Sunday, March 21, 2010

த்வனி - மில்ட்டன் கீன்ஸ்

Update - நிகழ்சியில் முக்கிய மாற்றம்...விசா பிரச்சனைகளால் ரஞ்சனி காயத்ரிக்கு பதிலாக சஞ்சய் சுப்ரமண்யம் கச்சேரி மாற்றம். அத்தோடு ஜோத்ஸ்னா ஸ்ரீகாந் அவர்களின் கச்சேரியும் கூடுதலாக ஏற்பாடாகி இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு படத்தை க்ளிக்கவும்.
 
சில நிகழ்ச்சிகள் நடத்தும் அழகுக்கே பார்க்கப் போகலாம். மில்டன் கீன்ஸ் த்வனி நண்பர் குழு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அழகாக நடத்திவருகிறார்கள் என்று கேள்வி. (போன முறை செல்ல முடியவில்லை). நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் அலாதியானது என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். யூ.கேவில் இருக்கும் விருப்பமுள்ள நண்பர்கள் நண்மைக்காகவும்...இப்படியாவது அவர்களில் பி.ஆர்.ஓவாக ஒட்டிக் கொண்டு ஓசி டிக்கெட்டுக்கு அடியப் போடமுடியுமா என்ற முயற்ச்சிக்காகவும் பதிவிடுகிறேன். படத்தை க்ளிக்கினால் அவர்களின் நம்பர் கிட்டும். கிட்டாவிட்டால் திட்டாமல் நம்பள்கீ காண்டாக்ட் செய்றான், சேட் டிக்கெட்கீ ஏற்பாடு செய்யறான்..



Saturday, March 13, 2010

சுவாமிஜியும் மாமிஜியும் - திரை விமர்சனம்

திரைப்படங்களைப் பொறுத்த வரையில் சில படங்கள் பார்த்த மாத்திரத்திலேயே "என்ன படம் எடுத்திருக்காங்க வெங்காயம்"ன்னு காறித் துப்பத் தோன்றும், சில படங்கள் பார்த்தவுடனேயே மனதுக்கு பிடித்து "சூப்பரா எடுத்திருக்கான்பா"ன்னு மெச்சத் தோன்றும். இன்னும் சில படங்கள் பார்த்த அடுத்த அரை மணிநேரத்திற்கு எந்த வார்த்தையும் பேசத் தோன்றாது அதன் தாக்கத்தில் அப்படியே நம்மை வீழ்த்திவிடும்.

சமீபத்தில் சன்-நக்கீரன் கோ-டிஸ்ட்ரிபியூஷனில் வெளியாகி கலக்கோ கலகென்று கலக்கி கல்லாவிலும், சில பேர் மனதில் நெருப்பையும் அள்ளிக் கொட்டியிருக்கும் சுவாமிஜியும் மாமிஜியும் காவியம் இதில் மூன்றாம் வகை (அட்லீஸ்ட் என்வரையில் :) ). படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் மீள வில்லை. படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. டெக்னிகல் எக்ஸலன்ஸ் என்று ஹாலிவுட் துரைமார்கள் நாக்கை சுழட்டி சொல்லும் தொழில் நுட்ப மேலான்மையும் அவ்வளவாக இல்ல, பெரிய செட்டு, ஆர்ட் என்று அதுவும் ரொம்ப இல்லை. முதலில் கொஞ்சம் அதிகமாக இருக்கும் காஸ்டியூம்ஸும் கூட போக போக துண்டக் காணும் துணியக் காணும் என்று குறைந்து அதுவும் அதிகமாக இல்லை - இப்படி எத்தனையோ இல்லை இல்லாமல் இருந்தாலும் படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை.

நியோரியலிஸம் ஜெனரில் நேச்சுரல் லைட்டிங் வகையாறாவில் படம் நெடுக படமாக்கப் பட்டிருக்கிறது. கேமிரா செவ்வன கடமையாற்றியிருக்கிறது. படமாக்கப்பட்ட விதம் சுமார் தான் என்றாலும் கேமிரா யுக்த்திகள் ஹாலிவுட் ரேஞ்சிற்க்கு இருப்பது பிரமிக்க வைக்கிறது. நடிகர்கள் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். அதுவும் சுவாமிஜி ஒருவிதமான கிறக்கமான சிரிப்பில் மாமிஜியை கொஞ்சும் போது அவருடைய நடிப்புத் திறமையில் பார்ப்பவர் நெஞ்சை கொள்ளை கொண்டு போகிறார். குறிப்பிட்டு ஒரு காட்சியை சொல்லவேண்டுமானால்...சுவாமிஜி கடமையாற்றுவதற்கு முன் "ஜிங்ங்" என்று காலை மேலே தூக்கி ஒரு குதி குதித்து எழும்புகிறார் பாருங்கள்...அடடா என்னவென்று சொல்லுவது. சுவாமிஜி யோகாவில் விற்பன்னர் என்று இந்த ஒரு காட்சியில் டைரக்டர் பொடி வைத்து நமக்கு சேதி சொல்லுகிறார்.

அதே காட்சியில் சுவாமிஜி காவிக்கு மேட்சாக கோடு போட்ட வெள்ளை கலர் ஜெட்டியணிந்து தமிழ் சினிமாவில் நெடுங்காலம் இருந்து வந்த "லங்கோடு" க்ளீஷேவை கிழித்து தொங்கப் போட்டுவிடுகிறார். மிக ரசனையாக காஸ்டியூம் தேர்ந்தெடுத்த காஸ்டியூம் டிசைனருக்கு இந்த ஒரு காட்சிக்காகவே ஒரு ஷொட்டு.

இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த காவியத்தில் குறைகளே இல்லையா என்று கேட்டால் ஏன் இல்லை. போஸ்ட் ப்ரொடக்க்ஷனில் சேர்த்திருக்கும் வாய்ஸ் ஓவர் சுத்தமாக ஒத்து வரவில்லை. சுவாமிஜி வருகிறார்...வருகிறார் வந்துவிட்டார். மாமிஜி தண்ணி எடுக்கிறார், எடுத்துவிட்டார். கூஜாவை திறக்கிறார் திறந்துவிட்டார் என்று கிரிக்கெட் கமெண்டரி போல உயிரை வாங்கும் சுரத்தே இல்லாத வர்ணனைனையால் படத்தோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. ஒரு விஷுவல் மீடியாவில் இவ்வளவு புளி போட்டு விளக்கவேண்டிய கட்டாயமென்ன? பிண்ணனி இசையை என்னவென்று சொல்லுவது... இடம் என்ன பொருள் என்ன காட்சி என்ன ஃபீலிங் என்ன என்று தெரிந்து மீசிக் போடவேண்டாமா....சும்மா எல்லாத்துக்கும் டைங் டைங்ன்னு பயமுறுத்துகிற மீசிக் போட்டு நிம்மதியாய் படம் பார்க்க விட மாட்டேன்கிறார் மீசிக் டைரக்டர்.

இருந்தாலும் இந்தப் படம் மொழி, கலாச்சாரம் தாண்டி இன்டர்நேனஷனல் சென்சேஷனாகி இருப்பது நம்முர் திறமையை பறைசாற்றுகிறது. தெலுங்கு, மலையாளம் ,கன்னடா மற்றும் “சுவாமிஜி அவுர் மாமிஜி” ஹிந்தி டப் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் இதே படத்தை, எதாவது காட்சியை மாற்றி இருக்கிறார்களா என்று கன்பர்ம் செய்து கொள்ளதற்காக பார்த்தேன்..சீன் பை சீன் அப்படியே எடுத்திருக்கிறார்கள். நக்கீரனில் ஹை டெபனிஷனில் ரிலீஸ் செய்திருக்கிறார்களாம். வருடாந்திர சந்தா கேட்டதால் ஹை டெபனிஷன் பிடிக்காமல் ரெண்டுங்கெட்டான் டபனிஷனிலேயே பார்த்துத் தொலைய வேண்டியிருந்தது. ஆனாலும் நிக்கிறான்ல தமிழன்...யாருகிட்ட நம்ம கிட்டயேவா..

Sunday, February 28, 2010

வித்துவான்

எஸ்.பி.பியின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சி பார்க்கும் போதெல்லாம் வயத்தெரிச்சலாய் இருக்கும். நானும் பெரிய வித்துவான் ஆகி இருக்கவேண்டியவன். சில பல துரதிஷ்டங்களால் முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் பாடுவதை மட்டும் இன்றளவில் விட்டதே கிடையாது. சந்தோஷமாய் இருக்கும் போது தனியாக ரூமில் பாடுவேன். சில சமயம் கலையுணர்வு மிஞ்சி காலை ஒன்பதேகாலில் இருந்து ஒன்பதரை வரை நாலு மணி நேரம் அசுர சாதகம் பண்ணுவேன். ஆனால் என்னோட வீக் பாயிண்டே எந்தப் பாட்டானாலும் முதல் வரி மட்டுமே வார்த்தைகள் கரெக்ட்டாய் வரும். அடுத்த வரியிலிருந்து கொஞ்சம் மானே தேனே பொன்மானே வந்துவிடும்...இந்த சின்ன சறுக்கல் மட்டும் இல்லாவிட்டால் பெரிய வித்துவானாகி இருக்கவேண்டியவன் ஹூம்...

நான் பாட ஆரம்பித்த அறுபத்தி எழாவது வினாடி தங்கமணி "பூனையை காப்பாத்துங்க பூனையை காப்பாத்துங்க"ன்னு அலறிக் கொண்டு வருவார். என்ன பூனை...எங்க...ஏன் காப்பாத்த வேண்டும் ஹ... கேட்கவே மாட்டேனே. "இங்க யாரோ பூனையை கழுத்த நெரித்து, அது கதறுவது மாதிரி இருந்தது...அதான் ஓடோடி வந்தேன்..." என்று கேட்காவிட்டாலும் அவராகவே ஒரு விளக்கமளிப்பார். "இனிமே பாட்டு பாடினா நான் பாடறேன்னு அனௌன்ஸ் பண்ணிட்டு பாடுங்கோ...என்ன ஏதுன்னு தெரியாமல் நாங்களெல்லாம் பதற வேண்டியிருக்கு"ன்னு ஆதங்கப் படுவார். இங்க நான் என்ன ஆல் இந்தியா ரேடியோல அனௌன்ஸ் பண்றதுக்கா சாதகம் பண்றேன்...ஒரு வித்துவானோட பீலிங்ஸை புரிந்துகொள்வே மாட்டார்.

எல்லாம் கொஞ்ச நாள் தான். ஒரு தரம் நாள் சாதகம் பண்ணும் போது இந்த வித்துவானுக்கே தெரியாமல் அதை ரெக்கார்ட் செய்து என்ன ஏதுன்னு சொல்லாமல் வாக்மேனில் என்னை கேட்க விட்டு, அப்புறம் நான் பூனைய காப்பாத்துங்க பூனைய காப்பாத்துங்கன்னு பதறி, சங்கீத வித்துவான் ஆசையை விட்டுவிட்டேன். விட்டுவிட்டேன் என்றால் முழுதாக எல்லாம் இல்லை. அந்த மாதிரி கெட்ட பழக்கம் எங்க குடும்பத்திலேயே கிடையாது. ஐ.ஐ.டிக்கு ஆசைப் பட்டு சேர முடியாவிட்டாலும்.. கஷ்டப்பட்டு என்ட்ரன்ஸ் எழுதி என்.ஐ.ஐ.டியிலாவது சேர்ந்துவிடுவோம். சங்கீத வித்துவான் ஆக முடியாவிட்டாலும் பூனை மேட்டருக்கப்புறம் நாம ஏன் ஒரு மிமிக்கிரி வித்துவான் ஆகக் கூடாது என்று குறிக்கோளை மாத்திவிட்டேன். ஊரில் நான் காலேஜ் படிக்கும் போது மிம்க்ரி பண்ணப் போறேன்னா, "முந்தினனா ராத்திரியே நல்லா ஊற வைச்சுடு...அப்போதான் அரைக்கும் போது பதமா வரும்"ங்கிற ரேஞ்சுக்குத் தான் மிமிக்ரியைப் பத்தி தெரியும். ஒருத்தரும் இல்லாத ஊர்ல கம்பு நட்டவன் தான் ராஜான்னு ஊர்ல மிமிக்ரில கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் போட்டிருந்தேன்."அடக்கம் அமரருள்...etc etc" திருவள்ளுவர் நமக்கா சொல்லி இருக்கிறார்?

முன் ஒரு நாளில் "செந்தாழம் பூவில்"-ஜேசுதாஸ் ஆரம்ப ஹம்மிங்கை எப்படியாவது அலேக்காய் பிடித்து ரிப்பீட் அப்ளாஸ் வாங்கிவிட வேண்டும் என்று அசுர சாதகம் கொண்டிருந்த போது, தங்கமணி "ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாய் சோத்துக்கு ஊளையிடுவது மாதிரி இருக்கு தாங்கமுடியலை" என்று என்கரேஜிங்காய் பீட்பேக் குடுத்திருந்தார். அதனால் முதலில் நாயில் இருந்து மிமிக்கிரி ப்ராக்டீஸை ஆரம்பிக்கலாம் என்று நண்பர்களிடம் ஐடியா கேட்டது தப்பாய் போய்விட்டது. இந்த உலகம் இருக்கே உலகம்... ரொம்ப போட்டியும் பொறாமையும் நிறைந்தது. நான் பாட்டுக்கு நாய் பூனைன்னு சாதகம் செய்து கொண்டிருந்தால் இன்னொரு நண்பர் 'சில்க் ஸ்மித்தா' வீட்டு நாய் நமீதா விட்டு பூனைன்னு கான்செப்டை இம்பரவைஸ் செய்து கைதட்டை வாங்கிக் கொண்டுப் போய்விட்டார். அப்புறம் "தம்பீ இங்க வா..தொழில்ல போட்டி இருக்கலாம் பொறாமை இருக்க கூடாது"ன்னு அவரை கூப்பிட்டு சமாதானக் கூட்டம் போட்டு ‘சில்க் சுமிதா’ வீட்டு நாய் அவருக்கும், ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாய் எனக்குமாய் பங்கு போட்டுக் கொண்டோம். ஆனாலும் மனிதர்களுக்கு சினிமா மோகம் ஜாஸ்தி சார்... ஐய்யோ பாவம் ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாயாச்சேன்னு கொஞ்சம் கைத்தட்ட வேண்டாமோ... ம்ஹூம் சினிமா மோகத்தில் சிதறுண்டு சிக்கியிருக்கிறான் தமிழன்னு சும்மாவா சொல்லியிருக்கார் டாக்டர்.

ஒருதரம் மிஸ்கால்குலேஷன் ஆகி தொடர்ச்சியாய் ரெண்டு நாள் குளித்தது, உடம்புக்கு ஆகாமல் தொண்டை கட்டிக்கொண்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் குரல் தெளிவு பெற இரண்டு வாரங்கள் பிடித்தது. "கடவுள் ஒரு பிகர் வீட்டு ஜன்னலை மூடினால் இன்னொரு லேடீஸ் ஹாஸ்டல் கதவை திறப்பார்"ன்னு முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? நம்ம கம்மின குரலின் ஜியாக்ரபி தெரியாமல்..."அடேங்கப்பா...அப்படியே கலைஞர் மாதிரி பேசறீங்களே...நீங்க மட்டும் போன்ல பேசினா உடனே டி.வி பொட்டிய எடுத்து என் கைல குடுத்திடுவா"ன்னு ஒரு நண்பர் அள்ளி விட, அதுவரை சற்று தூங்கிக் கொண்டிருந்த மிமிக்கிரி வித்துவான் முழித்துக் கொண்டுவிட்டார். அப்புறம் கலைஞர், வீரபாண்டிய கட்டபொம்மன், டைனோசர், வெக்கம் கெட்ட கழுதை என்று வெரைட்டியாய் - மிரட்டலாய் மிமிக்கிரி வித்துவான் ப்ராக்டீஸை ஆரம்பித்தேன்.

ஆனால் தங்கமணிக்கு இதெல்லாம் துளியும் பிடிக்கவில்லை. கொஞ்சம் குரலை ட்யுன் செய்ய அவர் உதவியை நாட வேண்டி இருந்தது. "இந்த இழவுக்கு உங்க பாட்டு வித்துவான் பேராசையே எவ்வளவோ பரவாயில்லை, டைனோசர் குரலுக்கு புளிச்ச மோரைக் கொண்டா தோசமாவ கொண்டான்னு என் உசிரு போகிறது. உங்க சாதகத்தால பக்கத்து வீட்டுக்காரன் கூடிய சீக்கிரம் கவுன்சில்ல கம்ப்ளெயின்ட் குடுக்கப் போறான் "ன்னு ரொம்ப சலித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். அவர் சலித்துக் கொண்டதாலோ இல்லை நம்ம பெர்பார்மன்ஸ் கண்திருஷ்டியிலோ என்னம்மோ, பெப்பரப்பேன்னு திறந்திருந்த தொண்டை திரும்பவும் அடைத்துக் கொண்டு குரலுக்கு பதிலாய் வெறும் காத்து மட்டுமே வர ஆரம்பித்தது. (சனிக்கிழமை மட்டும் நீராடுன்னு பெரியவங்க சொன்னத கேட்காததால் வந்த பிரச்சனை)


தங்கமணியோட சித்தப்பாவோட பெரியம்மாவோட மாமியோட நாத்தனார் ஒருவர் "கொதிக்கிற வெந்நீர்ல சொட்டு தேனோட இந்தப் பொடிய ரெண்டு ஸ்பூன் நன்னா கலக்கி குடு, நம்ம பாபநாசம் டேம் மதகு மாதிரி தொண்டை தானா திறந்துடும்" என்று அக்ஸ்தியரோட பேத்தி மாதிரி சித்த வைத்தியப் பொடி ஒன்றை குடுத்தார். தங்கமணி 'மனாளனே மங்கையின் பாக்கியம்' என்று யாரோவோட நாத்தனார் சொன்ன ரெண்டு ஸ்பூனுக்கு பதிலாக நாலு ஸ்பூன் ‘நன்னா’ கலக்கி., அதை குடித்துவிட்டு எனக்கு வாயோடு வயத்தோடு கலக்கி, கணீரென்று இருந்த வித்துவான் குரல் மக்கி துருப் பிடித்த பித்தளைப் பாத்திரத்தை தேங்காய் நார் வைத்து தேய்க்கும் சத்தம் மாதிரி மாறி விட்டது. அத்தோடு மிமிக்கிரி வித்துவான் ஆசையும் கானல் நீரானது. "இதுக்குத் தான் எங்காத்துக்காராளோடு வம்பு வெசுக்காதீங்கோ"ன்னு தங்கமணி பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தாலும் எனக்கென்னம்மோ தங்கமணி மருந்துப் பொடி டப்பாவில் சீயக்காய் பொடியை கன்ப்யூஸ் செய்திருப்பாரோ என்ற பயங்கர சந்தேகம் இன்றளவில் இருக்கிறது.

இருக்கட்டும் இருக்கட்டும் ஒரு நாள் எப்படியாவது எதிலாவது வித்துவானாகிவிடுவேன் சார்.

Monday, February 22, 2010

தி புக் ஆஃப் ஈலை


The Book of Eli


சில படங்கள் ட்ரையலர் பார்த்தவுடனே எப்ப படத்தை ரிலீஸ் பண்ணப் போறாங்கன்னு அரிக்க ஆரம்பித்துவிடும். இந்தப் படம் ட்ரயலரில் மிரட்டு மிரட்டுன்னு மிரட்டி இருந்தார்கள். டென்சல் வாஷிங்டனும், பட்த்தின் செபியா டோன் கலர் க்ரேடிங்கும், கண்ணில் ஒத்திக் கொள்ளும் படியான சினிமாடோகிராபியும் "சீக்கிரம் படத்த ரிலீஸ் பண்ணுங்கடா"ன்னு ஆர்வத்தை அதீதமாக தூண்டி இருந்தது.

கதையின் அவுட்லைன் இருப்பதால் தெரிய வேண்டாதவர்கள் இங்கேயே நிறுத்திக் கொள்ளவும். நியூக்கிள்யர் யுத்தற்கு பிறகு புல் பூண்டு கூட இல்லாமல் சீரழிந்து தண்ணிக்கு கூட கொலை வெறியோடு அலையும் ஒரு அபோக்ளிப்டிக் அமெரிக்காவில் டென்சல் வாஷிங்டன் லொங்கு லொங்கென்று முதுகு பையில் ஒரு புஸ்தகத்தை வைத்துக் கொண்டு அலைகிறார். அடுத்த வேளை சோத்துக்கே வழி இல்லாம இருக்கிற பஞ்சத்துக்கு அடிபட்ட ரவுடி கூட்டத்திலேர்ந்து படத்தில் வருகிற பத்துக்கு ஏழு பேர் இந்த என்னம்மோ இந்த புஸ்தகத்தை வைத்து தான் புள்ளக் குட்டிய படிக்க வைக்கப் போகிற மாதிரி இந்த புஸ்தகத்துக்கு அடி போடுகிறார்கள், டென்சலின் கையால் அடி படுகிறார்கள். புஸ்தகம் என்னாச்சு, டென்சல் போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்தாரா என்பதோடு கதை முடிகிறது.

படம் நெடுக இரண்டே விதமான காட்சிகள். ஒன்று வறண்ட அத்துவான காட்டில் பாலைவனமாய் காட்சியளிக்கும் ஒரு ரோட்டில் சண்டை போடுகிறார்கள், இல்லை தடவி தடவி அடியெடுத்து வைக்கும் இருட்டில் கொழ கொழவென்று பேசுகிறார்கள். சப்டைட்டில் இல்லாமல் சில இடங்களில் நாமும் தெவெங்க வேண்டியிருக்கிறது. ஒரு பெண்ணும் டென்சலும் ஒரு காட்சியில் ஒரே அறையில் வேறு. அந்தப் பெண் கதவை மூடி விட்டு வருகிறது. அடடா ஒன்னுமே தெரியலையே ஒரே இருட்டா இருக்கே, கிறுக்குப்பயலுங்க மூஞ்சில மட்டும் லேசா லைட்டிங் குடுத்திருக்காங்களேன்னு நமக்கு பிரஷர் ஏறும் போது, வயற்றில் பாலை வார்க்கும் வண்ணம் டென்சல் அந்தப் பெண்ணை "போய் சமத்தா படுத்துக்கோ எதா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்"ன்னு அனுப்பி விடுகிறார். அடத் தூ இதுக்கு இந்த லைட்டிங்கே அதிகம்ன்னு நமக்கும் நிம்மதி பிறக்கிறது.

நிற்க படத்தில் டெக்னிகல் சமாச்சரங்கள் மிகப் பிரமாதமாய் இருக்கின்றன. சினிமேட்டொகிராப்பி காட்சி அமைப்புகள் சூப்பராய் இருக்கின்றன. ஆனால் எனக்கு கதை என்னமோ ஓவர் பில்டபாய், கொஞ்சம் இழுவையாய் பட்டது. ஒன்றரை மணி நேர படத்துக்கு நாலு பாட்டு, அதுல ஒன்னு குத்து சாங், ரெண்டு பைட் என்று சப்பையாய் எதிர்பார்காவிட்டாலும் கதை சில இடங்களில் கொஞ்சம் பொறுமையை சோதிக்கிறது. படம் பிடித்திருக்கிறதா என்றால் படம் பிடிக்காமலில்லை என்று தான் சொல்லுவேன் எனக்கு இருந்த எதிர்பார்ப்பு பூர்தி ஆகாமல் வந்த ஏமாற்றத்தால் சிறிது பிடிக்காமல் இருக்கலாம், இது இல்லாமல் ஒரு வேளை உங்களுக்கும் பிடிக்கலாம். (தலீவா...இதெல்லாம் உங்கிட்டேர்ந்து வந்தது தலீவா...)

நிற்க சில சமயம் ஒரே விஷயங்கள் இரண்டு பேருக்கு ஒரே நேரத்தில் தோன்றலாம். சமீபத்தில் நம்ம கேபிள் சங்கர் எடுத்திருந்த ஒரு குறும் பட நாட் மற்றும் காட்சி அமைப்புடன் கூடிய ஒரு கதையை நான் வேறொரு களத்தில் அதே நாட்டுடன் எடுக்க இங்கே சில பேரிடம் டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தேன். நல்லவேளை அதற்கு முன்னால் அவரின் அந்த படைப்பை பார்த்தால் ஒரு வாழ்த்துடன் மேட்டர் முடிந்துவிட்டது. சமீபத்தில் தமிழில் வந்த ஒரு படம் போர்க்களம். அதன் லைட்டிங் மற்றும் கலர் க்ரேடிங் மற்றும் ஒரு முக்கியமான நாட் இந்த புக் ஆஃப் ஈலை படத்திலும் இருக்கிறது. நல்லவேளை அந்தப் படம் இது வருவதற்கு முன்னால் வந்து விட்டது. இல்லை என்றால் போர்க்களம் இந்தப் படத்தின் தழுவல் வழுவல் என்று ஏதாவது பீதியைக் கிளப்பி இருப்பார்கள். ஆனால் என்னைப் பொறுத்த வரை போர்க்களத்தில் அந்த நாட்டை நன்றாக எக்ஸ்சிக்யூட் செய்திருப்பார் டைரக்டர் பண்டி சரோஜ்குமார். புக் ஆப் ஈலையில் அந்த மேட்டர் முக்கிய நாட் இல்லை என்பதால் அது அவ்வளவு அழுத்தமாக சொல்லப் படவில்லை.

சில படங்களை பார்த்துவிட்டு IMDB-ல் போய் பார்த்தால் நிறைய விஷயங்கள் புரியும். இந்தப் படமும் அதே அதே.