Wednesday, September 26, 2012

மீசை

தாவணி பாவனாவா இல்லை புடவை ஸ்னேகாவா என்ற வயதுக்கு வந்த பெண்களுக்கு குழப்பமான கெட்டப் தருணம் ஒன்று இருப்பது போல், ஆரம்பகால அரவிந்த்சாமியா இல்லை தற்கால ஹிரிதிக் ரோஷனா என்று வயதுக்கு வந்துகொண்டிருக்கும் எல்லா ஆண்களுக்கும் ஒரு மிக முக்கியமான குழம்பேஸ்வரா மீசை தருணம் கண்டிப்பாக உண்டு.

சமூகத்தில் பெண்களுக்கு ஓலை கட்டி சடங்கு செய்வது போல் இல்லாமல், மீசை மட்டுமே ஆணகள் வயசுக்கு வந்துவிட்டதற்கான அறிகுறியாய் இருப்பது பெரிய இம்சை. "ம்ம்ம்..அரும்பு மீசை.. என்னடா வயசுக்கு வந்தாச்சு போல " என்று பக்கத்து வீட்டு அக்கா நண்பனின் கன்னத்தைக் செல்லமாய் கிள்ளும் போது, எனக்கு மட்டும் ஏன் இன்னும் பாலிஷ் போட்ட மொசைக் மாதிரி மழுமழுவென்று இருக்கு என்று சுரண்டிப் பார்த்திருகிறேன். "கட்டிங் மட்டுமா, இல்ல ஷேவிங்குமா தம்பி" என்று நண்பனை மட்டும் நாவிதர் கேட்கும் போது, தினத்தந்திக்குப் பின்னால் "லா லா லா" என்று விக்ரமன் பட நாயகி மாதிரி உருகியிருக்கிறேன். "இங்க பாரு எனக்கு மீசை இல்லாட்டியும் பரு வந்திருச்சு" என்றாலும் உதாசீனப் படுத்தும் சமூகத்தை எண்ணி வெட்கப் பட்டிருக்கிறேன். மயிர் வளம் கொழிக்கும் கேசவர்த்தினி கூட மகசூலைப் பெருக்கவில்லை என்பதை நினைத்து வேதனைப்பட்டிருக்கிறேன்.

"உம்மேல ஆசை வைச்சேன் ; வேறெதுக்கு மீசை வைச்சேன்" என்று சங்க இலக்கியங்களாகட்டும், "நீ மட்டும் மீசை வைச்ச ஆம்பிளையா இருந்தா.." என்று தொடை தட்டி ராஜ்கிரண், விஜய்குமார் சமஸ்தானங்கள் விடும் உதாராகட்டும் - இந்த இழவெடுத்த ஆண்மைக்கும் மீசைக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. இதில் வயசுப் பையன்களுக்கு மீசை இல்லாவிட்டால் ஆயிரத்தெட்டு சங்கடங்கள் வேறு. தே.சீனா நடிகரும் "ந"ன்னா நடிகையும் நடித்த மேட்டர் படம் தான் இதுவரை வந்த நீலக்காவியங்களிலேயே சிறந்தது என்று தெருவில் யாரோ பார்த்ததாக புருடா விடும் அறிவுப்புரட்சி விவாதங்களுக்கு எண்ட்ரி டிக்கெட்டே மீசை தான். இல்லா விட்டால் "யாராவது இந்தப் பக்கம் வந்தா சொல்லு" என்று கபடி போட்டி சப்ஸ்ட்டியூட் மாதிரி வெளியே உட்கார வைத்துவிடுவார்கள். லேசாகவாவது வளர்வது வரைக்கும் "இன்னும் மொளச்சு நாலு இலை விடலை அதுக்குள்ள" என்று போவோர் வருவோர் உள்ளிட்ட சமுதாய அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டே ஆகவேண்டும்.

"சும்மாவாச்சும்...அடிக்கடி ஒரு தரம் ஷேவ் பண்ணுடா அப்போ தான் வளரும்" என்பது இரண்டும் கெட்டான் பருவத்தின் ஆணித்தரமான ஐதீகம். மாமாவின் ஷேவிங் செட்டை ஆட்டையைப் போட்டு அகல உழாமல் ஆழ உழுது முதல் சவரம் ரத்தம் பார்த்து, ப்ளாஸ்திரி போட்டதாலோ என்னவோ மூக்குக்கு கீழே ரொம்ப நாள் வானம் பார்த்த பூமியாகவே இருந்தது. "கவலப் படாத மச்சி ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள்...உனக்கும்" என்று சக ஐ.ஏஸ்.எஸ்கள் அட்வைஸ் கொடுக்கும் போது, நல்லதங்காள் ஏன் கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் விழுந்தார் என்பது நன்றாகப் புரியும். ஒரு சுபயோக சுபதினத்தில் மூக்குக்கு கீழே முதல் பூனை முடியைப் பார்த்தது வாழ்வில் மறக்க முடியாத பொன்னாள். அதற்கப்புறம் தினமும் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டாலும், தாய்மாமா யாரும் வண்டி பூட்டி நான் வயசுக்கு வந்ததை பாட்டு பாடி கொண்டாததால், மீசை முழுதாக வந்த சரித்திர நாளை குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

அரவிந்சாமி, அஜீத், போன்றவர்களைத் தானே பொண்ணுங்களுக்கு பிடிக்கிறது என்று மீசை வளர்வதற்கு முன் செய்த முதல் சவரமே கடைசி சவரமாய் முடிந்து, அதற்கப்புறம் இன்று வரையிலும் மீசையை எடுத்ததே இல்லை. ஆரம்பத்தில் இந்தியா பாகிஸ்தான் எல்லைக் கோடு மாதிரி நடுவில் மட்டும் ஒரு சின்ன gap இருந்தது . இரண்டு பக்க மீசைக்கும் நடுவில் இடைவெளி இருக்கிறதே இதனால் பின்னாடி தாம்பத்யத்தில் ஏதாவது பிரச்சினை வருமா என்று "அன்புள்ள சினேகிதனே"க்கு எழுதிப் போடுவதற்குள் அதுவே வளர்ந்துவிட்டது. என்னுடைய வாழ்க்கை இலட்சியத்தைப் போலவே நெல்லை எக்ஸ்பிரஸ் ஸ்டையில், கரடியாண்டி ஸ்டைல் என்று காலத்திற்கேற்ப மீசை பல்வேறு வடிவங்களைப் பார்த்திருக்கிறது.

ஆனால் இந்த மீசையின் அருமை பெருமை அறியாமல் இதை மேற்கத்தியர்களைப் போல் யாரும் பழிக்க முடியாது. சேரிட்டிக்கு பணம் பிரிப்பவர்கள் அதை சுவாரசியமாக்க பல கோமாளித்தனம் செய்வார்கள். அதில் தலையாயது மீசை வளர்க்கிறேன் பேர்வழி என்று வளர்த்துக்கொள்வார்கள். போகட்டும்,. ஆனால் அதற்காக மீசை வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் சாக்ஸ் மட்டும் அணிந்து கொண்டு நடிக்கும் நீலப் பட நடிகர்கள் என சித்தரிப்பதை என்னவென்று சொல்வது. அதிலும் ஆபிஸில் எல்லா பெண்களும் இவர்களிடம் இதையே "யூ லுக் லைக் அ போர்ன் ஸ்டார்" என்று கொஞ்சிக் கொஞ்சி சொல்வது இன்னமும் கொடுமை. ஒருவன் என்னிடம் வந்து "நீ வருடம் பூராவும் மீசை வைத்துக்கொண்டிருக்கிறாயே" என்று ஆரம்பித்தான். "அது ஒன்று தான் பாக்கி, இன்னமும் கொடுப்பினை இல்லை, நடிச்சு ரிலீசானா சொல்றேன், போயிட்டு வா ராசா" என்று அனுப்பி வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கலாய்க்கிறாராமாம்.

காலையில் இந்த மீசையை ஒரு தேர்ந்த சிற்பியைப் போல் செதுக்குவதற்கு இதுவரை என் வாழ்நாளில் செலவழித்த நேரத்தைக் கணக்கிட்டால்... நடித்து பல ஆஸ்கர்கள் வாங்கியிருக்கலாம். ஆனால் இந்த பெண்கள் இருக்கிறார்களே பெண்கள் இவர்களைப் புரிந்து கொள்ளவே முடியாது. "ஒரு மீசை வளர்பதற்கு அடேய் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும்" யோசித்துப் பார்க்கிறார்களா? அஜீத்தை பிடிக்கிறவர்கள் திடீரென்று மேடி, சித்தார்த், என்று மீசையில்லா பக்கமாய் சரிந்துவிடுகிறார்கள். கூட இருக்கும் சக ஐ.ஏ.எஸ்களும் கன்வேர்ட்டட் மேடியாய் மாறிவிடுகிறார்கள். என்னை மாதிரி இதுவரை ஒரு முறை கூட ஷேவ் செய்யாத வெர்ஜின் மீசைக்காரர்கள் மட்டும் பழைய பாக்யராஜ் பட நாயகி மாதிரி "மீசை எடுத்தா என்னமோ மாதிரி இருக்கு" என்று நிலம் பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
சமீபத்தில் என்னை மாதிரி வெர்ஜின் மீசை நணபன் ஒருவனுடைய மீசை திடீரென்று ஒரு நாள் காணோம். என்ன ஏதென்று பதறிப் போய் கேட்டால், "இல்ல மச்சி, மீசை இருந்தா மதிக்க மாட்டேங்கிறாய்ங்க. பெரிய போஸ்டுக்கெல்லாம் போகனும்னா மீசையை எடுத்தா தான் கன்சிடரே பண்ணுவாங்களாம்" என்ற போது ங்கொய்யால வீரப்பன இப்படி அநியாயமா சுட்டுக் கொண்ணுட்டீங்களேடா என்று வருத்தப் பட்டேன். திடீரென்று ஏதாவது கம்பேனி சி.ஈ.ஓ ஆகவேண்டிய கட்டாயம் வந்தால் என்று, ஃபோட்டோ ஷாப்பில் மீசையை எடுத்துப் பார்த்தேன். தங்கமணி ப்ளாக் அண்ட் வொயிட் பட கதாநாயகி மாதிரி புறங்கையை கடித்துக் கொண்டு வீல்ல்ல்ல்ல் என்று அலறி ஓட்டம் எடுத்துவிட்டார். சே...அப்பவே மீசையை எடுத்து ஹிரிதிக் ரோஷனா அப்கிரேட் ஆகியிருக்கணும். "என்னத்துக்கு இதைப் போய் வளர்த்து..பேசாம மழிச்சிடேன்" என்று அப்பா சொன்னபோது கேக்கலை, ஹும்ம்ம்ம்ம் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

சும்மா ஒரு ரெபரென்ஸுக்கு :)

Wednesday, September 12, 2012

மன்னார் அன்ட் கம்பேனி

மு.கு- இதுவரை நாடக பாணியில் எதுவும் எழுதியதே இல்லை. போன வருடம் இந்தியா வந்திருந்த போது அண்ணன் அப்துல்லா ஏற்பாடு செஞ்ச பிரியாணி மீட் மற்றும் பதிவர் சந்திப்பில் "தல" பாலபாரதி புதியதலைமுறை தொலைக்காட்சியில் ஒரு நையாண்டி கான்செப்ட் இருக்கு நீங்க ஏன் எழுத ட்ரை பண்ணக் கூடாதுன்னு கேட்க, ஏனோ தானோன்னு போன வருடம் எழுதி குடுத்து, "தூ"ன்னு காறித் துப்பாமல் பால பாரதி "சாரி பாஸ்"ன்னு டீசெண்ட்டாய் ரிஜெக்ட் செய்த குறு நாடகம் தான் இந்த பதிவு. சும்மாத் தானே இருக்குன்னு நீங்களும் காறித் துப்ப எதுவாய் இங்கே பதிந்திருக்கிறேன். நாடகம் மாதிரி என்பதால் அண்ணன் உ.தான்னா பதிவு ரேஞ்சுக்கு இருக்கும். வேற வழியேஇல்லை துப்புவதற்கு உங்களுக்கு கொஞ்சம் டயம் எடுக்கும் :)

கதா பாத்திரங்கள்
மன்னார் – எப்போதாவது வரும் ஒரு கதா பாத்திரம்.(இந்த எப்பிசோடில் இல்லை) வயது 55 - சாப்டுவேரில் எல்லோரும் கோடி கோடியாய் கொட்டுகிறார்கள் என்று மளிகை கடையை நைட்டோடு நைட்டாக சாப்ட்டுவேர் கம்பேனியாக மாற்றிவிட்டு முதல் போணிக்கு நம்பிகையோடு காத்திருக்கும் வியாபாரக் காந்தம்.

“சித்தப்பு” சிதம்பரேசன் - வயது 45. மன்னாரின் மைத்துனர். மளிகைக் கடையில் கல்லாவைப் பார்த்துக் கொண்ட அனுபவத்தில் இப்போது புதுக் கம்பேனியில் ப்ராஜெக்ட் மேனேஜராய் ப்ரமோஷன் வாங்கியவர்.

ச.ரோசா - வயது 35. செவ்வாய் தோஷத்தால் கல்யாணமாகாத முதிர் கன்னி. இந்தியாவிலேயே சாப்ட்வேர் கம்பேனியில் டைப்ரைட்டரில் டைப் அடிக்கும் ஒரே டைப்பிஸ்ட்.

சொர்ணா - வயது 28. கம்பேனியில் சாப்ட்வேர் பற்றி ஏதோ கொஞ்சமூண்டு தெரிந்த ஒரே ”அய்யோபாவம்” ப்ரோக்ராமர்.

“சௌகார்பேட்” சீனு – வயது 30. கம்பெனி மளிகைக் கடையாய் இருந்த போது கணக்கெழுத வந்து தற்போது கம்பெனி மாற்றத்தில் அப்ரசண்டி ப்ரோக்ராமராய் புது அப்பாயிண்ட்மெண்ட் பெற்றவர்.

அழகுராஜா - முன்னாள் மளிகைக் கடையில் பொட்டலம் கட்டி தற்போது ஆபிஸ் பாய். ஆபீஸில் இவர் தான் "ஆல் இன் ஆல்" அழகுராஜா.


காட்சி – 1
ஆபீஸ் உட்புறம்
பகல்


(ஒரு சின்ன அறையில் சித்தப்பு நடுவாந்திரமாக சீட்டில் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கு பின்னால் மன்னார் அன்ட் கம்பேனி - தி சாப்பாடுவேர் ஸ்பெஷலிஸ்ட் - கம்பெனி போர்டு தென்படுகிறது. சித்தப்பூ ஆவேசமாய் சர்குலரில் கையெழுத்துப் போட்டு டேபிளில் இருக்கும் மணியடிக்கிறார். அவருக்கு இரண்டு அடி தள்ளி ஸ்டூலில் எதிர்பக்கம் உடகார்ந்திருக்கும் அழகுராஜா மணியடித்தவுடன் திரும்பி சித்தப்புவை நோக்கி உட்கார்ந்து தலையிலடித்துக் கொள்கிறான்)

அழகுராஜா –அழகுன்னு அழகா கூப்பிட்டா திரும்பப்போறேன். இதுக்கு எதுக்கு பெரிய திஹார் ஜெயில் மாதிரி மணியடிச்சு கூப்பிடுறீங்க?

சித்தப்பூ – வாயக் கழுவு.. அபசகுனமா பேசாத. ஏற்கனவே அங்க நம்மூர் பாப்புலேஷன் ஜாஸ்தியாகி புல்லாகிட்டிருக்கு. இதுல நீ வேற. இந்த சர்குலர எல்லார் கிட்டயும் காட்டு.

அழ்குராஜா – என்னாது சரக்கு லெட்டரா..ஏ எல்லோரும் திரும்புங்கப்பா சித்தப்பூ ஏதோ சரக்கு லெட்டர் வைச்சிருக்காராம்

(எல்லோரும் வட்டமாய் அவரவர் சீட்டில் திரும்பி உட்கார அதுவே ஒரு மீட்டிங் வட்டமாகுகிறது)

சித்தப்பு – (அழகுவை நோக்கி) மூதேவி...நான் என்ன உங்க சித்தியவா கல்யாணம் பண்ணிருக்கேன்...என்ன சித்தப்பூன்னு கூப்பிடாதேன்னு எத்தனை தரம் சொல்றது ஒழுங்கா மரியாதையா மேனேஜர் சார்ன்னு கூப்பிடு.

சீனு – (நக்கலாய்) குட்மாரினிங் சித்தப்பூ

(சித்தப்பு எரிச்சலோடு சீனுவை திரும்பிப் பார்க்கிறார்)

அழகுராஜா – நீங்க என்ன அவன் சித்தியவா கல்யாணம் பண்ணியிருக்கீங்க அவன் மட்டும் சித்தப்பூன்னு கூப்பிடறான்?

சித்தப்பூ – சிதம்பரேசன்ங்கிற என் பெயர ஏண்டா சம்பந்தமே இல்லாம சித்த்ப்பூன்னு சுருக்கி உசிர வாங்குறீங்க...

சீனு – அப்போ ரேஷன் ரேஷன்னு சுருக்கி கூப்புடட்டுமா...இலவச அரிசி போடறாங்கன்னு கும்மிருவாஙக பரவாயில்லையா? இன்வெஸ்மெண்ட்டே கடனாகுது இந்த காலத்துல...சிதம்பு சித்தப்பு ஆகக்கூடாதா?

சித்தப்பு – நக்கலு...ஆங்...சரி எல்லோரும் நல்லா கவனிங்க. எங்க மச்சான் பெரிய வியாபாரக் காந்தம். தீர்க்கதரிசி. இந்தியாக்காரன் சாப்ஃட்வேருக்கு அமெரிக்காகாரன் குடுக்கிற மதிப்ப பார்த்து ராவாடு ராவா மளிகைக் கடைய சாப்ட்டுவேர் கடையா மாத்தி என்ன மேனேஜரா போட்டிருகார்னா சும்மாயில்ல. நாம என்ன பண்ணுவோமோ ஏது பண்ணுவோமோ எனக்குத் தெரியாது ரெண்டே மாசத்துல ஆர்டர் வரணும் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டணும்.

சீனு – இதே மாதிரி போர்டு வைச்சா வளைகாப்பு, காது குத்து கல்யாணம்ன்னு சாப்பாடு ஆர்டர் தான் கொட்டும் சாப்ட்டுவேருக்கு பதிலா சாம்பார் வாளியத்தான் தூக்கனும். சாப்ட்வேர் ஸ்பெஷலிஸ்ட்ன்னு போர்டு வைக்க சொன்னா சாப்பாடுவேர் ஸ்பெஷலிஸ்டாம் அழகு இது உன் ஐடியா தானே? கம்பேனி ஓஹோன்னு உருப்பட்ரும்.

அழகு – தோ பாரு சீனு நான் வெறும் அம்பு தான், சித்தப்பூ தான் போர்டு மெம்பர். இதெல்லாம் சித்தப்பூ ஏற்பாடு

சித்தப்பூ – (போர்டை திரும்பப் பார்க்கிறார்) அடப்பாவி ஆரம்பமே மிஸ்டேக்காயி போச்சா... சரி சரி இத முதல் ஆர்டர் வந்தோடன சரி பண்ணிக்கலாம். இப்போ அத விட முக்கியமா நாம விவாதிக்க வேண்டிய ஒரு பிரச்சனை இருக்கு. கம்பெனிய வளர்க்க என்ன செய்யலாம் எல்லோரும் உங்க அபிப்ராயத்தை சொல்லுங்க. சரோசா நீ முதல்ல ஆரம்பிமா

ச.ரோசா – சார் என் பேர் எஸ்.ரோஜா..தமிழ் படுத்தறேன் பேர்வழின்னு இனிஷியலோட சேர்த்து சரோசாவாக்கிறத முதல்ல நிப்பாட்டுங்க. அப்புறம் இந்த டைப்ரைட்டர ஒழிச்சிட்டு நல்ல தெளிவா சினிமா பார்க்கிற மாதிரி ஒரு கம்ப்யூட்டர் வாங்கிப் போடுங்க...என் ஃபிரெண்டு ”ச.மோ.சா” சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்கிறா. தினமும் புது ரிலீஸ் படமா டவுண்லோட் பண்ணிப் பார்க்குறா.. நானும் இருக்கேனே... இந்தியாவுலேயே சாஃப்ட்வேர் கம்பெனில டைப்ரைட்டர்ல டைப் அடிக்கிற ஒரே எம்ப்ளாயியா நான் ஒருத்தி தான் இருப்பேன் போல

சீனு – சரோசா அதுக்கு நீ இன்னும் ஆறு மாசம் பொறுக்கணும். முதல்ல நாம ஆர்டர் பிடிக்கணும். அப்புறம் தப்பு தப்பா ப்ரோக்ராம் எழுதணும் அப்புறம் பண்ணின தப்ப பக் பிக்ஸ் பண்ணணும் அதுக்கும் சேர்த்து மீட்டர் மேல பில்லிங் போடனும். அப்புறம் கம்பெனி எம்ப்ளாயிஸ் ஆஃப் சைட் போறோம்னு கேரளாவுக்கு பஸ் பிடிச்சு போய் ஃபோட்டொ எடுத்து வைப்சைட்டுல போடணும். அதுக்கப்புறம் தான் அத பார்த்து இன்னும் சில ஈன்னா வாயனுங்க ஆர்டர் குடுப்பாங்க..அப்போ நாம புதுசு புதுசா கம்ப்யூட்டர் வாங்கலாம்.

சொர்ணா – உனக்கு கரெக்டாத் தாண்டா பேரு வைச்சிருக்காங்க scene-ன்னு

சீனு – எக்கா சொர்ணாக்கா டேங்கஸ்கா..

சித்தப்பு – இந்தாம்மா சொர்ணாக்கா உங்கிட்ட எதாவது ஐடியா இருந்தா எடுத்து விடறது

சொர்ணா – இந்தியாவிலயே சென்னைல தான் இப்போ பல சாப்ட்வேர் கம்பெனிங்க ஓஹோன்னு வருது. இதுல ஒன்னு கூர்ந்து கவனிச்சா தெரியும். தொன்னூறு சதவீத கம்பெனிங்க மூணெழுத்து சுருக்கெழுத்து கம்பெனிங்க தான். அதுலயும் முக்கால் வாசி கம்பெனிங்க எஸ்ன்னு தான் முடியுது. அதுனால நாம மன்னார் அண்ட் கம்பெனிங்கிற நம்ம கம்பெனி பெயர முதல்ல எம்.ஏ.எஸ்-ன்னு மாத்தனும்.

சீனு – எம்.ஏ.எஸ்ன்னா மாஸ்...இது யோசிக்க வேண்டிய மேட்டர் தான். நான் இந்த ஐடியாவை வழி மொழிகிறேன்.

சித்தப்பூ – ஐடியால்லாம் ஓக்கே ஆனா ஆர்டருக்கு வழி என்னப்பா?

சீனு – (திருவிளையாடல் விநாயகர் பாணியில்) சித்தப்பூ ஆர்டர் என்றால் என்ன? வருமானம் என்றால் என்ன..

சித்தப்பூ – அழகு என்னடா சாப்ட்வேர்காரன்லாம் கஸ்டமரத் தான் குழப்புவான்னு கேள்விப் பட்டிருக்கேன்..இவன் என்னடா மேனேஜரையே குழப்புறான்

சீனு – சித்தப்பூ...நான் சொல்றது என்னான்னா முதல்ல நாம கம்பெனி வருமானத்த பெருக்கனும் அப்புறமா ஆர்டர பெருக்கலாம்....

அழகு – சித்தப்பூ இவன் நமமள குழப்பி குழப்பி கடைசில தெருவ பெருக்கவிட்ருவான் சாக்கிரதை

சித்தப்பூ – டேய் சீனு என்னடா சொல்லவர?

சீனு – சித்தப்பூ நாம சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பிக்கிறத விட முதல்ல ஒரு சாஃப்ட்வேர் பார்க் ஆரம்பிக்கலாம்.

எல்லோரும் – சாஃப்ட்வேர் பார்க்கா...??

சீனு – ஆமா இன்னிக்கு சென்னைல ரியல் எஸ்டேட் கொடி கட்டிப் பறக்குத்துன்னா சும்மாவா. திண்டிவனம் தாண்டி தெக்கால 20கிலோமீட்டர்ல சுடுகாடு ஒன்னு இருக்குதாம், நம்ம கண்ணம்மா பேட்டை ப்ரோக்கர் ஒருத்தர் சொன்னார். சல்லிசா அத முதல்ல வாங்குவோம். அப்புறம் அதையும் மெட்ராஸ் அவுட்ஸ்கர்ட்ஸ்ல சேர்த்து, அதுக்கு அமெரிக்கன் சாஃப்ட்வேர் பார்க்குன்னு பேரு வைப்போம். பக்கத்துலயே ஒரு “புஸ்வானம்”ன்னு ஒரு டவுண்ஷிப் ஒன்னு ஆரம்பிப்போம். ரெண்டு மூணு சினிமாகாரங்கள கூட்டிட்டுப் போய் ஃபோட்டோ எடுப்போம். வேற நல்ல சின்ன நியாயமான சாஃப்ட்வேர் கம்பெனிட்ட சொன்னா “Natural Tranquil location, 24 hour Electric facility, Pure Air, Devine, Rest in Peace” ன்னு அழகா கண்ணம்மா பேட்டையவே ஆங்கிலத்துல விவரிச்சு ஃபாரின் பொண்ணுங்க குழந்தைய வண்டில தள்ளிட்டு வாக்கிங் போற மாதிரி போட்டோல்லாம் போட்டு ஒரு வைப் சைட் போட்டுக் குடுப்பாங்க.

சரோசா – இப்போல்லாம் இந்த மாதிரி டவுண்ஷிப்புல உள்ளயே ஸ்கூல், சினிமா தியேட்டர், பாங்க், ஜிம் எல்லாம் இருக்காம்.

சீனு – ஆமா கரெக்ட். மக்கள் எதுக்குமே நூறடிக்கு மேல நடக்கத் தயாரில்லை. அதுனால நாம் அத்தோட நிக்கக்கூடாது. அதுக்கும் ஒரு படி மேல போய் உள்ளயே எலெக்ட்ரிக் சுடுகாடு ஒன்னும் ஆரம்பிக்கனும். வாஸ்து படி எரிக்கிறோம்...வேதப்படி எரிக்கிறோம், தேவையானவங்க அவங்களே போய் படுத்துக்கலாம்ன்னு சொன்னா சேல்ஸ் பிச்சிக்கும்.

சித்தப்பூ - ஐடியா நல்லாத் தான் இருக்கு ஆனா கட்டடம் கட்ட காசு வேண்டாமா?

சீனு – தேவையே இல்லை. ஸ்கூல், பாங்க், ஜிம் எல்லாத்தையும் நல்ல அழகான பொண்ணுங்க ஃபோட்டோவோட வரைபடத்துல போட்டுக் காமிப்போம். அதுக்கே பாதி விக்கும். பாதி வித்த அப்புறம் மிச்சத்த பார்த்துப்போம்

அழகு – ஆங்...பாதி விக்க வேண்டாமா...அது எப்படி விக்கும்?

சீனு – முதல்ல குறைச்ச விலைக்கு Phase 1 ன்னு சொல்லி பத்து ப்ளாட்ட நாமளே பங்கு போட்டு எடுத்துகிட்டு Phase 1 அல்ரெடி சோல்ட் அவுட்ன்னு சொல்லிடுவோம். அப்புறம் பாருங்க இந்த சாஃப்ட்வேர் காரனுங்க வர்ற வரத்தை...Phase 2-வ போட்ட அரை மணி நேரத்துல ஏதவாது ஒரு சாஃப்ட்வேர் dude வாங்குவான். அப்புறம் அவன் மத்த Dudeகளுக்கெல்லாம் “I own a piece of chennai"ன்னு பேஸ்புக் டிவிட்டர் கூகிள் ப்ளஸ்ன்ன் கூவி, மிச்ச சொச்ச ரியல் எஸ்டேட் விலையையும் ஏத்துற ஏத்துல ஊர்ல எவனும் சுடுகாட்டுல கூட வீடு வாங்க முடியாத அளவுக்கு விலைய கொண்டு விட்ருவானுங்க. கம்பெனிக்கும் லாபம் நமக்கும் லாபம், நாட்டுக்கு வளர்ச்சி.

சொர்ணா – எல்லாம் சரி கடைசீல சாஃப்ட்வேர் பார்க் எங்கடான்னான்னா?

சீனு – சுடுகாட்டுக்கு நடுவுல வேலி போட்டு நடேசன் பார்க்கு மாதிரி பத்து மரக்கண்ண நட்டு அதுக்கு அமெரிக்கன் சாஃப்ட்வேர் பார்க்குன்னு பெயர வைச்சிருவோம்.. சி.பி.ஐயே கேள்வி கேக்க முடியாது. நீங்க வேற சித்தப்பு...முத ஃபேஸுக்கு அப்புறம் அவனுங்களே எல்லாருக்கும் வித்துருவானுங்க அதாவது நாம பார்க்க - பார்க்கே பார்க்க வளர்த்துக்கும்.

சித்தப்பு – இந்த ஐடியா நல்லா இருப்பதால் நான் மன்னார் மச்சான் கிட்ட பேசி பார்க்கிறேன். அது வரைக்கும் எல்லாரும் திரும்ப அவங்க இடத்துக்கு போய் படம் பார்க்கிறத கண்டினியூ பண்ணுங்க...

ச.ரோசா – சார் எனக்கு படம் பார்க்க அந்த கம்ப்யூட்டர்...

Thursday, September 06, 2012

போட்டோகிராஃபி

கல்யாணவீட்டு பரபரப்பில் எல்லோரையும் சகட்டு மேனிக்கு அதிகாரம் செய்து கொண்டு "ஹலோ..அந்த தாலிய கொஞ்சம் கழட்டுங்க...அப்படியே இங்க பாருங்க, இப்போ திரும்ப கட்டுங்க" என்று மாப்பிள்ளையையும் பெண்ணையுமே அதிர வைக்கும் போட்டோகிராஃபர்களின் கையில் தான் நான் முதன் முதலில் கேமிராவை அருகில் பார்த்தது. ஆரம்பகாலக் கட்டங்களில் இந்த போட்டோகிராஃபர்களுக்கு இருந்த மதிப்பு அலாதி. மண்டபத்துக்குள் வந்தவுடனே இவர்களின் ஜபர்தஸ்து தாங்காது. "காபி, டிபன் ரெடியா, அப்புறம் ஸ்டில்ஸ் எடுக்கும் போது அவுட் ஆஃப் போகஸ் ஆகிடும் " என்று சம்பந்தமே இல்லாமல் இவர்கள் எடுத்து விடும் ஜார்கனெக்கெல்லாம் "அவாளுக்கு முதல்ல இலைய போடு இல்லைன்னா அவுட் ஆப் போகஸ் ஆகிடுமாம் அப்புறம் அதுக்கு வேற தோஷம் கழிக்கணும்"ன்னு மண்டபம் பரபரக்கும். அவர்கள் சாப்பிடும் போது காமிரா ஸ்டாண்டாக வேலைப் பார்ப்பதற்கு ஒரு அல்லக்கையை கூட்டிக்கொண்டு வருவார்கள். நாதஸ்வரகாரரிடமிருந்து கூட நாதஸ்வர்த்தை ஒரு தரம் பார்த்துவிட்டு தருகிறேன்னு லவட்டி விடலாம், ஆனால் இந்த கேமிரா உதவியாளர்களிடமிருந்து மட்டும் கேமிராவை வாங்கவே முடியாது. அப்புறம் வீடியோ வந்து இவர்களின் அந்தஸ்தை குறைத்தது. அந்த காலக்கட்டத்தில் எனக்கு காமிராவை விட ப்ளாஷ் லைட்டின் மீதே அலாதியான மோகம். அது தான் மெயின் உபகரணம் என்று நினைத்து, மேலே லைட் வெளிச்சம் விழுந்தாலே நம்மைத் தான் எடுக்கிறார்கள் என்று ஏகப்பட்ட சேட்டைகள் செய்து விரயமாகியிருக்கின்றன. என்னுடைய கல்யாண வீடியோவில் நான் எந்த சேட்டையும் செய்யவில்லை என்றாலும், வீடியோகிராஃபர் மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை பாட்டைப் போட்டு, கிராபிக்ஸில் ஏரோப்ளேனில் போவது மாதிரி, கடிகாரத்தில் நானும் தங்கமணியும் ஒவ்வொரு முள் மாதிரி, ஒரு கொடியில் இரண்டு மலர்கள் என்று ஏகமாய் புகுந்து விளையாடி விட்டார் (தொழில் கற்றுக்கொண்டுவிட்டார்). இதில் இரண்டு பாட்டுக்கு ஒரு பாட்டு இல்லறத்தைப் பற்றி செண்டி பாட்டு வேறு ஸப்ப்பா...

ரிலீஸாகி பத்து வருடங்கள் கழித்துப் பார்த்த சலங்கை ஒலியில் "இது கேமிரா ..இது டப்பா" என்று கண்ணாடிப் பையன் காமெடி செய்துகொண்டிருந்த போது, குண்டலம் அணிந்துகொண்டிருக்கும் ஜெயப்பிரதாவையே பார்த்துக் கொண்டிருந்ததால் காமிரா அவுட் ஆஃப் போகஸாகிவிட்டது. பின்னொரு காலக்கட்டத்தில் எப்பவோ ரிலிசான டிக் டிக் டிக்-ல் தலைவர் மாதவியையும் ஸ்வப்பனாவையும் சும்மா வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்ததைப் பார்த்த போது தான் எனக்கு போட்டோகிராஃபி மேல ஒரு `இது` வந்தது. எனக்கு இருந்த அளவிற்கு எங்க மாமாவிற்கு கலையார்வம் போதாது. மாதவியையும் ஸ்வப்பனாவையும் வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்க வேண்டும் என்ற காரணங்கள் எல்லாம் காமிரா வாங்க அவருக்கு போதுமானதாக இல்லை. "சித்ரா ஸ்டியோல பத்து ரூபாய் குடுத்தா நிக்க வைச்சு ஜோரா எடுப்பானே" என்று தகித்துக் கொண்டிருந்த கலைத் தணலில் தண்ணியை ஊத்தி விட்டார். எங்க ஊர் சித்ரா ஸ்டுடியோவில் குண்டாவை கவுத்தி வைச்சது மாதிரி இருக்கும் பெரிய லைட்டில் கண்ணைப் பறிக்கிற வெளிச்சத்த்தில், கஞ்சி போட்டு உடம்பை அயர்ன் செய்த்த மாதிரி நிற்கச் சொல்லுவார்கள். "கேமிராவப் பாருங்க"ன்னு எங்கிருந்தோ குரல் வரும். கண்ணுல அடிக்கிற வெளிச்சத்துல கண்ணே திறக்க முடியாது தோராயமாய் ஒரு திசையப் பார்ப்பேன். "அம்பி சோக்கா வந்திருக்காரே" என்று ஓனர் மெச்சிக் கொண்டு, பவுடர் அப்பிய கன்னத்தில் எண்ணெய் ஓரமாய் வழிந்துகொண்டிருக்கும் போட்டோவை கொடுத்து பத்து ரூபாய் கல்லாவில் பார்த்துவிடுவார். போட்டோ எடுப்பதற்கே இந்த பாடு என்றால் கேமிராவாவது கோமியமாவது. "யே கேமிரா தேக்கோ"ன்னு யாராவது ஊரில் இருந்து செழிப்பாய் கேமிராவோடு வந்து ரோல் முடிந்த பிறகு கொடுத்தால், வெறும் பம்மாத்து ப்ளாஷ் போட்டு அடுத்த வீட்டு ஆட்டுக்குட்டியை எடுப்பேன். ஆட்டுக்குட்டியும் கேமிராவில் ரோல் இல்லை என்பது தெரியாமல் ரொம்ப சின்சியராய் போஸ் கொடுக்கும்.

இங்கிலாந்து வந்த புதிதில் பேச்சுலர் நண்பர்களுக்கு பர்ஸில் தெனெவெடுத்து எஸ்.எல்.ஆர் வாங்கலாம் என்று பேச்சு ஆரம்பமாகியது. ஆஹா அது தென்காசியிலிருந்து கடையம் வழியாக போகிற ரூட்டாச்சே, அந்த பஸ்ஸுல அவ்வளவு கூட்டமே வராதே என்று நான் குழம்பி கூர்ந்து கவனித்த போது தான் எஸ்.எல்.ஆர் என்பது கேமிரா சம்பந்தப் பட்ட விஷயம் என்று தெரிய வந்தது. உடனே பாழாய்போன கேமிரா மனசு டிக் டிக் டிக்ன்னு துடித்து " டேய் இந்த எஸ்.எல்.ஆர் டெக்னாலஜி இருக்கே...அதுக்கு முன்னாடி ஜப்பான்ல கே.கே.எஸ்.எல்.ஆர்-ன்னு ஒருத்தர் இருந்தார்.."ன்னு நானும் ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன். அது டிஜிட்டல் டெக்னாலஜி பிரபலாமாகாத சமயமாகையால் சாதாரண கே.கே.எஸ்.எல்.ஆர் தான் இருந்தது, ஆனால் அதுவே யானை விலை குதிரை விலை. பேச்சுலர் நண்பர்கள் அதுல ஒரு கிலோ போடு இதுல ரெண்டு கிலோ போடுன்னு வாங்கிக் கொண்டிருக்க, நான் பர்ஸுக்கு அடக்கமாய் ஒரு மினோல்டா வாங்கிக்கொண்டேன். அத்தோடு போச்சா... கேமிராவை வைக்க ஒரு பை, அதற்கு ஒரு எக்ஸ்ட்ரா பேட்டரி, துடைக்க ஒரு துணி என்று டிக் டிக் டிக் பட்ஜெட் எகிறிவிட்டது. என்னம்மோ பிறந்ததிலிருந்தே கேமிராமேன் மாதிரி முதல் ரெண்டு ரோலை வாங்கி வந்த ஒரு மணி நேரத்தில் முடித்து விட்டேன். ரோலை கழுவப் போன போது அவர்கள் கேட்ட தொகையைக் கேட்ட பிறகு தான் "ஒரு வேளை தலைவர் டிக் டிக் டிக்-ல் வெறும் ப்ளாஷ் மட்டும் தான் போட்டு எடுத்திருப்பாரோ" மண்டையில் உறைத்தது. அதற்கப்புறம் ஒரு சாதரண டிஜிட்டல் கேமிரா வாங்கி கொஞ்சம் கட்டுப்படியாயிற்று.

இந்த எஸ்.எல்.ஆர் உரிமையாளர்கள் சங்கம் தொல்லை தாங்க முடியாது. கிட்டார் வைத்திருப்பவர்களுக்கும் எஸ்.எல்.ஆர் வைத்திருப்பவர்களுக்கும் குரங்குத்தனத்தில் ஏகப்பட்ட ஒற்றுமை இருக்கும். நின்று கொண்டு எடுப்பார்கள், படுத்துக் கொண்டு எடுப்பார்கள், திருப்பதிக்கு நேர்ந்து விட்டது மாதிரி உருண்டு கொண்டு எடுப்பார்கள். நிறைய பேர் கையில் என்னமோ மெட்டல் டிடெக்டர் வைத்திருப்பது போல் கல், மண், மரம், செடி கொடி புழு பூச்சி எல்லாத்தையும் எஸ்.எல்.ஆர் லென்ஸ் வழியாகத் தான் பார்பார்கள். குழந்தைகள் மூக்கு ஒழுகினால் துடைக்க விடமாட்டாகள். ஊரில் ஒரு தாத்தா பாட்டி தேமேன்னு உட்கார முடியாது. அவர்கள் பராக்க பார்ப்பதை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போட்டு நூறு லைக்காவது பார்த்துவிடுவார்கள். ஜூம் லென்ஸ் வேறு வைத்திருந்தார்களானால் போச்சு. ஜூம் லென்ஸ் வழியாக சந்திர மண்டலத்திலேயே நிலத்தடி கச்சா எண்ணையை கண்டுபிடித்து விடுவார்கள். போதாக் குறைக்கு நாம வேற லூசு மாதிரி "எங்கயோ போயிட்டீங்கண்ணே"ன்னு பார்த்துக்கொண்டிருப்போம். "ஏரோப்பிளேன் மாதிரி இவ்ளோ பட்டன் இருக்கே..இதுல போட்டா பிடிக்க எந்த சுவிச்சண்ணே அமுக்கணும்"ன்னு கேட்டீர்களேயானால் அவர்களுக்கு ஜிவ்வுன்னு எகிறும் பாருங்கள். "ஆக்ச்யுவலி இந்த போகல் லென்த குறைச்சு DOF-அ கூட்டி வொயிட் பேலன்ஸ் பண்ணி ஷட்டர் ஸ்பீட அட்ஜெஸ்ட் பண்ணினா..." என்று ஜார்கன் போட்டு உங்களை ஒரு போட்டோ எடுத்து பிரேம் பண்ணி மாலை போட்டுவிடுவார்கள்.

ஹீ ஹீ...இவ்வளவு பெருமையா இவங்களைப் பத்தி எதுக்கு சொல்றேன்னா...நானும் சமீபத்தில் மீண்டும் பித்து தலைக்கேறி டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் வாங்கி உள்ளேன். மேற்கூறிய குரங்குத் தனங்களின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறேன். அதுல பாருங்க கிருஷ்ண ஜெயந்திக்கு எடுத்த அந்த ரெண்டாவது படத்துல போகல் லெந்த குறைச்சு DOF-அ கூட்டி வொயிட் பேலன்ஸ்......ஹலோ ஹலோ...வெயிட் நெசத்துல எனக்கும் அதப் பத்தி ஒன்னும் தெரியாதுங்கோவ்...


Sunday, September 02, 2012

மயிருலு

மு.கு - மஞ்சள்,நாதஸ்வரம்,பசுமாடு போன்ற மங்களகரமான நம்பிக்கையுடைவர்களுக்கு இந்தப் பதிவு உகந்ததல்லாததாக இருக்கலாம்.

தமிழ் மரபும், மொழி வழங்கும் சமூகத்தின் அணுகுமுறையும் என்னை பல சந்தர்பங்களில் ஆச்சரியத்திலும் சங்கடத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியிருக்கின்றன. கணிணி, நிரலி போன்ற பாமரர்கள் அதிகம் புழங்காத மெத்தப் படித்த வட்ட வார்த்தைகளின் பிரயோகம் "எப்படீங்க இதெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க" என்று ஆச்சரியக் குறியில் முடிந்து சுமூகமாய் இருந்திருக்கின்றன. அவை குடுத்த அகந்தையில், ஆர்ப்பரிய ஆர்வத்துடன் காப்பிக்கு "கொட்டை வடி நீர்" என்பதை பிரயோகப் படுத்த ரொம்ப நாளாய் ஆசை. "இந்த கொட்டை வடி நீர்..இருக்குல்லா"ன்னு பாண்டிய நாட்டு அண்ணாச்சி பெட்டிக் கடையில் முயற்சி செய்ததில் "அந்த மூத்திர சந்தில மூனாவது கடைடே, நாலு மணிக்கு வருவாரு, சூரணம் குடுப்பாரு டக்குன்னு கேட்டுரும்லா"ன்னு இலவச மருத்துவ ஆலோசனையில் முடிந்தது. காப்பியே குடிப்பதில்லை இப்போதெல்லாம். தமிழ்ப் பெயரும் ஒரு காரணம். நல்லவேளை தேநீர் எவ்வளவோ தேவலாம்.

நிற்க, நான் சுத்தத் தமிழுக்கு எதிரியல்ல. இந்த பதிவு சுத்தத் தமிழை பேச்சு வழக்கிலும் கடைபிடிப்பவர்களை நையாண்டி செய்யவும் அல்ல. நானும் தமிழை தாய்மொழி என்று சொல்லிக் கொண்டு பல வார்த்தைகளுக்கு சொற்கள் அறியா பெரும்பாண்மையை சேர்ந்தவன் தான் வெட்கத்தோடு சொல்லிக் கொள்கிறேன். ஆனாலும் சில பெயர்களை பெயர்களாகவே விட்டுவிடலாமோ எனும் சந்தேகக் கட்சியை சேர்ந்தவன். நமக்கு சாலைகளையும் ஊர்ப் பெயர்களையும் மாற்றவே நேரம் போதவில்லை. "மரியாதைக்குரிய ஐயா, கணிணி தவறாக உங்கள் பெட்டியை மும்பைக்கு அனுப்புவதற்கு பதிலாக பம்பாய் செல்லும் விமானத்தில் ஏற்றிவிட்டது தவறுக்கு வருந்துகிறோம்..அதுவரைக்கும் இத்துடன் இணைத்திருக்கும் காலணா கழிவுச் சீட்டை உபயோகப் படுத்தி கடையில் சென்று உள்ளாடை வாங்கி அணிந்து கொள்ளவும்" போன்ற குழப்பங்கள் பெரும்பாலும் "ங்கொய்யால..எங்க வந்து யார்கிட்ட.." என்று ஆரம்பித்து சுந்தரத் தமிழிலேயே தீர்ப்பாகியிருக்கின்றன.

ரொம்ப விலகிப் போகிறேன், உட்கருத்துக்கு வருகிறேன்.கேசம் என்றும் ரோமம் என்றும் முடி என்றும் பலவிதமான குறியீட்டு சொற்களை உடைய "மயிரு" என்ற வார்த்தைக்கு மட்டும் ஏனோ வழக்குத் தமிழில் இருக்கும் ஓரவஞ்சனை எனக்கு சுத்தமாய் புரியவில்லை. இளம்பிராயத்தில் சுத்த தமிழில் பேசுவதாய் நினைத்துக் கொண்டு "மயிரு வெட்ட போகவேண்டும்" என்று ஒரு முறை மாமாவிடம் சொன்னேன். "இப்படியெல்லாம் கெட்ட வார்த்தை பேச யார் சொல்லிக்குடுத்தா" என்று மாமாவின் முறைப்பில் போய் நின்றது."மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமான்" என்று ஐயன் வள்ளுவன் தான் என்றால் "வேண்டாததெல்லாம் கத்துக்கோ...எங்க 144 குறளையும் சொல்லு பார்ப்போம்..அதிகப் பிரசங்கி"ன்னு மண்டையில் கொட்டு விழுந்திருக்கலாம்.பெண்ணின் நடத்தையை சந்தேகிக்கும் வார்த்தைகளைக் கூட அவ்வப்போது அனுமதித்தாலும், மயிரு என்ற வார்த்தைக்கு மட்டும் இன்றளவும் திரைபடங்களில் தணிக்கை குழு "உய்ங்ங்" என்று மணியடித்து மழுங்கடிக்கிறார்கள். எனக்கு என்னவோ போடா முண்டம் என்ற பிரயோகத்திற்கும் இதற்க்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை. கிராமுக்கு இரண்டாயிரத்தி சொச்சத்தில் விற்கும் தங்கத்தை பஸ்பமாக்கி டப்பாவில் நூற்றி ஐம்பது ரூபாய்க்கு தரும் பேருந்து நிலைய லேகிய விற்பன்னர் மட்டும் "சாப்பிட்டா தேகம் மின்னும், மயிரு வளரும்" என்று திருத்தமாய் சொல்கிறார். "வளர வேண்டிய இடத்தில வளராமல் வேண்டாத இடத்திலலெல்லாம் எப்போ மசுரு வளர்றதோ அப்போ வயசாக ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம்" என்று சீனாதானா மாமா வட்டதில் மயிரு மருவி மசுரு என்று தத்துவார்த்தமாய் வழங்கப்படும். மற்றபடி முக்கால் வாசி சமூகத்தில் மயிரு இன்னமும் பேட் வேர்ட் தான். "மசுரைக் கட்டி மலையை இழுப்போம் வந்தா மலை போனா...டேஷ்" என்று பல இடங்களில் டேஷாக வழங்கப் பட்டு வருகிறது. பத்து வாக்கியத்திற்கு ஒரு வாக்கியம் "வாட் த...ஃப%%^&" என்று கூவும் நவநாகரீக பேட் கேர்ல்ஸ் கூட இப்போதெல்லாம் "என்ன ஹேருக்குடா லேட்டா வர" என்று மொழி வதை செய்கிறார்கள். இவ்ளோ ஓரவஞ்சனையா...அப்புறம் மண்டையில எப்படி வளரும்ங்கிறேன்.

நானறிந்த ஆந்திர மணவாடுக்கள் மட்டும் இன்றளவும் இந்த வார்த்தையை கெட்டியாய் பிடித்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் "போடா மயிருலு" என்று கூச்சமேயில்லாமல் முழங்குகிறார்கள். காரணம் இல்லாமலா அங்கு முடிவளம் மிகுதியாய் இருக்கிறது.விதை ஒன்று விதைத்தால் சுரையா முளைக்கும்?

ஏன் இந்த வார்த்தைக்கு மட்டும் இவ்வளவு தடா?