Wednesday, April 21, 2004

கிச்சாவும் சாம்பு மாமாவும்

For picture version of this post click here

பென்ட் இட் லைக் பெக்காம்

"டேய் கிச்சா குழம்ப கொஞ்சம் கிளறிவிட்டுட்டு இப்பிடி சித்த வா தாண் நல்லா வேகட்டும்"

"மாமா குழம்பு கொதிக்கறது இருக்கட்டும் எனக்கு வயறு கொதிக்கறது"

"இப்பிடி மாவாட்டற மிஷின் மாதிரி கண்டதையும் வாயில் போட்டு சதா சர்வ காலமும் அரைச்சிண்டே இருந்தா கலக்கும் கொதிக்கும்...எல்லாம் பண்ணத்தான் செய்யும்"

"அதில்ல மாமா..நீங்க எனக்கு சம்பளத்துல நாலணா கூட்டறதுக்கு மூக்கால அழறேள்..அங்க ஒருத்தன் என்னடானா விளையாடறதுக்கு கோடி கோடியா கொட்டிக் குடுக்கறாளாம். நானும் பேசாம போயிடலாமானு பார்க்கறேன்"

"போவ போவ நன்னா வயத்தால தான் போவ...யாரு என்னனு சொல்லேன்டா"

"பேரு பெக்காமாம். கால்பந்து விளையாடறானாம்...நம்ம டெல்லி மாமா சொன்னார்"

"ஓ அவனா...தெரியும் தெரியும். ஏண்டா கட்டைல போறவனே அவனோடயா உன்ன சேத்துக்கற...அவனெங்கே நீ எஙக...அவன் வருஷத்துக்கு எம்புட்டு சம்பாதிக்கிறான் தெரியுமோ?"

"இதெல்லாம் தெரிஞ்சு வெச்சுண்டுருக்கேளா? பலே ஆள் தான் நீங்க...எம்புட்டு?"

"வருஷத்துக்கு ஒன்னில்ல ரெண்டில்ல...நூத்தி நாப்பத்தி நாலு கோடி சம்பாதிக்கிறானாம்டா..."

"அடேயப்பா...அதாவது பரவால்ல மாமா...எனக்கேன் வயத்தெரியறதுன்னா...இப்போ லேட்டஸ்ட்டா...'அவனோட எனக்கு தொடர்பு இருக்கு'-ன்னு நீ நான்னு நிறைய பொண் குட்டிகள் வேற கிளம்பிருக்காளாமே"

"அட ராமா...அவனுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தைகள் வேற இருகாளால்யோ"

"ஆமா ஆமா...யாரோ ரெபேக்கா லூஸாம் பி,ஏ வா இருந்தாளாம். அவனுக்கும் எனக்கும் எல்லாம் ஆயாச்சுன்னு விலாவாரியா டி.வில பேட்டியே குடுத்தாச்சாம்னா பாருங்கோளேன்."

"விலாவாரியாவா...என்ன கன்றாவிடா இது அதான் லூஸ்னு சொன்னியா"

"லூஸ்ங்கிறது அவ பேர் மாமா..இன்ன தேதிக்கு இன்ன பண்ணினான்...நான் இன்ன பண்ணினேன்னு கம்பேனில கணக்கெழுதி குடுக்கற மாதிரினா சொல்லிட்டா...இத மாதிரி இன்னும் ரெண்டு குட்டிகள் வேறு கிளம்பிருக்காளாம்."

"இதுக்கெல்லாம் எங்கேயோ மச்சம் வேணும்ன்னுனா சொல்லுவா.."

"அதையும் கேட்டாளே டி.வி பேட்டில...அதுக்கு இவ அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல மாட்டேன் கோர்ட்ல ஜட்ஜ்கிட்ட மட்டும் தான் சொல்லுவேன்னு சொல்லிட்டாளாம்"

"ராமா ராமசந்திரா....ஜட்ஜ்க்கு வேற ஜோலியே இல்லையா...பெக்காம்க்கு நெஞ்சுல மச்சம் இருக்கா குஞ்சுல மச்சம் இருக்கான்னு தான் கேட்டுண்டுருப்பாரா....கலிகாலம் வேறென்னத்த சொல்லறது மகா கன்றாவி போறும்டா இந்த பேச்சு...பைசாக்கு பிரயோஜனப்படாது..."

"பைசாக்கு பிரயோஜனப்படாதுன்னு அவசரப்படாதீங்கோ...பெக்காம்க்கு எங்கே என்ன மச்சம் இருக்கும்..என்ன பச்சை குத்திண்டுருக்கான்னு பந்தயம் வேற போட்டிருக்காளாம் இங்கிலாந்துல இருக்கற பெட்டிங் கம்பேனிகள். நீங்க தான் சாமுத்திரிகா லக்க்ஷணம் அது இதுனு சொல்லுவேளே...அத வைச்சு சொல்லுங்கோளேன்..கோடி கோடியா கிடைக்கும். கிடைக்கறதுல ஆளுக்கு பாதி வைச்சுக்கலாம்"

"நீ வெச்சுக்கோ இந்தக் கோடியெல்லாம்..தெருக் கோடி போறும் நேக்கு...முதல்ல குழம்ப வாளில எடுத்துட்டு அப்புறம் இந்த கணக்கெல்லாம் போடு!"

No comments:

Post a Comment

Related Posts