Thursday, July 28, 2005

எப்பிடி இருந்த நான்...

இங்கே பாம் வெடித்த விஷயத்திலிருந்து தப்பிப் பிழைத்த விஷயம் ஜுனியர் விகடனில் பேட்டியாக வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும்.(ஹி ஹி ..நல்ல சிரிச்சுண்டு போஸ் குடுத்த போட்டோல்லாம் வந்திருக்கு). விஷயம் நடந்த அன்று சக்ராவின் ப்ளாகைப் பார்த்த ஒரு நண்பர் மூலமாக ஜு.விக்கு எழுதும் இன்னொரு நண்பர் தொடர்பு கொண்டு அதன் மூலமாக ஜூ.வியில் பேட்டி வந்தது.

"விகடன் பேட்டிக்கு தயாராகனும்"ன்னு உதாரெல்லாம் விட்டதில் ராத்திரிக்கு தோசை இருந்த இடத்திலெயே கையில் கிடைத்தது.

"இன்னும் பேட்டி வேலை நிறைய இருக்கு தட்டிலேயே கையைக் கழுவிடறேன்"

"ஏன் கையில கால்ல அடி பட்டிருந்தா சன் டீவியில வந்து பேட்டி எடுப்பாளே..நான் வேணா ஏற்பாடு பண்ணட்டுமா.." - வழக்கம் போல் இல்லாமல் நேரடியாகவே தலமைச்செயலகத்திலிருந்து எச்சரிக்கை வந்தது. (அப்புறமென்ன வழக்கம் போல் நானும் நல்ல பையனாகிவிட்டேன்)


பேட்டியெல்லாம் முடித்த பிறகு நண்பர் சொன்னார் "இத அங்க ஆபீஸ்ல அவங்க பார்த்து தவறு இருந்தால் திருத்திக் கொள்வார்கள்."

பேட்டி தானே... மானே தேனே பொன்மானே போட்டு எழுதுவார்கள் என்று நினைத்தேன், ஆனால் கொஞ்சம் பல்லவியையே மாற்றிவிட்டார்கள்.(ஆனால் மானே தேனே மேட்டருக்கு இந்த நண்பர் காரணமில்லை) இந்த வாய்பினால் நாங்கள் மிகவும் நல்ல நண்பர்களாகி எனக்கு சென்னை தோசாவில் ஓ.ஸி தோசையெல்லாம் கிடைத்தது என்பது வேறு விஷயம்.

ஆனாலும் ஜாலியாகத் தான் இருந்தது. நண்பர்கள் வழக்கம் போல் கலாய்த்தார்கள். மனைவிக்கு வேற போட்டோ குடுத்திருக்கலாம்ன்னு அபிப்ராயம். தப்பிப் பிழைத்ததை தங்களிடம் சொல்லவில்லையே என்று சில பேருக்கு குறை. மஹாலெக்ஷ்மி கோவில் அர்சகர் பத்திரிக்கையில் வந்திருக்கும் போட்டோ என்னுடையது தானா என்று கன்பர்ம் செய்துகொண்டு...சக அர்சகர்களிடம் நான் தப்பிப் பிழைத்ததைப் பற்றி ஸ்லாகித்து பிரசாதத்துடன் ஆப்பிளும் குடுத்தார்.

ஊரில் வீட்டில் சமாதானம் செய்வது தான் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது.

"ஏண்டா எங்ககிட்டயெல்லாம் விஷயத்தை மறைச்சுட்டியே...நீ வந்த டிரெயினிலேயே குண்டு வெடிச்சுடுத்தாமே "

"**ஆமாம் எனக்கே இந்த விஷயம் பத்திரிக்கையில வந்த அப்புறம் தான் தெரியும்**"

"எத்தனையோ கடல் தாண்டி இருக்கே...பார்த்து ஜாக்கிரதையா இருங்கோப்பா... எங்களுக்கு இங்கே வயத்துல புளியைக் கரைக்கிறது"

"அதெல்லாம் ஒன்னுமில்லை..கவலப்படாதீங்கோ..நாங்க இருக்கிற ஏரியாலலாம் ஒன்னும் பயமில்லை "-என்னம்மோ சமாதானம் என்ற பேரில் உளறினேன்.

"இல்லையே லண்டன் முச்சூடும்னா குண்டு வெடிக்கிறதாம்...பேப்பர்ல போட்டிருக்கு சன் டிவீயிலயும் சொன்னாளே ஜாக்கிரதையா இருங்கோ"

"சரி ஜாக்கிரதையா இருக்கோம் " - முதல்லயே சொல்லியிருக்கனும்.

"சரி லேட்டஸ்ட் போட்டோ அனுப்பு அனுப்புன்னு சொல்லிண்டு இருந்தேளே...அதான் பத்திரிக்கைல வந்திருக்கே...பார்த்துக்கோங்கோ"

"உன்க்கு எப்பவும் விளையாட்டுத் தான் குழந்தகளோட போட்டோவ அனுப்பு"

**"இதுக்குத் தான் நாங்களும் சேர்ந்து இருக்கற குடும்ப போட்டோவ போடுங்கோன்னு சொன்னேன்..எங்கம்மாவும் பார்த்திருப்பா இல்லையா" - திருமதி ஒரு வெகுமதி
அடாடா..கொஞ்சம் பிரபலமானாலே மனுஷனுக்கு எத்தன பேர சமாளிக்கவேண்டியிருக்கு ***

இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் குண்டு வெடிக்க முயற்சி என்றவுடன் டான் டானென்று போன் வந்தது.

"உங்களுக்கு ஒன்னுமில்லையே..." - ஊரிலிருந்து போன்.

"ஏன்டா இந்த தரம் உனக்கு ஒன்னும் ஆகலையா" - நண்பர்கள்.

வழக்கம் போல் இந்த முறையும் சன் டீவி பேட்டி மிஸ்ஸாகிவிட்டதாக வூடுக்காரி நக்கல்.

ஊரில குண்டு வெடிச்சா நம்ம தலையில தான் விடியுமா என்ன?

No comments:

Post a Comment

Related Posts