Friday, September 22, 2006

நெல்லை சந்திப்பு விபரங்களும் படங்களும்

மொத்தம் ஆறு பேர் வருவதாகச் சொல்லியிருந்தார்கள். ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது மணிக்கு சந்திப்பதாக பேசிக்கொண்டோம். இதில் வீட்டிலிருந்து தங்கமணியையும் குழந்தைகளையும் வேறு கூட்டி வரச் சொல்லியிருந்தார்கள். கடைசி நேர குழப்பங்களலால் அவர்களை கூட்டிச் செல்ல முடியவில்லை. என்ன ட்ரெஸ் போட்டுக் கொள்ள என்பதிலிருந்து எல்லாமே கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து ஒரு மணிநேரம் ஆகும் என்று எதற்கும் இருக்கட்டும் என்று ஏழு மணிக்கே கிளம்பிவிட்டேன்.

எல்லோரும் வந்தவுடனே அங்கிருந்து சாப்பிடப் போகலாம் என்று பேசிவைத்திருந்தோம். சந்திப்பிற்கு எட்டு மணிக்கே போய்சேர்ந்துவிட்டேன். என்னைத் தவிர ஒருவரும் வரவில்லை. அதற்குள் பக்கத்தில் நல்ல ஹோட்டல் தேடி போண்டால்லாம் ஸ்டாக் இருக்கா என்று விசாரித்து வைத்தேன். அப்புறம் நேராக சந்திப்பதாக பேசிக் கொண்ட இடத்திற்கே போய்விட்டேன். என்னை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று மிக நிச்சயமாகத் தெரிந்தது. சுதந்திர தினம் நெருங்கிக் கொண்டிருந்ததால் அங்கங்கே போலீஸ் தலைகளைப் பார்க்க முடிந்தது. முதலில் என்ன பேசுவது என்று ஒத்திகை பார்த்துக்கொண்டேன். நேரம் ஆக ஆக எனக்கு டென்ஷன் அதிகரித்தது. கைத்தொலைபேசி இல்லாததால் ஒருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தமிழ்மணம் நட்சத்திர முறை சரிதானா, தேன்கூடு போட்டியில் இந்த முறையாவது வெற்றி கிடைக்குமா என்றெல்லாம் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சரியாக ஒன்பதேகாலுக்கு நெல்லை எக்ஸ்ப்ரெஸ் ட்ரெயின் வந்தது. இரண்டு அக்காக்கள், அக்கா குழந்தைகள் என்று மொத்தம் சரியாக ஆறு பேர். அக்கா பையன் கூட்டத்தில் ஒளிந்து கொண்டிருந்த என்னை மிகச் சரியாக கண்டுபிடித்து விட்டான். "என்னாங்கடி விளையாடுறீங்களா..ஒரு மனுஷன் எவ்வளவு நேரம் தான் காத்துகிடப்பான்...இன்னமும் உங்களுக்கெல்லாம் பொறுப்பே வரலை போலிருக்கே ஊர்லேர்ந்து வந்த தம்பிய பார்க்க இப்படியா ஆடி அசைஞ்சு வரது? " என்று ஒத்திகை பார்த்த வசனத்தை பேசி வாங்கிக் கட்டிக் கொண்டு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வீடு சென்றோம்.

நெல்லை சந்திப்பு புகைப்படம் காண இங்கு சுட்டவும்.


பி.கு - என்ன செய்யறதுங்க...நெல்லைப் சந்திப்ப இப்படித்தான் ஒப்பேற்ற வேண்டியிருக்கிறது. சந்திப்பை அறிவித்த இரண்டு வாரத்துக்கு மருந்துக்கு கூட யாரும் அதைப் பற்றி மெயில் அனுப்பவில்லை. அம்பி வேறு இது தெரியாமல் டோட்டல் டேமேஜ் செய்து கொண்டிருந்தார். கவுண்டமணி பாணியில் "யெப்பா போதும்ப்பா..ப்லிம் அந்து போச்சு..நிப்பாட்டுப்பா..பின்னியெடுத்துட்டாங்க" என்று சொல்லியும் அவர்பாட்டுக்கு சமாளித்துக் கொண்டிருந்தார். இந்த லட்சணத்தில் சிவஞானம்ஜீ வேறு அவர் பங்குக்கு எண்ணையை ஊற்றிக்கொண்டிருந்தார். அட ஏங்க இந்த கொலைவெறி ...இங்க நானே சொந்த செலவுல சூன்யம் வைச்சிக்கிட்டு எடுக்கிறது தெரியாம திண்டாடிக்கிட்டு இருக்கேன் என்று நொந்து போயிருந்த சமயத்தில்.. வலைப்பதிவுகளை வாசிக்கும் நண்பர் சங்கரபாண்டி மட்டும் நான் பதினோராம் தேதி தான் அந்தப்பக்கம் வருவேன் அந்த தேதியில் வைத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டிருந்தார். பட்சி சிக்கிக்கிச்சு என்று எனக்கு ஒரே சந்தோஷம். ரொம்ப கஷ்டம்..இருந்தாலும் உங்களுக்காக பெரிய மனது பண்ணி மாற்றுகிறோம் என்று பதிலனுப்பியும் மனுஷன் கடைசி நேரத்தில் கடுக்கா கொடுத்துவிட்டார். ஹூம் கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து ..கிளி பறந்து போயிடுத்தூ... ஒரு வேளை எனக்கு ஜாதகத்துல போண்டா தோஷம் இருக்குமோ??

Tuesday, September 19, 2006

மலையாளக் கரையோரம்

எங்க ஊருக்கு மிகப் பக்கத்திலிருந்தும் இந்த முறை தான் கேரளாவில் காலடி எடுத்துவைத்தேன். சும்மா சொல்லக் கூடாது...நாகர்கோவிலைத் தொடும் போதே வித்தியாசத்தை உணர முடிகிறது. நாகர்கோவிலில் காற்று அள்ளுகிறது. கேரளா பச்சை பசேலென்று ஜிலு ஜிலுவென்று அழகாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் தென்னை மரங்களைப் பார்க்க முடிகிறது. ஆனாலும் இளநி பத்து ரூபாய்க்கு தான் விற்கிறார்கள். பெண்களெல்லாம் அப்போது தான் குளித்த மாதிரி முடியை மழைப் பின்னல் போட்டுக் கொண்டு நெற்றியில் சந்தன தீற்றலுடன் ப்ரெஷ்ஷாக இருக்கிறார்கள். கேரள மக்கள் ரொம்ப கறாராக இருக்கிறார்கள். பேரமெல்லாம் ரொம்ப பேசமுடிவதில்லை. ஆனால் சென்டிமென்டுக்கு மடிகிறார்கள். ஏர்போர்ட்டில் நான் தின்று கொண்டிருந்த வாழைப்பழத்தை அவசரமாக வாயில் ஒதுக்கிக் கொண்டு பேசியதில் மலையாளி என்று நினைத்துக்கொண்டு கொண்டு சம்சாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் பார்த்த மலையாளப் படங்களில் டயாலாக் ஞானம் ரொம்ப இல்லாததால் எல்லாத்துக்கும் முன்னாடியோ பின்னாடியோ ஒரு ஓ பொட்டுக் கொண்டு அஃறினையில் பேசி "கோப்பியோ", "சாயாவோ", "ஓ பத்து ரூபாயோ" "இங்கன வரும்", "அங்கன போகும்" என்று மலையாளி மாதிரி ஆக்ட் கொடுத்தது கொலையாளி லுக்கில் போய் முடிந்தது.
இருந்தாலும் மாமியார் வீட்டு ரசப் பொடி ஏர்போர்ட்டில் மாட்டிக்கொண்ட போது இந்த அரகுறை மலையாளமும் கைகொடுக்கவில்லை. டக்கென்று தங்கமணி முழுகாம இருக்கிறார், மூன்று மாதம், இது பிரசவ லேகியப் பொடி என்று சரடு விட்டது வொர்க் அவுட் ஆகியது. "எந்தப் பொண்ட்டாட்டிய்யா பிரசவம்?" என்று சந்தேகப்படாமல் "எனக்கே இந்த விஷயம் இப்போத் தான் தெரியும்" என்று தங்கமணியும் சமத்தாக முகத்தை வைத்துக் கொண்டு கூட சேர்ந்து ஆக்ட் விட்டதில் ரசப் பொடி தப்பித்து நேற்று கூட வீட்டில் தக்காளி ரசம் பிரமாதமாக வந்தது.

திருநெல்வேலி மாவட்டம் நிறையவே மாறிவிட்டது. எங்க ஊரில் எல்லாரும் வீட்டை இடித்து புதுமாதிரியாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊரில் நக்கலுக்கு குறைச்சலே இல்லை. உள்ளாடை கடையில் "பத்து பனியன் ஜட்டி குடுப்பா" என்றால் "என்ன சார் துபாயா அமெரிக்காவா " என்று கேட்கிறார்கள். "ஏன் உள்ளூர்ல ஒருதனும் போடறதில்லையா..பனியன் ஜட்டியெல்லாம் எக்ஸ்போர்ட்டுக்கு ஒதுக்கிட்டு எல்லாரும் லங்கோட்டுக்கு மாறிட்டாங்களா?"ன்னு பதிலுக்கு கேட்டால் " நாஙகளெல்லாம் ரெண்ட வாங்கி ரொட்டேஷன்ல விடுவோம்...ஜட்டி விக்கிற விலைக்கு உங்கள மாதிரி பத்து இருபதுன்னு ஹோல்சேல்ல வாங்க மாட்டோம்" என்று அங்காலய்த்தார் விற்பனையாளர். சரிதான் இவன் தங்கமணிக்கு மேல இருப்பான் போல இவன் கிட்ட வாயக் குடுத்து வாங்கிக்கொள்ளக்கூடாது என்று சத்தம் போடாமல் வாங்கி வந்துவிட்டேன்.

நம்ம யோகம், எல்லாம் வாங்கி முடித்த அடுத்த நாள் போத்தீஸில் ரெண்டு வைகிங் ஜட்டி வாங்கினால் ஒரு டின்னர் பவுல் ப்ரீ என்று போட்டிருந்தார்கள். நாம வாங்கின எண்ணிக்கைக்கு டின்னர் செட்டே சேர்த்திருலாமே என்று எனக்கு ஒரே வயத்தெரிச்சல். அவன் பேசின பேச்சுக்கு "பேசாம கலர் மேட்சிங்கா இல்லை" என்று திரும்பக் குடுத்து இத வாங்கிடலாமா என்ற எனது யோசனை என்னமோ தங்கமணிக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை தலையிலடித்துக் கொண்டார். ஹூம் சட்டிக்கு சட்டியுமாச்சு..ஜட்டிக்கு ஜட்டியுமாச்சு..என்று டயலாக் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் "இந்த ஆஃபரெல்லாம் ஒரு நாள் முன்னாடி போட மாட்டீர்களா" என்று போத்தீஸ்காரர்களை திட்டிவிட்டு "சட்டி சுட்டதடா...." பாட்டு பாடிக் கொண்டு வந்தேன்.

Thursday, September 14, 2006

பிலிப்ஸ், சூர்யா, ஜி.ஈ, விப்ரோ, ஓஸ்ராம்..

யாரப் பார்த்து என்ன வார்த்தை பேசற....இன்னும் எத்தனை வெள்ளைக்காரி நைட் அவுட் கேக்கறாங்க தெரியுமா? மார்க்கெட் வேல்யூ அப்பிடியே நிக்குது மா...இந்த தரம் ஊருக்குப் போயிருந்த போது கூட எத்தன மாமிகள் என்கிட்ட வந்து ஜாதகத்த கேட்டா தெரியுமா?

ஹ...ஜாதகம் கேட்டாளா...என்னான்னு..?...மாமா உங்காத்து பொண்ணோட ஜாதகம் கிடைக்குமான்னா?

இப்படியே மெகா சிரியல் மாதிரி பேசிக்கிட்டிரு...இந்த தரம் அய்யா டிசம்பர்ல ஊருக்கு தனியா போறேன்...எமிரேட்ஸ்ல புக் பண்ணப் போறேன்...ஏர்ஹோஸ்டஸெல்லாம் சும்மா மைதா மாவு மாதிரி சூப்பரா இருப்பா..ஒருத்திய அப்படியே தள்ளிக்கிட்டு வந்திடறேன்...அக்கா அக்கான்னு உனக்கும் கூட மாட உதவியா இருப்பா...

சான்ஸே இல்லை இதெல்லாம் சும்மா உதார் தான்னு எனக்குத் தெரியும்

அது!!!!...இந்த...இந்த..பதிபக்தி, புருஷன் மேல அசைக்க முடியாத நம்பிக்கை..இதுல தான் என்னை அப்பிடியே கவுத்தறமா ..தீர்க்க சுமங்கலியா இரு...

யோவ் செவாலியே...கொஞ்சம் அடங்கறது...இது உங்கமேல உள்ள நம்பிக்கை இல்லை...மைதா மாவு மேல உள்ள நம்பிக்கை...அவங்களெல்லாம் உங்களை திரும்பி பார்த்து பேசி...வந்ந்ந்துட்டாலும்.. ஹூம்..ஏதோ விதி என் கண்ணை மறைச்சு...ஹ்ரிதிக்கோட போறாத நேரம்...இங்க வந்து குப்பை கொட்டறேன். நுள்ளிக்கிட்டு வறேன்...தள்ளிக்கிட்டு வறேன்னு...பார்த்து...அப்புறம் ப்ளைன்லேர்ந்து தள்ளி விட்டுற போறாங்க.


***
பி.கு: தலைப்பு --> பல்புகள் பலவிதம் :(

Wednesday, August 30, 2006

பம்பாய்

பம்பாய் என்றால் எனக்கு காலேஜ் படிக்கும் காலத்தில் மனீஷா கொய்ராலா தான் நியாபகத்துக்கு வருவார். அப்புறம் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வந்ததபோது (பம்பாயை) பயம், ஆச்சரியம், திகைப்பு, குதூகலம் எல்லாம் கலந்த கலவையான உணர்ச்சி தான் வந்தது. பம்பாய் இன்னமும் அதே மாயா லோகமாகத் தான் இருக்கிறது. நம் ஊர்களில் கக்கூஸ் கட்டக் கூட போதுமா என்று யோசிக்கும் இடத்தில், அட்டாச்ட் பாத்ரூமுடன் ஹால் கட்டி குடித்தனம் போய், கையை தட்டிக்கொண்டு பஜனை செய்து தீபாராதனை காட்டி பிரசாதம் குடுக்கிறார்கள். என்ன தான் விண்ணை முட்டும் கட்டிடங்கள், சிக்கனமாக உடையணிந்த பெண்கள், சீட்டுக் கட்டு மாதிரி பணம் புரளும் இடமாயிருந்தாலும் ஓரமாய் சாக்கடையும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

பம்பாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாய் இருக்கிறது. பள பளவென்று எந்த நாட்டிலும் பார்க்காத சர்வீஸுட்ன் பட்டயக் கிளப்புகிறார்கள். இமிகிரேஷன் கவுண்டரில் நிற்கும் போதே எங்கேயிருக்கிறது என்று தெரியாத கேமிராவால் படம் பிடித்துவிடுகிறார்கள். எனக்கு பயங்கர பெருமிதம். பின்னால் நின்று கொண்டிருந்த வெள்ளக்கார மொட்டைய தலையில் தட்டி "டேய் மொட்டை பார்த்தியா எங்க ஊர?" என்று சொல்லவேண்டும் போல இருந்தது. "சூப்பர் சர்வீஸ்..கலக்குறீங்க " என்று ஆபிஸர்களிடம் பாராட்டிவிட்டு வந்தேன்.

தங்கமணி முன்னால் ஆட்டோகாரரிடம் தெரிந்த அரைகுறை ஹிந்தியை வைத்துக் கொண்டு பந்தா விட்டதில் கடுப்பாகிவிட்டார் மனுஷன். கடைசியில் எவ்வளவாச்சு என்று சூப்பர் பந்தாவாக கேட்க இருபத்தெட்டு ரூபாய்க்கு ஹிந்தியில் ஏதோ சொன்னார். எனக்கு படிக்கும் போது ஹிந்தி மாமி சொல்லிக்கொடுத்ததெல்லாம் மறந்து போய், மாதுரி தீட்ஷித் "ஏக் தோ தீன்" பாட்டில் சொல்லிக்கொடுத்த பதிமூன்று வரை தான் மண்டையில் நின்றது. அப்புறம் கேவலமாக சமாளித்து அதுவும் வழக்கம் போல் ப்ளாப் ஆகி ஹிந்தியில் "அற்பப் பதரே" எப்படி சொல்வாரகள் என்று தெரிந்து கொண்டுவந்தேன்.

அக்கா பையன் "ஞாயிற்றுக் கிழமைகளில் ட்ரெயினில் கூட்டமே இருக்காது படுத்துக் கொண்டு போகலாம்" என்று சொன்னதை நம்பி ஏமாந்து எலெக்ட்ரிக் ட்ரெயினில் சி.எஸ்.டி போய் ரோட்டுக் கடைகளைப் பார்த்து வந்தேன். ட்ரெயினில் வடநாட்டு கதாநாயகி மாதிரி என்னை கசக்கி பிழிந்துவிட்டார்கள். அரைகுறை ஹிந்தியில் ரோட்டோர டி.வி.டி கடைகளில் வாங்கிய அனுபவம் அலாதியானது. முக்கால் வாசி கடையில் பர்மா பஜார் மாதிரி 'அத வாங்கிக்கோ இத வாங்கிக்கோ என்று ஒரே படுத்தல். ஒரு கடையில் மிக்கி மவுஸ் கலெக்க்ஷனை வாங்கி செல்லும் படி ரொம்பப் படுத்த "இந்தக் கலெக்க்ஷன் எங்க வீட்டுல நிறைய இருக்கு " என்று அக்கா பையன் அழகாக சமாளித்துவிட்டான். நான் தான் கற்பூரமாச்சே உடனே அதே டெக்னிக்கைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நமக்கு என்று வந்து சேர்வார்களே..அடுத்த கடையில் ஒரு மூதேவி என்னைப் பார்த்து என்ன நினைத்தானோ தெரியவில்லை குசுகுசுவென்று அதுவேண்டுமா இது வேண்டுமா என்று புரியாத ஸ்லாங்கில் கேட்டான். நானும் மிக்கி மவுஸ் தான் என்று நினைத்துக் கொண்டு வழக்கம் போல "அந்த கலெக்க்ஷன் எல்லாம் நிறைய இருக்குப்பா..பார்த்துப் பார்த்து போர் அடிச்சாச்சு" என்று மானே தேனே போட்டு சொல்ல...கடைக்காரனும் அக்கா பையனும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த மூதேவி உடையில்லாமல் நடிக்கும் முழு நீல வண்ணப்படம் வேண்டுமா என்று கேட்டானாம். "போங்கடா நீங்களும் உங்க ஹிந்தியும்" என்று வந்துவிடேன்.

பாவ் பாஜி, பேல் பூரி, ரகடா பேட்டிஸ், சிக்கு மில்க் ஷேக் என்று சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்கியதில் கார்க் புடுங்கிக் கொள்ளும் படலம் பம்பாயிலிருந்து ஆரம்பித்தது. மழைவேறு. பம்பாயே மிதக்கிற மாதிரி இருந்தது. அதிலும் "சலோ பாய், சலோ பாய்" என்று மும்பைகர்கள் ஓடத் தான் செய்கிறார்கள். வேகமாக ஹிந்தி பேசுகிறார்கள். "ஹிந்தி தெரியாது" என்றால் இன்னும் அதிவேகமாக ஹிந்தியில் பேசுகிறார்கள். பம்பாயில் விலைவாசி எகிறிவிட்டது என்று தோன்றியது. ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கு வாழ்நாளில் இதுவரை குடித்திராத அருமையான டீ கொடுத்தார்கள்.

வரும் போது இரண்டு நாள் ஹோட்டல் வாசம். வேளா வேளைக்கு ஏசியைப் போட்டுக்கொண்டு தூங்குவது. சாப்பாடு, டிபன் என்று மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்வது. இருக்கிற இடத்தை விட்டு நகராமல் சாப்பிடுவது, போர் அடித்தால் ஊர் சுற்றுவது என்று திவ்யமாக நேரம் போனதே தெரியவில்லை. வழக்கமாய் அங்காலாய்க்கும் "பேசாமல் நல்ல ஏரோப்பிளேன் கம்பெனி முதலாளி பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்கலாம்" என்ற டயலாக்கில் ஏரோப்பிளேன் காரனை தூக்கி விட்டு ஹோட்டல்காரன் பொண்ணுக்கு மாறிவிட்டேன். தங்கமணியும் " கடவுளே அடுத்த ஜென்மத்தில் ஏரோப்ப்ளேன்காரன் பொண்ணா மட்டும் பிறக்கக் கூடாது" என்ற டயலாக்கை ஹோட்டல்காரனுக்கு மாற்றிவிட்டார்.