Monday, August 24, 2009

கசகசா

"ஹலோ டுபுக்கா...நான் குப்புசாமி பிரெண்டு கப்புசாமி பேசறேன்..."

"ஆங் சொல்லுங்க சார்...குப்புசாமி நேத்திக்கு தான் போன் பண்ணினார்...யூகேக்கு இப்போ தான் வந்திருக்கீங்கன்னு சொன்னார்...என்ன...செட்டிலாகிட்டீங்களா?"

"ஆங் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா ஆகிட்டிருக்கோம்...அது விஷயமாத் தான் போன் பண்ணினேன்...எனக்கு தயிர்னா உயிர்...இங்க பக்கத்து கடையில வாங்கின தயிரு ரொம்ப புளிக்குது....அத்தோட பிரியாணிக்கு கசகசாவும் வேணும்...இங்க நம்ம ஊரு மளிகை கடை எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா..."

"**** ஆஹா கிளி கூண்டுக்குள்ள சிக்கிடிச்சு....*** நீங்க இருக்கிற ஏரியாலேர்ந்து வழி கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்...ஒன்னு பண்ணுங்க...நான் எங்க வீட்டுக்கு வழி சொல்றேன்..நீங்க பேசாம இங்க கிளம்பி வந்துருங்க...வந்தீங்கண்ணா..டீ குடிச்சிக்கிட்டே நான் மேப் போட்டு கசகசா விக்கிற இடத்தைக் குறிச்சு தரேன்..."

"அப்டீங்கிறீங்களா...அதுவும் சரிதான்..வந்திடறேன்."

ஆஹா இப்படி கசகசாவை வைத்து கிளியை பிடிக்க வழியிருக்கான்னு..பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே மனுஷன் வந்துவிட்டார். மனுசன் பிரியாணிக்கு ஏகத்துக்கு காய்ஞ்சி போய் இருந்தார் போல.

"இந்த கசகசா..."

"முதல்லலாம்...இந்த கசகசாவை கேரளாக்காரங்க ஏத்துமதி பண்ணிக்கிட்டு இருந்தாங்க...அது ப்ரான்ஸ் போயிட்டு வரும்...இப்போ கொஞ்ச நாளா...அங்க கெடுபிடி ஆகிட்டதுனால..சுவிட்சர்லாந்துக்கு தான் அதிகமா ஏத்துமதி பண்றாங்க..."

"ஐயைய்யோ..அப்போ இங்க யூகேல கசகசா கிடைக்காதா..."

"***என்ன கூண்டுக்கிளி மக்கர் பண்ணுது...**** இல்லீங்க இங்கயும் கிடைக்கும்...சுவிஸ்ல கசகசா சகாயவிலையில் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு சொல்ல வந்தேன்..."

"அப்பாடா நான் ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்..."

"நீங்க...போன வாரம் ஃபோன் பண்ணியிருந்தீங்கன்னு வையுங்க உங்களுக்கு அலேக்கா அப்படியே ஒரு கிலோவோ ரெண்டு கிலோவோ கசகசா வாங்கி வந்திருப்பேனே..."

"இல்லீங்க நமக்கு அவ்வளவு தேவைப்படாது..."

"** மக்கர் கிளியா இருக்கேன்னு பார்த்தா சரியான மக்கு கிளியா இருக்கே..**** இல்லீங்க இங்க யூகேல இருநூறு கிராம் கசகசா வாங்குறதுக்கு சுவிஸ்ல ஒரு கிலோ வாங்கலாம்ன்னு சொல்லவந்தேன்..."

"ஓ...தயிரு புளிக்காம கிடைக்குமா..."

"சுவிஸ்ல பால்தாங்க விசேஷம்...சூப்பரா இருக்கும்...அப்போ தயிரு எப்படி இருக்கும்ன்னு பார்த்துக்கோங்களேன்..."

"இல்லீங்க நான் யூகேல கேட்டேன்..."

"*** இன்னிக்கு ஒரு கப்பு டீ வேஸ்டாயிடும் போல இருக்கே**** ஆங் இங்கயும் கிடைக்கும் கிடைக்கும்....ஆனா சுவிஸ் மாதிரி டேஸ்டா கிடைக்காது..."

"இங்க எங்க தயிர் கிடைக்கும்"

" ***** &($*&*$(£$*$( ***** ....."

"நீங்க சமீபத்துல சுவிஸ் போயிருந்தீங்களா...."

"*** எனக்குத் தெரியும் உழைச்ச காசுல போட்ட டீ என்னிக்குமே வேஸ்டா போகாதுன்னு எங்க தாத்தா அன்னிக்கே சொல்லியிருக்கார்**** ஆமாங்க சும்மா போய் சுத்தி பார்த்துட்டு வரலாமேன்னு போன வாரம் போயிருந்தேங்க....மானே தேனே பொன்மானே...சுவிஸ்...கண்மணி...பொண்மணி....சுவிஸ்....மானே தேனே பொன்மானே...சுவிஸ்...."

"சூப்பர்ங்க அப்போ சுவிஸ் சூப்பரா சுத்தினீங்கன்னு சொல்லுங்க..."

"ஆமாங்க நம்ம பதிவர் மகேஷ் கூட சுவிஸ்க்கு வேலை நிமித்தம் வந்திருந்தார்...வந்து சுவிஸ்ல இந்திய உணவகத்துக்கும் வழியெல்லாம் சொன்னாருன்னா பார்த்துக்கோங்களேன். மனுசன் ரொம்ப நல்லவர்ங்க... ஜெனிவால ரெண்டு நாள் தொடர்ந்து வந்து கைடு காசு மிச்சப் படுத்திட்டார்னா பார்த்துக்கோங்களேன்....""

"ஓ அப்பிடியா...கொஞ்சம் மளிகை கடைக்கு வழி சொல்றீங்களா..."

"இங்கேர்ந்து நேரா உங்க வீட்டுக்கு திரும்பி போங்க....கார நிப்பாட்டிட்டு லெப்ட் சந்துல அஞ்சு நிமிஷம் பொடி நடை நடந்தீங்கன்னா...சூப்பர் இந்திய மளிகை கடை இருக்கு...எல்லாம் கிடைக்கும்....

"....???????"

"இருங்க போயிடாதீங்க...கீழே இருக்கிற படத்த கிள்க் பண்ணி நல்லா பாருங்க...அதுல பனியில பின்னாடி கோடு போட்ட மாதிரி ஒரு பாதை தெரியுதா...அதுல அப்பீடீக்கா அஞ்சு நிமிஷம் போனா கசகசா விக்கிற கடை வந்துறும்...உங்களுக்கு வழி கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கக் கூடாதேன்னு தான் இந்த படம் காண்பிச்சேன்..."




*** நம்மளுக்கு உன்னால் முடியும் தம்பிக்கு பக்கத்துல தேறுகிறதே ஆயிரத்துல ஒரு போட்டோ...அத பார்க்க வைக்கிறதுக்கு இன்னா கதவுட வேண்டியிருக்குடா சாமீ.....*******


பி.கு - இந்தப் பதிவிற்க்கு போட்டோ சூப்பர்...போன்ற பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும். உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி இருக்கீங்கன்னு வரும் கமெண்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தங்கமணி மாதிரி காறித் துப்பும் பின்னூட்டங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

Thursday, August 06, 2009

நியாபகங்கள்


உலகமே வெறுத்து யாரையாவது நாலு பேரை போட்டுத் தள்ளிடலாம் என்றளவுக்கு வெறுப்பு தட்டும் போதெல்லாம் தவறாமல் சமையல் பக்கம் போவேன். இதே மாதிரி தங்கமணிக்கும் மூட் அவுட்டாகி குறைந்தபட்சம் மூனு பேரையாவது போட்டுத் தள்ளிட தோன்றும் போதெல்லாம் புதுசாக ஏதாவது ஒரு டிஷ் ட்ரை பண்ணுவார்.

"ஐய்யைய்யோ சமையலா..நீங்களா..?...நான் கூட நின்னு எடுத்தாவது தரேன்"

"இதோ பாரு சிங்கம் என்னிக்கும் சிங்கிளாத் தான் சமைக்கும்"

"கிழிக்கும்...சிங்கம் சிங்கிளா சமைச்சா...கிச்சன் பன்னிங்க கூட்டமா வந்து கும்மியடிச்சிட்டுப் போன மாதிரி ஆயிடும்...நோ வே..போன தரம் பால்கோவா கிண்டறேன்னு எவர்சில்வர் குக்கர நான் ஸ்டிக் குக்கர் மாதிரி கரிச்ச உங்க பிரதாபம் போதும்..முதல்ல இடத்த காலி பண்ணுங்க" - நான் சமையல் அறை பக்கம் சமைக்க வந்தாலே தங்கமணி டெரர் ஆகிவிடுவார்.

அப்புறம் எதாவது சொல்லி சமாதானப் படுத்தி "அன்னிக்கு ஒரு நாள் சப்பாத்திக்கு செஞ்சியே கோபி மஞ்சூரியன் அத எப்படி செஞ்ச சொல்லு...? கரெக்டா செஞ்சியான்னு செக் பண்ணிக்கறேன்" என்று ஒரு ரெசிப்பி கேட்பேன். உடனே தங்கமணியும் மணாளனே மங்கையில் பாக்கியம் அஞ்சலி தேவி மாதிரி தேம்பி தேம்பி ரெசிப்பியை சொல்லுவார்.

நான் செய்யும் எல்லா டிஷ்ஷிலும் கட்டாயம் உருளைக்கிழங்கு இருக்கும். முதலாளி...அதில் ஒரு தொழில் ரகசியம் என்னான்னா... என் மகள்கள் இருவருக்கும் உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும். வெறும்ன வெந்து மேஷ் செய்து குடுத்தாலே "எப்படிப்பா இப்படி டேஸ்டியா சமைக்கிற"ன்னு சிங்கத்துக்கு சிடுக்கெடுத்து விடுவார்கள். தங்கமணி முன்னால் சொன்ன கோபி மஞ்சூரியன் ரெசிபியை கொஞ்சம் உல்டா செய்து, உருளைக்கிழங்கை வெந்து ஒரு கப் மாதிரி குடைந்தெடுத்து கோபி மஞ்சூரியனை அதில் போட்டு இட்டாலியன் டிஷ் என்று குடுப்பேன். "எப்படீப்பா இப்படி சூப்பரா.." என்று மகள்கள் திரும்பவும் ஆரம்பிக்கும் போது "இதெல்லாம் ரொம்ப ஓவர்டி...சிங்கத்துக்கு ரொம்ப தான் சிங்கியடிக்கிறீங்க ரெண்டு பேரும்" என்று தங்க்ஸ் மங்களம் பாடி விடுவார்.

நிற்க. என்னாடா சினிமா விமர்சனமாய் இருக்குமோன்னு பார்த்தால் திரும்பவும் சொந்தக் கதை சோகக் கதைய சொல்றானேன்னு நினைக்காதீங்க. என் சொந்தக் கதை பிசினெஸ் மாடலுக்கும் ஞாபகங்கள் பட பிசினெஸ் மாடலுக்கும் வித்தியாசம் அதிகமில்லை ஜென்டில்மேன்.

ரெயின் கோட் படத்தை லேசாக உல்டா செய்து அதை நண்பனின் சொந்தக் கதை என்று பேக் செய்திருக்கிறார்கள் அவ்வளவு தான். முடிவு மட்டும் நண்பனின் கதையா இல்லை படம் முழுவதுமேவா என்பதை தெளிவு படுத்தியிருக்கலாம்.

இது பா.விஜய்யின் முதல் படம். முதல் படத்திற்கு பரவாயில்லை. எடுத்த விஷயத்தில் ரொம்ப கத்தி போட்டு போர் அடித்து பாதியிலேயே படத்தை விட்டு எழுந்து போகுமளவுக்கு செய்யாமல் ஓரளவுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். இதையும் டைரக்டருக்கு முதல் படம் என்பதால் மட்டுமே சொல்லமுடிகிறது. மற்றபடி இதைக் கருத்தில் கொள்ளாமல் மற்ற படங்களோடு ஒப்பிட்டால் ரொம்பவே சுமார் ரகம் தான். பா.விஜய் டைரக்க்ஷனோடு நிப்பாட்டிக்கொண்டு ஹீரோவாய் வேறு யாரையாவது போட்டிருக்கலாம் என்பது என் தனிபட்ட எண்ணம். பாட்டு டேன்ஸ் என்று வரும் போது ரொம்பவே பொறுமையை படம் சோதிக்கிறது. படம் நெடுக வருபவர்கள் ரொம்பவே செயற்கையாக வசனம் பேசுகிறார்கள். ஹீரோவும் கவிதை எழுதுபவர் என்று திரைக்கதையை வைத்துக்கொண்டு தனிபட்ட முறையில் குடுக்கவேண்டியவர்களுக்கெலாம் கணக்கு செட்டில் செய்துவிட்டார் போலும். ஏதோ ஒரு பெருந்தலையை வேறு சாடுகிறார். மனுஷன் யாருன்னு தான் பிடி பட மாட்டேங்குது.

பா.விஜய் நடிப்பில் சேரனை இமிடேட் செய்கிறாரா என்று தெரியவில்லை அழும் போது அவரை மாதிரியே (கேவலமாக) இருக்கிறது. இதை கொஞ்சம் கவனித்தால் நலமாயிருக்கும். அவருடைய கவிதை வரிகள் வழக்கம் போல் நன்றாக வந்துள்ளன. கல்லூரி விழாவில் கவிதை வாசிப்பது, வாசிக்கும் போது திணறுவது, திணறும் போது முதல் வரிசையில் மூனாவது ஆளும், நாலாவது வரிசையில் ஆறாவது ஆளும் எழுந்து நின்று குடுத்த காசுக்கு தெம்பா திரும்பிப் போன்னு சொல்லுவது உடனே ஹீரோவிற்கு சக்தி வந்து அருவி மாதிரி கொட்டுவது ஹைய்யோ ஹைய்யோ....அடுத்த படத்திற்க்கு கூட நல்ல துடிப்பான அசிஸ்டெண்ட் டைரக்டர்களை வைத்துக் கொள்ளுங்கள் விஜய்...

Sunday, August 02, 2009

சுவாரஸ்ய பதிவர்கள்

முதலில் இந்த விருது பட்டர்ப்ளை அவார்ட் என்று ஒரு வருடத்திற்கு (போன வருஷம் தானே?) முன் ஒரு ரவுண்டு வந்தது. அப்போது Boo மற்றும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இருவரிடமிருந்தும் இதைப் பெறும் பாக்கியம் கிடைத்தது. (இருவரும் என்னை மன்னிக்கவும்...சாரி அப்போது என்னால் அதை தொடரமுடியவில்லை) இந்த முறை இன்ட்ரெஸ்டிங் ப்ளாக் என்ற வேர்ஷனில் ராப், வசந்தகுமார் மற்றும் வெட்டிப்பயல் ஆகியோரிடமிருந்து விருது பெறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. விருதை வழங்கிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. விதிமுறைப்படி நானும் எனக்குப் பிடிக்கும் சில ப்ளாக்குகளுக்கு இதைக் குடுக்கவேண்டும்.

அதற்க்கு முன்னால் இதை ஒரு அட்டகாசமான சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டும் ஒரு விஷயத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இங்கே நான் எழுதுவதை பாராட்டி ஈமெயிலிலும், பின்னூட்டத்திலும் மிக சிரமம் மேற்கொண்டு நீங்கள் எல்லாரும் நிறைய ஊக்குவித்து வருகிறீர்கள். ஆனால் இதில் நூற்றில் ஒரு பங்கு கூட நான் செய்வதில்லை. இது என் மனதில் நீண்ட நாளாய் உறுத்திக்கொண்டே இருக்கிறது. இது செய்யவேண்டாம் என்ற நோக்கத்தோடு நான் செய்யவில்லை. ஆனால் தற்போது சில நாட்களாய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய ப்ளாக்குகளுக்குப் போய் பின்னூட்டம் போட முயற்சித்து வருகிறேன். முதலில் இந்த விருதுக்கு முற்றிலும் புதிய ப்ளாக்குகளாய் அறிமுகப் படுத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தற்போது கொஞ்ச காலமாய் ப்ளாக் பக்கம் அதிகம் வர முடியவில்லை. (செந்தழல் ரவி இந்த அவார்ட்டையே ஏதோ தமிழ் ப்ளாக் உலகில் எரிந்து கொண்டிருந்த பிரச்சனையை தீர்பதற்குத் தான் ஆரம்பித்தார் என்று படித்தேன்...என்ன பிரச்சினை என்று கூட தெரியாத அளவில் தான் நான் ப்ளாக் படிக்கும் லட்சணம்). தற்போதைய தமிழ் ப்ளாக் இருக்கும் எண்ணிக்கையில் திருவிழாவில் தொலைந்த குழந்தை கதையாகி இந்தத் பதிவு ரொம்ப லேட்டாகிவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். அத்தோடு இந்த விருது சுற்றி வரும் வேகத்தைப் பார்த்தால் நான் குடுப்பதற்க்குள் ஆட்டமே முடிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால் தெரிந்த, படித்த பிடித்த சில பதிவர்களையே நானும் லிஸ்ட் எடுத்திருக்கிறேன்.

சுவாரஸ்சியம் என்பது தனிப்பட்ட விருபத்தைச் சார்ந்தது. என்னைப் பொறுத்த வரையில் போட்டிருக்கும் பதிவு போரடிக்காமல் கடைசி மட்டும் படிக்க வைத்து சில சமயங்களில் பின்னூட்டத்தையும் படிக்க வைக்கும் பதிவுகள் இந்த வகையில் சார்ந்தது. இதில் தொடர்ச்சியாய் நிறைய பதிவர்கள் லெவல் காட்டி வருகிறார்கள். எனக்கு முகம் தெரிந்த நட்பு வட்டத்தை இந்த விருதுகளிலிருந்து எடுத்துவிட்டேன். கீழே இருப்பவர்கள் போக இன்னமும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லாரையும் போட்டால் இது ஒரு மெகா சீரியல் நீள பதிவாக ஆகிவிடும் என்பதால் சுருக்கியுள்ளேன். விடுபட்டவர்கள் தவறாக நினையாதீர்கள்.

(சுட்டிகளின் ஆங்கில அகர வரிசைப் படி)

ஆசிப் அண்ணாச்சி - இவருடைய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது நவீன பின் தத்துவமாய் சொன்ன காக்கா வடையை சுட்ட கதை. இவருடைய பதிவுகளில் எங்க திருநெல்வேலி தமிழில் இருக்கும் நக்கல் எனக்கு மிகப் பிடிக்கும்.

Boo - ஆங்கிலப் பதிவர். இவர் பதிவுகளில் இருக்கும் உயிரோட்டம் அலாதியானது. ரெண்டு சுட்டிகளின் அம்மாவாய் பதியும் பதிவுகளில் இருக்கும் மெல்லிய நகைச்சுவை மிக ரசிக்கும் படியாக இருக்கும். இவர் என்னைப் பற்றி முன்பு எழுதியிருப்பதால் நான் மேலும் சொல்லுவதெல்லாம் பதில் மரியாதை செய்வது மாதிரி ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

பிரபு கார்த்திக் - இவர் ஆங்கிலப் பதிவர். சீரியசான பல மேட்டர்களை இவர் எழுதும் பாணி எனக்கு மிக பிடிக்கும். இவருடைய ஹீ ஹீ பதிவுகள் மிக ரசிக்கும் படியாக இருக்கும். ஆனால் ஏனோ தற்போது அந்த மாதிரி பதிவுகள் இவரிமிருந்து கொஞ்சம் குறைந்துவிட்டது. நிறைய எழுதுங்க சார் (இத யார் சொல்றதுன்னு வெவஸ்தை இல்லையான்னு நீங்க சொல்றது கேட்கிறது...இருந்தாலும் சொல்லுவோம்ல :))

ஜொள்ளுப்பேட்டை - ஜொள்ளிங்க்ஸின் அத்தாரிட்டியே அண்ணாச்சி தான். ரசிக்கும் படி அழகாக எழுதுவார். என்ன..பதிவுகளில் படங்கள் காரணமாக ஆபிஸில் இவருடைய ப்ளாகை தெகிரியமாய் ஒப்பன் பண்ணமுடியாது...மினிமைஸ் பண்ணி படங்களை கவனமாய் பார்த்த பின் ஒப்பன் செய்துவருகிறேன்.

குந்தவை - இவரின் பதிவுகளில் துள்ளல் நடையில் இழையோடும் நகைச்சுவை கலக்கலாய் இருக்கும். ரங்கமணி கலாய்க்கும் சங்கத்தில் போர்டு மெம்பராய் இருக்கிறார். அன்றாட நிகழ்வுகளில் கலாய்த்து வருகிறார்.

குசும்பன் - சொல்லவே வேண்டாம்...இவரின் டைமிங் மற்றும் குசும்புகள் கலக்கல் ரகம். மிக ரசிக்கும் பதிவர்களில் ஒருவர். அரசியலிருந்து அன்றாட நிகழ்வுகள் வரை பதியும் அனைத்திலும் நையாண்டி சூப்பராய் இருக்கும்.

நவீன் - எனக்கும் கவிதைக்கும் ரொம்பவே தூரம். விதிவிலக்காய் இவரின் கவிதைகள் மட்டும் படித்துவருகிறேன். எதோ ஒரு பதிவை படித்துவிட்டு தொடர்ந்து படித்துவருகிறேன். பயமுறுத்தாத புரியும் தமிழில் அழகாய் சுவாரஸ்யமாய் எழுதிவருகிறார். கவிதைக்கு ஏத்த படங்கள் எங்கிருந்து தான் பிடிக்கிறாரோ மனுஷன். இவர் ப்ளாக் படித்த பின் தான் என்க்கு ஒரு ஞானோதயம் வந்தது. காதல் கவிதைகளுக்கு போடும் படியாக சினிமா தவிர்த்த இந்திய புகைப்படங்களே அவ்வளவாக இல்லவே இல்லை. கலாச்சாரம் என்ற பெயரில் என்னம்மோ பினாத்திக் கொண்டு வறட்சியாய் ஆக்கிவிட்டோமோ? இப்ப புரியுது தலைவர் குஞ்சுமோன் ஏன் பஸ்ஸ்டாப் சீனில் கூட வெள்ளைக்காரனை வைத்து படம் பிடித்தார் என்று ஹூம்

உருப்படாதது - நாரயணின் எழுத்து நடை வசீகரமானது. புதுப்பேட்டை சினிமா சமயத்தில் நார்த் மெட்ராஸ் நிழலுலகம் பற்றி இவர் எழுதிய பதிவுகள் அட்டகாசமானவை. புதுப்பேட்டை சினிமாவை விட அவை மிக சுவாரஸ்யமாக இருந்ததாக எனக்குப் பட்டது.

வெட்டிப்பயல் - ஐ.டி கம்பெனிகளில் அன்னாரின் பதிவுகள் மிகப் பிரபலம். சுவாரஸ்மாய் எழுதுவதில் விற்பன்னர். இவரும் எனக்கு இந்த விருது குடுத்து பாராட்டி இருப்பதால் மேலும் எழுதினால் பதில் மரியாதை ஆகிவிடும். ஆகவே அடக்கி வாசித்துக் கொள்கிறேன்.

Thursday, July 23, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.9

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6   Part 2.7   Part 2.8

ஜொள்ளிங்க்ஸ்...ஒரு மிகப் பெரிய ப்ராசஸ். ஜொள்ளு விடுவது என்பது...ஐ.ஐ.டியில் ஸ்டேட் ராங்க் வாங்குவது மாதிரி அத்தனை எளிது கிடையாது. கொஞ்சம் கரணம் தப்பினாலும் கேனப்பயலாகிவிடுவோம். ஜொள்ளுவிடுவது நாமாயிருந்தாலும் சுத்தி இருப்பவர்களும் சூழ்நிலையும் உதவ வேண்டும், உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும். ஜொள்ளிங்க்ஸ் ப்ராஸசில் மிக உதவியாய் இருக்கும் பெர்சனாலிட்டிகளை ஒன்று இரண்டு என்று ஔவைய்யார் மாதிரி வரிசைப் படுத்தினால், முதலில் வருவது குழந்தைகள், இரண்டாவது பெரிசுகள். "என்னூடா செல்லம்...என்னூனூ பண்ணூறா ...ஜிஜுலிக்கு என்னூ வேணூமா.....இங்கூஉ பாரூடா குட்டீ...அஔ...?" என்று கொஞ்சும் போது இன்ஸ்டென்ட் பக்கவாதம் வர வைக்கும் மழலைகளின் பணி ஜொள்ளிங்ஸில் இன்றியமையாதது.

சினிமா கெடுத்ததோ இல்லை பார்த்துக் கற்றுக்கொண்டதோ, அது என்னமோ தெரியவில்லை...எல்லா வயதுப் பெண்களுக்கும் இந்த குட்டீஸ் பட்டாளத்தை ரொம்பவே பிடிக்கும். அதுவும் எங்க ஊர் அம்பாசமுத்திரம் மாதிரி பெரிய சிட்டிக்கு சென்னை, பம்பாய், பெங்களூர் மாதிரி கிராமத்திலிருந்து வரும் வயதுக் குமாரிகளெல்லாம் எப்போதும் மணிரத்னம் பட கதாநாயகிகள் மாதிரி கூடவே நாலு குட்டீஸ் பட்டாளத்தைக் கூட்டிக் கொண்டே திரிவாரகள். அது வரையிலும் பரட்டை தலை பர்சனாலிட்டியாயிருக்கும் ஜந்துக்களெல்லாம் உடனே க்ரிப்ட்டாலஜிஸ்ட் என்று ரோஜா அர்விந்த்சாமி பெர்ச்னாலிட்டிக்கு அப்கிரேடு ஆகிவிடும். உடனே ஊரில் இருக்கும் கிழவிகளையெல்லாம் தூக்கி கொண்டு தெருவில் நடக்க தோன்றும். எங்கேயாவது வைக்கப்போர் இருந்தால் அது மேலே ஹாயாக படுத்துக் கொண்டு சும்மாவாச்சும் வானத்தைப் பார்த்து ரசிக்கத் தோன்றும். தலையை ஸ்டையிலாய் ஒரு பக்கமாய் கோதிவிட்டு..."ஐ லைக் வில்லேஜ் கேர்ல்ஸ்"ன்னு ஃபீலிங்காய் டயலாக் பேசத் தோன்றும்.நதியையோ குளத்தையோ பார்த்தால் சும்மா ஒரு கை தண்ணிரை எடுத்து போவோர் வருவோர் மேல் செல்லமாய் தெளிக்கத் தோன்றும். (ஆனால் அவர்கள் சினிமாவில் வருவது மாதிரி காட்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்...காட்டு காட்டுவென காட்டிவிடுவார்கள் என்பது வேறுவிஷயம்)

ஆனால் நம்ம ஜிகிடி கூட சுத்தும் நம் வாண்டுக் கூட்டதுக்கு நம்ம அவஸ்தை என்றுமே புரியாது. அது வரைக்கும் "அண்ணா ப்ளீஸ் என்னை உங்க சைக்கிளில் ஒரே ஒரு ரவுண்டு அடிங்கண்ணா" என்று கெஞ்சிக்கொண்டிருக்கும் வாண்டுகள் எல்லாம் ஒரே நாளில் கட்சி தாவிவிடும். "அந்த அக்கா வாடகை சைக்கிள் வாங்க அம்பது பைசா குடுத்தாளே.." என்று நம் இயலாமையை வாண்டுகள் எள்ளி நகையாடும் போது மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும். எல்லாம் இருபத்தி இரண்டு வினாடிகள் தான் அதுக்கப்புறம்..."இன்னிக்கு என்ன இன்னும் நம்ம ஃபிகர வெளியிலயே காணுமே"ன்னு கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.

விடலைப் பருவத்தில் குமரிகளுக்குப் பிடித்தது தான் நமக்கும் பிடிக்குமே...குரங்குக் குசாலா கூட்டத்தில் இந்தப் பக்கம் ஒருவன் நேரு மாமாக்கே நான் தான் மாமா என்று ரோஜாவின் ராஜாவாய் குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான், அந்தப் பக்கம் இன்னொரு வானரம் எம்ஜியாராய் மாறி தேமேன்னு போய் கொண்டிருக்கும் ஒரு பெருசை வேலை மெனக்கேட்டு மருந்துக்குக் கூட சுத்தமாய் ட்ராபிக்கே இல்லாத ஒரு ஒத்தையடி பாதையில் சர்வஜாக்கிரதையாய் கையைப் பிடித்து ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்டு வரும். இந்த மாதிரி ஐடியா எதுவும் தோன்றாமல் மசனையாய் இருக்கும் வயெத்தெரிச்சல் கூட்டம் மட்டும் வழக்கம் போல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இந்த கடமை வீரர்களைப் பார்த்து கெக்கலித்து ஃபிகர்கள் முன்னால் எவ்வளவு வார முடியுமோ அவ்வளவு வாரி விட்டுக்கொண்டிருக்கும்.

வாட்டர் கோவிந்து என்னுடைய மழலை கொஞ்சல்ஸில் தொழில் முறை பார்ட்னர். முறையாகச் சொல்வதானால் ஜொள்ளிங்ஸில் பார்னர்ஷிப்பே கிடையாது நம்மைத் தவிர எல்லாருமே எதிரி தான். ஆனால் "யுவர் ஆனர்..." என்று சினிமாவில் வரும் சோப்ளாங்கி எதிர் தரப்பு வக்கீல் கெட்டப்பில் வாட்டர் கோவிந்து செய்யும் பெரும்பாலான சில்மிஷங்கள் எனக்கு சாதகமாய் தீர்ப்பாகிவிடும் என்பதால் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்துக்கொண்டிருந்தேன். வாட்டர் கோவிந்தும் என்னை மாதிரி சுத்த சைவம் ஆனால் சில சமயம் வாட்டர் குடுத்தாலே க்வாட்டர் குடித்த மாதிரி சவுண்டுவிடுவதால் வாட்டர் கோவிந்து என வழங்கப்பட்டு வந்தான். கொஞ்சம் வளர்ந்த வாண்டுக்கள் நேரம் காலம் தெரியாமல் பாக்யராஜ் படத்தில் வருவது மாதிரி வாரிவிட்டுவிடும் என்பதால் குழந்தையும் தெய்வமும் ஒன்று பாலிசி எடுத்து இன்னும் பேசவராத பொக்கைவாய் மழலை கைக்குழந்தைகளை மட்டுமே வைத்து நானும் வாட்டர் கோவிந்தும் ஷோ காட்டிக் கொண்டிருந்தோம்.

ஆனால் இந்த மழலை குழந்தைகளை வைத்து ஷோ காட்டும் விஷயத்தில் தொன்று தொட்டு வயதுக் குமரிகளுக்கெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. நாம் எதார்த்தமாய் "செல்லம் இங்க என்னை பாருடா...என்னை பார்த்து சிரிடா செல்லம்..." என்று குழந்தையைக் கொஞ்சினால் ஏதோ ஜாடைமாடையாய் அவர்களுக்கு தான் மெசெஜ் குடுக்கிறோம் என்று அனர்த்தம் செய்துகொள்கிறார்கள். கல்யாணத்திற்கு முன் "மாமாக்கு ஒரு முத்தா தாடா செல்லம்"ன்னு தங்கமணி மட்டும் இருக்கும் போது தங்கமணி வீட்டில் இருந்த ஒரு குழந்தையை நான் எதார்த்தமாய் கொஞ்சியதை இன்று வரை அனர்த்தம் செய்து கொண்டு நான் என்னம்மோ அலையாண்டிக் குப்பத்தைச் சேந்தவன் மாதிரி சாடிக்கொண்டிருக்கிறார். ஹும்....பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை அவர்கள் வயது அப்படி...கற்பனை கண்ணை மறைக்கிறது. (நான் இப்பவும் சொல்றேன் அந்தக் குழந்தை கிட்ட தான் முத்தா கேட்டேன்..இது என் குலதெய்வம் கேட்ரீனா ஃகைப் மேலே சத்தியம்)

ஆனால் எங்கள் தெருவில் கொஞ்சம் மழலை பஞ்சம். இருக்கும் முக்கால் வாசி மாமிபாட்டிகளுக்கு மத்தியில் புதிதாய் தெருவிற்கு குடிவந்த சந்திரா அக்கா மட்டும் தான் கொஞ்சம் இனிமையாய் பேசுவார். "நீங்க ஐய்யோ பாவம்..உங்களுக்கு...ஏகப்பட்ட வேலை....கிச்சுவ பத்தி கவலயே படாதீங்கோ தெருவில சுத்திக் காட்டி அவன அழாம நாங்க பார்த்துக்கறோம்..." என்று தொழில்ரீதியாக நாங்கள் கிச்சுவை அபேஸ் செய்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்.

தொழில் முறை போட்டியில் ஒரு தடவை நான் கிச்சுவை வைத்து ஜிகிடியிடம் கூட இரண்டு மார்க் வாங்கிவிட்டேன் என்று வாட்டர் கோவிந்து டென்ஷனாகி கிச்சுவை என் கையில் இருந்து பிடுங்கி "பிள்ளை நிலா" பாட்டு பாடி கிச்சுவை தூக்கி தூக்கி பிடித்து "அங்க காக்கா பாருடா செல்லம்"ன்னு கொஞ்ச, வாட்டர் கோவிந்து குலுக்கின குலுக்கலில் கிச்சு காக்காயைப் பார்க்காமல் போட்டிருந்து தொள தொளா க்ரீம் கலர் ஜெட்டிக்கு மேட்சிங்காய் முந்தின நாள் செரிலாக்கை கக்கா போய்விட்டான். ஜிகிடி முன்னால் கிச்சுவின் காக்காய்க்கு பதில் கக்கா மேட்டர் தெரிந்துவிடக் கூடாதே என்று வாட்டர் கோவிந்து அப்புறம் நெளி நெளியென்று நெளிந்து மேட்டரும் கக்காவும் வெளியே வராமல் சமாளித்து போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஆத்திரத்தில் வாட்டர் கோவிந்து கிச்சுவை நைஸாய் நுள்ளி கிச்சு அழுது அதற்கப்புறம் சந்திரா அக்கா எங்கள் கிச்சு மழலை பாலிசியைக் கேன்சல் செய்துவிட்டார்.

"உன்னை எவன்டா காக்காய பாரு குருவியப் பாருன்னு ஓவராக்ட் செய்யச் சொன்னது? என்னம்மோ பத்து புள்ள பெத்து எக்ஸ்பீரியன்ஸ் போட்ட மாதிரி ஓவர் சீன் போட்ட கை மேல பலன்...வேண்டியது தான் உனக்கு" - எனக்கு ஏக எரிச்சல்

" சரி விடுறா..மழலைச் செல்வங்கள் கொஞ்சம் இம்சைடா...அப்பப்போ நாறிடறது. பேசாம நாம முதியோர் நலத் திட்டம் ஆரம்பிச்சா என்ன..அதான் பிரச்சனையே இருக்காது" என்று வாட்டர் கோவிந்து அப்புறம் எம்ஜியார் கட்சி ஆரம்பித்துவிட்டான்.

தொடரும்