Tuesday, March 13, 2012

விருந்தோம்பல்

மை டியர் டார்லிங் என்று மல்லிகா அன்பாய் கூப்பிடும் சனிக்கிழமை அதிகாலை ஒன்பது மணி (மிட்நைட்) தூக்கத்தில் கண்ணை மூடி தேமேன்னு படுத்துக் கிடவாமல், “ஐயையோ...இன்னிக்கு வீட்டைக் க்ளீன் பண்ணனுமே” என்று ஜெர்க் ஆகி எழுந்தால் அன்றைக்கு வீட்டிற்கு யாரோ விருந்துக்கு வருகிறார்கள் என்று அர்த்தம். “வைச்சது வைச்ச இடத்தில் கலையாம நீட்டா இருக்கிறதுக்கு இதென்ன மியூசியமா? குடியிருக்கிற வீடு அப்பிடி இப்பிடி தான் இருக்கும்” என்ற பார்த்திபன் கனவு டயலாகை மேற்கோள் காட்டி ஹால் கதவை திறந்தால் வீடு மியூசியத்துக்கு வெகுதூரத்தில் சாக்கிசான் சண்டைக் காட்சி நடந்த லொக்கேஷன் மாதிரி கந்த கோளமாய் இருக்கும்.

“அலாவுதீனும் அற்புத விளக்கும்” கதையில் வரும் “ஆலம்பனா” பூதத்தை வீட்டு வைலைக்கு வைக்கலாமா என்று நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போது, தங்கமணி ஒரு டீ ஒன்றை போட்டு குடுத்து  விட்டு “தம்பி டீயை குடிச்சிட்டு தீயா வேலை செய்யணும். கம்பேனி உன்கிட்டேர்ந்து நிறைய எதிர்பார்க்குது”ன்னு ‘ஆலம்பனா’ அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரை என் கையில் குடுத்துவிடுவார். முதல்வன் அர்ஜூன் மாதிரி வீட்டோடு எல்லோருக்கும் அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் ரெடியாக வைத்திருப்பார். கிச்சனும் கிச்சன் சார்ந்த இடங்களும் தங்கமணி அண்ட் கோவிற்கும், டாய்லெட்டும் டாய்லெட் சார்ந்த இடங்களும் எனக்கும் என்று நியாய பாகப்பிரிவினை எல்லாம் முதலிலேயே அரங்கேறிவிடும்.

சினிமாவில்/விளம்பரங்களில் இளம் கதாநாயகிகள் அழகாக குளித்துவிட்டு தலைமுடியை முன்னால் லேசாக கலைத்து விட்டுக் கொண்டு இன்னும் கொஞ்சம் அழகாய் காட்டன் புடவையை இடுப்பில் சொருகிக் கொண்டு வீட்டை சுத்தம் செய்வார்கள். வீடும் சமத்தாய் பாஸ்ட் ஃபார்வேட் மோடில் பதினாறு வினாடிகளில் பள பளவென்று ஆகிவிடும். நாயகியும் சுடச் சுட காப்பி போட்டு குடித்துவிட்டு ஜன்னல் கர்டன்களை விலக்கி விடுவார். ஆனால் இந்த நிஜம் இருக்கிறதே நிஜம், ஸ்ப்ப்பா நொங்கெடுத்து நோக வைத்துவிடும். இருக்க வேண்டியது இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது இல்லாதது இருக்கவே இருக்காது.கோப்பில் எடுத்து வைக்காத கடுதாசிகள் 5E பஸ் மாதிரி லெட்டர் ஹோல்டரில் புட்ஃபோர்டில் தொங்கிக் கொண்டிருக்கும்.

“இதான் அன்னன்னிக்கு வந்த லெட்டர அப்பவே எடுத்து வைச்சிருந்தா இப்போ இப்படி முழிக்க வேண்டாம். சொன்னதக் கேட்டா தானே எல்லாம் நான் பார்த்துக்குறேன் நான் பார்த்துக்கிறேன்னு. யாரு வேண்டாம்னா..நல்லா நிறுத்தி நிதானமா பாருங்க”  - தங்கமணி தீவிரமான ராஜ்கிரண் ரசிகர். சமயம் பார்த்து ஆர்பாட்டம் இல்லாமல் அடிக்கிற அடியில் ‘களுக்’ன்னு எலும்பு முறியும் சத்தம் மட்டும் தான் வரும் மிச்சமெல்லாம் இண்டர்னல் ப்ளீடிங் தான்.

“அப்பா நீங்க ரொம்ப நாளா தேடின டார்ச் லைட் இங்க வாஷிங் மெஷின் பின்னாடி விழுந்து இருக்கு” என்று மகள் வேறு சமய சந்தர்ப்பம்  தெரியாமல் எடுத்துக் குடுப்பார். “தெரியும்டா செல்லம் ஆத்திரம் அவசரம்னா எடுக்கறதுக்கு வசதியா இருக்குமேன்னு நான் தான் வாஷிங் மிஷின் பின்னாடி பத்திரமா வைச்சிருக்கேன்”- ஒரு மனுஷன் ஒரே நேரத்துல எவ்வளவு பேரைத் தான் சமாளிப்பான்?

“நீ வாங்கி வைச்சிருக்கிற அந்த ப்ளூ பிரஷ் அவ்வளவு போறலை. என்ன பிரஷ் வாங்கியிருக்க..அத வைச்சு எவ்வளவு தேய்ச்சாலும் பாத்ரூம க்ளீனே ஆக மாட்டேங்குது. உன்னை கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான்னு நினைக்கிறேன்”

“என்னது ப்ளூவா...ஓ மை காட் அது பெடிக்க்யூர் பிரஷ்...அது காலுக்கு வாங்கி வைச்சது..அத வைச்சா பாத்ரூம க்ளின் செஞ்சீங்க”ன்னு தங்கமணி பதறிக் கொண்டு வரும் போது “அதானே பார்த்தேன் இதப் பார்த்தா பாத்ரூம் பிரஷ் மாதிரி இல்லையேன்னு எனக்கு அப்பவே டவுட்டு. நல்ல வேளை யூஸ் பண்றதுக்கு முன்னாடியே உன் கிட்ட கேட்டேன்..நான் காட் ப்ராமிஸா இத வைச்சு க்ளீன் செய்யலமா” உபயோகித்த சுவடே தெரியாமல் ப்ரஷ் இருந்த இடத்திற்கு போய்விடும்.

எங்கள் வீட்டிற்கு விருந்துக்கு வருவதென்றால் சில பல கண்டிஷன்கள் உண்டு. விருந்தினர் அதை உணராமல் செயல்படுத்த கம்பெனி எல்லாவிதமான முயற்சிகளும் எடுக்கும் . வருவதற்கு ஒரு வாரம் முன்னமே எங்களுக்கு தகவல் சொல்லி விட வேண்டும். “கண்டிப்பா நம்ம வீட்டுக்கு நீங்க வரணும். ஆனா முந்தின வாரமே சொல்லிட்டு வாங்க, ஏன்னா முக்கால்வாசி வாரக் கடைசி நாங்க வீட்டுலயே இருக்க மாட்டோம்.எங்கேயாவது போய் விடுவோம். நீங்க வந்து அப்புறம் நாங்க இல்லாம கதவ தட்டிக்கிட்டு நின்னீங்கன்னா எங்களுக்கு ரொம்ப வருத்தமா இருக்கும் பாருங்க அதான்”

நடுவில் ஒரு வாரக் கடைசி இருப்பது நலம் பயக்கும். “ஓ..நாளைக்கா...அடடா ரொம்ப சாரிங்க அனுஷ்கா வூட்டுல அவல் சாப்பிட வரச் சொல்லி ஒரே அடம், நீங்க அதுகடுத்த வாரம் கண்டிப்பா வரனும் ப்ளீஸ், இல்லைன்னா நாங்க வேணா அனுஷ்கா வூட்டு அப்பாயிண்மெண்ட கேன்சல் பண்ணிடறோம்”ன்னு ஒரு பிட்ட போட்டால் “சேச்சே...அதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை நாங்க அடுத்த வாரம் வரோம், நீங்க அனுஷ்கா வூட்டுல அவல் சாப்பிட்டுவிட்ட வாங்க”ன்னு நீங்களே கண்டிஷனுக்கு டிக் போட்டு விடுவீர்கள்.

சம்பவ நாள் அன்றைக்கு காலையில் பத்து மணி வாக்கில் சுமார் எத்தனை மணிக்கு வந்து சேர்வீர்கள் என்று ஸ்கெட்சு போடுவோம். “சும்மா குட்மார்னிங் சொல்ல தான் ஃபோன் பண்ணினேன்..குட்டீஸ்லாம் எழுந்தாச்சா..இன்னும் இல்லையா, நோ ப்ராபளம் சின்னப் ‘பூ’ங்க அது ... எழுப்பிடாதீங்க. மெதுவா எந்திரிக்கட்டும் நம்ம வீடு தானே எப்போ வேணா வரலாம் ஒன்னும் பிரச்சனையே இல்லை”

“அதிதி தேவோ பவ” என்ற கோட்பாடின் படி உங்களை முதலமைச்சர் ரேஞ்சுக்கு மரியாதையாய் நடத்துவோம். “நீங்க அங்க உங்க வீட்டுலேர்ந்து கிளம்பும் போது கால் பண்ணுங்க ப்ளீஸ். ஏன்னா இங்க வீட்டுக்கு முன்னாடி பார்க்கிங் பிஸியாய் இருக்கும் நாங்க இடத்த ரிசர்வ் செஞ்சு வைச்சிடுவோம் அதுக்குத் தான் பாருங்க. அவங்க கிளம்பியாச்சு, கவலபடாத இன்னும் 30 நிமிஷம் இருக்கு அதுக்குள்ள  எல்லாத்தையும் க்ளியர் பண்ணிடறேன்”

நீங்கள் வந்து கொண்டிருக்கும் போது போதும் இன்னொரு ஃபாலோஅப். “எங்க இருக்கீங்க..இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவீங்களா..இல்ல இங்க ஏ30ல ஒரே ட்ராபிக்குன்னு பக்கத்து வீட்டு வெள்ளக்கார மாமா சொன்னார் அதான் உங்கள உஷார் படுத்தலாமேன்னு. என்னது ட்ராபிக்கே இல்லையா ஓ அப்ப அவர் சொன்னது போன வாரமா இருக்கும்”

“ஒரு துணியை ஒருவர் மடித்து வைக்க இரண்டு நிமிடம்,அப்போ இருபது துணியை இரண்டு பேர் மடித்து வைக்க இன்ன நேரம் ஆகும், கண்டின்ஜென்சிக்கு அதை விட ஒன்றரை மடங்கு நேரம், சோ என்னோட துணிமணியெல்லாம் நானே மடிச்சு வைச்சிக்கிறேன், யாரும் தொட வேண்டாம், நாளை காலை பத்துலேர்ந்து பத்தேகாலுக்குள்ள எல்லாத்தையும் அயர்ன் செய்து மடிச்சு வைச்சிடுவேன்” - ஆபிஸில் கற்றுவந்த ப்ராஜெக்ட் ப்ளானிங்க கோட்பாடுகள் எல்லாம் ஏனோ எனக்கு மட்டும் வீட்டில் வொர்க் அவுட்டே ஆகாது. வீட்டில் எல்லார் துணிமணிகளும் ஒழுங்காய் மடித்து வைக்கப்பட்டிருக்க, என்னுடைய சட்டைகளுக்கு கண்டின்ஜென்சி என்னவோ போர்வையை விரித்து எல்லா துணியையும் அதில் போட்டு இருமுடி மாதிரி கட்டி பீரோவில் அடைத்து பூட்டி வைப்பதாய் தான் இருக்கும்.

"Expect the unexpected" என்று எந்த நாதாரி திருவாய் மலர்ந்தாரோ தெரியாது ஆனால் கரெக்ட்டாய் நடக்கும். தங்கமணி வாங்கி வர சொன்ன சமையல் லிஸ்டில் ஏதாவது முக்கியமாய் விட்டுப் போயிருக்கும்.  “என்னம்மா எந்த காலத்துல இருக்க, முட்டை இல்லாம ஆம்லெட்டே செய்யறாங்க,  புளி இல்லாம புளியோதரை செய்ய முடியாதா? ” போன்ற அதிகப்பிரச்ங்கித்தனத்துக்கெல்லாம் அது வேளையில்லை. “ஓகோ...வருவாங்க.. நீங்க தான் சர்கரைக் கட்டியாய் பேசிப் பேசியே வாயால பாயாசம் விடுவீங்களே, வுடுங்க” என்று ஆபத்தில் முடிந்துவிடும்.

என்னடா சோத்த போட்டுட்டு முகம் அனிச்ச மலர் மாதிரி பூத்திருக்கா வாடியிருக்கான்னு விருந்தோம்பல் விதிகளை கடை பிடிக்காம இப்படி கண்ட மேனிக்கு கண்டிஷன் போடுகிறார்களே என்று நினையாதீர்கள். டென்ஷன் எல்லாம் நீங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் தாங்க. அதுக்கப்புறம் கலகல வென்று ஆகிவிடும். நாம் பேசிக் கொண்டிருப்போம், கேம்ஸ் விளையாடுவோம்,சினிமா பார்ப்போம், அப்புறம் முக்கியமாய் தங்கமணி செய்து வைத்திருக்கும் ருசியான சாப்பாடு சாப்பிடுவோம். நீங்களும் “எப்படிங்க வீட்ட இவ்வளவு சுத்தமா அழகா வைச்சிருக்கீங்க”ன்னு கேட்பீங்க, அப்புறம்  “இந்த வெங்காய சாம்பார் ரொம்ப சூப்பர்ங்க கொஞ்சம் ரெசிபி சொல்லுங்களேன்”ன்னு கேட்பீங்க. “அட அது ரொம்ப ஈசிங்க சும்மா அசால்டா செய்யலாம்”ன்னு வாங்கி வந்த மளிகை சாமான் லிஸ்டை வைத்தே நான் ஒரு ரெசிப்பி சொல்லுவேன், அப்போ தங்கமணி கண்ணால் லேசர் விடு தூது ஒன்னு விடுவாங்க, விடுங்க பாஸூ வீரனோட வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம்  பாஸு :)

Sunday, March 04, 2012

பாலிவுட் டான்ஸ்


பாலிவுட் டான்ஸ் என்றால் “டான்ஸ் ஆடறதுக்கு எதுக்கு பால விடணும்” என்று கேட்கக் கூடிய பத்மா சுப்ரமண்யம் சொசைட்டியில் வளர்ந்த பச்சை மண்ணு நான். எங்கள் டேன்ஸ் சொசைட்டியில் டேன்ஸ் இரண்டே வகைப்படும். ஒன்று தலையில் ராக்குடியும் நெத்திச்சூடியும் அணிந்து  நட்டுவாங்கம் ஜால்ரா சத்தோடு ஆடக் கூடிய பரதநாட்டியம், இன்னொன்று பத்து டார்ச் லைட்டை வெவ்வேறு ஆங்கிளில் வைத்து போட்டு போட்டு அணைத்து ஆடும் “டிஸ்கோ”.

சட்டை கொஞ்சம் பளபளவென்று சில்வர் லைனிங்கோடு இருந்தால் அது டிஸ்கோ சட்டை. இப்பேற்பட்ட சட்டை கிடைப்பதற்கு தவமாய் தவம் இருக்க வேண்டும். ஏகப்பட்ட இக்குகளுக்குப் பிறகு “பரவாயில்லை சார் அம்பி ராத்திரி இருட்டுல ட்யூஷன்லாம் போயிட்டு வரும் போது  லாரிகாரன் லைட்டு வெளிச்சத்துல சட்டை பளபளன்னு தெரியும், வாங்கிக்குடுங்கோ ஒரு சேஃப்டியா இருக்கும்”ன்னு கடைக்காரர் சட்டையின் பாதுகாப்பு பலன்களை விவரித்து ரெக்கமெண்டேஷன் செய்யும் போது அத்திப் பூத்தாற்ப்போல பள பள டிஸ்கோ சட்டை கிடைக்கும். அதை போட்டுக் கொள்ளும் நன்னாளில் ரொம்ப காத்திருந்து, லேசாய் இருட்டிக் கொண்டு வரும் ஆறு ஏழு மணிக்கு படக்கென்று எல்லா லைட்டை அணைத்துவிட்டு கண்ணாடியை பார்த்துக் கொண்டே டார்ச் லைட்டை மினுக்கி “ஐ ஆம் அ டிஸ்கோ டான்சர்” என்று  ஒரு ஆட்டம் போட்டால் “விளக்கேத்துற நேரத்துல லைட்ட அணைக்கிறது பாரு பிரம்மஹத்தி” என்று நட்டுவாங்கம் ஆட்டமேட்டிக்காய் வரும்.

பக்கத்து வீட்டில் குண்டு டீச்சர் பரதநாடியம் சொல்லிக்குடுப்பதை பார்த்த எஃபெக்டோ இல்லை டிஸ்கோ டான்சில் தான் ஜோடியோடு ஆடமுடியும் என்ற கூட்டுறவு தத்துவத்தினாலோ பரதநாட்டியத்தை விட டிஸ்கோ தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். மிருதங்கம் வாசிக்கிற எல்லா பாட்டும் பரதநாட்டியப் பாட்டு, மற்றவை எல்லாம் டிஸ்கோ பாட்டு என்ற எளிமையான கோட்பாடு எங்கள் டேன்ஸ் சொசைட்டியில். ஹிந்தி பாடலாயிருந்தால் ஷெனாய் தான் க்ரைட்டீரியா. ஷெனாய் வாசிக்காத பாடல்கள் டிஸ்கோ ரகத்தில் அடங்கும். குர்பானி படத்தில் வரும் லைலா ஓ லைலா பாட்டெல்லாம் top of the range பாடல். தெரு முக்கு டீ கடையில் இந்தப் பாட்டு போட்டால் நாபிக் கமலத்திலேர்ந்து ஒரு டேன்ஸ் வந்து குலுக் குலுக் குலுக்ன்னு மீசிக் குடுத்துக் கொண்டு வீட்டில் லைட்டை போட்டு போட்டு அணைத்து, பீஸ் போய் தெருவில் நிறைய வீட்டில் அன்றைக்கு வாரந்திர மின்சார விடுமுறை நாளாகிவிடும். இந்த வயதில் இங்கிலீஷ் பாட்டு ரொம்ப கேட்டதில்லை. ஏதாவது குண்ஸா இங்கிலீஸ் பாட்டு இருக்காண்ணேன்னு ஆடியோ கடையில் கேட்டால் “ஏண்டா ஏ படம் பார்க்கிற வயசாடா இது....வீட்டுல சொல்லட்டுமாடா”என்று பாட்டு இல்லை என்பதை விவரமாய் சமாளிப்பார்கள். இருந்தாலும் சின்ன வயதில் தெருவில் ஒருமுறை ஒரு பெண்ணுடன் ஜோடி சேர்ந்து ஆடி டிஸ்கோ டான்ஸராய் அரேங்கேற்றம் ஆகியிருக்கிறது.ஆனால் அதுவே முதலும் கடைசியுமாய் ஆகிவிட்டது என்பது தான் எனது தீராத சோகம்.

இந்த டேன்ஸ் இருக்கே டேன்ஸ், அது இதயம் பட முரளியோட காதல் மாதிரி. மனசுக்குள் தலைவிரித்து தாண்டவமாடும். ஆனால் ஆடும் போது இந்த ஸ்டெப்பு இருக்கே ஸ்டெப்பு அது தான் பல்லுக்கிடையில் மாட்டிக் கொண்ட பக்கோடா தூள் மாதிரி கொஞ்சம் வராது. அதையும் தாண்டி வரும் ஒன்னே முக்கால் ஸ்டெப்பும் மைக்கேல் ஜாக்சன் ரேஞ்சுக்கு ஆடுவதாய் நமக்கு மமதையைக் குடுக்கும்.இந்த மாயையில் சிக்கி சில பேர் தெருவில் ஆடி, அதைப் பார்த்து தெருவே ஆடி,அமுக்கிப் போட்டு சாவிக் கொத்தை கையில் கொடுத்து காக்காவலிப்பு டிரீட்மெண்ட் நடந்த கதையும் உண்டு என்பதால் எனது முதல் டிஸ்கோ அரங்கேற்றத்துக்குப் பிறகு நான் வெறும் பாத்ரூம் டான்சராகவே செட்டில் ஆகிவிட்டேன். இருந்தாலும் “என்னடா டேன்ஸ் ஆடற...  டிஸ்கோன்னா எப்படி ஆடனும்... நல்ல கைய கால ஒடிடா இடுப்ப வெட்டுடா”ன்னு சண்டியர் மாதிரி சவுண்டு விட்டதிற்கு குறைச்சலே இல்லை. விட்ட சவுண்டில் என்னை காலேஜில் மைக்கேல் ஜாக்சன் மைத்துனர் பையன் என்று நினைத்து, பஸ் டே அன்றைக்கு எங்க ஊரில் முக்கியமான ஒரு இடத்தில் பஸ்ஸை நிப்பாட்டி என்னை ஆட வைத்து, “உங்க பையன் காலேஜில ஓகோன்னு படிக்கிறான்”ன்னு வீட்டுக்கு ரிப்போர்ட் போய் - விடுங்க  “மயிலப் பிடிச்சி காலை உடைச்சி ஆடச் சொல்லுகிற உலகம்”ன்னு சின்னத்தம்பில பிரபு சும்மாவா ஃபீலிங்க்ஸாய் பாடி இருக்கிறார்.

ஆனாலும் இந்த டேன்ஸ் தாகம் எனக்கு ஒயவே இல்லை. யாருமே இல்லா மலை முகடுகளைக்குப் பார்க்கும் போதெல்லாம் கண்ணை உருட்டிக் கொண்டு தலயின் “நாத விநோதங்கள்” சலங்கை ஒலி பாட்டுக்கு ஆடியிருக்கலாமே, குண்டலமும், சிகப்பு கலர் ட்ரெஸும், ஜெயப்பிரதாவும் இல்லையே என்று வருத்தம் மேலோங்கும். சில சமயம் வீட்டிற்கு வரும் கல்யாணப் பத்திரிகையை ஓப்பன் பண்ணும் போதெல்லாம் சலங்கை ஒலி டேன்ஸ் இன்விடேஷன் சீன் இளையராஜா பி.ஜி.எம் கேட்கும். இருக்கட்டும்டா சுனா பானா ஒரு நாள் தெறமையக் காட்டுவோம்டான்னு நினைத்துக் கொள்வேன். சமீபத்தில் இங்கே யூ.கேவில் மேடையில் டேன்ஸ் ஆடும் வாய்ப்பு ஒன்று வாசல் வழியாக போக, கப்புன்னு பிடித்துக் கொண்டு மேடையேறி தெறமையைக் காட்டியதில் “அடேங்கப்பா அடி குடுத்த கைப்புள்ளைக்கே இவ்வளவு காயம்ன்னா..” என்று ஊர் ஏற்றிவிட்டுவிட்டது. போன வாரம் பனி பெய்த பொழுதில் ஒதுங்கிய இடத்தில் “டேன்ஸ் அக்காடமி” என்று போர்ட் போட்டிருந்தார்கள். அக்காடமின்னா ஹீட்டர் போட்டிருப்பார்களே என்று உள்ளே போனதில் ஜோடி ஜோடியாய் டேன்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். டேன்ஸ் ஆடினால் உடம்பிற்கும் மனதிற்கும் ரொம்ப நல்லது என்று கொப்பெல்லோ என்ற இத்தாலியக் கலைஞர் சொல்லியிருப்பதாய் அங்கே இருந்த அழகான அம்மணி எடுத்துச் சொன்னதால் எனக்குள் இருந்த மைக்கேல் ஜாக்சன் மீண்டும் முழித்துக் கொண்டு  “பேசாம ஜிம்முக்கு பதிலா இனிமே நான் டேன்ஸ் சேரலாம்னு இருக்கேன் உடம்புக்கும் மனதுக்கும் ரொம்ப நல்லதாம் ஆனந்த விகடன்லயும் சொல்லியிருக்காங்களாம்”ன்னு வீட்டில் அப்ளிகேஷன் போட்டிருக்கிறேன். காதில் போட்டுக் கொள்ள கடுக்கனும் கையில் போட்டுக் கொள்ள நல்ல கிளவுசும் வாங்க வேண்டும். ஓம் மைக்கேல் ஜாக்சனாய நமக.

Sunday, November 06, 2011

மாலை

இந்த பிறந்த நாள் இருக்கிறதே பிறந்த நாள் அது நமக்கு வந்தால் தேவலாம். லைப் பார்ட்னருக்கு வந்தால் பரிசாய் என்ன வாங்கிக் குடுப்பது என்ற குழப்பம் இருக்கே ஸ்ஸ்...சிண்டை பிடித்துக் கொள்ள வைத்துவிடும். சூப்பரா இருக்கணும், அவரிடம் இல்லாததாய் இருக்கணும், அவருக்கு  ரொம்பப் பிடித்ததாய் இருக்கணும், ஹைய் இத இதத் தான் ரொம்ப நாளா வாங்கணும்ன்னு நினைச்சேன் என்று கூவ வைக்கக் கூடியதாய் இருக்கணும் ஆனால் எல்லாத்துக்கும் மேலாக விலை நம்ம பட்ஜெட்டில் இருக்கணும், முடிந்தால் கொஞ்சம் மிச்சமும் வரணும்” - இந்த ஸ்பெசிவிகேஷனை கடைக்காரரிடம் சொன்னால் “தம்ப்ரீ...நேரா போய் லெப்ட்ல திரும்பினா வெளியே போற வழி வரும்..போகும் போது ரைட்டுல தண்ணி வைச்சிருப்பாங்க குடிச்சிட்டு போய்ச் சேரு”ன்னு தெளிவாய் சொல்லிவிடுவார்.

ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை எனக்கு வாங்குவது என்றால் மட்டும் தங்கமணிக்கு எதாவது சுளுவாய் மாட்டும். என் பிறந்தநாளுக்கு ஒருதரம் கழுத்தில் போட்டுக்கொள்ளும் ஒரு ஸ்டைலான மாலை வாங்கித் தந்தார். இந்த மென்ஸ் ஜுவெல்லரியில் எனக்கு அப்படி ஒ்ன்றும் பெரிய ஆர்வம் இல்லை என்றாலும் “ஹைய்ய்ய்”ன்னு ரியாக்‌ஷன் குடுத்து போட்டுப் பார்த்ததில், அழகுக்கு அழகு சேர்த்த மாதிரி இருந்ததால் எனக்கும் பிடித்துவிட்டது. முதலில் கொஞ்ச நாள் வீட்டில் மட்டுமே போட்டுக் கொண்டேன். “வீட்டுல மட்டும் போட்டுக்கறதுக்கு இதென்ன நைட்டியா...இனிமே வெளியில் போகும் போது கழுத்துல மாலை இருக்கணும்..இல்ல” என்று தங்கமணி அன்பாய் சொல்ல. அப்பீல் ஏது? ஆனால் அங்கே ஆரம்பித்தது ஒரு இம்சை.

பார்க்கிறவர்களுக்கெல்லாம் ஏனோ பார்வை என் கழுத்தில் போய் நிற்கும். நான் குடுக்க வேண்டிய “ஹைய்”ரியாக்‌ஷனோடு “இதென்ன புதுசா மாலை” என்று ஆரம்பிப்பார்கள். முதலில் எல்லாம் “சும்மாத்தேங்...” என்று ருதுவான பெண் மாதிரி வெட்கத்தோடு நெளிந்து கொண்டிருந்தேன். சில இடங்களில் அது ஒர்க் அவுட் ஆகாமால் “தொண்டைல கட்டி இந்த மாலையை மூனு வேளை  அணிந்தால் கரைஞ்சிடும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார்” என்று மெடிக்கல் ரீசன் குடுக்க ஆரம்பித்தேன். இதெற்கெல்லாம் அவசியம் இல்லாமல் வெகு சில இடங்களில் “கௌன் பனேகா க்ரோர்பதி” மாதிரி அவர்களே “யானை முடியா, பூனை கடியா”ன்னு என்று அவர்களே நிறைய சாய்ஸ் குடுப்பார்கள், நானும் எதாவது ஒன்றை “லாக் கர் தீஜீயெ” சொல்லி தப்பிப்பேன்.

ஆனால் சினிமாவில் சி.பி.ஐ ஆபிஸராய் நடிக்கப் போகவேண்டிய சிலர் இருக்கிறார்களே, துளைத்தெடுப்பது மாதிரி பார்த்துக் கொண்டு பதிலுக்கு வெயிட் பண்ணுவார்கள். நான் வேறு வழியில்லாமல் கடைசியில் "ஹீ ஹீ ஸ்டைலுக்குத் தான் போட்டிருக்கிறேன்" என்று வாக்கு மூலம் குடுக்கும் வரை விடமாட்டார்கள். பதிலுக்கு நூற்றுப் பதினைந்து சதவீதம் "ஓஹ்ஹ்ஹ்ஹோ..." என்று  உதட்டோர புன்முறுவலோடு ஒரு பெரிய நக்கல் கிடைக்கும். உண்மையச் சொன்னா நக்கல் விடற இந்த சமுதாயம் இருக்கும் போது ஓசோன்ல ஏன் ஒட்டை விழாதுன்னு அதற்கப்புறம் இந்தக் கேள்வியை சாய்ஸ்சில் விட்டுவிட்டு “அடேங்கப்பா பில்டிங் என்னம்மா இழைச்சுக் கட்டியிருக்கான் , கண்ணாடியெல்லாம் ஜொலிக்கிறது” என்று ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனாலும் சில விடாக் கொண்டர்கள் விட மாட்டார்கள். திரும்பவும் கேள்வியே காதில் விழாதமாதிரி கொஞ்ச நாள் நடிக்க ஆரம்பித்தேன்.  ஒரு தரம் ஒரே ஒருவர் மட்டும் "துளசி மாலையா" என்று எடுத்துக் குடுக்க ஆமாம் என்று அன்றிலிருந்து கெட்டியாய் பிடித்துக்கொண்டேன்.

இருந்தாலும் நமக்கென்று வந்து சேர்வார்களே அகராதிகள்.

“துளசி மாலையா...? பார்த்தா தெரியலையே. என்ன துளசி” என்று ஆரம்பித்துவிடுவார்கள்.

“இது காட்டுத் துளசி பார்த்திருக்கமாட்டேள்.” 

“காடா ...அப்படி என்ன நான் பார்க்காத காடு”

ம்ம்ம் சுடுகாடு என்று நொந்து கொண்டு “இது விஷ்வ துளசி. அந்தக் காலத்துல போதி தர்மர் இத கழுத்துல மாலையா போட்டு காவி உடுத்தி...சூர்யா மொட்டையடிச்சிண்டு கம்ப தூக்கிண்டு போதி தர்மரா நடிச்சிருக்கார் பாருங்கோ...சைனா காரனே தொப்பி போட்டுண்டு பிச்சை வாங்கறான்னா பார்த்துகோங்கோளேன்...” ஸப்ப்பா..... சமாளிப்பதற்குள் எனக்கு நாக்கு தள்ளி விடும்.

சில சமயம் விதி வீட்டிற்கு வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டு விளையாடும். “என்ன இன்னும் கல்யாண ஷோக்கு குறையலையோ.. இன்னும் மாலையும் கழுத்துமா இருக்கியே அதான் கேட்டேன்” போன்ற அரத ஜோக்குகளுக்கெல்லாம் “எப்படீங்க இப்படியெல்லாம்” என்று சம்பிரதாயமாய் சிரித்துவிட்டு “மாமாக்கு சீக்கிரம் காப்பி போட்டுக் குடுமா... இந்த மாதிரி மொக்கை போடறதுக்கு இன்னும் ரெண்டு வீடு இருக்காம்”ன்னு பேக்கப் சொல்ல வேண்டியிருக்கும்.

ஏனோ நடுவில் இப்போ கொஞ்ச நாள் இந்த மாலை சம்பிரதாயம் இல்லாமல் இருந்தது.

சமீபத்தில் காசு குடுத்து சோற்றுக்கடன் ஆற்ற ஒரு க்யூவில் நிற்க வேண்டிய நிர்பந்தம். முன்னால் ஒரு மாமி நின்று கொண்டிருந்தார். என் மகள் ஏதோ என்னிடம் கேட்க, திரும்பிப் பார்த்தவர் சினேகமாய் சிரித்து "கழுத்தில் என்ன துளசி மாலையா" என்று ஆரம்பித்தார்.

ஆஹா கூப்பிடுடா போதிதர்மரைன்னு நான் உஷாராகும் போது  "துளசி மாலை மாதிரியே இல்லையே ஸ்டைலாய் உங்களுக்கு ரொம்ப நன்றாக இருக்கிறதே" என்று சொன்னார். இப்பேற்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கும் போது ஓசோன்ல எப்படீங்க ஓட்டை விழுது?

Monday, September 26, 2011

சினிமாவுக்குப் போன சித்தாளு

ஒரு ஊரில் ஒரு சித்தாளு இருந்தானாம். அவனுக்கு சினிமா பைத்தியமாம். மலை நதி காடு கரை போன்ற இடங்களுக்கு சுற்றுலா செல்லும் போது அந்த இடத்தில அம்சமாய் கையைக் கட்டிக் கொண்டோ, கண்ணாடியைப் போட்டுக் கொண்டோ சோலோ சோலையப்பனாய் ஒரு போட்டோ எடுத்து கையோடு பேஸ்புக் ஃப்ரொபைல் பிக்கசராய் போடும் ஒரு காலக் கட்டாயம் இல்லாத காலத்தில், “எனக்கு நெஞ்சு வலிக்கிறது,குப்புன்னு வியர்க்கிறது,யாரோ கூப்பிடுகிறார்கள் #heartattack" என்று வைகுந்த வேளையிலும் டிவிட்டர் அப்டேட் குடுக்கிற மஹானுபாவர்கள் தோன்றாத ஒரு காலக் கட்டத்திலும் நம்ம சித்தாளு சினிமா பார்க்க ஆரம்பித்திருக்கிறான். சித்தாளுவுக்கும் தெருவில் இருக்கும் அவன் நண்பனுக்கும் சினிமா அலைவரிசை அலாதி. ஸ்கூலில் இருந்து வரும் போது சனிக்கிழமை போஸ்டரைப் பார்த்தால், இருவரும் ஒரு பார்வை பார்த்துக் கொள்வார்கள். டீல் டன் அண்ட் டஸ்டட்.

சினிமா பார்க்க சித்தாளு வீட்டில் செய்யும் அஜால் குஜால் வேலைகள் இந்த பதிவின் சாராம்சமில்லை என்பதால், சினிமா யாத்திரையை தொடங்கும் போது சித்தாளு பையில் ஒரு ரூபாய் கிணு கிணுத்துக் கொண்டிருக்கும். 75 பைசாவிற்கு பெஞ்ச் டிக்கட் வாங்கிக் கொண்டு 25 பைசாவிற்கு ஒரு நீள லக்ஸுரி மைசுர் பாகும் வாங்கிக் கொண்டு தூண்கள் எதுவும் மறைக்காத, ஒரு கையை ஊன்றிக் கொண்டு பார்க்க ஏதுவாய் இருக்கும் சின்ன திண்டு முன்னால் பெஞ்சில் உட்கார்ந்து படம் பார்த்த நாட்கள் - சித்தாளுவின் எண்ணப் புத்தகத்தில் பொன் எழுத்தில் பொறிக்கப்பட்டவை.
 சித்தாளுவும் நண்பனும் சினிமா பார்க்கும் போது பேசிக்கொள்ளவே மாட்டார்கள். சினிமா என்று இறங்கிவிட்டால் இடைவேளையோ சுபமோ போட்டால் தான் சித்தாளுவிற்கும் நண்பனுக்கும் சமூக பிரக்ஞையே வரும்.அதுவரை வாயில் கரையும் மைசூர்பாகு கூட தெரியாத அளவிற்கு சினிமாவை “பே”என்று பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

”யெக்கா திருநாகேஸ்வரம் போய் பாம்புக்கு பால் வைச்சா தோஷம் குறையுமாம்க்கா..கே.ஆர் விஜயா அந்த படத்துல சொன்னாங்கல்லா” “மாப்ள..செத்த காத்தாட பீடி இழுத்துட்டு வந்துடறேன்..இந்த ஒப்ப்பாரி முடிஞ்சு செயமாலினி டான்ஸ் வந்துடிச்சினா விசில் சத்தம் குடுறா நல்லா இருப்ப, காசு அழுததே அதுக்கு தான்” போன்ற சக சித்தாளுக்களின் சம்சாரிப்புகள் எல்லாம் காதில் விழவே செய்யாது. சினிமா பார்க்கும் சுகானுபவத்தில் எந்த குறுக்கீடுகளும் வர இயாலத காலம் அது.

ஆனால் காலக் கிரயத்தில் சித்தாளுவின் சினிமா குணாதியசங்கள் மாறியே போயின. மாட்னி ஷோவில் பீடி வலிக்கப் போகும் சேட்டன்கள் கதவை ஒழுங்காக சாத்தாமல் சூரிய வெளிச்சம் திரையில் விழும் போது கூட ”யோவ் கதவ மூடுய்யா” என்று அநீதியை எதிர்த்து குரல் குடுக்காத சித்தாளு வீட்டில் டீவி பார்ப்பதற்க்கே திரைகளைப் போட்டு கதவை சாத்தி களேபரம் செய்ய ஆரம்பித்தான். பகலில் பார்க்கும் படத்திற்கே வீட்டில் உள்ளவர்கள் வெளிச்சம் தெரியாமல் தடுக்கி விழுந்துவிடுவோமோ என்று தவழ்ந்து செல்லும் நிலையில் ராத்திரி படம் போட்டால் கேட்கவே வேண்டாம். படங்களில் ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் காட்சிகளில் எங்கேயோ காட்சிக்கு சம்பந்தம் இல்லாமல் ஏதோ ஒரு பாட்டியிடம் யாரோ பேரம் பேசி வாங்கும் கேட்கவே கேட்காத டயலாக் எல்லாம் கேட்க வேண்டும் என்று அராஜகம் புரிய ஆரம்பித்தான். டயலாக் புரியாவிட்டால் ரீவைண்ட் செய்து, சவுண்டைக் கூட்டி - என்று சித்தாளு செய்யும் களேபரத்தில் இரண்டரை மணி நேர படங்கள் எல்லாம் நாலரை மணி நேர படங்களாய் ஓட ஆரம்பித்தன. “டேய் வெண்ண..ஸ்டூடியொல சவுண்ட் இஞ்னியரிங் பண்ணும் போது கூட அவங்களுக்கே இது கேட்டிருக்காது..” என்று சித்தாளுவின் தங்கமணி அன்பாய் எடுத்து சொல்லியும் அடங்காமல் இரண்டரை  to நாலரை ஒரு நாள் ஏழரை ஆகி அப்புறம் சித்தாளு வீட்டில் கொஞ்சம் அடக்கி வாசிக்க ஆரம்பித்தான்.

சித்தாளுவின் வாழ்க்கையில் அன்லிமிட்டட் சினிமா கார்டு வரப்பிரசாதமாய் வர, வழக்கமாய் தியேட்டர் போகும் சனிக்கிழமை ராமசாமியாய் அவதாரமெடுத்தான். பேக் டு பேக் இரண்டு படங்கள் தொடர்ச்சியாய் பார்ப்பது சித்தாளுவின் ரெகுலர் தீர சாகசங்களில் ஒன்று. “சினிமா பார்ப்பது என்பது ஒரு தவம்” - என்று சீன் போடுவது சித்தாளுவிற்கு ரொம்பப் பிடிக்கும். தற்போதும் குடும்பத்தோடு போகும் போது படம் ஆரம்பிப்பதற்கு அரை மணி முன்னாலேயே காரை பார்க் செய்து, டிக்கெட் கிழிப்பவரை நச்சரித்து முதல் ஆளாய் தியேட்டருக்குள் போவது சித்தாளுவின் தங்கமணிக்கு சுத்தமாய் பிடிக்காது. உள்ளே போய் பத்து வெவ்வேறு இடங்களில் உட்கார்ந்து கடைசியில் பதினொன்றாவதாய் ஒன்றைத் தேர்ந்தெடுத்து உட்காரும் போது தங்கமணி நெற்றிக்கண் இல்லாமலேயே எரித்துவிடுவதற்கு எல்லா முயற்சியும் செய்வார். கேட்டால் படம் பார்ப்பதற்கு பங்கம் வராமல் இருக்க சித்தாளு ஸ்ட்ராடிஜிக்காய் இடம் பிடிக்கிறாராமாம்.


தியேட்டருக்குள் பீடி வலிக்க தடை வந்துவிட்டதால் பீடி தொல்லை இல்லாமல் இருந்தாலும் சித்தாளுவிற்கு சற்றும் பிடிக்காத வேறு பல தொல்லைகள் உண்டு. லேட்டாய் வருவதோடு மட்டுமில்லாமல் ஸ்கிரீனைப் பார்க்காமல் படம் ஆரம்பிச்சாச்சா என்று கேட்கும் லேட் மஹாதேவன்கள், கூட்டி வரும் கேர்ல் பிரண்டுக்கு ஏகத்துக்கு பப்ளிக்காய் லவ்வைக் காட்டி எந்தப் படத்தைப் பார்ப்பது என்று சித்தாளுவை குழப்பத்திலாழ்த்தும் முன் சீட் முத்தண்ணாக்கள், தியேட்டர் காரன் லைட்டை அணைத்தாலும் மொபைலில் டெக்ஸ்ட் பண்ணுகிறேன் பேர்வழி என்று பளீர் என்று முகத்தில் அடிக்கும் மொபல் ஸ்கீரின் வெளிச்சத்தைக் காட்டும் “செல்”வராகவன்கள் என்று இன்றளவிலும் சித்தாளுவிற்கு பல சத்திய சோதனைகள். இருந்தாலும் மனம் தளராத மெகா சீரியல் நாயகி மாதிரி சித்தாளு சினிமா போவது மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அதுவும் குழைந்தகள் ஸ்பெஷல் ஷோவிற்கு ஒரு முறை போய் “எனக்கு லாரா கூட உட்காரணும்” “அங்க போகாத;இந்த மாமா மேல நிக்காத” என்று குழ்ந்தைகளும் அவர்கள் அப்பா அம்மாக்களும் விடும் சவுண்டில், சினிமாவுக்கு போன சித்தாளு சந்தைக்குப் போன சித்தாளு ஆகிவிட்டான். கழுத காசு போனாலும் போகுது இனிமே முழு டிக்கெட் எடுத்து ஜெனெரல் ஷோவுக்குத் தான் குழ்ந்தைகளை கூட்டிப் போவது என்று முடிவாய் இருக்கிறான் சித்தாளு.  ஏன் என்றால் சித்தாளுவிற்கு சினிமா பார்க்கும் போது சத்தமே வரக்கூடாது. முறுக்கு தின்று கொண்டே பார்த்தால் அந்த சத்தத்தில் டயலாக் கேட்காது என்பதனால் சித்தாளு வீட்டில் சினிமா பார்க்கும் போது முறுக்கு,சீடைக்கெல்லாம் தடை. சினிமாவிற்க்கு போகும் போதும் கருக்கு முருக்குன்னு சத்தம் வரும் திண்பண்டங்கள் வாங்க மாட்டார் சித்தாளு. அதற்காக சித்தாளு கொடுமைகாரன் அல்ல.சத்தமே வராத அதிரசம், லட்டு, ஜாங்கிரி போன்றவை ஓக்கே.

“போய்யா போ...இனிமே உங்க கூட நாங்க படமே வரதா இல்லை” என்று வீட்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றியும் சித்தாளு செய்யும் அலம்பல்கள் குறைந்த பாடில்லை. ஏன்னா பாருங்க “சினிமா பார்ப்பது என்பது ஒரு தவம்”