத்துக்கு"ன்னு திருத்துவேன். "படத்துக்கு கூப்பிடுவதற்கும் படுத்துக்க கூப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...தமிழ் தெரிஞ்ச பொம்மனாட்டிகள் கிட்ட இப்படி கேட்டுவைக்காத"ன்னு எச்சரித்தாலும் ரொம்ப பட்டுக்கொள்ள மாட்டான். "அரே எல்லாம் தெரியும் ரே"ன்னு .சியாய் எடுத்துக்கொள்வான். இப்படியே அரே அரேன்னு போய் அறை வாங்கி...தானா பாஷை கத்துக்கும்ன்னு விட்டுவிடுவேன்.

ஆனால் இந்த சேட்டு வீட்டு பேட்டாக்களின் "ஜி" தொல்லை மட்டும் சொல்லி மாளாது. அதை விட கொடுமை என்னவென்றால் சேட்டூஸ் கா பேட்டாஸ் கூட பழகும் பச்சை தமிழர்களும் மரியாதை குடுக்கிறேன் பேர்வழி என்றுஜி” கலாசாரத்திற்கு மாறிவிடுவார்கள். பாலா வை பாலாஜியாக்கிவிடுவார்கள், ராஜாவை ராஜாஜியாக்கிவிடுவார்கள். என்னையும் அதுவரைக்கும் "நீங்க நாங்கன்னு" விளித்துக்கொண்டிருந்த தமிழ் நண்பர் ஒருவர் திடீர்ன்னு "டுபுக்குஜி..டுபுக்குஜி"ன்னு கூப்பிட ஆரம்பிக்க, "தம்பி இங்கன வா. உனக்கு என்ன மரியாதையா கூப்பிடனும்னா பெருமதிப்பிற்குரிய ஸ்ரீமான் டுபுக்கு அவர்களேன்னு ஒழுங்கா கூப்பிடு ...இல்லியா டேய் டுபுக்குன்னு கூப்பிடு எனக்கு ஆட்சேபணையே இல்ல...ஆனா அதுக்காக சேட்டு வீட்டு பேட்டிஸ் முன்னாடி சீன் போடறதுக்காக எங்கப்பா இன்ஷியலையெல்லாம் தாறுமாறா மாத்தாத...எனக்கு ஹிந்தியில பிடிக்காத ஒரே எழுத்து இந்தஜி’ தான்"ன்னு ஆட்காட்டி விரலை காட்டி க்ளோசப்பில் வியஜகாந்த் மாதிரி செல்லமாய் மிரட்டியதும் தான் நண்பர் பழகத்தை விட்டார்.

அங்கே இருக்கும் ஆபிஸ் பணியாளர்களுக்காகவே விதவிதமாய் சாப்பாடு எடுத்து வரும் சாப்பாடு பிஸினெஸும் நிறைய உண்டு. அதில் எனக்குப் பிடித்தது பிரியாணி பொட்டலுமும், வெஜ் சாண்ட்விச்சும். ஒரு சேட்டு வீட்டுக் கிளி வாங்கிக் குடுத்து, எனக்கு வெஜ் சான்ட்விச் ரொம்பவே பிடித்துவிட்டது. நல்ல கார சாரமாய் மிளகாய் சட்னி தேய்த்து  தக்காளியும் வெள்ளிரியும் வட்டமாய் நறுக்கி அடுக்கப்பட்டு மிக சுவையாய் இருக்கும். முக்காலே வாசி அதைத் தான் வாங்கித் தின்பேன். “ரெஸ்டாரண்ட் ஜாயேங்கே க்யா" என்று ஏதாவது சேட்டு வீட்டு கிளி கூப்பிடும் சுபமுஹூர்த்த நாட்கள் மட்டும் ஏதாவது ஒரு தாபா போய் காசை Curryயாக்குவோம். சில நாள் " லவ்வ்வ்வ்.....சவுத் இன்டியன் தோசா" என்று கிளி சிலாகிக்கும் போது ஏதாவது ஒரு பவனில் 'சட்னி'ஜியையும் 'சாம்பார்'ஜியையும் முக்கி முக்கி 'தோசா'ஜியை சாப்பிட்டு விட்டு வருவோம்.

இரண்டு வருடம் முன்பு இந்தியா சென்றிருந்த போது ஸ்பென்சர் போக நேர்ந்தது. மூன்று பகுதிகள் வந்துவிட்டாலும் முன்பிருந்த ஷோக்கு சுத்தமாய் இல்லாமல் சுரத்து குறைந்து காணப்பட்டது. இந்த முறை இந்தியா சென்ற போது அக்கா பையனிடம் ஸ்பென்சர் பற்றி கேட்டேன் "இப்போ அதெல்லாம் இல்லை...சிட்டி, எக்ஸ்ப்ரெஸ் மால்ன்னு ஏகப்பட்டது இருக்கு ஸ்பென்சர் குறைந்த லெவல் தான்" என்றான். ஹும்ம்ம்ம்

Sunday, October 31, 2010

லவ் லெட்டர்

சாமஜ வர கமனாவோ, அலைபாயுதேவோ கேட்டுக்கொண்டே கேசரி பஜ்ஜியை அலேக்காய் லவட்டிட்டு, பில்டர் காப்பியை சுர்ர்ர்ன்னு உறிஞ்ஜி விட்டு, "எங்க சௌம்யா வத்தக்குழம்பு வைச்சா அடுத்த தெரு வரைக்கும் மணக்கும்" டயலாக்கையெல்லாம் கேட்டுவிட்டு, சவுகரியமாய் ஊருக்குப் போய் கலந்து கேட்டு லெட்டர் போடறோம்ன்னு பழைய சினிமாவில் வருவது மாதிரியோ, இல்லை தமிழ் மேட்ரிமோனி டாட் காம்மில் போட்டோஷாப்பில் டச் செய்த போட்டோவை அப்லோடிவிட்டு "சோ அன்ட் சோ கம்பெனியில் சோ அன்ட் சோ சேலரி ட்ராயிங் மாநிறமான பையனுக்கு...வெள்ளிக்கட்டியாய் சிவந்த நிறமுடைய, பெரியவர்களை மதிக்கும், கடவுள் நம்பிக்கையுள்ள, எந்த தோஷமும் இல்லாத, சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப் பார்க்கும் பெண் வேண்டும்"ன்னு தகப்பனார் ஜாதாக பரிவர்தனை செய்ய ஆரம்பிப்பதற்கு வெகு முன்னாலேயே எதைத் தின்றால் பித்தம் தெளியும்ன்ன்னு ரெண்டாவது அட்டெம்ப்ட்டில் காதலாகி கசிந்துருகும் என்னை மாதிரி அபாக்கியவான்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் - "லவ் லெட்டர்".

அதிலும் முதல் லவ் லெட்டர் இருக்கிறதே மிகப் பெரிய இம்சை. இப்போது மாதிரி கூகிளில் "கத்ரீனா" என்று பாதி டைப் அடிக்கும் போதே "கைஃப்"ன்னு முடித்துக் குடுத்து கூடுதலாய்  "...ஹாட் போட்டோஸ்ன்னு" மிச்சத்தை ப்ராம்ப்ட் செய்யும் உதவி எல்லாம் கிடையாது. , " சார்ட்டர்டே டிஸ்கோவுக்குப் போகலமா"ன்னு திரையுலக பாடலாசிரியர்கள் கூப்பிடாத ஒரு காலத்தில் லவ்வி எக்கச்சக்கமாய் மாட்டிக்கொண்டேன். எனக்குத் தெரிந்த லெட்டர்கள் எல்லாம் நேருமாமா தன் மகள் இந்திராகாந்தி அம்மையாருக்கு எழுதிய கடிதங்கள் தான். அதிலும் அவர் பாட்டுக்கு அந்த நாட்ட பார்த்தியா இந்த நாட்ட பார்த்தியான்னு பக்கம் பக்கமாய் மகளை கொஞ்சி இருப்பார். இப்படியெல்லாம் லெட்டர் போட்டால் "அப்படியே மெட்ராசிலயே ஒழிஞ்சு போன்னு" திரும்ப பதிலுக்கு டெலிகிராமே வந்துவிடும் என்று தீர்மானமாய் தெரிந்தால் எதுக்கு வம்பு என்று ரொம்ப நாள் லெட்டரே போட்டவில்லை.

மெட்ராஸ் பட்டிணம் ஒரு கெட்டுக் குட்டிசுவரான ஊர். லவ் பண்ணுபவரக்ள் அம்மாவாசை பௌரணமியானால் காதலிக்கு குரங்கு பொம்மையோ கழுதை பொம்மையோ வாங்கி கழுத்தில் பட்டுக் குஞ்சலம் ஒன்றை கட்டி "ஐ லவ் யூ" என்று எழுதி பிங்க் கலரில் உதடு படம் ஒன்றை போடவேண்டும் என்று கோட்பாடு வைத்திருக்கிறார்கள். தங்கமணி வீட்டுக்கு இந்த மாதிரி எல்லாம் அனுப்பினால் "இந்தம்மாக்கு இதெல்லாம் வராதே"ன்னு போஸ்ட்மேனே திறந்து பார்த்து அங்கே டோர் டெலிவரி செய்வதற்கு பதிலாக நேர எங்க வீட்டில் போய் வாழ மட்டையை கொழுதினாற் போல் நல்ல புகைய விட்டு, மாமா காதில் மேட்டரை டெலிவரி செய்து,  "நல்லாத் தானேடா உன்னை வளர்த்தேன்"ன்னு மாமா மெட்ராஸுக்கு தேடி வந்துவிடுவார் என்பதால் இந்த ரிஸ்க் எடுக்க தெகிரியம் வரவே இல்லை.

கரும்பு படம் போட்ட ஒரு பொங்கல் வாழ்த்து அனுப்பும் போதே அன்புடன் போட்டு கையெழுத்து போட்டால் தப்பாகிவிடுமோ என்று எனக்கு உதறலெடுக்கும். ஏனென்றால் தங்கமணி வீட்டில் ஏகப்பட்ட காம்ப்ளிகேஷன். இந்தப் பக்க வீடு, அந்தப் பக்க வீடு எதிர்த்த வீடுன்னு ஒரே சொந்தக்காரர்கள் கூட்டுக் குடித்தனம். "மெட்ராஸுலேர்ந்து லெட்டர் வந்திருக்கு ஒரு வேளை ஐ.நா சபைலேர்ந்து கூபிட்டு அனுப்பியிருப்பாளோ என்ன அவசரமோன்னு பிரிச்சு படிச்சேன்....நேக்கில்லாத உரிமையா...கையெழுத்து இன்னும் பிடிச்சு வரனும்...கூட ரெண்டு வரி எழுதப்பிடாதோன்னு"ன்னு அரட்டையரங்கமாகிவிடும் அபாயமாய் எனக்குப் பட்டது. (எனக்குத் தான் அப்படி பட்டது அவர்கள் அப்படியில்லை அப்படியில்லை - தெளிவாக சொல்லிக்கிறேன்.)

எப்போதாவது ஒரு தரம் ஊருக்குப் போகும் போது பார்க்கப் போனால் "சௌக்யமா ஊரில் இருந்து எப்ப வந்த"ன்னு ஒவ்வொருத்தராய் கேட்டு நான் பதில் சொல்லி முடியும் போது - வீட்டுக்கு கிளம்பும் நேரமாகிவிடும். வயசுப் பையன் வந்திருக்கானே...(அவர்களுக்குள்) நிச்சயமான பெண் தானே...ரெண்டு பேரும் அப்படியே போய் ஜாலியாய் ஒரு சினிமா பார்த்துட்டு வாங்களேன்னு சொல்வதற்க்கு ஒருத்தருக்கும் வாய் வராது. இதில் தங்கமணியிடம் நான் என்னத்தை பேச.

இதில் தங்கமணியின் பாசக்கார கூட்டத்தில் ஒன்று "போன வாரம் தான் அவளுக்கு பிறந்தநாள்.. உங்களுக்கு தெரியுமோ இல்லையோ..."ன்னு எடுத்துக்குடுக்கும். "ஓ காந்தி இங்கேர்ந்து தான் தண்டி யாத்திரையை ஆரம்பித்தாரா"ன்னு நான் வழிந்துகொண்டே வியக்கும் போது..."நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"ன்னு கண்ணாம்பா டயலாக்கை தங்கமணி கண்ணாலேயே டெலிவரி செய்வார்.

இதற்கு நடுவில் ஒரு தரம் ஊருக்கு போவதற்கு ஒரு தரம் கேப் விழுந்துவிட்டது.இதான் சமயம் என்று தங்கமணியின் உறவு வட்டத்தில் ஒருவர் "பிள்ளையாண்டன் வேறு சாஃப்ட்வேரில் இருக்கிறான். அந்த கம்பெனியிலெல்லாம் பசங்களும் பொண்ணுங்களும் திங்கள் டு வியாழன் டெய்லி டேட்டிங்கும் மத்த நாளெல்லாம் க்ளப்பிங்குமாய் ஜெகஜோதியாய் இருப்பார்கள் " என்று கிடைத்த கேப்பில் காட்சிலாவை வெட்டி விட்டார். அடுத்த அப்ரைசலில் தங்கமணி அன்பாய் ஏகப்பட்ட ஃபீட்பேக் குடுக்க..."என்னை மாதிரி மூக்கும் முழியுமாய் இருக்கும் பையன்களுக்கு சமுதாயத்தில் இந்த மாதிரி பிரச்சைனையெல்லாம் இருக்கு ஆனால் நான் நல்லவன்" என்ற வாதமெல்லாம் எடுபடவில்லை.

"கம்யூனிகேஷன் இஸ் த கீ" என்று தங்கமணி குடுத்த செமெத்தியான பீட்பேக்கில் லெட்டர் போடவேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டு எழுத ஆரம்பித்து...ஆரம்பித்து...ஆரம்பித்தது பித்து. "போன தடவை வந்திருந்த போது உங்க வீட்டில் குடுத்த பால்கோவா நன்றாக இருந்தது...நீயே செஞ்சதா" போன்ற அன்பான விசாரிப்புகள் லவ் லெட்டர் இலக்கணத்தில் வராததால் கொஞ்சம் தெவங்கிவிட்டேன். அப்புறம் உங்க வீட்டு கன்னுக்குட்டி எப்படி இருக்கு? தெரு நாய்க்கு காய்ச்சல் தேவலையா என்று ரீதியில் ஏதோ எழுதி வீட்டில் வேறு யாரிடமும் காட்டவேண்டாம் என்ற அபத்த டிஸ்க்ளெய்மரெல்லாம் போட்டு முடித்தேன். அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் தேறி "கண்மணி அன்போட நான் நான் நான்" என்று தலைவர் படத்து மேற்கோளெல்லாம் போட்டு ரஜினி முத்து பட டயலாக்கையெல்லம் போட்டு முடித்து ஏதேதோ சமாளித்தேன் என்பது சப்ஜெக்ட்டுக்கு தேவையில்லாதது.

இப்பவும் அந்த முதல் லெட்டரை தங்கமணி பத்திரமாய் எடுத்துவைத்திருக்கிறார். "என்ன இருந்தாலும் தலைவன் தலைவிக்கு எழுதிய காதல் திணையல்லவா" என்ற எனது நினப்பில் மண்ணைப் போட்டு என் மகள் பெரியவளானதும் காட்ட வேண்டுமாம். லவ் லெட்டர் எப்படியெல்லாம் எழுதக் கூடாதென்று. அது சரி......இந்த உலகம் இருக்கே உலகம்...

Thursday, July 23, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.9

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6   Part 2.7   Part 2.8

ஜொள்ளிங்க்ஸ்...ஒரு மிகப் பெரிய ப்ராசஸ். ஜொள்ளு விடுவது என்பது...ஐ.ஐ.டியில் ஸ்டேட் ராங்க் வாங்குவது மாதிரி அத்தனை எளிது கிடையாது. கொஞ்சம் கரணம் தப்பினாலும் கேனப்பயலாகிவிடுவோம். ஜொள்ளுவிடுவது நாமாயிருந்தாலும் சுத்தி இருப்பவர்களும் சூழ்நிலையும் உதவ வேண்டும், உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும். ஜொள்ளிங்க்ஸ் ப்ராஸசில் மிக உதவியாய் இருக்கும் பெர்சனாலிட்டிகளை ஒன்று இரண்டு என்று ஔவைய்யார் மாதிரி வரிசைப் படுத்தினால், முதலில் வருவது குழந்தைகள், இரண்டாவது பெரிசுகள். "என்னூடா செல்லம்...என்னூனூ பண்ணூறா ...ஜிஜுலிக்கு என்னூ வேணூமா.....இங்கூஉ பாரூடா குட்டீ...அஔ...?" என்று கொஞ்சும் போது இன்ஸ்டென்ட் பக்கவாதம் வர வைக்கும் மழலைகளின் பணி ஜொள்ளிங்ஸில் இன்றியமையாதது.

சினிமா கெடுத்ததோ இல்லை பார்த்துக் கற்றுக்கொண்டதோ, அது என்னமோ தெரியவில்லை...எல்லா வயதுப் பெண்களுக்கும் இந்த குட்டீஸ் பட்டாளத்தை ரொம்பவே பிடிக்கும். அதுவும் எங்க ஊர் அம்பாசமுத்திரம் மாதிரி பெரிய சிட்டிக்கு சென்னை, பம்பாய், பெங்களூர் மாதிரி கிராமத்திலிருந்து வரும் வயதுக் குமாரிகளெல்லாம் எப்போதும் மணிரத்னம் பட கதாநாயகிகள் மாதிரி கூடவே நாலு குட்டீஸ் பட்டாளத்தைக் கூட்டிக் கொண்டே திரிவாரகள். அது வரையிலும் பரட்டை தலை பர்சனாலிட்டியாயிருக்கும் ஜந்துக்களெல்லாம் உடனே க்ரிப்ட்டாலஜிஸ்ட் என்று ரோஜா அர்விந்த்சாமி பெர்ச்னாலிட்டிக்கு அப்கிரேடு ஆகிவிடும். உடனே ஊரில் இருக்கும் கிழவிகளையெல்லாம் தூக்கி கொண்டு தெருவில் நடக்க தோன்றும். எங்கேயாவது வைக்கப்போர் இருந்தால் அது மேலே ஹாயாக படுத்துக் கொண்டு சும்மாவாச்சும் வானத்தைப் பார்த்து ரசிக்கத் தோன்றும். தலையை ஸ்டையிலாய் ஒரு பக்கமாய் கோதிவிட்டு..."ஐ லைக் வில்லேஜ் கேர்ல்ஸ்"ன்னு ஃபீலிங்காய் டயலாக் பேசத் தோன்றும்.நதியையோ குளத்தையோ பார்த்தால் சும்மா ஒரு கை தண்ணிரை எடுத்து போவோர் வருவோர் மேல் செல்லமாய் தெளிக்கத் தோன்றும். (ஆனால் அவர்கள் சினிமாவில் வருவது மாதிரி காட்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்...காட்டு காட்டுவென காட்டிவிடுவார்கள் என்பது வேறுவிஷயம்)

ஆனால் நம்ம ஜிகிடி கூட சுத்தும் நம் வாண்டுக் கூட்டதுக்கு நம்ம அவஸ்தை என்றுமே புரியாது. அது வரைக்கும் "அண்ணா ப்ளீஸ் என்னை உங்க சைக்கிளில் ஒரே ஒரு ரவுண்டு அடிங்கண்ணா" என்று கெஞ்சிக்கொண்டிருக்கும் வாண்டுகள் எல்லாம் ஒரே நாளில் கட்சி தாவிவிடும். "அந்த அக்கா வாடகை சைக்கிள் வாங்க அம்பது பைசா குடுத்தாளே.." என்று நம் இயலாமையை வாண்டுகள் எள்ளி நகையாடும் போது மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும். எல்லாம் இருபத்தி இரண்டு வினாடிகள் தான் அதுக்கப்புறம்..."இன்னிக்கு என்ன இன்னும் நம்ம ஃபிகர வெளியிலயே காணுமே"ன்னு கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.

விடலைப் பருவத்தில் குமரிகளுக்குப் பிடித்தது தான் நமக்கும் பிடிக்குமே...குரங்குக் குசாலா கூட்டத்தில் இந்தப் பக்கம் ஒருவன் நேரு மாமாக்கே நான் தான் மாமா என்று ரோஜாவின் ராஜாவாய் குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான், அந்தப் பக்கம் இன்னொரு வானரம் எம்ஜியாராய் மாறி தேமேன்னு போய் கொண்டிருக்கும் ஒரு பெருசை வேலை மெனக்கேட்டு மருந்துக்குக் கூட சுத்தமாய் ட்ராபிக்கே இல்லாத ஒரு ஒத்தையடி பாதையில் சர்வஜாக்கிரதையாய் கையைப் பிடித்து ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்டு வரும். இந்த மாதிரி ஐடியா எதுவும் தோன்றாமல் மசனையாய் இருக்கும் வயெத்தெரிச்சல் கூட்டம் மட்டும் வழக்கம் போல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இந்த கடமை வீரர்களைப் பார்த்து கெக்கலித்து ஃபிகர்கள் முன்னால் எவ்வளவு வார முடியுமோ அவ்வளவு வாரி விட்டுக்கொண்டிருக்கும்.

வாட்டர் கோவிந்து என்னுடைய மழலை கொஞ்சல்ஸில் தொழில் முறை பார்ட்னர். முறையாகச் சொல்வதானால் ஜொள்ளிங்ஸில் பார்னர்ஷிப்பே கிடையாது நம்மைத் தவிர எல்லாருமே எதிரி தான். ஆனால் "யுவர் ஆனர்..." என்று சினிமாவில் வரும் சோப்ளாங்கி எதிர் தரப்பு வக்கீல் கெட்டப்பில் வாட்டர் கோவிந்து செய்யும் பெரும்பாலான சில்மிஷங்கள் எனக்கு சாதகமாய் தீர்ப்பாகிவிடும் என்பதால் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்துக்கொண்டிருந்தேன். வாட்டர் கோவிந்தும் என்னை மாதிரி சுத்த சைவம் ஆனால் சில சமயம் வாட்டர் குடுத்தாலே க்வாட்டர் குடித்த மாதிரி சவுண்டுவிடுவதால் வாட்டர் கோவிந்து என வழங்கப்பட்டு வந்தான். கொஞ்சம் வளர்ந்த வாண்டுக்கள் நேரம் காலம் தெரியாமல் பாக்யராஜ் படத்தில் வருவது மாதிரி வாரிவிட்டுவிடும் என்பதால் குழந்தையும் தெய்வமும் ஒன்று பாலிசி எடுத்து இன்னும் பேசவராத பொக்கைவாய் மழலை கைக்குழந்தைகளை மட்டுமே வைத்து நானும் வாட்டர் கோவிந்தும் ஷோ காட்டிக் கொண்டிருந்தோம்.

ஆனால் இந்த மழலை குழந்தைகளை வைத்து ஷோ காட்டும் விஷயத்தில் தொன்று தொட்டு வயதுக் குமரிகளுக்கெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. நாம் எதார்த்தமாய் "செல்லம் இங்க என்னை பாருடா...என்னை பார்த்து சிரிடா செல்லம்..." என்று குழந்தையைக் கொஞ்சினால் ஏதோ ஜாடைமாடையாய் அவர்களுக்கு தான் மெசெஜ் குடுக்கிறோம் என்று அனர்த்தம் செய்துகொள்கிறார்கள். கல்யாணத்திற்கு முன் "மாமாக்கு ஒரு முத்தா தாடா செல்லம்"ன்னு தங்கமணி மட்டும் இருக்கும் போது தங்கமணி வீட்டில் இருந்த ஒரு குழந்தையை நான் எதார்த்தமாய் கொஞ்சியதை இன்று வரை அனர்த்தம் செய்து கொண்டு நான் என்னம்மோ அலையாண்டிக் குப்பத்தைச் சேந்தவன் மாதிரி சாடிக்கொண்டிருக்கிறார். ஹும்....பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை அவர்கள் வயது அப்படி...கற்பனை கண்ணை மறைக்கிறது. (நான் இப்பவும் சொல்றேன் அந்தக் குழந்தை கிட்ட தான் முத்தா கேட்டேன்..இது என் குலதெய்வம் கேட்ரீனா ஃகைப் மேலே சத்தியம்)

ஆனால் எங்கள் தெருவில் கொஞ்சம் மழலை பஞ்சம். இருக்கும் முக்கால் வாசி மாமிபாட்டிகளுக்கு மத்தியில் புதிதாய் தெருவிற்கு குடிவந்த சந்திரா அக்கா மட்டும் தான் கொஞ்சம் இனிமையாய் பேசுவார். "நீங்க ஐய்யோ பாவம்..உங்களுக்கு...ஏகப்பட்ட வேலை....கிச்சுவ பத்தி கவலயே படாதீங்கோ தெருவில சுத்திக் காட்டி அவன அழாம நாங்க பார்த்துக்கறோம்..." என்று தொழில்ரீதியாக நாங்கள் கிச்சுவை அபேஸ் செய்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்.

தொழில் முறை போட்டியில் ஒரு தடவை நான் கிச்சுவை வைத்து ஜிகிடியிடம் கூட இரண்டு மார்க் வாங்கிவிட்டேன் என்று வாட்டர் கோவிந்து டென்ஷனாகி கிச்சுவை என் கையில் இருந்து பிடுங்கி "பிள்ளை நிலா" பாட்டு பாடி கிச்சுவை தூக்கி தூக்கி பிடித்து "அங்க காக்கா பாருடா செல்லம்"ன்னு கொஞ்ச, வாட்டர் கோவிந்து குலுக்கின குலுக்கலில் கிச்சு காக்காயைப் பார்க்காமல் போட்டிருந்து தொள தொளா க்ரீம் கலர் ஜெட்டிக்கு மேட்சிங்காய் முந்தின நாள் செரிலாக்கை கக்கா போய்விட்டான். ஜிகிடி முன்னால் கிச்சுவின் காக்காய்க்கு பதில் கக்கா மேட்டர் தெரிந்துவிடக் கூடாதே என்று வாட்டர் கோவிந்து அப்புறம் நெளி நெளியென்று நெளிந்து மேட்டரும் கக்காவும் வெளியே வராமல் சமாளித்து போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஆத்திரத்தில் வாட்டர் கோவிந்து கிச்சுவை நைஸாய் நுள்ளி கிச்சு அழுது அதற்கப்புறம் சந்திரா அக்கா எங்கள் கிச்சு மழலை பாலிசியைக் கேன்சல் செய்துவிட்டார்.

"உன்னை எவன்டா காக்காய பாரு குருவியப் பாருன்னு ஓவராக்ட் செய்யச் சொன்னது? என்னம்மோ பத்து புள்ள பெத்து எக்ஸ்பீரியன்ஸ் போட்ட மாதிரி ஓவர் சீன் போட்ட கை மேல பலன்...வேண்டியது தான் உனக்கு" - எனக்கு ஏக எரிச்சல்

" சரி விடுறா..மழலைச் செல்வங்கள் கொஞ்சம் இம்சைடா...அப்பப்போ நாறிடறது. பேசாம நாம முதியோர் நலத் திட்டம் ஆரம்பிச்சா என்ன..அதான் பிரச்சனையே இருக்காது" என்று வாட்டர் கோவிந்து அப்புறம் எம்ஜியார் கட்சி ஆரம்பித்துவிட்டான்.

தொடரும்

Sunday, March 29, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.7

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6

"இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று" கண்ணதாசன் எழுதிய பாடலை நம்பி வாழ்க்கையில் நிறைய இடத்தில் முயற்சியே பண்ணாமல் கோட்டை விட்டிருக்கிறேன். ஆனால் தேவன் சில இன்னார்களுக்கு மட்டும் வகை தொகையே இல்லாமல் எக்கச்சக்கமாய் எழுதிவைத்துவிடுகிறார். இந்த மாதிரி இன்னார்களை பார்க்கும் போது நாபிக் கமலத்திலிருந்து கப்புன்னு புகை மாதிரி ஒன்று எக்கச்சக்கதிற்கு கிளம்பும். அவனை முதல் முறை பார்த்ததே நாலைந்து பெண்கள் சுத்தி சூழத் தான். சுத்தியிருந்த யுவதிகள் கொள்ளை அழகு. எல்லாரும் மிஸ் யுனிவேர்ஸ் போட்டி நடக்கும் இடத்துக்கு வழி கேட்டுக்கொண்டிருந்த மாதிரி தான் இருந்தது. "இங்கே சகலவிதமான இடங்களுக்கும் வழி சொல்லப்படும்"ன்னு கழுத்தில் போர்டு மாட்டிக் கொள்ளத்தூண்டும் அழகு.

"எப்படீங்க இதெல்லாம்...அடுக்குமா அப்புறம் நாங்களெல்லாம் எங்க போறதாம்...?"

"....?"

"இல்ல...நீங்க ரெண்டு பேருக்கு வழி சொல்லிட்டு மிச்ச பேரெல்லாம் அங்க போய் வழி கேட்டுக்கோங்கன்னு இங்க எங்க பக்கம் கொஞ்சம் அனுப்பி இருக்கலாம்ல"

பெருமிதமும் வெட்கமும் கலந்து சிரித்தான். கபால்லுன்னு உடனே அவனை தோஸ்தாக்கிக் கொண்டேன். இந்த இந்தி படத்தில் அண்ணாக்கு கல்யாணம் ஆகும், அப்படியே அண்ணியோட குடும்பத்திலிருந்து தம்பிக்கு ஒன்னு செட் ஆகும்...உடனே ப்யார்...சிந்தகி...சப்னே. என்னைச் சொல்லி குற்றமில்லை ஹிந்தி படம் இந்த பச்சைமண்ணை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருந்தது. ஆனால் இதற்க்கெல்லாம் மேலே நேரம் என்று ஒன்று இருக்கிறதே. என்ன தான் தாடியெல்லாம் வைத்திருந்தாலும் ஆட்டுக்கு வால் அரை கிலோமீட்டரா வைத்திருக்கிறார் கடவுள்?

சில பெண்களுக்கு கண்ணே தெரியாது....என்னடா இங்க ஒருத்தன் வழி சொல்றதுக்குன்னே ராப்பகலா படிச்சிட்டு வந்து நிக்கிறானேன்னு ஒரு இங்கிதமே இருக்காது, நேரே போய் நம்ம இன்னாரிடம் போய் நிற்பார்கள். இன்னாரும் "நேரா போய் பீச்சாங்கைப் பக்கம் திரும்பு"ன்னு வழியைச் சொல்லாமல் தார் யாரு கண்டுபிடிச்சா, ரோடு யாரு போட்டான்னு பாடமெடுத்துக் கொண்டிருப்பான். "என்னாது கஜினியை ஹிந்தில எடுக்கப் போறாங்களா"ன்னு நைஸா ஜனரஞ்சகமாக ஜோதியில் ஐக்கியமாகப் பார்த்தாலும் நடக்காது. அந்தப் யுவதிகளுக்கு நம்மள மாதிரி ஹிந்தி பெர்சனாலிட்டியையெல்லாம் பிடிக்காது நடையைக் கட்டிவிடும். என்னடா இது அதிர்ஷடம் இமெயில்ல வந்தா தரித்திரம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர்ல வருதுன்னு இன்னாரிடம் ஒரு பாட்டம் அழுவேன். இன்னாரும் எனக்கு ஆறுதல் சொல்லுவது மாதிரி சிரித்துக்கொண்டே அந்தப்பக்கம் அந்தப் பெண்ணுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருப்பான்.

கன்னுக்குட்டி கணேசனிடம் கன்சல்டேஷன் பண்ணியதில்...இதற்கெல்லாம் சபையில் சொல்ல முடியாத ஒரு இடத்தில் மச்சம் இருக்கவேண்டும் என்று வாத்ஸ்யாயணர் சொல்லி இருப்பதாக தகவல் சொன்னான். அத்தோடு அவனையும் இந்தி பெர்ச்னாலிட்டியில் சேர்த்துக் கொண்டு "இதுக்கெல்லாம் கவலப்படாதடா மச்சி...நம்மள மாதிரி இந்தி பெர்சனாலிட்டிக்கெல்லாம் மெட்ராஸுல தான் மவுஸ் ஜாஸ்தி" என்றும், கிண்டியில் ஊரிலிருந்து வரும் பஸ் நிற்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே எங்கள் வரவை ஆவலோடு யுவதிகள் எதிரிபார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் உபரி தகவலும் குடுத்தான். சரி நம்பளுக்கான இன்னாரை மெட்ராஸுல எழுதிவைச்சிருக்கான் போல இருக்குன்னு ரொம்பவே ஆறுதலாக இருந்தது. மீசை ரொம்ப வளராவிட்டால் தெருவில் எல்லாரும் கன்வேர்ட்டேர்ட் ஹிந்தி பெர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள். எனக்கு வளர் சிதை மாற்றத்தின்(அடலெசன்ஸ்) ஆரம்பத்தில் அரும்பு மீசைக்கு முந்தய ஸ்டேஜில் இருந்தது.

ஆனால் இன்னார் கொஞ்சம் பர்சனாலிட்டியாய் கலராய் இருப்பான். அரும்பு மீசையும் அழகாய் இருக்கும். அதனாலேயே இன்னார் பக்கத்தில் இருந்தால் யுவதிகள் கூட்டம் நம்ம பக்கம் திரும்பி கூட பார்க்காது. இருந்தாலும் இன்னாரிடம் வழிகேட்டு விட்டு என்னிடம் இன்னார் சொன்ன வழி கரெக்ட்டு தானா என்று பேருக்கு சும்மா கன்பார்மாவது பண்ணிக் கொள்ளக்கூடாதா என்று நிறைய ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆதங்கம் சில சமயம் சமுதாயத்தின் மீது வெறுப்பாய் மாறி பேசாமல் வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு நெற்றியில் குங்கமத்தை கொழப்பி வெற்றித் திலகமிட்டுக் கொண்டு ஓம் கேசட்டை டேப்ரெக்கார்டரில் பிஜிம்யில் போட்டு விட்டு வெள்ளைக்காரர்களுக்கு குல சாமியாராய் போய்விடலாமா என்று தோன்றும். ஓம் கேஸட் வாங்க போதுமான பைனான்ஸ் இல்லாமல் வெள்ளைக்காரர்களுக்கு குலசாமியாய் போகும் முடிவுக்கு நிறைய தடவை (வெள்ளைக்காரர்களுக்கு) காலம் கனியட்டும் என்று ஒத்திவைப்பு தீர்மாணம் நடத்தியிருக்கிறேன்.

அப்புறம் காலம் கனிந்து "அட கிறுக்குப் பயலே உனக்கு இன்னார் கிண்டியில இல்லைடா இங்கயே பக்கத்திலயே அடுத்த ஊரில் இருக்கார்டா"ன்னு கடவுள் கனவில் வந்து சொன்னதுக்கப்புறம் ஓம் சாமியார் ஐடியாவை மூட்டைக் கட்டிவிட்டு...யுவதிகளுக்கு வழி சொல்வதெல்லாம் தூ....ஒரு பொழைப்பா...போங்கடா போங்கடா போய் புள்ளைக் குட்டிய படிக்க வைக்கிற வழியப் பாருங்கடான்னு பரம்பரை நல்லவனாய் மாறி..ஏறி உட்கார்ந்து மிதித்தால் ஒரு அட்ரெஸுக்கு தானாகவே போகிற மாதிரி சைக்கிளை ஆட்டோ ப்ரொக்ராம் செய்து விட்டேன்.

அப்புறம் காலம் போன போக்கில் வழி சொல்லிக் கொண்டிருந்த இன்னார் வெளியூருக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போய் இந்தியில் வழி சொல்லிக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன். அனேகமாய் இப்போது அவனுக்கும் கல்யாணமாகி செட்டிலாகியிருப்பான். ஊருக்கே வழி சொன்ன அவனுக்கு ஒரு வழி அமையாமலா இருந்திருக்கும். இருந்தாலும் எந்த ஊரில் வழி அமைந்து எந்த இன்னாரோன்னு என்று இன்னாரைப் பற்றி நியாபகம் வரும்போதெல்லாம் ஆர்வமாய் இருக்கும்.

Sunday, December 21, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.6

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5

அந்த கம்பெனியில் நான் சேர்ந்து முப்பத்திநான்கு நாட்கள் இரண்டுமணி நேரம் தான் ஆகியிருக்கும். போன புதிதில் அலுவலக வண்டவாளங்கள் வெளிவராதால் அது சொர்கபுரியாய் இருந்தது. எப்போ வேணா வரலாம் போகலாம். முதல் நாள் ஒன்பது மணிக்கே போய் தேவுடு காத்து, பதினோரு மணிக்கு டிப்பார்ட்மெண்ட் ஹெட் வந்து, நான் குட்மார்னிங் சொல்லி அவர் குட் ஆப்டர்நூன் சொல்லி, எத்தனை மணிக்கு வந்தேன்னு கேட்டு, ஒன்பது மணிக்கு வந்தேன்னு சொல்லி, ஒம்போது மணிக்கா...அதெல்லாம் ஆபீஸ் வர்ற நேரமான்னு நாளைலேர்ந்து பதினோரு மணிக்கு...வான்னு அறிவுரை சொல்லி, நீங்க தான் சார் என் குலதெய்வம்ன்னு கால்ல விழுந்து...அடுத்த நாள்லேர்ந்து பன்னிரெண்டு மணிக்கு ஆபீஸ் போய்...இந்த சொட்டத்தலையன் தொல்லை தாங்கல...அதான் லேட்டா வந்தாலும் லேட்டா தான் போறோம்ல..அப்புறம் ஏன் ஒருமாதிரி பார்க்கிறான்"னு அப்போது தான் அலுவலகத்தில் சௌஜன்யமாகிக் கொண்டிருந்தேன்.

சீட்டில் செட்டிலாகி முதல் அரைமணிநேரம் ஆர்யபட்டா சொன்னார்,அப்துல் கலாம் சொன்னார், நாரயணமூர்த்தி அவர் வீட்டு கக்கூஸை இன்னுமும் அவரே கழுவுகிறார்ன்னு வந்திருக்கும் மெயில் பார்வேர்ட்டையெல்லாம் படித்துவிட்டு, எத்தனை பார்வேர்டு மெயில் வருகிறது/அனுப்புகிறோம் என்பதற்கேற்ற மாதிரி தான் சம்பளம் என்ற நம்பிக்கையில், வந்த மெயிலை எல்லாம் நாமும் சகட்டு மேனிக்கு சி.இ.ஓ தவிரதலாக நமக்கு அனுப்பியவன் உள்பட(இப்படி கடுப்பேதுவதே ஒரு பெரிய சுகம்) மத்த எல்லாருக்கும் மாஸ் பார்வேர்ட் விட்டு இந்தப் பக்கம் திரும்பினால் சாப்பாட்டுக்கு மணியடித்திருப்பார்கள். கல்யாணமான புதிதில் ஆரம்பித்த பழக்கத்தில் தங்கமணி மூன்று அடுக்கு கேரியரில் லெவெல் காட்டியிருப்பார். முன்வினை பின்வினை தெரியாமல் முன்னால் செய்த வழிப்பறிக்கு, கூட இருக்கும் பஞ்சத்தில் அடிபட்ட கூட்டம் பதில் மரியாதை செய்தது போக மிச்சத்தை தொண்டைக்குழியில் அடைத்துவிட்டு வந்து உட்கார்ந்தால் மானிட்டர் - மானிட்டர் அடித்தது மாதிரி சொக்குப் பொடி போட்டு கண்ணைச் சொருகும்.

செஞ்சோற்றுக் கடனுக்கு ரெண்டு மூனு ஆபிஸ் மெயிலை "எஸ் ஆபிஸர்...ஓ.கே. ஆபிஸர்...டன் அந்தக் கப்பலை அஞ்சு கோடிக்கு முடிச்சிடலாம்"ன்னு விவரமா மெயில் அனுப்பிவிட்டு திரும்பவும் கடிகாரத்தைப் பார்த்தால் டீ.க்கு நேரமாகியிருக்கும். விவரம்கெட்ட ஆபீஸில் டெஸ்க்கில் கொண்டு வந்து குடுக்காமல் காண்டீனுக்கு வந்து குடிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். "துன்ன சாப்பாடே இன்னும் செரிக்கலை..அதுக்குள்ள டீயா..ஏகப்பட்ட வேலை இருக்கு.."ன்னு அலம்பலுக்கு நடுவில் கவர்மெண்ட் ஆபீஸில் எப்படி வேலையே பண்ணுவதில்லை என்பதையும் பேசிக்கொண்டே டீயைக் குடித்துவிட்டு வந்தால் டிப்பார்ட்மெண்ட் ஹெட், அமெரிக்காவில் சாட்டிலைட் விட்டு படியளக்கும் பகவானிடம் டெலிகான் அரெஞ்ச் பண்ணியிருப்பார். டெலிகானில் தோராயமாக பதில் சொல்லிவிட்டு மீண்டும் ஒரு மணி நேரத்தில் ஆன்சைட் மேனேஜர் கூப்பிட்டு இங்கிலீஸ் டு இங்கிலீஸ் ட்ரான்ஸ்லேஷன் பண்ணி பகவான் என்ன சொன்னார்ன்னு சொல்லுவார். 'அட அப்படியா சொன்னான் அந்த கம்மனாட்டி'ன்னு என்னம்மோ புரிந்தது மாதிரி காட்டிக்கொண்டு அந்த கோட் கமெண்ட் பண்ணி கம்பைல் பண்ணுவெதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு இங்கி பின்கி பாங்கிபோட்டு தோராயமா நாலு நாளாகும் என்று கணக்குப் போட்டு சொன்னால் ஆன்சைட் மேனேஜர் ஒரு வாரம் என்று ரவுண்ட் செய்து பகவானிடம் ஆட்டையப் போட்டு ஓக்கே வாங்கிவிடுவார்.

இந்த மாதிரி நிறைய அமெரிக்கா பகவான்களிடம் ஆட்டையப் போட்டு போட்டு ஆபிஸில் சாயங்காலம் ஆறு மணிக்கு அடையாறு ஆனந்தா பவனிலிருந்து இலவச ஸ்வீட் காரம் காபி ஏற்பாடு செய்திருப்பார்கள். 'அடுத்தாப்புல முந்திரி பக்கோடா என்னிக்கு"ன்னு விவராமாய் விசாரித்துகோண்டே மேய்ந்துவிட்டு அங்கே இருக்கும் டேபிள் டென்னிஸோ, பாஸ்கெட் பாலோ இருக்கிற பக்கமா ஒரு ரவுண்டு வந்து "இப்படி இப்படி விளையாடனும்...நான் சொல்லிக்குடுத்ததெலாம் ஞாபகம் இருக்கில்ல...? ஸ்டெப்பு ஸ்டெப்பு...."ன்னு போகிற போக்கில் தின்னது செரிக்க நாலு இலவச டிப்ஸை அள்ளிவிட்டு வந்து உட்கார்ந்து யாகூ ஹாட்மெயில்ன்னு மத்த மெயிலெல்லாம் பார்த்துமுடிக்கும் போது ஹெட் கிளம்பிபோயிருப்பார். இன்னிக்கு ரொம்ப வேலை...எல்லாத்தையும் டீபக்(கமெண்ட்) பண்ணிட்டேன் நாளைக்கு மிச்சத்தை பார்த்துக்கலாம்ன்னு அப்படியே அப்பீட்டு.

பக்கத்து டீமிலிருந்தாலும் அவர் மட்டும் சாப்பாடு நேரத்தில் "சாப்பிட வர்றீங்களா"ன்னு கலயாணவீட்டில் சம்பந்தியைக் கூப்பிடுவது மாதிரி என்னை எப்போதும் மரியாதையாய் அழைப்பார். நூத்துக்கு தொன்னூறு முறை நான் போகவில்லை என்றாலும் கூப்பிட மறக்க மாட்டார். ஒரு நாள் அவர் தனியாய் உட்கார்த்து சாப்பிடுவதைப் பார்த்து பாவமாகி, தங்கமணி ஊருக்கு போய் காண்டினில் சாப்பாடு என்று இருந்த ஒரு வாரம் முழுவதும் அவர் கூட சாப்பிட போனேன். ரொம்ப மிருதுவான சுபாவம். பேச்சுவாக்கில் அவர் காலேஜ் ப்ரெஷர் என்று தெரிந்தது. அப்புறம் நண்பர் ஆபிஸ் மெயிலில் என்னவெல்லாம் பண்ணக்கூடாது க்ளையன்ட் கிட்ட பேசும் போது எப்படி பேசனும் என்று அங்கே இங்கே என்று பேசி டாபிக் கடைசியில் லவ்வுக்கு மாறியது. பார்ட்டி நம்ம சினிமா முரளிக்கு நெருங்கின சொந்த ரகம். காதல் தெய்வீகமானது, அதையும் தாண்டி புனிதமானது என்று பழுத்த காதல் பக்திமான். ஒரு நாள் பக்திமானின் காதல் கலாட்சேபத்தைக் கேட்டுக்கொண்டிருந்து கேண்டீனில் கொத்தமல்லி சட்னி காலியாகிவிட்டது.

அதிலிருந்து "எப்பா ராசா...சித்த பொறு...அங்க சட்டிய தேய்ச்சு கவுத்திருவானுக...இன்னிக்கு வத்தக் குழம்பு வேற சூப்பரா இருக்குன்னு" நழுவிவிடுவேன். பக்திமான் மனம் தளரமாட்டார் கலாட்சேபத்தை பாஸ் பண்ணிவிட்டு மீண்டும் ரெஸ்யூம் செய்வார். அப்புறம் இதெல்லாம் சரிபட்டு வராது என்று "ரெண்டாவது ப்ளோர்ல உன்னை மாதிரி காதலிக்காக மூக்கை வெட்டிக்கிறவன் ஒருத்தன் இருக்கான் அவன நாளைக்கு அறிமுகம் பண்ணி வைக்கிறேன்"ன்னு சொல்லி வைத்தேன். "நீங்க காதலை ரொம்ப கேவலப்படுத்தறீங்க"ன்னு பக்திமான் வீறு கொண்டு எழுந்துவிட்டார்.

"எப்பா கேவலமெல்லாம் படுத்தல...நானும் லவ்ஸ் விட்டிருக்கேன்...என்ன என் லவ்ஸ் ட்ராஜடில முடிஞ்சிடிச்சு....அதான் வித்தியாசம்..."

"ஓ சாரி..அதான் காதல் பத்தி வெக்ஸாகியிருக்கீங்கன்னு நினைக்கிறேன்..."

"இல்ல பரவாயில்ல...இதுக்கெல்லாம் ரொம்ப வருத்தப்படாதீங்க...எங்க காதல் கல்யாணத்துல முடிஞ்சிருச்சின்னுங்கிறதத் தான் அப்படி சொன்னேன்"

அதுக்கப்புறம் பக்திமான் பேஜாராகி என்னை காதல் துரோகியாய் பாவித்து கொஞ்ச நாள் காதல் பத்தி அடக்கியே வாசித்தார். இருந்தாலும் எனக்கு அவரை சீண்டுவதே கொள்ளை இன்பமாக இருந்தது. அப்புறம் உங்க காதல் ஜோதி எந்த மட்டுக்கும் எரியுதுன்னு டெய்லி ஸ்டேடஸ் ரிப்போர்ட் கேட்பேன். (கவுண்டமணி) செந்தில் "போங்கண்ணே..."ரேஞ்சுக்கு பக்திமான் வெட்கப்படுவார். எத்தன நாளைக்குத் தான் நானும் இதையே வெச்சு ஓட்டறது..உங்க ஒயிட் டவ்வ கொஞ்சம் அடையாளம் காட்டினா நானும் நாலுபேர் கிட்ட கிசுகிசுக்க வசதியா இருக்கும்லன்னு டெய்லி கிண்டுவேன். "நீங்க வேற நானே இன்னும் லவ்வ சொல்லலை...சக்சஸான முதல் ட்ரீட் உங்களுக்குத் தான்"ன்னு பக்திமான் சத்தியம் செய்தார். ஆஹா ஆன் சைட் மேனேஜர் வந்தா ஆட்டையப் போடலாம்ன்னு ரிசர்வ் பண்ணி வைச்சிருந்த அந்த திரி ஸ்டார் ஓட்டல்ல பக்திமானுக்கு இலாகா மாத்திடலாம் போல இருக்கேன்னு "நீ அழகான பெண்ணை காதலிக்கவில்லை...நீ காதலித்ததால் அவள் அழகானாள்"ன்னு அங்க இங்கேர்ந்து தேத்தி தேத்தி கே.ஏ.ஏஸ் சேகர் கடையில லாட்டரி விற்பது மாதிரி அவனுக்கு டெய்லி கோடீஸ்வரன் ஃபீலிங்க்ஸை ஏத்தினேன்.

அப்புறம் தான் தெரிந்தது பையன் லவ்விக் கொண்டிருந்தது ஹெச் ஆர் எக்ஸிக்யூட்டிவ்வ. அவங்க கல்லூரி காம்பஸ்ஸில் கண்ட நாள் முதலாம். அடங்கொக்க மக்கா விவரமாத்தேன் இருக்கான்...நாமளும் ஒருதரம் ஏர்லைன்ஸ் மேனேஜரை கம்ப்ளையிண்டுக்காக பார்த்தோம்...ஹும்ம்ம்ம் டிக்கெட்டுக்காவது மிச்சமாயிருக்கும்ன்னு எனக்கு ஏப்பம் வந்து, அப்புறம் ஒரு படத்தில் கோர்ட் சீனில் வக்கீல் சுஜாதா "குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டியவனுக்குத் தான் தண்டனை அதிகம்"ன்னு பாயிண்ட்டாய் ஒரு டைகர் தயாநிதியை மாமாவூட்டுக்கு அனுப்பியது நியாபகம் வந்து, "எய்யா ராசா...டீம்ல பிரச்சனைன்னா மேனேஜர் கிட்ட சொல்லலாம்...மேனேஜர் கிட்ட பிரச்சனைன்னா ஹெச் ஆர்ல சொல்ல்லாம்..நீ ஹெச் ஆர்லயே பிரச்சனை பண்ற..இன்ஸ்டண்ட் சங்கு தான்...பார்த்துக்கோ"ன்னு நழுவி விட்டேன்.

அப்புறம் நான் அந்தக் கம்பெனியில் இருந்த அடுத்த நாலு மாதமும் பக்திமான் தூணுக்கு பின்னால் மறைந்து மறைந்து பிலீங்க்ஸாய் எக்ஸிக்யூடிவ்வை பார்த்துக் கொண்டிருப்பார். ஹெச் ஆர் மேடம் குடுத்த வேலை கன்பேர்மேஷன் ஆர்டரை ரூமில் ப்ரேம் போட்டு மாட்டியிருந்ததாக அவன் ரூமேட் தெய்வம் அசரீரி சொன்ன்னது. அப்புறம் நான் கம்பெனி மாறிவிட்டேன். சொல்ல முடியாது ....அவனிடம் இருந்த கடமையுணர்ச்சி சில சமயம் யோசிக்கும் போது எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கும். கிறுக்குப் பயலே இந்த மாதிரி அதீத கடமையுண்ர்ச்சி எல்லாம் கடைசியில ட்ராஜடில தான்டா முடியும்ன்னு அவனுக்கு மெயிலாவது அனுப்பியிருக்கலாம்ன்னு நினைத்துக் கொள்வேன்.

Monday, November 24, 2008

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.5

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4

பார்த்தசாரதி ஜெனரலாக பாச்சா என்று ஆகிவிடுவதால் எனக்கு தெரிந்த கிருஷ்ணமூர்த்தி கிச்சாவாகிப் போனான். கோலிவுட் படங்களில் எப்பவோ விளம்பரம் மற்றும் பீ.ஆர்.- க்ளாமர் கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரைப் பார்த்ததிலிருந்து இவனும் க்ளாமர் கிச்சாவாகிப் போனான். இவன் உருவத்திற்கும் க்ளாமருக்கும் ஒன்றரை கிலோமீட்டர் தூரம். வேட்டியோ பாண்ட்டோ எதுபோட்டாலும் நெற்றியில் சந்தனத் தீற்றல் இருக்கும். குணத்தில் தங்கம். வள்ளலாரின் வளர்ப்புப் பையன் மாதிரி தான் பேசுவான். எல்லாருக்கும் அந்தப் பக்கம் அசினும் இந்தப் பக்கம் இலியானாவும் காத்துக்கொண்டிருக்கும் போது இவன் அலட்டிக்காமல் "நம்ம பெர்சனாலிட்டிக்கெல்லாம் ஏதாவது தேறுமா...?" என்று மனிதருள் மாணிக்கமாய் இருப்பான். திருவள்ளுவர் "அடக்கம் அமரருள்..." குறளே இவனை பார்த்தபிறகு தான் எழுதியிருப்பாரோன்னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வரும்.

அழகான பெண்கள் கடந்து போனால் அமைதியாய் பார்ப்பான். ஆர்ப்பாட்டமே இருக்காது டேய் எப்படிடா இப்படி...ன்னு அடிக்கடி புல்லரிக்கவைப்பான். "டேய் கிச்சா உனக்கு இந்த வயசுக்கேத்த கிளுகிளுப்பே இல்லையேடா"ன்னு கேட்டால் "அதான் பேர்லயே சேர்த்திருக்கீங்களே...க்ளாமரை"ன்னு மாணிக்கும் அருளும். கிச்சாவோட ரொம்ப நேரம் இருந்தால் எனக்கு மட்டும் தான் உடம்பில் ஹார்மோன்கள் அதிகமாய் ஆட்டம் போடுகிறதோ என்று சந்தேகம் வந்துவிடும். இருந்தாலும் கூட இருக்கும் வானரங்கள் சும்மா விடாது. "என்ன கிச்சா..மூனு தலைமுறை..சேலம் டாக்டர் அடுத்த மாசம் சரஸ்வதி லாட்ஜ்ல ரூம் போட்டிருக்காராம்...அப்பாயிமென்ட் போட்டுருவோமா..."ன்னு வம்புகிழுத்தாலும்..அசரமாட்டான்.

"டேய் மனுஷனா இருந்தா ஃபீலிங்க்ஸ வெளில கொட்டனும்...இவன் இப்படி ஊமைக்கொட்டானா இருக்கறதுக்கு...பார்த்துக்கிட்டே இருங்கடா..ஒருநாள் எவளையாவது இழுத்துகிட்டு ஓடப்போறான்...அன்னிக்குத் தெரியும்...க்ளாமர் கிச்சானு கரெக்ட்டா தான் பேரு வைச்சிருக்கோம்ன்னு" - கன்னுக்குட்டி கணேசன் அவன் பாட்டி சொல்லுகிற பழமொழியெல்லாம் மேற்கோள் காட்டி அடிக்கடி சூளுரைப்பான். க்ளாமர் கிச்சா அதற்க்கும் வழக்கமான சிரிப்பை தான் உதிர்ப்பான்.

பக்கத்து ஊரில், எனக்கு நாலு தெருவுக்கு ஒரு தாய்மாமாவை குடிவைக்கிற ரேஞ்ஜுக்கு எங்க தாத்தா லெவல் காட்டியிருந்ததால், அடிக்கடி ஏதாவது சாக்கு போக்கு சொல்லி அந்த ஊருக்கு போய் வருகிற சந்தர்ப்பம் வரும். இப்படி போய் வரும் போது ஒரு நாள் க்ளாமர் கிச்சா அங்கிருந்த ஆஸ்பத்ரியில் இருந்து வெளியே வந்து பஸ்ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தான். அன்றைக்கு அது பெரிதாகப் படவில்லையாதலாலும், எனக்கு அவசரமாய் அடுத்த தெருவில் வேலையிருந்ததாலும் நான் கண்டுகொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் தெரு கிரிக்கெட் முடிந்து ஆல் இந்தியா மீட்டிங்கில் கன்னுக்குட்டி கணேசன் கிளாமர் கிச்சா அடிக்கடி கல்லிடைக்கு போய் வருகிறான் என்று போட்டு உடைத்துவிட்டான். "கிச்சா உண்மையச் சொல்லு வழக்கமா அஜீஸ் ஆஸ்பத்ரிக்கு தானே போவ..இப்ப என்ன ஆஸ்பத்ரிக்கு ஊருவிட்டு ஊரு போற.? எங்களுக்கு தெரியாம ஏதாவது தப்பு காரியம் பண்ணி உனக்கு வயத்துல ஏதாவது உண்டாகிடுத்தாடா"ன்னு பயல்கள் க்ளாமர் கிச்சாவை கலாய்த்ததில் கிச்சா அன்றைக்கு ஏகத்துக்கு அப்செட் ஆகிவிட்டான்.

இரண்டு நாள் கழித்து தெருவில் வயதுப் பெண்கள் நடமாடும் சாயங்கால நேரத்தில் எனக்கு எதாச்சயாக கல்லிடையில் மீண்டும் ஒரு முக்கியமான வேலை இருந்ததது. வேலையை முடித்துக்கொண்டு திரும்புகிற சமயத்தில் மீண்டும் கிச்சாவைப் பஸ்ஸ்டாப்பில் பார்த்தேன். முகம் ஆட்டோகிராப் சேரன் ரேஞ்சுக்கு ஒரே ஃபீலிங்க்ஸாய் இருந்தது.

இங்கிலாந்தில் எப்பவோ ஒரு காலத்தில் ஃபிலிப்ஸ் கம்பெனிகாரன் சைக்கிள் உற்பத்தி செய்ய ஆரம்பித்த போது ஒரு சைக்கிளை எங்க மாமாவிற்கு பெரிய மனசு பண்ணி விற்றிருந்தான். அதை எங்க மாமா "என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன்"ன்னு என்னிடம் ஒப்படைத்திருந்தார். பொழைக்கத் தெரியாத இங்கிலாந்து ஃபிலிப்ஸ்காரன், ஊர்ல இருக்கிற இரும்பையெல்லாம் உருக்கி சைக்கிளை கனமாக செய்திருந்தான். உட்கார்ந்து அழுத்துவதற்கு ஒன்பது இட்லி சாப்பிடவேண்டும்...இந்த தொழில் ரகசியத்தை வெளியில் விடாமல் "ஊர்ல எவன்கிட்டயாவது இங்கிலாந்து ஃபிலிப்ஸ் சைக்கிள் இருக்காடா"ன்னு உதார்விட்டுக் கொண்டு ப்ரீமியம் டிக்கட்டுகளை மட்டும் தான் பின் கேரியரில் ஏத்துவேன். "டேய் ஒரு காலத்துல தான் சைக்கிள் மெனுபாக்ச்சர் பண்ணினது ஃபிலிப்ஸ் காரனுக்கே மறந்து போயிருக்கும்...மியூசியத்துல வைக்கவேண்டியதை எல்லாம் ஓட்டிட்டு திரியற...பார்த்துடா ஒரு நாள் உன்னை உள்ள வைச்சிறப் போறாங்க"ன்னு நான் ஏத்தாத ஹெவி வெயிட் பார்ட்டிகள் வயிற்றெரிச்சலைக் கொட்டும்.

அன்றைக்கு சற்று இருட்டிவிட்டத்தாலும் பாலத்தை தாண்டிய ஏற்றத்தில் சைக்கிளை பின்னாடியிலிருந்து தள்ள ஒரு ஆள் தேவைப்பட்டதாலும் சேரன் ஃபீலிங்க்ஸ் க்ளாமர் கிச்சாவை சைக்கிளில் லிப்ட் குடுக்க பெரிய மனது பண்ணினேன். அன்றைக்கு ஏனோ கிச்சா வழக்கமாய் பேசும் வள்ளலார் பற்றி கூட பேசவில்லை. வழி நெடுக அமைதியாக வந்தான். "என்னடா க்ளாமர்... ஏதவது ப்ராபளமா..என்ன ஆஸ்பதிரிக்கு..? யாருக்காவது உடம்பு சரியில்லையா"ன்னு ஊருக்கு வந்ததும் கேட்டேன். கையைப் பிடித்துக் கொண்டு "டேய் சாப்பிட்டுட்டு வாயேன்..கொஞ்சம் காலாற பாலம் வரைக்கும் நடக்கலாம் உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"ன்னு சொன்ன போது ஏதோ சீரியஸ்ன்னு தெரிந்தது.

அன்றைக்கு வாக்கிங் போன போது "டேய் யாருகிட்டயும் மூச்சு விட்டுறாதடா..."ன்னு நூறு தரம் சத்தியம் வாங்கிக் கொண்டு கிச்சா விஷயத்தை ஆரம்பித்தான். கிச்சா விஷயத்தை சொல்லி முடித்ததும் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. கன்னுக்குட்டி கணேசன் பாட்டி சொல்லுகிற பழமொழியில் ஏகப்பட்ட அர்த்தம் இருக்கிறது என்று தோன்றியது.

விஷயம் இது தான். க்ளாமர் கிச்சாவை அவன் காலேஜில் ஒரு பெண் லவ் பண்ணிக்கொண்டிருந்திருக்கிறது, கிச்சா வேற பெண்ணை மனதுக்குள் டாவடித்துக் கொண்டிருந்தான். அது தெரிந்து கிச்சாவை டாவடித்த பெண் பூச்சி மருந்தை குடித்துவிட்டதாம். அவளைத் தான் கல்லிடை ஆஸ்பத்ரியில் சேர்த்திருப்பதாகவும், க்ளாமர் கிச்சா டெய்லி போய் பார்த்து ஆறுதல் சொல்லிவிட்டு வருவதாகவும், அவர்கள் வீட்டில் இவன் கூடப் படிக்கிற பையன் என்பது மட்டும் தான் தெரியும். இதில் மருந்தைக் குடித்த பெண்ணும் கிச்சாவும் வேற வேற ஜாதி. கிச்சா மனதுக்குள் ரூட்டு விட்டுக்கொண்டிருக்கும் பெண்ணும் கிச்சாவும் ஒரே ஜாதி என்று கிச்சா சொல்லி முடித்தபோது எனக்கு தலையை சுற்றி உட்கார்ந்து விட்டேன். "டேய் அந்த கால பாலசந்தர் படத்தையும் பாரதிராஜா படத்தையும் கலந்து ஒரு நாட்டை சொல்லிட்டு ஒன்னும் தெரியாத பப்பா மாதிரி ஊருக்குள்ள வளையவர்றியேடா ...எப்படிடா இதெல்லாம்"ன்னு வாயை விட்டே கேட்டுவிட்டென்.

"டேய் அதெல்லாம் விடு இப்ப நான் என்னடா பண்ணட்டும் இத எப்படி சமாளிக்கன்னு தெரியலைடா...நீ தான் ஒரு ஐடியா சொல்லனும்"ன்னு க்ளாமர் கிச்சா ஒரே அழுவாச்சி.

நம்ம தெகிரியமெல்லாம் ஃபிகர் ஏதோ பெரிய மனது பண்ணி நம்ம சேட்டைகளை கண்டுக்காம போகிறவரையில் தான். திரும்பி பார்த்தாலே ஹார்லிக்ஸ் குடித்த மாதிரி வயத்தை கலக்கிவிடும். இதுல க்ளாமர் கிச்சா நேஷனல் அவார்ட் படத்துல வர்ற கலவர மேட்டரை வேற சொல்லிவிட்டு ஐடியா கேட்டதும் பேஸ்மென்ட் வீக்காகிவிட்டது. பின்னொரு நாளில் கிச்சாவை சந்திப்பதாக சொல்லிவிட்டு விட்டுக்கு வந்து போர்த்திப் படுக்கும் வரை நடுக்கம் அடங்கவில்லை.

அடுத்த நாள் முழுவதும் கிச்சா சொன்ன அந்த மேட்டரே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. "க்ளாமர் கிச்சான்னு கரெக்ட்டா தான் கடவுள் அமைச்சிருக்கான்...நம்மளப் பார்த்து ஒரு பயபுள்ளையும் உருக மாட்டேங்குதே"ன்னு கண்ணாடியைப் பார்க்கும் போதேல்லாம் ஃபீலீங்க்ஸாய் இருக்கும். அப்புறம் நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தால் தான் இந்த யோகம் கிட்டும் என்று நெற்றியில் சந்தனத் தீற்றல் வைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.

அதைப் பார்த்து கன்னுக்குட்டி கணேசனுக்கு சந்தேகம் வந்து நோண்ட, அப்புறம் ஒருத்தரிடமும் சொல்லக்கூடாதென்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு விஷயத்தை சொன்னேன். கன்னுக்குட்டிக்கும் ஜீரணமே ஆகவில்லை. க்ளாமர் கிச்சாவின் பிரச்சனையைவிட அவனுக்காக ஒரு பெண் மருந்து குடித்ததே எங்களுக்கு பிரச்சனையாக இருந்தது.

"ஆளப் பார்த்து எட போடக்கூடாதுடா...எங்க பாட்டி அடிக்கடி சொல்லுவா...சந்தனதுக்கு வசிய சக்தி அதிகம்ன்னு.." கன்னுக்குட்டி இதுக்கும் பாட்டியை கூட்டி வந்து அன்றிலிருந்து அவனும் சந்தனப் பொட்டுவைத்துக் கொள்ளப் போவதாகவும் முடிவு கட்டினான்.

"டேய் போயும் போயும் நம்ம களாமர் கிச்சாவுக்காக மருந்தை குடிச்ச அந்தப் பெண்ணை எப்படியும் நாம பார்த்துரணும்டா " என்று கன்னுக்குட்டி வெறி வந்துவிட்டது. சும்மா ஆஸ்பத்திரிக்குள்ள போய்விடலாம் ஆனா எந்தப் பெண்ன்னு எப்படி கண்டுபிடிப்பது என்பது தான் கொஞ்சம் சவாலாய் இருக்கும் என்று எங்களுக்குத் தோன்றியது. எப்படியும் ஏதாவது அஜால்ஸ் குஜால்ஸ் பண்ணி அந்தப் பெண் முகத்தை பார்த்துவிடுவதென்று நானும் கன்னுக்குட்டியும் தீர்மானம் பண்ணினோம்.

நல்ல பிஸி நேரமாய் போவதென்று அடுத்த நாள் சாயங்கால நேரத்தை தேர்ந்தெடுத்து போனால் நினைத்தது மாதிரியே கூட்டமாய் இருந்தது. ஒரு தரம் வார்ட் முழுவதும் நடந்துபோய் நோட்டம் விட்டுப்பார்த்தும் காலேஜ் பெண்ணின் ரூமை கண்டுபிடிக்கமுடியவில்லை. ரெண்டாம் தரம் பார்க்கலாம் என்று முடிவுகட்டிய போது அங்கிருந்த நர்ஸுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

"என்னப்பா யார பார்க்கனும்"ன்னு தோரணையாக கேட்டவுடன், எனக்கு சைக்கிளைப் பூட்ட மறந்தது நியாபகதுக்கு வந்து கன்னுக்குட்டியிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன். வெளியில் போய் ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த போது கன்னுக்குட்டி குழப்பமாய் வந்தான். "டேய் ஒரே ஒரு காலேஜ் பொண்ணு தான் இருந்ததாம் அதுவும் நேத்திக்கே டிஸ்சார்ஜ் ஆகியாச்சாம் ஆனா அதுக்கு கால்ல ப்ராக்ச்சராம்" என்று அவன் சொன்ன போது எனக்கும் குழப்பம் அதிகமாகிப் போனது. திரும்ப நினைக்க எத்தனிக்கையில் க்ளாமர் கிச்சா காப்பி தூக்கை தூக்கிக் கொண்டு ஒரு ரூமிலிருந்து வந்துகொண்டிந்தான். எஙகளை அங்கு அவன் எதிர்பார்க்கவில்லை. அவனை கூட்டிக் கொண்டு போய் பக்கத்திலிருந்த மூத்திரசந்தில் விசாரிக்கவேண்டிய விதத்தில் விசாரித்ததில் அவன் சித்தப்பாவிற்கு டைபாய்டு என்று சேர்த்திருப்பதாகவும், காப்பி டிபன் வாங்கிக்குடுக்க டெய்லி சாயங்காலம் வருவதாகவும், கிச்சாவை நினைத்து உருகி உருகி மருந்துகுடித்த பெண் இவன் மன அபிலாஷை என்றும் ஆனால் இவன் ஒரு பெண்ணை டாவடிப்பது மட்டும் உண்மை என்றும் ஆனால் அவள் யார் என்பது மட்டும் சொல்லவே மாட்டேன் என்று பொல பொலவென்று கக்கிவிட்டான். எங்களுக்கு வந்த ஆத்திரத்தில் நல்ல திட்டி நொறுக்கிவிட்டு மீதத்தை அடுத்த நாள் ஆல் இந்தியா மீட்டிங்கில் வைத்துக்கொள்ளலாமென்றும் கிளம்பிவிட்டோம்.

கன்னுக்குட்டி கணேசனை பின்னாடி வைத்துக் கொண்டு அழுத்தமுடியாமல் அழுத்திவரும் போதும் அவனுக்கு தாங்கவில்லை. "ஆமை வீட்டைக் கெடுக்கும் ஊமை ஊரைக் கெடுக்கும்"ன்னு திரும்பவும் பாட்டியை மேற்கோள் காட்டினான்.

அப்புறம் நாங்கள் சநதனப் பொட்டு வைத்துக்கொண்டு, எங்களுக்காக யாராவது உருகி மருந்தைக் குடிப்பதற்க்கு பதிலாக எங்களின் நாமக்குரங்கு அவதாரத்தைப் பார்த்து, கொடுமை தாங்க முடியாமல் யாரவது பூச்சி மருந்தைக் குடித்துவிடுவார்களென்று சந்தனப் பொட்டு ஐடியாவை கேன்சல் செய்துவிட்டோம்.ஆனால் இன்று வரை சந்தனப் பொட்டு இட்டுக்கொண்டு வரும் க்ளாமர் கிச்சாக்களின் பேச்சை மட்டும் லேசில் நம்புவதில்லை.