Monday, December 20, 2010

தேவுடு காத்தல்

தேவுடு காத்தல் எனும் அற்புதமான செயலில், சுவாரசியம் என்பது இடம் பொருள் ஏவல் பொறுத்து வித்தியாசப்படும். ஒன்றுமே செய்யாமல் பராக்கப் பார்ப்பதில் அப்படியென்ன சுவாரசியம் என்று சில அவசரத்தின் அக்கா பையன்களுக்கு டவுட்டு வரலாம். சில உதாரணங்களைப் பார்ப்போம். சொந்தக்கார வட்டத்தில் பென்ஷன் தகராறாகி அது விஷயமாய் ஏ.ஜி.எஸ் ஆபிசில் ஆபிஸரைப் பார்ப்பதற்காக தேவுடு காப்பது ஒரு வகை. இதில் சுவாரசியத்திற்கான சாத்தியக்கூறு 0.000000849 என்பதை முதுநிலை கணித பட்டதாரி கட்டம் கட்டி சொல்லிவிடுவார்.


"உங்க நிறத்துக்கு கோவாக் கலர் எடுப்பா இருக்கும்மா"ன்னு தொழில் நிமித்த கடலை போடும் துணிக்கடை பட்டு செக்க்ஷன் அதற்கு எவ்வளவோ தேவலை. "இவா மஞ்சக் லைட்டை போட்டு பளபளன்னு காட்டிடுவா....சூரிய வெளிச்சத்துல பார்த்தாத் தான் கரெக்ட்டான கலர் தெரியுமாம்...ஜானு கல்யாணத்துக்கு வாங்கின புடவை டல்லடிச்சு போயிடுத்து..ராமர் பச்சையில மாம்பழக் கலர் பார்டர் இருந்தா எடுப்பா" என்ற பெரிசுகளின் சம்சார இம்சைகளுக்கு நடுவில் பில் கட்டுவதற்காக கண்ணாடி பதித்த சுவர்களைப் பார்த்துக் கொண்டு தேவுடு காத்திருந்தால் அவ்வப்போது சுவாரசிய கீற்றுகள் கடப்பதற்கான சாத்தியம் அதிகம்.


குண்டலினி யோகம் இருப்பவர்களுக்கு மட்டுமே லேடீஸ் காலேஜில் போய் தேவுடு காக்கும் சந்தர்ப்பம் கிட்டும் என்று ஜோதிட சம்பூஷணம் தினமலரிலும், இதே யோகத்திற்கு கோடியில் ஒருத்தருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய நாலாம் பிறை மச்சம் புட்டத்தில் இருக்க வேண்டும் என்று ஜோதிடலேகாவில் மச்சேந்திரரும் சொல்லியிருப்பதால், இல்லாதவர்கள் "சொக்கா சொக்கா இல்ல இல்ல எனக்கில்லை" என்று மனதை தேர்த்திக் கொள்ளுதல் நலம். அசூயையால் மேற்கூறிய இடத்தில் வரைந்து கொண்டு கண்ணாடியில் பார்ப்பவர்களுக்கு லீவு நாட்களில் அதே லேடீஸ் காலேஜில் தேவுடு காக்கும் தண்டணை தான் கிட்டும் என்று மச்சேந்திரர் அன்பாய் எச்சரிக்கிறார்.


"இந்த ட்ரெஸில நான் நயன் தாரா மாதிரி இருக்கேனா"ன்னு லோகவிசாரமாய் லைப் ஸ்டைல் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் நங்கையர் பகுதியில், "இது நல்லாயில்ல வேற ட்ரை பண்ணு, என்ன அவசரம்...நல்ல பிடிச்சதா வாங்கிக்கோ" என்று கூட வந்தவருக்கு வாயாலும், மற்றவர்களுக்கு கண்ணாலும் ஜாடை காட்டி தவமாய் தவமிருப்பதற்கு எங்கே மச்சம் இருக்கவேண்டும் என்று மச்ச சாஸ்திரத்தில் குறிப்புகள் ஏதும் தென்படவில்லை.  மச்சேந்திரர் காலத்தில் நயன் தாரா இல்லாதது காரணமா இல்லை பண்டைய காலத்து பொக்கிஷங்களை நாம் பாதுகாக்கும் லட்சணம் தான் காரணமா என்பது கவலைக்கிடமாக இருக்கிறது.

நிற்க. மேற்கூறிய உதாரணங்களை வைத்து "ஜொள்ளு" தான் பதிவின் மூலக்கூறு என்று நீங்கள் தவறாய் முடிவெடுப்பதற்கு முன்னால் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எனக்கு மிகப் பிடித்த தேவுடு காத்தல் எங்கே தெரியுமா?...அலுவலக பரபரப்பில் இயங்கும் காலை நேர பஸ் ஸ்டாப் தான். எத்தனை மனிதர்கள்,  எத்தனை பரபரப்பு, எவ்வளவு சுவாரசியம். சென்னையின் பரபரப்பு எனக்கு அறிமுகமாகியது கே.கே.நகர் அம்மன் கோவில் ஏரியா. முதல் முறை கிண்டியிலிருந்து ஆட்டோவில் வந்து இறங்கிய ஐய்யப்பன் கோயில் வாசல் இன்றும் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது. மரங்கள் அடர்ந்த சாலை, அம்மன் கோவில் பாட்டும் ஐய்யப்பன் கோவில் சரணமும் கலந்த கலவையான பிண்ணனி இசை என்று ஏரியாவே ரம்மியமாக இருக்கும்.

பத்மா சேஷாத்திரி ஸ்கூட்டி மம்மீஸ், பிதுங்கி வழியும் நிறைமாத 11ஈ-யும் 5ஈயும் கற்றுக் கொடுக்கும் “சர்வைவல் ஃபார் தி பிட்டட்ஸ்ட்” பாடங்கள், "இந்த கூட்டத்துல மாரடிக்கிறதுக்கு டெப்போ போயே ஏறிடலாம்" அங்கலாய்ப்புகள், "அடுத்த வாரம் வண்டி லோன் சாங்கஷன் ஆகிடும் அப்புறம் தெசைக்கு ஒரு கும்பிடு" நம்பிக்கைகள், சரியாய் மூடாமல் கமகமக்கும் டிபன் பாக்ஸ் கலவை வாசம், வரவே வராத சனியன் பிடித்த 12G, பாண்டிச்சேரி கெஸ்ட் ஹைவுசில் நிக்காத 11ஏ, மூச்சைப் பிடிக்கும் கூட்டத்தில் ஏறியதும் உதிரும் கூந்தல் மல்லிகை, "டூ ட்வன்டி ஒன்னுண்ணா" என்று பாசமாய் பாஸ் செய்யும் கூடப் பிறவாத சகோதரி, அவளுக்குப் பக்கத்திலிருந்து ரெண்டு நாளாய் என்னையே பார்பது போலிருக்கும் என்னவோ செய்யும் பிரயாண சுந்தரி, டாலடிக்கும் மண்டையில் இல்லாத முடியை வாரி போனசாய் மீசையையும் வாரிக்கொள்ளும் நாற்பத்தி சொச்சங்கள், கேட்காத  கூட்டத்திற்கு "படில நிக்காத மேலவா மேலவா" என்று சலிக்காமல் கத்தும் கண்டக்டர், யாரவது பிடுங்கிக் கொள்வார்கள் என்று புத்தகத்தை அணைத்துக் கொண்டு வரும் படிப்பாளினிகள், ஒவ்வொரு ஸ்டாப்பிலும் பஸ்ஸை தள்ளிவிட்டுவிட்டு ஏறிக்கொள்ளும் சக யூத்ஸ், "நாளைக்கு ஐய்யப்பன் கோவில்ல படி பூஜையாம் கரெக்ட்டாய் ஆறு மணிக்கு வந்துடும்" என்று கோயில்மேட்ஸுக்கு தகவல் பரிமாரிக்கொள்ளும் ரிட்டயர்ட் பக்தகோடிகள், சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல் ஆட்டோவை மட்டுமே பிடிக்கும் அவ்வப்போது தென்படும் அதீத அழகு கதாநாயகிகள், அவர்கள் ஆட்டோ போவது வரை மாடி ஜன்னலில் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாக்கள், பஸ் தகரத்தில் கிறுக்கப்பட்ட "பானு ஐ லவ் யூ" , அப்போது தான் திறந்த கடையில் சாமிக்கு லேசாயும், கல்லாவிற்கு பலமாயும் காட்டப்பட்ட ஊதுபத்தி வாசனை, நாராசமாய் ஒலிக்கும் திறக்கும் ஷட்டர்,  எதிர்கால முதலாளி கனவுடன் பளீர் சட்டையை அவிழ்த்துவிட்டு அழுக்கு சட்டையை அணிந்து கொள்ளும் மெக்கானிக் பொடியன்கள், எங்கேயோ குலைக்கும் நாய், யாரோ பெருக்கிய மெல்லிய தூசிப் புகை, முதல்போணி சென்டிமெண்டில் இன்னமும் இடிசொற்கள் ஏறாத இனிய ஆட்டோ டிரைவர்கள், ஆட்டோவிற்கு இணையாக புகுந்து புறப்படும் பல்லவன்கள் -  சொல்லிக் கொண்டே போகலாம். தேவுடு காத்தலை ஆவலோடு எதிர்நோக்க வைத்த வசந்த காலம் அது.

இப்போதும் நிதமும் பஸ்ஸிலும் ட்ரயினிலும் பிரயாணிக்கிறேன். குஞ்சுமோன் பட செட்டுக்குள் நுழைந்த மாதிரி  இருந்தாலும் சுவாரசியம் வேறு விதம். குனிந்த தலை நிமிராமல், நிஜத்தைப் புறந்தள்ளி ஐஃபோனுக்குள் மண்டயை விட்டு உலகைத் தேடும் செம்மறியாடுகள், அந்த நொடியே காந்தர்வ விவாகம் செய்து கொள்ளத் தூண்டும் அழகிய ரூபவதிகள், ஹெட்போன் வழியே ஊருக்கே ஒலிபரப்பும் நடமாடும் வானொலி நிலையங்கள், பஸ் ஸ்டாப்பில் கிறுக்கப் பட்டிருக்கும் "எம்மா இஸ் ப்ரெக்ணன்ட்", "அடுத்த வாரம் ஃபோன் பண்றேன் அதுவரைக்கும் உடம்ப பார்த்துக்கோப்பா" பாசமிகு ஐ.எஸ்.டி கால்கள், சுவாரசியமில்லா கட்டுக்கோப்பான ஒழுங்குமுறை போக்குவரத்து, "அடுத்த ஸ்டாப் மெக்காலே ரோடு", ஒரு நிமிடம் தாமதமான ரயிலுக்காக வருத்தப்படும் ரயில்வே நிர்வாகம், இயந்திரத்தனமான அறிவிப்புகள், எங்கேயோ டீ ஆத்த போகும் சைரன் போலீஸ் கார்கள், பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு "வாட் தா ஃப*" என்று காலங்கார்த்தால மங்களரகரமாய் ஃபோனில் முழங்கும் முரட்டுப் பெண்மணி, இரண்டாம் பிரசவத்திற்கு பேரனையோ பேத்தியையோ ஸ்கூலுக்கு கொண்டுவிட கூட்டி வந்திருக்கும் குளிர் குல்லாயும் தொள தொளா கோட்டும் அணிந்த இந்திய தாத்தா, குளிருக்கு சம்பந்தமே இல்லாமல் கிழித்து விட்ட ஜீன்ஸில் வெளிர் நிற தொடையைக் காட்டிக்கொண்டு சௌஜன்யமாய் பழகும் அரிவை, நேற்று யாரும் யாரும் எங்கே ஜல்சா செய்தார்கள் என்று பத்தி பத்தியாய் விளக்கும் டாபலாய்ட்கள், பக்கத்திலேயே துணியை அவிழ்த்து கொடியில் மாட்டிவிட்டு காத்தாட போஸ் குடுக்கும் லஜ்ஜையில்லா படங்கள், பொதுச் சொத்தில் எட்டு பவுண்டுக்கு அமைச்சரின் கணவர் போர்னோ வீடியோ பார்த்தார் என்று கூவும் செய்திகள், அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று ராஜினமா செய்யும் அமைச்சர், சர்ச் ஹாலில் சாய் பஜன் (மீல்ஸ் ப்ரொவைடட்), “தோசமாவு இன்னும் பொங்கவே இல்லையே” என்ற மனக் கிலேசத்துக்கிடையில் ஓசோன் லேயரைப் பற்றி கவலைப்பட சொல்லும் ஜெகத்ரட்சன்கன்கள், பண்ணிரெண்டு வயதில் அப்பாவான மேட்டர் பாலகன் என்று தேவுடு காத்தல் இன்னும் சுவாரசியமாய் தான் போய்க் கொண்டிருக்கிறது.

பி.கு
தமிழ்மண அவார்ட்ஸ் வோட்டு ஆரம்பித்துவிட்டது. இந்த முறை
வித்துவான் - காமெடி பிரிவிலும்
வந்தியா இந்தியா - பயண அனுபவங்கள் பிரிவிலும்
தி மேன் ஃப்ரம் ஏர்த் - உலக சினிமா விமர்சன பிரிவிலும்
சேர்த்திருக்கிறேன். படித்துப் பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் ஓட்டு போடுங்கள். 

Tuesday, December 14, 2010

ஜில்பான்ஸ் - 141210

சமீபத்திய வருத்தம்
கமல் என்ற நடிகரின் தீவீர ரசிகன் நான் என்பதை இன்னுமொரு முறை ஆணித்தரமாய் சொல்லுவதில் எனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை. அவருடைய நிஜ குடும்ப வாழ்க்கையைப் பற்றி எனக்கு கருத்தொன்றும் சொல்வதற்கில்லை அதில் அவசியம் இருப்பதாயும் நான் கருதவில்லை. எனக்கு ஷகிராவிலிருந்து நேற்று ரோடைக் கடக்கும் போது ஹாரன் அடித்தவன் வரை எல்லாரைப் பற்றியும் எனக்கு தனிப்பட்ட கருத்தும் பிம்பமும் இருக்கிறது. அது என்னுடைய தனிமனித உரிமைக்குட்பட்டது, சபை நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது.

இங்கு ஒரு விஷயம் சொல்லிக் கொள்கிறேன். கடவுள் என்ற மிகப் பெரிய நம்பிக்கையை உணர்சிப் பூர்வத்திலிருந்து ஆராய்ச்சிப் பூர்வமாய் சில காலமாய் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அன்பே சிவம் என்பதில் நம்பிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. ஆனால் அது என்னுடைய நம்பிக்கை மட்டுமே. அதை முன்னிருத்தி நான் கடவுள் நம்பிக்கை இருப்பவர்களை கேலி செய்வதை நாகரிகமாக கருதவில்லை. என்னுடைய சுயமரியாதையைப் போல் நம்புபவர்களின் சுயமரியாதையையும் நான் சமமாக மதிக்கின்றேன். அது அவர்கள் உரிமை என்பதில் தெளிவாக இருக்கிறேன். ஏனோ நாத்திகமும், சுயமரியாதையும் கடவுள் நம்பிக்கையை தாக்குவதில் முனைப்பாக இருப்பது பெரும் ஆயாசத்தை குடுக்கிறது.

மன்மதன் அம்பு படத்திற்கு ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே அவசியம் என்று நான் கருதவில்லை. கவிதையில் எனக்கு சீப் பப்ளிசிட்டியின் வார்த்தை வண்புணர்ச்சியும் கெக்கலிப்பும் தான் தெரிகிறதே தவிர அறிவிஜீவித்தனம் மருந்துக்கும் தெரியவில்லை. மும்பை எக்ஸ்பிரஸ் பயத்தில் ஏற்கனவே படம் எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டிருக்கும் என்னைப் போன்ற கமல் ரசிகர்களுக்கு  இந்த கவிதை ஏமாற்றமே. இருந்தாலும் பயத்தை உறுதிப் படுத்திக்கொள்ளவாவது படத்திற்கு முதல் நாள் போக வேண்டும், போவேன்.
(ஹூம்...அடுத்ததா ஓபாமாவே மன்னிப்பு கேள்ன்னு ஒரு பதிவு எழுதனும் )


சமீபத்திய வாசிப்பு
ஏனோ தெரியவில்லை வாழ்க்கை அனுபவ வாசிப்பு சமீபத்தில் ரொம்ப பிடித்திருக்கிறது. கல்கி அவர்களின் புதல்வர் கல்கி ராஜேந்திரன் எழுதிய "அது ஒரு பொற்காலம்" ரொம்ப அனுபவதித்து படித்தேன். ராஜாஜி, கல்கி, எம்.எஸ் சதாசிவம் தம்பதியனர் எல்லோரையும் பற்றி பல வழ்க்கை சம்பவங்களை சுவையாக எழுதியிருக்கிறார். பல அரிய புகைப்படங்களும் இருக்கின்றன. என்.சி.மோகன் தாஸ் அவர்கள் எழுதிய "நன்றி மீண்டும் வருக"வும் மிக சுவையான புத்தகம். அமீரகத்தில் அவர் நடத்திய விழாக்களுக்கு அழைத்து வந்த வி.ஐ.பிக்களைப் பற்றியும், அவர்களைப் பற்றிய அவருடைய கருத்தையும் கவனிப்பையும் உணமையாக மிக சுவை பட எழுதியிருக்கிறார். அதே போல் எம்.ஜியாரின் தனி மெய்காவலராய் இருந்த ஸ்டண்ட் நடிகர் ஒருவர் எழுதிய புத்தகம் ஒன்றையும் வாசித்தேன். அதுவும் மிக அருமையான புகைப்படங்களுடன் சுவாரசியமாக எழுதப்பட்டிருந்தது. 


இந்த வார கிசு கிசு
டு என்ற பெயரில் அரம்பிக்கும் (இந்த முறை கடேசி எழுத்து க்ளூ கிடையாது) பதிவருக்கு ரொம்ப நாளாய் ஒரு ஆசை. அவ்வப்போது இந்த அறிவிப்பை உங்கள் ப்ளாகில் போடமுடியுமா என்று சில பேர் அணுகுவதுண்டு. அதை ஒரு பெர்மணன்ட் பகுதியாகவே எங்கேயேயாவது சொருக முடியுமா என்று யோசித்து இனிமேல் ஜில்பான்ஸில் போடலாம் என்று முடிவு செய்திருக்கிறார். உங்களுக்கு ஏதாவது அறிவுப்பு செய்யவேண்டுமானால் r_ramn அட் யாஹூ டாட் காம் என்ற ஈமெயிலுக்கு ஒரு மெயில் தட்டினால் அதற்கடுத்த ஜில்பான்ஸில் வெளியிடப்படும் என்று பட்சி சொல்கிறது.

ஏன் எதற்கு எப்படி, மதன் பதில்கள் புத்தகத்தை படித்ததிலிருந்து நிறைய கேள்வி கேட்டால் நிறைய அறிவு வளரும் என்று ஆணித்தரமாய் நம்பி அதே டு பதிவர் அறிவிப்பு மட்டுமில்லாமல் "மைசூர் போண்டாவை பெங்களூருவில் தின்கிறார்களே...இது அடுக்குமா?" போன்ற வாசகர் கேள்விகளையும் ஜில்பான்ஸில் அறிமுகப் படுத்தலாமா என்று யோசித்து வருகிறார். கேட்டால் ஜில்பான்ஸ் மொத்ததில் இன்டராக்டிவாய் இருக்கலாமே என்று ஜல்லியடிக்கிறார். நீங்கள் பேகான் ஸ்ப்ரே அடித்து ஐடியாவை கொல்லாமலிருக்கும் பட்சத்தில் நிறைவேற்றிவிடுவார் போல இருக்கிறது ஜாக்கிரதை !!!

Wednesday, December 08, 2010

ஸ்பென்சர் நினைவுகள்

சென்னையில் மாலை ஏழுலிருந்து ஒன்பது வரை முழுநேரமாய் (என்) ..டியில் மாலை படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், பார்ட்டைமாக காலை ஒன்பதிலிருந்து மாலை ஏழு வரை என்ன செய்ய என்று  குழப்பமாக இருக்கும். அப்புறம் நண்பர்களோடு சேர்ந்து ஏதாவது ப்ராஜெக்ட் செய்யலாம் என்று ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து அப்போது மிகப் பிரபலாய் இருந்த  ஸ்பென்சர் ப்ளாசாவில், ஆர்.பி.ஜி அலுவலகத்தில் கூலியில்லா பட்டதாரியாக ஏற்றுக்கொள்ளப் பட்டேன். 

இன்டர்வியூவில் "ஓப்பனிங் சீனில் நேரா நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயர் போய், கடை கடையா ஏறி இறங்கி பிட்ஸா வாங்கித் திங்கிறோம்"ன்னு நான் போட்ட கம்ப்யூட்டர் சீனில் ஆபீஸ் மேனேஜர் விழுந்துவிட்டார். "தம்பீ .சி கார், ப்யூட்டிபுல் பி.ஏவோட எங்க கம்பெனில எம்.டியா வந்து சேர்ந்துக்கிறியா"ன்னு கேட்பார் என்று நான் மிதந்து கண்டுகொண்டிருந்த வேளையில் "ஏம்பா ஒரு நாள் விட்டு ஒரு நாள் காலம்பற ஏழுலேர்ந்து எட்டு வரைக்கும் எனக்கு கம்ப்யூட்டர் சொல்லித் தரியா...முடிச்சுட்டு அப்பிடியே என்னோட ஸ்கூட்டர்ல ஆபிஸ் வந்துடலாம்"ன்னு மனுஷன் வாய் விட்டுக் கேட்கவும், பஸ் சார்ஜ் மிச்சமே என்று ஒத்துக்கொண்டேன். போனஸாய் அவர்கள் வீட்டில் ரெண்டாம் டிகாக்க்ஷனில் காப்பியும் குடுத்தார்கள். கே.கே நகரிலிருந்து கிளம்பி, பனகல் பார்க்கில், பல்லவன் ட்ரைவர்களையும் ஆட்டோகாரர்களையும் அரசியல்வாதிகளையும் ஆயிரத்தெட்டு "...தா"வுக்கு திட்டிவிட்டு மவுண்ட்ரோடில் ஸ்பென்சர் வாசலில் என்னை இறக்கிவிட்டு விட்டு, "சந்துரு கேட்டா வண்டியில சின்ன பிரச்சனை...பார்த்துக்கிட்டு இருக்கேன்...வந்துருவேன்னு சொல்லு"ன்னு சொல்லிவிட்டு தம் அடிக்கப் போய்விடுவார்.

அப்போது தான் திறந்திருந்ததால் பளபளவென்று ஸ்பென்சர் ப்ளாசா ஒரே கலர்புல்லாக இருக்கும். பெண் செக்யூரிட்டியிலிருந்து கடை சிப்பந்திகள் வரை எல்லா யுவதிகளுமே அழகாய் இருக்கும் மாயாலோகமாய்த் திகழும். சென்ட்ரலைஸ்ட் ஏசி, பவுண்டன், எஸ்கலேட்டர், ஃபாரின் எலக்ட்ரானிக்ஸ் கடைகள் என்று நுழைந்த மாத்திரத்திலேயே மிரட்டி "மை டேட் இஸ் பீட்டர், மதர் இஸ் மேரி"ன்னு ஆங்கிலம் தானாக நாக்கில் ஒட்டிக்கொள்ளும். முக்கால் கால்ட்ராயரும் சுருக்கம் சுருக்கமாய் கை இல்லாத மேல் சொக்காயும்,காதில் வளையலும், காலுக்கு ரப்பர் செருப்புமாய் வளைய வரும் நவநாகரீக நங்கையர்களை எனக்கு அறிமுகப் படுத்தியது ஸ்பென்ஸர் தான். "மச்சி நேத்து போர்த் ப்ளோர்ல ஒரு ஃபாரின் ஜோடி...இன்னிக்கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம்"ன்னு ஜோடி இல்லாத பசங்கள் கிரவுண்ட் ப்ளோரில் உட்கார்ந்து ஊத்திக்கொண்டிருப்பதை நிறைய கேட்கலாம்சென்னையிலிருக்கும் முக்காலேவாசி மெடிகல் ரெப்ரசென்டேட்டிவ்களுக்கும், சேல்ஸ் மக்களுக்கும் அப்போது ஸ்பென்சர் தான் அக்னி நட்சத்திர சரணாலயம். "க்ளையன்ட்டோட ஆபிஸ்ல தான் சார் இருக்கேன்..அவருக்காத் தான் வெயிட்டிங், உள்ளே மீட்டிங்க்ல இருக்கார்" என்று கூசாமல் சொல்லிவிட்டு கீழே உட்கார்ந்து மேலே நோக்கி பராக்கப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

அப்பேற்பட்ட ஸ்பென்சரில் ஆறாவதோ ஏழாவதோ மாடியில் ஆர்.பி.ஜீக்கு அருமையான அலுவலகம். "என் கம்ப்யூட்டர் வொர்க் செய்யி மாட்டுது பார்த்து குடுக்குமா ப்ளீஸ்.."ன்னு கொஞ்சி கொஞ்சி கொச்சைத் தமிழ் பேசும் சேட்டு வீட்டு பைங்கிளிகள் புழங்குகிற இடம். "தோ வரேண்டா செல்லம்"ன்னு சர்விஸ் டெஸ்க் பேர்வழி வருவதற்க்குள் ஓடிப் போய் கம்ப்யூட்டரை ரீ-பூட் செய்வேன். "ஹீ இஸ்   Geek-யா"ன்னு வாய் நிறையப் புகழ்வார்கள். மைக்ரோசஃப்ட் இருக்கும் திசை நோக்கி கும்பிடு போட்டுக் கொள்வேன். .டி சர்விஸ் டெஸ்க் பேர்வழிகளுக்கு என்னுடைய முந்திரிக் கொட்டைத்தனம் பிடிக்காது. "டேய் நீ உன்னோட ப்ராஜெக்ட் வொர்க் மட்டும் பாரு கம்ப்யூட்டர ரீபூட் பண்ணுவதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்"ன்னு ஒடுக்குவார்கள்.

ஆனால் ஆபிஸில் நிறைய சேட்டு வீட்டு பையன்களும் எனக்கு ஃபிரண்டு. "சாப்பாடுக்கு வெளியே சேர்ந்து போகலாமா"ன்னு ஹிந்தியில் எப்படி கேட்பது என்று அவர்களும், "நீ ரொம்ப அழகா இருக்க"ன்னு தமிழில் சொல்வது எப்படின்னு நானும் ஒருத்தருக்கொருத்தர் சொல்லிக்கொடுத்து மொழி வளர்ப்போம்.

அதில் ஒரு சேட்டு வீட்டுப் பிள்ளை மட்டும் என்னிடம் அடிக்கடி "அப்படியே ஜாலியா படுத்துக்கப் போலாம் வர்றியா"ன்னு கேட்டு கலங்கடிப்பான். சீனாதானா மாமா கேட்டார்னா நாக்குல வசம்ப வைச்சு தேய்த்துவிடுவார்..."பிரகஸ்பதி...அது படுத்துக்க இல்லைடா..படத்துக்கு"ன்னு திருத்துவேன். "படத்துக்கு கூப்பிடுவதற்கும் படுத்துக்க கூப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு...தமிழ் தெரிஞ்ச பொம்மனாட்டிகள் கிட்ட இப்படி கேட்டுவைக்காத"ன்னு எச்சரித்தாலும் ரொம்ப பட்டுக்கொள்ள மாட்டான். "அரே எல்லாம் தெரியும் ரே"ன்னு .சியாய் எடுத்துக்கொள்வான். இப்படியே அரே அரேன்னு போய் அறை வாங்கி...தானா பாஷை கத்துக்கும்ன்னு விட்டுவிடுவேன்.

ஆனால் இந்த சேட்டு வீட்டு பேட்டாக்களின் "ஜி" தொல்லை மட்டும் சொல்லி மாளாது. அதை விட கொடுமை என்னவென்றால் சேட்டூஸ் கா பேட்டாஸ் கூட பழகும் பச்சை தமிழர்களும் மரியாதை குடுக்கிறேன் பேர்வழி என்றுஜி” கலாசாரத்திற்கு மாறிவிடுவார்கள். பாலா வை பாலாஜியாக்கிவிடுவார்கள், ராஜாவை ராஜாஜியாக்கிவிடுவார்கள். என்னையும் அதுவரைக்கும் "நீங்க நாங்கன்னு" விளித்துக்கொண்டிருந்த தமிழ் நண்பர் ஒருவர் திடீர்ன்னு "டுபுக்குஜி..டுபுக்குஜி"ன்னு கூப்பிட ஆரம்பிக்க, "தம்பி இங்கன வா. உனக்கு என்ன மரியாதையா கூப்பிடனும்னா பெருமதிப்பிற்குரிய ஸ்ரீமான் டுபுக்கு அவர்களேன்னு ஒழுங்கா கூப்பிடு ...இல்லியா டேய் டுபுக்குன்னு கூப்பிடு எனக்கு ஆட்சேபணையே இல்ல...ஆனா அதுக்காக சேட்டு வீட்டு பேட்டிஸ் முன்னாடி சீன் போடறதுக்காக எங்கப்பா இன்ஷியலையெல்லாம் தாறுமாறா மாத்தாத...எனக்கு ஹிந்தியில பிடிக்காத ஒரே எழுத்து இந்தஜி’ தான்"ன்னு ஆட்காட்டி விரலை காட்டி க்ளோசப்பில் வியஜகாந்த் மாதிரி செல்லமாய் மிரட்டியதும் தான் நண்பர் பழகத்தை விட்டார்.

அங்கே இருக்கும் ஆபிஸ் பணியாளர்களுக்காகவே விதவிதமாய் சாப்பாடு எடுத்து வரும் சாப்பாடு பிஸினெஸும் நிறைய உண்டு. அதில் எனக்குப் பிடித்தது பிரியாணி பொட்டலுமும், வெஜ் சாண்ட்விச்சும். ஒரு சேட்டு வீட்டுக் கிளி வாங்கிக் குடுத்து, எனக்கு வெஜ் சான்ட்விச் ரொம்பவே பிடித்துவிட்டது. நல்ல கார சாரமாய் மிளகாய் சட்னி தேய்த்து  தக்காளியும் வெள்ளிரியும் வட்டமாய் நறுக்கி அடுக்கப்பட்டு மிக சுவையாய் இருக்கும். முக்காலே வாசி அதைத் தான் வாங்கித் தின்பேன். “ரெஸ்டாரண்ட் ஜாயேங்கே க்யா" என்று ஏதாவது சேட்டு வீட்டு கிளி கூப்பிடும் சுபமுஹூர்த்த நாட்கள் மட்டும் ஏதாவது ஒரு தாபா போய் காசை Curryயாக்குவோம். சில நாள் " லவ்வ்வ்வ்.....சவுத் இன்டியன் தோசா" என்று கிளி சிலாகிக்கும் போது ஏதாவது ஒரு பவனில் 'சட்னி'ஜியையும் 'சாம்பார்'ஜியையும் முக்கி முக்கி 'தோசா'ஜியை சாப்பிட்டு விட்டு வருவோம்.

இரண்டு வருடம் முன்பு இந்தியா சென்றிருந்த போது ஸ்பென்சர் போக நேர்ந்தது. மூன்று பகுதிகள் வந்துவிட்டாலும் முன்பிருந்த ஷோக்கு சுத்தமாய் இல்லாமல் சுரத்து குறைந்து காணப்பட்டது. இந்த முறை இந்தியா சென்ற போது அக்கா பையனிடம் ஸ்பென்சர் பற்றி கேட்டேன் "இப்போ அதெல்லாம் இல்லை...சிட்டி, எக்ஸ்ப்ரெஸ் மால்ன்னு ஏகப்பட்டது இருக்கு ஸ்பென்சர் குறைந்த லெவல் தான்" என்றான். ஹும்ம்ம்ம்

Sunday, December 05, 2010

ஜில்பான்ஸ் - 051210

சமீபத்திய சந்தோஷம்
நந்தலாலா காணுற்றேன். இனிமையான படம். பஸ்டிக்கெட் பின்னால் டயலாக் எழுதி, படம் நெடுக கவித்துமாய் உறுத்தாமல் திரைக்கதை அமைத்து பாந்தமாய் நடித்திருக்கிறார் மிஷ்கின். படத்தின் இணை ஹீரோவான இளையராஜா அதாவது நம்ம செல்லமாய் கூப்பிடும் மொட்டை படத்தில் வெறியாட்டம் ஆடியிருக்கிறார். மிஷ்கின் -இளையராஜா இரண்டு பேருக்குமாய் பார்க்கவேண்டிய படம். படத்தில் ரோகிணி பொருத்தமே இல்லாத மிகப் பெரிய மிஸ் காஸ்ட். தலைவிரி கோலமாய் ரோகிணி என்று தெரிவதற்கு முன்னாலே காலைப் பார்த்து அடடா கேரக்டரின் வயதுக்கேற்ற அம்மணியைப் போடவில்லையே என்று தோன்றியது. முகத்தைக் காட்டிய பின், சே வேற யாரையாவது போட்டிருக்கலாமே என்று திண்ணமாய் தோன்றியது. ஆனால் இதெல்லாம் ரொம்ப ரொம்ப சின்ன குறை. நிஜமான க்ளைமாக்ஸ்க்கு அப்புறமாய் பொதுஜன செண்டிமென்டிற்காக பயந்து கடைசிக் காட்சி அமைத்த மாதிரி எனக்குப் பட்டது. ஒரிஜினல் கதையில் அந்தக் காட்சி இருந்திருக்காது என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன். தமிழ் சினிமா ஆரோக்கியத்திற்கு படம் பெரிதும் உதவியிருக்கிறது. வாழ்த்துகள் மிஷ்கின்.

இங்கிலாந்தை சமீபத்திய வரலாறு காணாத குளிர் ஆட்கொண்டு நாடே திணறிப் போய், அதிக பட்ச வெப்பமே வடக்கே மைனஸ் இருபத்தியெட்டு டிகிரியும், இங்கே லண்டனில் மைனஸ் நாலு ஐந்து என்று சென்ற இந்த ஒரு வாரத்தில் சுத்த பத்தமாய் தலை குளித்து, கடமையுணர்ச்சியில் சரியாய் துவட்டாமல், குல்லா அணியாமல், அலுவலகத்திற்கு கடமையாற்றச் சென்றதில் கடந்த மூன்று நாட்களாய் நூற்றியிரண்டு டிகிரி எனக்கு வந்து, வேளாவேளைக்கு, விதவிதமாய் சாப்பாடு இருக்கும் இடத்திற்கு வந்து, படுக்கையில் படுத்த வண்ணம் வேளைக்கொரு படம் பார்த்துக் கொண்டு ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

"யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்" என்ற மரபிலே சமீபத்தில் வெளியாகியிருக்கும் "எவன்டி உன்னைப் பெத்தான் பெத்தான் கையில கிடைச்சா செத்தான் செத்தான்" என்ற அற்புதமான 'வானம்' திரைப்பட பாடல் வெளியாகியிருக்கிறது. ஆழ்ந்த கருத்துகள் ஐயப்பாட்டை நீக்கும் வரிகள். என்ன ஒரு பத்து பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கவிஞர் சிந்தனையை வெளியிட்டிருந்தால் எனக்கும் உபயோகப்பட்டிருக்கும். தற்பொழுது தங்கமணி இந்த வரிகளை தத்து எடுத்துக்கொண்டு என் மகள்களுக்குப் பாடி எனக்கு செய்தி அனுப்புகிறார். சர்வேஸ்வரா உலகத்த நீ தான்பா காப்பாத்தனும். ஹூம்...கவிஞர் இன்னும் எத்தனை பேர் வாயில விழுந்து வாங்கிக் கட்டிக்கொள்ளப் போகிறாரோ.


அது என்னம்மோ என்ன மாயமோ தெரியல ரொம்ப பிடித்த சில பேரை கொஞ்ச நாளாக பிடிக்காமல் ஆகிவிட்டது. அதே போல் பிடிக்காமல் இருந்த சில பேர்களை சமீபத்தில் பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. முன்னால் ரொம்ப பிடித்த ஏஞ்சலினா ஜோலி முன்னாள் ஆகிவிட்டார். அதே போல், பொம்மரிலுவில் பார்த்தும் (ரொம்ப) பிடிக்காத  ஜெனிலியாவை உத்தம புத்திரனில் பார்த்த போது பிடித்துவிட்டது. இதை மாதிரி லிஸ்டில் நிறைய பழையன கழிதலும் புதியன புகுதலும் இருக்கு. மேலும் விபரங்கள் சேதாரத்திற்க்கு அடிகோலும் என்பதால் 'நோ செய்கூலி சேதாரம்' ஆஃபர் வரும் போது இன்னும் விளக்கமாய் சொல்கிறேன். ஜெனிலியா யாரு என்று தெரியாதவர்களுக்கு உபயோகப் படுமே என்று படம் போட்டிருக்கிறேன். படத்தில் இருக்கும் அம்மணி தான் ஜெனிலியா.


இந்த வார மெசேஜ்
மெசேஜ் எதாவது சொல்லனும்ன்னு ஆசையா இருக்கு அதுனால ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேனே ப்ளீஸ். அடிக்கடி தீடீர்ன்னு யாராவது ஒருத்தர் பொழுது போகாம என்னுடைய பதிவுகள் எல்லாத்தையும் ஒரே நாளில் நோண்டியெடுத்து படிச்சுட்டு அங்கங்க பழைய பதிவுகளுக்கு பின்னூட்டம் போடறீங்க. என்னுடைய பதிவில் நான் பொதுவாக பின்னூட்டங்களுக்கு பதில் போடும் பழக்கம் வைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது பழைய பதிவுங்கிறதால அங்க உங்களுக்கு பதில் போட விட்டுப் போய்விடுகிறது. அதுனால தப்பா எடுத்துக்காதீங்க ப்ளீஸ். உங்களுடைய பொன்னான நேரத்தை உபயோகித்து பழைய பதிவானாலும் பின்னூட்டம் போடற உங்களுடைய அன்பிற்க்கு நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். அதற்கு எனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வார கிசுகிசு
2010 தமிழ்மண விருதுகளுக்கு அழைப்பு வந்த அடுத்த நிமிஷமே, டு என்று ஆரம்பித்து கு என்று முடியும் வலைப்பதிவர், இந்த வருடமும் சற்றும் மனம் தளராமல் போட்டியில் மூன்று பதிவுகளை சேர்த்துவிட்டார். என்னம்மோ கலந்து கொண்டதில் எல்லாம் வாங்கி குவித்துவிட்ட மாதிரி, இதில் நகைச்சுவை பகுதியில் மட்டுமே கலந்துகொண்டு மிச்ச ரெண்டையும் வாபஸ் வாங்கிவிடலாமா என்று ரூம் போட்டு யோசித்து வருகிறார். எல்லா பரிச்சைலயும் பெயில் என்பதற்கும் ஒன்னே ஒன்னு அவுட் என்பதற்கும் வித்தியாசம் இருக்குல்லா என்று கன்றாவியாய் தர்கம் வேறு புரிகிறார்.

Wednesday, December 01, 2010

ப்ளைட் ட்ரெயினிங்

சமீபத்தில் ஆபீஸில் ஒரு சக ஊழியருடன் பேசிக் கொண்டிருந்தது போது அவர் சென்று வந்த ப்ளையிங் எக்ஸ்பீர்யன்ஸ் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அரை மணி நேரம் பறந்து விட்டு வந்ததைப் பற்றி ரெண்டு மணி நேரம் படம் போட்டுக்கொண்டிருந்தார். அன்னார் பறப்பதில் கில்லாடி, ப்ளைட் ஓட்டுவதில் அசகாய சூரர், பாரா ஜம்பிங்கில் விற்பன்னர் என்று காட்டிய படத்தில் தெள்ளந்தெளிவாக விளங்கிற்று. "டுபுக்கு அத்தனை உசரத்தில் இருந்து குதித்து ரொம்ப் நேரம் பாராசூட்டை விரிக்காமல் ஃப்ரீ பாலிங் போது வயிற்றில் ஒரு பந்து உருளும் பாரு...வாழ்க்கையில் கண்டிப்பாய் இந்த த்ரில்லை எல்லாம் அனுபவிக்கனுமைய்யா"ன்னு ஸ்லாகித்துக் கொண்டிருந்தார். "அண்ணே ...இந்த வயித்துல பந்து உருளரறது, தலை கிர்ர்ருன்னு சுத்துறது, நான் இப்ப எங்க இருக்கேன்னு பேந்தப் பேந்த முழிக்கிறது - எல்லாம் கத்ரீனா கைஃப் - தங்கமணி கூட்டணியில நிறைய பார்த்தாச்சுண்ணே...செலவே இல்லாம பத்து ப்ரீ ப்ளைட் டிக்கெட் எக்ஸ்பீரியன்ஸ் குடுப்பதில் தங்கமணி கில்லாடிண்ணே"ன்னு சொன்னாலும் விடாமல் வாயால் ப்ளைட் ஒட்டிக்கொண்டிருந்தார்.

ஜோக்ஸ் அப்பார்ட். நானும் இந்த மாதிரி பைலட் ட்ரெயினிங் சென்று வந்திருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொண்டு இந்த மாதிரி ஷோ ஆஃப் செய்ததில்லை.  நீங்கள் ப்ளைட் ட்ரெயினிங் போயிருக்கிறீர்களா? என்னுடைய முதல் ட்ரெயினிங் ட்யூட்டர் ரொம்ப தெரிந்த தோஸ்த் என்பதால் வாரத்திற்கு ஒரு மணி நேரம் தியரி க்ளாஸ் நடக்கும். மிகவும் சுவாரசியமாக இருக்கும். பையனுக்கு பத்து வயசு தானே என்று ஏனோ தனோன்னு சொல்லிக் குடுக்காமல் சின்சியராய் பாடம் எடுப்பார். எப்பேற்பட்ட சந்தேகமானாலும் கரெக்டாய் தீர்த்து வைப்பார். ட்யூட்டர் நம்ப கன்னுக்குட்டி கணேசன் சித்தப்பா பையன். அவனுக்கு ஆறாவதோ ஏழாவதோ ஆனுவல் லீவுக்கு மெட்ராஸிலிருந்து ஊருக்கு வந்த போது, எனக்கும் இன்னும் சில அரை டிக்கெட்டுகளும் அம்மையப்பர் கோவில் பின்னாடி தியரி க்ளாஸ் நடக்கும். மீனம்பாக்கம் பக்கத்தில் தான் அவர் வீடு என்பதால் அவர் பார்க்காத ப்ளைட்டே கிடையாது. A300, 747...எந்த ப்ளைட்டானாலும் அவர் வீட்டு சைட் கக்கூஸுக்கு மேல் வழியாகத் தான் போயாகவேண்டும்.

ஒரு பைலட்டுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்ற கோட்பாடு படி அடிஷனல் க்ளாசாக கம்பு சுத்துவதும் சொல்லிக் குடுப்பார். அவர் ஒரு முறை உத்வேகமாய் கம்பு சுற்றி, கன்னுக்குட்டி கணேசாவின் கண்ணில் பட்டு, கணேசனின் அப்பாவும் கம்பை எடுத்துக் கொண்டு கோதாவில் இறங்கியதால், கம்பு சுற்றும் டெரெயினிங் இடையிலேயே நின்று போய் விட்டது. அப்புறம் அதுவே கம்பில்லாமல், மல்யுத்தமும் கராத்தேவும் கால் கால் கிலோ கலந்து, ஒருவிதமான மார்ஷல் ஆர்ட்ஸ் டெரெயினிங்காக சிலபஸ் மாற்றப் பட்டது. எந்தப் பிரச்சினையானாலும் அப்பாவைக் கூட்டி வரக்கூடாது என்ற சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகே ட்யுட்டர் க்ளாசை ஆரம்பித்தார்.

"அண்ணே இதான் மேன்டிலாண்ணே" செந்தில் ரீதியில் நாங்களும் ஏகப்பட்ட டவுட்ஸ் கேட்போம். அவரும் எங்கள் அறிவுப் பசியில் தோன்றும் சந்தேகங்களை அழகாய் தீர்த்துவைப்பார்.

"டேய் ஒன்னுமே இல்லைடா பயப்படாதீங்க... அங்க மச்சிக் கதவ தொறக்கற கைப்பிடி மாதிரி ஒன்னு இருக்கும் அத மேல தூக்கினா ப்ளைட் மேலே போகும் கீழ இறக்கினா கீழ இறங்கும்.. அவ்வளவே தான்"

"அப்போ சைட்ல போகனும்ன்னா...?" என்ற என் அறிஜிவித்தனம் எடுபடவில்லை. அது அட்வான்ஸ்ட் சிலபஸ் அதுக்கு முதலில் நான் ஃபவுண்டேஷன் தாண்ட வேண்டும் என்று ட்யூட்டர் கறாராய் சொல்லிவிட்டார்.

"சரி அப்புறம் எதுக்கு தலைக்கு மேல ஏகப்பட்ட சுவிட்ச் வைச்சிருக்காங்க..?"

"டேய் ஏரோப்ப்ளேன்ல ஏகப்பட்ட பேர் இருப்பாங்க எல்லாருக்கும் தனித் தனியா ஃபேன் இருக்கும். ட்ரைவர் வண்டிய கிளப்புறதுக்கு முன்னாடி தலைக்கு மேல இருக்கிற சுவிட்ச்ச ஒன்னொன்னா போட்டு அவங்க ஃபேன ஆன் செய்வார்...அதுக்கு தான் அத்தன சுவிட்ச்"

"அவங்க காத ஏன் மூடிக்கிறாங்க?"

"அதுக்கு ரெண்டு உபயோகம் இருக்கு ...ஒன்னு வானத்துக்கு போனதுக்கு அப்புறம் டேப்ரெக்காரடர் போடுவாங்க அதுல பாட்டு கேக்கலாம், இன்னொன்னு எதுத்தாப்புல ஏரோப்ப்ளேன் வந்து ஹாரன் அடிச்சா காது செவிடாகிடும்ல அதான்"

"அண்ணே ப்ளைட்டுல ஏண்ணே கார்ல இருக்கிற மாதிரி ஸ்டியரிங் இல்ல..." பையன்களும் விட மாட்டார்கள். 

ப்ளைட் டெரெயினிங்கில் மடக்கக் கூடிய ஸ்டீல் நாற்காலி ஒரு மிக அத்தியாவசியமான உபகரணம். ஸ்டீல் நாற்காலியைத் திருப்பிப் போட்டு உட்கார்ந்து நிறைய ப்ளைட் சிமுலேஷன் க்ளாஸ் எல்லாம் எடுத்திருக்கிறேன். இப்பவும் ஸ்டீல் நாற்காலியைப் பார்த்தால் திருப்பிப் போட்டு ப்ளைட் ஓட்டத் தோன்றும். ரெண்டு மூனு நாற்காலியை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டால் சிமிலேஷன் ட்ரெயின் மோடுக்கு ப்ரோக்ராம் ஆகிவிடும். அதிலே தலைகாணியைப் போட்டு மேலே அமர்ந்தால் அதுவே லாரியாகிவிடும். கல்யாண வீடுகளுக்குப் போனால் அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்போ காலியாகும்ன்னு ஸ்டீல் நாற்காலிகளுக்கு நிறைய தேவுடு காத்திருந்திருக்கிறேன்.


பெரியவனானதும் ப்ளைட் டெரெயினிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கங்கணம் கட்டிவைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் வேறு ஒரு பிரச்சினை தடுத்தது. எனக்கு கிறு கிறுவென உயரத்தில் சுத்தும் ராட்டினங்களைப் பார்த்தாலே வயிற்றைப் புரட்ட ஆரம்பித்துவிடும். சென்னையில் கிஷ்கிந்தா திறந்த புதிதில் சொல்லச் சொல்லக் கேட்காமல் ஏத்திவிட்டு விட்டார்கள். கிளம்பிய மூன்றாவது நிமிடத்தில் வயிற்றைப் புரட்டி, புளிச்சென்று தேமேன்னு உட்கார்ந்திருந்த எதிர்த்த சீட் அம்மமணி மேல் வாந்தி எடுத்துவிட, அப்புறம் செயின் எஃபெக்ட்டில் அவரும் வாந்தி எடுக்க ஆரம்பித்து ஒருவர் பாக்கி இல்லாமல் எடுத்து களேபரமாகிவிட்டது.


ஆனால் ஜேம்ஸ்பாண்டு படம் பார்த்த பிறகு ஜிவ்வென ஆகி ஓக்கே சமாளிக்கலாம் என்று விசாரிக்க ஆரம்பித்தேன். மெட்ராஸ் ப்ளையிங் க்ளப் சுத்த மோசம். ஜேம்ஸ்பாண்டு மாதிரி ரஷ்ய அழகியை பார்படாஸிலிருந்து விமானத்திலேயே அந்தர் பல்டி அடித்து பிக்கப் செய்து கொண்டுவருமளவுக்கு ட்ரெயினிங் குடுக்க அவர்கள் கேட்ட தொகை யந்திரன் படத்தில் அத்தனை ரஜினி ரோபோக்களுக்கும் பேண்டுக்கு மேல் போடும் இரும்பு ஜெட்டி வாங்கின செலவுக்கு ரெண்டு ரூபாய் குறைவு அவ்வளவு தான்.

"டேய் விமானத்தோட தொகைய கழிச்சுட்டு சொல்லுங்கடா...நான் ஏற்கனவே கன்னுக்குட்டி கணேசன் சித்தப்பா பையன் கிட்ட பவுண்டேஷன் டெரெயினிங் எடுத்திருக்கேண்டா" என்று சொல்லியும் தொகையை குறைக்க மறுத்துவிட்டார்கள். சரி என்னோட இடத்தை அப்படியே பிடிச்சு வைச்சுக்கோங்க..யாருக்கும் குடுத்துடாதீங்க...ரெண்டே நிமிஷத்துல சில்லறை மாத்திட்டு வந்துடறேன்னு ஓடி வந்துவிட்டேன்.

இங்கே லண்டனில், பக்கத்தில் ஒரு இடத்தில் க்ளைடர் ப்ளைட் இருக்கிறது. அது அத்தனை தலை சுத்தாது, ஒரு பத்து இருபது இரும்பு ஜெட்டி பட்ஜெட்டுல ஓரளவுக்கு கற்றுக்கொள்ளலாம்  என்று சொல்கிறார்கள். ஒரு தரம் சென்று வரவேண்டும். ரஷ்ய அழகிக்கு எப்போ குடுத்து வைத்திருக்கிறதோ....எல்லாத்துக்கும் ஒரு வேளை வரவேண்டாமா....சொல்லுங்க....ஹூம்

Saturday, November 27, 2010

இவனுங்கள எல்லாம் நிக்க வைச்சு சுடனும்

முருகன் கோயிலில் சைக்கிள் கேப்பில் காரை பார்க் செய்யும் போது போதே தெரிந்துவிட்டது அன்றைக்கு கோவிலில் கூட்டம் எக்கச்சக்கம் என்று. "என்னங்க இவ்வளவு கூட்டம்.?..." என்று தங்கமணிக்கு குரலில் கவலை தொற்றிக்கொண்டது. கதவைத் திறந்துகொண்டு நுழைந்த போது சென்ட்ரல் ஹீட்டிங்கையும் தாண்டி ஜனசமுத்திரத்தின் வெப்பம் முகத்தில் தாக்கியது. இந்தப்பக்கமாய் தானே மெயின் முருகன் சன்னிதி இருந்தது என்று பக்கத்தில் இருப்பவரிடம் சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. தீபாராதனை காட்டும் தருணத்தை ஒரு பக்திமான் வேகமாய் கோயில் மணியடித்து தெரிவிக்க, பக்கத்திலிருந்த இன்னொரு பக்திமான் துள்ளிக் குதித்து என் கை வழியாக மண்டையை நுழைத்து, முருகனை நினைத்துக் கொண்டு, தெரிந்த ஜனத்தின் பின்புறத்தை நோக்கி கண்ணத்தில் அரகரா அரகரா என்று போட்டுக் கொள்ள "என்னடா இன்னிக்கு வெண்பொங்கல், சாம்பார் சாதத்திற்க்கு ஏகப்பட்ட காம்பெடிஷன் இருக்கும் போல இருக்கே" என்று எனக்கும் கவலை தொற்றிக் கொண்டது. சர்கரைப் பொங்கல் கிடைக்காது என்பது நிச்சயமாய் தெரிந்தது.

கோவில் நோட்டிஸ் போர்டில் "கந்த சஷ்டி முதல் நாள்" என்று எழுதிப் போட்டிருந்தார்கள். வீக்கெண்ட், தீபாவளிக்கு அடுத்த நாள் என்று அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. "இதுக்குத் தான் விசேஷம் இல்லாத நாளா பார்த்து கோவிலுக்குப் போகலாம் என்று தலை தலையா அடித்துக் கொண்டேன்...இப்ப பாரு முருகனே க்யூல நின்னாலும் சர்கரைப் பொங்கல் டவுட்டு தான்" என்று தங்கமணி பக்கம் திரும்பினால், அவர் சோத்துக் கவலையே இல்லாமல் கண்ணை மூடி முருகனை வேலோடு பிடுங்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.  சரவணபவன் பக்கத்தில் தான் இருக்கு என்றாலும் அன்றைக்கு கோயில் வெண்பொங்கல், சாம்பார் சாதம் என்று மூடு செட் செய்துவிட்டதால் விட்டுப் போக மனதில்லை. இந்த மாதிரி விசேஷ நாட்களில் இருக்கும் ஒரே ஒரு சின்ன அட்வான்டேஜ் கூட்டத்தை சமாளிக்க கோயிலில் டபுள் ஸ்வீட் போடுவார்கள். முதல் பந்தியில் சில பேருக்கு ராஜயோகமாய் ரெண்டு ஸ்வீட்டும் கிடைக்கும்.

திடீரென்று கோயில் நிர்வாகம் ஸ்பீகரில் கந்தசஷ்டி கவசம் போட, நின்று கொண்டிருந்த கூட்டம், நல்ல சம்மணம் போட்டு உட்கார்ந்து கோரஸாய் சூலமங்கலம் சகோதரிகள் கூட சேர்ந்து கவசம் சொல்ல ஆரம்பித்விட்டது. போச்சு "இதுல நடுவே டிங் டிங்குன்னு மீசிக்லாம் வருமே" என்று எனக்கு ஆயாசமாகிவிட்டது. நான் சின்னப் பையானாக இருந்த போது ஊரில் கந்த சஷ்டி சொல்கிறேன் என்று ஆடிய போங்கு ஆட்டமெல்லாம் இந்த பக்தகோடிகள் ஆடுகிற மாதிரி தெரியவில்லை. ஆஞ்சநேயர் பக்கம் அப்பிடைசராக வடை ஏதாவது குடுக்கிறார்களா என்று பார்க்கலாமென்று இடம் நகர்ந்தேன். அப்போது தான் ஆஞ்சநேயர் சன்னிதியில் அவரைப் பார்த்தேன். ஆளைப் பார்த்தால் என்னை மாதிரி வடையை நோட்டம் விட வந்தவர் மாதிரி தெரியவில்லை. வெள்ளையும் சொள்ளையுமாய் நல்ல பதவிசாக இருந்தார். பத்து விரலில் பன்னிரெண்டு மோதிரம் போட்டிருந்தார். பெரிய பெரிய மோதிரமாய், கட்டைவிரலில் ஒரு பெரிய மோதிரமும் அது விழுந்துவிடாமல் இருக்க ஒரு சின்ன வளையுமும் போட்டிருந்தார். ரெண்டே பேர் தான் இருந்தோம் என்பதால் சினேகமாய் சிரித்துக்கொண்டோம்.

"தம்பிக்கு ஆஞ்சநேயர்னா இஷ்டமா" என்று அவரே பேச்சை ஆரம்பித்தார்.

"ஆமா இஷ்டம், அதுவும் வடைமாலை சாத்தி இருந்ததுன்னா ரொம்பவே இஷ்டம்"

"ஹா ஹா..உங்களை எனக்கு பிடிச்சிருக்கு தம்பி" என்றார். என்ன்டா ஒரு வரி பேசினதுக்கே இப்படி பிடிச்சிருக்குன்னு சொல்கிறாரே என்று கொஞ்சம் கவலையாயிருந்தாலும், எனக்கு ஒரு வரி கூட பேசாமல் பார்த்த மாத்திரத்திலேயே  கத்ரீனா கைஃபை பிடித்துவிட்டது நியாபகத்து வந்து நிம்மதியானேன்.

"அப்புறம் தம்பி என்ன பண்றீங்க" என்று வினவ "வெண்பொங்கலுக்காக வெயிட்டிங்ண்ணா" என்று நான் உண்மையைச் சொல்லாமல், பொதுவாக பேச ஆரம்பித்தோம். சாம்பார் சாதத்தை தற்காலிகமாக மறக்க எனக்கு அந்த அரட்டை  தேவைப்பட்டது. இங்கிலாந்து குளிர், ப்ளைட் ப்யூவல் சர்சார்ஜ் என்று சாத்வீகமாய் போய்கொண்டிருந்தவர் திடீரென்று "இவனுங்களையெல்லாம் நிக்க வைச்சி சுடனும்" என்று சொடக்கு போட்டு டி.ஆர் மாதிரி கொதிக்க ஆரம்பித்தார்.

"எவ்வளவு பெரிய பெயரு கிடைக்கவேண்டியது நம்மளுக்கு. எவ்வ்ளவு பேர் விளையாட வராங்க...எப்படி கட்டியிருக்கனும்...ஒவ்வொரு ஊர்ல கக்குஸே பெட்ரூம் மாதிரி ஜம்ன்னு வைச்சிருக்கான் இவனுங்க பெட்ரூம கக்குஸ் மாதிரி கட்டியிருக்கானுங்க...எத்தன கோடி அடிச்சிருக்கானுங்க..."

"...."

"பெயருல மட்டும் கல்லுமாடி மண்ணுமாடின்னு இருந்தா போதாது தம்பி ...நாம கட்டுற கட்டடம் பெயர சொல்லனும் ...பார்த்தீங்களா இங்க நம்மூர் பெயர எப்படி போட்டோ போட்டு நாறாடிச்சிட்டானுங்கன்னு ..."

"ஆமாங்க சார் என்னாலா ஆபிஸ்ல தலையக் காட்ட முடியலை...பார்க்கிறவன் எல்லாம் உனக்கு எவ்வளவு கமிஷன் தேறிச்சுன்னு நக்கல் அடிக்க ஆரம்பிச்சிட்டானுங்க..."

"சுத்த வேஸ்டு தம்பி நம்மூர்...என்ன பண்ணியிருக்கனும்....மைதானத்துக்கு நடுவுல வரிசையா நிக்க வைச்சு இவனுங்கள் சுட்டிருக்க வேண்டாமா?...செஞ்சாங்களா...இல்லையே...கடைசி நாள் கூப்பிட்டு மைக்குல இல்ல பேசச் சொல்லி மரியாதை...சரி கடைசிலயாவது ஏதோ செஞ்சு கொஞ்ச நஞ்ச மானத்த காப்பாத்தினாங்க...அத விடுங்க இப்போ என்ன நடக்குதுன்னு பாருங்க..."

பயங்கர கோபத்தில் முகம் சிவக்க, அவர் கைகளை வீசிப் பேசிக்கொண்டிந்தார். எனக்கு கோவிலுக்குள் கந்த சஷ்டி சொல்லாமல் இப்படி கத்திப் பேசினால் வெண்பொங்கல் கிடையாது என்று பட்டர் ப்ளாக் லிஸ்ட் செய்துவிடுவாரோ என்று பயம். இரண்டாவது மகள் தேடி வந்து வந்து சட்டையை இழுக்க.."இருங்க சார் பொண்ணுக்கு பசிக்குதாம் சாப்பாடு ரெடியாயிடுச்சான்னு ஒரு பார்வை பார்த்துட்டு வந்துவிடுகிறேன்" என்று வாய்தா வாங்கி சமையல் கூடத்திற்கு நழுவினேன்.

ஒரு ஆறு வயது குழைந்தோயோடு அப்பாவுக்கு என்று சொல்லியும், "மெயின் தீபாராதனை முடிஞ்ச பிறகு தான் சார் சாப்பாடு"ன்னு கையை விரித்துவிட்டார்கள். ஆனால் டபுள் ஸ்வீட் உண்டு என்பதை கன்பேர்ம் செய்து கொண்டேன். வேஸ்டாக வெயிட் செய்வது எனக்கு பிடிக்காது.

"என்ன தம்பி பொண்ணுக்கு ரொம்ப பசிக்குதா" என்று மோதிரக்கை மாமா சமையல் கூடத்திற்கே வந்துவிட்டார். இரண்டு மகள்களும் வெண்பொங்கலைப் பார்த்தாலே காத தூரம் ஓடுவார்கள். இருந்தாலும் அவர்களுக்காக நானே வாங்கி கடமையாற்றுவேன். வேஸ்ட் செய்வதும் எனக்கு அறவே பிடிக்காது.

"ஊழல் பெருகிடிச்சு தம்பீ இங்க பாருங்க நம்மாளு எழுபதினாயிரம் கோடிங்கிறாங்க. நிலையா இல்லாம அஞ்சு வருஷத்துகொரு தரம் தேர்தல்ன்னு இருக்கறதுக்கே இவ்வளவு அடிக்கிறாங்களே இவங்கள நிக்க வைச்சு சுடவேண்டாமா?"

"எத்தனை ப்ரோகர்கள், எத்தனை வியாபார காந்தங்கள்...எவ்வளவு பேருக்கு எவ்வளவு கோடி போயிருக்குன்னு பாருங்க....இந்த ராடியா பாருங்க பங்காளி பிரச்ச்னை மாதிரி இவரு வருவாரு இவர்கிட்ட பேசுங்க அவர தள்ளுங்கன்னு சொல்லுது...அவரு என்னாடான்னா...சரி அவர இவர்கிட்ட பேசச் சொல்லுன்னு.....மாடு விக்க போனா கூட ப்ரோக்கர்ன்னு பதவிசா சொல்லிக்கிறாங்க...இவனுங்க தொழிலதிபர், பத்திரிகையாளர்ன்னு..தூ ஊர அடிச்சு உலைல போடறதுக்கு இதெல்லாம் ஒரு பொழைப்பா"

"பிரதம மந்திரிய பாருங்க...அவரே சொல்லிட்டார் அவரு இதுல ஊழல் பண்ணலன்னுன்னு சொல்றார் எந்த ஊர்லயாவது நடக்குமா? ஒரே வழி எல்லாரையும் க்ரவுண்டுல வரிசையா நிக்க வைச்சி சுடனும் சுட்டுத் தள்ளனும்ங்கிறேன்" மோதிரக் கை மாமா லண்டனுக்கு ஆட்டோ வராது என்ற தைரியத்தில் சவுண்டாய் பேசிக்கொண்டிருந்தார்.

"லஞ்சம்ங்கிறது அக்சப்ட்டட் நார்ம் ஆகிடிச்சு, ஊழல்ங்கிறது இப்போல்லாம் கட்சிகளுக்கு பெருமைக்குரிய விஷயமாகிடிச்சு. அவன் இவ்வளவு அடிச்சா நாம அதுக்கு ஒரு படி மேல போய் நிக்கனும்ன்னு வெறியா இருக்காங்க..மக்கள் சேவை எங்க இருக்குன்னு சொல்லுங்க? இன்னிக்கு ஊழல் செய்யாத கட்சின்னு ஒன்னுமே கிடையாது. யார் குறைவா ஊழல் செஞ்சிருக்காங்கன்னு தான் பார்க்க வேண்டியிருக்கு...அதுவும் கபடி மேட்ச் மாதிரி ஸ்கோர் மாறிகிட்டே தான் இருக்கு. எல்லாம் ஓட்டு போடற ஜனத்த சொல்லனும்...இவனுங்களுக்கு அறிவு எங்க போச்சு.... வோட்டு போட்டவன் வயித்தலடிச்சா அடுத்த தரம் அவனுக்கு வோட்டு போடாத வேற யாருக்காவது போடு. எவ்ளோ பெரிய பவர் அவங்க கையில இருக்கு தெரியுதா அவுங்களுக்கு? அவங்களையும் எல்லாரையும் நிக்க வைச்சு சுடனும்ங்கறேன்" 

மோதிரக்கை மாமா 'கால் ஆஃப் ட்யூட்டி' வீடியோ கேம் மாதிரி எல்லாரையும் நிக்க வைச்சு சுட்டுக்கொண்டிருந்தார். அவர் பேசியதில் நிறைய பாயிண்ட்ஸ் மனதில் குறித்துக்கொண்டேன். அடுத்த தரம் பர்த்டே பார்ட்டியிலோ, கெட் டுகதரிலோ சொந்த சரக்கு மாதிரி எடுத்து விடுவதற்கு உபயோகப் படும். இதற்கு நடுவில் கந்த சஷ்டி முடிந்து கூட்டம் சமையல் கூடம் நோக்கி வர, முதல் பந்தியில் மாமாவுக்கும் எனக்கும் வடை, டபுள் ஸ்வீட்டுடன் வெண்பொங்கல் கிடைத்தது. சர்கரைப் பொங்கலை பார்த்தவுடன் தான் "சாப்பாட்டுல தமிழன் நிக்கிறான்ல" என்று மாமா கொஞ்சம் கூலாகிவிட்டார். சாம்பார் சாதம் திவ்யமாயிருந்தது.

கார் பார்க்கில் விடைபெறும் போது மாமாவுக்கு சொந்த ஊர் மதுரைக்கு பக்கம் என்று தெரிந்தது. "என்ன சார் இடைத் தேர்தல்ல நோக்கியா  என்95 ஃபோன், ரொக்கம், வெள்ளிகுத்துவிளக்குன்னு ஏகத்துக்கு குடுத்தாங்களாமே அப்படியா..? பேப்பரில் பக்கம் பக்கமாய் படித்தேன்" என்று எனக்கு ஆர்வம் தாங்காமல்  கேட்டேன்.

"அந்தக் கொடுமைய ஏன் கேக்கறீங்க தம்பி...அந்த மாசம் பார்த்து என் ரெண்டாவது பெண்ணோட பிரசவத்துக்கு டெல்லிக்குப் போயிட்டோம். ஏகப்பட்டது குடுத்திருக்காங்க இன்னும் என்னல்லாமோ சொல்றாங்க...எனக்கு ஒன்னும் கிடைக்கல....எத்தன தரம் ஓட்டு போட்டிருப்பேன்..அந்த நன்றிக்காவது பக்கத்து வீட்டுல குடுத்துட்டு போயிருக்கலாம்ல...அடுத்த தரம் ஓட்டுக்கு வரட்டும் இவனுங்கள எல்லாம் நிக்க வைச்சு சுடனும்"

Tuesday, November 23, 2010

Guzaarish


மு.கு - இந்தப் பதிவில் படத்தின் கதை ஓரளவுக்கு வெளிப்பட்டு இருக்கிறது. ஆனால் அது படம் பார்க்கும் அனுபவத்திற்கு எந்த பங்கமும் விளைவிக்காது. கதையின் அவுட்லைன் கூட தெரிய வேண்டாம் என்று நினைப்பவர்கள் படிக்க வேண்டாம்.
************

புறக்கடையில் ஹெலிகாப்டரை நிப்பாட்டிவிட்டு, டென்னிஸ் மட்டையை தூக்கிக் கொண்டுவரும் ஹீரோ, எல்லை மீறிய பயங்கரவாததிற்கு உட்படுத்தப்பட்ட் ஸ்கர்ட் அணிந்துவரும் ஹீரோயின், பாத்ரூம் போவதற்க்கு கூட கோரஸாய் சிரித்துக் கொண்டு நெக்லெஸும் காக்ராவும் அணிந்துகொண்டு கூட்டமாய் போகும் பத்து பெண்கள்,லோகட் மாமியார்,ஹீரோவை நினைத்து ஏங்கும் இன்னொரு சூப்பர் ஃபிகர் என்று அடிக்கடி அபத்தமாய் பார்க்கும் ஹிந்தி சினிமா, வழக்கத்துக்கு மாறாக சமீபத்தில் நிறைய ஆச்சர்யங்களை கொடுத்து வருகிறது. இந்தப் படம் அந்த வகையைச் சார்ந்தது.

இணையத்தில் கதையின் முதல் வரி தெரியாமல் கண்ணில் பட்டுவிட இது "தி ப்ரெஸ்டீஜ்" படத்தின் உல்டாவோ என்று சந்தேகத்தோடு தான் தியேட்டரில் நுழைந்தேன். ஆனால் முதல் அரை மணிநேரத்திலேயே அது இல்லை என்று தெரிந்துவிடுகிறது. ஏனோ ஐஷ்வர்யா ராயை இப்போவெல்லாம் பார்த்தாலேயே அபிநய சரஸ்வதி பட்டம் தான் நினைவுக்கு வருகிறது. அத்தனை ஆர்ப்பாட்டமாய் இருக்கிறது அம்மணியின் சில அலட்டல்கள். அம்மணியோடு ராவணன் பேட்டி பார்த்தீகளா?...ஸ்ஸ்ஸ்ப்பா...தாங்கலடா சாமி அதிலிருந்து பிடிக்காமல் போனது கூட காரணமாய் இருக்கலாம்.

'ப்ளாக்' பார்த்த பிறகு சஞய் லீலா பன்சாலி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்த படத்திற்கு பிறகு அது கூடி இருக்கிறது. இந்திய படங்களில் (மெல்லிய) உணர்வுகளை பிரதானப் படுத்தி எடுக்கப்படும் படங்கள் மிகக் குறைவு. அந்த குறைவான படங்களில் இந்தப் படமும் ஒன்று. ஈதுனேசியா/அசிஸ்டெட் சுயிசெய்ட்/மெர்சி கில்லிங் விஷயம் நம் பக்கங்களில் குறைவு. ஸ்பைனல் கார்ட்டில் அடிபட்டு கழுத்துக்கு கீழ் செயல்பாடட்ற்று இருக்கும் ஹ்ரிதிக் ரோஷன் ஈதுனேசியாவிற்க்கு போராடுகிறார். இதற்கு நடுவில் அவருடைய போராட்டங்கள், உணர்வுகள், அவருக்கும் நர்ஸாய் வரும் ஐஷ்வர்யாவிற்க்கும் மலரும் உறவு என்று ஒரே உணர்வுப் பூர்வமாய் இருக்கிறது கதை.

இந்த ஈதுனேசியா/ மெர்ஸி கில்லிங் என்பது முரண்பாடாயிருக்கக் கூடாதே என்று  களத்தை மிக அழகாக கோவாவில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய குடும்பம் என்ற சூழலில் பின்னியிருக்கிறார் சஞ்சய். படத்தில் வரும் வீடு ஆர்ட், காஸ்ட்யூம், கலாச்சாரம் அனைத்தும் இதே விஷயத்தை ரொம்ப சட்டிலாக மனதில் ஏறுவதால் ஈதுனேசியா முரண்பாடாக இல்லை.

படத்தின் ஹீரோ ஹ்ரித்திக் உண்மையிலேயே அசத்தியிருக்கிறார். இவரின் கதாபாத்திரம் ஒரு சிக்கலான கேரக்டர். கொஞ்சம் சொதப்பினாலும் கதையே கேலிக்கூத்தாகிவிடும் அபாயம். ஆனால் இதையெல்லம் அநயாசமாக ஊதித் தள்ளியிருக்கிறார் ஹ்ரிதிக். பரட்டை தலையும் தாடியும் மீசையுமாய் கோலம், உடம்பை அசைக்க முடியாமல் வெறும் முகத்தை மட்டும் வைத்து நடிக்க வேண்டிய கட்டாயம். முக்கால்வாசி படத்தில் கழுத்து வரை போர்வை, இவற்றுக்கு நடுவில் வெறும் முகத்தை மட்டும் வைத்துக் கொண்டும், கோபம், ஆற்றாமை, நக்கல் என்று வித்தியாசமாய் அதகளப்படுத்தியிருக்றார். இவருடைய வாய்ஸ் மாடுலேஷனும், டயலாக் டெலிவரியும் படத்தில் அசத்தலாய் இருக்கின்றன. இவருக்கு இந்த படம் ஒரு முக்கியமான மைல்கல்.

எனக்கு படத்தில் மிக மிக மிக பிடித்தது வசனங்கள். அதுவும் ஹ்ரிதிக் ஈதுனேசியா மனுவிற்காக கோர்ட் செல்லும் போது பாதிரியார் எதிர்பட்டு கடவுள் பெயரை சொல்லி நம்பிக்கை இழக்கக்கூடாது என்று அவர் மனதை மாற்றப் பார்ப்பார். அதற்கு ஹிரித்திக் தானும் கடவுளை நம்புவதாகவும் "Yes I am dying to meet him" என்று பதிலளிக்கும் டயலாக் பயங்கர நச். படம் நெடுக ஹிரிதிகின் வசனங்கள் எல்லாமே குறும்புத்தனத்துடனே அமைக்கப்பட்டிருப்பது அழகு. அதுவும் க்ளைமாக்ஸில் அவர் பேசும் வசனம் மிக மிக அழகாக எழுதப் பட்டிருக்கும். வசனகர்தாவிற்கு ஒரு மிகப் பெரிய ஷொட்டு போடலாம்.

அதற்கடுத்தபடியாக ஆர்ட் டைரக்க்ஷன் கலக்கலாயிருக்கிறது. படம் நெடுக அற்புதமான லைட்டிங்கில் காமிரா ஆர்ட்டை அப்படியே உள்வாங்கி மிக நன்றாக வந்திருக்கிறது. கொஞ்சம் சென்டிமென்டலான முடிவென்றாலும் ஒரு மிக நல்ல படம். கதையைக் கேட்டு பயந்துவிடாதீர்கள். படத்தின் ஸ்க்ரீன்ப்ளேயும் டயலாக்கும் மிக மிக சுவாரசியாமான ஒரு படம் பார்த்த திருப்தியைத் தரும். ஆனால் மனம் கணப்பதை என்னவோ தவிர்க்க முடியாது.
பார்க்க வேண்டிய படம்.
******
அடுத்த பதிவு --> 27 நவம்பர் அல்லது அதற்கு முன்

Monday, November 22, 2010

ஜில்பான்ஸ் 221110

கொத்துபரோட்டா, கதம்பம், பிரியாணி, கூட்டாஞ்சோறு என்று ஏகப்பட்ட பெயர்களில் பரபரப்பாய் கேபிள் சங்கர் உட்பட பல வலையுலக பிரபலங்கள் நிறைய பேர் எழுதி வருகிறார்கள். நான் அந்த பெரிய லீக்கில் இல்லாவிட்டாலும், மனம் போன போக்கில் தோன்றியவற்றை அப்பப்போ தோன்றும் தலைப்புகளில் கிறுக்கி வந்திருக்கிறேன். இனிமேல் இந்த மாதிரியான அலைபாயும் எண்ணங்களுக்கு  சின்னி ஜெயந்த் இருக்கும் திசை நோக்கி கும்பிடு போட்டுவிட்டு  "ஜில்பான்ஸ்" என்று நாமகரணம் சூட்டிருக்கிறேன். என்றும் உங்கள் ஆதரவு அன்பனுக்குத் தேவை.

சமீபத்திய வெட்டிமுறிப்பு
இரண்டு கார்ப்பரேட் வீடியோக்களை எடுத்து முடித்து வருவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. தற்போது ஜோத்ஸ்னா ஸ்ரீகாந்த் அவர்களின் மியூசிக் ஆல்பம் எடிட்டிங் வேலை செய்துகொண்டிருக்கிறேன். மிக அருமையான கர்னாட்டிக் ஃபியுஷன். முதல் முறை கேட்கும் போதே மிகவும் பிடித்துப் போனது. அருமையாக இசையமைத்திருக்கிறார் ஜோத்ஸ்னா. இது முடிந்தவுடன் மீண்டும் சில குறும்படங்கள் என களமிறங்கலாம் என்றிருக்கிறேன். பார்ப்போம்.

சமீபத்திய துக்கம்
சமீபத்தில் இங்கே இங்கிலாந்தில் தீ விபத்தில் ஒரு நெருங்கிய நண்பரின் மறைவு, எங்களையும் மற்ற நண்பர்களையும் குடும்பத்தோடு மனதளவில் பெரிதாக பாதித்தது. மெட்ராஸில் ராம்கோவில்லிருந்து தெரிந்த இந்த இனிய நண்பனின் திடீர் மறைவு, எனதளவில் வாழ்க்கை தத்துவங்களில் பல மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. ஹூம்ம்ம்ம்ம்ம்

சமீபத்திய சந்தோஷம்
சினிமா தியேட்டரில் முறுக்கு விற்கும் வேலை கிடைக்க கூடாதா என்று ஏங்கிய ஒரு காலம் எனக்கு உண்டு. அப்புறம் அதுவே தியேட்டரில் முறுக்கு கடை வைத்தால் என்ன, தியேட்டர் ஓனர் பொண்ணை டாவடித்து கல்யாணம் செய்தால் என்ன என்று வயதுக்கேற்ற முதிர்ச்சியடைந்து, எதுவும் நிறைவேறவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த ஆசைக்கெல்லாம் அடிப்படை காரணம் வேண்டிய போது சினிமா பார்க்கலாம் என்ற நப்பாசை தான். ஆனால் அந்த ஆசை தற்போது இங்கே யூ.கேவில் சினிவேர்ல்டின் புண்யத்தில் நிறைவேறி இருக்கு. மாதம் ஒரு தொகையை கட்டிவிட்டால் "ராசா எத்தனை படம் வேணும்னாலும், எத்தன தடவ வேணா, நினைச்ச போது பார்த்துக்கோ" என்று அன்லிமிட்டட் கார்டு ஸ்கீம் ஒன்று இருக்கிறது. இதில் ஓஹோ மேட்டர் என்னவென்றால் ஒரு மாததிற்கான சந்தா தொகை ஒன்றரை பட டிக்கெட் காசு தான். இந்த தியேட்டரில் தான் தமிழ் படங்களும் ரிலீஸ் ஆகும்.

இன்னாது காந்தி செத்துட்டாரா

என் தானைத் தலைவன் கமலஹாசன் படத்திற்கு கூட டெம்ட் ஆகாமல் காலந்தாழ்த்தி...எந்திரன் ஜுரத்தில் அன்லிமிட்டெட் கார்டு வாங்கி இரண்டாம் நாளே பார்த்துவிட்டு வந்த பிறகு தான் ஜுரம் இறங்கியது. எந்திரன் என்னை வியந்து பார்க்க வைத்திருக்கிறது. ஒரு மண்ணும் இல்லாத கதை, அலட்டல் அவுட்டேட்டட் ஐஷ்வர்யாராய், இத்தனைக்கும் நடுவில் நான் வியந்து பார்ப்பது இரண்டு விஷயங்களைத் தான்.  என்னதான் சூப்பர் படமாயிருந்தாலும் தமிழ் வியாபார மார்க்கெட் இவ்வளவு தான் என்றிருந்த ஒரு மாயையை உடைத்து, நூத்தி அறுபது கோடி போட்டு எடுத்து அதை முதல் இரண்டு மூன்று வாரங்களிலேயே திரும்ப எடுத்து எல்லாரையும் வாயைப் பிளக்க வைத்திருக்கும் சன் பிக்சர்சின் வியாபார நுணுக்கத்தையும், தைரியமும் - உண்மையிலேயே ஒரு பிஸினஸ் கேஸ் ஸ்டடி.

(தலீவர் பாணியில்) படம் பிடித்ததா...என்றால் அதில் இருக்கும் பாடம் பிடித்தது என்று தான் சொல்வேன். மேலே சொன்ன சன் பிக்சர்ஸின் வியாபார நுணுக்கமாவது கேல்குலேடட் கேம்ப்ளிங். ஆனால் அதையெல்லாம் தாண்டி விளக்கமே இல்லாமல் வியக்க வைத்தது ரஜினி என்ற தனிமனிதரின் வெற்றி. ரஜினி மட்டும் இல்லாவிட்டால் எந்திரனின் இந்த வியாபாரம் சாத்தியமே இல்லை. மனிதரின் கரிஷ்மாவிற்க்கு விளக்கமே இல்லை.

இந்த வார கிசுகிசு
"டு" என்று ஆரம்பித்து "கு" என்று முடியும் வலைப்பதிவர் இனிமேல் தனது வலைப்பதிவுல் அடிக்கடி எழுதி அவரது வலைப்பதிவுக்கு தப்பி வருபவர்களை கன்னாபின்னாவென்று அதிர்ச்சிக்குள்ளாக்குவது என்று முடிவெடுத்துள்ளாராம். "அட போய்யா அவருக்கு வேற வேலையே கிடையாது...அடிக்கடி இப்படித்தான் கூவிக்கினு இருப்பாரு...எல்லாம் அடுத்த வாரமே பழைய குருடி கதவ திறடின்னு ஆகிடும்" என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனவாம்.

Sunday, October 31, 2010

லவ் லெட்டர்

சாமஜ வர கமனாவோ, அலைபாயுதேவோ கேட்டுக்கொண்டே கேசரி பஜ்ஜியை அலேக்காய் லவட்டிட்டு, பில்டர் காப்பியை சுர்ர்ர்ன்னு உறிஞ்ஜி விட்டு, "எங்க சௌம்யா வத்தக்குழம்பு வைச்சா அடுத்த தெரு வரைக்கும் மணக்கும்" டயலாக்கையெல்லாம் கேட்டுவிட்டு, சவுகரியமாய் ஊருக்குப் போய் கலந்து கேட்டு லெட்டர் போடறோம்ன்னு பழைய சினிமாவில் வருவது மாதிரியோ, இல்லை தமிழ் மேட்ரிமோனி டாட் காம்மில் போட்டோஷாப்பில் டச் செய்த போட்டோவை அப்லோடிவிட்டு "சோ அன்ட் சோ கம்பெனியில் சோ அன்ட் சோ சேலரி ட்ராயிங் மாநிறமான பையனுக்கு...வெள்ளிக்கட்டியாய் சிவந்த நிறமுடைய, பெரியவர்களை மதிக்கும், கடவுள் நம்பிக்கையுள்ள, எந்த தோஷமும் இல்லாத, சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப் பார்க்கும் பெண் வேண்டும்"ன்னு தகப்பனார் ஜாதாக பரிவர்தனை செய்ய ஆரம்பிப்பதற்கு வெகு முன்னாலேயே எதைத் தின்றால் பித்தம் தெளியும்ன்ன்னு ரெண்டாவது அட்டெம்ப்ட்டில் காதலாகி கசிந்துருகும் என்னை மாதிரி அபாக்கியவான்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் - "லவ் லெட்டர்".

அதிலும் முதல் லவ் லெட்டர் இருக்கிறதே மிகப் பெரிய இம்சை. இப்போது மாதிரி கூகிளில் "கத்ரீனா" என்று பாதி டைப் அடிக்கும் போதே "கைஃப்"ன்னு முடித்துக் குடுத்து கூடுதலாய்  "...ஹாட் போட்டோஸ்ன்னு" மிச்சத்தை ப்ராம்ப்ட் செய்யும் உதவி எல்லாம் கிடையாது. , " சார்ட்டர்டே டிஸ்கோவுக்குப் போகலமா"ன்னு திரையுலக பாடலாசிரியர்கள் கூப்பிடாத ஒரு காலத்தில் லவ்வி எக்கச்சக்கமாய் மாட்டிக்கொண்டேன். எனக்குத் தெரிந்த லெட்டர்கள் எல்லாம் நேருமாமா தன் மகள் இந்திராகாந்தி அம்மையாருக்கு எழுதிய கடிதங்கள் தான். அதிலும் அவர் பாட்டுக்கு அந்த நாட்ட பார்த்தியா இந்த நாட்ட பார்த்தியான்னு பக்கம் பக்கமாய் மகளை கொஞ்சி இருப்பார். இப்படியெல்லாம் லெட்டர் போட்டால் "அப்படியே மெட்ராசிலயே ஒழிஞ்சு போன்னு" திரும்ப பதிலுக்கு டெலிகிராமே வந்துவிடும் என்று தீர்மானமாய் தெரிந்தால் எதுக்கு வம்பு என்று ரொம்ப நாள் லெட்டரே போட்டவில்லை.

மெட்ராஸ் பட்டிணம் ஒரு கெட்டுக் குட்டிசுவரான ஊர். லவ் பண்ணுபவரக்ள் அம்மாவாசை பௌரணமியானால் காதலிக்கு குரங்கு பொம்மையோ கழுதை பொம்மையோ வாங்கி கழுத்தில் பட்டுக் குஞ்சலம் ஒன்றை கட்டி "ஐ லவ் யூ" என்று எழுதி பிங்க் கலரில் உதடு படம் ஒன்றை போடவேண்டும் என்று கோட்பாடு வைத்திருக்கிறார்கள். தங்கமணி வீட்டுக்கு இந்த மாதிரி எல்லாம் அனுப்பினால் "இந்தம்மாக்கு இதெல்லாம் வராதே"ன்னு போஸ்ட்மேனே திறந்து பார்த்து அங்கே டோர் டெலிவரி செய்வதற்கு பதிலாக நேர எங்க வீட்டில் போய் வாழ மட்டையை கொழுதினாற் போல் நல்ல புகைய விட்டு, மாமா காதில் மேட்டரை டெலிவரி செய்து,  "நல்லாத் தானேடா உன்னை வளர்த்தேன்"ன்னு மாமா மெட்ராஸுக்கு தேடி வந்துவிடுவார் என்பதால் இந்த ரிஸ்க் எடுக்க தெகிரியம் வரவே இல்லை.

கரும்பு படம் போட்ட ஒரு பொங்கல் வாழ்த்து அனுப்பும் போதே அன்புடன் போட்டு கையெழுத்து போட்டால் தப்பாகிவிடுமோ என்று எனக்கு உதறலெடுக்கும். ஏனென்றால் தங்கமணி வீட்டில் ஏகப்பட்ட காம்ப்ளிகேஷன். இந்தப் பக்க வீடு, அந்தப் பக்க வீடு எதிர்த்த வீடுன்னு ஒரே சொந்தக்காரர்கள் கூட்டுக் குடித்தனம். "மெட்ராஸுலேர்ந்து லெட்டர் வந்திருக்கு ஒரு வேளை ஐ.நா சபைலேர்ந்து கூபிட்டு அனுப்பியிருப்பாளோ என்ன அவசரமோன்னு பிரிச்சு படிச்சேன்....நேக்கில்லாத உரிமையா...கையெழுத்து இன்னும் பிடிச்சு வரனும்...கூட ரெண்டு வரி எழுதப்பிடாதோன்னு"ன்னு அரட்டையரங்கமாகிவிடும் அபாயமாய் எனக்குப் பட்டது. (எனக்குத் தான் அப்படி பட்டது அவர்கள் அப்படியில்லை அப்படியில்லை - தெளிவாக சொல்லிக்கிறேன்.)

எப்போதாவது ஒரு தரம் ஊருக்குப் போகும் போது பார்க்கப் போனால் "சௌக்யமா ஊரில் இருந்து எப்ப வந்த"ன்னு ஒவ்வொருத்தராய் கேட்டு நான் பதில் சொல்லி முடியும் போது - வீட்டுக்கு கிளம்பும் நேரமாகிவிடும். வயசுப் பையன் வந்திருக்கானே...(அவர்களுக்குள்) நிச்சயமான பெண் தானே...ரெண்டு பேரும் அப்படியே போய் ஜாலியாய் ஒரு சினிமா பார்த்துட்டு வாங்களேன்னு சொல்வதற்க்கு ஒருத்தருக்கும் வாய் வராது. இதில் தங்கமணியிடம் நான் என்னத்தை பேச.

இதில் தங்கமணியின் பாசக்கார கூட்டத்தில் ஒன்று "போன வாரம் தான் அவளுக்கு பிறந்தநாள்.. உங்களுக்கு தெரியுமோ இல்லையோ..."ன்னு எடுத்துக்குடுக்கும். "ஓ காந்தி இங்கேர்ந்து தான் தண்டி யாத்திரையை ஆரம்பித்தாரா"ன்னு நான் வழிந்துகொண்டே வியக்கும் போது..."நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"ன்னு கண்ணாம்பா டயலாக்கை தங்கமணி கண்ணாலேயே டெலிவரி செய்வார்.

இதற்கு நடுவில் ஒரு தரம் ஊருக்கு போவதற்கு ஒரு தரம் கேப் விழுந்துவிட்டது.இதான் சமயம் என்று தங்கமணியின் உறவு வட்டத்தில் ஒருவர் "பிள்ளையாண்டன் வேறு சாஃப்ட்வேரில் இருக்கிறான். அந்த கம்பெனியிலெல்லாம் பசங்களும் பொண்ணுங்களும் திங்கள் டு வியாழன் டெய்லி டேட்டிங்கும் மத்த நாளெல்லாம் க்ளப்பிங்குமாய் ஜெகஜோதியாய் இருப்பார்கள் " என்று கிடைத்த கேப்பில் காட்சிலாவை வெட்டி விட்டார். அடுத்த அப்ரைசலில் தங்கமணி அன்பாய் ஏகப்பட்ட ஃபீட்பேக் குடுக்க..."என்னை மாதிரி மூக்கும் முழியுமாய் இருக்கும் பையன்களுக்கு சமுதாயத்தில் இந்த மாதிரி பிரச்சைனையெல்லாம் இருக்கு ஆனால் நான் நல்லவன்" என்ற வாதமெல்லாம் எடுபடவில்லை.

"கம்யூனிகேஷன் இஸ் த கீ" என்று தங்கமணி குடுத்த செமெத்தியான பீட்பேக்கில் லெட்டர் போடவேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டு எழுத ஆரம்பித்து...ஆரம்பித்து...ஆரம்பித்தது பித்து. "போன தடவை வந்திருந்த போது உங்க வீட்டில் குடுத்த பால்கோவா நன்றாக இருந்தது...நீயே செஞ்சதா" போன்ற அன்பான விசாரிப்புகள் லவ் லெட்டர் இலக்கணத்தில் வராததால் கொஞ்சம் தெவங்கிவிட்டேன். அப்புறம் உங்க வீட்டு கன்னுக்குட்டி எப்படி இருக்கு? தெரு நாய்க்கு காய்ச்சல் தேவலையா என்று ரீதியில் ஏதோ எழுதி வீட்டில் வேறு யாரிடமும் காட்டவேண்டாம் என்ற அபத்த டிஸ்க்ளெய்மரெல்லாம் போட்டு முடித்தேன். அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் தேறி "கண்மணி அன்போட நான் நான் நான்" என்று தலைவர் படத்து மேற்கோளெல்லாம் போட்டு ரஜினி முத்து பட டயலாக்கையெல்லம் போட்டு முடித்து ஏதேதோ சமாளித்தேன் என்பது சப்ஜெக்ட்டுக்கு தேவையில்லாதது.

இப்பவும் அந்த முதல் லெட்டரை தங்கமணி பத்திரமாய் எடுத்துவைத்திருக்கிறார். "என்ன இருந்தாலும் தலைவன் தலைவிக்கு எழுதிய காதல் திணையல்லவா" என்ற எனது நினப்பில் மண்ணைப் போட்டு என் மகள் பெரியவளானதும் காட்ட வேண்டுமாம். லவ் லெட்டர் எப்படியெல்லாம் எழுதக் கூடாதென்று. அது சரி......இந்த உலகம் இருக்கே உலகம்...