Sunday, December 05, 2004

என்டே குருவாயூரப்பா...

for picture version of this post click here


குருவாயூர் கோயிலிலேயே மிகவும் காஸ்ட்லியான பூஜை "உதயாஸ்த்மன பூஜை". இந்த பூஜை செய்வதற்கு கட்டளைதாரரிடம்...ரூபாய் ஐம்பதினாயிரம் வசூலிக்கப் படுகிறது. இதில் என்ன விசேஷ்ம் என்றால் வருடத்திற்கு 130 நாள் நடக்கும் இந்த காஸ்ட்லியான பூஜை 2046-வது வருடம் வரை புக் ஆகிவிட்டதாம். அதாவது கிட்டத்தட்ட ரூபாய் இருபத்தேழு கோடிக்கு மேல் பக்த கோடிகள் பணம் செலுத்தியாகிவிட்டதாம். (புக் செய்யும் போதே முழுப் பணமும் செலுத்தவேண்டுமாம்).

திருப்பதி கோயிலில் இந்த மாதிரி விஷயம் எல்லாம் சர்வ சாதாரணம். நானும் ஆஸ்திகன் தான். எனக்கு கடவுள் பக்தியில் ஆட்சேபனை இல்லை. ஆனால் இந்த மாதிரி கட்டுக் கட்டாக (லட்சம், கோடி) போடும் அதீத பக்தியில் மட்டும் சில சிந்தனைகள். இந்த மெகா பக்தர்கள் முழுதாக வருமான வரி செலுத்தியிருப்பார்களா? கோயிலில் லட்சம், கோடி போடுபவர்களெல்லாம் வருமான வரியில் கணக்கு காட்டியிருக்கவேண்டும் என்று ஒரு சட்டம் வந்தால் ஒருவேளை உண்டியல் பல்லைக் காட்டிவிடுமோ? இந்த பணக்கார தேவஸ்தானங்களுக்கு கொட்டிக் குடுப்பதை விட, நலிந்தவர், உதவி தேவைப்படும் அனாதை / உனமுற்றோர் / முதியோர் இல்லங்கள் குடுத்தால் உம்மாச்சி இன்னும் கொஞ்சம் கருணை காட்டுவாரோ?

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் ...என்பதெல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் தானா?

மேலும் படிக்க...

Tuesday, November 30, 2004

7G ரெயின்போ காலனி

for picture version of this post click here

9/f, பொன்னம்பலம் சாலை - கே.கே.நகர் - இது தான் நாங்கள் சென்னையில் முதன் முதலில் வசித்த வீடு. இங்கு எங்களுக்கு முன்பு கஸ்தூரி ராஜா இருந்தார். செல்வராகவன் இந்த அனுபவங்களைத் தான் எடுத்திருக்கிறாரா தெரியவில்லை. ஆனால் படத்தில் பல சீன்களில் கே.கே.நகர் நியாபகம் வந்தது. நாங்கள் சென்னை வந்த புதிதில் இதே மாதிரி காலை 4 மணிக்கெல்லாம் தண்ணியடிக்க எழுந்திருக்கவேண்டும். தாமிரபரணித் தண்ணி குடித்து வந்த மதமதப்பில் டேங்கில் வரும் கிணற்றுத்தண்ணி வாயில் வைக்க விளங்காது. அதிகாலையிலேயெ நாங்கள் இருந்த கே.கே.நகர் பகுதி கலகலப்பாக இருக்கும். அம்மா இரண்டாவது மாடியிலிருந்து கிணற்றில் இறைப்பது மாதிரி வாளியை மேலே இழுப்பார். நானும் அப்பாவும் அடிபம்ப்பில் அல்லாடிக்கொண்டிருப்போம். அப்போதெல்லாம் அது எரிச்சலாக வரும்.(படத்தில் வருவது மாதிரி மத்த மாமிகளையெல்லாம் சைட் அடிக்கல்லாம் முடியாது எல்லார் வீட்டிலும் ஆம்பளைகள் தான் வருவார்கள்). ஆனால் இப்படி காலை 4 மணிக்கு எழுந்து உண்மையாக தண்ணியடித்து விட்டு படுத்தால் ஒரு தூக்கம் வரும் பாருங்கள்...அதன் சுகமே தனி.

அதே மாதிரி தான் பால் வாங்குவதும். பாக்கட் பாலைவிட க்யூவில் நின்று வாங்கிவரும் பால் நல்ல கொழுப்பாக இருப்பதாக அம்மாவும் அப்பாவும் அடம் பிடிப்பார்கள். அப்பா தான் பெரும்பாலும் வாங்கி வருவார் ஆனால் பலமுறை நானும் போகவேண்டிவரும். பால் பூத் இன்ட்ரெஸ்ட்ங்காக இருக்கும். ஏகப்பட்ட அனுபவங்கள், வித விதமான மனிதர்கள், விதவிதமான சண்டைகள். முதலில் எல்லா பையன்கள் மாதிரி நானும் சலித்துக்கொண்டு தான் போனேன். சர்வைவல் பார் த பிட்டஸ்ட் தத்துவதை கண்கூடாகப் பார்கலாம். பண்டிகை காலங்களில் பால் லாரி வராது, தேவுடு காக்கவேண்டும். வ்ந்தாலும் அரை லோடு தான் வரும். அரைத்தூக்கத்தில் க்யூவில் இடத்தை விட்டுவிடக் கூடாது. க்யூவில் முன்னாடி நிற்கும் நைட்டி பரதேவதைகள் தெரிந்தவர்கள்,மச்சான் மதினி தூக்கையெல்லாம் வாங்கி சேவை புரிவார்கள். அப்போது சவுண்டு விடுபவர்களோடு சேர்ந்து கொண்டால் தான் நமக்கு பால் கிடைக்கும் இல்லாவிட்டால் வெறும் தூக்குச் சட்டி தான். பால் லாரி வந்தவுடன் பூத் பக்கத்தில் வீடு இருக்கும் கனவான்கள் நைசாக உள்ளே புகுந்து விடுவார்கள். இது போக பூத்காரனுக்கு தெரிந்த குடுத்து வைத்த ஆத்மாக்கள்.... இவ்வளவிலும் அடிச்சு பிடிச்சு தில்லாலங்கடி வேலை காட்டி பால் வாங்கி வருவது பெரிய சாதனை தான். எல்லாம் முதல் ஒன்றரை வருடம் மட்டும் தான் அப்புறம் நாங்களும் சென்னை நகர ப்ளாட் சோம்பேறிகளாகி விட்டோம். ஆனால் தண்ணியடிப்பவர்கள், ஐய்யப்பன் கோவில், அம்மன் கோவில், பால் பூத் என்று நாங்கள் வசித்த கே.கே.நகர் காலை நான்கு மணிக்கெல்லாம் அசாத்திய சுறுசுறுப்புடன் இருக்கும்.(இன்னமும் அப்பிடித் தான் என்று நினைக்கிறேன்). அதெல்லாம் ஒரு அனுபவம் தான்.

இந்தப் படம் செல்வராகவனின் சொந்த அனுபவம் என்று ஏதோ ஒரு பேட்டியில் படித்தேன். (ஹும்ம்ம்ம்ம் சோனியா அகர்வாலை மடக்க கதாநாயகன் படும் பாடு உள்படவா என்று தெரியவில்லை...:P). படதில் எல்லாரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். சில படங்களில் கதாநாயகி ரெட்டை ஜடை போட்டால் ஸ்கூல் போவார், இல்லாவிட்டால் அம்மாவாகிவிடுவார். அதுமாதிரி இல்லாமல் சோனியா நிஜமான சேட்டு வீட்டுப் பொண்ணு மாதிரி பாத்திரத்திற்கு எதுவாக உள்ளார். கதாநாயகன் முதல் படமாக இருந்தாலும் பட்டைய கிளப்பி இருக்கிறார். கடைசியில் டைரக்டர் மனதை தொட நினைத்து கதாநாயகியைக் கொன்றாலும் எனக்கென்னவோ டச்சிங் டச்சிங் ஆகவே இல்லை. இதைவிட காதல் கொண்டேன் என்னவோ மனதைத் தொட்டது.

Saturday, November 13, 2004

தீவாளி...

for picture version of this post click here

காசைக் கரியாக்கினது போக இந்த தீபாவளிக்கு பவுண்டையும் சந்தோஷமாகக் கரியாக்கினோம். மனைவி தயவில் தீபாவளி லேகியம் இல்லாமல் இந்த முறை எந்த அசம்பாவிதமும் இல்லாமல் டிப்பிக்கல் தேசி தீபாவளி சிறப்பாக கழிந்தது. "உங்க நினைப்பாகவே இருக்கு; தீபாவளிக்கு குழந்தைகள் இல்லையே...என்ன செய்ய..; அங்க வெடியெல்லாம் போடமுடியுமோ?; ஏதுடா இது தீபாவளிக்கு லீவெல்லாம் விடமாட்டாளா? எல்லாருக்கும் என்ன ட்ரெஸ் எடுத்தே?" போன்ற சம்பாஷணைகளுக்குப் பிறகு சன் டி.வி பட்டிமன்றம், சினிமா, நட்சத்திரங்கள் பேட்டி என்று சாயங்காலம் வரை சோபாவில் படுத்த வண்ணமே சிறப்பாக கழிந்தது.
தீபாவளி அன்னிக்காவது சோபாவை விட்டு நகரக் கூடாதா என்று அடிக்கடி அடுக்களையில் பிஜிலி வெடித்தாலும்...என்ன தான் சொல்லுங்கள்...அப்பிடியே படுத்துக் கொண்டு பட்சணங்களை கொறித்துக் கொண்டே நடிகை ஜிகினா தேவியின் மலரும் நினைவுகளைப் பார்ப்பதே ஒரு அலாதியான சுகம் தான்.

சாயங்காலம் பவுணடை கரியாக்கும் வைபோவம். பட்டாசு இல்லாத தீபாவளியெல்லாம் ஒரு தீபாவளியா? அதுக்கு அம்மாவசையே எவ்வளவோ மேல்.(ஸ்கூல் படிக்கும் போது அம்மாவசை அன்னிக்கு அப்பா மாமா எல்லோரும் அதிகாலையிலேயே தர்பணம் செய்யப் ஆத்தங்கரைக்குப் போய்விடுவார்கள்..லேட்டா எந்திரிக்கலாம்...ஜாலி) குழந்தைகளோடு சேர்ந்து வண்ண வண்ணமாகக் கரியாக்கினோம். ராக்கெட் பெரிது பெரிதாகக் கிடைத்தாலும், ஊர் மாதிரி யார் வீட்டிலாவது புகுந்து விட்டால் ஓடி ஒளிய முடியாதென்பதால்...அடுத்த வருடம் (ஒளிந்து கொள்ள நல்ல இடமாக பார்த்துக் கொண்டு) ஒரு கை பார்த்துக் கொள்ளலாமென்று முடிவு செய்துள்ளோம். 2000 வாலா இல்லாது தான் ஒரு சின்னக் குறை. அமெரிக்காவில் இருக்கும் நண்பர்களின் நிலையை நினைத்துக் கொண்டு மனதை தேற்றிக்கொண்டோம்.

உங்க வீட்டுல கொண்டாட்டமெல்லாம் எப்பிடி?

Sunday, November 07, 2004

டுபுக்கு பகவான் கருணையே கருணை...

for picture version of this post click here

உங்களுக்கு காணாமல் போன நண்பர்களைத் தேட வேண்டுமா? டுபுக்குக்கு பகவானுக்கு ஒரு ஆயிரத்தொரு ரூபாய் நேர்ந்து வைத்துவிட்டு இங்கே நல்லா தேடுங்கோ கிடைச்சாலும் கிடைப்பா...டுபுக்கு பகவானுக்கு பவுண்டுனாலும் ரொம்ப இஷ்டம் தான்.
பகவானின் அருளால் லேட்டஸ்டாக கூடிய நண்பர்கள் விபரம்...

Wednesday, October 13, 2004

வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்

பொண்டாட்டி முகம் போரடிக்குதேன்னு பொறக்கடை பக்கம் போனா மாமியாக்காரி வந்து நின்னாளாம்...அந்த கதையா...ஆபிஸில வேற வாடிக்கையாளர் வேற ஆபிஸ், புது மக்கள், புது ப்ராஜெக்ட்...ஆனா அதே தொல்லை அதே சாமியாட்டம் ...அதே பப்ஃபூன் வேஷம். மொத்தத்துல சிக்கல் போய் சிரங்கு வந்திருக்கு சாப்ட்வேர்ல இருக்கறதுக்கு பதிலாக பேசாம கக்கூஸ் கழுவப் போகலாமான்னு யோசிக்கறேன்.
ஹி ஹீ ...இந்த பில்டப்லாம் எதுக்குன்னு புரிஞ்சிருக்குமே...அதே தான்..இன்னும் கொஞ்ச நாள்...அதாவது ஆபிஸ்ல அடுத்த சனிப்பெயர்ச்சி வரைக்கும்...அப்போ அப்போ தான் இங்க எழுத முடியும். உடம்ப பார்த்துக்கோங்கோ...நான் போய் கக்கூஸ் கழுவிட்டு வந்துடறேன்..

Thursday, September 23, 2004

டுபுக்கோதெரப்பி

For picture version of this post click here

மலச்சிக்கல் தீர முத்தான மூன்று வழிகள்

1. தினமும் ஹார்லிக்ஸ் அருந்த வேண்டும், அவங்களுக்குத் தான் "Insideலேர்ந்து outside போகனும் அவசியம்"ன்னு தெரிஞ்சுருக்கு. அதோட ஸ்கூல் ட்ரெஸ் போட்டுக்கிட்டு பென்ஞ் மேலே ஏறி "இபான்ங்...உபான்ங்."னு மாவரைக்கிற மாதிரி ஆடிக்கிட்டே சொன்னா உத்தமம்.
2. ஒரு பாட்டில் ப்ரான்ஞ் ஆயில ஒரே கல்ப்ல அடிச்சுட்டு சீனா தானா பாட்டு வீணை டான்ஸ்(அம்மணகுன்ஸ்) ஆட்டம் போட்டா உடனடி நிவாரணம் தான்.
3. ஜெயலெச்சுமி அக்கா கிட்ட ஒரு பொட்டிய வாங்கிட்டு சன் டிவியை பகைத்துக் கொண்டால் வயிற்றைக் கலக்குவதற்கு அவர்கள் க்யாரண்டி.
(அடிக்கடி வெண்ணிறாடை மூர்த்தி மாதிரி வயிற்றைத் தட்டிக் கொண்டு தம்பிரீரீ...ப்ராக்டீஸ் செய்தால் இந்தப் பிரச்சனை தலையே காட்டாது).
பி.கு - டுபுக்கு சொன்னா நக்கல்வுடுவீங்க...கட்டிப்புடி வைத்தியம், கேரம் போடு வைத்தியமெல்லாம் நம்ம சகலகலா டாக்டர் சொன்னா ஃப்லீங்கா பார்ப்பீங்க...ஹும்ம்...

Wednesday, September 22, 2004

திரைக் கண்ணோட்டம்

for picture version of this post click here

மெகா சீரியல் மயக்கத்திலிருந்து தப்பிக்கலாமென்று போன வாரம் இரண்டு படங்கள் பார்த்தோம். வசூல் ராஜாவும், நியுவும்.

சகல கலா டாக்டர்

தலைவர் கமல் படமென்றால் மிகுந்த எத்ர்பார்ப்புடன் நல்ல ப்ரிண்ட் வரும் வரை தேவுடு காத்து ஆசையோடு பார்ப்பேன். படம் குப்பையாக இருந்தாலும் கமல் கலக்குவார் என்ற நம்பிக்கை உண்டு எனக்கு. டாக்டர் படமும் பரவாயில்லை, கமலும் வழக்கம் போல கலக்கியிருந்தார். கிரேஸி மோகன் வசனம் - கிச்சுக்கிச்விற்கு குறைவில்லை. கதை நார்மல் மசாலா கதை தான் என்றாலும் கமல், பிரபு, பிரகாஷ்ராஜ் இவர்களால் சோபிக்கிறது. பிரபுவிற்கு நல்ல வாய்ப்பு. பிரபு கமல் காம்பினேஷனில் காமெடி நன்றாக இருக்கிறது. ஸ்னேகா கண்ணுக்கு குளிர்ச்சியாக...வேண்டாம் நான் ஒன்னுமே சொல்லலை..மறந்திருங்க. டி.வி. பேட்டிகளிலெல்லாம் கமலுடன் நடித்தது பற்றி அம்மணி சொல்லும் போது பயங்கரமாக ஜொள்ளினது போல் தோன்றியது எனக்கு.
கமலுக்கு நிறைய பிரச்சனை என்று கேள்விப்பட்டேன். ஆனால் உடம்பு பயங்கர குண்டாயிட்ட மாதிரி தெரிகிறது. பிரபு கமல் பக்கத்தில் ஒல்லியா இருக்கார். படத்தில் குறிப்பிட வேண்டியது சீனா தானா பாட்டு. ஒரு புது குட்டி(யாரு இது??) நாலஞ்சு குட்டிகளோட பஞ்சகச்சம் மாதிரி (அதாங்க வயல்ல வேலை செய்யற ஆம்பளைங்க கட்டிகினு இருப்பாங்களே அது மாதிரி) புடவைய துக்குனூன்டு கட்டிண்டு சீய்ச் சீய்...ஒரே சல்லியம். பாட்டும் பாட்டுக்கேத்த மாதிரி அந்த குட்டிகள் போடற கெட்ட ஆட்டமும்...வாய், கண், காதுன்னு பொத்திக்கறதுக்கு ரெண்டு கை போறாது. அந்த குட்டி இதுல வீணை வேறு வாசிக்கற மாதிரி ஆடறா...சரஸ்வதி கடாட்ஷம் தாண்டவமாடறது. நானும் ட்ரை பண்ணினேன் சுளுக்கிக் கொண்டது தான் மிச்சம். நான் ரொம்ப சாட்றேன்னு நினைக்காதீங்கோ...நானும் ஒருதடவைக்கு ரெண்டு மூணு தரம் பார்த்து கன்ஃபார்ம் பண்ணிட்டுத் தான் சொல்லறேன்.
ஆனாலும் படம் நல்லா இருக்கு.

நியூ

போட்ட கொஞ்ச நேரத்துலயே சவுண்ட ம்யூட் செய்ய வேண்டி இருந்தது. அப்பிடியும் படம் ரொம்ப ஆபாசமா இருந்த்துனால...இப்ப்பிடிப்பட்ட படத்தை எல்லாம் பார்கனுமான்னு ஆஃப் பண்ணி எல்லாரையும் தூங்கச் சொல்லிட்டு அப்புறம் நான் மட்டும் ராத்திரி தனியா பார்த்தேன். சொல்லறதுக்கு ஒன்னும் விசேஷமா இல்லை.

Saturday, September 11, 2004

புதுசு கண்ணா புதுசு

For picture version click here

அப்பா அம்மாக்கு போர் அடிக்கிறதே என்று சன் டி.வி. போட்டாச்சு. நான்கு வருட இடைவெளிக்கப்புறம் திரும்பவும் சன் டி.வி. உறவு. குடுத்த முன்னூறு பவுண்டுக்கு குறைவில்லாமல் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவில் ஆரம்பித்து அம்மாக்காக மெகா சீரியல் போட்டு இப்போது எனக்கும் சீரியல் கிறுக்கு தலைக்கேறியாச்சு. முதலில் கொஞ்சம் கஷ்டமாயிருந்த்து. ஒரே நடிகர்கள் அடுத்த அடுத்த சீரியலில் வெவ்வேறு காரக்டர்களில் வந்தது குழப்பமாக இருந்த்து. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கமாகி விட்டது.
நாங்களும் வெள்ளிக்கிழமை விளக்கேற்றி விட்டு அண்ணாமலை ஜீவா இறந்த்ததிற்கு துக்கம் அனுஷ்டித்தோம். எட்டு மணிக்கு மெட்டி ஒலியில் ஆரம்பித்து 9:30 மணிக்கு மனைவி முடிந்த அப்புறம் தான் வயிறே பசிக்கிறது. இது ரொம்ப ஓவராகி ஒரு நாள் லேட்டாக வரும் போது பித்தம் தலைக்கேறி செல்போன் வழியாக சீரியல் வசனமெல்லாம் கேட்டேன். இப்போதெல்லாம் நானும் பொம்மனாட்டிகள் கனக்க சீரியல் கதை விவாதங்களிலெல்லாம் வீட்டில் கலந்து கொள்கிறேன்.
இது தவிர எனக்கு டி.வி.யில் பிடித்த இன்னொரு விஷயம் விளம்பரங்கள். முன்னாடி மாதிரி ஒரு கரகர மாமா உச்ச ஸ்தாயியில் அலறாமல் இப்போதெல்லாம் விளம்பரங்களில் மிகவும் மெனக்கெடுகிறார்கள். விக்கோ வஜ்ரதந்தி, நிஜாம் பாக்கு மாதிரி ஒன்றிரண்டு பேர் மட்டும் ஆதிகால விளம்பரங்களை வைத்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாளவிகா தொப்பையைக் காட்டிக் கொண்டு திங் திங்கென்று ஆடுகிற மாதிரி குதிக்கிறார். ஸ்னேகா சமைக்கிறதுக்கெல்லாம் ஆடுகிறார். ஜில்லெட், டாட்ட இன்டிகா விளம்பரங்களில் பொம்மனாட்டிகள் ரொம்ப ஈடுபாட்டுடன் ஷேவிங் செய்கிறார்கள். அதில் வரும் ஆம்பளைகள் வழக்கம் போல் அவர்களை கண்டுகொள்ளாமல் செல்கிறார்கள். (&*&*?!£!?)
விளம்பரங்களில் பின்னனி இசை மிகவும் முன்னேறி இருக்கிறது. ஜிங்கிள்ஸ் (அதாங்க பின்னனி இசை - நேக்கும் இந்த டெக்கினிக்கல் டேர்ம் எல்லாம் தெரியுமாக்கும்) எல்லாம் மனதில் பதிந்து முனுமுனுக்க வைக்கிறது. கல்யாணி கவரிங், குமரன் சில்க்ஸ், விழுப்புரம் கன்னிகா பரமேஸ்வரி ஸ்டோர்ஸ் - பிடித்தவற்றில் சில.
குங்குமம், ஆனந்தவிகடன் போன்றவர்களும் விளம்பர கோதாவில் குதித்திருக்கிறார்கள். குங்குமம் செலவழிக்கும் ரூபாய்க்கும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக செய்திருக்கலாம் என்பது என் தனிபட்ட அபிப்ராயம். ஆனால் மொத்தத்தில் விளம்பரங்கள் முன்ன மாதிரி போரடித்து ரிமோடைத் தேட வைக்கவில்லை.

Tuesday, September 07, 2004

சௌபாக்கியவதி

for picture version click here

போன முறை பெற்றோரை அழைத்து வர இந்தியா சென்ற போது, ரெண்டு மூனு டி.வி.டி வாங்கி வந்தேன். தில்லானா மோகனாம்பாள் வாங்கிவிட்டு வேறென்ன வாங்கலாமென்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அது கண்ணில் பட்டது. எல்லாமே பழைய படங்கள் தான் என்று முடிவு செய்திருந்தேனாகையால் பழைய படங்கள் வரிசையை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்.(நான் கூட இல்லாட்ட இந்த மாதிரி தான் கூத்தடிப்பீங்க - மனைவி). திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு பஸ்ஸில் கிளம்பும் முன் இவ்வளவு கூத்தும். நல்ல கடை. அரதப் பழசு படங்கள் கூட இருந்தது. சௌபாக்கியவதி - ஜெமினி கணேசன், சாவித்திரி, தங்கவேலு இவர்களுடன் மந்திரவாதி மாமா வேஷத்தில் ரங்கராவ் வேறு நின்று கொண்டிருந்ததால் டபக்கென்று வாங்கிவிட்டேன். இருந்தாலும் நல்ல படமா என்று சந்தேகமாக இருந்த்து. பஸ்ஸில் வந்து அம்மா,அப்பாவிடம் காட்டினேன். "ஏன்டா கில்லி நன்னாருக்காமே அதெல்லாம் வாங்காம இதப் போய் வாங்கிருக்கியே? " - அவர்கள் கேட்டவுடனேயே புரிஞ்சு போச்சு வீட்டுல ரியாக்சஷன் எப்பிடி இருக்கும் என்று. அதே மாதிரி ஒரு வாரம் கழித்து தான் படத்தைப் போட முடிந்தது.
நல்ல படம். எழுத்து போடும் போதே லலிதா சகஸ்ரநாமம் மாதிரி ஏதோ ஒரு ஸ்லோகம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். "இந்த ஸ்லோகம் நம்மாத்துல இல்லையே...ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்..ஸ்லோக கேஸட்டுமாவும் ஆச்சு, படமாவும் ஆச்சு" என்று சப்பைக் கட்டு கட்டிப் பார்த்தேன். எடுபடவில்லை.
ரங்கராவ் மந்திரவாதி என்று படம் முழுக்க செல்ஃப் டிசைன் போட்ட கருப்பு உள்பாவாடையைக் கட்டிக் கொண்டு வருகிறார். ஆள் நல்ல ஆஜானுபாகுவாக இருக்கிறார். ஜெமினி கணேசன் ஜரி வேலைப்பாடு கொண்ட பேண்ட்டுடன் மிடி போட்டுக் கொண்டு வருகிறார். கதை - ஜெமினி கணேசன் சாவித்திரி தம்பதியை தன்னுடைய சுயநலத்துக்காக பிரிக்கப் பார்க்கிறான் மந்திரவாதி ரங்கராவ். சாவித்திரி உம்மாச்சியைக்கு துணைக்கழைக்கிறார். ஜெமினி - ரங்கராவ் டிஷ்ஷூம் டிஷ்ஷும் ஜெயம் சுபம். தங்கவேலு- முத்துலெட்சுமி காமெடி. "திலலையம்பல நடராஜா..." சூப்பர் ஹிட் பாடல்.

Sunday, September 05, 2004

வந்துட்டான்யா...வந்துட்டான்யா

For picture version Click here

வணக்கம்....நலம் நலமறிய ஆவல். கொஞ்ச நாளாக ஆபிஸிலும் வீட்டிலும் கூடுதல் பொறுப்பு. வேலை பெண்ட் நிமிர்ந்து விட்டது. அதான் இந்தப் பக்கம் ஆளையே காணவில்லை.மீண்டும் அப்பாவாகிருக்கிறேன். கடவுள் அருளால் பெண் குழந்தை. அத்விகா(Advika) என்று பெயரிட்டிருக்கிறோம். தாயும் சேயும் நலம். ஆபிஸ் வேலையில் கூடுதல் பொறுப்பு வேண்டாம் சமாளிக்கமுடியவில்லை என்று கேட்டிருக்கிறேன். கூடிய சீக்கிரம் விடியுமென்று நினைக்கிறேன்.
மற்றபடி நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமென்று நம்புகிறேன். அக்கறையுடன் என்னை விசாரித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி. தகவல் கேட்டிருந்தவர்களுக்கு தனியே பதில் அனுப்ப முயற்சி செய்கிறேன்.

Saturday, June 26, 2004

இவனுக்கு வேற வேலையே இல்லை...?

எப்போ பாரு இந்த வாரம் எழுத முடியல...அடுத்த வாரம் எழுத முடியலன்னு ..முயற்சிக்கிறேன்...இப்பிடியே ஓட்டிக்கிட்டு இருக்கான்..என்ன தான் நினைச்சிக்கிட்டு இருக்கான் மனசுல...நாலு பேரு படிக்கிறதால பந்தா விடறானா? இதுக்கு பேசாம இழுத்து மூடிட்டு போயிடலாமே...ரஜினி மாதிரி இப்போ வரேன் அப்போ வரேன்னு இன்னொரு தரம் அறிக்கை விடு மவனே அப்புறம் இருக்கு உனக்கு...

அண்ணே அண்ணே...வேண்டாம்ன்ணே...எதோ சின்னப் பையன்...மன்னிச்சுவிட்றுங்க...வேலை ஜாஸ்த்தியாயிடுச்சு...புதுசா பொறுப்புக்கள் குடுத்திருக்காங்க..அதான் வரவே முடியலை. அதனால இனிமே கொஞ்ச நாளைக்கு வாரக் கடைசில மட்டும் தான் வர முடியும்ன்னு நினைக்கிறேன். அதுவும் எவ்வளவு தூரம் நடக்கும்ன்னு தெரியலை.. கிடைக்கிற சந்தர்பத்தில இங்கேயும் உங்க வலைப்பதிவுகளிலும் உங்கள் சந்திக்கிறேன். அதுவரைக்கும்.....

Monday, June 14, 2004

அதே தான்..!

for picture version of this post(?!!&) click here
திடீரென்று ஒரு வாரம் வாடிக்கையாளர் இடத்துக்குப் போய் அவர்கள் கழுத்தை அறு என்று உத்தரவு வந்துவிட்டதால்...வாடிக்கையாளர் இடத்திற்கு போகவேண்டியதாகிவிட்டது. நான் அறுத்ததிற்கு பழிவாங்கும் விதமாக அவர்கள் என் கழுத்தை அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.எத்தனை நாட்கள் இது நீடிக்கும் என்று தெரியாது.
எப்பிடியாவது எழுதிவிடலாமென்று நினைத்திருந்தேன். வாரக் கடைசியிலாவது எழுதலாமென்றால் வெளியே சென்று விட்டேன். இந்த வாரம் திருட்டுத் தனமாகவாவது எழுத முயற்சிக்கிறேன். முடியாவிட்டால் கோச்சுக்காதீங்க. (கட்டளை தான் நியாபகத்துக்கு வருது :P)
ஹூம் திருட்டுத்தனமாகவாவது உங்க வலைப்பதிவுகளையெல்லாம் படிக்க முயற்சிக்கிறேன்.

Friday, June 04, 2004

பெத்த மனம்.

for picture version of this post Part 1 Part 2

விசிஷ்டாவிற்கு பிறந்தநாள். விசிஷ்டா வர்ஷாவின் முதல் நண்பன். என்ன வாங்கலாம் என்று ஒரே மணடைக் குடைச்சல். சின்னக் குழந்தை மாதிரி கடையில் இருந்த எல்லா விளையாட்டு பொருட்களையும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்தேன். பேசாமல் வர்ஷாவையும் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் வந்தால் அவளுக்கும் ஒன்று அதே மாதிரி வாங்கவேண்டும். எதுக்கு இப்போ தண்டச் செலவு. இப்போதான் பிறந்தநாள் கழிந்து ஏகப்பட்ட விளையாட்டுச் சாமான்கள் பரிசாக வந்திருக்கு.ஏற்கனவே வீட்டில் இருக்கும் பார்பி பொம்மைகள், கரடிப் பொம்மைகள்,அவைகளை என் மகள் சொகுசாக வைத்துக் கொண்டு ஊர்வலம் வர ஒரு தள்ளுவண்டி, பிறந்தநாளுக்கு வாங்கிக் குடுத்த சைக்கிள், சைக்கிளில் பின்னாடி உட்கார்ந்து கொண்டுவர இன்னொரு பொம்மை...இது போக ஏற்கனவே இருக்கும் சப்பு சவரு...எவ்வளவு பொம்மைகள்? போறாதா? வீட்டில் வைப்பதற்கே இடமில்லை. நான் சின்னப் பையனாக இருந்த போது இவற்றில் காலில் பாதியைக்கூட கண்ணால் பார்த்தது இல்லை. விளையாட இவ்வளவு போதாதா...எல்லாவற்றிக்கும் கொடுத்த விலையைக் கூட்டிப் பார்த்தால் தலையைச் சுற்றும். பைசா என்ன மரத்திலா காய்க்கிறது? ரொம்ப வாங்கிக் குடுத்து குழந்தையைக் கெடுக்கக் கூடாது.

நாலு வயது பையனுக்கு என்ன வாங்கிக் குடுக்கலாம்? ஓரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய பெட்டிகள் கவனத்தைக் கவர்ந்தன. ரிமோட் கன்ட்ரோல் கார். நான் சின்னப் பையனாக இருந்தபோது இதை யாராவது வைத்திருந்தால் அதைப் பார்க்கவே அலையோ அலையென்று அலைந்திருக்கிறேன். மிக நன்றாக இருந்தது. போட்டி போடுவதற்கு ரெண்டு கார் இருந்த்து. சரி வாங்குவோம் என்று முடிவுசெய்தேன். வர்ஷாவுக்கும் வாங்கிக் குடுத்தால் எவ்வளவு சந்தோஷப் படுவாள்.நாம் தான் அனுபவிக்கவில்லை அவளாவது விளையாடட்டுமே. பைசாவாவது நாளைக்கு சம்பாதித்துக் கொள்ளலாம் இந்த வயதில் விளையாடாமல் எந்த வயதில் விளையாடப் போகிறாள்? அதே விலைதான். கூட ஐந்து பவுண்டுனாலும் விலை அதிகமென்று யோசிக்கலாம். போனால் போகிறது "இன்னொன்னு குடுப்பா". வெளியில் வந்த பிறகு தான் பார்த்தேன். பாட்டரி தனியாக வாங்கவேண்டுமாம். போட்டிருந்த பேட்டரி எண்ணிக்கையைப் பார்த்தால் ஊருக்கே மின்சாரம் சப்ளை செய்யலாம் போல. பேட்டரி விலையோ பகீரென்றது. திரும்பவும் கூட கொஞ்சம் செலவு. பேசாமல் வந்திருக்கலாமோ?

"என்க்காகாகா அப்ப்ப்ப்ப்பா...தேங்க்க்க்க்யூயூப்பா..." கணகள் விரிய குழந்தை கட்டிக் கொண்ட போது எனக்கே யாரோ வாங்கிக் குடுத்தமாதிரி சந்தோஷமாக இருந்த்து. உடனே பிரித்து விளையாட ஆரம்பிச்சாச்சு. ஒரு கார் நன்றாக ஓடியது. இன்னொன்று தண்டம். செத்தவன் கையில் வெத்தலபாக்கு குடுத்த மாதிரி என்னுடைய பைசா அருமை தெரியாமல்...தண்டத்துக்கு ஊர்ந்தது. பத்து நிமிஷம் தான் வர்ஷா கவனம் பார்பிக்கு போய்விட்டது.

"அடச் சே...இதுக்கு இவ்வளவு தண்டம் அழுதிருக்கவேண்டாம்...பேசாம வரமாட்டேனோ...என் புத்தி இருக்கே..."

"அவளுக்கு கார்லலாம் அவ்வளவு ஆர்வம் இல்லை என்பது தெரியாதா உங்களுக்கு.அவளுக்குப் பிடித்ததாக எதாவது வாங்கி வரக் கூடாதா?" - உம்மாச்சிக்கு பதிலாக எனக்குத் தூபம் காட்டினார் அருமை மனைவி.

"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு ...இத திருப்பி குடுத்துட்டு வந்திடறேன். வெறும் தண்டம். வர்ஷா க்கு அதுக்கு பதிலாக ஒரு ஒன்றரை அனா பொம்மை வாங்கிக் குடுத்திடலாம்"

தேவா இருந்திருந்தால் "சிங்கம் ஒன்று புறப்பட்டதே..." என்று பி.ஜி.,எம். குடுத்திருப்பார்.அவ்வளவு வேகமாக நடந்தேன்.

"நீங்கள் இரண்டு வாங்கியதால் விலையில் சலுகை தரப்பட்டது. இப்போது இதை திருப்பிக் குடுத்தால் அந்தச் சலுகை கிடைக்காது..பரவாயில்லையா?"

"பரவாயில்லை"

"ஏன் வாங்கின இன்னொரு காருக்கும் உண்டான சலுகையை வீணாக்குகிறீர்கள்...அதற்குப் பதிலாக வேறு பொம்மை வாங்கலாமே " - விட்டால் எனக்கே இன்னொரு கல்யாணம் பண்ணி வைத்துவிடுவாள் போல. அவ்வளவு சாமர்த்தியத்துடன் பேசினாள். இவள் தொல்லையைச் சமாளிக்க சும்மா ஒரு தரம் கடையைச் சுற்றி வந்து எதுவும் பிடிக்கலை என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தேன்.

எல்லாப் பொம்மைகளையும் நகைக் கடையில் பார்ப்பது போல் தள்ளியே இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். சரி இனிமே சமாளித்துவிடலாம் என்று திரும்பின போது அது கண்ணில் பட்டது. அழகான எலக்ட்ரானிக் கிடார். வர்ஷா ரொம்ப நாளாக டி.வி.யில் பார்த்துவிட்டு கேட்டுக் கொண்டிருந்தாள். மிக நன்றாக் இருந்தது. வாங்கிவிடலாம், சலுகையும் வீணாகப் போகாது, குழந்தையும் மிகவும் சந்தோஷப் படுவாள். விலையைப் பார்த்தேன். முந்தின காரைவிட ஐந்து பவுண்டுகள் கூட. போனால் போகிறது.

வர்ஷாவிடம் காண்பிக்க ஓட்டமும் நடையுமாய் வீட்டிற்கு விரைந்தேன்.

வர்ஷா சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள். கிடாரைத் தொடாமல் சந்தோஷத்தில் எனக்கும் அவள் அம்மாவிற்கும் முத்தமாரிப் பொழிந்தாள். நன்றி சொல்லி மாளவில்லை.

இரண்டு நாட்கள் தூங்கும் போதும் பக்கத்தில் வைத்துக்கொண்டாள். மூன்றாம் நாள் டி.வி.யில் அந்த விளம்பரம் வந்த போது கையைப் பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் காண்பித்தாள்.

"டாடி நீங்க வாங்கிக் குடுத்த கிடார்"

"ஆமாண்டா செல்லம்.."

"டாடி அதுகூட வெச்சிண்டிருக்கிற மைக் செட்டும் வேணும் டாடி..."

"வாங்கித் தந்துட்டாப் போச்சு..உனக்கில்லாமலயா..."

Wednesday, June 02, 2004

இரண்டு மனம் வேண்டும்...

for picture version of this post click here
டுபுக்கு ஆரம்பித்தது ஆங்கிலம் மற்றும் தமிழ் பதிவுகளைப் போட. தமிழ் பதிவுகள் மட்டுமே இருந்தால் தான் தமிழ் வட்டத்தில் ஆட்டத்துக்கு சேர்த்துக்கொள்வார்கள் போல என்று தோன்றிய காரணத்தால் காசா பணமா...தமிழ் டுபுக்கு ஆரம்பித்தேன். ஒரே ரீல் பொட்டியை ரெண்டு தியேட்டரில் ஓட்டுவது மாதிரி (கிராமத்தில் இருந்திருந்தால் இது புரியும்) ஆங்கிலப் பதிவு போடுவதை அம்போவென்று விட்டு விட்டு...இப்போதெல்லாம் ஒரே தமிழ் பதிவையே ரெண்டு இடத்திலும் போட்டு ஓட்டிக் கொண்டிருக்கிறேன். நக்கீரர்கள் யாரும் கேள்வி எழுப்பாவிட்டாலும்...எனக்கே இது எதுக்கு என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. எதாவது ஒன்று போறாதா? எதற்க்கு இந்த மறு ஒளிபரப்பு?

ஒரு கடையை இழுத்து மூடுவோமென்றால் இரண்டு பக்கங்களுக்கும் நிறைய பேர் இல்லாவிட்டாலும் சொற்ப பேராவது வந்து போகிறார்கள். அவர்களுக்குச் சிரமமாக இருக்காதோ? என்ன செய்யலாம் சொல்லுங்கள். எந்தக் கடையை மூடட்டும்?

சமீபத்தில் யாரோ ஒரு பிரகஸ்பதி "தமிழ் பெண்கள் தொடை" (tamil pengal thodai) என்று ஆங்கிலத்தில் தேடி என் வலைப்பதிவுக்கு வந்திருக்கிறார். வந்து பார்த்துவிட்டு விளக்கெண்ணை குடித்த மாதிரி முழித்திருப்பார் என்பது வேறு விஷயம்.(எப்பிடி முழித்திருப்பார் என்பதை நேரில் பார்த்திருந்தால் கணஜோராய் இருந்திருக்கும்).

இவரைப் போன்றவர்கள் ஏமாறுவார்களே என்று லேசாக கரிசனம் இருந்தாலும்...முக்கியமாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிய ஆவலாய் இருக்கிறேன். யோசித்து சொல்லுங்கள்...அதற்குள் ஐஸ்வர்யாராய்க்கு கண்ணுக்கு கீழ் கருவளையம் வந்ததற்கு அனுதாபம் தெரிவித்துவிட்டு வந்துவிடுகிறேன்.


பி.கு - tamil pengal thodai என்று கூகிளில் தேடினால் என் பக்கம் வருகிறதா என்று நீங்கள் சோதித்துப் பார்த்தீர்கள் தானே? (அல்லது சோதிக்கலாம் என்று கை பரபரத்தது தானே?) :P

Tuesday, June 01, 2004

சொர்க்கமே என்றாலும்...

for picture version of this post click here

போயே போச்சு ஒரு வாரம். கிளம்பினதும் தெரியலை வந்ததும் தெரியலை. ஆனா உடம்பில் "மன்மதராசா" பாட்டுக்கு ஆடின அசதி இருக்கு. நான் சொன்ன மாதிரி வெய்யில் கொளுத்தவில்லை. அக்னிநட்சத்திரம் இந்த வருடம் ப்ளாப். எங்க ஊர் பக்கம் உண்மையிலேயே ஜிலு ஜிலுவென்று இருந்த்தது. குற்றாலம் சீசன் இந்த வருடம் வழக்கத்தைவிட சீக்கிரமாம். பஞ்சத்தில் அடிபட்டவன் போல சரவணபவன் மிக்ஸட் பரோட்டா, 14 இட்லீஸ், ஹாட் சிப்ஸ் சன்னா மஸாலா, ரோட்ரோர கொத்து பரோட்டா இன்னும் என்னவெல்லாமோ சாப்பிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். இறங்கின ரெண்டாம் நாள் கார்க் பிடுங்கிக் கொண்டு ஊத்து ஊத்தென்று ஊத்தியதில் நார்த்தங்காய் ஊறுகாய் தொட்டுக் கொண்டு வெறும் தயிர்சாதம் மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தேன். மேற்சொன்ன காரணத்தினாலேயே ஊரில் இருந்து வலைப்பதிய முடியவில்லை என்று சப்பைக் கட்டு கட்டிக்கொள்கிறேன்.

ப்ளைட்டில் திருமலையும், முத்தக் காட்சிகள் மட்டுமே வருகிற ஒரு ஆங்கிலப் படமும் போட்டார்கள். பக்கத்து சீட்டிலிருந்த இரு பொடியர்கள் "அம்மா இதுக்கெல்லாம் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்" என்று ஆங்கிலத்தில் சமாதானம் சொல்லிக் கொண்டு பார்த்தார்கள். அதிலொரு பொடியன் அடிக்கடி என்காலில் எத்தி எழுப்பியதால் திரும்பவும் "திமிசுக் கட்டையை" பார்த்துத் தொலைய வேண்டி இருந்த்தது. மெட்ராஸிலிருந்து திருநெல்வேலி போகும் பஸ்ஸில், "இங்கிலாந்தில் எங்காத்தில் மொத்தம் ஒரே ஒரு பக்கெட் தான் வைத்திருக்கிறோம் அதிலும் தண்ணீர் பிடித்து வைக்கமாடோம்" என்று சொல்லி பக்கத்து சீட் நங்கநல்லூர் மாமாவின் வயெத்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டேன். காய்சலானாலும் டாக்டரைப் பார்க்க ஒரு வாரம் கழிச்சுத்தான் பார்க்கமுடியுமென்று சொன்ன பிறகு தான் ந.மாமா மேற்கொண்டு பேச ஆரம்பித்தார். அப்புறம் "ஜனா" பட புண்ணியத்தில் அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கினேன். அஜீத் இன்னமும் "என்னை என் வழியில் போக விடு.." என்று த்த்துப் பித்தென்று உளறிக் கொண்டிருக்கிறார் போல இருக்கு. இப்போ இப்பிடி பேசறது தான் பேஷனோ?

ஊரில் அடித்த கொஞ்ச நஞ்ச வெய்யிலும் பாழாய்ப் போகமால் அலைந்ததில் நன்றாகக் கருத்திருக்கிறேன். (இல்லாட்டாலும் இங்கே ஒன்னும் கமலஹாசன் நிறம் இல்லை). சி.டி கடைக்கு முன் பஸ் நிற்க பழைய படம் வேண்டும் என்று அலைந்ததில் இருக்கிற எல்லா படங்களையும் விட்டுவிட்டு தாடிக்கார மாமா படம் போட்டிருக்கிறதே...ராஜா காலத்துப் படமாயிருக்கும், அதுவும் ஜெமினி கணேசன் வேறு, நன்றாக இருக்கும் என்று அவசர அவசரமாக "சௌபாக்கியவதி" படம் வாங்கி வந்திருக்கிறேன். அப்பா அம்மாவிற்கே அந்தப் படத்தைப் பற்றி அவ்வளவு தெரியவில்லை. பார்க்கிற அன்னிக்கு இருக்கு மண்டகப் படி.

எதை எடுத்தாலும் பத்து ரூபாய் மாதிரி மெட்ராஸில் எங்கே போனாலும் இருநூறு ரூபாய் தான் என்று மெட்ராஸ் ஏற்போர்ட்டில் ஏ.சி.வேன் சர்வீஸ் வந்திருக்கிறது. ரொம்ப நல்ல விஷயம். பெட்டியெல்லாம் அவர்களே வாங்கிக் கொண்டு ராஜ உபசாரம் செய்கிறார்கள். அந்தக் கால ஜமீன் மாதிரி மாதிரி எட்டுப் பேர் போகக் கூடிய வண்டியில் ஒரு ஆளாக போவதற்குத் தான் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. ஆனால் ரொம்ப நல்ல சர்வீஸ். அடுத்த தரம் ட்ரை பண்ணிப் பாருங்க.

வரும்போது ப்ளைட்டில் பாய்ஸ் போட்டார்கள். ஒரு சேஞ்சுக்கு ஏர்ஹோஸ்டஸைப் பார்ப்பதைவிட்டு விட்டு படத்தைப் பார்ப்போமே என்று பார்த்து வைத்தேன்.

Friday, May 21, 2004

வா !

for picture version of this post click here

ஆச்சு...டிக்கெட் புக் பண்ணியாச்சு, லீவுக்குச் சொல்லியாச்சு, ஊர்ல அப்பா அம்மாக்குச் சொல்லி ஏற்பாடெல்லாம் பண்ணியாச்சு. நாளைக்குப் பொட்டியத் தூக்கவேண்டிதான். டிக்கெட்டை ஏர்போட்டில் வாங்கிக்கச் சொன்னார் ஏஜன்ட். ஏர்போட்டில் "டுபுக்குகா தோஸ்து" என்று சொன்னால் டிக்கெட்டைத் தருவான் என்றார் ஏஜன்ட். எனக்கு முன்னாலேயே இது மாதிரி ஒரு தரம் சுகானுபவம் இருந்த்தால் நானே உன் வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இந்தியாவில் இருக்கும் போது. போர்பந்தரில் இருந்து மும்பாய் வழியாக டிக்கெட் தருவதற்குப் பதிலாக மும்பை வழியாக டெல்லிக்குத் தந்துவிட்டான் ஒரு புண்ணியவான். ப்ளைட் ஏறும் போது தான் பார்த்தேன். அப்புறம் மும்பையில் 'ஐய்யோப் பாவம் பன்னி விட்டைதான் லாபம்' முழியெல்லாம் முழித்துக் கொண்டு டிக்கெட்டை மாத்திக் கேட்டேன். மாத்திக் குடுத்து..கையில் 500 ரூபாய் வழிச்செலவுக்கும் குடுத்தார்கள்.


இன்னும் ராத்திரி இருக்கே என்று துணிமணியெல்லாம் எடுத்து வைக்கவில்லை. சிங்காரச் சென்னை வழிதான். என்னுடன் மலையாளத்தில் சம்சாரிக்க் கேரளத்து ஏர்ஹோஸ்டஸ்கள் குடுத்து வைக்கலை. சீய்ச் சீ... திருவனந்தபுரம் புளிக்குமாமே? அங்கு ஒரே வெய்யிலாம்...கச கசவென்று இருக்குமாம் தண்ணிக் கஷ்டம் வேறாம். மனுஷன் போவானா இப்போ அங்க. சென்னைதான் குளு குளுவென்று இருக்காம் பாலும் தேனும் ஓடுகிறதாம். டிக்கெட் கிடைக்கலையேன்னு இதெல்லாம் சொல்லலை சார்...

ஒருவாரம் சூறாவளிப் பயணம். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வந்திருவேன். ஊர்லேர்ந்து வலைப் பதிவு போடமுடியுமா தெரியவில்லை. எல்லாம் வல்ல வி.எஸ்.என்.எல் கருணை கிட்டவேண்டும்.(கிடைச்சாலும் கிழிச்சேன்னு யாருய்யா அங்க சவுண்டு விடறது?)

உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். நல்லா வேளாவேளைக்குச் சாப்பிடுங்கள். எண்ணை தேய்ச்சுக் குளியுங்கள். தோ..ஓடி வந்துறுவேன்.....கண்ணைத் தொடைச்சிக்கோங்கோ அழலாம் பிடாது....அதுவரைக்கும்....வா

அன்புடன்
டுபுக்கு

பி.கு - அதென்ன வா??..."வா என்றால் வணக்கம்"..நியூ.பாட்டுகேட்டதில்லையா? கேட்டு அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் :P

(அட இது என்னோட நூறாவது பதிவு!!)

Wednesday, May 19, 2004

தஞ்சாவூர் உபசாரமும் திருநெல்வேலி பாயாசமும்

for picture version of this post click here

அரசியல் பற்றி எழுதவே கூடாதென்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது கை பரபரவென்கிறது.
எனக்கு அரசியல் ரொம்பத் தெரியாது. இன்றைய நிகழ்வுகளை இந்தியன் என்ற உணர்விலே எல்லாரையும் போல் கவனித்து வருகிறேன். காங்கிரஸின் மேல் எனக்கு பச்சாதாபம் உண்டே தவிர துவேஷம் என்று இல்லை. இருந்தாலும் திருமதி.சோனியா பிரதமர் ஆவதில் எனக்கு முழு உடன்பாடு இல்லைதான். ஏன் எதற்கு என்ற விபரங்களுக்குள் செல்லாமல் சொல்ல வந்ததைச் சொல்கிறேன்.

திருநெல்வேலிக்கும் தஞ்சாவூருக்கும் ரொம்ப ஆகாது. பெண் குடுக்கவோ எடுக்கவோ கொஞ்சம் தயங்குவார்கள். இந்த துவேஷம் காரணமாகவே தஞ்சாவூர் உபசாரம் பற்றி திருநெல்வேலியில் இப்படித்தான் சொல்வார்கள். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால்.."நீங்க எங்காத்துலலாம் சாப்பிடுவேளா?..நீங்க ஏற்கனவே சாப்பிட்டுட்டு வந்திருப்பேளே... இந்த வெய்யில்ல உங்க ஊர்க்காராளெல்லாம் காபி குடிக்கமாட்டேளாமே...etc." - இது தஞ்சாவூருக்கு மட்டுமே உரித்தான குணம் என்று நான் நம்புபவனில்லை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.

அதேபோல் திருநெல்வேலியில் ஒரு வழக்கு உண்டு. பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் தனக்குப் பாயாஸம் வேண்டுமென்றால் "எனக்குப் பாயாஸம் வேண்டும் விடுங்கோ" என்று கேட்கமாட்டான். பக்கத்தில் உள்ளவன் இலையை காட்டி..."ஏன்பா இவருக்கு கூடகொஞ்சம் பாயாஸம் விடுங்கோப்பா...நல்லா கவனியுங்கோ" என்பான். பக்கத்திலிருப்பவன் சும்மா இருக்கமாட்டான் திரும்ப "எனக்கு விட்டது போறும் அவருக்கும் விடுங்கோ..." என்பான். இப்படியாக இவனுக்குப் பாயாஸம் கிடைக்கும்.

இது தான் இப்போ நடக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. சோனியா இரண்டையும் கலந்து அடிக்கிறார். நல்லது. எது எப்பிடியோ...என்னை மாதிரி தத்து பித்தென்று ஹிந்தி மட்டும் தான் பேசுவார் அன்னை என்று நினைத்தேன். வூடு கட்டி அரசியல் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் பயமாக இருந்தாலும்...இப்படிப்பட்ட ஆள் தான் வேண்டும் காங்கிரஸுக்கு. தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டிருக்கிற ஹிந்தி மாமாக்களையும் நம்மாளுகளையும் கட்டி மேய்கிறதென்றால் சும்மாவா.

அட்ரா சக்கை இப்போ தான் களைக் கட்டியிருக்கிறது டெல்லி.

பி.கு - பி.பி.சி பார்கிறேளோ? டெய்லி இங்க லோக்கல் நியூஸ்லயே இதப் பத்தி 15நிமிஷம் ரிப்போர்ட் போடறான். எனக்கு என்னமோ அவன் ஓவரா சோனியக்கு ஜால்ரா அடிக்கிறான்னு தோன்றுகிறது

Monday, May 17, 2004

வந்துட்டான்யா வந்துட்டான்யா..

for picture version click here

ஒரு வாரம் வேலை பெண்ட நிமிர்ந்துவிட்டது. வலைப்பூ..மற்றும் பல்வேறு வேலைகள். வலைப்பூ மிகவும் சுவாரசியமாக இருந்தது.(எனக்கு). நிறைய கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். அனேகமாக அடுத்தவாரம் இந்தியா போவேன் (ஒரு வாரத்துக்கு). டிக்கெட் புக் செய்யவில்லை, லீவுக்கு சொல்லவில்லை. என் பெற்றோரைக் கூட்டி வருகிறேன். எப்போ கிளம்பவேண்டும் என்று ஒவ்வொரு முறையும் கேட்கும் போது சொல்கிறேன் சொல்கிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறேன். எல்லாவற்றையும் கடைசி வரை வைத்துக்கொள்வேன். "கல்யாணமாகி ஒரு குழந்தைக்கு அப்பா ஆனாலும் மாறவே இல்லைடா நீ..." எல்லாரிடமும் திட்டு வாங்கவேண்டும் என்று இந்த முறையும் குடுத்து வைத்து இருக்கிறது. என்னமோ என் ராசி அப்பிடி. "ப்ளைட் பிடிக்கப் போகனும் சீக்கிரம் வெட்டுப்பா" என்று முதல் தரம் கிளம்ப்பும் போது முடிவெட்டும் கடையில் சொன்ன போது கடைக்காரன் நம்பவேஇல்லை. நான் இருந்த கோலம் அப்பிடி, அந்தக் கடையும் அப்பிடி. "விட்டா லண்டனுக்குப் போறேன்னு சொல்லுவியே"ன்னு ஒரு பார்வை தான் பார்த்தான். நான் பதிலே சொல்லவில்லை.

ஆனால் கடைசி நேரத்தில் கிளம்பினாலும் இதிலும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்கிறது. இப்பிடித்தான் ஒரு தரம் இந்தியாவில் இருக்கும் போது மே மாசத்தில் அகமதாபாத் அக்கா வீட்டிற்கு பம்பாய் வழியாகச் செல்ல திட்டம் போட்டேன். கடைசி நேரத்தில் பம்பாய் வரை மட்டும் உட்கார்ந்து செல்ல டிக்கெட் கிடைக்க..சஸ்பென்ஸாக இருக்கட்டுமே என்று ஒருவருக்கும் தகவல் குடுக்காமல் அதில் ஏறி பம்பாய் அக்கா வீட்டிற்கு அதிகாலை 4 மணிக்குப் போய் பெல் அடித்தால் திறக்கவே இல்லை. ஒரு வேளை தூங்குகிறார்கள் என்று அப்பிடி வாசலிலேயே தேவுடு காத்திருந்தேன். காலையில் தான் தகவல் கிடைத்தது. எல்லாரும் வெளியூருக்குப் போய்விட்டார்களென்று. "முஜே பச்சாவ் முஜே பச்சாவ் " என்று முழித்ததில் எதிர்த்த வீட்டில் "அய்யோ பாவம்" என்று குடுத்த காப்பியைக் குடித்துவிட்டு அகமதாபாத்துக்கு தட்டுத் தடுமாறி பஸ் பிடித்தேன். பஸ்ஸில் பாதிபேர் டிக்கெட் எடுக்கவில்லை. என்னைப் போல் கொஞ்ச பேர்கள் மட்டும் டிக்கெட் எடுத்திருந்தார்கள். மற்றவர்கள் கண்டெக்டர் கையில் பத்தோ இருபதோ அம்பதோ குடுத்தார்கள். அவரும் ஹிந்தியில் பல்லைக் காட்டிக் கொண்டு ஜேப்பில் போட்டுக் கொண்டுவிட்டார். முரடன் முத்துவாக இருந்த எல்லார் வாயிலும் பான் வேறு. நான் எதுக்கும் இருக்கட்டும் என்று பான் வாங்கிக் கொடுத்து ஒரு முத்துவை ஃபிரெண்ட் பிடித்துக் கொண்டேன். குடுத்த பான்னுக்கு கடைசி வரை விசுவாசமாக என்னோடு பாட்டெல்லாம் பாடிக்கொண்டு வந்தான் அவன். ஒரு வழியாக அகமதாபாத் வந்து சேர்ந்தேன். அகமதாபாத் அக்கா வீட்டில் இல்லாவிட்டால் இன்னொரு மாமா வீடு இருக்கிற தைரியம். நல்லவேளை எல்லாரும் இருந்தார்கள். ஆனால் எல்லாருக்கும் நான் வரப் போவது தெரிந்து இருந்தது. எங்கப்பா முன்னாடியே முன் ஜாக்கிரதையாக போன் பண்ணிச் சொல்லிருந்தார். பம்பாயில் ப்ளாப் ஆன கதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

இந்த முறை என்னெல்லாம் கூத்து அடிக்கப் போகிறேன்று தெரியவில்லை. போகும் போது தனியாகப் போகிறேன். ஜாலி. வரும் போது அப்பா அம்மா வருகிறார்களென்பதால் வாலைச் சுருட்டி வைத்துக் கொள்ளுவேன். வரும் போதாவது பொறுப்பு வரட்டும். மெட்ராஸ் வழியா திருவனந்தபுரம் வழியா தெரியவில்லை. திருவனந்தபுரமாக இருந்தால் "இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ" தவிர வேறேதாவது மலையாளம் கத்துக் கொள்ளவேண்டும். ப்ளைட்டில் கேரளத்து ஏர்ஹோஸ்டஸிடம் கடலை போட வசதியாக இருக்கும்.

Sunday, May 09, 2004

Valaipoo and a break again...

The gist of this post is that I have been invited to be the editor of this weeks 'Valaipoo'. Valaipoo is a tamil bloggers journal. They invite tamil bloggers to be editors on a weekly basis and its going to be me from May 9th to 15th. I will be making atleast two posts per day there. So I invite you all there on behalf of Valaipoo. I will be resume my posts here from next week.

For picture version of this post click here

கொஞ்சம் உப்பு, ரெண்டு மூனு மிளகாய் பழம், ஒரு கத்தை வேப்பிலை, காலடி மண் ஒரு பிடிச்சு இதெயெல்லாம் ஒரு பக்காவில் போட்டு கடிகார சுற்றில் மூன்று தடவை, எதிர் சுற்றில் மூன்று தடவை, பிறகு ஒரு துப்பு துப்பவேண்டும் - உட்கார வைத்து இதெல்லாம் திருஷ்டி கழிக்க எங்கள் வீட்டில் செய்வார்கள். இந்த வலைப்பதிவிற்கும்(ப்ளாக்) இதைத் தான் செய்யவேண்டும் போல. யாரோ ரொம்ப திருஷ்டி பட்டுவிட்டார்கள். ஒழுங்காக இங்கே எழுதிக் கொண்டிருந்தவன் ரெண்டு வாரமாக நிறைய லீவு போட்டுவிட்டேன். இதெல்லாம் போறாதென்று இந்த வாரமும் இங்கே எழுத முடியாதென்று நினைக்கிறேன். ஆனால் இந்த வாரம் ஒரு நல்ல விஷயத்திற்காக. வலைப்பூவில் ஒரு வாரம் ஆசிரியர் பணி.வலைப்பூ பற்றி ஒருவேளை உங்களுக்கு தெரிந்திருக்காவிட்டால் தமிழ் வலைப்பதிவாளர்களால் வாரம் ஒருவர் என்று நடத்தப்படும் வலைப்பதிவு. இந்த வாரம் என்னை அங்கு எழுத அழைத்திருக்கிறார்கள். அதனால் அங்கு எழுதப் போகிறேன். ஆனால் அங்கே ஓ.பி. அடிக்க முடியாது. கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு பதிவாவது போட வேண்டும்.

மீண்டும் அடுத்த வாரத்திலேர்ந்து இங்கே தொடர்வேன். அது வரை உங்களை அன்புடன் அங்கே அழைக்கிறேன்.

Friday, May 07, 2004

தாமிரபரணித் தென்றல் - 3

For picture version of this post Part3a Part 3b
நாடக கான சபா- 2

பரிசு வாங்க மைக்கில் அழைத்த போது மேடைக்கு பின்புறம் நான் வாலை அவிழ்த்திருந்தேன். திரும்ப் வைக்க நேரமாகுமே என்று வாலில்லாத அனுமாராக மேடைக்குச் சென்று பரிசை வாங்க..எல்லாரும் ஒரே சிரிப்பு.

பரிசை வாங்கிக் கொண்டு திரும்பிப் பார்த்தால் எதிரே முன்வரிசையில் என் பள்ளித் தமிழாசிரியர். மிக மிக கண்டிப்பான வாத்தியார். பேரைச் சுருக்கி சோபா சோபா என்று தான் எல்லாரும் அவரைக் கூப்பிடுவார்கள். டி.ராஜேந்தர் ரசிகன். பையனுக்கு சிலம்பரசன் என்று பேர் வைத்திருந்தார். கம்பை வைத்துக்கொண்டு அடிப்பதற்கு முன்னால் பயங்கரமாக பில்டப் குடுப்பார். வாட்சைக் கழட்டிவிடுவார். கம்பு பலமாக இருக்கா என்று சேரில் அடித்து ஒருதரம் செக் பண்ணிப் பார்ப்பார். இந்த மிரட்டல்களிலேயே பல பையன்கள் மூச்சா போய்விடுவான்கள். நான் ரொம்ப அடிவாங்காமல் கொஞ்சம் தப்பித்துக்கொண்டிருந்தேன் அதுவரை.

அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு பலூனில் காத்து போன மாதிரி ஆகிவிட்டது. இவர் எங்கே இங்கே வந்தார் வாலு போய் கத்தி வந்த கதைமாதிரி ஆயிற்றே என்று அனுமார் வேஷத்திலேயே சலாம் போட்டேன். புன்சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டார். அதற்கப்புறம் அவர் இருக்காரென்று வெளியிலேயெ தலை காட்டவில்லை. அவர் போயாச்சு என்று சொன்ன அப்புறம் வீட்டிற்கு போய் சேர்ந்தேன்.

அடுத்த நாள் பள்ளிக்கூடத்தில் முடிந்தது என்று நினைத்த தலைவலி திரும்ப ஆரம்பித்தது. வகுப்பில் கொஞ்ச நேரம் சொல்லிக்குடுத்து விட்டு ஆரம்பித்தார்.

"உங்கள்ல யாராவது அனுமாரப் பார்த்திருக்கீங்களா? நான் பார்த்திருக்கேன்"

"அந்த அனுமார் நம்ம கிளாசுலதான் படிக்கிறார். டேன்ஸ்லாம் நல்லா ஆடுவார். யாரு தெரியுமா?"

பலத்த அமைதி நிலவியது.

"நான் யாருன்னு சொல்லமாட்டேன்....இப்போ அனுமாரே உங்க முன்னாடி வருவார் பாருங்க. வாங்க அனுமாரே வாங்க..."

நடிகர் அருண்பாண்டியன் வசனம் பேசுவது மாதிரி மிரட்டுகிறாரா இல்லை அன்போடு தான் அழைக்கிறாரா என்று புரியவில்லை எனக்கு.

நான் தான் அனுமாரென்று தெரிந்த முன்னால் உட்கார்திருந்த முந்திரிக் கொட்டைகள் ரெண்டு திரும்பிப் பார்த்தது.

வேறு வழியில்லை மெதுவாக முன்னால் போனேன்.

"வாலில்லா அனுமார், பரவால்ல...நேத்திக்கு அருமையாக ஆடின அனுமார்...இப்போ நம்மளுக்கெல்லாம் ஆடிக் காட்டப் போறார்"

"......."

"ஆடுங்க...அனுமாரே என்ன வெட்கம் நேத்திக்கு அங்கே எம்புட்டு பேர் இருந்தாங்க...இப்போ மட்டும் என்ன வெட்கம்?"

"இல்ல சார்...வேஷம்லாம் இல்ல..."

"அதான் பரவால்ல சொன்னேன்ல சும்மா ஆடுங்க..."

"அதுவந்து அங்க பாட்டெல்லாம் இருந்துது..."

"'பாட்டு' தானே...டேய் அந்த செய்யுள் புஸ்தகத்த கொண்டா..." - வாங்கிப் புரட்டினார்.

"ஆங்...தேசிங்குராஜன் கதை...அருமையான பாட்டு இதப் பாடறேன் ஆடுங்க அனுமாரே"

வேற வழியில்லை ...அதற்க்கு மேல் ஏதாவது சாக்கு சொன்னால் பிரம்பினால் பட்டையைக் கிளப்பிவிடுவாரோ என்று பயமாக இருந்தது.

தேசிங்குராஜன் கதைக்கு ஆடிய முதல் அனுமாராக நான் தான் இருக்கமுடியும். கிட்டத்தட்ட...ஆடுறா ராமா ஆடுறா ராமா மாதிரி இருந்தது. மூன்றாம் பிறைக் கமல் மாதிரி என்னலாமோ ஆடினேன். பையன்கள் விழுந்து விழுந்து சிரித்தான்கள்.

"டேய் நேத்திக்கு சொறிஞ்சு காட்டி அப்பிடியே பண்ணினயே?..."

"சார் அது சிவப்பு கலருக்காக குங்குமத்த குழைச்சு பூசியிருந்தாங்க அந்த அரிப்பில் சொறிஞ்சிருப்பேன் "

"பரவால்ல இங்கயும் சொறிஞ்சிக்கோ அப்போ தான் நல்ல தத்பரூபமாக இருக்கும் "

ஆஞ்சனேயா இவன் படுத்தற பாட்டுக்கு இவன நல்லா கவனி...இவன் அரிப்பெடுத்தே அழிஞ்சு போகனும் மனதார வேண்டிக்கொண்டேன். கொஞ்ச நேரம் அமைதியாக நின்றேன். அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை...இடத்துக்கு போகச் சொல்லிவிட்டார்.

அடுத்த வருடம் பள்ளியை விட்டுப் போய்விட்டார். அரிப்பெடுத்ததா தெரியவில்லை. இத்தனை ஆண்டுகளானாலும் இந்த நிகழ்ச்சி மட்டும் மனதிலிருந்து அகலவே இல்லை...தேசிங்கு ராஜன் பாட்டும் தான்.

Tuesday, May 04, 2004

பிறந்தநாள்...

For picture version of this post click here
வீட்டைக் கட்டிப் பார், கல்யாணத்தை நடத்திப் பார். நானாயிருந்தால் பிறந்த நாள் கொண்டாட்டத்தையும் சேர்த்திருப்பேன். அப்பா சாமி தலை சுத்தி இப்போதான் கொஞ்சம் நிலமைக்கு வந்திருக்கேன். பரவால்ல என் புள்ளதாச்சி மனைவியோடு ஒரு வழியா நல்ல படியாக நடத்தி முடிச்சுட்டோம். இத்தனைக்கும் மூன்று வாரங்களுக்கு முன்னாலேயே ப்ளான் போட்டு வாரக்கடைசிகளில் வாஙக ஆரம்பித்துவிட்டோம். ஆனாலும் தொட்டு தொட்டு வேலை இருந்து கொண்டே தான் இருந்தது. வீட்டை சுத்தப் படுத்தும் வேலையில் என்ன பொழப்புடா இது - மாட்டைக் கூட குளிப்பாட்ட வேண்டி இருந்தது.(ஹீ ஹீ எங்க வீட்டுல ப்ரெஷ் ஹோல்டர் மாடு வடிவத்தில் இருக்கும்). ஹோட்டல் பாதி சமையல் மீதி என்று ஆளவந்தான் ஸ்டைலில் முடிவாயிருந்தது. சுவை, தரம்,மணம்,பணம் எல்லாவற்றையும் குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொண்டு தேர்தெடுத்த ஹோட்டலை அம்போவென்று விட்டுவிட்டு கடைசியில் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கே லாட்டரி அடித்தது.

செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் சரி பார்த்துக்கொண்டிருந்த மனைவி திரும்பத் திரும்ப கேட்டாள்

"ஹோட்டலிலிருந்து வாங்கி வர வேண்டாமா? கடைசி வரையில் வைத்துக்கொள்வார்களா? போட்டோ எடுக்க ப்லிம் எல்லாம் போட்டு வைச்சாச்சா?"

"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் நீ எல்லாத்தையும் போட்டு மண்டைய குழப்பிக்காத"

இரண்டு மணிநேரம் முன்னாடி ஹோட்டலிலிருந்து ஆர்டர் குடுத்திருந்ததை வாங்கி வந்தேன். வாங்கி வந்ததை திறந்து பார்த்தால், வணக்க்க்க்கெம் என்று குழப்பங்கள் ஆஜர்..... சட்னியைக் காணோம். திரும்ப போய் வாங்க முடியாதென்று போன் செய்து வீட்டிற்கு கொண்டுவந்து குடுக்கச் சொன்னேன்.

நான்கு மணிக்கு என்று சொன்னால் தான் நாலரை மணிக்கு வருவார்கள் என்று பாட்டிக் கணக்கு போட்டு சொல்லி இருந்ததோம். நம்ம யோகத்திற்கு ஒரு நண்பர் கிளம்பிவிட்டதாக தொலைபேசியில் சொன்னார். வழியில் போக்குவரத்தினால் தாமதமாகுமென்று சீக்கிரமே கிளம்பிவிட்டிருக்கிறார். அதே போல் இன்னும் இரண்டு பேர் கிளம்பி இருக்கிறார்கள். எப்பிடியும் கார் நம்மூரை தொடுவதற்க்கு இன்னும் ஒரு மணிநேரமாகும் என்று அரக்க பரக்க மனைவியும் குழந்தையும் தயாரக ஆரம்பித்தார்கள். நான் சுப்பன் மாதிரி பனியனோடு தோட்டதிலிருந்த இருக்கைகளை கழுவிக்கொண்டிருந்தபோது இன்னொரு நண்பன் தொலைபேசியில் வழி கேட்டான். அவன் வந்தடைந்திருந்த இடத்திலிருந்து இரண்டு நிமிஷம் தான் ஆகும் எங்கள் வீட்டிற்கு. அவ்வளவு தான் அவ்வை சண்முகி மாதிரி எல்லாத்தையும் அப்பிடியே போட்டுவிட்டு அரக்க பரக்க குழாயை மாட்டிக்கொண்டு வரவேற்பறை பெண் மாதிரி இன்முகத்தோடு வரவேற்றேன்.

விருந்தினர்கள் ஒவ்வொரு பேராக வர ஆரம்பித்தார்கள்.சட்னியும் வந்து மனதில் (தேங்காய்)பால் வார்த்தது. தமிழ்பட முடிவில் சிரிக்கற மாதிரி எல்லாரும் சேர்ந்து சிரிக்கிறார்களே...போட்டோ பிடித்து வைத்துக்கொள்வோமென்று காமிரா பையை பிரித்து பார்த்தால் இருக்கிறதென்று நினைத்திருந்த ப்லிமிக்கு பதிலாக வெறும் அட்டைப்பெட்டி தான் இருந்தது.
தூரத்திலிருந்து நெற்றிக்கண் பார்வை பார்துக்கொண்டிருந்த தங்கமணியை நான் திரும்பியே பார்க்கவில்லை(தங்கமணி மனைவி பெயரில்லை - சும்மா அக்னிநட்சத்திரம் ஜனகராஜ் பாணியில் அப்பிடிக் கூப்பிடுவேன்). அப்புறம் காமிராவில் மிச்சமிருந்த ஆறு போட்டோக்களை வைத்துக்கொண்டு நான் ப்லிம் காட்டிக்கொண்டிருக்கையில் ஆபத்பாந்தவனாக ஒரு நண்பன் பக்கத்து கடைக்குச் சென்று வாங்கிவந்துவிட்டான்.

சரி கேக்கை வெட்டுவோம் என்று எல்லாவற்றையும் எடுத்து வைக்க நான் எத்தனிக்கையில் வாங்கி வைத்திருந்த மெழுகுவர்த்திகளைக் காணோம். இதுவும் பக்கத்து நாட்டு சதிதான் என்று மனைவிக்கு சமாதானம் சொல்லி கண்ணன் தேவன் டீ விளம்பரம் மாதிரி காடு மலையெல்லாம் ஓடியே மெழுகுவர்த்தியை தேடி கண்டுபிடித்து வாங்கி வந்தேன்.
இவ்வளவு கஷ்டப்பட்டு ஓடி வாங்கி வந்து ஏற்றியதை ஏற்றிய உடனேயே என் செல்ல மகள் ஊதி அனைக்க அனைவரும் வெள்ளக்காரன் மாதிரி பாட்டு பாடி கைத்தட்டினோம்.

அப்புறமென்ன சாப்பாடு தான். சாப்பாடு மிக நன்றாக இருந்ததென்று எல்லாரும் வாயார புகழ என் மனைவி பிதாமகனில் வந்துட்டாய்யா கோடீஸ்வரி என்று சூர்யா சொல்லும் போது ஒரு அம்மணி பெருமையாய் புன்னகைப்பார்களே அதே மாதிரி என்னைப் பார்த்து புன்னகைக்க நான் பாசமலர் சிவாஜி மாதிரி ப்லீங்கா திரும்ப புன்னகைக்க...பார்ட்டி இனிதே நிறைவடைந்தது.

அந்த போட்டோ ப்லிம் மேட்டர தங்கமணி பார்ட்டி முடிந்து கேட்பாளென்று நினைத்தேன். என்னமோ மறந்துவிட்டாள். இதைப் படித்து பிறகு மண்டகப்படி நடந்தாலும் நடக்கும். ஈஷ்வரா...

Friday, April 30, 2004

You are invited

May I take pleasure in inviting you and your family for the Birthday party of my daughter Varsha who is turning four tomorrow. If you can make it to the venue in London pls do mail mail me for details.(I have not published it here for obvious reasons).

PS- I was busy with this and hence couldn't blog much. Will resume next week. Have a nice (long) weekend!

Monday, April 26, 2004

தாமிரபரணித் தென்றல் - 2

For picture version of this post Part 2a Part 2b

நாடக கான சபா

பத்தாவது வயதின் போது தான் மாமா வீட்டிற்கு வந்தேன். இத்தனைக்கும் அடுத்த தெருவில் தான் அதற்கு முன் இருந்தேன். பையன்களில் ஓரிரு முகங்கள் தெரியுமே தவிர யாரையும் பழக்கம் கிடையாது. பெரியவர்கள் விளையாடும் கிரிக்கெட்டில் முன்பிருந்த சன்னதித் தெருவிற்கும், இந்த வடக்குத் தெருவிற்கும் அடிக்கடி போட்டி நடக்குமாகையால், பையன்கள் என்னை பாகிஸ்தான் டீமை சேர்ந்தவன் மாதிரி தான் பார்த்தார்கள். வடக்குத் தெருவில் பையன்களும் ஜாஸ்தி. அக்ரஹாரம் ஆகையால் எதாவது அப்பப்போ நடந்து கொண்டிருக்கும். மாதர் சங்கமெல்லாம் உண்டு. மாதர் சங்கமென்றால் பழைய சினிமாவில் காட்டுவது மாதிரி பவுடரெல்லாம் போட்டுக்கொண்டு கைப்பையை தூக்கிக் கொண்டு சினிமாவுக்கெல்லாம் போகமாட்டார்கள். புதன்கிழமை தோறும் கோவிலில் ஸ்லோகம் சொல்லுவார்கள். மத்தியான் வேளைகளில் ஒவ்வொரு வீட்டிலும் முறைவைத்துக் கொண்டு புதிது புதிதாக ஸ்லோகம் சொல்லிக்கொள்வார்கள். நவராத்திரிகளில் இதேமாதிரி முறைவைத்துக் கொண்டு ஸ்லோகம் சொல்லிக்கொண்டு வெத்தலபாக்கு குடுப்பார்கள். இதுபோக உறுப்பினர்களின் வீடுகளில் எதாவது விஷேமானால் அதற்கு ஒரு தூக்கோ வாளியோ கண்டிப்பாக பரிசாக கொடுப்பார்கள். நான் அந்த தெருவிற்கு போன காலத்தில் வருஷா வருஷம் மாதர் சங்க தினமும் கொண்டாடுவார்கள். மாதர் சங்க தினத்தில் பாட்டு, நடனம், நாடகம் அனைத்தும் உண்டு. சிறுவர் சிறுமியர் அனைவரும் ஆர்வத்துடன் பங்கு கொள்வார்கள்.

நான் வந்த புதிதில் மாமி என்னையும் சேர்த்துவிட்டாள்.

"என்னடா வேணும் கோந்தே...டான்ஸ் ஆடறியா பாட்டு பாடறியா, நாடகத்துல நடிக்கப் போறியா?"

ரிகர்ஸல் பார்க்கும் அந்த வீட்டில் நிறைய பெண்கள் கூட்டமாக இருந்ததால் நான் திரு திருவென முழித்தேன். ஒருவரையும் வேறு தெரியாது. மூன்று மூன்று பேராக நிறுத்தி வைத்திருந்த டான்ஸ் கூட்டதில் ஒரு ஆள் குறைவாக இருந்த்தால் நடனக் கூட்டத்தில் எடுத்துக்கொண்டார்கள்.

"ஆடுவான் மாதிரி தெரியறது. நீங்க விட்டுட்டு போங்கோ நாங்க பார்த்துக்கறோம்"

"அதெல்லாம் ஜோரா ஆடுவான், ஆத்துல கண்ணாடி முன்னாடி நிறைய ஆடுவான்" - ஐய்யோ பாவம் மாமி நான் கண்ணாடி முன்னாடி காகா வலிப்பு வந்தவன் மாதிரி கையையும் காலையும் வெட்டி வெட்டி இழுப்பதை நடனம் என்று நம்பினாள்.

உசரத்திற்கேற்ப நடுவில் ஒரு இடம் கிடைத்தது. இரண்டு பக்கமும் பெண்கள். வெட்கம் பிடுங்கித் தின்றது. ஒரு ஸ்டெப்பில் கையெல்லாம் வேறு கோர்த்துக்கொள்ள வேண்டிருந்தது. கையெல்லாம் வேர்த்திருந்தது. அந்தப் பெண் எதாவது சொல்லுவாளோ என்று பேருக்கு பிடித்துக்கொண்டேன். வளையமாக சுற்றும் போது லேசாக பிடித்திருந்தனால் கைஅடிக்கடி நழுவிற்று.

"கைய பிடிச்சுண்டா காதறுந்துரும்ன்னு பயப்படறியோ? கெட்டியா பிடிச்சுக்கோ அறுந்தா தைச்சுக்கலாம் " நடனம் சொல்லிக்குடுத்த அக்கா கேலி செய்ய எல்லாரும் சிரித்தார்கள். அப்புறம் இருக்கிப் பிடித்துக்கொண்டேன். நழுவக் கூடாதே என்று கவனம் செலுத்தியதில் விடவேண்டிய கட்டத்தில் நான் மட்டும் கெட்டியாக பிடித்துக்கொண்டு இருந்தேன்.

"பரவால்லயே கெட்டியா பிடிச்சுக்கறயே...ஆனா இந்த இடத்துல விட்டுறு உனக்கு வேனும்னா அப்புறம் திரும்ப பிடிச்சிக்கலாம்...."

திரும்பவும் எல்லாரும் சிரித்தார்கள். உம்மென்று இருந்தேன். அந்த வருடம் பவுடரை அள்ளிப் பூசிக்கொண்டு 'தத்தக்கா புதக்கா'வென்று ஆடிவிட்டு வந்தேன்.

அடுத்த வருடத்திலிருந்து பையன்களும், களமும் பழக்கமாகிவிட்டதால் நாடகத்திலெல்லாம் நடிக்க ஆரம்பித்தேன். நாடகத்திற்கு தெருவில் இருக்கிற பையன்கள் எல்லாரும் செட் சேர்ந்தோம். நண்பனின் அம்மா தான் நாடக ஆசிரியர். மிக அழகாகச் சொல்லிக் குடுப்பார்கள். அதோடு நல்ல பழக்கம் என்பதால் தைரியமாக வசனமெல்லாம் பேசினேன். பண்ணையார் வேஷம் போட்டு நன்றாக பேசியதில் தெருவில் நிறைய பேர் பண்ணையாரென்று பட்ட பேர் வைத்து கூப்பிட ஆரம்பித்தார்கள். அதே நாடகத்தை நாலைந்து மேடைகளில் போட்டோம். வசனம் நிறைய இருகே என்று பெண் வேஷம் போட எல்லாரும் தயங்கிய போது வசனம் நிறைய இருக்கே என்று ரெடியாக ஒத்துக்கொண்டேன். ராஜா வேஷம், ரானி வேஷம், சாமி வேஷம் என்று எல்லா வேஷமும் போட்டேன்.
வசனத்தில் சொதெப்பல்லாமும் உண்டு.

"பக்தா உன் பக்தியை மெச்சினேன்" என்று உம்மாச்சி பக்தனுக்கு காட்சி குடுக்க வேண்டிய விறுவிறுப்பான காட்சியில் "பக்தா உன் பஜ்ஜியை மெச்சினேன்" என்று சொதப்பி எல்லாரையும் வயத்தைப் பிடித்துக் கொண்டு சிரிக்க வைத்த கலாட்டாவும் உண்டு.

ஒரு உம்மாச்சி நாடகத்தில் அனுமாருக்கு முக்கிய வேஷம். நிறைய வசனம் பேச வேண்டும் என்று எனக்கு குடுத்தார்கள். வேஷமெல்லாம் வேண்டாம்டா அப்பிடியே போய் நில்லு தத்பரூமாக இருக்கும் என்று எல்லாரும் கலாய்த்தார்கள். வேஷத்திற்கு எல்லாம் ரெடி இந்த வால் மட்டும் நொழு நொழுவென்று இருந்தது. என்ன செய்யலாமென்று யோசித்து நண்பனின் அம்மா ஒரு கனமான கம்பியை வளைத்து துணியைச் சுற்றி வால் தயார் செய்தார்கள், கொஞ்சம் கனமாக இருந்தது. மேடையில் கஷ்டப்பட்டு பேலன்ஸ் செய்து கொண்டு நடித்துக்கொண்டிருந்தேன். ஒரு காட்சி முடிந்து ஒதுங்க வேண்டிய நண்பன் என் வாலில் தடுக்கிக் கொண்டு போக...கம்பி பிய்த்துக்கொண்டதுமல்லாமல் பின்புறத்தில் இடம் மாறி குத்த வேறு ஆரம்பித்துவிட்டது. எனக்கு மரண் அவஸ்தை. அடுத்த காட்சியில் அனுமார் வேஷத்தில் ஒரு பாட்டுக்கு நடனம் வேறு ஆட வேண்டும். அந்த காட்சி முடிவ்தற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது எனக்கு.(அனுமார் ஆப்படித்துவிட்டார் :) ) அப்புறம் அவசர அவசரமாக திரையைப் போட்டு ஒரு மாமியை பாட்டுப் பாடவிட்டு எனக்கு சரி செய்தார்கள்.
நாடகமெல்லாம் முடிந்து இரண்டாம் பரிசு கிடைத்த போது வலியெல்லாம் போயே போச்சு..பொயிந்தே...

-- தொடரும்

Friday, April 23, 2004

தாமிரபரணித் தென்றல் - 1

For picture version of this post click here

காலேஜ் படித்துக் கொண்டிருக்கும் போதென்று நினைக்கிறேன். கதை எழுத ஆரம்பித்த காலம் அது. கதைக்கான கரு கவிதை மாதிரி பீலிங்கா யோசித்தால் வராது. எப்போதாவது தீடிரென்று சென்னையில் மழைவருவது போல் பூச்சாண்டி காட்டிவிட்டு போய்விடும். அதை அப்பிடியே மானே தேனே பொன்மானே போட்டு டெவெலெப் செய்ய வேண்டும். எதை எழுதலாம் என்று யோசிக்கையில் நம்ம கதையே பெரிய கதையா இருக்கே இதையே ஏன் எழுதக்கூடாதென்று நீயுட்டன் மாதிரி கேட்டுக்கொண்டேன். இரண்டாயிரத்தில் உலகம் அழிந்து போய்விடுமென்று யாகவா முனிவர் சொல்லிவிட்டதால்...கொஞ்ச நாள் பார்த்துக்கொண்டு எழுதலாமென்று தள்ளி போட்டுவிட்டேன். ஆனால் மனதிலேயே மானே தேனே பொன்மானே நடந்து கொண்டிருந்தது. ஒரு நாள் நூலகத்திலிருந்து "ஸ்ரிரங்கத்து தேவதைகள்"(ச்ஸ்ரி எப்பிடி போடுவது என்று தெரியவில்லை) புத்தகத்தை எடுத்துவந்தேன். படிக்க படிக்க ஒரே படபடப்பு, ஆத்திரம். என்னாடா இத மாதிரி தானே நாமளும் எழுதனும்னு நினைச்சிருந்தோம்(??!!$R$?). அதற்குள் இந்த ஆள் சுஜாதா எழுதிவிட்டாரே என்று வருத்தமாக இருந்தது. நல்ல வேளை இத மாதிரி நாமளும் எழுதி யார்கிட்டயாவது காட்டிருந்தா என்ன ஆயிருக்கும். திருவிளையாடல் தருமி மாதிரி - ஏற்கனவே நான் தான் எழுதினேன்ன்னு ஒரு பயலும் நம்ப மாட்டேங்கிறான், நல்லவேளை தப்பிச்சோம்ன்னு மனதை தேற்றிக்கொண்டேன். ஆனாலும் அந்த ஏக்கம் மனதைவிட்டு போகவேஇல்லை. அதில் ஒருபகுதி தான் "நாமதேவரும் கைப்பிடி சுண்டலும்". நீங்க வேற படிச்சுட்டு நல்லா இருக்குனு சொல்லிடீங்களா...(சொல்லலையேன்னு சொல்ல நினைச்சா கொஞ்சம் அடக்கி வாசீங்க ப்ளீஸ் :) ) எனக்கு மனதில் அமுக்கி வைத்திருந்த வேதாளம் திரும்பவும் முருங்கைமரம் ஏறிவிட்டது.

என்னடா இவன் எப்போ பார்த்தாலும் ஒரு கதை சொல்லச் சொன்னா...தேவர்மகன் சிவாஜி மாதிரி "அம்ம பாட்டுத் தேன்ங்"ன்னு இவன் கதையையே சொல்ல ஆரம்பிச்சுற்றான்னு நினைக்காதீங்க. என்ன செய்யட்டும் பிறந்து இருபது வருடங்களுக்கு மேல் புரண்டு வளர்ந்த பூமியை மறக்கமுடியவில்லை. தாய்பால் மாதிரி தாமிரபரணித் தண்ணீரையும் மறக்க முடியவில்லை. அடித்த கூத்துக்களை மறக்கமுடியவில்லை. இந்த சுயபுராணம் போர் அடிக்கிறதென்றால் யாரும் அடக்கி வாசிக்க வேண்டாம். தாராளமாக உங்கள் கருத்துக்களைச் சொல்லலாம்.ஆனால் அதைக் கேட்டு இந்த பதிவை நிப்பாட்டிவிடுவேனா என்றால் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.:P சரி அதென்ன தாமிரபரணித் தென்றல்? இன்றைக்கு தமிழகத்தில் வற்றாத ஜீவநதி என்று சொன்னால் தாமிரபரணிக்குத் தான் முதல் இடம் என்று நான் சொல்லுவேன். தமிழகத்தில் தோன்றி தமிழகத்திலேயே முடியும் இந்த நதி உண்மையிலேயே வற்றாத ஜீவநதி. மற்ற ஊர் மாதிரி நதி என்று சொல்லிக் கொண்டு கிரிக்கெட் ஸ்டம்பு நட்டுக்கொண்டு விளையாடும் அவலமோ, இல்லை எலி மூச்சா போன மாதிரி இழையோடும் ஒழுகலோ, இல்லை ஊரில்லுள்ள சாக்கடைகளின் ஓட்டத்தோடு திசைக்கும் திரும்ப முடியாத வீச்சத்தொடு நிற்கும் அவலமோ தாமிரபரணிக்கு கிடையாது.(எலேய் வீச்சருவா ரெடி பண்ணுலேய்...எல்லா ஊர்காரனும் சண்டைக்கு வரப்போறாங்கடோய்).

தென்பொதிகை மலையிலிருந்து தென்றலாய் தவழ்ந்து வரும் தாமிரபரணி கோடையில் கூட அணையில் தடுத்துவிடுவதால் வழக்கத்தை விட கொஞ்சம் குறைவாக வருமே தவிர...காய்ந்துவிடாது நிறைய பேர் குளிக்கும் அளவுக்கு ஓட்டத்தோடு இருக்கும். ஹி ஹி இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த தலைப்பு எனக்கென்னமோ ரொம்ப பிடிச்சு போய் அழகா இருக்கே என்று தோன்றியதால் வைத்தேன். மேற்சொன்ன அத்தனையும் தலைப்பை வைத்துவிட்டு யோசித்து எழுதியவைதான் என்று நீங்கள் சொன்னால் நான் மறுக்கப் போவதில்லை ஆனால் தாமிரபரணியப் பற்றி நான் சொன்னதெல்லாம் உண்மை.

இந்த பதிவில் என்ன எழுதலாமென்று இருக்கேன்? வேறென்ன...நான் பார்த்த செய்த ரசித்த, குறும்புகளை, அட்டகாசகங்ளைத் தான். இனி படிப்பதும் படிக்காத்தும் உங்கள் இஷ்டம்.இது என் ஆத்ம திருப்திக்காகத் தான் என்றாலும் என் எழுத்தில் உள்ள குறை நிறைகளை சொன்னால் திருத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.


--தொடரும்

GMailllllllllllllllll

heyyy I have opened my new GMail account !!!! woooohoooo
For all those who are interested in opening the new 1GB Gmail account from google - If you have a blogger account then login into your account and you will be able to see a ad- banner for opening Gmail account after you have logged in in the initial screen above your blog link. I understand that this is only for active blogger users only. You can give a try.

I can't see any link in Google GMail page for opening account.

Thanks Blogger !!

Wednesday, April 21, 2004

கிச்சாவும் சாம்பு மாமாவும்

For picture version of this post click here

பென்ட் இட் லைக் பெக்காம்

"டேய் கிச்சா குழம்ப கொஞ்சம் கிளறிவிட்டுட்டு இப்பிடி சித்த வா தாண் நல்லா வேகட்டும்"

"மாமா குழம்பு கொதிக்கறது இருக்கட்டும் எனக்கு வயறு கொதிக்கறது"

"இப்பிடி மாவாட்டற மிஷின் மாதிரி கண்டதையும் வாயில் போட்டு சதா சர்வ காலமும் அரைச்சிண்டே இருந்தா கலக்கும் கொதிக்கும்...எல்லாம் பண்ணத்தான் செய்யும்"

"அதில்ல மாமா..நீங்க எனக்கு சம்பளத்துல நாலணா கூட்டறதுக்கு மூக்கால அழறேள்..அங்க ஒருத்தன் என்னடானா விளையாடறதுக்கு கோடி கோடியா கொட்டிக் குடுக்கறாளாம். நானும் பேசாம போயிடலாமானு பார்க்கறேன்"

"போவ போவ நன்னா வயத்தால தான் போவ...யாரு என்னனு சொல்லேன்டா"

"பேரு பெக்காமாம். கால்பந்து விளையாடறானாம்...நம்ம டெல்லி மாமா சொன்னார்"

"ஓ அவனா...தெரியும் தெரியும். ஏண்டா கட்டைல போறவனே அவனோடயா உன்ன சேத்துக்கற...அவனெங்கே நீ எஙக...அவன் வருஷத்துக்கு எம்புட்டு சம்பாதிக்கிறான் தெரியுமோ?"

"இதெல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டுருக்கேளா? பலே ஆள் தான் நீங்க...எம்புட்டு?"

"வருஷத்துக்கு ஒன்னில்ல ரெண்டில்ல...நூத்தி நாப்பத்தி நாலு கோடி சம்பாதிக்கிறானாம்டா..."

"அடேயப்பா...அதாவது பரவால்ல மாமா...எனக்கேன் வயத்தெரியறதுன்னா...இப்போ லேட்டஸ்ட்டா...'அவனோட எனக்கு தொடர்பு இருக்கு'-ன்னு நீ நான்னு நிறைய பொண் குட்டிகள் வேற கிளம்பிருக்காளாமே"

"அட ராமா...அவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள் வேற இருகாளால்யோ"

"ஆமா ஆமா...யாரோ ரெபேக்கா லூஸாம் பி,ஏ வா இருந்தாளாம். அவனுக்கும் எனக்கும் எல்லாம் ஆயாச்சுன்னு விலாவாரியா டி.வில பேட்டியே குடுத்தாச்சாம்னா பாருங்கோளேன்."

"விலாவாரியாவா...என்ன கன்றாவிடா இது அதான் லூஸ்னு சொன்னியா"

"லூஸ்ங்கிறது அவ பேர் மாமா..இன்ன தேதிக்கு இன்ன பண்ணினான்...நான் இன்ன பண்ணினேன்னு கம்பேனில கணக்கெழுதி குடுக்கற மாதிரினா சொல்லிட்டா...இத மாதிரி இன்னும் ரெண்டு குட்டிகள் வேறு கிளம்பிருக்காளாம்."

"இதுக்கெல்லாம் எங்கேயோ மச்சம் வேணும்ன்னுனா சொல்லுவா.."

"அதையும் கேட்டாளே டி.வி பேட்டில...அதுக்கு இவ அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல மாட்டேன் கோர்ட்ல ஜட்ஜ்கிட்ட மட்டும் தான் சொல்லுவேன்னு சொல்லிட்டாளாம்"

"ராமா ராமசந்திரா....ஜட்ஜ்க்கு வேற ஜோலியே இல்லையா...பெக்காம்க்கு நெஞ்சுல மச்சம் இருக்கா குஞ்சுல மச்சம் இருக்கான்னு தான் கேட்டுண்டுருப்பாரா....கலிகாலம் வேறென்னத்த சொல்லறது மகா கன்றாவி போறும்டா இந்த பேச்சு...பைசாக்கு பிரயோஜனப்படாது..."

"பைசாக்கு பிரயோஜனப்படாதுன்னு அவசரப்படாதீங்கோ...பெக்காம்க்கு எங்கே என்ன மச்சம் இருக்கும்..என்ன பச்சை குத்திண்டுருக்கான்னு பந்தயம் வேற போட்டிருக்காளாம் இங்கிலாந்துல இருக்கற பெட்டிங் கம்பேனிகள். நீங்க தான் சாமுத்திரிகா லக்க்ஷணம் அது இதுனு சொல்லுவேளே...அத வைச்சு சொல்லுங்கோளேன்..கோடி கோடியா கிடைக்கும். கிடைக்கறதுல ஆளுக்கு பாதி வைச்சுக்கலாம்"

"நீ வெச்சுக்கோ இந்தக் கோடியெல்லாம்..தெருக் கோடி போறும் நேக்கு...முதல்ல குழம்ப வாளில எடுத்துட்டு அப்புறம் இந்த கணக்கெல்லாம் போடு!"

Monday, April 19, 2004

choti see break

Me off to a training program today and tomorrow. Will try if I can post anything in between, else see you all on Wednesday.

Have a great week ahead.

Thursday, April 15, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 5

For Previous Parts --> &nbsp &nbsp Part1 &nbsp &nbsp Part2&nbsp &nbsp Part3&nbsp &nbsp Part4


For Picture version of this post (split into two picture files) Part 5a -- Part 5b

முதல் வேஷ்டி அனுபவத்திற்குப் பிறகு அடிக்கடி கட்டிப் பழகியதால் அதற்கப்புறம் பிரச்சனையில்லாமல் இருந்தது. "எஜமான்" ரஜினி மாதிரி தழையத் தழைய கட்டுவதிலிருந்து, "தேவர்மகன்" கமல் மாதிரி தூக்கி கட்டுவது வரை எல்லா ஸ்டைலும் கை வந்த கலையாயிற்று.

அரும்பு மீசை வளர ஆரம்பித்த ஆரம்ப காலேஜ் நாட்களிலிருந்து வேஷ்டி தினமும் கட்ட ஆரம்பித்தேன்.(என்னமோ லுங்கி அவ்வளவு பிடிக்கவில்லை).

பஜனையிலும் சீனியர் அந்தஸ்து கிடைக்க ஆரம்பித்தது. டெய்லி காலையில் முதல் ஆளாகவந்து கூட்டத்தைக் கூட்டும் பொறுப்பெல்லாம் வந்தது. ஒ.பி அடிக்க முடியாமல் பாட்டெல்லாம் வேறு பாடவேண்டியிருந்தது. ஆனாலும் குறும்புக்கு மட்டும் குறைச்சலே இல்லை.

ஒரு மாமா தினமும் கரெக்டாக அவர் வீடு பக்கம் பஜனை வந்தவுடன் "சித்த இதப் பிடிடா..வயத்தக் கலக்கறது ஒரு நடை போய்ட்டு வந்துடறேன்"ன்னு போய்விடுவார்.

"அதெப்பிடிடா அவருக்கு மட்டும் வீடு வந்தோடனே அலாரம் வைச்ச மாதிரி ஆய் வரது?"-பையன்களுக்கு சந்தேகம் மண்டையைக் குடைந்தது. ரகசிய புலன்விசாரணைக் கமிஷன் வைத்தார்கள்.

"ஆயாவது நாயாவது..அவாத்து பால்காரன் லேட்டா வரான். மனுஷனுக்கு காலம்பற காப்பி குடிக்கலன்னா நரம்பு வெட்டி வெட்டி இழுக்க ஆரம்பிச்சுறும். அதான் சாக்கு சொல்லிட்டு போறார்" அடுத்த நாளே சி.ஐ.டிகள் போட்டு உடைத்தார்கள்.

குறும்புகளுக்கும் குதூகலத்துக்கும் குறைவே இல்லாமல் எதாவது விஷேசங்கள் வந்து கொண்டே இருக்கும்.

ராதா/சீதா கல்யாணம் -காலையில் ஆரம்பித்து மதியம் 2/3 மணி வரை நடக்கும். சம்பிரதாய பஜனை முறைப்படி ஆரம்பித்து தீபபிரதக்க்ஷிணம், டோலோஸ்தவம் என்று விஸ்தீரணமாகச் செல்லும். சம்பிரதாய பஜனையில் குறிப்பிட்ட வரிசையில் நாமாவளிகளையும், ஜெயதேவர் அஷ்டபதிகளையும் வரிசைக் கிரமம் மாறாமல் பாடுவார்கள். இதன்பின் திவ்ய்நாமசங்கீர்தனம். இதில் தான் தீபபிரதக்க்ஷிணம். ஒரு தீபத்தில் இறைவனை ஆவாகனம் செய்து அதைச் சுற்றிப் பாடிக்கொண்டே ஆடுவார்கள்.

இதுவரைக்கும் விஷயம் தெரியாமல் "பெக்க பெக்க"வென்று முழித்துக் கொண்டிருப்போம். இதுவந்தவுடன் பையன்களுக்கு உற்சாகம் பீறிட்டுக் கிளம்பும்.

தீபபிரதக்க்ஷிணம்பண்ணுகிறோம் பேர்வழியென்று உள்ளூர் மாரியாத்தா கோவில் சாமியாட்டத்திலிருந்து பேட்டை ராப் பிரபுதேவா ஆட்டம் வரை எல்லாவற்றையும் ஆடித்தீர்ப்பான்கள் பையன்கள். அதிலும் பார்ப்பதற்கு ரெண்டு குட்டிகள் இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். வைஜெயந்திமாலா பத்மினி மாதிரி போட்டி போட்டுக்கொண்டு ஆட்டம் தூள் பறக்கும். பாட்டு முடியும் வரையிலுமோ அல்லது யாராவது வந்து அடக்குகிற வரையிலுமோ பையன்களின் இந்தக் கூத்து தொடரும்.

ராதா/சீதா கல்யாணம் முடிந்த பிறகு டோலோஸ்தவம். நலுங்கு, பூப்பந்து எறிந்து விளையாடுதல் அனைத்தும் நடக்கும். ராதா கல்யாணத்தை நடத்தும் பாகவதர் ஒரு பூப்பந்தை யாரிடமாவது எறிவார். அதை காட்ச் பிடித்து திருப்பி வேறுயாரிடமாவது எறியவேண்டும். விளையாட்டு ஆரம்பிப்பதற்கு முன்னாலே வசதியாக உட்கார்ந்து கொண்டு பையன்கள் எப்பிடியாவது குறுக்கே புகுந்து பிடித்துவிடுவார்கள். அப்புறம் எதாவது ஒரு மாமாவை நடுவில் வைத்துக் கொண்டு மன்ங்கி கேம் விளையாடுவார்கள். பார்ப்பதற்கு காமெடியாக இருக்கும்.

இதற்கு அப்புறம் ராமரோ கிருஷ்ணரோ இரவு தூங்கி காலை எழுப்புவது மாதிரி ஒரு சம்பிரதாயம். அதற்கு கோழி மாதிரி கூவச் சொல்வார்கள். ஒரு முறை கோழியோடு நாய் குலைப்பது மாதிரி குலைத்து ஓரமாக நைஸாக தூங்கிக்கொண்டிருந்த ஒரு மாமாவை எழுப்பிவிட்டான் நண்பன். அவருக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

"ஏண்டா நாய்ப்பயலே..கோழி மாதிரி கூவறத விட்டுட்டு ஏன்டா நாய் மாதிரி குலைகற?"

"சும்மாத்தான் மாமா...ஒரு ரியல் எபெக்டுக்குத்தான்...காலங்கார்த்தால நாய் குலக்கறதே இல்லையா?"

"எல்லாம் எனக்குத் தெரியும். இந்த நையாண்டியெல்லாம் வேற எங்கயாவது வைச்சுக்கோ. நான் பொல்லாதவனாக்கும் மண்டைய உடைச்சு மாவிளக்கு ஏத்திறுவேன் ஜாக்கிரதை" - தூக்கத்தைக் கலைத்த கோபத்தில் பலமாகவே மிரட்டினார் மாமா.

மார்கழி முடிந்து பொங்கல் வரை பஜனை இருக்கும். அப்புறம் ஏப்ரல் மாதம் வாக்கில் ராம நவமி வரும் அதிலும் பத்து நாள் கொண்டாட்டங்களும் கச்சேரிகளும் இருக்கும். மிகவும் பசுமையான நாட்கள் அவை. விளையாட்டுத்தனத்தை மட்டுமே விவரித்திருந்தாலும் நிறைய கற்றுக்கொள்ளவும் செய்தேன். இன்றும் ஊரில் மார்கழி மாத பஜனை நடந்து வருகிறது. "என்ன இருந்தாலும் நீங்க இருந்த போது நடந்த மாதிரி சிறப்பா இல்லைடா" என்று ஒரு மாமி போனமுறை ஊருக்கு சென்ற போது சொன்னபோது உண்மையிலேயே மனதை என்னவோ செய்தது.பஜனை மடத்தை ஒட்டி நாங்கள் முன்னின்று கட்டிய பிள்ளையார் கோவில்.சின்னதாக இருந்தாலும் இன்னுமும் கம்பீரமாக இருக்கிறது. அங்கே நாங்கள் நட்ட ஆலம் கன்று இப்போது வளந்து மிகப் பெரிய மரமாகிவிட்டது.

மார்கழி மாத பஜனை, பிள்ளையார் கோவில், ஆலமரம் எல்லாவற்றையும் பற்றி இன்னுமும் எனக்கு எழுதி அனுப்பிக் கொண்டிருக்கிறார் ரகு அண்ணா - மடலில்

- முற்றும்

Wednesday, April 14, 2004

கிச்சாவும் சாம்பு மாமாவும்

For picture version of this post click here

அறிமுகம் - சாம்பு மாமா சமையல்காரர்.65 வயது. கிச்சா அவரது சமையல் குழுவில் உதவியாளர். 30 வயது. இருவருமே பிரம்மச்சாரிகள். சமையல் போக உலகத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும் சமூக பிரக்ஜையோடு பேசுவது இவர்களது பொழுது போக்கு.

"என்னமோடா கிச்சா அவியல்லேர்ந்து ஆல் இந்தியா கூட்டு வரைக்கும் பார்த்தாச்சு ஒன்னு மட்டும் புரியவே மாட்டேங்கறது."

"ம்ம்ம்ம் மாமாக்கு அரட்டையடிக்கிற மூடு வந்தாச்சு....சொல்லுங்கோ...உங்க டவுட்ட கிளியர் பண்றதுக்கு தானே எட்டாங் கிளாஸ் படிச்சுட்டு உங்க கிட்ட அஸிஸ்டென்டா சேர்ந்திருக்கேன்.."

"ஆமா என்னமோ ஐ.ஏ.யெஸ் படிச்ச மாதிரி பீத்திக்கோ...என் நேரம் தூண்கிட்ட புலம்பாம உங்கிட்ட புலம்பறேன்"

"சரி சரி கோச்சுக்காதீங்கோ சொல்லுங்கோ"

"அந்த காலத்துல பொண்கள் ருதுவானா (வயசுக்கு வந்தால்) பந்தல் போட்டு, ஊரெல்லாம் சாப்பாடு போட்டு அம்ர்க்களம் பண்ணுவா...சமையலுக்கு சான்ஸாவது கிடைச்சுன்டுருந்தது அப்புறம் கொஞ்ச நாள்ல் பொம்மனாட்டிகள் முன்னேற்ற சங்கம் அது இதுனு வந்து இதெல்லாம் கொண்டாடப் பிடாது...பொண்கள இழிவு படுத்தற மாதிரி இருக்கு...அது இதுனு சொல்லி நம்ம சமையல் காண்டிராக்டுலேயும் மண்ணைப் போட்டா..."

"ஆமா அப்போவாவது முஹூர்த்த மாசமா இல்லாட்டாலும் இத மாதிரியாவது சான்ஸ் கிடைக்கும்"

"சேரி முன்னேத்தம் மன்னேத்தம்ங்க்றாளே ...முன்னேறினா சரின்னு மனச தேத்திண்டேன்... இப்போ என்னடான்னா..."

"என்ன ஆச்சு திரும்பவும் கொண்டாட ஆரம்பிச்சுட்டாளா?"

"ஆரம்பிச்சா தான் தேவலையே...இப்போ என்னடான்னா...குட்டைப் பாவடையும் கட்டை மேலாக்குமா அம்புட்டையும் தரிசனம் காட்டிண்டு ..மே மாசம் இந்த தேதி இன்ன டைமுக்கு ருதுவானேன்னு ஊருக்கேனா பாட்டு பாடறா? இப்போ எங்க போனா அந்த முன்னேத்த சங்கக்காரால்லாம்?"

"ஓ நீங்க அந்த சினிமா பாட்ட சொல்லறேளா...ரொம்ப சரி மாமா...ஆனாலும் அந்தக் குட்டி பலே குட்டி மாமா. குட்டைப் பாவாடையும் கட்ட மேலாக்குமா ஷோக்காத் தான் ஆடறா...பேரு கூட ஏதோ சென்னோ மாருதியோ"

"அடி செருப்பால...ஆட்டுக்கு ஆடு மாட்டுக்கு மாடு கிழத்துக்கு கிழம் தான் சரிபடும்...உன்ன மாதிரி தறுதலைகிட்ட போய்ச் சொன்னேனே...என்னச் சொல்லனும்..சரி சரி...முகத்துல வழிசலை தொடச்சுண்டு இலைய போடற வழியப் பாரு. நேரமாச்சு"

Tuesday, April 13, 2004

Happy Tamil New Year

Wishing you all a very happy Tamil new year !!

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

((வாழ்த்து அட்டையில் பார்த்ததெல்லாம் மறந்து போச்சு அதனால சிம்பிளாக முடித்துக்கொள்கிறேன் :P)

Thursday, April 08, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 4

For Picture version of this post (split into three picture files) Part 4a -- Part 4b -- Part 4c

பெண்களுக்கு முதன் முதலாகப் புடவை/ தாவணி அணிவது எப்படி ஒரு ஸ்பெஷல் அனுபவமோ அதே மாதிரி தான் ஆண்களுக்கு வேஷ்டி/பேண்ட் அணிவது.

"இந்தா புதுசா இப்போத் தான் வண்ணான்கிட்டேர்ந்து வெளுத்து வந்திருக்கு இதக் கட்டிக்கோ"

"வேண்டாம் அதுல் கட்சிக்காரன் மாதிரி கறை போட்டிருக்கு"

"சரி அப்போ இந்த சரிகை போட்ட மயிற்கண் வேஷ்டி கட்டிக்கோ"

"இத கட்டிண்டா நாதஸ்வரக்காரன்னு நாதஸ்வரத்த வாசிக்க சொல்லிடுவா"

"சரி அப்போ பட்டு வேஷ்டி கட்டிக்கோ"

"ஏற்கனவே எம்பொண்ணக் கட்டிக்கோ உம்பொண்ணக் கட்டிக்கோன்னு தெருவில மாமிகளெல்லாம் போட்டி போடறா இத கட்டிண்டா நான் சிக்னல் குடுத்த மாதிரி இன்னிக்கே கல்யாணம் பண்ணி வெச்சுருவா" - ஹீ ஹீ இதைச் சொல்லலவில்லை சும்மா மனசுல இப்படி எல்லாம் இருக்கக்கூடாதா என்று நினைத்துக் கொண்டேன்...முத நாளே இது வேண்டாம் நான் யாரையாவது பிராக்கெட் போடணும்னா அன்னிக்கு இத வைச்சுக்கலாம்.

"இல்ல அது ரொம்பப் பகட்டா இருக்கும் வேண்டாம்"

"அப்போ என்னதான்டா வேணும் நோக்கு?"

"அந்த பாலிஸ்டர் வேஷ்டி தாங்கோ அது தான் எடுப்பா இருக்கும்"

"டேய் பாலிஸ்டர் வேஷ்டி வேண்டாம்டா, ரொம்ப வழுகும்னு மாமாவே ரொம்ப கட்டிக்கமாட்டார், உனக்கு பழக்கம் வேற இல்லை..."

"ஆமா கட்டிண்டுருக்கவா எல்லாரும் இதுக்குனு படிச்சு பட்டமா வாங்கிருக்கா...பெல்டல்லாம் போட்டு இருக்கிடுவேன் அவிழாது"

"சரி அப்போ உன்பாடு"

அரைமணி நேரம் ஆயிற்று கட்டி முடிக்க. அலுங்காமல் குலுங்காமல் தெருவில் நடந்தேன். எல்லோரும் தெருவில் என்னையே பார்க்கிற மாதிரி இருந்தது. யாரவது சிரித்தால் என்னப் பார்த்து தான் சிரிக்கிறார்களோ என்று திரும்பிப் பார்த்தேன். பொண்ணுங்களெல்லாம் நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்களோ என்று சந்தேகமாகவே இருந்தது.

"என்னடா வேஷ்டியெல்லாம் கட்டிண்டு ...மனசுல என்ன மம்மூட்டினு நெனப்போ"

"உங்க அப்பா தரமாட்டேன்னுட்டார்னு ரொம்ப பேசாதடா..."

நேரம் பார்த்து மாமிபாட்டி வந்தாள்.(போன தடவை சொன்னேனே அவாளே தான்).

"என்னடா மலச்சிக்கல்காரன் மாதிரி ஒரு மாதிரி நடந்து வர?"

"சும்மாத்தான் மாமி"

"ஓ வேஷ்டிலாம் கட்டிண்டு பிராமதப் படறதோ?"

கீழ கிடந்த கல்லை எடுத்து மாமிபாட்டி மேல் எறியாமல் பக்கத்தில் 'ஹீ ஹீன்னு சிரித்துக் கொண்டிருந்த வயத்தெரிச்சல் பிடித்தவன் மேல் எறிந்தேன்.

"நன்னாத் தான் இருக்கு நோக்கு தினமும் கட்டிக்கோ" - ரகு அண்ணா

"ரொம்ப தேங்க்ஸ்"

"போதும்டா ரொம்பத்தான் மொதக்காத ...நேர பார்த்து நடந்து போ கீழ விழுந்து பல்ல உடைச்சுக்கப் போற" - கல்லடி பட்டும் புத்தி வரவில்லை வயத்தெரிச்சல் பிடித்த நண்பனுக்கு.

"சீக்கிரம் வா ரமேஷூ உஞ்சவிர்திக்கு மிருதங்கம் வாசிக்க ஆளில்லை ...நீ தான் வாசிக்கனும் இன்னிக்கு"

"என்னது...இங்க நடக்கவே உம்பாடு எம்பாடா இருக்கு இதுல மிருதங்கம் வேறயா? சான்ஸே இல்ல"

"அதெல்லாம் கவலையே படாத..அதான் பெல்ட் போட்டுண்டுருகியோல்லயோ ஒன்னும் அவிழாது. மிருதங்கத்த கயிறுல கட்டி தோள்ல தொங்கவிட்டுக்கலாம்"

"இல்லண்ணா இன்னிக்கு வாசிக்க முடியாதுண்ணா"

"வாசிச்சா பிள்ளையார் நல்ல அனுக்கிரஹம் பண்ணுவார்"

"அனுக்கிரஹம் பண்ணுவார்...வேட்டி அவிழ்ந்தா கட்டி விடுவாரா? கொஞ்சம் பழக்கமாகட்டும் அப்புறம் வாசிக்கறேன்"

ஒரு வழியாக அதிலிருந்து தப்பித்தேன். உஞ்சவிர்தி கிளம்பி முக்கால்வாசி தூரம் வந்து எங்க தெருவிற்கு வந்தது.

"டேய் மம்மூட்டி இங்க வா ...இந்த அரிசி சாக்க பிடி நான் போய் இந்த மூட்டைய பஜனை மடத்துல போட்டுட்டு வந்துடறேன்"

"இல்லடா என்னால முடியாதுடா"

"சரி அப்போ நீ சைக்கிள்ல போய் போட்டுட்டு வா.." - கல்லடி வாங்கின கோபம் போல அவனுக்கு.

"தொலஞ்சு போ...சாக்க நான் புடிச்சுக்கிறேன் சீக்கிரம் வந்து சேரு"

இங்கே "முன்னாபாய்" பற்றி சொல்லவேண்டும். எங்க தெரு ஹிந்தி பைத்தியம். ஹிந்தியில் தான் பேசுவாள். நான் "கலம் கஹாங் ஹை? கலம் மேஜ் பர் ஹை" - என்று ஹிந்தி படித்த புதிதில் அவளிடம் போய் கேட்பேன். அவள் கெட்ட கெட்ட ஹிந்தி வார்த்தையால் திட்டுவாள்.
"என்னளவுக்கு அவளுக்கு ஹிந்தி தெரியலைடா..." என்று ஹிந்தி தெரியாத நண்பர்களிடம் சரடு விடுவேன்.

பஜனைக்குப் பக்கத்தில் பன்றி ஒன்று வந்துகொண்டிருந்தது. அதுபாட்டுக்கு போய் கொண்டிருந்ததை விரட்டுகிறேன் பேர்வழி என்று வானரப் படையில் ஒன்று கல்லெடுத்து வீசியது. கல் பன்றிமேல் பட்டு அது பயந்து திண்ணையில் "தேமே"ன்னு படுத்துக் கொண்டிருந்த முன்னாபாய் மேல் ஏறி தாவி ஓடி விட்டது.

தூக்க கலக்கத்தில் முன்னாபாய்க்கு என்ன நடந்து என்று புரியவில்லை. பக்கத்தில் கல் கிடப்பதையும், ஒரு பையன் இன்னொரு கல்லோடு நிற்பதையும் பார்த்துவிட்டு அவளைத்தான் கல்லால் அடிக்கிறான் என்று அனர்த்தம் செய்துகொண்டுவிட்டாள்.

கோபத்தோடு பதிலுக்கு பக்கத்திலிருந்த கல்லை எடுத்து முன்னாபாய் குறிபார்க்க அவ்வளவு தான் இங்கு பஜனையில் பாம்பு புகுந்த மாதிரி எல்லாரும் ஒட்டம் பிடிக்க ஆரம்பித்தார்கள்.

ஒருமாமா பயத்தில் என் வேஷ்டியை மிதிக்க நான் எதிர்புறமாக ஒட எத்தனிக்க...பெல்ட் கில்டெல்லாம் பிய்த்துக் கொண்டு பாலிஸ்ட்டர் வேஷ்டி புத்தியைக் காட்டத் துவங்கியது. கையில் வேறு குட்டி பருப்புச் சாக்கு.

மானத்துக்கு முன்னால் புளியாவது பருப்பாவது என்று பருப்புச் சாக்கை சிதற விட்டு மிதித்துக் கொண்டிருந்த மாமாவை ஒரு தள்ளு தள்ளி வேஷ்டியை வெற்றிகரமாக பிடித்துவிட்டேன்.

இதற்குள் முன்னாபாய் பெரிய மனசு பண்ணி கல்லைக் கீழே போட்டிருந்தாள்.

"என்னடா பருப்பையெல்லாம் கொட்டிட்டே? மெதுவா பொறுக்கி எடுத்துண்டு வா" - ஒரு மாமா கன்னிப் பையனின் மானத்தைப் பெரிதாக நினைக்காமல் பெரிய பருப்பு மாதிரி சொல்லிவிட்டுப் போனார்.

பிள்ளையாரைப் பழித்ததால் சோதனை செய்தாலும், அன்று பிள்ளையார் ஒரு வழியாக என் கற்பு பறி போகாமல் காப்பாற்றிவிட்டார்.

- தொடரும். (மெகா சீரியல் மாதிரி இழுக்கறேனோ?)

Tuesday, April 06, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 3

For Picture version of this post (split into two parts) Part 3a -- Part 3b

நித்ய பஜனை போக சில விசேஷ தினங்களில் அதிகப்படி பஜனை வேறு நடக்கும். அஷ்டபதி நாள், உஞ்சவிர்த்தி, சீதா கல்யாணம் - இந்த தினங்களில் காலை பஜனை முடிந்தவுடன் சின்ன இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும். வார நாட்களில் வைத்தால் ஒரு பயலும் திரும்பிப் பார்க்கமாட்டார்கள் என்று சனி/ஞாயிறு அன்று தான் வைப்பார்கள்.

அஷ்டபதி நாள் அன்று ஜெயதேவரின் இருபத்தி நான்கு அஷ்டபதி பாடல்களையும் நிறுத்தி நிதானமாக "தியாகராஜ ஆராதனை" மாதிரி அழகாக விஷயம் தெரிந்த பாகவதர்களும்,மாமாக்களும்,மாமிகளும் பாடுவார்கள்.

அஷ்டபதி வடமொழியில் இருப்பதால் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். ஒரு தரம் டெய்லி பஜனையில் "சத்குரு ஸ்வாமிக்கு ஜே!" என்பதற்கு பதிலாக "சத்ரு மாமிக்கு ஜே" என்று சத்தமாக உளறிவிட்டேன். அதற்கே லோக்கலில் விஷயம் தெரிந்த மாதிரி நடிக்கும் ஒரு மாமா "அற்பப் பதரே போடா அந்தாண்ட ..."ங்கற மாதிரி முறைத்துப் பார்த்தார். அதனால் அஷ்டபதியில் ரொம்ப மெனெக்கட மாட்டேன். சத்தம் போடாம சும்மா 'வழவழ கொழகொழ'னு நைஸா ஒப்பேத்திவிடுவேன்.

வீட்டில் இருந்தால் படிக்கவேண்டும், அங்கே போனால் அப்போ அப்போ பானகம், பழம், ஜூஸ்னு எதாவது தருவார்கள். அதனால் தெருவில் உள்ள வானரங்கள் எல்லோரும் கண்டிப்பாக குழுமிவிடுவோம். பிரசாதம் வினியோகம் பண்ணுகிறோம் பேர்வழி என்று பாதியை அமுக்கி விடுவான்கள் பையன்கள். பஜனை மடத்துக்கு உள்ளேயே சைடில் மறைவான தட்டி போட்ட இடத்தில் தனியாக ஸ்வாகா செய்யப்படும். ஒருமுறை வெளியூரிலிருந்து வந்திருந்த பாகவதர் தொண்டை கட்டியிருந்ததால் சுக்கு மிளகு நிறைய போட்ட ஆறின வெந்நீரை சொம்பில் வைத்திருந்தார். இது தெரியாமல் வானரப் படையில் ஒரு வானரம் அதை பானகம் என்று நினைத்து அபேஸ் செய்துவிட்டது. ஸ்வாகா பார்ட்டியில் பாகவதர் பார்த்துவிடப் போகிறாரென்று நாலு பேர் அதை ஒரே மடக்கில் குடித்துவிட்டார்கள்.
அவ்வளவு தான் குடித்த நாலு பேரும் கண்ணில் ஜலம் வர இரும, அவர்கள் அவஸ்தையை பார்த்து மற்றவர்கள் எல்லாரும் கண்ணில் ஜலம் வர சிரிக்க- குட்டு வெளிப்பட்டு விட்டது.

"ஏன்டா ஓசில கிடைச்சா பினாயில கூட ஒன்றரை லிட்டர் குடிச்சுருவேளோ?" - மாமிகளுக்கெல்லாம் ஏகக் கொண்டாட்டம்.

"ஏன் நீங்களெல்லாம் ஓசில வடை கிடைச்சா நேக்கொன்னு நாத்னாருக்கு ஒன்னுன்னு வாங்கிக்கலையா அத மாதிரி தான்" - சூடாகத் திருப்பி குடுத்தான்கள் பையன்கள்.

"சீதா மாமி பிள்ளை தானே...ரொம்ப தான் வாயாயிடுத்து நோக்கு, சீதா மாமி வரட்டும் கேக்கறேன்"

மாமியும் இல்லாமல் பாட்டியும் இல்லாமல் இருந்த அந்த மாமிபாட்டிக்கும் எங்களுக்கும் அப்புறம் ஒத்துக்கவே இல்லை. பிளாக்லிஸ்ட் செய்துவிட்டோம்.

பாகவதர்களெல்லாம் அப்புறம் உஷாராக கோவணத்தைக் கூட பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

கிரிகெட் நடக்கும் நாட்களில் பஜனை மடத்துக்கு அருகில் இருக்கும் பையன் வீட்டில் கிரிக்கெட் பார்ப்போம். ஜூஸாவது பொங்கலாவது கொடுக்கும் போது விஷயத்தைச் சொல்ல ஒரு பொடியனை ஏற்பாடு செய்து இருப்போம். உடனே கொஞச நேரம் போய் உட்கார்ந்து கூட்டத்தோடு கோவிந்தா போட்டுவிட்டு கிடைத்ததை அமுக்கிக் கொண்டு நைஸாக ஒருவர் ஒருவராக கழண்டு திரும்பவும் இங்கு வந்துவிடுவோம். ரகு அண்ணாக்கு விஷயம் தெரிந்தாலும் வானரங்களை ஒன்றும் செய்யமுடியாதென்று தெரியும், அதனால் தலையில் அடித்துக் கொள்வதோடு நிறுத்திக்கொள்வார்.

ஒரு முறை வெளியூரிலிருந்து வந்திருந்த பாகவதர் இது பொறுக்காமல் ரொம்பவே சிலிர்துக்கொண்டார்.

"எங்கடா போற?"

எனக்கு என்ன சொல்லவென்று தெரியாமல் சட்டென்று மூச்சாங்கற மாதிரி சைகை காட்டிவிட்டு ஓடிவிட்டேன். அதிலிருந்து பையன்களும் அதையே சொல்ல ஆரம்பித்தார்கள்.

"ஏண்டா உங்களுக்கெலாம் என்ன நீரழிவா என்ன? மூனு பாட்டு பாடறதுக்குள்ள முன்னூறு தரம் மூச்சா போகப் போறேளே? அதுவும் எல்லாருக்கும் அலாரம் வெச்ச மாதிரி ஒன்னு போலத் தான் வருமோ?"

எங்கேயோ மழை பெய்யறது எங்கேயோ இடி இடிக்கறதுன்னு நாங்கள் கண்டு கொள்ளவே மாட்டோம்.

நான் மிருதங்கம் வாசிக்க உட்கார்ந்து விட்டால் மாட்டிக் கொள்வேன். எங்கேயும் நகர முடியாது.அதற்காகவே என்னை மிருதங்கம் வாசிக்க சொல்லி விடுவார் ரகு அண்ணா.

அஷ்டபதியை விட உஞ்சவிருத்தியும் சீதா கல்யாணமும் விறுவிறுப்பாக இருக்கும்.உஞ்சவிருத்தியன்று "நாம சூத்ரம்" உபதேசம் வாங்கிய பாகவதர் தலைப்பாகு, தம்பூரா, சிப்லாக்கட்டை, அக்க்ஷய பாத்திரம் சகிதமாக ஊர்வலம் வருவார். அவர் கூட எல்லாரும் கூட்டமாக பஜனை பாடல்களையெல்லாம் பாடிக் கொண்டு வருவார்கள். எல்லார் வீட்டிலும் உஞ்சவிருத்தி பாகவதரின் காலை குளிர்ந்த த்ண்ணீர் கொண்டு அலம்பி குங்கும சந்தனம் வைத்து தீப ஆரத்தி எடுத்து, அரிசியும் பருப்பும் அக்க்ஷ்ய பாத்திரத்தில் போட்டு வலம் வந்து வணங்குவார்கள்.

இதில் வரும் அரிசியையும் பருப்பையும் கொண்டு சீதா கல்யாணத்தில் ஊருக்கெல்லாம் புளியோதரையும் சர்கரைப் பொங்கலும் பிரசாதமாக குடுப்பார்கள்.

நாங்கள் தான் அரிசி மூட்டையை தூக்குவதிலிருந்து அனைத்து எடுபிடி வேலையும் பார்ப்போம். அப்பேற்பட்ட ஒரு சுபயோக சுபதினத்தில் விபரீதம் புரியாமல் நான் முதல் முதலாக வேஷ்டி கட்டினேன்.

--வேறு வழியில்லாமல் இன்னும் வளரும்.

Friday, April 02, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 2

For Picture version of this post (split into two parts) Part 2a -- Part 2b

விசேஷமான நாட்களுக்கு மட்டும் மிருதங்கத்தை பஜனை மடத்தில் வைத்து வாசிக்க ஆரம்பித்தேன்.

ரகு அண்ணா தான் எங்களை மாதிரி பஜனை சேனையை எல்லாம் தலைமை தாங்கி மேய்ப்பார். நல்ல சுறுசுறுப்பு. அனுபவஸ்தர். 35 - 40 வயது இருக்கும். மிருதங்கத்தை தூக்கிக்கொண்டு உலா வரமுடியவில்லை என்றதும் ஒரு கஞ்சிரா வாங்கித் தந்தார்(சினிமாவிலெல்லாம் ஒரு ஏழை தாத்தா தாடி வைத்துக்கொண்டு நட்ட நடு ராத்திரியில் தத்துவப் பாடலெல்லாம் பாடிக்கொண்டு கையில் வைத்துக் கொண்டு வாசிப்பாரே அது மாதிரி இருக்கும் கஞ்சிரா)

எனக்கு ரொம்ப ஆச்சரியம்.

"என் திறமையை பார்த்துட்டு கை காசெல்லாம் போட்டு வாங்கி குடுத்திருக்காராக்கும்" என்று பக்கதிலிருந்தவனிடம் ஸ்லாகித்துக் கொண்டிருந்தேன்.

"திறமையைப் பார்த்துட்டு ஒன்னுமில்ல...என்னடா ஏற்கனவே பஜனைக்கு கூட்டம் குறைந்து கொண்டிருக்கே... நீ இதத் தட்டினாலாவது அதக் கேட்டு நாலு பேர் வந்து கூட்டம் கூடாதான்னு தான்" - என்னால் பாதிக்கப்பட்டவன் போல, சமயம் பார்த்து மானத்த வாங்கினான்.

குரங்காட்டி மாதிரி நிலமை ஆகிவிட்டதே என்று இருந்தாலும்..மானமாவது வெட்கமாவது என்று விடாமல் திறமை காட்டினேன்.

பஜனை முடிந்ததற்கு அப்புறம் ஓர் ஓரமாக "அண்ணா தளபதி- காட்டுக் குயிலு பாட்டுல வர்ற மாதிரி வாசிங்கண்ணா " என்று நேயர் விருப்பமெல்லாம் ஜோரா நடக்கும்.

"எத்தனை நாளைக்குடா காட்டுக் குயிலு கூட்டுக் குயிலுனு காலத்த தள்ளுவீங்க...மைக்கேல் ஜாக்ஸன் என்னமா பீட் போட்டுருக்கார் தெரியுமா இப்ப வாசிக்கிறேன் பாரு இதக் கேட்டு ரசனையை வளர்த்துக்கோங்கோடா.."

"யாருண்ணா மைக்கேல் ஜாக்ஸன்? சிலுவை பாதிரியாரா?"

"அடப்பாவி டேய் பஜனை மடத்துல வெச்சு என்ன வம்புல மாட்டிவுட்ராதடா...அவர் பாப் கலைஞர்டா.."

"ஓ அரசியல்வாதியா..."

பசங்க ஞானம் இந்த ரேஞ்சு தான்னு தெரிஞ்சப்புறமென்ன அதுவரை மனசுல அடக்கி வைத்திருந்தது எல்லாம் புதுசு புதுசாகப் பிரவாகமாகி மைக்கேல் ஜாக்ஸன் பெயரில் அரங்கேறும்.

கொஞ்சம் கொஞ்சமாகப் பதவிகளும் பொறுப்புகளும்(?!) வர ஆரம்பித்தன. பழம் (பிரசாதங்க) கொடுப்பதிலிருந்து சுண்டல், சர்கரைப் பொங்கல் கொடுக்கும் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டியில் மெம்பரானேன்.

அங்கிருந்து பார்த்த போது தான் அதுவும் நாய்ப் பொழப்புத் தான் என்று புரிய ஆரம்பித்தது. சில கட்டளைதாரர்கள் (அதாங்க சுண்டல் ஸ்பான்சர்) சில சமயம் சின்ன பாத்திரத்தில் கொஞ்சமாகக் கொடுப்பார்கள்.அன்றைக்குத் தான் இங்கே கூட்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு இருக்கும்.

அன்றைக்கு அனுபவஸ்தர்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு சாமர்த்தியமாக சமாளிப்பார்கள். கடைசியில் எக்ஸிக்கூட்டிவ் கமிட்டி மெம்பர்கள் சட்டியில் மணடையை விட்டு மோப்பம் மட்டுமே பிடிக்கமுடியும்.

ஒரு முறை இந்த மாதிரி ஒரு சந்தர்பத்தில் நானும் நண்பனும் தெரியாத்தனமாக விநியோக பொறுப்பை எடுத்துக் கொண்டோம்.

நண்பன் வேண்டிய பெண்ணுக்கு கொஞ்சம் கூடவும், பின்னால் வந்த பாட்டிக்கு ரெண்டு சுண்டல் குறைவாகவும் கொடுத்து விட்டான்.

"ஏன்டா என்னை என்னனு நினைச்ச..உங்க அப்பனே என்ன பார்த்தா பயப்புடுவான், நீ சுண்டைக்கா...முன்னால் வந்த செவத்த குட்டிக்கு பல்ல இளிச்சுண்டு குடுக்ற நான் வந்தோடன பஞ்சப் பாட்டு பாடறியா..."

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா...எலிக்குப் பிறந்தது எருமைமாடாகுமாங்கிற ஆராய்சிகளில் மட்டுமே அதுவரை ஈடுபட்டிருந்த பாட்டி அன்றைக்கு மைக்கேல் மதன காமராஜன் பாட்டியாக மாறி ஏகக் களேபரம்.

"சட்டசபை மாதிரி ஒரே வயலென்ஸ் டா அங்க..." அப்புறம் திசைக்கும் தலை வைத்து படுக்கவில்லை நண்பன்.

ஆனால் நான் பனங்காட்டு நரியாக தொடர்ந்து கொண்டிருந்தேன்.

"இவங்க ஏன் பெரிய பாத்திரம் கொண்டு வராங்க தெரியுமா?..அப்போ தான் நாம குடுக்கற பொங்கல் ரொம்ப கொஞ்சமாக தெரியும் அதனால் நிறைய போடுவோம்னு" - இருந்த சீனியரிடம் நான் முன்பு கற்ற பால பாடத்தை சொன்னேன்.

"அது தெரியும். அதனால தான் நான் சுண்டல் போடற கரண்டிய சின்னதா வெச்சிருக்கேன். ரெண்டு மூனு தரம் போட்டாலும் நிறைய விழாது அதே சமயம் நிறைய போட்ட மாதிரியும் இருக்கும், பசங்களும் நிறைய போட்டாச்சுன்னு நகர்ந்து போய்டுவாங்க.." - வாயை பொளந்து கொண்டு மேனேஜ்மெண்ட் பாடம் கற்றேன்.

--மேலும் வளரும்

Monday, March 29, 2004

நாமதேவரும் கைப்பிடி சுண்டலும் - 1

For Picture version of this post (split into two parts) Part 1a -- Part 1b

பஜனை மடம் - எனக்கு போதி மரத்துக்கும் மேலே. விளையாட்டுப் போக்காய் என்னையும் அறியாமல் கற்றுக் கொண்டது அதிகம். இந்தப் பதிவில் கற்றுக்கொண்டதை விட "விளையாட்டுப் போக்கில்" கவனம் செலுத்தி இருக்கிறேன். பஞ்சு மிட்டாய்க்கு ஆசையாய் ஏங்கும் பையன் போல மார்கழியில் ஊருக்குப் போக மாட்டேனா என்று இன்னமும் மனதின் ஓரத்தில் ஒரு ஏக்கம் இருக்கத்தான் செய்கிறது.

பஜனை மடம் அறிமுகமான போது பத்து வயது. நானும் கச்சேரிக்கு போகிறேன்ங்கிற மாதிரி தான் போக ஆரம்பித்தேன். தெருவில் அது ஒரு கலாச்சாரம். தெருவில் எந்த வீட்டில் எந்த சுண்டல் நன்றாகச் செய்வார்கள் என்று பையன்கள் காரசாரமாக விவாதிக்கும் போது நாமும் கலந்து கொள்ளவேண்டுமே என்று போக ஆரம்பித்தேன்.

பஜனை மடத்திற்கு மிக அருகில் வீடு. அங்கிருந்து பஜனை கோஷ்டி காலை 5 மணிக்கெல்லாம் கிளம்பி ஊரெல்லாம் சுற்றி எங்கள் வீடு வழியாக பஜனை மடத்திற்கு 6:30 மணிக்கு சென்றடையும். பிறகு அங்கு அரை மணி நேரம். 7 மணிக்கு முடியும்.

முதலில் கொஞ்ச நாள் காலையில் எழுந்திருக்க கஷ்டமாயிருந்தது. ரொம்பப் பழக்கம் இல்லாததால் சுண்டல் குடுக்க போகும் போது கரெக்டாக போனால் என்ன சொல்வார்களோ என்று சீக்கிரமே போய் ஜோதியில் ஐக்கியமாகி விடுவேன்.

மிளகு காரத்துடன் சூடாக நெய் மணத்துடன் வெண்பொங்கல்... ஏலக்காய், பச்சை கற்பூரம், முந்திரி பருப்பு,உலர்ந்த திராட்சை போட்டு நெய் ஒழுகக் கை வைக்க முடியாத சூட்டுடன் சர்கரைப் பொங்கல்... கடுகு மிளகாய் பழம் தாளித்து பெருங்காய மணத்துடன் சூடான சுண்டல்...சும்மா சொல்லக் கூடாது, மார்கழி பனியில் சூடாய் அந்த பிரசாதமெல்லாம் திவ்யமாக இருக்கும்.

ப்ரொபேஷன் பீரியட் மாதிரி சில சீனியர் பையன்கள் ராகிங் வேறு நடக்கும். அவர்கள் வீட்டைக் கடக்கும் போது தூக்கக் கலக்கத்தோடு வந்து கையில் பாத்திரத்தை அடுக்குவார்கள்.

"டேய் ...ஒரு வேளை வர லேட்டாயிடுச்சுனா சுண்டல கரெக்டா வாங்கி வை..வந்து கலெக்ட் பண்ணிக்கிறேன்"

சில பேர் சொல்லிட்டு வரவே மாட்டார்கள். டோர் டெலிவரி வேறு செய்ய வேண்டும்.

சில பேர் ட்ரிங்னாமென்ட்ரி மாதிரி கொஞ்சம் குழப்புவார்கள்.

"டேய் சுண்டல் குடுத்தாங்கன்னா இதுல வாங்கு, சர்கரைப் பொங்கல் குடுத்தா இதுல...ரெண்டும் குடுத்தா இதுல சுண்டல் இதுல சர்கரைப் பொங்கல்"

ஒரு நாள் அதிசயமாக சுண்டல், சர்கரைப் பொங்கலுடன் பஞ்சாமிர்தம் வேறு குடுத்தார்கள். இரண்டு பாத்திரம் குடுத்தவர்களுக்கு சர்கரைப் பொங்கலும் பஞ்சாமிர்தமும் ஒரே பாத்திரத்தில் வாங்கினேன்.

"ஏன்டா பிரக்ஸ்பதி ரெண்டையும் குழப்பிட்டையேடா...ஒரு ஆல இலைய நடுவில போட தெரியாது?" - பால பாடம்.

"ஏண்டா அவன் குடுக்குற தக்னூண்டு பொங்கலுக்கு இவ்வளவு பெரிய பாத்திரம் எதுக்குடா" -கொஞ்சம் தைரியம் வந்த காலத்தில் கேள்வி கேட்டேன்.

"டேய் ...அவனே தக்னூண்டு தான்டா குடுப்பான்..ஆனா பாத்திரம் பெரிசா இருந்ததுன்னு வெச்சுக்க...இது ரொம்ப கொஞ்சமா தெரியும் ..சோ அவனே மனசு கேக்காம கூட கொஞ்சம் போடுவான்..." - உண்மையிலேயே ஒர்க் அவுட் ஆகிற தொழில் ரகசியம்.

கொஞ்சம் ஆள் வளர வளர கவனம் வேறு திசையில் போக ஆரம்பித்தது. மொத்தம் பத்து செப்பு ஜால்ராக்கள் தான் வைத்து இருப்பார்கள். தாளம் தெரிந்தவர்கள் மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதி. ஜால்ராக்கள் வைத்து இருப்பவர்கள் எல்லாரும் விஷயம் தெரிந்தவர்கள் மாதிரி பந்தா விட்டுக்கொள்வார்கள்.

"இதக் கொஞ்சம் பிடி ..வேஷ்டி அவுந்துருத்து கட்டிக்கிறேன்.." - ஜால்ரா ஸ்டாண்ட் மாதிரி சில மாமாக்கள் உபயோகப்படுத்திக் கொள்வார்கள்.

இருந்தாலும் சந்துல சிந்து பாடிவிடுவேன்..."ஜிங்.."ன்று தப்புத் தாளமாய் எடாகூடமாய் தட்டிவிடுவேன். அவ்வளவு தான் ஸ்டாண்டு உத்தியோகமும் கொஞ்ச நாள் பறி போகும். இதென்னமோ கலெக்டர் உத்தியோகம் மாதிரி ஆலாய் பரப்பான்கள் பையன்கள்.

ட்ராயரிலிருந்து வேஷ்டி கட்டிக் கொள்கிற வயது வந்தவுடன் தான் போனால் போகிறதென்று அவசரத்துக்கு ஒதுங்கும் மாமாக்கள் ஜால்ராவை குடுப்பார்கள். கோலம் போடுகிற பிகருங்க வீட்டில் மட்டும் கொஞ்சம் பலமாகத் தட்டுவேன்.

வயதான மாமாக்கள்லாம் கொஞ்ச நாளில் "ஊரெல்லாம் சுத்தி வர முடியாது...நாங்க பஜனை மடத்திற்கு நேராக வந்துடறோம்..நீங்க இளவட்டங்கள் ஊரெல்லாம் சுத்தி ஜமாய்ங்கோ.." என்று விபரீதம் புரியாமல் வழிவிட்டார்கள்.

இருந்தாலும் சில பெரியவர்கள் விடாமல் வருவார்கள். முழுக்க முழுக்க இளவட்டங்கள் மட்டுமே இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்தோம்.

சில சமயம் அவர்கள் ஈடு கொடுக்க முடியாத படி வேகமாய் ஓட்டமும் நடையுமாய் போவோம். கடைசியில் ஒன்னு ரெண்டு பேர் மட்டும் மிஞ்சினார்கள்.

"ராதிகா மனோகரா மதனகோபாலா...
தீன வஸ்தலா ஹே ராஜகோபாலா...!!"

ராதிகா, வஸ்தலா மாமி, ராஜகோபாலன் மாமா மூன்று பேர் வீட்டின் முன்பும் முறை வைத்துப் பாடுவோம். "விஸ்வநாதன் வேலை வேண்டும்" ங்கிற ரேஞ்சுக்கு மக்களிடமிருந்து தெம்பாக சத்தம் வரும். சின்னச் சின்ன சில்மிஷங்கள், ஆனால் வரம்பு மீற மாட்டோம்.

மிருதங்கம் வாசிக்க ஆரம்பித்தவுடன்...பெரிய லெவலுக்கு மரியாதை கிடைக்க ஆரம்பித்தது. முதலில் ஆர்வத்துடன் தோளில் கட்டிக் கொண்டு எல்லோரும் பார்க ஊர்வலம் வந்தேன்.

தோள் பட்டை பிஞ்சு வலி எடுத்து ரெண்டு அமிர்தாஞ்சன் பாட்டில் காலி. கூடுதலாய் கொஞ்சம் பொங்கல் கொடுக்கிறார்கள் என்று இந்தக் கூத்தெல்லாம் அடிக்க முடியாதென்று திரும்பவும் ஜால்ரா மாஸ்டரானேன்.

-- தொடரும்

Friday, March 26, 2004

Publicity stunt eh

Is this a Publicity stunt or heights of fantasy/Jollu? Oru velai Mathrubootham kitta kaata vendia case oo?

A man, who once petitioned the Delhi High Court that he was married to Priyanka Gandhi, now claims that actress Sridevi is his wife and has moved a family court here to direct her to live with him.

Ramakrishna Goud in his petition, seeking a direction to the actress to live with him, claimed that he was married to her in January 1992 and that she had lived with him till March that year.

Family Court Judge Pushpa Doraisamy posted the matter for hearing on April 22.
Link


அடுத்தது யாரு ஐஸ்வர்யா ராயா?

எல்லாரும் ஊரான் வூட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னா...நீ என்னடான்னா....


(Aduthathu yaaru Aishwarya Rai yaa?
Ellarum ooran veetu neiyee en pondati kaiyeena nee ennadanna....)

Wednesday, March 24, 2004

கவிதெ ! கவிதெ!

For picture version of this post (split into two parts) Part1 Part 2

பத்தாவது படிக்கும் போது பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். பள்ளிக்கு புது தமிழ் வாத்தியார் வந்திருந்தார். இள ரத்தம். முதுகலை முடித்த கையோடு நேராக வந்திருந்தார். "மாசில் வீணையும்..." உருத் தட்டிக் கொண்டிருந்த கான்வன்டில், புதுக்கவிதையை அறிமுகப்படுத்தினார். பையன்களுக்கு ஆர்வம் வரனுமே என்று இலுப்புச்சட்டி, அல்வா துண்டம், இடுப்பு மடித்த மசால் தோசைனு பெண்ணை உருவகப்ப்டுத்தி கவிதை சொன்னார் (நல்ல கவிதை..ஆனா நியாபகம் இல்லை). பசங்கோஸ்..உருவகம், கவிதை நடை இதெல்லாம் விட்டு விட்டு அடிக்கடி "மசால் தோசை கவிதை சொல்லுங்க சார்"னு அரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அவர் சொன்ன கவிதைகளெல்லாம் நன்றாக இருந்தது. அதோடு பேச்சுப் போட்டிக்கெல்லாம் வேறு மேற்கோள் காட்டி பேசியதிலிருந்து கொஞ்சம் பாதிப்பு. பத்தாங் கிளாசில் படித்துக் கொண்டு பதினோராம் கிளாஸ் பொண்ண வேறு ரூட் விட்டுக் கொண்டிருந்தேன். எல்லாமாக சேர்ந்து என்னமோ பண்ணி வெத்து பேப்ப்ரை வெட்டி சின்ன புஸ்தகம் மாதிரி செய்தேன். முதலில் எதுகை மோனையாக வார்த்தையெல்லாம் எழுதி வைச்சுப்போம் கவிதை எழுத உபயோகமாய் இருக்கும் என்று எழுத ஆரம்பித்தேன்.

"வெந்நீர், பன்னீர், காலை,மாலை, வேலை, வெங்காயம், பெருங்காயம், கருப்பு, பருப்பு..." கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தது.

மாமா எங்கிருந்தோ வந்தார். "ஒரு பேப்பரும் பேனாவும் தா...அதோ அந்த மாதிரி நீளமா வேனும் அத தா ஒரு பேப்பர் கிழிச்சுண்டு தரேன்"னு வாங்கிக் கொண்டார்.

வாங்கினவர் என்ன எழுதிருக்கேன்னு முனு முனுவென்று வாசிக்க ஆரம்பித்தார்.

"பலசரக்கு லிஸ்ட் எழுதனும் அட இது கூட உபயோகமாய் இருக்கும் போல" என்று வேண்டாததை அடித்து விட்டு வேணுங்கறதுக்கு பக்கதில் அரை கிலோ, ஒரு கிலோனு திருத்த அரம்பித்துவிட்டார்.

பலசரக்கு ஐட்டத்தையெல்லாம் தவிர்த்து புது லிஸ்ட் எழுத ஆரம்பித்தேன். நான் 'கவிதெ' எழுத முயற்சிக்கிறேன்னு மோப்பம் பிடிச்சு ஒரு நண்பன் வந்தான்.

"டேய் அத இப்பிடி கொண்டா பாப்போம்" பிடுங்கி வாசிக்க ஆரம்பித்தான். சிறிதும் பெரிதுமாய் வரிக்கு ஒரு வார்த்தை இருந்தது லிஸ்ட்டில்.

"அட நல்லா இருக்குடா...இது தான் கவிதையா...."

அட ராமா....மண்டையில அடிச்சுக்காத குறை தான்.
அதுக்கப்புறம் கெக்க பிக்கென்னு என்னமோ எழுதி வாத்தியாரிடம் காண்பித்தேன். ஐய்யோ பாவமேனு திருத்த ஆரம்பித்து திரும்பவும் முழுவதையும் எழுதிக் கொடுத்தார்.

இப்ப தான் கவிஞர்களெல்லாம் "வசந்த் அண்ட் கோ" ஓனர் மாதிரி கோட் சூட்லாம் போட்டுக் கொண்டு ஷோக்காய் இருக்கிறார்கள். அப்போலாம் நான் பார்த்த கவிஞர்களெல்லாம் தாடி வைத்துக்கொண்டு, ஜிப்பா போட்டுக் கொண்டு சோடா புட்டி அனிந்திருந்தார்கள். சரி இதெல்லாம் நமக்கெதுக்குனு அப்புறம் கவிதெ எழுதவே இல்லை. உண்மை என்னவென்றால் 'கவிதெ' ரொம்ப வரலை.

ஏ பி சி டி எங்கப்பன் தாடி
ஓ பி சி டி உங்கப்பன் தாடி

இதைத் தாண்டி "மாசறு பொன்னே...வலம்புரி முத்தே...." எழுத நிறைய பேர் இருந்த்தால் வேறு ஜோலி பார்க்க போய்விட்டேன்.

ஆனா காலேஜில் நெருங்கிய நண்பன் கவிதையெல்லாம் எழுதுவான். அடிக்கடி ப்பீலிங் ஆகி மோட்டுவளையத்தை பார்ப்பான். கிழிச்சு போட்ட டிக்கெட்டை கூட விட மாட்டான் கவிதை எழுத ஆரம்பிட்துவிடுவான். லெட்டரில் மாய்ஞ்சு மாய்ஞ்சு "கவிதெ" எழுதி அனுப்புவான்.(எனக்கு தான். மேற்படி கிட்டலாம் சொல்ல தில் இல்லெ) "இதெல்லாம் அப்பிடியே வரது தான் இல்ல?"னு நக்கல் விட்டாலும் கோபித்துக் கொள்ள மாட்டான்.

காதலுக்கும் கத்திரிக்காய்க்கும் சம்பந்தம் இருக்கோ இல்லையோ...கவிதைக்கு சம்பந்தம் இருக்குங்கற மாதிரி அடிக்கடி உணர்சிவசப்படுவான். ஜலதோஷம் பிடித்த மாதிரி மூக்கால் பாட்டெல்லாம் பாடுவான். காதல் வியாதியா இல்லை கவிதை வியாதியா கண்டுபிடிக்கவில்லை.

நானும் ஒரு "கவிதெ" லெட்டரில் எழுதி அனுப்பினேன்

மானே..தேனே..பேனே
கண்ணே பொண்ணே...புண்ணே
அன்பே கரும்பே...இரும்பே
அன்னமே
ஒன்றரை லிட்டர் கிண்ணமே
கவிதை கவிதை

நானும் காதலிக்கிறேனோ !!


ம்ஹூஹூம் அன்னிக்கு காணாம போனவன் தான் அதுக்கப்புறம் அவனிடமிருந்து பதிலே.....வரவில்லை


பின்குறிப்பு - ஐய்யா இதில் கவிதையையோ நிஜ கவிஞர்களையோ கேலி செய்யலை. நிஜ கவிஞர்கள் படித்தீர்களானால் கோச்சுக்காத சாமி சொல்லிபுட்டேன் ஆமா.

Tuesday, March 23, 2004

Movie again but englibis movie

It was one of those lethargic weekend afternoon tea time on December 2001. 'Chakra' asked me if I would be interested in a movie. We had a common friend who had two preview show tickets for a movie and had offered them to Chakra. Chakra wasn’t too keen, but was a cat on the wall where he wouldn’t mind if he had a company and so asked me if I would be interested. Me being couch potato was also not too keen, but still asked him what movie that was. When he told me the name of the movie, my wife exclaimed that she had seen the adverts of the movie and looked similar to Harry Potter stuff.

Harry Potter had been just released that time and we all had a notion that HP was childrens/teen movie. Chakra and me concluded that this would also be a vittalacharya masala and dropped the idea that it might not be worth for preview.

The movie was “Lord of the Rings - The Fellowship of the Ring”

Needless to say we sobbed about it a lot later.

2003 – Convinced after hearing a lot about the movie accidentally got hold of LOTR – The two towers extended edition. Having no idea about the characters or story..all I could actively watch was first 30 mins. Watching it in my laptop I fell asleep in my bed after 45 mins. Literally oru ezhavum puriyala. I was confusing Gandalf and Saruman (and even doubted that they might be double act :P) and fixed an appointment for counselling with my local “peter” . My peter friend explained me that it was a continuous story and gave me the whole DVD pack.

Mannn what a movie it was….all of us in our family(including my daugther) were thrilled watching this movie. I was eagerly waiting for the DVD release of the third movie….(why not theatre? Family ppl with small kids would know the answer)

After seeing the make of the movie, behind the scenes etc… I envy Peter Jackson for his dedication. He really deserves 11 oscars.

Ok rest in damil for obvious reasons.

இன்னிக்கு எனக்கு மூனாவது டி.வி.டி யும் கிடைச்சுடுச்சு.....அதுல ஒரு சி.டி ஒர்க் பண்ணல...நாளைக்கு அதுவும் கிடைச்சுடும்!!!! சோ....நாளைக்கு அதையும் பார்த்துடுவேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

Thursday, March 18, 2004

புயலொன்று புஸ்வானமான கதை - 2

For picture version of this post (split into two parts) Part 3 Part 4

போட்டோவை பார்ததும் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்த்து.

"ஏங்க சுமாரா தாங்க வந்திருக்கு"

முறைத்துக் கொண்டே மேலிருந்து கீழ் பார்வையுடன் "இருக்கறது தான் வரும்"-எதிர் பார்த்த பதில் தான் கிடைத்தது.

"இந்த டப்பா கேமராக்கே மனசுல அவனுக்கு என்னமோ பி.சி.ஸ்ரிராம்னு நினைப்பு இங்க வந்திருக்கவே கூடாது" எனக்கு நானே மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

போட்டோவுடன் குறிப்பு அனுப்ப வேண்டுமே. "இந்த கதையை படித்து நாலு பேர் யோசித்தால் ரொம்ப சந்தோஷப் படுவேன். சமுதாயம் உருப்படனும், மக்கள் மாற வேண்டும் ஆனை பூனை..அம்பத்திரெண்டு...மொத்தத்தில் "இந்தியா ஒளிர வேண்டும்" என்று ஒரே பேத்தல்.

இரண்டு வாரம் கழித்து பத்திரிக்கையில் முடிவு வெளியாகியது. என் பேரை தேடித் தான் கண்டு பிடிக்க வேண்டியிருந்தது. என்னை மாதிரி யாரும் தேடி கண்டுபிடித்ததாக தெரியவில்லை.

என்னடா உலகம் இதுனு இருந்தது. இருக்கட்டும் என் போட்டோவும் கதையும் வரட்டும் ..அப்போ வெச்சுக்கறேன்.

அது வார பத்திரிக்கை...வாரா வாரம் ஞாயிற்றுக் கிழமை எப்போடா வரும் ஆவலோடு காத்திருக்கலானேன். பால்காரன் வந்தார், வேலைக்காரி வந்தார், பேப்பர் வந்தது, பத்திரிக்கை வந்தது ஆனா என் போட்டோவும் கதையும் மட்டும் வரவே இல்லை.

"ஏய் உன் போட்டோ வந்திருக்குடா..."

"எங்கேடா எங்கேடா?"

"ம்ம்ம் இங்கேடா "....யாரோ மண்டையை போட்டதுக்கு வருந்தி வந்திருந்தை காட்டி நக்கல் விட்டார்கள்.

"டேய் வேண்டாம்...இருக்கற எரிச்சலில் அடிச்சேனா நாளைக்கு உன் போட்டோ வந்திரும் அந்த இடத்துல ஓடிப் போயிருடா"

அப்புறம் என்னவேனா ஆகட்டும்னு அந்த பத்திரிக்கையை கொஞ்சம் நாள் பார்க்கவே இல்லை. ஒரு நாள், சுகமாக தூக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அப்பா பேப்பரும் கையுமாக எழுப்பினார்.

"டேய் வேற நல்ல போட்டோ ஏதாவது குடுக்க கூடாதாடா..."

அடிச்சு புரண்டு எழுந்திருந்தேன். ஹீ...ஹீ போட்டோவுடன் ..கதாசிரியர் இங்கு இன்ன படிக்கிறார்...ரொம்ப சிறந்த தேசபக்தி உடையவர்னு குறிப்பு வேறு. எனக்கே ரொம்ப வெட்கமாக இருந்தது. சும்மாவே இவனுங்க ஓட்டறதுக்கு குறைச்சல் இல்லை இதுல இது வேறயா, என்ன சொல்லி சமாளிக்கலாம்னு ஒரே யோசனை.

"என்ன மாமா உங்க பையனோட போட்டோ பத்திரிக்கைல வந்திருக்கு போல...கதை ரொம்ப நன்னாயிருக்கு" ஒரு ஜிகிடியின் தோப்பனார் சர்டிபிகேட் கொடுத்தார்.

"மாமா உங்க பொண்ணுகிட்டயும் அப்பிடியே சொல்லுங்கோ அவ பக்கதாத்த்து பொண்ணு கிட்டயும் சொல்லச் சொல்லுங்கோ" மனசுக்குளிருந்த மைனர் குரல் குடுத்தார்.

காலங்கார்தாலேயே குளித்து உம்மாச்சியெல்லாம் கும்பிட்டுவிட்டு, எங்கேயோ போவது போல் சும்மா தெருவில் கிழக்கும் மேற்குமாக நாலு தரம் நடந்தேன்.

சும்மாவே வம்படிக்கும் தெருவில் ...விஷயம் அதற்குள் பரவி இருந்தது.

"ரமேஷண்ணா உங்க போட்டோ இன்னிக்கு பத்ரிக்கையில வந்திருக்கு" ஒரு சின்ன பெண் சொன்ன போது .."இதெல்லாம் என்னோட அரசியல் வாழ்கையில ரொம்ப சகஜமப்பா.."ங்கற மாதிரி லுக்கு விட்டேன்.

ஒரு பெரிய வக்கீல் நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

"அம்பி இங்க வா" என்று கூப்பிட்டு ..."எனக்கு தெரிஞ்ச பையன் தான் ...கதையெல்லாம் எழுதுவார்..பெரிய எழுத்தாளர்..இன்னிக்கு பத்ரிகையில கூட போட்டோலாம் வந்திருக்கு" என்று குண்டைத் தூக்கி போட்டார்.

எழுத்தாளரா? அதுவும் பெரிய எழுத்தாளரா...சர்தான் வக்கீல் கண்டிப்பா ஏதோ வம்புல மாட்டி விட போறார்..மனதில் பல்பு எரிஞ்சுது. ஒருவேளை பொய் சாட்சி சொல்ல கூப்பிடுவாரோ...? விடு ஜூட் ஓட்டம் பிடித்தேன்.

இப்பிடியாக சுத்துப்பட்டியில் பரவி இருந்த நம்ம எழுத்துப் புகழ் காலேஜுக்கு இடம் பெயர்ந்த்து.

எதுடா சாக்குனு நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு காத்திருந்த பஞ்சத்துக்கு பொறந்த பயல்கள்...ட்ரீட்னு சொல்லிக் கொண்டு பக்கத்திலிருந்த ஹோட்டலுக்கு கூட்டிக் கொண்டு போனார்கள்.

விட்டால் ஆளையே அடித்து சாப்பிடுகிற காட்டான்களுக்கு, அசைவம் குடுத்து கட்டுப்படியாகதென்று வேறு வழியில்லாமல் நல்ல சைவ ஹோட்டலுக்கு கூட்டி போனேன். போன ஜென்மத்தில் ஹோட்டல்காரர்க்கு நிறைய கடன் வெச்சிருப்பேன் போல...நாலைந்து மாதங்களுக்கு சேர்த்தே தாராளாமாய் பாத்தி கட்டி குழைத்துக் அடித்துக் கொண்டிருந்தார்கள் என் தளபதிகள்.

"ஏன்டா நீ சாப்பிடலை?" எவனோ ஒருவன் போனால் போகிறதென்று கேட்டான்.

"அவனுக்கு நல்ல மனசுடா நாம சாப்பிடறத பார்த்தே மனசும் வயிறும் நிறைஞ்சிருக்கும்" - ராமநாரயணன் படத்து செண்டி டயலாக் வேறு இதில்.

எல்லாம் முடிந்து பில்லை குடுத்துவிட்டு பார்த்ததில்..பரிசாக வந்திருந்த பணத்தில் காலணா மிஞ்சியது.

இனிமேல் இது மாதிரி விஷயமெல்லாம் இந்த புண்யவான்கள் காதிற்கு எட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் - கண்ணை பிடுங்கிய பின் சூர்ய நமஸ்காரமும் சபதமும் பண்ணினேன்.

ஏப்பம் விட்டுக் கொண்டே நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். ஏதோ சொல்ல வந்தது போல் தெரிந்தது.

"ஏன்டா மனுசணை கலங்க அடிக்கிறீங்க ...விஷயத்தை சொல்லுங்கடா..."

"எல்லாம் சரிடா...எங்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம்...உங்க வீட்ல வெச்சுருக்கியே ஒரு தண்டி இங்கிலீஸ் புஸ்தகம்...நீ அத பார்த்து உல்டா பண்ணி இந்த கதையை எழுதினியா? இல்ல வேறெதாச்சும் வைச்சு இத உஷார் பண்ணினயா?..சொன்னா நாங்களும் எழுதி உனக்கு ட்ரீட் குடுப்போம்ல..."

"டொம்"ன்று ஒரு சத்தம்...என் இதயம் தான் வெடித்தது...முன்னால் செய்த சபதத்தை கேன்சல் செய்து விட்டு ...இனிமேல் கதையே எழுத கூடாதுனு சபதம் செய்தேன்.

டமில் உலகதிற்கு எவ்வளவு நஷ்டம்....நானும் அகநானூறு மாதிரி நிறைய லேகியமெல்லாம் எழுதி இருப்பேன்...ஹும்ம்ம்ம்ம்ம்

பின் குறிப்பு - தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு - ஆஞ்சனேயா படத்திற்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்? ...இதெல்லாம் பெரிய மனசு பண்ணி கிளறாதீங்க...:)

Wednesday, March 17, 2004

புயலொன்று புஸ்வானமான கதை

For picture version of this post(split into two parts) Part 1 Part 2

"கோந்தே நோக்கு ஏதோ மணியாடர் தபால் வந்திருக்காம்"

"தபாலா? மணியாடரா? நேக்கா? " க்ரோர்பதி அமிதாபச்சன் மாதிரி மூன்று தரம் கேட்டதில் மாமியே குழம்பி போனாள்.

"ஆமாம் அம்பி உமக்குத் தான்..வாரும்" வாசலில் இருந்து தபால்காரர் உரிமையோடு விளித்தார்.

"என்ன அம்பி பத்திரிகைக்கெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டீர் போல" விட்டால் போஸ்டர் அடித்து விடுகிற ரேஞ்சில் தபால்காரர் சவுண்டு குடுத்ததில் பக்கத்தாத்து ராஜாமணி கோவணம் அவுந்தா கூட தெரியாத வேகத்தில் ஓடி வந்தான்.

"இந்தாரும்" என்று 75 ரூபாயும் மணியாடர் குறிப்பையையும் கையில் திணித்து விட்டு, என்னமோ கைக் காசை போட்டுக் குடுத்த தோரணையில் பக்கத்து வீட்டுக்கு பெருமை பேச போய்விட்டார்.

கதை எப்பவோ வெளி வந்தது, லேட்டா பணம் அனுப்புவதற்கு மன்னிக்கச் சொல்லி குறிப்பு இருந்தது.

பின்னாலிருந்து எட்டிப் பார்த்தே படித்துவிட்டான் ராஜாமணி.

"எலேய் ரமேஷு (நானே தான்) பெரிய ஆளாயிட்ட எங்களையும் கவனிச்சுக்கோ " நான் என்னமோ அப்துல்கலாம் மாதிரி மனு குடுத்தான்.

நான் இன்னமும் விளக்கெண்ணை குடித்த மாதிரி 'ஙே'ன்னு முழித்துக் கொண்டிருந்தேன்.

அப்போ புரியவில்லை, சாயங்கலாம் தான் புரிந்தது. தெரு கிரிக்கெட் டீம் நிதிக்கு எல்லாரையும் விட கூட கொஞ்சம் கறந்து விட்டான்.

"எதை எழுதினாலும் சமூக பிரக்ஜையோடு எழுது" மாமா அவர் பங்குக்கு அள்ளி விட்டுக் கொண்டிருந்த பொழுது தெருவில் இருக்கும் சொல்ப பிகருகளில் யாரவது இதை பார்திருக்க மாட்டார்களா என்று கவலை பட்டுக் கொண்டிருந்தேன்.

"ராஜாமணி இதைப் பற்றி நாலு பேரிடம் சொன்னால் உனக்கு 50 பைசா போடுகிறேன்" தெரு பிள்ளயாரிடம் மனமுருக பிரார்த்தித்தேன்.

இருந்தாலும் பிள்ளையாரை நம்பாமல், கல்யாண பத்திரிகை தவிர வேறெந்த பத்திரிகையும் வாங்காத பிக்ர்களின் வீட்டுக்கெல்லாம் போய் "உங்காத்துல இந்த வாரம் இந்த பத்திரிகை வாங்கினேளா?"ன்னு சும்மானாச்சுக்கும் கேட்டேன்.

அதனாலோ என்னமோ ராஜாமணியும் பிள்ளையாரும் கைவிட்டு விட்டார்கள். பண்ணின பப்ளிசிட்டி ஸ்ட்ண்ட் எல்லாம் பிளாப் ஆகியது.

கொஞ்ச நாளில் மனம் தேறிய போது கண்ணில் பட்டது அந்த பத்திரிகை விளம்பரம். மிகவும் பிரபலமான "சிறுகதை போட்டி". ஏற்கனவே நிறைய கேள்வி பட்டிருக்கேன். சரி முயற்சி பண்ணித்தான் பார்கலாமே மனம் சபலப் பட்டது.

பாரதிராஜா படத்தில் வருகிற பெரிய எழுத்தாளர் மாதிரி ஆத்தங்கரைக்கு போய் பச்சை பசேலென்று இருக்கும் வயலைப் பார்த்துக் கொண்டு எழுதலாமென்று கிளம்பி போனேன். வெறுமென தலையை சொறிந்து கொண்டு பராக்க பார்த்துவிட்டு வெத்து பேப்பரோடு திரும்பி வந்தேன்.

இதெல்லாம் வேலைக்காகாது என்று நாட்டுப்பற்றை கருவாக வைத்துக் கொண்டு பாதி ராத்திரி ஒரு வழியாக எழுதி முடித்தேன்.

கோழி கிறுக்கலை எல்லாம் திரும்பி கூட பார்க்கமாட்டார்கள் என்று அக்காவிடம் குரங்குக் கூத்தெல்லாம் ஆடிக் காட்டி பிரதி எழுதி வாங்கி அனுப்பினேன்.

அனுப்பி ஒரு மாதம் ஆனதிலிருந்து தபால்காரரை தொல்லை பண்ண ஆரம்பித்தேன். அதிலிருந்து என்னமோ சல்மான்கானைப் பார்த்த ஐஸ்வர்யா ராய் மாதிரி என்னை பார்த்தாலே ஓடி ஒளிய ஆரம்பித்தார்.

மனசுக்கு பிடிச்ச பெண்ணிடம் விளையாட வேண்டிய விளையாட்டையெல்லாம் இந்த பெருசுடன் விளையாட வேண்டி இருக்கேனு நொந்து நூடூல்ஸ் ஆனது தான் மிச்சம்.

சரி அம்புட்டு தான்! புட்டுகிச்சு போலனு கை கழுவின சமயம் அந்த லெட்டர் வந்தது,

"மொத்தம் ஆராயிரத்துக்கும் மேலே பேர் கலந்து கொண்டதால் முடிவு அறிவிப்பதில் தாமதமானது, முதல் மூன்று பரிசுகள் போக, மிச்சம் ஏழு ஆறுதல் பரிசு கதைகளில் உங்கள் கதையும் தேர்வாகி இருக்கிறது. உங்களைப் பற்றிய குறிப்புடன் புகைப்படத்தையும் அனுப்பவும்"

அம்புட்டுத்தான்....சலங்கை ஒலி கமலஹாசன் மாதிரி பிள்ளையார் முன்னாடி "ஜிங் ஜிங்னு" ஆட வேண்டும் போல இருந்தது. ஒரு வேளை ஜெயப்பிரதா பக்கத்தில் இருந்தால் ஆடி இருப்பேனோ என்னவோ.

இருந்த பழைய போட்டோவில் எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை...ம்ஹும் இந்த முறையும் சந்தர்பத்தை நழுவ விடக் கூடாது.

மாமியிடமிருந்து பத்து ரூபாய் வாங்கி பவுடரெல்லாம் போட்டுக் கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டேன்.

--- தொடரும்