Sunday, January 03, 2010

தீர்த்தவாரி

"தண்ணி என்றால் என்ன...கிக்கு என்றால் என்ன"ன்னு பழனியாண்டவர் மாதிரி கையில் ஆரஞ் ஜூஸை வைத்துக் கொண்டு நானும் தண்ணியடிக்கும் தர்மவான்களுக்கு கிக்கு ஏறவிடாமல் நிறைய மொக்கை போட்டிருக்கேன். "யூ நோ...கிக்கு மீன்ஸ் கிக்கு......"ன்னு சில துரைமார்கள் மெனெக்கெட்டிருக்கிறார்கள். "தம்பீ...இதெல்லாம் கலர் மலையாளப் படம் மாதிரி...ஒரு மகோன்னத அனுபவம்...யாராலயும் சொல்லி புரிய வைக்க முடியாது"ன்னு நிறைய உஷார் மாக்கான்கள் நழுவியிருக்கிறார்கள்.

"அந்த கன்றாவில அப்படி என்னதான் இருக்குன்னு பார்த்துடனும்"ன்னு ரொம்ப நாளாகவே பீடிகை போட்டு வந்தேன். மெட்ராஸில் டூ வீலர் லைசன்ஸ் மாதிரி சப்பையாய் முடிய வேண்டிய மேட்டர், கல்யாணமாகி பத்து வருஷம் நல்லவனாய் நடித்ததில் நேஷனல் பெர்மிட் மாதிரி கொஞ்சம் இழுத்தடித்துவிட்டது. இதில் இரண்டு குழந்தைகளுக்கு வேறு பொறுப்பான அப்பாவாக ஆக்ட் குடுத்துக் கொண்டிருப்பது விஷயங்களை மேலும் சிக்கலாகிவிட்டது.

2012-ல வேற உலகம் அழியப் போகுதுன்னு சொல்லிட்டாங்களேன்னு பிரஷர் ஏற ஆரம்பித்து, ஏதோ ஒரு நல்ல நாளில் ஆரம்பிக்கலாமேன்னு நாளும் குறித்தாயிற்று.

முன்ன பின்ன செத்தா தானே சுடுகாடு தெரியும்ன்னு ஆபிஸில், பக்கத்திலிருந்து ஆளிடம் பேச்சு வாக்கில் "எப்பா ராசா வெள்ளிக்கிழமையானா பாருக்கு கோலம் போடப் போகறியே எங்கூர்லன்னா டாஸ்மார்க்...இந்தூர்ல எந்த ப்ராண்ட்யா நல்லாயிருக்கும்"ன்னு கேட்க அம்புட்டு தான் ஆபிஸ் இருந்த அத்தனை பேரும் ஆளுக்கு ஆள் வந்து ரவுண்டு கட்டி அட்வைஸ் குடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நான் ஏதோ டபுள் டீர் பிராண்ட் பாஸ்மதி அரிசி மாதிரி ஒரு பெயர சொல்லுவான் கடைக்குப் போய் அதுல ஒரு பாட்டில் பேப்பர் சுத்தி குடுங்கன்னு வாங்கிட்டு வந்துடலாம்ன்னு பார்த்தா...விஷயம் ஏகத்துக்கும் காம்ப்ளிகேட்டாய் இருந்தது.

"பீர்லாம் வேண்டாம் முதல் தரம் பிடிக்கவே பிடிக்காது...வைன்ல ஆரம்பி அதான் உடம்புக்கு நல்லது"

"ஒக்கே...எந்த ப்ராண்ட்..."

"ப்ராண்ட்..ஓ யூ மீன் ஒயிட் ஆர் ரெட்..? .ரெட் வொயின் ஆரம்பி அதான் உன்னை மாதிரி கத்துக் குட்டிக்கெலாம் வாடை குறைய இருக்கும்..."

"ஓ அப்படியா...சரி...(இந்த மரமண்டையனுக்கு ப்ராண்ட்ன்னா தெரியல போல) ...ஓக்கே ரெட் வைன் புரிஞ்சுது ஆனா அதுல எந்த ப்ராண்ட்..ஐ மீன் லேபிள்..."

"லேபிள்...?? ரெட் லேபிள், ப்ளூ லேபிள் அதெல்லாம் விஸ்கில தான் ...வைன்ல கிடையாது...வைன்ல வருஷம் தான் கணக்கு.."

"கிழிஞ்சுது போ...ஓ இது அரிசி மாதிரியா..ஓக்கே பாத்துக்கறேன்..."ன்னுய் நழுவினாலும் விடவில்லை. இந்த வைன் இந்த சாப்பாடு கூட சாப்பிடனும் அந்த வைன் அந்த சாப்பாடோட சாப்பிடனும்ன்னு ஏகத்துக்கு குழப்பினார்கள். எங்கூர் தரமணி டாக்கிஸில் எல்லாத்துக்கும் கொண்டக் கடலை சுண்டலும், அவிச்ச முட்டையும் தானே சைட் டிஷ் வைப்பாங்க...அப்போ ஏமாத்திட்டாங்களான்னு எனக்கு ஏகத்துக்கும் டவுட்டு.

இதுல வைனை எடுத்து அப்படியே மடக்குன்னு குடிக்கக் கூடாதாம். வாயில விட்டு வெல்லப்பாகை சப்புக் கொட்டி சாப்பிடுவது போல மெதுவாய் நாக்கில் படுகிறமாதிரி பதமாய் டேஸ்ட் செய்ய்வேண்டுமாம். போ போ போய்டே இரு...நான்லாம் பரம்பரை ரவுடி...பாட்டில கவுத்தினேன்னா...பாட்டில் வழியா வானம் தெரிஞ்சாத் தான் பாட்டில கீழ இறக்குவேன்னு அப்படியே அவனை விரட்டிவிட்டேன்.

"ஓக்கே ஓக்கே...சூதனமா இருந்துக்கோ...குடிக்கும் போது ஏதாவது டவுட்னா எனக்கு ஒரு போன போடு, நான் க்ளியர் பண்ணறேன்னு ரெண்டு மூனு பேர் ஏகத்துக்கும் நல்லவன்களாய் இருந்தார்கள்.

டேய் இதெல்லாம் ரொம்ப ஓவர்டா... கடைக்குப் போய் "அண்ணாச்சி ரெட் கலர்ல ஒரு வைன் குடுங்க"ன்னா குடுத்துட போறாரு. ஆபிஸில வேலைல சந்தேகம்னா ஒரு பயலும் திரும்பிக் கூட பார்க்காதீங்க....இப்படி ஒரு நல்லவன குடிச்சிக் கெடுக்கனும்ன்னா அடுத்த டிப்பார்ட்மென்ட் பெண்மணிகள் முதற்கொண்டு வந்து அட்வைஸ் பண்ணுங்கடான்னு எனக்கு ஏகத்துக்குப் பெருமை.

இருந்தாலும் விஷயம் இன்னும் குழப்பமாய் இருந்ததால், பொறுமை அதிகமாயிருக்கும் கலயாணமாகாத பேச்சிலர் பசங்களில் ஒருத்தனைப் பிடித்து "என்னய்யா குழப்புறாய்ங்க...என்னம்மோ ஐ.ஏ.எஸ் பரிட்சை மாதிரி ஆயிரத்தெட்டு சிக்கல பின்னுறாங்க..."ன்னு புலம்பியதில், நம்ம பேச்சிலர் பல நாடுகளில் இருந்தும் வரும் சரக்குகள் பற்றியும் திராட்சைகள் பற்றியும் அவற்றின் தாத்பரியங்களை பற்றியும் விலாவாரியாக எடுத்துரைத்தார்.

"ஏற்கனவே உங்களுக்கு தலை கால் தெரியாது இதுல முதல் தரம் வேற வைன்லாம் வெளில வெச்சு எங்கயாவது குடிக்கவேண்டாம் முதல்ல வீட்ல கொஞ்சமா ட்ரை பண்ணிப் பாருங்க"ன்னு தங்கமணி ஏக கரிசனம்.

அதுவும் சரிதான் நாம ஏற்கனவெ ரொம்ப பெரிய ரவுடி இதுல சரக்கு உள்ள போச்சுன்னா அப்புறம் எவன் அடிச்சான்னு கூட சொல்லத் தெரியாதுன்னு தலையாட்டிவிட்டேன்.அடுத்த வாரம் டெஸ்கோவிற்க்கு போன போது ஒரு சரக்கு ஆபரில் போட்டிருந்தார்கள். நம்ம பேச்சிலரிடம் நெட்டுறு போட்டதில் எனக்கு சரஸ்வதி சபதம் சிவாஜி மாதிரி "அ..அம்மா...ஆ....ஆடு...இ..இலைன்னு" உடம்பில் நரம்புகள் முறுக்கேறி பட்டென்று வாங்கி வந்துவிட்டேன்.

வெள்ளிக்கிழமை மஹாலெட்சுமிக்கு உகந்த நாள் என்று தங்கமணி தடா போட்டதில் தண்ணி முஹூர்த்தம் சனிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சனிக்கிழமை மகள்களை அப்படி இப்படி என்று தாஜா காட்டி தூங்கப் போக சொல்லிவிட்டு பாட்டிலை உதறலோடு கையில் எடுத்த போது மணி இரவு பதினொன்று. "ஐயா முதல் தரம் பூஜை போடப் போறேன்...சைட் டிஷெல்லாம் அமர்களப் படுத்திடனும் என்ன...கொண்டக் கடலை சுண்டல், சிப்ஸ் வித் சல்சா டிப்பிங்...ஸ்பைசி கேஷ்யூநட்ஸ், காரமாய் பரோட்டா குருமா..எல்லாம் கரெக்டா இருக்கனும்...சரக்கு உள்ள் போச்சுன்னா அப்புறம் என் பேச்சை நானே கேட்கமாட்டேன் பேஜாராகிடும்"ன்னு தங்கமணிக்கு ஏகப்பட்ட பில்டப் வேறு குடுத்திருந்தேன்.

எத்தனை படங்களில் ட்யூஷன் எடுத்திருப்பார்கள்...பாட்டிலை தலையில் ஒரு தட்டு தட்டி, அடியில் ஒரு தட்டு தட்டி ஸ்க்ரூவை முறுக்கினால் ஈ.ஸியாய் திறக்கலாம்...ன்னு சீலை உடைத்தால் "கார்க்" பெப்பரப்பேன்னு முழித்துக் கொண்டிருந்தது. பாழாய்போன பரதேசி பேச்சிலர் கார்க் போட்டு மூடியிருபார்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டான்.எங்க வீட்டில் சென்னா டின் ஒப்பன் பண்ணும் டின் ஓப்பனர் மட்டுமே.

விட்ட சைட் டிஷ் அலப்பரையில் தங்கமணி ஏற்கனவே செம டென்ஷனாகியிருந்தார். இதுக்குத் தான் இந்த பில்டப்பான்னு காறித் துப்பி விடுவார்ன்னு ராத்திரி அவசரமாய் அலைந்து பக்கத்து கடையில் "வீட்டுல கிச்சன் சிங்க் பைப் புட்டுக்கிச்சு அதை சரி பண்ண அவசரமா கார்க் ஒப்பனர் வேணும்ன்"னு வாங்கி வந்து ஓப்பன் செய்தால் ஒயின் நாற்றமான நாற்றம். நான் வேற பந்தாவா முக்கால் க்ளாஸ் ஊற்றிக் கொண்டுவிட்டேன். இந்த இழவையா குடிக்கப் போறீங்கன்னு தங்கமணிக்கு ஏக சிரிப்பு. "இதெல்லாம் கனவான்கள் குடிக்கிற சோமபானம்"ன்னு அரை க்ளாஸ் உள்ளே போவதற்க்குள் முழி பிதுங்கி இருந்த சைட் டிஷெல்லாம் காலி.

"சும்மா சைட் டிஷ்ஷை மட்டுமே சவசவன்னு மென்னு காலி பண்ணிட்டீங்க..கோட்டா ஓவர் .திரும்பலாம் கிடைக்காது"ன்னு தங்கமணி கறாராய் சொல்லிவிட்டார். இருந்தாலும் நான் குடித்துவிட்டு ஏதாவது கோமாளிக் கூத்தடிப்பேன் என்று ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்.

என்னாடா நாம புதுசா இருந்தாலும் அரைக் க்ளாஸ் அல்ரெடி அடிச்சாச்சு...இருந்தும் இந்த கிக்கு ஒன்னும் வரலையே ஒரு வேளை சோடா கலக்கனுமோ..நம்மாள் சிலபஸ்ல அதெல்லாம் சொல்லலையேன்னு எனக்கும் கவலை வர ஆரம்பித்தது.

"என்னங்க ஏதாவது ஏறிச்சா"ன்னு தங்கமணி வேற கார்பரேஷன் தண்ணி டேங்கில் ஏறியாச்சா தொனியில் அடிக்கடி வினவிக்கொண்டிருந்தார்.

"சும்மா தொனதொனக்காத மனுசனை ஒரு ஃபீலிங்காய் இருக்கவிடு இப்பத் தான் ஏறிகிட்டு இருக்கு"ன்னு சமாதானம் சொன்னாலும் கிக்கு ஏன் ஏறவில்லை, ஒரு வேளை டூப்ளிகேட் சரக்கா இருக்குமோன்னு கவலையாயிருந்தது.

"ஒரு வேளை உங்களுக்கு தெரியாம அல்ரெடி கிக்கு ஏறியிருக்கும்...மாடிப் படில ஏறிப் பாருங்க...ஸ்டெடியா இல்லைன்னா தெரிஞ்சிடும்"ன்னு தஙகமணி சொன்ன போது ஏதோ ஹிட்டன் அஜென்டா இருக்கும் என்று உள்மனசு சொன்னாலும் ஏறித் தான் பார்ப்போமே கழுதை ஸ்டெடியா இருகோமான்னு தெரிஞ்சிடப் போகுதுன்னு ஏறியதில்,அபடியே அங்க உணர்த்தி இருக்கும் நைட் டெரெஸ்ஸை எடுத்துக் கொண்டும் வரும் ஆர்டர் தேறியது தான் மிச்சமே தவிர கிக்கு ஒன்னும் ஏறியது மாதிரி தெரியவில்லை.

ரைட்டு நம்ம ஆர்நால்ட் பாடிக்கு அரை கிளாஸெல்லாம் போதாது போலன்னு இன்னும் ஒரு கால் க்ளாஸ் ஏத்தியதில் காய்ச்சல் வந்தால் லேசாய் கண்கள் கணக்குமே அது மாதிரி இருந்தது. வந்தாச்சு...வந்தாச்சு...கிக்கு வந்தாச்சுன்னு மாப்பிள்ளை வீட்டு காரார்கள் வந்த மாதிரி சவுண்டு விட்டதில் தங்கமணி லேசாய் அரண்டு விட்டார். உண்மையிலேயாவா இது எத்தனை சொல்லுங்க..ன்னு விரலெல்லாம் காட்டிக் கேட்க ஆரம்பித்துவிட்டார். நானும் இதான் சாக்குன்னு "மீனா வந்து சரக்கு வைச்சிருக்கேன் இறக்கி வைச்சிருக்கேன் பாட்டு பாடனும்ன்னு" தெகிரியமாய் கோரிக்கை வைக்க...தங்கமணி எனக்கு உண்மையிலேயே ஏறிவிட்டது என்று முடிவுகட்டி "உங்களுக்கு ஏறியாச்சு இதோட போதும்"ன்னு மங்களம் பாடிவிட்டார். அதுக்கு மேல ரவுசு விட்டால் தங்கமணியிடமிருந்து வேற மாதிரியான நிஜ கிக்கு வரும் என்பதால் நானும் மலையேறிவிட்டேன்.

அட கருமாந்திரமே காய்ச்சல் வந்த மாதிரி இருக்கிற இந்த இழவுக்கா குடிக்கிறாங்க இதான் கிக்கா இதுக்கு ரெண்டு பாராசிட்டமால் மாத்திரை போட்டாலே போதுமேன்னு ஏமாற்றமாய் இருந்தது.

பின்னொரு நாளில் சில நெருங்கிய நட்பு வட்டத்தின் ஆன்சைட் ஹெல்ப்புடன் கிக்கு என்றால் என்ன என்று கண்டிப்பாய் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கைடன்ஸுடன் திரும்ப பால பாடம் எடுத்து அஙகேயே ஏத்து ஏத்துன்னு ஏத்தியதில் தலை சுத்தி ஒரு வழியாய் கிக்கு வந்து தொலைத்தது. அதிலும் நட்பு வட்டத்துடன் அடித்த கோமாளிக் கூத்து தான் ரொம்ப ஜாலியாய் இருந்ததே தவிர கிக்கு ஒன்னும் அப்படி ரொம்ப சொல்லிக்கிற மாதிரி இல்லை.

Saturday, January 02, 2010

புத்தாண்டு வாழ்த்துகள்

அனைவருக்கும் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!!

"கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்"

Sunday, October 18, 2009

பொறுமை....

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். பட்டாசெல்லாம் கொளுத்தி...பலகாரமெல்லாம் பக்கத்து வீட்டுக்கு குடுத்து...தெருவில் நண்பர்களோடு கூடி...சாரி சாரி...வழக்கம் போல டி.வி. நிகழ்ச்சிகள் பார்த்து தீபாவளியை ஜமாய்ச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

மன்னிக்கவும், வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமாக இருக்கட்டுமே என்று சில பல உபரி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு...இப்போ அது ஏகப்பட்ட பொறுப்புகளாகி.. ரெண்டு தெரு தள்ளி ஒரு குழந்தைக்கு காது குத்த மட்டும் தான் ஒத்துக்கொள்ளவில்லை அந்த அளவில் வந்து நிற்கிறது. எல்லா நேரங்களிலும் வேலை மென்னியப் பிடிக்கிறது. இப்போதெல்லாம் ஆபீஸ் போய் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளமுடிகிறது. இதெல்லாம் போக அடுத்த விடியோ(ஃபிலிம்) ப்ராஜெக்ட்டையும் ஆரம்பித்திருக்கிறேன். பின்னொரு பதிவில் விபரமாய் பதிவிடுகிறேன்.

என் சின்ன மகள் டிஜிட்டல் யுகத்தில் பிறந்ததால் தங்கமணி அவரின் நிறைய சேட்டைகளை மொபைல் போனில் பிடித்து வைத்திருந்தார். அதையெல்லாம் போனில் இருந்து கம்ப்யூட்டருக்கு மாற்றச் சொல்லி மூன்று வருடங்களாய் சொல்லிக் கொண்டிருந்தார். அப்புறம் "உங்களுக்கு ஒரு விவஸ்தையே இல்லையா...நானும் எவ்வளவு நாள் சொல்றது ...கொஞ்சமாவது மானம் வெட்கம் இருக்கா...இதுக்கு மேல நான் மனுஷியா இருக்க மாட்டேன்"ன்னு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சியதில், சரி என்று பெரிய மனது செய்து மாற்றி அமைத்ததில் எனக்குப் பிடித்த ஒரு கோப்பு ஒன்றை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அமுக்கு போல முகத்தை வைத்துக் கொண்டு இரண்டு வயதில் என் சிறிய பெண் செய்த சத்தியாகிரகம்...ஹூம்ம்ம்ம்ம் இந்த இந்த இந்த டெக்னிக்கு தான் நானும் ரொம்ப நாளா ட்ரை பண்ணுறேன்...பிடி பட மாட்டேங்குது....!!!


ஆரம்பகால மொபைல் போனில் எடுத்தது என்பதால் வீடியோ க்வாலிட்டி மிக மோசமாய் இருக்கும். பொறுத்தருள்க.

Tuesday, September 01, 2009

கல்யாணம் - Prequel

ஏன்டி சுஜா சித்த பளிச்சுன்னு ட்ரெஸ் பண்ணிண்டு சின்ன மாமாவ கூட்டிண்டு நாலு தெருவுக்கு பத்திரிக்கை குடுத்து நேர்ல அழைச்சிட்டு வந்துடேன்..இந்த் பேப்பர்ல பெயர் அட்ரெஸ் இருக்கு, அத்தோட யார் யார எதுக்கு கூப்பிடனும்ன்னு டீடெயில்ஸும் இருக்கு. பெயருக்கு நேர ஒரு க்ராஸ் போட்டிருந்தா கல்யாணத்துக்கு மட்டும் கூப்பிடு. ரெண்டு கிராஸ் போட்டிருந்தா ஜானவாசத்துக்கும் கூப்பிடு. மூனு இருந்தா ரிசெப்ஷன் வரைக்கும் இருந்துட்டு தான் போகனும்ன்னு வருத்திக் கூப்பிடு என்ன..

என் பிராஜெக்ட் மேனேஜர் மாதிரி சரியான இம்சைமா நீ...ரிக்வைர்மென்ட் ஸ்பெசிபிகேஷன்லாம் டீட்டெய்லா குடு...இதெல்லாம் நீயே பார்த்துக்க கூடாதா....இல்ல வானுயர வளர்ந்து நிக்கிறானே உன் தம்பி அவன் கிட்ட குடுக்க கூடாதா...கல்யாணத்துக்கு வந்த இடத்துல அழைச்சிட்டு வா தொலைச்சிட்டு வான்னு....

ஏன்டி உன் சின்ன மாமாக்கு இந்தூர்ல யாரடி தெரியும் அவனே இங்க எப்பவோ வரான் எப்பவோ போறான்...

யாரு...உன் தம்பி...ராது ப்ரெண்ட்ஸ் அத்தனை பேர் வீடும் அவனுக்கு அத்துப்படி...அவங்க போன் நம்பர் வேணும்னா நானே அவன கேட்டுத் தான் தெரிஞ்சிக்கிறேன்...வயசுப் பெண்களின் நடமாடும் டைரக்ட்ரிமா உன் தம்பி...

அஞ்சு வயசு வித்தியாசத்துல உனக்கு மாமாவா வந்து பொறந்தேன் பாரு ...எல்லாம் எங்கப்பாவ சொல்லனும்.... அன்னிக்கு ராது கூட ஸ்ரீலேகா ஆத்துக்கு போயிருந்தேன் அவ அம்மாக்கு நல்ல முட்டா மஞ்சள் வேணும்ன்னு போன் நம்பர் குடுத்தா...டீ.நகர்ல ரங்கநாதன் தெரு பக்கத்துல...

ஏன்டி உன்ன கல்யாணத்துக்கு கூப்பிட்டு வான்னு சொன்னா அவன போய் கிண்டின்டு...சாப்ட்வேர் கம்பேனில வேலை பார்தா..? ரொம்ப தான் வாய் வந்திடுத்து உனக்கு... நாளைக்கு உனக்கு கல்யாணம்ன்னு வரும் போது அவன் தான் திரும்பவும் ஓடியாடி வேலை செய்யப் போறான்...

ஆஹா சந்தடி சாக்குல அடுத்த கல்யாணத்துக்கும் ஓசி எடுபிடியா இப்பவே அப்பாய்ண்ட்மென்ட் லெட்டர குடுக்கிறியே அக்கா...

நோ வே...என்னோட கல்யாணத்துக்கெல்லாம் முந்தின நாள் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பறேன்...காலம்பற கிளம்பி வந்து சேரு...சிம்பிளா லிப் டு லிப் குடுத்து கல்யாணம்...ரெஸ்டாரண்ட்ல புஃபே. நாலு மணிக்கு எல்லாரும் இடத்த காலி பண்ணிடனும். நாங்க பர்ஸ்ட் நைட்டுக்கு பிரிப்பேர் ஆகி அடுத்த நாள் காலம்பற முதல் ப்ளைட்ல ஹனிமூனுக்கு எஸ்கேப் ஆகிடுவோம்...

ஆஹா இந்த ஐடியா சூப்பரா இருக்கே...சுஜா எனக்கும் ஒன்னு செட் பண்ணேன்

இதோ பாரு...நீ தான் எனக்கு மாமா..நான் உனக்கு இல்ல புரிஞ்சுதா...சரியான அலையாண்டி மாமாவா இருக்கியே...

ஏன்டி ஒரு அம்மா முன்ன பேசற மாதிரியா பேசற...ரொம்ப ஆட்டம் போடதடி உங்க பாட்டி காதுல விழுந்துடப் போறது. நானும் உன்ன மாதிரி ஒரு காலத்துல ஈஸ்ட்மென்ட் கலர்ல கனவு கண்டவ தான்..இன்னிக்கு உங்கள பெத்துட்டு கிரைண்டர்ல தோச மாவு அரைச்சிண்டு இருக்கேன்...

டேய் நீ நம்ம குமார் பையன் தானேடா...என்ன படிக்கிற

இப்போ தான் ப்ரி கே.ஜி சேர்த்திருக்கோம் மாமா...

ம்ம்ம்..வெரி குட்..நல்ல கவனமா படிக்கிறானா...குட் பாய்...நல்ல படிக்கணும் என்ன....பெரியவனாகி என்ன ஆகப் போற....டாக்டரா...இல்ல இஞ்சினியரா

....ம்ம்ம்

..சொல்லுடா...பெரியவனாகி என்ன ஆகப் போற...??

ம்ம்ம்...நான் பெரியவனாகி....ம்ம்..அப்பா ஆகப் போறேன்....

உங்க பெரியப்பாவுக்கு தேவை தான்...சின்னப் பிஞ்சு அவன்...அவனப் போய் டாக்டராகறியா கம்பவுன்டர் ஆகறியன்னு ப்ரஷர் போட்டுண்டு....கரெக்டா சமாளிச்சான் பார்த்தல்ல...இவன் வயசுல எனக்கெல்லாம் இவ்வளவு சாமர்த்தியமில்லை....

...ம்க்கும்... உங்களுக்கா...எங்க அதான் கையில ஒன்னு வயித்தில ஒன்னுன்னு..பேச்சப் பாரு...அப்பா ஆகப் போறானாம்...இந்த குறுக்கு புத்திக்கு அப்படியே அப்பனக் கொண்டிருக்கான்...

டேய் ராகவ்...பந்தக்கால் நடறதுக்க்கு ஆள் சொல்லிட்டு வரச் சொன்னேனே..ஆச்சா

ஓவரா சீன் போடாதம்மா....அதெல்லாம் அப்பவே ஆச்சு...எனக்கு ஒரு ஆயிரம் ரூபா கைல குடுத்து வை...அவசரத்துக்கு வேணும்ன்னு கேட்டேனே என்னாச்சு...

அவசரத்துக்கு ஆயிரமா...அப்பிடி என்ன அவசரம் உனக்கு...?

அக்கா கல்யாணத்துக்கு பார்ட்டி எங்கடான்னு ப்ரெண்ட்ஸெல்லாம் ஒரே நச்சரிப்பும்மா...

சரி சரி...இந்தா நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிடுங்கோடா...நான் வெஜ்லாம் திங்காதடா...பாட்டி கேட்டா என் உசிர எடுத்துடுவா...

ஆமாண்டா ராகவ்...நல்ல சைவ உடுப்பி ஹோட்டலா பார்த்து சாப்பிடுங்கோ...யெப்பா தாங்கலடா சாமி...அம்மாவும் பிள்ளையும் ட்ராமா கம்பெனி ஆரம்பிக்கலாம்டா...சாப்பாடு சாப்பிட ஆயிரம் ரூபாயாம்...என்ன பார்ட்டின்னு எங்களுக்கு தெரியாதா....கேக்கிற மாதிரி கேக்கிறதென்ன...குடுக்கிற மாதிரி குடுக்கிறதென்ன....யெப்பா...வீட்டுல..முழிச்சிண்டிருக்கிற போதே முழியப் பிடுங்குறீங்களேப்பா...

என்ன சுஜா மேடம்...வீட்டுல மூக்கும் முழியுமா வாட்ட சாட்டமா புதுசா ஒரு பையன் வந்திருக்கான் போல...

ஏய் சும்மா கிண்டாடதடி...அவன் எங்க அத்தையோடு நாத்தனார் பிள்ளை...தூரத்து சொந்தம்

ஓ அப்போ உனக்கு அண்ணா முறையா...

சீச் சீ...வாய பினாயில் விட்டு கழுவு...தூரத்து முறைப் பையன்டி

ஓ அதான் தூரத்திலேர்ந்து உன்னையே முறைச்சிண்டே இருக்கானா

ஏய்...அப்படியே ஓடி போயிடு இது நம்ம கோட்டா...தெரியுமில்ல...

இதோ பாருங்கோ இங்க கல்யாணத்துக்கு வந்திருக்கிறவா முன்னாடி என் புடவைய பிடிச்சிண்டு பின்னாடியே வராதீங்கோ...மானம் போறது. ராத்திரி ஆம்பிளைகள் படுத்துக்கறதுக்கு ஹால்லயும் மொட்டைமாடிலயும் ஏற்பாடு பண்ணியிருக்கா...என் கூடத் தான் படுத்துப்பேன்னு சாக்கு போக்கு சொல்லதீங்கோ...உங்க அக்கா பெண்களெல்லாம் கிண்டல் தாங்க முடியலை...

என்ன மாமி மாமா என்ன சொல்றார்....ராத்திரி உங்க கூடத் தான் படுத்துப்பேங்கிறாரா...மொட்டை மாடில படுத்துண்டா ஜலதோஷம் வந்திரும்....இல்லையா மாமா..??

பார்க்கத் தான் போறேன்டி...நாளைக்கு உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி உங்க ஆத்துகாரரையெல்லாம் எங்க அனுப்பறீங்கன்னு...சை...என்ன பொழப்புடா இது ...பூஞ்சை உடம்புக்காரன மொட்டைமாடில படு, கட்டைமாடில படுன்னு...

வேன் காலம்பற அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடும்...மூனு ட்ரிப் அடிக்கும்...கிச்சு டெம்போக்கும் சொல்லி இருக்கேன்...மத்த சாமானையெல்லாம் நீ ஏத்திண்டு அதுல வந்துடு...நான் இவாள எல்லாரையும் பேக்கப் பண்ணிண்டு வந்துடறேன்...

ஐய்யோ ஐய்யோ...லைட்ட போடுங்கோ போடுங்கொ....கழிசல்ல போக யாரோ என் இடுப்ப பிடிச்சிட்டா.....லைட்ட போடுங்கோ

மாமி சத்தம் போடாதீங்கோ....நான் தான்...மொட்டை மாடில படுத்துண்டு..வாடைக் காத்துல நெஞ்சடைக்கிற மாதிரி இருந்துது...என் பெண்டாட்டின்னு நினைச்சு...விக்ஸ் இருக்கான்னு கேக்கலாம்ன்னு...சாரி அவள நினைச்சு உங்களை எழுப்பிட்டேன்...

ஏன்டா பிரம்மஹத்தி....பெண்டாட்டிய எழுப்பறவன் இப்படியாடா இடுப்ப பிடிச்சு நிமிண்டுவ...ராத்திரி நெஞ்சடைக்கறது .கு**%*(அடைக்கிறதுன்னு ஏதாவது சாக்கு போக்கு....மே மாசத்துல எங்கடா வாடை காத்து அடிக்கிறது.. கட்டைல போறவனே...என்னம்மா நிமிண்டிட்ட.... சௌம்யா எப்படித்தான் இவன சமாளிக்கிறயோ...நானும் ஏழு பெத்திருக்கேன்...எங்காத்துக்காரர்லாம் இவ்வளவு இல்லைம்மா...

ஸ்ஸ்ஸ் ஏன்னா உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா...அப்பவே படிச்சு படிச்சு சொன்னே கேட்டேளா...பெண்டாட்டிக்கும் பெருச்சாளிக்கும் வித்தியாசம் தெரியாதா...உங்க அத்தைபாட்டி மாதிரியா இருக்கேன் நான்...எனக்கென்ன இத்தோட ஓயாது நாளைக்கு...பி.பி.சி ப்ளாஷ் நியூஸ் மாதிரி மண்டபம் புல்லா நாறடிக்கப் போறா...கொஞ்சம் கூட வெட்கமே இல்லாத ஜென்மம்...உங்களப் போய் எங்கேர்ந்து பிடிச்சேனோ...சே...

ஏன்டி விசாலம் உம் பொண்ணு குளிக்கப் போனாளா இல்ல கிணறு வெட்டப் போனாளா...எம்புட்டு நேரமாச்சுடி பாத்ரூமுக்குள்ள போய்....வேன் வந்து காத்திண்டு இருக்கு....சீக்கிரம் வரச் சொல்லுடி...

ஏன்னா...இந்தாங்கோ இவன பிடிங்கோ...இவன கக்கா போக வைக்க வேண்டியது உங்க பொறுப்பு...உசிர வாங்கறான்...பட்டுப் புடவைய உடுத்திண்டு வேன்ல ஏறி மடில உட்கார்ந்த உடனே டான்னு மணியடிச்ச மாதிரி கக்கா வந்துடும் உங்க புள்ளைக்கு....என்னால வைச்சுக்கு முடியாது உங்க பாடு

கிச்சு சாமானெல்லாம் ஏத்தியாச்சா.....நீ முன்னாடி கிளம்பு...நாங்க வந்துண்ட்டே இருக்கோம்....விசாலம் எல்லாம் எடுத்துண்டாச்சா...நல்ல சகுனமா பாத்து வண்டிய கிளப்புப்பா...முக்குப் பிள்ளையார் கோவில்ல கொஞ்சம் நிறுத்துப்பா தேங்காய விடல் போட்டுட்டு அப்படியே கிளப்பிடலாம்...ம்ம் ரை ரைட்..

இதன் தொடர்ச்சி தான் நான் 2007ல் எழுதிய "கல்யாணம்". அதையும் ஒரு தரம் ரிவைஸ் பண்ணிக்கலாமே :))