Tuesday, October 01, 2013

அம்மாவாசை

நிறைய நாட்கள் இங்கே எழுதவில்லை. இருந்த போதும் இங்கே வந்து பார்த்து நினைவூட்டி,  மிரட்டிய உங்களின் அன்பிற்கு கோடானு கோடி நன்றி, இதயப் பூர்வமாய் மன்னிப்பும் கோருகிறேன். வராததற்கு காரணங்கள் நிறைய (சொல்லமுடிபவை கொஞ்சம் :) ) இந்த மாதிரியான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எழுத ஆரம்பிப்பது நின்று போன புல்டோசரை தள்ளி ஸ்டார்ட் செய்வது மாதிரி. தள்ள ஆரம்பித்திருக்கிறேன் பார்ப்போம் :)

போன மாதம் இந்தியா பயணம் இனிதே முடிந்து திரும்பினோம். சில முக்கியமான காரணங்களுக்காக இந்தியா பயணம் என்பதால் சென்னையில் நண்பர்களை சந்திக்க முடியாமல் போனது பெரிய வருத்தம். சென்னையில் இறங்கிய கையோடு அப்துல்லா அண்ணாச்சியை ஃபோனில் பிடித்த போது நாமக்கல்லில் பிசியாய் இருந்த்தார். சரி ஊருக்குப் போய்விட்டு திரும்ப வரும் போது எல்லாரையும் சந்திக்கலாம் என்று நினைத்தால் திரும்ப வந்த நான்கு நாட்களில் அங்கே இங்கே என்று அலைந்தே போய்விட்டது. இதில் ஜல்பு மற்றும் உடல் நலக் குறைவு வேறு. அப்துல்லா அண்ணாச்சி,அனன்யா, நர்மதா, தீக்‌ஷண்யா, சங்கரலிங்கம் அண்ணாச்சி மற்றும் நான் சந்திக்க நினைத்திருந்த/வாக்குறுதியளித்திருந்த ஏனையோரும் கோவிக்காதீர்கள் ப்ளீஸ் மன்னித்தருளவும்.

ஜெட் ஏர்வேஸ் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஃபிரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல் ஸ்கர்டில் 2004 வரை வலம் வந்த பைங்கிளிகளெல்லாம் தற்போது ஆவாரா ஹூன் ராஜ் கபூர் மாதிரி தொள தொளாவென்று கால்சராய் அணிந்து சும்மா கிழக்கும் மேற்கும் நடந்து கொண்டு டீ வேணுமா, சூஸ் வேணுமா என்று கேட்கிறார்கள். "ஹூ இஸ் தேட் டிஸ்டர்பர்ன்ஸ்" என்று தூக்கம் தான் வருகிறது. வாஸ்துபடி என்னை 25டி சீட்டிற்குப் பக்கத்தில் உட்காரச் சொல்லியிருக்கிறார்கள் என்று கேட்டுப் பார்த்தேன். டாஸ்மார்க்கில் வேலைப் பார்ப்பது மாதிரி சாரி சார், புல் என்று சொல்லிவிட்டார்கள். அப்புறம் ஒரு போர்வையாவது குடுங்கம்மா என்று கேட்டு வாங்கிக் கொண்டு தூங்கியேவிட்டேன்.

நண்பர்களை சந்திக்க முடியாமல் போன தலையாய வருத்தத்திற்கு பிறகு அடுத்து வருவது  இப்போ வாங்கலாம் அப்போ வாங்கலாம் என்று எனது லிஸ்டில் ஒரு புத்தகம் கூட வாங்காமல் மகள்கள் 28 - 0 என்ற ஸ்கோரில் என்னைப் பார்த்து ஏளனமாய் சிரித்துக் கொண்டிருப்பது. மகள் வாங்கிய "The Alchemist"- ஐ கடன் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.

மும்பையில் இண்டர்நேஷனல் டெர்மினலலிருந்து டொமஸ்டிக் டெர்மினலுக்கு அழைத்து செல்லும் பேருந்தில் கூட்டம் அதிகமாகி இரண்டு குழந்தைகள் உட்கார்ந்திருந்த சீட்டில் போலீஸ்காரர் இன்னொரு குழந்தையை உட்காரவைக்க, அது என்.ஆர்.ஐ ஆக்சண்டுடன் இப்படி உட்கார்ந்தா போலிஸ் பிடிக்கமாட்டார்களா என்று அம்மாவைக் கேட்க, அந்த போலிஸ்காரரே இவர்தான்மா என்று அம்மா சொல்லாமல் காட்டிய ரியாக்‌ஷனை இந்த மாதிரி ஒரு பத்திக்கு இழுக்காமல் ராஜேந்திரக்குமார் “ஞே” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்திருப்பார்.

கோலம் போடுவது, பால் பாக்கெட் வாங்குவது, போன்றவற்றிற்கு மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலி, மற்ற நேரங்களுக்கு ஒரு தாலி என்று சென்னை மகளிர் தாலிக்கு ஷிப்ட் சிஸ்டம் அமுல் படுத்தியிருக்கிறார்கள்.

சரவண பவன் வைத்திருக்கும் ஐந்து ரூபாய் விலைகுறைப்பு போர்டு தவிர விலைவாசி எங்கும் குறைந்ததாகக் காணக் கிடைக்கவில்லை. முதல் நாள் குடுத்த ஸ்பெஷல் டீ நன்றாக இருக்கிறதே என்று அடுத்த நாள் குடித்தால் வாயில் வைக்க விளங்கவில்லை.

இந்த முறையும் சென்னையில் வாய்த்த ஆட்டோகாரர்கள் எல்லோருமே நல்லவர்களாக இருந்தார்கள். அதுவும் ஒரு ஆட்டோக்காரர் இரவு 10:45 மணிக்கு நான் தங்கமணியுடன் பேசிய உரையாடலை கவனித்து, வாங்க மறந்த மொபைல் சார்ஜருக்காக அவரே ஒரு கடை கண்டுபிடித்து வெயிட்டிங் செய்து ஒற்றை பைசா கூட அதிகம் வாங்க மறுத்த பண்பு மறக்க முடியாதது.

குத்தால துண்டை துப்பட்டா மாதிரி போர்த்திக் கொண்டு அதிகாலையிலும் சந்தி வேளையிலும் உலாத்தும் நைட்டி தேவதைகள் ஊர்ப் பக்கத்தில் இன்னும் மாறவே இல்லை.

மயிலை டேங்க் சரவணபவனில் டி.வி. செலிபிரிடீஸை நிறையக் காணக் கிடைக்கிறது. ஏனோ இந்த முறை இந்தியா ட்ரிப்பில் டேங்க் சரவணபவன் தவிர வேறு எந்த ஹோட்டலிலுமே சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.


இந்த முறை திகட்டத் திகட்ட சென்னை பல்லவனில் பயணம் செய்தேன். சென்னையில் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த வேலை நாட்கள் நியாபகம் வந்தது.


வீட்டில் இருக்கும் விஜய் பேஃன் நச்சரித்து தலைவாவை எக்ஸ்ப்ரெஸ் மால் சத்யமில் முதல் நாளே காணும் பாக்கியம் கிடைத்தது. விஜய் ஓப்பனிங் சீனிற்கு விசில் அடிப்பதற்கு பேரம் பேசி நூறு ரூபாய் மகளிடமிருந்து தேறியது. காண்ட்ராக்ட்டில் இல்லாத அமலா பால் ஓப்பனிங் சீனிற்கு காதைப் பிளக்கும் வண்ணம் நான் மட்டுமே விசில் அடித்தது மிகுந்த வருத்தமளித்தது. என்ன மாதிரி ஒரு சமூ....

இனிய தோழி சுபா பிரபாகருக்காக சேம்பர் ஆஃப் காமெர்ஸில் மதுரையில் கல்லூரி மாணவர்களுக்கு பேச ஆரம்பித்த மைக் மோகன் யோகம் அடுத்தடுத்து மூன்று வாய்ப்புகளாகி என்னடா இன்னுமா உன்ன இந்த ஊரு நம்புது என்ற உயரத்திற்குப் போய் நாலாவது வாய்ப்பாக மாறி அடுத்த முறை செய்கிறேன் ப்ளீஸ் என்று வாய்தாவாங்க வேண்டிய லெவலுக்குப் போய்விட்டது.

சுபா குடும்பத்தாரின் விருந்தோம்பல் மறக்கமுடியாதது. அவ்வளவு இனிமையான குடும்பம். ஃபோட்டோவ விட நேர்ல நீங்க ஹீரோ மாதிரி அழகா இருக்கீங்க சார் என்று பிரபாகர் மூன்று முறை தங்கமணி முன்னால் புகழ்ந்தது இந்த ட்ரிப்பின் ஹைலைட். அடடா மதுரையின் மாணிக்கம்ங்க அவர்.
முதன் முறையாய் ஆத்தெண்டிக் ஜிகர்தண்டா சுவைக்கும் பாக்கியம் இவர்களால் கிட்டியது.

ஊரில் குத்தால சீசன் ரம்மியமான தூறலும் காற்றுமாய் களை கட்டியது. ஸ்கூல் நண்பர்களின் மீட் குற்றாலத்தில் நடைபெற்றது. அப்படியே மகள்களுக்கு அருவியைக் காட்டி வரலாம் என்று பார்க்கப் போனால் அருவியைப் பார்பதற்கே இரண்டு நாட்கள் ஆகும் போல் அவ்வளவு கூட்டம்.

சென்னையில் கால் டேக்ஸி தரம் குறைந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். ட்ரைவர்களெல்லாம் ஆட்டோ ட்ரைவர் மாதிரி ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் புக் செய்யும் போது எங்க போறீங்க, யாரப் பார்க்க போறீங்க, என்ன வாங்கிட்டு போறீங்க என்று நோண்டு நோண்டுன்னு நோண்டி விட்டு போக வேண்டிய நேரத்தில் அதிகாலை நாலு மணிக்கு ட்ரைவர் கால் செய்து எங்கய்யா போனும் உனக்கு..? முதல்ல நீ எங்க இருக்க எங்கேர்ந்து போகனும் என்று எரிச்சல் படுகிறார். வருகிற ட்ரைவருக்கு புக் செய்த கஸ்டமர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற அடிப்படைத் தகவல் கூட போகாவிட்டால் அப்புறம் என்ன இதுக்கு புக் பண்ணும் போது வீட்டுப் பக்கத்து லேண்ட் மார்க் முதற்கொண்டு அவ்வளவு கேள்விகள் கேக்கறீங்க...?

மதுரைக்கு இந்தப் பக்கம் மதுரைக்கு அந்தப் பக்கம் என்று எஃப்.எம் ரேடியோவில் போடும் பாட்டுக்களின் ரகமே தனியாக இருக்கிறது. அதுவும் நெல்லை சூரியன் எஃப்.எம்.ல் கிராமிய மணம் மணக்க மணக்க மொட்டை ஆட்சி தான். இரவில் பொதிகை காற்றில் ராசாவின் பாட்டுக்களைக் கேட்டுக் கொண்டே காரில் பயணித்தது அடா அடா அடா

மயிலாப்பூரில் நிறைய தெருக்களில் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இருந்த குழி அப்படியே இருக்கிறது. இந்த வருடம் இருந்த ஒரே வித்தியாசம் அதில் யாரோ ஒரு கம்பு நட்டு சாயம் போன உள்பாவாடையை மற்றவர்களில் எச்சரிக்கைக்காக தொங்க விட்டிருக்கிறார்கள்.
மயிலை ஆழ்வார்பேட்டை ட்ராபிக் முழிபிதுங்குகிறது. வள்ளுவர் சிலையிலிருந்து இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னல் வரை மாலை ட்ராஃபிக்கில் கால் டாக்ஸியில் நகரமுடியாமல் அடி அடியாய் எடுத்து வைத்து கடைசியில் சென்றடைந்த இடத்தில் நூற்றைம்பது ரூபாய் எக்ஸ்ட்ரா தண்டம் அழுதேன்.


இருந்த இருபத்தைந்து நாட்களுக்குள் ஏதாவது மசோதா போட்டு மாத்தியிருக்கமாட்டார்களா என்ற நப்பாசையில் ப்ளைட் ஏறினால் வரும் போதும் ஜெட் ஏர்வேஸில் ஆவாரா ஹூன் தொள தொளா பேண்ட் தான். ஒரு சூஸு குடுமா என்று கேட்டு வாங்கிக் குடித்து விட்டு திரும்பவும் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கிவிட்டேன். இல்ல இல்ல இல்ல சொக்கா எனக்கில்லை

*********************************

அக்டோபர் மூன்றாம் திகதியுடன் டுபுக்குவிற்கு பத்து வயது பூர்த்தியாகிறது :)) உங்கள் அன்பையும் ஆதரவுவையும் என்றும் நாடும் - உங்கள் டுபுக்கு


24 comments:

Unknown said...

அட புது பதிவு ! மூணு மாசமா நாள் தவறாம வந்து அட்டென்டன்ஸ் போட்டு, 2 தடவை திட்டி, குட்டி, உங்களை எழுதச்சொல்லி நினைவு படுத்தினது வீண் போகவில்லை. பயம் இருக்கட்டும் :-)

இருந்தாலும் அடிக்கடி எழுதணும். 10 வருஷமாயிடுத்தேன்னு 'அசால்ட்டா' இருக்கற கதையெல்லாம் வேண்டாம் ஓகே ?

எங்கே உங்க அடிப்பொடிகளையெல்லாம் காணோம் ? எல்லாம் நான் நீன்னு போட்டி போடுவாங்களே முதல் ஆளா பின்னூட்டம் போட ?

நல்ல பதிவு உங்கள் வழக்கமான பாணியில். ப்ரிட்ஜுல வெச்ச ஆப்பிள் ஒடம்புக்கு ஆகாது, அதுவும் வயசான காலத்துல !

வெளி நாட்டுல இருந்து ஊருக்கு போறவங்களுக்கு எதெல்லாம் கண்ணில் படுமோ அதெல்லாம் உங்களுக்கும் !

//சென்னை மகளிர் தாலிக்கு ஷிப்ட் சிஸ்டம் அமுல் படுத்தியிருக்கிறார்கள// ROFL !

லக்ஷ்மி

இலவசக்கொத்தனார் said...

ம்ஹூம். குடுத்த புக்கைப் படிக்கலை!

சுசி said...

Happy birthday dubukku ! Namma oru auto man ellam romba nalavanga thaan, eppavume. Nice post !

Unknown said...

next time bharati call taxi try pannungoo..superb service.. mylai mamikal thaliya kappatha pona varushatha vida ippo evlavo improve airukka..

Anonymous said...

Ennathu kasi thundai duppatavaa potundu irukkaalaa !? gents yellam shorts ai potundu gramarajan maathiri olatharathellam ennavaam?

Nat Sriram said...

பத்து ஆண்டுகளா..வாழ்த்துக்கள் இன்ஸ்பிரேஷன் சார் ;)

Kavitha said...

Happy Anniversary! Idhudhan anniversary post-a?

Porkodi said...

inspiration am!!!! hahahah! meaning vayasayiduthu!!!!

Ramya said...

aiya... dubukkkaiya... en purusanukum innikidhaan porandha naaalu :) anyway have been enjoying ur blog without sound... will continue...

அறிவிலி said...

வாழ்த்துகள்... எஙகள் அன்பும் ஆதரவும் என்னிக்குமே உண்டு....

Anonymous said...

Welcome back dubukku!!
Hearty congrats for your 10th yr
BTW,Post rocked as usual !!
Regards,
Vikram Balaji

Arasu said...

Happy Anniversary.

-Arasu

அபி அப்பா said...

ஒ பத்து வருஷம் ஆச்சுதா? நானெல்லாம் ஏழு வயசுக்காரன் தான். வாழ்த்துக்கள் டுபுக்கு! எப்போதும் போல அருமையான எழுத்து நடை!

Unknown said...

பல காவியங்களையும் கட்டுரைகளையும் காப்பியங்களையும் தந்த தனிப் பெருந் திலகமே. பத்து ஆண்டுகளாய் ஓய்வில்லா கலை சேவை புரியும் அண்ணரே ... தங்கள் சேவை தொடர வாழ்த்தி வணங்குகிறோம் :)

Shubha said...

Welcome back! vayasu aanalum post-ku mavusu innum kuraiyalai:-)))

K Sivaranjini said...

Ennathu pathu varusham akiducha! Atleast ippovathu intha post ellathayum oru book a publish pannungalen please.....
Nan comedy pannala....

K Sivaranjini said...

Neenga unga famous post ellam vikatanuku thatti vidunga...I always dream of having your book from vikatan publications. Kandippa avanga note panuvanga...Give a try! Ithellam History eluthapada vendiyathu....hmmm

Anonymous said...

Spotted u in East ham a month back I guess...standing alone and staring at all directons! lol! I didnt want to shock you by a stranger chat! tension aavatheenga...I am a guy!

Dubukku said...

லக்ஷ்மி - மிக்க நன்றிங்கோவ்.
//அதுவும் வயசான காலத்துல !/// - அவ்வ்வ்வ்வ் :((( இது பத்தி ஒரு பதிவு ட்ராப்ட்ல இருக்கு சீக்கிரம் வரும்
//எல்லாம் நான் நீன்னு போட்டி போடுவாங்களே முதல் ஆளா பின்னூட்டம் போட ?// - எல்லாரும் பிசி இப்போல்லாம்

கொத்ஸ் - முதல்ல பதிவு போடற பழக்கத்த உண்டு பண்ணிக்கிறேன் அப்புறமா பிழையில்லாம ம்ஹூம் நீயும் அப்படியாவது என்ன தப்புன்னு சொல்ற மாதிரியில்ல

Thanai Thalaivi - உங்க பெயரே சுப்பரா இருக்கே :)) வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க. ஆமாம் ஆட்டோகாரங்க அனுபவம் இனிமையானவங்களா அமைஞ்சாங்க

சாரதா - ஓ அப்படியா கண்டிப்பா ட்ரை பண்றேங்க. தகவலுக்கு மிக்க நன்றிங்க. ஹா தாலி மேட்டர் கரெக்ட்டு தான் ஆனாலும் ஊருலயும் இப்படியான்னு கேட்கவே கஷ்டமா இருக்கு

அனானி - :))) ஆமாம் ஒத்துக்கறேன் நான் இல்லைன்னே சொல்லையே :)))

ரசனை - மிக்க நன்றி சாரே. இன்ஸ்பிரேஷன்லாம் ஓவர் :)) பாருங்க ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க கீழ

பொயட்ரி - மிக்க நன்றி மேடம். ஹீ ஹீ இல்ல அடுத்தது :P

பொற்கொடி - அவரு சும்மா சொல்றாரு. யூ ப்ளடி

ரம்யா - ஓ அப்டியா அவருக்கும் என்னோட belated Bday wishes சொல்லிடுங்க. சைலண்டாவா...இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க...அப்பப்போ கொஞ்சம் சவுண்டு விடலாம்ல

அறிவிலி - மிக்க நன்றி சாரே. என்ன தவம் செய்தனை

விக்ரம் - வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே

அரசு - மிக்க நன்றி நண்பரே

அபி அப்பா - மிக்க நன்றி சாரே...அண்ணியும் பசங்களும் சவுக்கியமா

கீர்த்திவாசன் - அண்ணே அண்ணே வாழ்த்துக்கு மிக்க நன்றி ஆனா மத்ததெல்லாம் என் மேல கொலவெறில இருக்கறாப்புல தெரியுது :))) ஏங்க இப்பூடி

சுபா - மதுரை சுபாவா நீங்க.//வயசு ஆனாலும்// - ம்ஹும் ம்ஹும் மம்மீமீமீமீ

சிவரஞ்சனி - வாங்க ரொம்ப ரொம்ப நன்றி உங்க ஊக்கமான கமெண்ட்டுக்கு. ஆனா இந்த புக்கு மேட்டரெல்லாம் :)))))))) நம்பள்கி கண்டா பப்ளிஷர்ஸ்லாம் தெறிச்சு ஓடிடுவாங்க. விகடன் பிரசுரமா :))) கேட்க ரொம்ப நல்லாயிருக்கு இருங்க நானும் கனவு கண்டுக்கிறேன் :))

அனானி - அட என்ன சாரே முதுக தட்டியிருக்கலாம்ல...நீங்களும் ஈஸ்ட் ஹாமா? அடடா எங்க பார்த்தீங்க பஸ் ஸ்டாப்லயா? //tension aavatheenga...I am a guy! // - இப்போத் தான் டென்ஷன் ஆகுது :P (சும்மா டமாசு டமாசு) எங்க போகப் போறோம் திரும்பவும் சந்திப்போம்ன்னு நினைக்கிறேன். கூப்பிடுங்க இல்லை நம்பட் தட்டு விடுங்க :))

uthra said...

congrats , long way to go.......
ungaludaya intha kalai thondu melum melum valarattum.
Naanga ellam romba aavala irukkom, neriya padichi enjoy panrathukku :)

ram_mark20 said...

வணக்கம் டுபுக்கு ....தாமதமாக வந்த உங்கள் பதிவு ..விவேக் சொல்வது போல லேட் ஆ வந்தாலும் லேட்டஸ்டா வந்திருக்கு...உங்களை போலவே நானும் இம்முறை சென்னை போயிருந்தேன்...வழக்கமாக பெசன்ட் நகரில் உள்ள என் வீட்டில் இருந்து நங்கநல்லூரில் உள்ள என் மாமியார் வீட்டிற்க்கு முன்பெல்லாம் 250 ருபாய் கேட்பார்கள்..இம்முறை அதிசயமாக மீட்டர் போட்டு 160 ருபாய் தன வந்தது...நானும் சென்னை பழக்கம் மாறாது மீட்டர் கு மேல் ஒரு 10 ருபாய் போட்டு கொடுத்தேன்...ஆடோக்காரனும் சந்தோஷமாக ஏதும் சொல்லாமல் வாங்கிட்டு போனான்...
அம்மாவின் ஆட்சியில் இன்னும் சாலைகள் தான் சீரமைக்க படவில்லை..அதுவும் விரைவில் நடைபெறும் என்று நம்புகிறேன்...
நான் நவம்பர் மாதம் UK வருகிறேன்...இம்முறை 2-3 ஆண்டுகளுக்கு லாங் டெர்மில் வருகிறேன்..Guildfordடில் வசிப்பேன்...கண்டிப்பாக உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சந்திப்பேன்...
................பெங்களூர் ராமகிருஷ்ணன்

ram_mark20 said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...

"மஞ்சள் கயிற்றில் கோர்த்த தாலி, மற்ற நேரங்களுக்கு ஒரு தாலி என்று சென்னை மகளிர் தாலிக்கு ஷிப்ட் சிஸ்டம் அமுல் படுத்தியிருக்கிறார்கள்"
சென்னையில் இருக்கும் எனக்கு இது தெரியாதே...

வல்லிசிம்ஹன் said...

ஆழ்வார்பேட்டை வழியாப் போயிருக்கீங்க. எங்க வீட்டுக்கு வரணும்னு தோணலை. தம்பிகல் மாதிரியே அண்ணாவும்:)
பத்து வருஷங்களுக்கு நிறைந்த வாழ்த்துகள். நடை மாறவில்லை.
உங்க புண்ணியத்தில பார்க்கமுடியாத பதிவர்கள் அனைவரையும் பர்த்தாச்சு. இதென்ன தாலி கதை!!யாராவது போட்டுக்கறாளா என்ன.:)

Post a Comment

Related Posts