இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1

ஊரில் கொலு என்றால் ஏதோ பேருக்கு ரெண்டு அடுக்கில் நாலு பொம்மை என்றெல்லாம் வைக்கமாட்டார்கள். பெரும்பாலும் பத்து படிகளுக்கு மேல் இருக்கும். படிக்கு பத்து பன்னிரெண்டு பொம்மைகள் அடுக்கி இருப்பார்கள். அந்த கொலு ஸ்டாண்ட் பெரிய பெரிய உத்திரக் கட்டைகளால் முறுக்கப்பட்டிருக்கும். ஸ்டாண்டை ஒன்று சேர்ப்பதற்கே ஒருநாள் பிடிக்கும். அப்புறம் அதில் அந்த வீட்டு மாமாவின் வெளுத்த வேட்டியை கிழிசல் தெரியாமல் மடித்துப் போட்டு அதன் மேல் பொம்மைகள் பளீரென்று அடுக்கப் பட்டிருக்கும். சில வீடுகளில் எலி கடித்த ஜரிகை வேட்டியெல்லாம் போட்டு பிரமாதப் படுத்தியிருப்பார்கள்.
இந்த கொலு ஸ்டாண்டின் அடியில் இரண்டு மெட்ராஸ் ஒன்டிக் குடித்தனம் நடத்தலாம் - அவ்வளவு பெரியதாக இருக்கும். அதில் தான் அந்த வீட்டு மாமி கொடுக்க வைத்திருக்கும் வெத்தலைப் பாக்கு தட்டுகள், ப்ளவுஸ் பீஸ், சுண்டல் விநியோகம் மற்றும் இன்ன பிற சாதனங்கள் வைக்கப்பட்டிருக்கும். முக்கால் வாசி வீட்டு மாமாக்களுக்கு இந்த ஸ்டாண்டின் அடியில்தான் எடுபிடி வேலை. கணகச்சிதமாக உட்கார்ந்து கொண்டு கர்மசிரத்தையாய் வெத்தலையை எண்ணி எண்ணி அடுக்கிக் கொண்டிருப்பார்கள். இந்த வெத்தலையை மட்டும் கூட இரண்டு வைத்துவிட்டால் போதும் "மனசில பெரிய மைசூர் மஹாராஜான்னு நினைப்பு...வெத்தலை விக்கிற விலைக்கு நாலு வைச்சா போறாதா..."ன்னு அடிக்கடி மாமியிடமிருந்து டோஸ் விழும். மைசூர் மஹாராஜா இத்தனை அல்பமாக இப்படி உட்கார்ந்து கொண்டா வெத்தலையை அடுக்கிக் கொண்டிருப்பார் என்று அடிக்கடி எனக்கு டவுட் வரும்.
அன்றைக்கு நாங்கள் போன வீட்டில் நல்லவேளையாக அந்த வீட்டு மாமா ஊரில் இல்லை. சேகர் போன உடனேயே எடுபிடி வேகன்ஸியில் ட்யூட்டி ஜாயின் பண்ணிவிட்டார். எங்களை உள்ளே சரியாக வரக்கூட விடாமல் "டேய் இங்க நிறைய வேலை இருக்கு...மாமிக்கு ஹெல்ப் பண்ணனும், கொலுவ வேற ரீ அரேஞ் பண்ணனும் கொஞ்சம் லேட்டாகும் நீங்க கிளம்புங்க"ன்னு புத்தியைக் காட்டிக்கொண்டிருந்தான். இன்னாடா சோழியன் குடுமி சும்மா ஆடாதேன்னு பார்த்தால் அவனோடு பேவரிட் ஜிகிடி இன்னும் இரண்டு ஜிகிடிகளோடு உட்கார்ந்துகொண்டிருந்தது. அதான் தம்பி, சோலோ சோலையப்பனாக மாற ட்ரை பண்ணுகிறான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது. சேகரை சொல்லி குற்றமில்லை, தெருவில் இருந்த பழக்கம் அப்பிடி. பேவரிட் என்று ஏதாவது ஜொள்ளி ஒரு ஜிகிடி மேல் லேசாக அக்கறை காட்டிவிட்டால் போதும், அந்த ஜிகிடி வரும் போது மற்ற வானரங்கள் நம்மை காய்ச்சு காய்சென்று காய்ச்சி நாற அடித்துவிடும். அப்புறம் அந்த ஜிகிடி மருந்துக்கு கூட நம்மை திரும்பி பார்க்காது. சேகரும் அது நடக்கக் கூடாது என்று பிரயத்தனப் பட்டுக்கொண்டிருந்தான்.
"டேய் ஒத்தையா ரீ அரேஞ்ச் பண்ண முடியாதுடா நாங்களும் ஹெல்ப் பண்றோம்"ன்னு ஒட்டிக்கொண்டோம். "என்னத்த ரீ அரேஞ்ச் பண்ணப் போறேள்....எல்லாம் நல்லாதான் இருக்கு"ன்னு அந்த வீட்டு மாமி வேறு ஜிகிடி கோட்பாடு தெரியாமல் வாரிக்கொண்டிருந்தார். "இல்லை மாமி, சீதா ராமர் பொம்மை இங்கே இருந்தா சிவன் அங்க இருக்கனும், நாய்க்குட்டி இங்க இருக்கனும் பன்னிக்குட்டி படுத்துண்டு இருக்கனும் "ன்னு கொலு அரேஞ்சிங் டெக்னாலஜியில் ஆக்ஸ்போர்ட் ஆர்க்கிடெக்ட் இங்கே அளந்து விட்டுக்கொண்டிருந்தார்.
என் கூட வந்த கன்னுக்குட்டி கணேசனுக்கு கொண்டைக் கடலை சுண்டல் என்றால் உயிர். கொண்டைக் கடலை சுண்டலுக்காக எதையும் தியாகம் செய்வான் - தெரு கிரிக்கெட் பேட்டிங் தவிர. அன்றைக்கு மாமி வீட்டில் கொண்டைக் கடலை சுண்டல். கிட்டத்தட்ட முடிந்துவிடுகிற பதத்தில் அடுக்களையிலிருந்து வந்த சுண்டல் வாசனையை மோப்பம் பிடித்தது முதல் கன்னுக்குட்டி கணேசன் கஞ்சா கணேசனாகிவிட்டான். சேகர் பாடு படு திண்டாடமாகிவிட்டது. சேகர் தனியாக கன்னுக்குட்டியை தள்ளிக்கொண்டு போய் எச்சரித்தும் அவன் கண்டுக்கவே இல்லை.
வேறு வழியில்லாமல் கொலு ஆர்க்கிடெக்ட் ப்ராஜெக்ட் வேலையை ஆரம்பித்து "டேய் இங்க வா இந்த கோபுரத்தை பிடிச்சிக்கோ கீழ போட்டுடாத ஜாக்கிரதை"ன்னு என்னை ஜூனியர் எடுபிடியாய் அப்பாயிண்ட் பண்ணிவிட்டார். ஒரு இத்துப் போன பொம்மையை இரண்டாவது வரிசையிலிருந்து முதல் வரிசைக்கு ஆர்க்கிடெக்ட் மாத்துவார். அப்புறம் ஈசான மூலையில் நின்று கொண்டு "இங்கேர்ந்து பாரு...இப்ப சூப்பரா இருக்கு இல்ல?"ன்னு என்னிடம் கேட்பான், நானும் "ஆமாண்டா கலக்கலா இருக்கு...லேசா ஒரு பத்து டிகிரி திருப்பி வைச்சா இன்னும் ஓஹோன்னு இருக்கும்"ன்னு ஐடியா குடுப்பேன்.
உட்கார்ந்திருக்கும் ஜிகிடிகள் முகத்தில் "இவர்கள் எப்போ கொலுவ ரீ அரேஞ்ச் பண்ணி நாம எப்ப வெத்தலை பாக்கு வாங்கி வீட்டுக்குப் போவது என்று கவலை படர ஆரம்பித்தது.
இதெயெல்லாம் கண்டுக்காமல் செக்கிழுக்கிற மாட்டுக்கு சிவலிங்கம் தெரியுமான்னு கண்ணுக்குட்டி கணேசன் பாட்டுக்கு கொண்டக் கடலை சுண்டலை மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தான். மாமி சுண்டலை பதமாய் இறக்கி சுடச் சுட பாத்திரத்தோடு கொலு ஸ்டாண்ட் அடியில் கொண்டு வந்து வைத்துவிட்டார். அவ்வளவு தான் கணேசனுக்கு ஸ்டாண்டுக்கு அடியில் போவதற்க்கு ஒரு சாக்கு தேவைப்பட்டது.
"டேய் என்னடா சொதப்பிக்கிட்டு இருக்கீங்க...அந்த மூனாவது வரிசையில வேஷ்டி சரியா போடலைடா அதான் வரிசையே கோணலா தெரியுது..இரு நான் கொலு ஸ்டாண்ட் அடி வழியா அத சரி பண்றேன் நீங்க மேல கரெக்டா இருக்கான்ன்னு பாருங்கன்னு" உள்ளே புகுந்துவிட்டான். அந்த வரிசையில் செட்டியார் பொம்மை ஒன்று சுத்தி சின்ன சின்ன பாத்திரங்களில் அரிசி, பருப்பு நிரப்பப் பட்டு உண்மையாகவே அழகாக வைக்கப் பட்டிருந்தது. சேகரால் கன்னுக்குட்டியை ஒன்றும் சொல்ல்ல முடியவில்லை.
உள்ளே போன கன்னுக்குட்டி கணேசன் நேராய் போய் அவசர அவசரமாய் ஒரு கரண்டி சுண்டலை வாயில் அள்ளிப் போட்டுக்கொள்ள, இருந்த சூட்டில் வாய் பொள்ளிப் போய்விட்டது. சூடு பட்ட கணேசன் பேருக்கேத்த மாதிரி கன்னுக்குட்டி மாதிரி துள்ள அவன் மண்டை ஸ்டாண்டில் தட்டி பொம்மைகள் குலுகுலுங்க செட்டியார் பொம்மை நங்கென்று தரையில் விழுந்துவிட்டது. நல்ல கணமான பொம்மை என்பதால் நல்ல வேளை நொறுங்கவில்லை. உடைந்திருந்தால் அன்று மாமி எங்களை பின்னிப் பெடலெடுத்து கொலு ஸ்டாண்ட் படிகளாக்கியிருப்பார். பெருமூச்சு விட்டுக் கொண்டே அவசர அவசரமாய் செட்டியார் பொம்மையை நானும் சேகரும் திரும்ப எடுத்த போது தான் பார்த்தோம், கழுத்தில் கீறல் விழுந்து செட்டியார் தலை வேறு உடல் வேறாக ஆகியிருந்தார்.
எனக்கு அந்த மாமியின் தசாவதாரம் பற்றி நன்றாகத் தெரியுமாகையால் கைகால் வெலவெலத்து விட்டது.
"டேய்....!! செட்டியார் மண்டையைப் போட்டுட்டார்டா....."ன்னு நான் பயந்து கொண்டே சொல்லும் போதும் கூட சேகருக்கு ஜிகிடி போதை இறங்கவில்லை.
"டேய் நல்ல நாளும் அதுவுமா இவங்கள்லாம் வெத்தல பாக்கு வாங்கிக்க வந்திருக்கும் போது இப்படி அமங்கலமா சொல்லாதடா...செட்டியார் பொம்மை உடைஞ்சிருச்சுன்னு அழகா சொல்லு"ன்னு ஜிகிடிகள் முன்னால் ஆர்க்கிடெக்ட் எனக்கு அட்வைஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
எனக்கு கடுப்பாகிவிட்டது. "இப்போ மாமி அடுக்களையிலிருந்து வருவாங்க...நீயே அமங்கலமா இல்லாம இப்ப சொன்ன மாதிரி அழகா விஷயத்தை சொல்லு. எனக்கு சந்தைக்கு போனும் ஆத்தா வையும்"ன்னு திசைக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடிவிட்டேன்.
நல்ல மாட்டுக்குத் தான் ஒரு சூடு என்று கண்ணுக்குட்டி கணேசனும் சுண்டலுக்கு ஆசைப்பட்டு அங்கு தங்கிவிட்டான். அப்புறம் அடுத்த நாள் தெரு கிரிக்கெட்டில் விஷயம் அரசல் புரசலாய் வெளியே வந்தது. மாமிக்கு செட்டியார் பொம்மை கார்த்திகை வகையாக தமையன் வாங்கிக்கொடுத்த சென்டிமென்ட்டாம். ஜிகிடிகள் முன்னால் சேகருக்கும் கன்னுக்குட்டிக்கும், மாமாக்கு விடும் டோஸைவிட இரண்டு மடங்கு அதிகமாக டபுள் ஸ்ட்ராங் டோஸில் மாமி வறுத்து எடுத்துவிட்டாராம். அத்தனை தடபுடலிலும் கன்னுக்குட்டி கணேசன் இரண்டு கரண்டி கொண்டைக் கடலை சுண்டலை உஷார் பண்ணிவிட்டான்.
அதற்கப்புறம் ஜிகிடிகள் வட்டாரத்தில் சீன் போட்டுக்கொண்டிருந்த குல"சேகர்" கொலுசேகர் என்று பெருமையுடன் வழங்கப்பட்டு வந்தார்.
இப்போதும் செட்டியார் பொம்மையைப் பார்த்தால் எனக்கு சேகரின் "செட்டியார் மண்டையைப் போட்ட்டுட்டார்..." அமங்கல அட்வைஸ் தான் நியாபகத்துக்கு வரும்.
--ஜொள்ளிங்ஸ் தொடரும்