Monday, September 26, 2011

சினிமாவுக்குப் போன சித்தாளு

ஒரு ஊரில் ஒரு சித்தாளு இருந்தானாம். அவனுக்கு சினிமா பைத்தியமாம். மலை நதி காடு கரை போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லும் போது அந்த இடத்தில அம்சமாய் கையைக் கட்டிக் கொண்டோ, கண்ணாடியைப் போட்டுக் கொண்டோ சோலோ சோலையப்பனாய் ஒரு போட்டோ எடுத்து கையோடு பேஸ்புக் ஃப்ரொபைல் பிக்கசராய் போடும் ஒரு காலக் கட்டாயம் இல்லாத காலத்தில், “எனக்கு நெஞ்சு வலிக்கிறது,குப்புன்னு வியர்க்கிறது,யாரோ கூப்பிடுகிறார்கள் #heartattack" என்று வைகுந்த வேளையிலும் டிவிட்டர் அப்டேட் குடுக்கிற மஹானுபாவர்கள் தோன்றாத ஒரு காலக் கட்டத்திலும் நம்ம சித்தாளு சினிமா பார்க்க ஆரம்பித்திருக்கிறான். சித்தாளுவுக்கும் தெருவில் இருக்கும் அவன் நண்பனுக்கும் சினிமா அலைவரிசை அலாதி. ஸ்கூலில் இருந்து வரும் போது சனிக்கிழமை போஸ்டரைப் பார்த்தால், இருவரும் ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். டீல் டன் அண்ட் டஸ்டட்.

சினிமா பார்க்க சித்தாளு வீட்டில் செய்யும் அஜால் குஜால் வேலைகள் இந்த பதிவின் சாராம்சமில்லை என்பதால், சினிமா யாத்திரையை தொடங்கும் போது சித்தாளு பையில் ஒரு ரூபாய் கிணு கிணுத்துக் கொண்டிருக்கும். 75 பைசாவிற்கு பெஞ்ச் டிக்கட் வாங்கிக் கொண்டு 25 பைசாவிற்கு ஒரு நீள லக்ஸுரி மைசுர் பாகும் வாங்கிக் கொண்டு தூண்கள் எதுவும் மறைக்காத, ஒரு கையை ஊன்றிக் கொண்டு பார்க்க ஏதுவாய் இருக்கும் சின்ன திண்டு முன்னால் பெஞ்சில் உட்கார்ந்து படம் பார்த்த நாட்கள் - சித்தாளுவின் எண்ணப் புத்தகத்தில் பொன் எழுத்தில் பொறிக்கப்பட்டவை.
 சித்தாளுவும் நண்பனும் சினிமா பார்க்கும் போது பேசிக்கொள்ளவே மாட்டார்கள். சினிமா என்று இறங்கிவிட்டால் இடைவேளையோ சுபமோ போட்டால் தான் சித்தாளுவிற்கும் நண்பனுக்கும் சமூக பிரக்ஞையே வரும்.அதுவரை வாயில் கரையும் மைசூர்பாகு கூட தெரியாத அளவிற்கு சினிமாவை “பே”என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

”யெக்கா திருநாகேஸ்வரம் போய் பாம்புக்கு பால் வைச்சா தோஷம் குறையுமாம்க்கா..கே.ஆர் விஜயா அந்த படத்துல சொன்னாங்கல்லா” “மாப்ள..செத்த காத்தாட பீடி இழுத்துட்டு வந்துடறேன்..இந்த ஒப்ப்பாரி முடிஞ்சு செயமாலினி டான்ஸ் வந்துடிச்சினா விசில் சத்தம் குடுறா நல்லா இருப்ப, காசு அழுததே அதுக்கு தான்” போன்ற சக சித்தாளுக்களின் சம்சாரிப்புகள் எல்லாம் காதில் விழவே செய்யாது. சினிமா பார்க்கும் சுகானுபவத்தில் எந்த குறுக்கீடுகளும் வர இயாலத காலம் அது.

ஆனால் காலக் கிரயத்தில் சித்தாளுவின் சினிமா குணாதியசங்கள் மாறியே போயின. மாட்னி ஷோவில் பீடி வலிக்கப் போகும் சேட்டன்கள் கதவை ஒழுங்காக சாத்தாமல் சூரிய வெளிச்சம் திரையில் விழும் போது கூட ”யோவ் கதவ மூடுய்யா” என்று அநீதியை எதிர்த்து குரல் குடுக்காத சித்தாளு வீட்டில் டீவி பார்ப்பதற்க்கே திரைகளைப் போட்டு கதவை சாத்தி களேபரம் செய்ய ஆரம்பித்தான். பகலில் பார்க்கும் படத்திற்கே வீட்டில் உள்ளவர்கள் வெளிச்சம் தெரியாமல் தடுக்கி விழுந்துவிடுவோமோ என்று தவழ்ந்து செல்லும் நிலையில் ராத்திரி படம் போட்டால் கேட்கவே வேண்டாம். படங்களில் ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் காட்சிகளில் எங்கேயோ காட்சிக்கு சம்பந்தம் இல்லாமல் ஏதோ ஒரு பாட்டியிடம் யாரோ பேரம் பேசி வாங்கும் கேட்கவே கேட்காத டயலாக் எல்லாம் கேட்க வேண்டும் என்று அராஜகம் புரிய ஆரம்பித்தான். டயலாக் புரியாவிட்டால் ரீவைண்ட் செய்து, சவுண்டைக் கூட்டி - என்று சித்தாளு செய்யும் களேபரத்தில் இரண்டரை மணி நேர படங்கள் எல்லாம் நாலரை மணி நேர படங்களாய் ஓட ஆரம்பித்தன. “டேய் வெண்ண..ஸ்டூடியொல சவுண்ட் இஞ்னியரிங் பண்ணும் போது கூட அவங்களுக்கே இது கேட்டிருக்காது..” என்று சித்தாளுவின் தங்கமணி அன்பாய் எடுத்து சொல்லியும் அடங்காமல் இரண்டரை  to நாலரை ஒரு நாள் ஏழரை ஆகி அப்புறம் சித்தாளு வீட்டில் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தான்.

சித்தாளுவின் வாழ்க்கையில் அன்லிமிட்டட் சினிமா கார்டு வரப்பிரசாதமாய் வர, வழக்கமாய் தியேட்டர் போகும் சனிக்கிழமை ராமசாமியாய் அவதாரமெடுத்தான். பேக் டு பேக் இரண்டு படங்கள் தொடர்ச்சியாய் பார்ப்பது சித்தாளுவின் ரெகுலர் தீர சாகசங்களில் ஒன்று. “சினிமா பார்ப்பது என்பது ஒரு தவம்” - என்று சீன் போடுவது சித்தாளுவிற்கு ரொம்பப் பிடிக்கும். தற்போதும் குடும்பத்தோடு போகும் போது படம் ஆரம்பிப்பதற்கு அரை மணி முன்னாலேயே காரை பார்க் செய்து, டிக்கெட் கிழிப்பவரை நச்சரித்து முதல் ஆளாய் தியேட்டருக்குள் போவது சித்தாளுவின் தங்கமணிக்கு சுத்தமாய் பிடிக்காது. உள்ளே போய் பத்து வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து கடைசியில் பதினொன்றாவதாய் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உட்காரும் போது தங்கமணி நெற்றிக்கண் இல்லாமலேயே எரித்துவிடுவதற்கு எல்லா முயற்சியும் செய்வார். கேட்டால் படம் பார்ப்பதற்கு பங்கம் வராமல் இருக்க சித்தாளு ஸ்ட்ராடிஜிக்காய் இடம் பிடிக்கிறாராமாம்.


தியேட்டருக்குள் பீடி வலிக்க தடை வந்துவிட்டதால் பீடி தொல்லை இல்லாமல் இருந்தாலும் சித்தாளுவிற்கு சற்றும் பிடிக்காத வேறு பல தொல்லைகள் உண்டு. லேட்டாய் வருவதோடு மட்டுமில்லாமல் ஸ்கிரீனைப் பார்க்காமல் படம் ஆரம்பிச்சாச்சா என்று கேட்கும் லேட் மஹாதேவன்கள், கூட்டி வரும் கேர்ல் பிரண்டுக்கு ஏகத்துக்கு பப்ளிக்காய் லவ்வைக் காட்டி எந்தப் படத்தைப் பார்ப்பது என்று சித்தாளுவை குழப்பத்திலாழ்த்தும் முன் சீட் முத்தண்ணாக்கள், தியேட்டர் காரன் லைட்டை அணைத்தாலும் மொபைலில் டெக்ஸ்ட் பண்ணுகிறேன் பேர்வழி என்று பளீர் என்று முகத்தில் அடிக்கும் மொபல் ஸ்கீரின் வெளிச்சத்தைக் காட்டும் “செல்”வராகவன்கள் என்று இன்றளவிலும் சித்தாளுவிற்கு பல சத்திய சோதனைகள். இருந்தாலும் மனம் தளராத மெகா சீரியல் நாயகி மாதிரி சித்தாளு சினிமா போவது மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதுவும் குழைந்தகள் ஸ்பெஷல் ஷோவிற்கு ஒரு முறை போய் “எனக்கு லாரா கூட உட்காரணும்” “அங்க போகாத;இந்த மாமா மேல நிக்காத” என்று குழ்ந்தைகளும் அவர்கள் அப்பா அம்மாக்களும் விடும் சவுண்டில், சினிமாவுக்கு போன சித்தாளு சந்தைக்குப் போன சித்தாளு ஆகிவிட்டான். கழுத காசு போனாலும் போகுது இனிமே முழு டிக்கெட் எடுத்து ஜெனெரல் ஷோவுக்குத் தான் குழ்ந்தைகளை கூட்டிப் போவது என்று முடிவாய் இருக்கிறான் சித்தாளு.  ஏன் என்றால் சித்தாளுவிற்கு சினிமா பார்க்கும் போது சத்தமே வரக்கூடாது. முறுக்கு தின்று கொண்டே பார்த்தால் அந்த சத்தத்தில் டயலாக் கேட்காது என்பதனால் சித்தாளு வீட்டில் சினிமா பார்க்கும் போது முறுக்கு,சீடைக்கெல்லாம் தடை. சினிமாவிற்க்கு போகும் போதும் கருக்கு முருக்குன்னு சத்தம் வரும் திண்பண்டங்கள் வாங்க மாட்டார் சித்தாளு. அதற்காக சித்தாளு கொடுமைகாரன் அல்ல.சத்தமே வராத அதிரசம், லட்டு, ஜாங்கிரி போன்றவை ஓக்கே.

“போய்யா போ...இனிமே உங்க கூட நாங்க படமே வரதா இல்லை” என்று வீட்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றியும் சித்தாளு செய்யும் அலம்பல்கள் குறைந்த பாடில்லை. ஏன்னா பாருங்க “சினிமா பார்ப்பது என்பது ஒரு தவம்”

Saturday, September 10, 2011

என்னது காந்தி செத்துட்டாரா

அடடா எப்படி சொல்வது எங்கே ஆரம்பிப்பது. இந்த தரம் கலக்கலான இந்தியா ட்ரிப். செய்ய நினைத்தில் முக்கால் வாசி டிக்.போனஸாய் லிஸ்டில் இல்லாத சில அயிட்டங்களும் டிக் ஆனது எனக்கே வியப்பு. ஏர் இந்தியாவில் புக் செய்திருக்கிறோமே என்று வேண்டிக் கொண்டு போனால், இருக்கை அமைப்பே குடும்ப கட்டுப்பாடு ரீதியில் ஆச்சரியப் படுத்தியது.அதாவது ஒரு சீட்டுக்கும் அடுத்த சீட்டுக்கும் நடுவில் போதிய இடைவெளி.ஏகப்பட்ட லெக் ரூம். ஏர் ஹோஸ்டட்ஸ் ராசி இல்லை என்று முடிவு கட்டியே போனால் ”ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ” என்று அம்சமாய் புது ரெக்ருட். (யோவ்...லிஸ்ட்ல இல்லாததும் டிக்குன்னு இத சொல்லல..சொல்லிட்டேன் ஆமா). சீட்டெல்லாம் ரஜினி ஸ்டைலில் மூன்று மூன்றாக பிரித்திருந்ததால் நான் மட்டும் தனியாக உட்கார நேர்ந்தது. ப்ளைட்டில் குடுத்த சாப்பாடு கேபிள் பாஷைல சொல்லனும்னா ”டிவைன்”.

இரண்டாவது மகள் பாசந்தியை வேஸ்ட் செய்கிறாளே என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே “உஸ் உஸ்ஸ்ஸ்” என்று ஜாடை மாடையாக அடி போட்டுக்கொண்டிருந்தேன். நான் கர்ம சிரத்தையாய் பாசந்தியை கேட்டுக்கொண்டிருந்ததை பின் வரிசை வெள்ளைக்கார மாமா வெட்கமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்தால் கூட பரவாயில்லை “தம்பி நான்  பாசந்தியை தொடவே இல்லை, பாலிதீன் பாக்கிங்கோட அப்படியே இருக்கு வேணுமா?” என்று வெட்கமே இல்லாமல் கேட்டார். நானும் வேறு வழியில்லாமல் வாங்கி சாப்பிட்டேன். அது தீர்ந்தவுடன் இரண்டாவது மகள் பாசந்தியை வேஸ்ட் செய்கிறாளே என்று நான் திரும்ப “உஸ்ஸ் உஸ்” என்று ஆரம்பித்ததை நல்லவேளை அந்த வெட்கம் கெட்ட வெள்ளைகார மாமா கவனிக்கவில்லை.

போய் இறங்கிய முதல் இரண்டு நாட்களில் கரும்பு சூஸ், பேல் பூரி,ஆவின் ப்ளேவேர்வர்ட் மில்க், ஸ்வீட் பான், கொத்துபரோட்டா,பருப்பு போளி, சப்போட்டா மில்க் ஷேக், பரோட்டா குருமா என்று வகை தொகையில்லாமல் வரிசை கிரமம் பார்க்காமல் வழியில் தென்பட்டதை எல்லாம் பகாசுரேஷ்வரா செய்ததில் `சார் சோமாலியால வெயில் எல்லாம் எப்படி...நம்மூர் மாதிரி தானா?` என்று ஆட்டோக்காரர் அன்பாக விசாரித்தார். ”நாளைக்கு கண்டிப்பா கடை தொறப்பேன் சார்” என்று கடைக்காரர் கெஞ்சியும், பாதி ஷட்டர் போட்டிருந்த கடையை திறக்கச் செய்து, வாயில் அரைத்துக் கொண்டிருந்த ஸ்வீட் பானை பாதியில் துப்பிவிட்டு நான் ஆவின் ப்ளேவர்ட் மில்க் குடித்ததை ஆட்டோக்காரர் ஒரு வேளை பார்த்திருப்பாரோ என்று தங்கமணிக்கு டவுட்டு.

முதல் நாள் பாண்டி பஜாரில் பேரம் பேசி வாங்கவேண்டுமே எங்கே ஆரம்பிப்பது என்று முழித்துக் கொண்டிருந்த போது ஒருவர் பெல்ட் வாங்க அவருடனே ஒட்டிக் கொண்டேன். அவர் வாங்கிய விலையை கவனித்து நான் கேட்டபோது அதையும் விட பத்து ரூபாய் குறைத்துக் கொடுத்த போது எனக்கு மயக்கமே வந்தது. சென்னை மால்கள் என்னை மாதிரி ஃபாரின் பிச்சைகாரர்களுக்கு எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிறது. இந்த முறை என்ன தெய்வ குத்தமோ தெரியவில்லை நவநாகரிக யுவதிகள் அவ்வளவாக தென்படவில்லை. ஐநாக்ஸில் ஏர்போர்ர்ட்டை விட செக்யூரிட்டி பலமாய் இருக்கிறது. பையிலிருந்த எக்ஸ்ட்ரா பாட்டரியை வாங்கிக் கொண்டார்கள. “பைல முறுக்கு வைச்சிருக்கேன் அதொன்னும் பிரச்சனையில்லையே” என்று நக்கலாய் கேட்டது தப்பாய் போய்விட்டது, அதையும் வாங்கிவைத்துவிட்டார்கள் வெளி உணவு கூடாதாம். தெரிந்து கொண்டது நல்லதாய் போனது. திருட்டுத் தனமாய் கடத்திக் கொண்டு போன மைசூர் பாகு கூட கொஞ்சம் இனித்தது. முனி-2 தியேட்டரில் பெண்கள் வீல் வீல் என்று அலறிக் கொண்டே ரசித்துப் பார்த்தார்கள். தேவதர்ஷினி மாமியார் கோவை சரளாவை அடிக்கும் காட்சிகளில் பெண்கள் விசில் அடித்து ஆராவாரம் செய்கிறார்கள். தியேட்டர்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன. இன்னொரு தியேட்டரில் சூச்சா போகுமிடத்திலும் டீ.வி வைத்திருக்கிறார்கள் என்று அக்கா பையன் சொன்னான். படம் அங்கேயே ஆரம்பித்துவிடுமா என்று கேட்டதில் இல்லை வெறும் அட்வர்டைஸ்மண்ட் மட்டும் தான் என்று பதில் வந்தது. தப்பித்தது. “உலகம் போகிற ஸ்பீடுல இன்னும் கொஞ்ச நாள்ல ஒன்னுக்கு கூட ஒழுங்கா போகவிடமாட்டான் ” என்று சீனாதானா மாமா சொன்னது தான் நியாபகத்துக்கு வந்தது. தீர்க்கதரிசி.

சென்னை வாசத்தின் சந்தோஷம் பதிவர் சந்திப்பு . பாலபாரதியும் இன்னும் சில வலைபதிவர்களும் சந்திப்பு விஷ்யத்தைப் பரப்பி நிறைய வலையுலக நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்துல்லா எல்லாருக்கும் பிரியாணி ஏற்பாடு செய்தது சந்திப்பின் ஹைலைட். மனிதர் கொஞ்சம் கூட அலட்டலே இல்லாமல் இனிமையாக இருக்கிறார். கார்கி,யுவகிருஷ்ணா,சுரேகா மற்றும் பாலபாரதி முறைவாசல் வைத்து எல்லோரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். நான் பெயரை நியாபகம் வைத்துக் கொள்ளும் லட்சணம் எனக்குத் தெரியுமென்பதால் அமைதியாய் இருப்பதே நல்லது என்று சமத்தாய் ஓரமாய் உட்கார்ந்து கொண்டேன். தமிழ் அமுதன் மொபைலில் படமெடுத்தே கலாய்த்துக் கொண்டிருந்தார்.மோகன் குமார், ஆதி, எறும்பு ராஜகோபால்,ப்ரதீப், எல்.கே,ராம்ஜி யாஹூ என்று வலையில் பேசியிருந்த பல பேரை சந்திக்க முடிந்தது சந்தோஷமாய் இருந்தது. வந்ததில் பாதி பேர் திருநெல்வேலி மாவட்டம் என்பது ஸ்பெஷல் சந்தோஷம் :). என்னங்க இப்போல்லாம் வலைப்பதிவுகளில் சண்டையே இல்லாம சப்புன்னு இருக்கே ஏதாவது செய்யக்கூடாதான்னு வருத்தப்பட்டதில் கூகிள் பஸ் தான் இப்போ அதுக்கெல்லாம். வந்து ஜோதில ஐய்க்கியமாகிடுங்கன்னு அன்போடு வரவேற்றார்கள்.

ரிட்டர்ன் வரும் போது டெல்லி ஏர்போர்ட்டில் க்யூவில் அடுத்ததாய் நின்று கொண்டிருந்த தமிழருக்கு தமிழ் ப்ளாக் பற்றி தெரிந்திருந்தது.அடுக்காய் கேள்வியெல்லாம் கேட்டார். நாலாவது கேள்வி “அப்போ நீங்க இது வரைக்கும் எத்தன புஸ்தகம் போட்டிருக்கீங்க?” - ஆஹா சரிதான்.