Tuesday, September 13, 2005

பொன்னியின் செல்வன்

சமீபத்தில் லண்டன் ப்ளாகர்ஸ் மீட்டில், நாங்களெல்லாம் ஒரு ஓரத்தில் வடை தோசையை நொசுக்கிக் கொண்டு இருந்த போது இன்னொரு ஓரத்தில் குருவும் "மே மாதம்" ஆனந்தும் கல்கியின் பொன்னியின் செல்வனை படமாக்குவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். (நான் கூட அருண்மொழித் தேவர் பாத்திரத்துக்கு மறைமுகமாக அப்ளிகேஷன் போட்டுப் பார்த்தேன்...காதில் விழாதமாதிரி நடித்து விட்டார்கள் சதிகாரர்கள்). சமீபத்தில் இருவரும் அதைப் பற்றி பதிந்திருக்கிறார்கள்.(படமாக்குவதைப் பற்றி).

என்னைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வனை ஒரே படமாக எடுப்பது என்பது, பதினெட்டு முழப் புடவையை கழுத்தில் "டை" யாக கட்டிக்கொள்வது போல. அரண்மனை மண்டபத்தில் ஓப்பனிங் சீனில் குலுக்கு நடனமும் பரதநாட்டியமும் கலந்து நடன மாதர் ஆடும் ஒரு ஆட்டம் என்று ஆரம்பித்து, அருவிக் கரையில் சொட்டச் சொட்ட ரொமேன்ஸ், நடு நடுவே சென்டிமென்ட் வசனங்கள், யானை பூனையெல்லாம் வைத்து சண்டைக் காட்சி இப்பிடி கமர்ஷியல் காம்ப்ரமைஸ்களுக்கு நடுவே பொன்னியின் செல்வனை சொதப்பாமல் எடுக்க ரொம்ப பிரயத்தனப் பட வேண்டும். எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று தெரிந்தால் போதும் ஒரு அரை குறை "பொன்னியின் மைந்தன்" என்று போட்டி படத்தை அவசர அவசரமாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்து கிடைச்சது லாபம் என்று உலகத் தொலைக்காட்சிகளிலே முதன் முறையாக உலவ விட்டுவிடும். "பீ", "சி" தியேட்டர்களில் ஓட வேண்டும் என்பதற்காக அஜீத் மாமா தொப்பையைக் காட்டிக் கொண்டும், ராணி வேஷத்தில் வசதியாக கவர்ச்சிக் கதாநாயகியும் (பிஸின்னோ அஸின்னோ ) "குந்தவை ராசா" , "வை வை குந்தவை பார்கிறவன் கண்ணுல் தீயவை" என்ற த்த்துவப் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு மகிழவைப்பார்கள். கோயில் திருவிழா, மசாலா மிக்ஸ், டாப் டென் என்று எல்லா இடங்களிலும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் அப்புறம் பொட்டியில் போய் படுத்துக் கொள்ளும்.

முதலில் உண்மையான நோக்கத்துடனும், வெறியுடனும் எடுக்க ஆரம்பித்தவர் பாதி கிணறு தாண்டிய பிறகு பைனான்ஸ் பிரச்சனையால் உலக வங்கியில் கடன் வாங்க அப்ப்ளிகேஷன் போட்டுவிட்டு பட்த்தை கிடப்பில் போட்டுவிடும் அபாயமும் இருக்கிறது.

என்னவோ எனக்கு "பொன்னியின் செல்வன்" படமாக வரவேண்டும் என்றும் இருக்கிறது வேண்டாமென்றும் இருக்கிறது. பொன்னியின் செல்வன் படித்தவர்கள் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் மனதில் ஒரு வடிவம் கொடுத்திருப்பார்கள். திரையில் அதைக் கொண்டு வந்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும். அதில் தான் படத்தின் வெற்றியும் அடங்கி இருக்கும் என்று தோன்றுகிறது.

நான் "லக்ஷிமி"யாக நினைத்து வைத்திருக்கும் குந்தவை, இன்றைய காலேஜ் பசங்களுக்கு அஸினாகத் தெரியலாம் இல்லை டமீல் பேசும் வடநாட்டு நடிகையாகத் தெரியலாம்.

நான் படித்த போது என் மனதில் தோன்றியவர்கள்

அருண்மொழித் தேவர் - சிவாஜி கணேசன்
வந்தியத் தேவன் - ஜெமினி கணேசன்
(வேறு யாரையும் பேண்ட்டுக்கு மேல் குட்டைப் பாவாடை போட்டுக் கொண்டு நினைக்கத் தோன்றவில்லை)

குந்தவை - லெஷ்மி
(சின்ன வயது லெக்ஷ்மி ஓய்...இப்போ லெக்ஷ்மியை போட்டால் எங்க தாத்தா கூடப் பார்க்கமாட்டார்)

பெரிய பழுவேட்டரையர் - பி.எஸ்.வீரப்பா
சின்ன பழுவேட்டரையர் - ஆர்.எஸ்.மனோகர்

நந்தினி, வானதி - சாண்டில்யன் கதைகளுக்கு சித்திரங்களில் வரும் கதாநாயகிகள்

மற்ற எல்லார் பாத்திரங்களுக்கும் மனதில் பழைய படங்களில் வரும் நடிகர்களின் உருவம் இருக்கிறது ஆனால் பெயர்கள் தெரியவில்லை.

உங்களுக்குத் தோன்றிய கற்பனைகளையும் அறிய ஆவலாய் இருக்கிறேன்.

Tuesday, September 06, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...5

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4

அவன் நெட்டையன். அவனுக்கு கத்திரிக்காயைப் பிடிக்காது அதனால் காதலையும் பிடிக்காது. இவன் குட்டையன். இவனுக்கு கத்திரிக்காயையும் தெரியாது காதலையும் தெரியாது. ஆனால் தெரிந்த மாதிரி நடித்தால் தனது பென்சில் மீசையை அரும்பு மீசை என்று காலேஜில் நம்பி விடுவார்கள் என்று நடித்துக் கொண்டிருப்பான். இருவருக்கும் எதிர் துருவங்களில் வீடு. காலேஜ் நடுவில்.

மெகா சீரியல் மாதிரி நிதானமாய் போய்க் கொண்டிருந்த இருவர் வாழ்விலும் புயலாய் நுழைந்தாள் அவள். நடிகர் முரளி கனவில் கொலுசு போட்டு அழகு பார்த்து ஃபீலிங்காய் பாட்டு பாடுவாரே அந்த அழகு. துடைத்து வைத்த குத்து விளக்கு மாதிரி பளிச்சென்று இருப்பாள். அதிர்ந்து பேசமாட்டாள். ஆனால் எனக்கென்னவோ அவளை பார்த்த போது தீப்பொறி பத்தவே இல்லை. (ஹைய்யா..இன்னிக்கி தங்கமாளிகை பில்லு ஏறாது).

அதற்கப்புறம் நெட்டையனும், குட்டையனும் அநியாயத்திற்கு நல்லவர்கள் ஆகிவிட்டார்கள். இந்தப் படத்துக்குப் போலாமா அந்தப் படத்துக்குப் போலாமா என்று அலைபவர்கள் ஒழுங்காய் கல்லூரிக்கு வர ஆரம்பித்தார்கள். "தேவர் மகனில் கமல் கௌதமிக்கு உண்மையிலேயே உம்மா குடுத்தாரா" என்ற அறிவுப் பசியைத் தூண்டும் கலா தத்துவ விவாதங்களிலே கலந்து கொள்ளாமல், குத்துவிளக்கிற்கு தேவுடு காக்க ஆரம்பித்தார்கள். குத்துவிளக்கு எங்களுக்கு ஜூனியர். குத்துவிளக்குக்கு குட்டையனோட் ஊர். வசதியாய் போயிற்று. ஒன்பது மணி காலேஜுக்கு, குத்துவிளக்கு 8 மணிக்கே வருகிறதென்று குட்டையனும் அதே பஸ்ஸில் வர ஆரம்பித்தான்.

முதலில் குட்டையனுக்கும் நெட்டையனுக்கும் லேசாக மனஸ்தாபம் ஆரம்பித்தது. அப்புறம் "ஜோ ஜீத்தா வோ ஹீ சிகந்தர்" ஒப்பந்தம் செய்து கொண்டு இருவரும் அபூர்வ சகோதரர்கள் ஆனார்கள். ஆனால் இருவருமே ஜென்டில்மேன் சிகந்தர்கள். குட்டையன் குத்துவிளக்கு எப்போ எந்த பஸ்ஸில் ஏறினாள், எவ்வளவு சில்லறை குடுத்து டிக்கெட் வாங்கினாள், நெயில் பாலீஷ் போட்டிருக்கிறாளா, என்ன கலர் கர்சீப் கொண்டு வந்திருக்கிறாள் என்ற முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வான். நெட்டையன் குட்டையன் இல்லாத போது என்ன நடந்தது என்பதை கவனித்து நியாபகமாக அப்டேட் செய்வான். மொத்தத்தில் ஷிப்ட் முறையில் முழுநேர குத்துவிளக்கு வாட்ச்மேன் சர்வீஸ் இனிதாக நடந்தேறி வந்தது.

எங்கள் கல்லூரிக்குப் பெண்கள் புதுசாகையால் (பாகம் இரண்டு அதிகாரம் நான்கு) வகுப்பு இல்லாத நேரங்களில் பையன்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பெண்களுக்குத் தனியாக ஒரு ஓய்வறை கொடுத்திருந்தார்கள். இது போதாதென்று அந்த கல் நெஞ்ச ப்ரின்ஸிபால், குஞ்சம்மா (உண்மையான பெயர்) என்ற ஒரு கடுத்த மூஞ்சி அம்மணியை வேறு அதற்கு காவலாக அமர்த்தியிருந்தார். பெண்கள் கமேண்டோ பிரிவில் கருப்பு பெல்ட் வாங்கின மாதிரி இருப்பார். எப்போதும் சந்தேகப் பார்வை தான். அபூர்வ சகோதரகளுக்கு தலைவலியே அவள் தான். அக்னிநட்சத்திரம் மாதிரி அடிக்கடி முறைத்துக் கொள்வார்கள்.

குட்டையன் நோட்ஸ் தருகிறேன் அது இதுவென்று அஜால் குஜால் பண்ணி ஒருவழியாக கடைசியில் குத்துவிளக்கை பஸ் சினேகம் பிடித்துவிட்டான். நெட்டையனும் ஒட்டிக் கொண்டான். இருவரும் குஞ்சம்மாவுக்கு தெரியாமல் மரத்தடியில் நைஸாக குத்துவிளக்கிடம் கடலை போடுவார்கள். அவளுக்கு நோட்ஸ் குடுக்கவேண்டும் என்று லைப்ரெரிக்கு சென்று ரெபரன்ஸ் புத்தகத்தையெல்லாம் பார்த்து நோட்ஸ் எடுப்பார்கள்.

"இந்தப் படிப்பை போன வருஷம் படித்திருந்தாலாவது பிரயோஜனமாக இருந்திருக்கும்...இன்னமும் கெட்டுப் போகவில்லை இந்தவருஷப் படிப்பை படிங்கடா..அடுத்த வருஷம் நோட்ஸ் குடுத்துக்கலாம் "

கேட்டால் தானே! மன்மதக் குஞ்சுகள் மிதப்பில் இருந்தார்கள். சீன் காட்டும் படலம் ரொம்ப நாள் தொடர்ந்தது. இப்படியாக ஒருநாள் குட்டையன் நோட்ஸ் குடுக்கிறேன் பேர்வழி என்று ராகு காலமும் யெம கண்டமும் கூடி வரும் வேளையில் அவள் வீடுக்கே ஒரு நாள் போய்விட்டான். நல்ல நேரம் பார்த்துப் போயிருக்க வேண்டாமோ. கூட இருந்த நல்லவர்களின் வயித்தெரிச்சல் வேறு சேர்ந்து கொண்டது. அப்புறம் மரக்தடி கடலை சாகுபடி கம்மியாகிவிட்டது. அதற்கப்புறம் என்னமோ குத்துவிளக்கு இவர்களைப் பார்த்தால் விஷயமாகப் பேசி விட்டு போய்விடுவாள். என்னமோ நடந்திருக்க வேண்டும்.

குத்துவிளக்கு ஒரு நாள் "நீங்கள் இருவரும் எனக்கு நோட்ஸ் குடுத்து அறிவுக் கண்ணைத் திறந்த அண்ணன்கள்" என்று ராக்கி கட்டிவிட்டது.

அண்ணன்களும் விஷயத்தை அமுக்கப் பார்த்தார்கள். ம்ஹூம்...அரசல் புரசலாகி வெளியே தெரிந்து விட்டது.

"டேய் குட்டையா உனக்கு நான் அப்பவே சொன்னேன்ல...ஆட்டுக்கு வால் அளந்து தான்டா வைச்சுருக்கான்..எதோ இந்த மட்டுக்கும் உன்ன தம்பீன்னு சொல்லாம அண்ணன்னு சொன்னாளே...அந்த மட்டுக்கும் சந்தோஷப் பட்டுக்கோ..."

ஆனாலும் அபூர்வ சகோதரர்கள் அதற்கப்புறமும் அடங்கவே இல்லை....

கேட்டால் - "அவளைப் பிடிக்கும் ஆனால் அந்த மாதிரியெல்லாம் இல்லை, அவள் எங்களை அண்ணன்னு சொன்னது எங்களுக்கு சந்தோஷம் தான்" என்று தங்கைக் கோர் கீதம் பாட்டுப் பாடுவார்கள்.

"சரி சரி என்னையும் உன் கூடப் பிறந்த தம்பியா நினைச்சு சாலிட் ஸ்டேட் நோட்ஸ் எடுத்துக் குடுடா "

"டேய் நீங்க குத்துவிளக்க பார்க்கறீங்களா இல்ல குஞ்சம்மாவ பார்க்கறீங்களா...என்ன கருமாந்திரம்டா...உங்க கேரக்டரயே புரிஞ்சுக் முடியலயே..."

சிவாஜி குரலில் "அம்மா அம்மாடி..உனக்கு நியாபகம் இருக்கா..நீ பர்ஸ்ட் செமெஸ்டர்ல இருக்கும் போது எல்க்டிரிசிட்டி நோட்ஸ் கேட்ட...யுனிவர்ஸிட்டி புக்க படிச்சா..ஊத்திக்கும்ன்னு லைப்ரேரிக்கு ஓடிப்போய் பிர்ஜ்லால் சுப்ரமணியம் புக்க பார்த்து நோட்ஸ் எடுத்துக் குடுத்தேனே..நீயும் படிச்சுட்டு 85 பெர்சன்ட் மார்க் வாங்கினியே...இப்பிடியெல்லாம் செஞ்சா உன் மனம் கவர்ந்த கண்ணனாக ஆவேன்னு நானும் நினைச்சேனே; ஆனா நீ...கண்ணன் இல்லடா வெண்ணை அண்ணன்னு அன்னிக்கு சொல்லிட்டியே..."

அடிக்கடி விதவிதமாய் பையன்கள் கலாய்ப்பான்கள்.

அண்ணன்கள் இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சவில்லை. ரொம்ப நாள் பாசமலர் படம் தொடர்ந்தது. அப்புறம் குத்துவிளக்கு கல்யாணத்திற்கும் போய் சாப்பிட்டுவிட்டு முறை செய்துவிட்டு வந்ததாகக் கேள்விப் பட்டேன்.

--இன்னும் ஜொள்ளுவேன்




Use this Comments(#)

Friday, September 02, 2005

சிறுவர் பூங்கா

அம்புலிமாமா, பூந்தளிர், பாலமித்ரா, கோகுலம் - இந்த புத்தகங்களையெல்லாம் படித்திருக்கிறீர்களா? நான் சின்ன வயதில் ரொம்பவும் விரும்பிப் படித்த புத்தகங்கள். வளர்ந்தாலும் இந்த புத்தகங்கள் எங்கேயாவது கிடைத்தால் படிப்பேன். இந்த புத்தகங்கள் இன்னமும் என்மனதில் பசுமையாக இருக்கின்றன. இது போக ஸ்பைடர்மேன், ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி போன்ற புத்தகங்களும் மிகவும் பிடித்தவை. என் குழந்தைகளுக்கு தமிழ் படிக்கச் கற்றுக் கொடுத்து இவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.

சமீபத்தில் தான் சிறுவர் பூங்கா என்ற இந்த வலைப்பதிவை படிக்க நேர்ந்தது. மிகவும் நேர்த்தியாக சிறப்பாக செய்து வருகிறார் பரஞ்சோதி. இவரின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. நான் மிகவும் ரசித்துப் படிக்க ஆரம்பித்திருக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று. நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் பாராட்டுக்களையும் மறக்காமல் சொல்லுங்கள்.

Thursday, September 01, 2005

கார்காலம்

லண்டனில் போக்குவரத்து வசதிகள் நன்றாக இருப்பதால் 4 வருடங்களாக கார் வாங்க வேண்டும் என்று என்னமோ தோன்றவே இல்லை. குடும்பத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் செய்தி தெரிந்தபோது தான் லைசன்ஸுக்கே விண்ணப்பித்தேன். அதுவரை காரில் உட்கார்ந்து தான் போயிருக்கேனே தவிர காரைப் பற்றி ஏ.பி.சி (ஆக்ஸிலரேட்டர், பிரேக், காஸ்) கூடத் தெரியாது. யாரைக் கேட்டாலும் லைசன்ஸ் டெஸ்டில் குறைந்தது நான்கு முறையாவது பெயிலாயிப்பதாக பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள். சிலபேர் கஜினி முகம்மது கேஸ். சரிதான் நமக்கு ஒன்றுமே தெரியாதே...நாம் லைசன்ஸ் வாங்கி கார் வாங்குவதற்குள் ரிடையர் ஆகிவிடுவோம் என்று நினைத்தேன். நல்ல வேளை எங்கோ எப்போதோ தெரியாமல் செய்த புண்ணியத்தால் இரண்டாம் முறையே பாஸ் செய்து காரும் வாங்கிவிட்டேன். முதலில் கொஞ்ச நாட்கள் உள்ளூரிலேயே ஜானவாசம் மாதிரி சுற்றிக்காட்டினேன். ஆனால் என் மகளுக்கே அது போர் அடித்துவிட்டது. இந்த ஊரில் ரவுண்டானாக்கள் தான் கொஞ்சம் சிக்கலே. எந்த எக்ஸிட்டில் போகவேண்டும் என்பதைச் சொல்ல மனைவி பக்கத்திலிருப்பார் ஆனாலும் கரெக்டாகத் தப்பாகப் போய்விடுவேன். அப்புறம் எங்கே போகிறோம் என்று தெரியாமலே கொஞ்ச நேரம் பெக்க பெக்கவென்று ஓட்டிக்கொண்டுபோவேன். முதலில் சமாளித்து விட்டேன். வழியில் தேம்ஸ் நதி வந்து போட்டெல்லாம் நின்று கொண்டிருந்தது. என் மகளுக்கு ஜாலி.

"குழந்த ஆசப்படுவாளேன்னு தான் இங்க வந்தேன்...பாரு எவ்வளவு குஷி அவளுக்கு.."

இரண்டாம் தரம் ஒரு நண்பர் வீட்டுக்கு போகவேண்டியது ஏதோ ஒரு அத்துவானக் காட்டில் சினிமா காம்ப்ளெக்ஸில் போய் நின்றோம்.சமாளிக்க முடியவில்லை அப்புறம் நண்பருக்கு போன் போட்டு அவர் வந்து கூட்டிக்கொண்டு போனார். அங்கே எப்பிடி போனோம் என்று அவருக்கு ரொம்ப ஆச்சர்யம்.

அடுத்த தரம் ரவுண்டானா ரொம்பப் படுத்திவிட்டது.

"நாந்தான் நாலாவது எக்ஸிட்ன்னு கரெக்டா சொன்னேனே..."

"அப்பிடின்னு நீ நினைச்சுண்டு இருக்க...இது நாலாவது எக்ஸிட்டா? இப்போ பார் எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை"

"நான் கரெக்டாத் தான் சொன்னேன்...நீங்க தப்பா போனா நானா பொறுப்பு.."

"என்ன சொன்னேன் நொன்னேன்னு...இப்போ எங்கே இருக்கோம்னு கரெக்டா கண்டுபிடி பார்ப்போம்.."

"இது நல்லா இருக்கே...நீங்க தப்பா போயிட்டு நான் கண்டுபிடிக்கனுமா..உங்களோட இந்த கச்சேரிக்கெல்லாம் என்னால வயலின் வாசிக்கமுடியாது...நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்கோ.."

"பேசாம எரோப்பிளேன் முதலாளி பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கலாம். எரோப்பிளேன் ஓட்டறது ரொம்ப ஈ.ஸி இந்த ரவுண்டானா இழவெல்லாம் கிடையாது"

போனவாரம் மாதர் குல டெலிபோன் உரையாடலை ஒட்டுக் கேட்டேன்..இந்த ரவுண்டானா இழவால எல்லா புது ட்ரைவர் வீட்டுலயும் புருஷன் பெண்டாட்டிப் பிரச்சனை வருதாம்.