Thursday, July 14, 2011

கன்னா பின்னா

வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்ன்னு சொன்னால் என்னம்மோ எங்க மாமியாரப் பத்தி நான் ஜாடை மாடையா பேசறேன்னு தங்கமணியோடு அம்மா காண்டாகிவிடுவார் என்பதால் எந்த பழமொழியும் சொல்லாமல், இந்த வருடம் நிறைய எழுத வேண்டும், புக்கர் ப்ரைஸ் வாங்க வேண்டும் என்ற பக்கத்து வீட்டு வெள்ளைக்கார மாமியின் ஆசையை தோசையாக்கி, ப்ளாகிலிருந்து நான் ரொம்ப நாள் காணாமல் போனதற்க்கு முழு பொறுப்பேற்றுக்கொண்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்ளுமாறு சந்தன மாரியப்பனைக் கேட்டுக்கொள்கிறேன்.போதும் நிறுத்திகிறலாம். சில பேர திருத்த முடியாது. சந்தன மாரியப்பனை சொல்லிக் குற்றமில்லை...இந்த சமூகத்தை தான் சொல்லவேண்டும்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னேன்னு ஒரு மகான் சொல்லி இருக்காராம். பரதேசி அவன் கண்டி கைல மாட்டினான்..கைமா தான். பின்ன என்னங்க.. நீங்களே சொல்லுங்க நானே ரொம்ப நாள் கழிச்சி இங்க வந்து அட்டெண்டன்ஸப் போட்டா அடுத்த வாரமே இந்தியா ட்ரிப்புக்காக திரும்ப ஒரு லாங் லீவு போடுடான்னா மனுஷனுக்கு எரிச்சல் வருமா வராதா. சில சமயம் சமோசா காரமா இருந்தாலும் அதுலயும் முந்திரி பருப்பு போட்டிருப்பாங்க பாருங்க மனுஷ வாழ்க்கையும் அத மாதிரி தான். இந்த இந்தியா ட்ரிப்பில் நிறைய வலையுலக நண்பர்களை சந்திக்கனும்ன்னு இருக்கேன். இந்த ஒரு சந்தோஷத்துக்காகவே சந்தன மாரியப்பனை  பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடலாம்னு முடிவு எடுத்திருக்கேன்.(என்னாது யாரு சந்தன மாரியப்பனா...என்னக் கேட்டா..யாருக்குத் தெரியும்).

விடுங்க பதிவு ஒரே காராசாரமா போகுது கொஞ்சம் லைட்டா யோசிக்கலாம். ஊர்ல எங்க வீட்டுல வர்ற எல்லா லெட்டரையும் எங்க மாமா ஒரு கம்பில சொருகி ஆர்க்கைவ் பண்ணுவார். இந்த கம்பி ஆர்க்கைவ் மாடில புழுதியோட இருக்கும். தூக்கம் வராத மத்தியான வேளைகளில் “மாடிக்குப் போனா தான் கவனமா படிக்க முடியும்”ன்னு சொல்லிட்டு “நாம வடை குடுத்த சீனியர் பொண்ணு வித் லவ்வுன்னு அனுபின லெட்டர் மாதிரி மாமாவுக்கு எதாவது சுவாரசியமா லெட்டர் வந்திருக்கான்னு இந்த கம்பில இருக்கற பழைய லெட்டர்களையெல்லாம் நோண்டிக் கொண்டிருப்பேன். முக்கால் வாசி லெட்டர் “சுவாமி சுப்பிரமண்யம் சகாயம்”ன்னு ஆரம்பித்து “தீபாவளி, கார்த்திகை,பொங்கல் வகைக்காக ருபாய் பதினொன்று மணியார்டரில் தனியாக அனுப்பியுள்ளேன்,பெருமையுடன் பெற்றுக்கொண்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் ஆசிர்வாதம் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்”ன்னு முடித்திருக்கும், இல்லையென்றால் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அன்பர்களை நன்கொடை அனுப்பச் சொல்லி குங்குமம் வீபூதி மணக்க வேண்டிக் கேட்டுக்கொண்டிருக்கும். இதுக்கு பித்தோகோரஸ் தியரமே எவ்வளவோ மேல் என்று படிக்கப் போய்விடுவேன்.

ஒரே ஒரு முறை மட்டும் வேறு ஒரு விளக்குப் பிறையில் பாலிதீன் கவரில் சில போஸ்ட் கார்டுகள் இருப்பதைப் பார்த்தேன். எடுக்கப் போகும் சமயத்தில் மாமா வந்துவிட படக்கென்று பிடுங்கி பரணில் வைத்துவிட்டார். அதையெல்லாம் எடுக்காதே என்று ரெண்டுங்கட்டானாய் ஒரு ஆர்டர் வேறு போட்டுவிட, எனக்கு சிரங்கை சொறிந்து விட்ட மாதிரி அரிக்க ஆரம்பித்து விட்டது. மாமியும் வேறு சேர்ந்து கொண்டு அதையெல்லாம் தொடாதேன்னா தொடாதேன்னு கூடுதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க, இங்கயும் ஏதோ வடை மேட்டர் இருக்கு என்று எனக்கு கன்பஃர்ம் ஆகிவிட்டது. பின்னொரு நாளில் தெருவில் நடக்கும் கல்யாணத்திற்கு எல்லோரும் போயிருக்க,அவசரமாய் பாலிதீன் பையை பிரித்தால் முத்து முத்தான கையெழுத்தில் “வெங்கடாசலபதி துணை” என்று ஆரம்பித்து இந்த லெட்டரை இருபது பிரதி எடுத்து அடுத்த ஐந்து நாட்களுக்குள் அனுப்பவேண்டும் என்று செல்லமாய் கேட்டுக் கொண்டு,  அப்படி பிரதி எடுத்து அனுப்பாத ஒருத்தர் வீட்டில் பாம்பு வந்துவிட்டதாயும், கிழித்துப் போட்ட ஒருத்தரை எருமைமாடு முட்டிவிட்டதாகவும், பிரதி எடுத்து அனுப்பியவருக்கு அடுத்த வாரமே மாட்டுக் கொட்டகையில் ட்ரங்க் பொட்டி நிறைய தங்கம் கிடைத்து ரெண்டாவது கல்யாணத்திற்கு பெண்குடுக்க க்யூ நிற்பதாகவும் ஏகப்பட்ட மிரட்டல்கள். எங்கள் தெருவில் ஏகப்பட்ட எருமை மாடுகள் இருப்பதால் மாமா கிழித்து எறியாமல் பத்திரமாய் வைத்திருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன்.

நிற்க. சமீபத்தில் பேஸ்புக்கில் இதே ரீதியில் ஒரு ஸ்டேடஸ் மெசேஜ். “இதை உங்கள் ஸ்டேடஸ் மேசேஜாகப் போட்டால் ஏகப்பட்ட அதிர்ஷட்ம் கொட்டும் என்றும் போடாவிட்டால்...” -- ஸ்ப்ப்ப்ப்ப்பா...ஏகப்பட்ட பேர் அதை ஸ்டேடஸாக வேறு போட்டிருந்தார்கள். எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாய் இருந்தது. இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் காலத்திற்கேற்ப டெக்னாலஜி மாறும் ஆனால் மனிதர்கள் மெண்டாலிட்டி மட்டும் மாறவே மாறாது.

12 comments:

Madhu Ramanujam said...

நிஜமோ நிஜம்....

சேலம் தேவா said...

சாமி குத்தமாயிரப் போவுது..!! நீங்களும் போட்ருங்கண்ணே..!! :)

எல் கே said...

ஹஹஅஹா. எப்ப வரீங்க தலைவா ? மாநாடு போட்டுடலாமா ??

Anonymous said...

காலையில ஏந்திரச்ச உடனே சக்கரப் பொங்கல் சாப்பிட்ட மாதிரி ஒரு சூப்பர் ப்ளாக் படிச்ச திருப்தி :) ட்ரன்க் பெட்டி நிறை தங்கம் குடுக்குமாறு சுப்பிரமணிய சாமிய வேண்டிக்கிறேன்! :)

எப்படியா இப்படி கம்பியில ஆரம்பிச்சு ஃபேஸ்புக்குல முடிச்சி ... :) டுபுக்கு இன் ஃபுல் ஃபாம் :)

ஆத்துக்காரருக்கு சத்தமா படிச்சு காமிச்சு, நான் சிரிச்ச சிரிப்பில அழ ஆரம்பிச்ச பொண்ணு என்னன்னு தெரியாமலே சிரிக்குது! :)

I wish I could take life in the spirit of this blog! :)

மனம் திறந்து... (மதி) said...

//இதுக்கு பித்தோகோரஸ் தியரமே எவ்வளவோ மேல் என்று படிக்கப் போய்விடுவேன்.//

//எங்கள் தெருவில் ஏகப்பட்ட எருமை மாடுகள் இருப்பதால் மாமா கிழித்து எறியாமல் பத்திரமாய் வைத்திருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன்.//

//காலத்திற்கேற்ப டெக்னாலஜி மாறும் ஆனால் மனிதர்கள் மெண்டாலிட்டி மட்டும் மாறவே மாறாது.//

:)))

Sh... said...

//காலத்திற்கேற்ப டெக்னாலஜி மாறும் ஆனால் மனிதர்கள் மெண்டாலிட்டி மட்டும் மாறவே மாறாது.//

உண்மை! உண்மை!.

இந்தியா சென்று என்சாய் பண்ணிவிட்டு வாருங்கள்.

Mahesh said...

அண்ணா.... கன்னா பின்னா.... சூப்பர்ணா !!!
அடுத்த படம் போஸ்ட் ப்ரொடக்ஷன்ல இருக்கோ???!!!

Dubukku said...

மது - :)


சேலம் தேவா - ஹீ ஹீ
அப்டீங்கிறீங்க :)

எல்.கே - தோடா நக்கலு ஆங்?...ஒரு சந்திப்பு போட்டுருவோம். மெட்ராஸ் எக்சாக்ட் டேட் தெரிஞ்சவுடனே சொல்றேன்

Kookaburra - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு :) இந்த ப்ளாகில் எழுதுவது மாதிரி தான் 80% நான் இருப்பேன்னாலும் மிச்ச 20%ட்ட நானும் மாத்தனும்ன்னு பார்க்கறேன் -ஹூம்

மதி - வாங்க தல எப்டீக்கிறீங்கோ

ஷ் - மிக்க நன்றி. கண்டிப்பா :))



மகேஷ் - இல்லீங்க சார். :((( ப்ரீ ப்ரொடக்‌ஷன்ல தான் இருக்கு இன்னும். ஊருக்குப் போய்ட்டு வந்து ஆரம்பிக்கனும்

மங்களூர் சிவா said...

:))))))))))))

சர்ணா said...

சூப்பர் சார் ...

DaddyAppa said...

இதெல்லாம் ஒரு technique -ஆ தலைவா?! நாங்களும் டெய்லி இந்த சைட் அ ஓபன் பண்ணி பார்த்து ஏமார்ந்து போய்....சரி ..ஒரு போலீஸ் கம்ப்ளைன்ட் குடுக்கலாம் னு கிளம்பியாச்சு.... கம்ப்ளைன்ட் - ல சைட் அட்ரஸ் குடுக்கனமே! அட்ரஸ் காப்பி பண்ணலாம் னு ஓபன் பண்ணி னா...தோடா! ஒரு போஸ்ட்...ஹ்ம்ம்ம் என்னாதான் வீட்டிலையும் ஆபீஸ் லயும் நிறைய "ஆணி" இருந்தாலும் ..இப்படியா ?!!!

Anonymous said...

Sooper!!
//“என்க்கு நெஞ்சு வலிக்கிறது,குப்புன்னு வியர்க்கிறது,யாரோ கூப்பிடுகிறார்கள் #heartattack"/
chance-a illa. :))

-Prabhu

Post a Comment

Related Posts