Sunday, October 18, 2009

பொறுமை....

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். பட்டாசெல்லாம் கொளுத்தி...பலகாரமெல்லாம் பக்கத்து வீட்டுக்கு குடுத்து...தெருவில் நண்பர்களோடு கூடி...சாரி சாரி...வழக்கம் போல டி.வி. நிகழ்ச்சிகள் பார்த்து தீபாவளியை ஜமாய்ச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன்.

மன்னிக்கவும், வாழ்க்கை கொஞ்சம் சுவாரசியமாக இருக்கட்டுமே என்று சில பல உபரி பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு...இப்போ அது ஏகப்பட்ட பொறுப்புகளாகி.. ரெண்டு தெரு தள்ளி ஒரு குழந்தைக்கு காது குத்த மட்டும் தான் ஒத்துக்கொள்ளவில்லை அந்த அளவில் வந்து நிற்கிறது. எல்லா நேரங்களிலும் வேலை மென்னியப் பிடிக்கிறது. இப்போதெல்லாம் ஆபீஸ் போய் தான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ளமுடிகிறது. இதெல்லாம் போக அடுத்த விடியோ(ஃபிலிம்) ப்ராஜெக்ட்டையும் ஆரம்பித்திருக்கிறேன். பின்னொரு பதிவில் விபரமாய் பதிவிடுகிறேன்.

என் சின்ன மகள் டிஜிட்டல் யுகத்தில் பிறந்ததால் தங்கமணி அவரின் நிறைய சேட்டைகளை மொபைல் போனில் பிடித்து வைத்திருந்தார். அதையெல்லாம் போனில் இருந்து கம்ப்யூட்டருக்கு மாற்றச் சொல்லி மூன்று வருடங்களாய் சொல்லிக் கொண்டிருந்தார். அப்புறம் "உங்களுக்கு ஒரு விவஸ்தையே இல்லையா...நானும் எவ்வளவு நாள் சொல்றது ...கொஞ்சமாவது மானம் வெட்கம் இருக்கா...இதுக்கு மேல நான் மனுஷியா இருக்க மாட்டேன்"ன்னு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சியதில், சரி என்று பெரிய மனது செய்து மாற்றி அமைத்ததில் எனக்குப் பிடித்த ஒரு கோப்பு ஒன்றை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அமுக்கு போல முகத்தை வைத்துக் கொண்டு இரண்டு வயதில் என் சிறிய பெண் செய்த சத்தியாகிரகம்...ஹூம்ம்ம்ம்ம் இந்த இந்த இந்த டெக்னிக்கு தான் நானும் ரொம்ப நாளா ட்ரை பண்ணுறேன்...பிடி பட மாட்டேங்குது....!!!


ஆரம்பகால மொபைல் போனில் எடுத்தது என்பதால் வீடியோ க்வாலிட்டி மிக மோசமாய் இருக்கும். பொறுத்தருள்க.

Tuesday, September 01, 2009

கல்யாணம் - Prequel

ஏன்டி சுஜா சித்த பளிச்சுன்னு ட்ரெஸ் பண்ணிண்டு சின்ன மாமாவ கூட்டிண்டு நாலு தெருவுக்கு பத்திரிக்கை குடுத்து நேர்ல அழைச்சிட்டு வந்துடேன்..இந்த் பேப்பர்ல பெயர் அட்ரெஸ் இருக்கு, அத்தோட யார் யார எதுக்கு கூப்பிடனும்ன்னு டீடெயில்ஸும் இருக்கு. பெயருக்கு நேர ஒரு க்ராஸ் போட்டிருந்தா கல்யாணத்துக்கு மட்டும் கூப்பிடு. ரெண்டு கிராஸ் போட்டிருந்தா ஜானவாசத்துக்கும் கூப்பிடு. மூனு இருந்தா ரிசெப்ஷன் வரைக்கும் இருந்துட்டு தான் போகனும்ன்னு வருத்திக் கூப்பிடு என்ன..

என் பிராஜெக்ட் மேனேஜர் மாதிரி சரியான இம்சைமா நீ...ரிக்வைர்மென்ட் ஸ்பெசிபிகேஷன்லாம் டீட்டெய்லா குடு...இதெல்லாம் நீயே பார்த்துக்க கூடாதா....இல்ல வானுயர வளர்ந்து நிக்கிறானே உன் தம்பி அவன் கிட்ட குடுக்க கூடாதா...கல்யாணத்துக்கு வந்த இடத்துல அழைச்சிட்டு வா தொலைச்சிட்டு வான்னு....

ஏன்டி உன் சின்ன மாமாக்கு இந்தூர்ல யாரடி தெரியும் அவனே இங்க எப்பவோ வரான் எப்பவோ போறான்...

யாரு...உன் தம்பி...ராது ப்ரெண்ட்ஸ் அத்தனை பேர் வீடும் அவனுக்கு அத்துப்படி...அவங்க போன் நம்பர் வேணும்னா நானே அவன கேட்டுத் தான் தெரிஞ்சிக்கிறேன்...வயசுப் பெண்களின் நடமாடும் டைரக்ட்ரிமா உன் தம்பி...

அஞ்சு வயசு வித்தியாசத்துல உனக்கு மாமாவா வந்து பொறந்தேன் பாரு ...எல்லாம் எங்கப்பாவ சொல்லனும்.... அன்னிக்கு ராது கூட ஸ்ரீலேகா ஆத்துக்கு போயிருந்தேன் அவ அம்மாக்கு நல்ல முட்டா மஞ்சள் வேணும்ன்னு போன் நம்பர் குடுத்தா...டீ.நகர்ல ரங்கநாதன் தெரு பக்கத்துல...

ஏன்டி உன்ன கல்யாணத்துக்கு கூப்பிட்டு வான்னு சொன்னா அவன போய் கிண்டின்டு...சாப்ட்வேர் கம்பேனில வேலை பார்தா..? ரொம்ப தான் வாய் வந்திடுத்து உனக்கு... நாளைக்கு உனக்கு கல்யாணம்ன்னு வரும் போது அவன் தான் திரும்பவும் ஓடியாடி வேலை செய்யப் போறான்...

ஆஹா சந்தடி சாக்குல அடுத்த கல்யாணத்துக்கும் ஓசி எடுபிடியா இப்பவே அப்பாய்ண்ட்மென்ட் லெட்டர குடுக்கிறியே அக்கா...

நோ வே...என்னோட கல்யாணத்துக்கெல்லாம் முந்தின நாள் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்பறேன்...காலம்பற கிளம்பி வந்து சேரு...சிம்பிளா லிப் டு லிப் குடுத்து கல்யாணம்...ரெஸ்டாரண்ட்ல புஃபே. நாலு மணிக்கு எல்லாரும் இடத்த காலி பண்ணிடனும். நாங்க பர்ஸ்ட் நைட்டுக்கு பிரிப்பேர் ஆகி அடுத்த நாள் காலம்பற முதல் ப்ளைட்ல ஹனிமூனுக்கு எஸ்கேப் ஆகிடுவோம்...

ஆஹா இந்த ஐடியா சூப்பரா இருக்கே...சுஜா எனக்கும் ஒன்னு செட் பண்ணேன்

இதோ பாரு...நீ தான் எனக்கு மாமா..நான் உனக்கு இல்ல புரிஞ்சுதா...சரியான அலையாண்டி மாமாவா இருக்கியே...

ஏன்டி ஒரு அம்மா முன்ன பேசற மாதிரியா பேசற...ரொம்ப ஆட்டம் போடதடி உங்க பாட்டி காதுல விழுந்துடப் போறது. நானும் உன்ன மாதிரி ஒரு காலத்துல ஈஸ்ட்மென்ட் கலர்ல கனவு கண்டவ தான்..இன்னிக்கு உங்கள பெத்துட்டு கிரைண்டர்ல தோச மாவு அரைச்சிண்டு இருக்கேன்...

டேய் நீ நம்ம குமார் பையன் தானேடா...என்ன படிக்கிற

இப்போ தான் ப்ரி கே.ஜி சேர்த்திருக்கோம் மாமா...

ம்ம்ம்..வெரி குட்..நல்ல கவனமா படிக்கிறானா...குட் பாய்...நல்ல படிக்கணும் என்ன....பெரியவனாகி என்ன ஆகப் போற....டாக்டரா...இல்ல இஞ்சினியரா

....ம்ம்ம்

..சொல்லுடா...பெரியவனாகி என்ன ஆகப் போற...??

ம்ம்ம்...நான் பெரியவனாகி....ம்ம்..அப்பா ஆகப் போறேன்....

உங்க பெரியப்பாவுக்கு தேவை தான்...சின்னப் பிஞ்சு அவன்...அவனப் போய் டாக்டராகறியா கம்பவுன்டர் ஆகறியன்னு ப்ரஷர் போட்டுண்டு....கரெக்டா சமாளிச்சான் பார்த்தல்ல...இவன் வயசுல எனக்கெல்லாம் இவ்வளவு சாமர்த்தியமில்லை....

...ம்க்கும்... உங்களுக்கா...எங்க அதான் கையில ஒன்னு வயித்தில ஒன்னுன்னு..பேச்சப் பாரு...அப்பா ஆகப் போறானாம்...இந்த குறுக்கு புத்திக்கு அப்படியே அப்பனக் கொண்டிருக்கான்...

டேய் ராகவ்...பந்தக்கால் நடறதுக்க்கு ஆள் சொல்லிட்டு வரச் சொன்னேனே..ஆச்சா

ஓவரா சீன் போடாதம்மா....அதெல்லாம் அப்பவே ஆச்சு...எனக்கு ஒரு ஆயிரம் ரூபா கைல குடுத்து வை...அவசரத்துக்கு வேணும்ன்னு கேட்டேனே என்னாச்சு...

அவசரத்துக்கு ஆயிரமா...அப்பிடி என்ன அவசரம் உனக்கு...?

அக்கா கல்யாணத்துக்கு பார்ட்டி எங்கடான்னு ப்ரெண்ட்ஸெல்லாம் ஒரே நச்சரிப்பும்மா...

சரி சரி...இந்தா நல்ல ஹோட்டலா பார்த்து சாப்பிடுங்கோடா...நான் வெஜ்லாம் திங்காதடா...பாட்டி கேட்டா என் உசிர எடுத்துடுவா...

ஆமாண்டா ராகவ்...நல்ல சைவ உடுப்பி ஹோட்டலா பார்த்து சாப்பிடுங்கோ...யெப்பா தாங்கலடா சாமி...அம்மாவும் பிள்ளையும் ட்ராமா கம்பெனி ஆரம்பிக்கலாம்டா...சாப்பாடு சாப்பிட ஆயிரம் ரூபாயாம்...என்ன பார்ட்டின்னு எங்களுக்கு தெரியாதா....கேக்கிற மாதிரி கேக்கிறதென்ன...குடுக்கிற மாதிரி குடுக்கிறதென்ன....யெப்பா...வீட்டுல..முழிச்சிண்டிருக்கிற போதே முழியப் பிடுங்குறீங்களேப்பா...

என்ன சுஜா மேடம்...வீட்டுல மூக்கும் முழியுமா வாட்ட சாட்டமா புதுசா ஒரு பையன் வந்திருக்கான் போல...

ஏய் சும்மா கிண்டாடதடி...அவன் எங்க அத்தையோடு நாத்தனார் பிள்ளை...தூரத்து சொந்தம்

ஓ அப்போ உனக்கு அண்ணா முறையா...

சீச் சீ...வாய பினாயில் விட்டு கழுவு...தூரத்து முறைப் பையன்டி

ஓ அதான் தூரத்திலேர்ந்து உன்னையே முறைச்சிண்டே இருக்கானா

ஏய்...அப்படியே ஓடி போயிடு இது நம்ம கோட்டா...தெரியுமில்ல...

இதோ பாருங்கோ இங்க கல்யாணத்துக்கு வந்திருக்கிறவா முன்னாடி என் புடவைய பிடிச்சிண்டு பின்னாடியே வராதீங்கோ...மானம் போறது. ராத்திரி ஆம்பிளைகள் படுத்துக்கறதுக்கு ஹால்லயும் மொட்டைமாடிலயும் ஏற்பாடு பண்ணியிருக்கா...என் கூடத் தான் படுத்துப்பேன்னு சாக்கு போக்கு சொல்லதீங்கோ...உங்க அக்கா பெண்களெல்லாம் கிண்டல் தாங்க முடியலை...

என்ன மாமி மாமா என்ன சொல்றார்....ராத்திரி உங்க கூடத் தான் படுத்துப்பேங்கிறாரா...மொட்டை மாடில படுத்துண்டா ஜலதோஷம் வந்திரும்....இல்லையா மாமா..??

பார்க்கத் தான் போறேன்டி...நாளைக்கு உங்களுக்கெல்லாம் கல்யாணம் ஆகி உங்க ஆத்துகாரரையெல்லாம் எங்க அனுப்பறீங்கன்னு...சை...என்ன பொழப்புடா இது ...பூஞ்சை உடம்புக்காரன மொட்டைமாடில படு, கட்டைமாடில படுன்னு...

வேன் காலம்பற அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடும்...மூனு ட்ரிப் அடிக்கும்...கிச்சு டெம்போக்கும் சொல்லி இருக்கேன்...மத்த சாமானையெல்லாம் நீ ஏத்திண்டு அதுல வந்துடு...நான் இவாள எல்லாரையும் பேக்கப் பண்ணிண்டு வந்துடறேன்...

ஐய்யோ ஐய்யோ...லைட்ட போடுங்கோ போடுங்கொ....கழிசல்ல போக யாரோ என் இடுப்ப பிடிச்சிட்டா.....லைட்ட போடுங்கோ

மாமி சத்தம் போடாதீங்கோ....நான் தான்...மொட்டை மாடில படுத்துண்டு..வாடைக் காத்துல நெஞ்சடைக்கிற மாதிரி இருந்துது...என் பெண்டாட்டின்னு நினைச்சு...விக்ஸ் இருக்கான்னு கேக்கலாம்ன்னு...சாரி அவள நினைச்சு உங்களை எழுப்பிட்டேன்...

ஏன்டா பிரம்மஹத்தி....பெண்டாட்டிய எழுப்பறவன் இப்படியாடா இடுப்ப பிடிச்சு நிமிண்டுவ...ராத்திரி நெஞ்சடைக்கறது .கு**%*(அடைக்கிறதுன்னு ஏதாவது சாக்கு போக்கு....மே மாசத்துல எங்கடா வாடை காத்து அடிக்கிறது.. கட்டைல போறவனே...என்னம்மா நிமிண்டிட்ட.... சௌம்யா எப்படித்தான் இவன சமாளிக்கிறயோ...நானும் ஏழு பெத்திருக்கேன்...எங்காத்துக்காரர்லாம் இவ்வளவு இல்லைம்மா...

ஸ்ஸ்ஸ் ஏன்னா உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா...அப்பவே படிச்சு படிச்சு சொன்னே கேட்டேளா...பெண்டாட்டிக்கும் பெருச்சாளிக்கும் வித்தியாசம் தெரியாதா...உங்க அத்தைபாட்டி மாதிரியா இருக்கேன் நான்...எனக்கென்ன இத்தோட ஓயாது நாளைக்கு...பி.பி.சி ப்ளாஷ் நியூஸ் மாதிரி மண்டபம் புல்லா நாறடிக்கப் போறா...கொஞ்சம் கூட வெட்கமே இல்லாத ஜென்மம்...உங்களப் போய் எங்கேர்ந்து பிடிச்சேனோ...சே...

ஏன்டி விசாலம் உம் பொண்ணு குளிக்கப் போனாளா இல்ல கிணறு வெட்டப் போனாளா...எம்புட்டு நேரமாச்சுடி பாத்ரூமுக்குள்ள போய்....வேன் வந்து காத்திண்டு இருக்கு....சீக்கிரம் வரச் சொல்லுடி...

ஏன்னா...இந்தாங்கோ இவன பிடிங்கோ...இவன கக்கா போக வைக்க வேண்டியது உங்க பொறுப்பு...உசிர வாங்கறான்...பட்டுப் புடவைய உடுத்திண்டு வேன்ல ஏறி மடில உட்கார்ந்த உடனே டான்னு மணியடிச்ச மாதிரி கக்கா வந்துடும் உங்க புள்ளைக்கு....என்னால வைச்சுக்கு முடியாது உங்க பாடு

கிச்சு சாமானெல்லாம் ஏத்தியாச்சா.....நீ முன்னாடி கிளம்பு...நாங்க வந்துண்ட்டே இருக்கோம்....விசாலம் எல்லாம் எடுத்துண்டாச்சா...நல்ல சகுனமா பாத்து வண்டிய கிளப்புப்பா...முக்குப் பிள்ளையார் கோவில்ல கொஞ்சம் நிறுத்துப்பா தேங்காய விடல் போட்டுட்டு அப்படியே கிளப்பிடலாம்...ம்ம் ரை ரைட்..

இதன் தொடர்ச்சி தான் நான் 2007ல் எழுதிய "கல்யாணம்". அதையும் ஒரு தரம் ரிவைஸ் பண்ணிக்கலாமே :))

Monday, August 24, 2009

கசகசா

"ஹலோ டுபுக்கா...நான் குப்புசாமி பிரெண்டு கப்புசாமி பேசறேன்..."

"ஆங் சொல்லுங்க சார்...குப்புசாமி நேத்திக்கு தான் போன் பண்ணினார்...யூகேக்கு இப்போ தான் வந்திருக்கீங்கன்னு சொன்னார்...என்ன...செட்டிலாகிட்டீங்களா?"

"ஆங் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா ஆகிட்டிருக்கோம்...அது விஷயமாத் தான் போன் பண்ணினேன்...எனக்கு தயிர்னா உயிர்...இங்க பக்கத்து கடையில வாங்கின தயிரு ரொம்ப புளிக்குது....அத்தோட பிரியாணிக்கு கசகசாவும் வேணும்...இங்க நம்ம ஊரு மளிகை கடை எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா..."

"**** ஆஹா கிளி கூண்டுக்குள்ள சிக்கிடிச்சு....*** நீங்க இருக்கிற ஏரியாலேர்ந்து வழி கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்...ஒன்னு பண்ணுங்க...நான் எங்க வீட்டுக்கு வழி சொல்றேன்..நீங்க பேசாம இங்க கிளம்பி வந்துருங்க...வந்தீங்கண்ணா..டீ குடிச்சிக்கிட்டே நான் மேப் போட்டு கசகசா விக்கிற இடத்தைக் குறிச்சு தரேன்..."

"அப்டீங்கிறீங்களா...அதுவும் சரிதான்..வந்திடறேன்."

ஆஹா இப்படி கசகசாவை வைத்து கிளியை பிடிக்க வழியிருக்கான்னு..பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே மனுஷன் வந்துவிட்டார். மனுசன் பிரியாணிக்கு ஏகத்துக்கு காய்ஞ்சி போய் இருந்தார் போல.

"இந்த கசகசா..."

"முதல்லலாம்...இந்த கசகசாவை கேரளாக்காரங்க ஏத்துமதி பண்ணிக்கிட்டு இருந்தாங்க...அது ப்ரான்ஸ் போயிட்டு வரும்...இப்போ கொஞ்ச நாளா...அங்க கெடுபிடி ஆகிட்டதுனால..சுவிட்சர்லாந்துக்கு தான் அதிகமா ஏத்துமதி பண்றாங்க..."

"ஐயைய்யோ..அப்போ இங்க யூகேல கசகசா கிடைக்காதா..."

"***என்ன கூண்டுக்கிளி மக்கர் பண்ணுது...**** இல்லீங்க இங்கயும் கிடைக்கும்...சுவிஸ்ல கசகசா சகாயவிலையில் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு சொல்ல வந்தேன்..."

"அப்பாடா நான் ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்..."

"நீங்க...போன வாரம் ஃபோன் பண்ணியிருந்தீங்கன்னு வையுங்க உங்களுக்கு அலேக்கா அப்படியே ஒரு கிலோவோ ரெண்டு கிலோவோ கசகசா வாங்கி வந்திருப்பேனே..."

"இல்லீங்க நமக்கு அவ்வளவு தேவைப்படாது..."

"** மக்கர் கிளியா இருக்கேன்னு பார்த்தா சரியான மக்கு கிளியா இருக்கே..**** இல்லீங்க இங்க யூகேல இருநூறு கிராம் கசகசா வாங்குறதுக்கு சுவிஸ்ல ஒரு கிலோ வாங்கலாம்ன்னு சொல்லவந்தேன்..."

"ஓ...தயிரு புளிக்காம கிடைக்குமா..."

"சுவிஸ்ல பால்தாங்க விசேஷம்...சூப்பரா இருக்கும்...அப்போ தயிரு எப்படி இருக்கும்ன்னு பார்த்துக்கோங்களேன்..."

"இல்லீங்க நான் யூகேல கேட்டேன்..."

"*** இன்னிக்கு ஒரு கப்பு டீ வேஸ்டாயிடும் போல இருக்கே**** ஆங் இங்கயும் கிடைக்கும் கிடைக்கும்....ஆனா சுவிஸ் மாதிரி டேஸ்டா கிடைக்காது..."

"இங்க எங்க தயிர் கிடைக்கும்"

" ***** &($*&*$(£$*$( ***** ....."

"நீங்க சமீபத்துல சுவிஸ் போயிருந்தீங்களா...."

"*** எனக்குத் தெரியும் உழைச்ச காசுல போட்ட டீ என்னிக்குமே வேஸ்டா போகாதுன்னு எங்க தாத்தா அன்னிக்கே சொல்லியிருக்கார்**** ஆமாங்க சும்மா போய் சுத்தி பார்த்துட்டு வரலாமேன்னு போன வாரம் போயிருந்தேங்க....மானே தேனே பொன்மானே...சுவிஸ்...கண்மணி...பொண்மணி....சுவிஸ்....மானே தேனே பொன்மானே...சுவிஸ்...."

"சூப்பர்ங்க அப்போ சுவிஸ் சூப்பரா சுத்தினீங்கன்னு சொல்லுங்க..."

"ஆமாங்க நம்ம பதிவர் மகேஷ் கூட சுவிஸ்க்கு வேலை நிமித்தம் வந்திருந்தார்...வந்து சுவிஸ்ல இந்திய உணவகத்துக்கும் வழியெல்லாம் சொன்னாருன்னா பார்த்துக்கோங்களேன். மனுசன் ரொம்ப நல்லவர்ங்க... ஜெனிவால ரெண்டு நாள் தொடர்ந்து வந்து கைடு காசு மிச்சப் படுத்திட்டார்னா பார்த்துக்கோங்களேன்....""

"ஓ அப்பிடியா...கொஞ்சம் மளிகை கடைக்கு வழி சொல்றீங்களா..."

"இங்கேர்ந்து நேரா உங்க வீட்டுக்கு திரும்பி போங்க....கார நிப்பாட்டிட்டு லெப்ட் சந்துல அஞ்சு நிமிஷம் பொடி நடை நடந்தீங்கன்னா...சூப்பர் இந்திய மளிகை கடை இருக்கு...எல்லாம் கிடைக்கும்....

"....???????"

"இருங்க போயிடாதீங்க...கீழே இருக்கிற படத்த கிள்க் பண்ணி நல்லா பாருங்க...அதுல பனியில பின்னாடி கோடு போட்ட மாதிரி ஒரு பாதை தெரியுதா...அதுல அப்பீடீக்கா அஞ்சு நிமிஷம் போனா கசகசா விக்கிற கடை வந்துறும்...உங்களுக்கு வழி கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கக் கூடாதேன்னு தான் இந்த படம் காண்பிச்சேன்..."




*** நம்மளுக்கு உன்னால் முடியும் தம்பிக்கு பக்கத்துல தேறுகிறதே ஆயிரத்துல ஒரு போட்டோ...அத பார்க்க வைக்கிறதுக்கு இன்னா கதவுட வேண்டியிருக்குடா சாமீ.....*******


பி.கு - இந்தப் பதிவிற்க்கு போட்டோ சூப்பர்...போன்ற பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும். உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி இருக்கீங்கன்னு வரும் கமெண்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தங்கமணி மாதிரி காறித் துப்பும் பின்னூட்டங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

Thursday, August 06, 2009

நியாபகங்கள்


உலகமே வெறுத்து யாரையாவது நாலு பேரை போட்டுத் தள்ளிடலாம் என்றளவுக்கு வெறுப்பு தட்டும் போதெல்லாம் தவறாமல் சமையல் பக்கம் போவேன். இதே மாதிரி தங்கமணிக்கும் மூட் அவுட்டாகி குறைந்தபட்சம் மூனு பேரையாவது போட்டுத் தள்ளிட தோன்றும் போதெல்லாம் புதுசாக ஏதாவது ஒரு டிஷ் ட்ரை பண்ணுவார்.

"ஐய்யைய்யோ சமையலா..நீங்களா..?...நான் கூட நின்னு எடுத்தாவது தரேன்"

"இதோ பாரு சிங்கம் என்னிக்கும் சிங்கிளாத் தான் சமைக்கும்"

"கிழிக்கும்...சிங்கம் சிங்கிளா சமைச்சா...கிச்சன் பன்னிங்க கூட்டமா வந்து கும்மியடிச்சிட்டுப் போன மாதிரி ஆயிடும்...நோ வே..போன தரம் பால்கோவா கிண்டறேன்னு எவர்சில்வர் குக்கர நான் ஸ்டிக் குக்கர் மாதிரி கரிச்ச உங்க பிரதாபம் போதும்..முதல்ல இடத்த காலி பண்ணுங்க" - நான் சமையல் அறை பக்கம் சமைக்க வந்தாலே தங்கமணி டெரர் ஆகிவிடுவார்.

அப்புறம் எதாவது சொல்லி சமாதானப் படுத்தி "அன்னிக்கு ஒரு நாள் சப்பாத்திக்கு செஞ்சியே கோபி மஞ்சூரியன் அத எப்படி செஞ்ச சொல்லு...? கரெக்டா செஞ்சியான்னு செக் பண்ணிக்கறேன்" என்று ஒரு ரெசிப்பி கேட்பேன். உடனே தங்கமணியும் மணாளனே மங்கையில் பாக்கியம் அஞ்சலி தேவி மாதிரி தேம்பி தேம்பி ரெசிப்பியை சொல்லுவார்.

நான் செய்யும் எல்லா டிஷ்ஷிலும் கட்டாயம் உருளைக்கிழங்கு இருக்கும். முதலாளி...அதில் ஒரு தொழில் ரகசியம் என்னான்னா... என் மகள்கள் இருவருக்கும் உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும். வெறும்ன வெந்து மேஷ் செய்து குடுத்தாலே "எப்படிப்பா இப்படி டேஸ்டியா சமைக்கிற"ன்னு சிங்கத்துக்கு சிடுக்கெடுத்து விடுவார்கள். தங்கமணி முன்னால் சொன்ன கோபி மஞ்சூரியன் ரெசிபியை கொஞ்சம் உல்டா செய்து, உருளைக்கிழங்கை வெந்து ஒரு கப் மாதிரி குடைந்தெடுத்து கோபி மஞ்சூரியனை அதில் போட்டு இட்டாலியன் டிஷ் என்று குடுப்பேன். "எப்படீப்பா இப்படி சூப்பரா.." என்று மகள்கள் திரும்பவும் ஆரம்பிக்கும் போது "இதெல்லாம் ரொம்ப ஓவர்டி...சிங்கத்துக்கு ரொம்ப தான் சிங்கியடிக்கிறீங்க ரெண்டு பேரும்" என்று தங்க்ஸ் மங்களம் பாடி விடுவார்.

நிற்க. என்னாடா சினிமா விமர்சனமாய் இருக்குமோன்னு பார்த்தால் திரும்பவும் சொந்தக் கதை சோகக் கதைய சொல்றானேன்னு நினைக்காதீங்க. என் சொந்தக் கதை பிசினெஸ் மாடலுக்கும் ஞாபகங்கள் பட பிசினெஸ் மாடலுக்கும் வித்தியாசம் அதிகமில்லை ஜென்டில்மேன்.

ரெயின் கோட் படத்தை லேசாக உல்டா செய்து அதை நண்பனின் சொந்தக் கதை என்று பேக் செய்திருக்கிறார்கள் அவ்வளவு தான். முடிவு மட்டும் நண்பனின் கதையா இல்லை படம் முழுவதுமேவா என்பதை தெளிவு படுத்தியிருக்கலாம்.

இது பா.விஜய்யின் முதல் படம். முதல் படத்திற்கு பரவாயில்லை. எடுத்த விஷயத்தில் ரொம்ப கத்தி போட்டு போர் அடித்து பாதியிலேயே படத்தை விட்டு எழுந்து போகுமளவுக்கு செய்யாமல் ஓரளவுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். இதையும் டைரக்டருக்கு முதல் படம் என்பதால் மட்டுமே சொல்லமுடிகிறது. மற்றபடி இதைக் கருத்தில் கொள்ளாமல் மற்ற படங்களோடு ஒப்பிட்டால் ரொம்பவே சுமார் ரகம் தான். பா.விஜய் டைரக்க்ஷனோடு நிப்பாட்டிக்கொண்டு ஹீரோவாய் வேறு யாரையாவது போட்டிருக்கலாம் என்பது என் தனிபட்ட எண்ணம். பாட்டு டேன்ஸ் என்று வரும் போது ரொம்பவே பொறுமையை படம் சோதிக்கிறது. படம் நெடுக வருபவர்கள் ரொம்பவே செயற்கையாக வசனம் பேசுகிறார்கள். ஹீரோவும் கவிதை எழுதுபவர் என்று திரைக்கதையை வைத்துக்கொண்டு தனிபட்ட முறையில் குடுக்கவேண்டியவர்களுக்கெலாம் கணக்கு செட்டில் செய்துவிட்டார் போலும். ஏதோ ஒரு பெருந்தலையை வேறு சாடுகிறார். மனுஷன் யாருன்னு தான் பிடி பட மாட்டேங்குது.

பா.விஜய் நடிப்பில் சேரனை இமிடேட் செய்கிறாரா என்று தெரியவில்லை அழும் போது அவரை மாதிரியே (கேவலமாக) இருக்கிறது. இதை கொஞ்சம் கவனித்தால் நலமாயிருக்கும். அவருடைய கவிதை வரிகள் வழக்கம் போல் நன்றாக வந்துள்ளன. கல்லூரி விழாவில் கவிதை வாசிப்பது, வாசிக்கும் போது திணறுவது, திணறும் போது முதல் வரிசையில் மூனாவது ஆளும், நாலாவது வரிசையில் ஆறாவது ஆளும் எழுந்து நின்று குடுத்த காசுக்கு தெம்பா திரும்பிப் போன்னு சொல்லுவது உடனே ஹீரோவிற்கு சக்தி வந்து அருவி மாதிரி கொட்டுவது ஹைய்யோ ஹைய்யோ....அடுத்த படத்திற்க்கு கூட நல்ல துடிப்பான அசிஸ்டெண்ட் டைரக்டர்களை வைத்துக் கொள்ளுங்கள் விஜய்...

Sunday, August 02, 2009

சுவாரஸ்ய பதிவர்கள்

முதலில் இந்த விருது பட்டர்ப்ளை அவார்ட் என்று ஒரு வருடத்திற்கு (போன வருஷம் தானே?) முன் ஒரு ரவுண்டு வந்தது. அப்போது Boo மற்றும் ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் இருவரிடமிருந்தும் இதைப் பெறும் பாக்கியம் கிடைத்தது. (இருவரும் என்னை மன்னிக்கவும்...சாரி அப்போது என்னால் அதை தொடரமுடியவில்லை) இந்த முறை இன்ட்ரெஸ்டிங் ப்ளாக் என்ற வேர்ஷனில் ராப், வசந்தகுமார் மற்றும் வெட்டிப்பயல் ஆகியோரிடமிருந்து விருது பெறும் பாக்கியம் கிடைத்திருக்கிறது. விருதை வழங்கிய அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. விதிமுறைப்படி நானும் எனக்குப் பிடிக்கும் சில ப்ளாக்குகளுக்கு இதைக் குடுக்கவேண்டும்.

அதற்க்கு முன்னால் இதை ஒரு அட்டகாசமான சந்தர்ப்பமாய் எடுத்துக்கொண்டும் ஒரு விஷயத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இங்கே நான் எழுதுவதை பாராட்டி ஈமெயிலிலும், பின்னூட்டத்திலும் மிக சிரமம் மேற்கொண்டு நீங்கள் எல்லாரும் நிறைய ஊக்குவித்து வருகிறீர்கள். ஆனால் இதில் நூற்றில் ஒரு பங்கு கூட நான் செய்வதில்லை. இது என் மனதில் நீண்ட நாளாய் உறுத்திக்கொண்டே இருக்கிறது. இது செய்யவேண்டாம் என்ற நோக்கத்தோடு நான் செய்யவில்லை. ஆனால் தற்போது சில நாட்களாய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் புதிய ப்ளாக்குகளுக்குப் போய் பின்னூட்டம் போட முயற்சித்து வருகிறேன். முதலில் இந்த விருதுக்கு முற்றிலும் புதிய ப்ளாக்குகளாய் அறிமுகப் படுத்த வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் தற்போது கொஞ்ச காலமாய் ப்ளாக் பக்கம் அதிகம் வர முடியவில்லை. (செந்தழல் ரவி இந்த அவார்ட்டையே ஏதோ தமிழ் ப்ளாக் உலகில் எரிந்து கொண்டிருந்த பிரச்சனையை தீர்பதற்குத் தான் ஆரம்பித்தார் என்று படித்தேன்...என்ன பிரச்சினை என்று கூட தெரியாத அளவில் தான் நான் ப்ளாக் படிக்கும் லட்சணம்). தற்போதைய தமிழ் ப்ளாக் இருக்கும் எண்ணிக்கையில் திருவிழாவில் தொலைந்த குழந்தை கதையாகி இந்தத் பதிவு ரொம்ப லேட்டாகிவிடக் கூடாதே என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். அத்தோடு இந்த விருது சுற்றி வரும் வேகத்தைப் பார்த்தால் நான் குடுப்பதற்க்குள் ஆட்டமே முடிந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது. அதனால் தெரிந்த, படித்த பிடித்த சில பதிவர்களையே நானும் லிஸ்ட் எடுத்திருக்கிறேன்.

சுவாரஸ்சியம் என்பது தனிப்பட்ட விருபத்தைச் சார்ந்தது. என்னைப் பொறுத்த வரையில் போட்டிருக்கும் பதிவு போரடிக்காமல் கடைசி மட்டும் படிக்க வைத்து சில சமயங்களில் பின்னூட்டத்தையும் படிக்க வைக்கும் பதிவுகள் இந்த வகையில் சார்ந்தது. இதில் தொடர்ச்சியாய் நிறைய பதிவர்கள் லெவல் காட்டி வருகிறார்கள். எனக்கு முகம் தெரிந்த நட்பு வட்டத்தை இந்த விருதுகளிலிருந்து எடுத்துவிட்டேன். கீழே இருப்பவர்கள் போக இன்னமும் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். ஆனால் எல்லாரையும் போட்டால் இது ஒரு மெகா சீரியல் நீள பதிவாக ஆகிவிடும் என்பதால் சுருக்கியுள்ளேன். விடுபட்டவர்கள் தவறாக நினையாதீர்கள்.

(சுட்டிகளின் ஆங்கில அகர வரிசைப் படி)

ஆசிப் அண்ணாச்சி - இவருடைய பதிவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது நவீன பின் தத்துவமாய் சொன்ன காக்கா வடையை சுட்ட கதை. இவருடைய பதிவுகளில் எங்க திருநெல்வேலி தமிழில் இருக்கும் நக்கல் எனக்கு மிகப் பிடிக்கும்.

Boo - ஆங்கிலப் பதிவர். இவர் பதிவுகளில் இருக்கும் உயிரோட்டம் அலாதியானது. ரெண்டு சுட்டிகளின் அம்மாவாய் பதியும் பதிவுகளில் இருக்கும் மெல்லிய நகைச்சுவை மிக ரசிக்கும் படியாக இருக்கும். இவர் என்னைப் பற்றி முன்பு எழுதியிருப்பதால் நான் மேலும் சொல்லுவதெல்லாம் பதில் மரியாதை செய்வது மாதிரி ஆகிவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

பிரபு கார்த்திக் - இவர் ஆங்கிலப் பதிவர். சீரியசான பல மேட்டர்களை இவர் எழுதும் பாணி எனக்கு மிக பிடிக்கும். இவருடைய ஹீ ஹீ பதிவுகள் மிக ரசிக்கும் படியாக இருக்கும். ஆனால் ஏனோ தற்போது அந்த மாதிரி பதிவுகள் இவரிமிருந்து கொஞ்சம் குறைந்துவிட்டது. நிறைய எழுதுங்க சார் (இத யார் சொல்றதுன்னு வெவஸ்தை இல்லையான்னு நீங்க சொல்றது கேட்கிறது...இருந்தாலும் சொல்லுவோம்ல :))

ஜொள்ளுப்பேட்டை - ஜொள்ளிங்க்ஸின் அத்தாரிட்டியே அண்ணாச்சி தான். ரசிக்கும் படி அழகாக எழுதுவார். என்ன..பதிவுகளில் படங்கள் காரணமாக ஆபிஸில் இவருடைய ப்ளாகை தெகிரியமாய் ஒப்பன் பண்ணமுடியாது...மினிமைஸ் பண்ணி படங்களை கவனமாய் பார்த்த பின் ஒப்பன் செய்துவருகிறேன்.

குந்தவை - இவரின் பதிவுகளில் துள்ளல் நடையில் இழையோடும் நகைச்சுவை கலக்கலாய் இருக்கும். ரங்கமணி கலாய்க்கும் சங்கத்தில் போர்டு மெம்பராய் இருக்கிறார். அன்றாட நிகழ்வுகளில் கலாய்த்து வருகிறார்.

குசும்பன் - சொல்லவே வேண்டாம்...இவரின் டைமிங் மற்றும் குசும்புகள் கலக்கல் ரகம். மிக ரசிக்கும் பதிவர்களில் ஒருவர். அரசியலிருந்து அன்றாட நிகழ்வுகள் வரை பதியும் அனைத்திலும் நையாண்டி சூப்பராய் இருக்கும்.

நவீன் - எனக்கும் கவிதைக்கும் ரொம்பவே தூரம். விதிவிலக்காய் இவரின் கவிதைகள் மட்டும் படித்துவருகிறேன். எதோ ஒரு பதிவை படித்துவிட்டு தொடர்ந்து படித்துவருகிறேன். பயமுறுத்தாத புரியும் தமிழில் அழகாய் சுவாரஸ்யமாய் எழுதிவருகிறார். கவிதைக்கு ஏத்த படங்கள் எங்கிருந்து தான் பிடிக்கிறாரோ மனுஷன். இவர் ப்ளாக் படித்த பின் தான் என்க்கு ஒரு ஞானோதயம் வந்தது. காதல் கவிதைகளுக்கு போடும் படியாக சினிமா தவிர்த்த இந்திய புகைப்படங்களே அவ்வளவாக இல்லவே இல்லை. கலாச்சாரம் என்ற பெயரில் என்னம்மோ பினாத்திக் கொண்டு வறட்சியாய் ஆக்கிவிட்டோமோ? இப்ப புரியுது தலைவர் குஞ்சுமோன் ஏன் பஸ்ஸ்டாப் சீனில் கூட வெள்ளைக்காரனை வைத்து படம் பிடித்தார் என்று ஹூம்

உருப்படாதது - நாரயணின் எழுத்து நடை வசீகரமானது. புதுப்பேட்டை சினிமா சமயத்தில் நார்த் மெட்ராஸ் நிழலுலகம் பற்றி இவர் எழுதிய பதிவுகள் அட்டகாசமானவை. புதுப்பேட்டை சினிமாவை விட அவை மிக சுவாரஸ்யமாக இருந்ததாக எனக்குப் பட்டது.

வெட்டிப்பயல் - ஐ.டி கம்பெனிகளில் அன்னாரின் பதிவுகள் மிகப் பிரபலம். சுவாரஸ்மாய் எழுதுவதில் விற்பன்னர். இவரும் எனக்கு இந்த விருது குடுத்து பாராட்டி இருப்பதால் மேலும் எழுதினால் பதில் மரியாதை ஆகிவிடும். ஆகவே அடக்கி வாசித்துக் கொள்கிறேன்.

Thursday, July 23, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.9

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6   Part 2.7   Part 2.8

ஜொள்ளிங்க்ஸ்...ஒரு மிகப் பெரிய ப்ராசஸ். ஜொள்ளு விடுவது என்பது...ஐ.ஐ.டியில் ஸ்டேட் ராங்க் வாங்குவது மாதிரி அத்தனை எளிது கிடையாது. கொஞ்சம் கரணம் தப்பினாலும் கேனப்பயலாகிவிடுவோம். ஜொள்ளுவிடுவது நாமாயிருந்தாலும் சுத்தி இருப்பவர்களும் சூழ்நிலையும் உதவ வேண்டும், உபயோகப் படுத்திக் கொள்ளவேண்டும். ஜொள்ளிங்க்ஸ் ப்ராஸசில் மிக உதவியாய் இருக்கும் பெர்சனாலிட்டிகளை ஒன்று இரண்டு என்று ஔவைய்யார் மாதிரி வரிசைப் படுத்தினால், முதலில் வருவது குழந்தைகள், இரண்டாவது பெரிசுகள். "என்னூடா செல்லம்...என்னூனூ பண்ணூறா ...ஜிஜுலிக்கு என்னூ வேணூமா.....இங்கூஉ பாரூடா குட்டீ...அஔ...?" என்று கொஞ்சும் போது இன்ஸ்டென்ட் பக்கவாதம் வர வைக்கும் மழலைகளின் பணி ஜொள்ளிங்ஸில் இன்றியமையாதது.

சினிமா கெடுத்ததோ இல்லை பார்த்துக் கற்றுக்கொண்டதோ, அது என்னமோ தெரியவில்லை...எல்லா வயதுப் பெண்களுக்கும் இந்த குட்டீஸ் பட்டாளத்தை ரொம்பவே பிடிக்கும். அதுவும் எங்க ஊர் அம்பாசமுத்திரம் மாதிரி பெரிய சிட்டிக்கு சென்னை, பம்பாய், பெங்களூர் மாதிரி கிராமத்திலிருந்து வரும் வயதுக் குமாரிகளெல்லாம் எப்போதும் மணிரத்னம் பட கதாநாயகிகள் மாதிரி கூடவே நாலு குட்டீஸ் பட்டாளத்தைக் கூட்டிக் கொண்டே திரிவாரகள். அது வரையிலும் பரட்டை தலை பர்சனாலிட்டியாயிருக்கும் ஜந்துக்களெல்லாம் உடனே க்ரிப்ட்டாலஜிஸ்ட் என்று ரோஜா அர்விந்த்சாமி பெர்ச்னாலிட்டிக்கு அப்கிரேடு ஆகிவிடும். உடனே ஊரில் இருக்கும் கிழவிகளையெல்லாம் தூக்கி கொண்டு தெருவில் நடக்க தோன்றும். எங்கேயாவது வைக்கப்போர் இருந்தால் அது மேலே ஹாயாக படுத்துக் கொண்டு சும்மாவாச்சும் வானத்தைப் பார்த்து ரசிக்கத் தோன்றும். தலையை ஸ்டையிலாய் ஒரு பக்கமாய் கோதிவிட்டு..."ஐ லைக் வில்லேஜ் கேர்ல்ஸ்"ன்னு ஃபீலிங்காய் டயலாக் பேசத் தோன்றும்.நதியையோ குளத்தையோ பார்த்தால் சும்மா ஒரு கை தண்ணிரை எடுத்து போவோர் வருவோர் மேல் செல்லமாய் தெளிக்கத் தோன்றும். (ஆனால் அவர்கள் சினிமாவில் வருவது மாதிரி காட்டிக்கொண்டு நிற்கமாட்டார்கள்...காட்டு காட்டுவென காட்டிவிடுவார்கள் என்பது வேறுவிஷயம்)

ஆனால் நம்ம ஜிகிடி கூட சுத்தும் நம் வாண்டுக் கூட்டதுக்கு நம்ம அவஸ்தை என்றுமே புரியாது. அது வரைக்கும் "அண்ணா ப்ளீஸ் என்னை உங்க சைக்கிளில் ஒரே ஒரு ரவுண்டு அடிங்கண்ணா" என்று கெஞ்சிக்கொண்டிருக்கும் வாண்டுகள் எல்லாம் ஒரே நாளில் கட்சி தாவிவிடும். "அந்த அக்கா வாடகை சைக்கிள் வாங்க அம்பது பைசா குடுத்தாளே.." என்று நம் இயலாமையை வாண்டுகள் எள்ளி நகையாடும் போது மூட்டை தூக்கி காசு சேர்த்து ஒரே பாட்டில் நாமும் இன்டஸ்டிரியலிஸ்டாய் ஆகிவிட நரம்புகள் முறுக்கேறும். எல்லாம் இருபத்தி இரண்டு வினாடிகள் தான் அதுக்கப்புறம்..."இன்னிக்கு என்ன இன்னும் நம்ம ஃபிகர வெளியிலயே காணுமே"ன்னு கண்கள் தேட ஆரம்பித்துவிடும்.

விடலைப் பருவத்தில் குமரிகளுக்குப் பிடித்தது தான் நமக்கும் பிடிக்குமே...குரங்குக் குசாலா கூட்டத்தில் இந்தப் பக்கம் ஒருவன் நேரு மாமாக்கே நான் தான் மாமா என்று ரோஜாவின் ராஜாவாய் குழந்தைகளைக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவான், அந்தப் பக்கம் இன்னொரு வானரம் எம்ஜியாராய் மாறி தேமேன்னு போய் கொண்டிருக்கும் ஒரு பெருசை வேலை மெனக்கேட்டு மருந்துக்குக் கூட சுத்தமாய் ட்ராபிக்கே இல்லாத ஒரு ஒத்தையடி பாதையில் சர்வஜாக்கிரதையாய் கையைப் பிடித்து ரோட்டை க்ராஸ் பண்ணிவிட்டு வரும். இந்த மாதிரி ஐடியா எதுவும் தோன்றாமல் மசனையாய் இருக்கும் வயெத்தெரிச்சல் கூட்டம் மட்டும் வழக்கம் போல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இந்த கடமை வீரர்களைப் பார்த்து கெக்கலித்து ஃபிகர்கள் முன்னால் எவ்வளவு வார முடியுமோ அவ்வளவு வாரி விட்டுக்கொண்டிருக்கும்.

வாட்டர் கோவிந்து என்னுடைய மழலை கொஞ்சல்ஸில் தொழில் முறை பார்ட்னர். முறையாகச் சொல்வதானால் ஜொள்ளிங்ஸில் பார்னர்ஷிப்பே கிடையாது நம்மைத் தவிர எல்லாருமே எதிரி தான். ஆனால் "யுவர் ஆனர்..." என்று சினிமாவில் வரும் சோப்ளாங்கி எதிர் தரப்பு வக்கீல் கெட்டப்பில் வாட்டர் கோவிந்து செய்யும் பெரும்பாலான சில்மிஷங்கள் எனக்கு சாதகமாய் தீர்ப்பாகிவிடும் என்பதால் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்துக்கொண்டிருந்தேன். வாட்டர் கோவிந்தும் என்னை மாதிரி சுத்த சைவம் ஆனால் சில சமயம் வாட்டர் குடுத்தாலே க்வாட்டர் குடித்த மாதிரி சவுண்டுவிடுவதால் வாட்டர் கோவிந்து என வழங்கப்பட்டு வந்தான். கொஞ்சம் வளர்ந்த வாண்டுக்கள் நேரம் காலம் தெரியாமல் பாக்யராஜ் படத்தில் வருவது மாதிரி வாரிவிட்டுவிடும் என்பதால் குழந்தையும் தெய்வமும் ஒன்று பாலிசி எடுத்து இன்னும் பேசவராத பொக்கைவாய் மழலை கைக்குழந்தைகளை மட்டுமே வைத்து நானும் வாட்டர் கோவிந்தும் ஷோ காட்டிக் கொண்டிருந்தோம்.

ஆனால் இந்த மழலை குழந்தைகளை வைத்து ஷோ காட்டும் விஷயத்தில் தொன்று தொட்டு வயதுக் குமரிகளுக்கெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இருக்கிறது. நாம் எதார்த்தமாய் "செல்லம் இங்க என்னை பாருடா...என்னை பார்த்து சிரிடா செல்லம்..." என்று குழந்தையைக் கொஞ்சினால் ஏதோ ஜாடைமாடையாய் அவர்களுக்கு தான் மெசெஜ் குடுக்கிறோம் என்று அனர்த்தம் செய்துகொள்கிறார்கள். கல்யாணத்திற்கு முன் "மாமாக்கு ஒரு முத்தா தாடா செல்லம்"ன்னு தங்கமணி மட்டும் இருக்கும் போது தங்கமணி வீட்டில் இருந்த ஒரு குழந்தையை நான் எதார்த்தமாய் கொஞ்சியதை இன்று வரை அனர்த்தம் செய்து கொண்டு நான் என்னம்மோ அலையாண்டிக் குப்பத்தைச் சேந்தவன் மாதிரி சாடிக்கொண்டிருக்கிறார். ஹும்....பெண்களைச் சொல்லிக் குற்றமில்லை அவர்கள் வயது அப்படி...கற்பனை கண்ணை மறைக்கிறது. (நான் இப்பவும் சொல்றேன் அந்தக் குழந்தை கிட்ட தான் முத்தா கேட்டேன்..இது என் குலதெய்வம் கேட்ரீனா ஃகைப் மேலே சத்தியம்)

ஆனால் எங்கள் தெருவில் கொஞ்சம் மழலை பஞ்சம். இருக்கும் முக்கால் வாசி மாமிபாட்டிகளுக்கு மத்தியில் புதிதாய் தெருவிற்கு குடிவந்த சந்திரா அக்கா மட்டும் தான் கொஞ்சம் இனிமையாய் பேசுவார். "நீங்க ஐய்யோ பாவம்..உங்களுக்கு...ஏகப்பட்ட வேலை....கிச்சுவ பத்தி கவலயே படாதீங்கோ தெருவில சுத்திக் காட்டி அவன அழாம நாங்க பார்த்துக்கறோம்..." என்று தொழில்ரீதியாக நாங்கள் கிச்சுவை அபேஸ் செய்தால் ஒன்றும் சொல்ல மாட்டார்.

தொழில் முறை போட்டியில் ஒரு தடவை நான் கிச்சுவை வைத்து ஜிகிடியிடம் கூட இரண்டு மார்க் வாங்கிவிட்டேன் என்று வாட்டர் கோவிந்து டென்ஷனாகி கிச்சுவை என் கையில் இருந்து பிடுங்கி "பிள்ளை நிலா" பாட்டு பாடி கிச்சுவை தூக்கி தூக்கி பிடித்து "அங்க காக்கா பாருடா செல்லம்"ன்னு கொஞ்ச, வாட்டர் கோவிந்து குலுக்கின குலுக்கலில் கிச்சு காக்காயைப் பார்க்காமல் போட்டிருந்து தொள தொளா க்ரீம் கலர் ஜெட்டிக்கு மேட்சிங்காய் முந்தின நாள் செரிலாக்கை கக்கா போய்விட்டான். ஜிகிடி முன்னால் கிச்சுவின் காக்காய்க்கு பதில் கக்கா மேட்டர் தெரிந்துவிடக் கூடாதே என்று வாட்டர் கோவிந்து அப்புறம் நெளி நெளியென்று நெளிந்து மேட்டரும் கக்காவும் வெளியே வராமல் சமாளித்து போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஆத்திரத்தில் வாட்டர் கோவிந்து கிச்சுவை நைஸாய் நுள்ளி கிச்சு அழுது அதற்கப்புறம் சந்திரா அக்கா எங்கள் கிச்சு மழலை பாலிசியைக் கேன்சல் செய்துவிட்டார்.

"உன்னை எவன்டா காக்காய பாரு குருவியப் பாருன்னு ஓவராக்ட் செய்யச் சொன்னது? என்னம்மோ பத்து புள்ள பெத்து எக்ஸ்பீரியன்ஸ் போட்ட மாதிரி ஓவர் சீன் போட்ட கை மேல பலன்...வேண்டியது தான் உனக்கு" - எனக்கு ஏக எரிச்சல்

" சரி விடுறா..மழலைச் செல்வங்கள் கொஞ்சம் இம்சைடா...அப்பப்போ நாறிடறது. பேசாம நாம முதியோர் நலத் திட்டம் ஆரம்பிச்சா என்ன..அதான் பிரச்சனையே இருக்காது" என்று வாட்டர் கோவிந்து அப்புறம் எம்ஜியார் கட்சி ஆரம்பித்துவிட்டான்.

தொடரும்

Monday, July 20, 2009

அராகிஸ் ஹைப்பொகியா

"லீட்ஸ் போகும் ட்ரெயின் போய்விட்டதா...?"

"இன்னும் இல்லை ஆனால் நீ போய் பிடிப்பதற்க்குள் கிளம்பினாலும் கிளம்பிவிடும், அன்டர்வேரில பாம் கட்டி தொங்கவிட்ட மாதிரி நீ ஓடினால் ஒழிய ட்ரெயினை பிடிப்பதற்கு சான்ஸே இல்லை. ஒருவேளை பிடித்துவிட்டாயானால் லீட்ஸில் இறங்கும் போது உனக்கு ஒரு கோப்பை குடுக்க செய்தி அனுப்புகிறேன்"

"உன் எடை அனேகமாக தொன்னூற்றி இரண்டு கிலோ இருக்குமே..."

"...?"

"இல்லை உனக்கு இருக்கும் கொழுப்பை வைத்து உன் எடையை ஒரு அனுமானம் செய்தேன்..." சொல்லிவிட்டு அந்த ரயில்வே சிப்பந்தியை திரும்பிப் பார்க்காமலேயே பாம் வைத்தது மாதிரி ஓடியதில் ட்ரெயினை பிடித்தேவிட்டேன். அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறி உட்கார்ந்திருந்த இருபத்தி சொற்ப எண்ணிக்கைக்கு இன்னும் கொஞ்சம் நேரம் நின்று கூட்டத்தை ஏற்றிப் போனால் ரயில்வே நஷ்டத்தை குறைக்கலாம் என்று தோன்றியது.

கிடைத்த ஒரே ஒரு ஜன்னலோர இருக்கைக்கு எதிரே பை மட்டும் இருந்தது ஆளை காணோம். ரொம்ப தள்ளி இரண்டு இந்தியப் பெண்மணிகள் எதிரும் புதிருமாய் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. என்னை மாதிரி நீங்களும் மூளையை ரொம்பவே கசக்கி யோசித்திர்களானால் கண்டுபிடித்துவிடுவீர்கள். பிரபுதேவா படங்களில் அவர் நடனமமைத்த பாட்டுகளில் கதாநாயகனுக்கு இடமும் வலமுமாக இரண்டு பெண்கள் இடுப்பில் வட்டமாக கொட்டு வைத்துக்கொண்டு குலுக்கல் குத்தாட்டம் போடுவார்கள். ஒருவர் கொஞ்சம் வஞ்சனையில்லாமல் திடகாத்திரமாக இருப்பார்...இன்னொரு பெண்மணி ஒடிசலாய் மாடலிங் கச்சிதமாய் இருப்பார். பத்துக்கு ஆறு படங்களில் விஜய் இவர்களுக்கு நடுவில் கழுத்தில் கர்சீப் சகிதம் நட்பைப் பற்றியோ, உலகத்தைப் பற்றியோ நீயும் நானும் என்று உங்களைப் பார்த்து தத்துவ வரிகள் பாடிக்கொண்டிருப்பார். இவர்களும் சளைக்காமல் சுத்தி சுத்தி ஆடுவார்கள். அவர்கள் இருவரும் டேன்ஸ் பெண்மணிகள் மாதிரியே இருந்தார்கள்.

ஆனால் அவர்கள் நம் கதைக்கு உப்புப் பெறமாட்டார்கள். நீங்கள் அந்தப் பெண்களைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த கொண்டிருந்த போது என் எதிரே வந்து உட்கார்ந்த காக்கேசிய (வெள்ளைக்கார) பதுமையை தவறவிட்டுவிட்டீர்கள். கண்கள் நாலாப் பக்கமும் இருக்கனும்..இல்லாட்டா இந்தக் காலத்துல தூக்கி சாப்பிடுவாங்க. நம் பதுமை மிக அழகாய் இருந்தாள். கருப்புக்கும் பிரவுனுக்கு நடுக் கலரில் இருந்த தலை முடி அவளை பளிச்சென்று காட்டியது. கல்யாணமாகாத என்னை மாதிரி இருபத்தைந்து வயது இளைஞர்களை சோதிப்பதற்காகவே கடவுள் அனுப்பி வைத்த மாதிரி இருந்தது. பெத்தாய்ங்களா செய்ஞ்சாங்களான்னு டவுட்டே வரவில்லை ...கண்டிப்பாக செய்திருப்பார்கள்.

"ஹலோ..எப்படி இருக்கிறீர்கள்" கூச்சமே இல்லாமல் அராகிஸ் ஹைப்பொகியா சாகுபடியை ஆரம்பித்தேன்(அதாங்க கடலை). இந்த ஒரு விஷயத்திற்காகவே வெள்ளைக்காரர்களை எனக்கு ரொம்பவே பிடிக்கும். யாரிடம் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம்.

"நான் நலம் நீங்கள்..?" கண்டிப்பாய் திரும்ப கேட்பாள் என்று தெரியும்.


"உங்களை பார்க்கும் வரை நன்றாகத் தான் இருந்தேன்..." "..." அவள் மணிரத்னம் படம் பார்த்ததே இல்லை என்று அப்பட்டமாக தெரிந்தது.

"நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்"

"நன்றி.." நீங்களும் அழகாக இருக்கிறீர்கள் என்று அவள் திரும்பச் சொல்லுவாள் என்று எதிர்பார்த்தது என் தப்பு. கீதையில் கிச்சு சொன்னதை நியாபகப் படுத்திக்கொண்டேன்.

"உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது எனக்கு..." யோசிக்க கூட இல்லாமல் அவள் உதட்டில் கசிந்த புன்னகை ஆயிரம் நக்கல் செய்தது. சே அழகாய் இருக்கிறாள் என்று சொன்னதற்கு முன்பு சொல்லி இருக்கவேண்டும். எனக்கு ஏன் அழகான பெண்களை எல்லாம் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று தெரியவில்லை. வெள்ளை தோலுக்கு அம்சமான கலரில் உடையணிந்திருந்தாள். சீசனுக்கு பூக்கும் பூக்களுக்கு ஏத்த மாதிரி உடையை தேர்ந்தெடுப்பாள் போலும். உறுத்தாத கலரில் மேட்ச்சிங்காய் நெயில் பாலீஷ்.

"நீங்கள் மங்கையர் மலர் படிப்பீர்களா...?"

"..மங்கேயெ....???" அவள் இதழ் பெயரை எசகுபிசகாய் இழுத்த போதே தெரிந்து விட்டது கண்டிப்பாக படித்திருக்க மாட்டாள்.

"இல்லை...டெய்லி பன்னீரில் ரோஜா பூவைப் போட்டு ரெண்டு மணி நேரம் அழுக்கு துணியை ஊறவைப்பது போல கையை ஊற வைத்தால் கைகள் இந்த மாதிரி பட்டு போல இருக்கும் என்று எங்க ஊர் மங்கையர் மலரில் கீரனூர் பாக்யலட்சுமி டிப்ஸ் குடுத்திருந்தார்..ஒருவேளை படித்துவிட்டு ட்ரை செய்திருப்பீர்களோ என்று கேட்டேன்..." இந்த முறை அவளின் பலமான புன்னகை நான் ஜொள்ளு விடுவதாக அனர்த்தம் செய்து கொண்டதை பறை சாற்றியது. தலைக்கு மேலே போன பின் ஜானென்ன பீட்டரென்ன என்று நானும் முக்காடை தூக்கிவிட்டேன்.

வெள்ளைக்கார பெண்மணிகளின் வயதை கண்டுபிடிப்பது மட்டும் மிக கடினமான விஷயம். நிறைய முப்பத்தி சொச்சத்தை எல்லாம் இருபத்தி சொச்சம் என்று தப்புக் கணக்கு போட்டிருக்கேன். பார்க்க அவ்வளவு இளமையாக இருப்பார்கள். இவளுக்கு அனேகமாய் என்னை விட இரண்டு வயது கூட இருக்கலாம் ஆனால் இருபது மாதிரி தான் தெரிந்தாள். டெண்டுல்கரை ரோல் மாடலாய் தத்து எடுத்துக் கொண்டு சாகுபடியை தொடர்ந்தேன்.

"உங்களுக்கு லீட்ஸா..."

"இல்லை நியூகாஸில்..லீட்ஸில் ட்ரெயின் மாறவேண்டும் "

"லண்டனுக்கு அடிக்கடி வருவீர்களா....?"

"ஆம் வேலை விஷயமாக வருவேன்..நீங்கள்..?"

"எனக்கு லண்டன்...வேலை விஷயமாய் எடின்பரோ போகிறேன்..." எண்பது பெர்சண்ட் எங்களுக்குள் ஒற்றுமை இருந்தது எனக்கு ரொம்பவே சந்தோஷமாய் இருந்தது. அவளுக்கு புடவை உடுத்திக் கொள்ளச் சொல்லிக்குடுக்கவேண்டும்...புடவையில் கொள்ளையழகாக இருப்பாள்.

"உங்களுக்கு கல்யாணமாகிவிட்டதா...?"

"எக்ஸ்க்யூஸ்மீ...??" அவள் பார்வையில் அத்தனை சினேகமும் பட்டென வடிந்திருந்தது. எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. கேட்டிருக்க கூடாது. சுபஸ்ய சீக்கிரம்ன்னு ஓவராய் எக்சைட்டட் ஆகிவிட்டேன். இன்னும் மூனு மணி நேர பிரயாணம் இருக்கிறது ஒரு வேளை அவள் எடுத்த ஸ்டேஷனில் இறங்குவதாய் இருந்தாலும் கூட ஒரு மணி நேரம் இருக்கிறது. கடலையை பதமாய் வறுத்திருக்கவேண்டும்

அதற்கப்புறம் அவள் ஒரு புஸ்தகத்தில் ஆழ்ந்து விட்டாள். நானும் லேப்டாபை திறந்து ஆபிஸ் வேலை பர்ப்பது மாதிரி கதை படிக்க ஆரம்பித்துவிட்டேன். நான் கதையில் ஒன்றிப் போயிருந்த அடுத்த பதினைந்து நிமிடத்தில் "ஆர் யூ சிங்கிள் ...." என்று அவள் கேட்ட போது எனக்கு பல்லெல்லாம் வாயாயிருந்தது.இவளுக்கு முதலில் மணமாய் வத்தகுழம்பு வைக்க சொல்லிக்கொடுக்கவேண்டும். அப்புறம் முட்டைக்கோஸ் பருப்பு உசிலி.

அப்புறம் பேசினோம் பேசினோம் பேசிக்கொண்டே இருந்தோம். அவளும் எக்சைட் ஆகி சளைக்காமல் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தாள். என் ஆபீஸைப் பற்றி கேட்டாள் டிப்பார்ட்மென்ட் ஹெட் பற்றிக் கேட்டாள்...சில பேரோடு இமெயில் கேட்டாள் பல பேரோடு எக்ஸ்டென்ஷன் நம்பரெல்லாம் கேட்டாள்..வயசுப் பையனிடம் பேசும் போது ஏதோ பேச்சை வளர்கனுமே என்று இந்த டாப்பிக் தான் என்று இல்லாமல் இன்னமும் என் கம்பெனி பற்றி ஏதேதோ கேட்டாள். ஆனால் நான் ரொம்ப உஷாராக தேவை இல்லாதையெல்லாம் கேட்காமல் அவள் எங்கே நெயில் பாலீஷ் வாங்கினாள், டேவிட் பெக்காம் பெண்டாட்டி விக்டோரியா பெக்காம் பற்றி என்ன நினைக்கிறாள் என்று அவளே அறியாமல் அவளைப் பற்றிய விஷயங்களை கறந்துகொண்டிருந்தேன். அவளும் பெக்க பெக்கவென்று விஷயங்களை உளறிக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு என்னை ரொம்பவே பிடித்துவிட்டது என்று நினைக்கிறேன், பான்ட்ரீ காரிலிருந்து ஹாட் சாக்லேட் வாங்கிக் கொடுத்தாள். கண்டிப்பாய் இவளுக்கு வசந்த பவனில் பில்டர் காப்பி வாங்கிக்கொடுக்கவேண்டும். சொக்கிப் போய்விடுவாள். அப்புறமும் லீட்ஸ் வரை ஏகத்துக்கு பேசிக்கொண்டே வந்தோம். இறங்குவதற்க்கு முன் அவளோட போன் நம்பர் கேட்டேன். என்னை ரொம்ப பிடித்ததால் அவளுடைய பிஸினஸ் கார்டு குடுத்தாள்.

லீட்ஸில் அவள் இறங்கியபின் யோசித்ததில் அவளை இதற்கு முன் எங்கே பார்த்திருக்கிறேன் என்று நியாபகம் வந்துவிட்டது. அவள் கம்பெனியின் ப்ராடெக்டை எங்கள் கம்பெனிக்கு விற்பதற்காக ப்ராடெக்ட் டெமோவுக்கு வந்திருந்தாள். எங்கள் கம்பெனி பெரிய கம்பெனி என்பதால் பெரிய ஆர்டருக்கு இன்னமும் பிரம்மப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவள் மட்டும் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் நான் கதை படிப்பது மாதிரி பாவலா காட்டிய போது என் லேப்டாப்பில் இருக்கும் எங்கள் கம்பெனி ஸ்டிக்கரை நோட் செய்து நூல் விட்டு அவள் ப்ராடெக்ட் விற்பனைக்கு சம்பந்தமான கேள்விகள் கேட்டிருக்கலாம்...என்னைப் பார்த்ததில் கொஞ்சம் ஓவர் எக்சைட் ஆகிவிட்டாள் அவ்வளவு தான். கண்கள் நாலுபக்கமும் இருக்கவேண்டாமா..இல்லாவிட்டால் இந்தக் காலத்தில் தூக்கி சாப்பிட்டுவிட மாட்டார்களா...இருந்தாலும் அந்த நெயில் பாலிஷ் அவளுக்கு ஏகத்துக்கு எடுப்பாய் இருந்தது. மல்லிகைப்பூ வைத்து பின்னிக் கொள்ளச் சொல்லிக் குடுக்கவேண்டும்.

அடுத்த ஸ்டேஷனில் அவளிடத்தில் வந்து உட்கார்ந்த அடுத்த காக்கேசியப் பெண்மணி அவளை விட அழகாக இருந்தாள். எனக்கு இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது.

"நீங்கள் மங்கையர் மலர் படிப்பீர்களா"

Tuesday, July 14, 2009

அவன்

சிகரெட் வாடை மூக்கைத் தாக்கிய போது தான் அவன் பஸ் ஸ்டாப்பில் என் பின்னால் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். இவன் எப்போது வந்தான், திரும்பி லேசாக அவனைப் பார்த்த போது எனக்கு கலவரமாகியது. நல்ல பரட்டையாய் தலை, நாலு நாள் சவரம் செய்யாத தாடி, ஒழுங்கு படுத்தாமல் கொஞ்சம் தாறுமாறாக வளர்ந்த மீசை. லுங்கி அணிந்திருந்தான். சட்டையில் மேல் பட்டன் போடாமல் முழுக் கையை மடக்கிவிட்டிருந்தான். தலை முடி அழுந்த வார முயற்சித்து தோற்றுப் போயிருந்தது தெரிந்தது.

பேங்கிலிருந்து லட்ச ரூபாயை இப்படி ஹாட் கேஷாக எடுத்துப் போக தனியாளாக வந்திருக்க கூடாது. சேகரையாவது துணைக்கு கூட்டி வந்திருக்க வேண்டும். இப்படி சினிமாவில் வருவது மாதிரி வானம் தீடீரென்று இருட்டி இந்த ஒதுக்குப் புற பஸ்ஸடாப்பில் தனியாக நிற்பேன் என்று சத்தியமாக கற்பனை கூட செய்து பார்க்கவில்லை. இப்படியா ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் பேங்கை திறப்பார்கள். "ஆட்டோல மட்டும் ஏறிடாத...இந்த மாதிரி நிறைய கேஷ் எடுக்கும் போது உள்ளையே ஒருத்தன் நோட்டம் பார்த்து தகவல் குடுத்திருப்பான்...இவன் சும்மா ஆட்டோல வர்ற மாதிரி வந்து ..தெரு முக்குல இன்னொருத்தன் முன்னாடி ஏறிப்பான்...அப்புறம் சவுக்குத் தோப்புல உன்னை கட்டிப் போட்டுட்டு பெட்டியோட அவங்க கம்பி நீட்டிடுவாங்க" - அவசரமாய் பணம் எடுக்க போகிறேன் என்று பக்கத்து வீட்டுக்காரார்கள் குடுத்த இலவச அட்வைஸில், வந்த ஒரு ஆட்டோவையும் வேண்டாமென்று சொல்லிவிட்டு இப்படி அம்போவென்று பஸ்ஸுக்கு நின்று கொண்டிருக்கிறேன்.

சிகரெட்டை பீடி மாதிரி பிடித்துக் குடித்துக் கொண்டிருந்தான். அவன் என்னையே முறைத்துக் கொண்டிருந்தது எனக்கு முதுகில் ஊறியது. அவன் முகம் எங்கேயோ பார்த்தது மாதிரி வேறு இருந்தது. போன வார தினமலரில் எச்சரிக்கை விளம்பரத்தில் எதிலாவது பார்த்தேனா என்று யோசிக்க ஆரம்பித்தேன். இல்லை அன்று ஆபீஸுக்கு பக்கத்தில் நடந்த சண்டையில் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தானே அவனா...-ம்கூம்...வேறு எங்கேயோ பார்த்திருக்கிறேன்.

"டைம் என்னா சார்" - அவன் கேட்ட போது எனக்கு உதறல் கூட ஆரம்பித்தது. பாழாய் போன பஸ் வந்து தொலைய மாடேங்கிறதே என்றிருந்தது.

அவனும் என்னுடன் வந்து நிற்க ஆரம்பித்த போது எனக்கு டென்ஷன் அதிகமாக ஆரம்பித்தது. சைட் வாக்கில் பஸ்ஸை நோட்டம் விடுவது போல் பார்த்தில் மூளையில் மின்னல் மாதிரி வெட்டியது. எங்கே பார்த்தேன் என்று நியாபகம் வந்து விட்டது.

திரும்பவும் பார்த்ததில் அவனுடைய சைட் போஸ் ஊர்ஜிதப்படுத்தியது. அடப்பாவி அவனா இவன்..சந்தேகமேயில்லை அவனே தான். யாரு என்று தெரிந்ததற்கப்புறம் கேட்டுவிட எனக்கு நாக்கு பரபரத்தது.

"எக்ஸ்யூஸ்மீ... நீங்க இப்போ சமீபத்துல வந்த "ஒரு கமர்கட்டும் நாலு கடலை மிட்டாயும்" படத்துல நடிச்ச ஹீரோ தானே?"

அவன் முகத்தில் ஒரு ஆச்சரியம். ஆனால் தீனமாய் மறுத்தான்.

"இல்லீங்க அது நான் இல்லை"

"ஓ..சாரி படப் பெயரைக் குழப்பிட்டேன்...நீங்க "நேத்து வைச்ச கஞ்சி" அந்த ஹீரோ தானே உங்கள சைட் போஸில பார்த்த அப்புறம் தான் ஸ்ட்ரைக் ஆச்சு "

"இல்லீங்க...நீங்க வேறங்க...நான் அந்த படத்துக்கு ஹீரோவா செலெக்ட் ஆகி இருப்பேன்...நீங்க சொன்ன அதே சைட் போஸில நான் கொஞ்சம் படிச்சவன் கணக்கா டீசென்டா இருக்கேனாம்..அதுனால வேண்டாம்ன்னுட்டாங்க..இப்போ மூக்கின்னு ஒரு படத்துக்கு அனேகமா செலெக்ட் ஆகிடுவேன்னு நினைக்கிறேன் ஸ்க்ரீன் டெஸ்டெல்லாம் நேத்து தான் முடிஞ்சிது...உங்க வாய் முஹூர்த்தம் பலிக்கனும்"

Wednesday, May 13, 2009

அன்புள்ள தங்கமணிக்கு...

வாவ்...இந்தப் புடவை எப்போ எடுத்தோம்...இதுல நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா...அப்படியே ஜன்னல் பக்கத்துல வானத்துல காக்காய பார்க்கற மாதிரி கன்னத்துல கைய வெச்சிண்டு ஒரு போஸ் குடு...டக்குன்னு கேமிரால பிடிச்சுடறேன்...என் அடுத்த படத்துக்கு இந்த மாதிரி ஒரு ப்யூட்டிய தான் தேடிண்டு இருந்தேன்....

தேங்ஸ் பட் நோ தேங்க்ஸ்..தெளிவாவே சொல்லிடறேன்...கண்டிப்பா இன்னிக்கு ராத்திரி என்னால சப்பாத்தியும் சன்னா மசாலாவும் பண்ணவே முடியாது...!!!!!!

சே மனுஷன் சன்னா மசாலாவுக்கெல்லாம் பொய் சொல்லி பிச்சை எடுக்க வேண்டியதாப் போச்சு...சனியன் நானும் அத எவ்வளவு வருஷமா பண்ணிப் பார்க்கறேன் ஒரு தரமாவது நல்லா வந்து தொலைய மாட்டேங்குது...நீயும் அடுக்களையில எவ்வளவு தான் கஷ்டப்படற...இதுக்கு தான் ஒரு வெள்ளக்காரிய வீட்டோடு கொண்டு வந்துடறேன்னு சொல்றேன்...அவளும் கூட மாட ஹெல்ப் பண்றதோட அக்கா அக்கான்னு உங்கிட்ட ஆசையா இருப்பா...நீ தான் கேக்க மாட்டேங்கிற

ஏன் அதுக்கு பதிலா நான் ஒரு ஆள கூட்டிண்டு வரேனே ...அவன் கூட தான் உங்கள அண்ணா அண்ணான்னு கூப்பிடறதோட உங்களுக்கும் ஒத்தாசையா இருப்பார்...நம்ம அடுத்த தெரு ஆப்பிரிக்க நண்பர் எப்படி வசதி...?

அடிப்பாவி அந்த ஆள் "கேய்"ன்னு தெரிஞ்சு பழிவாங்குறியா...அவன் ஆள் இருக்கிற சைஸ்சுக்கு...உனக்குள்ள இப்படி ஒரு சொர்னாக்கா இருப்பான்னு நான் நினைக்கவே இல்லை....

என்னடி கெக்கபிக்கன்னு பார்த்துண்டு இருக்க...ஹோம்வொர்க்க எடுத்துண்டு வா. டி.வி.யப் பார்க்காம அந்த சோபால என்ன பார்த்து இப்படி திரும்பி உட்காரு...கான்சென்ட்ரேஷன் இம்ப்ரூவ் ஆகும். இந்தா இந்த டி.வி ரீமோட்ட பக்கத்துல வைச்சிக்கோ...மாடிலேர்ந்து அம்மா கீழ இறங்கி வர்ற சத்தம் கேட்டா டி.விய டக்குன்னு ஆஃப் பண்ணிட்டு ரிமோட்ட உன் பக்கத்துலேயே வெச்சிக்கோ. இல்லைன்னா அப்புறம் டீ.விய பார்த்துண்டே ஹோம்வொர்க் பண்றன்னு உன்ன தான் சத்தம் போடுவா...

அம்மா....டீ.வில பில்லா போடறான்...அப்பா நயன் தாரா பார்க்கறார்....

தாயைப் போல் பிள்ளைன்னு சும்மாவா சொன்னான்...ஒரு மட்டு மரியாதையே தெரியல உனக்கு.....இப்படியா நயன் தாரான்னு மண்டைல அடிச்ச மாதிரி சொல்றது...சித்தின்னு அழகா சொல்லுடா...சரி சரி உக்காரு...உடனே எழுந்து போய் மாடில உங்கம்மா கிட்ட ஊத வேண்டாம்..இன்னிக்கு கோட்டா அல்ரெடி ஓவர்...நாளைக்குப் பார்த்துக்கலாம்...ஹூம்...சோபால பூனைய வைச்சிண்டு சகுனம் பார்த்தேன் பாரு என்ன சொல்லனும்...

டாட் ...ஷீ இஸ் புல்லியிங் மீ....நான் தானே உங்க கடைசிப் பொண்ணு....ஷீ சேஸ் ஷி இஸ் தெ ஒன்

அவ சொன்னா சொல்லட்டும்...கண்டுக்காத...அதெல்லாம் இருக்கட்டும்...இங்க பாருடா செல்லம்...நான் உன்கிட்ட முன்னாடியே நிறைய தரம் சொல்லி இருக்கேன்...நீ என்னோட ரெண்டாவது பொண்ணுன்னு சொல்லிக்கோ ஆனா நீதான் கடைசிப் பொண்ணா இல்லியான்னு நானும் உங்க அம்மாவும் தான் பேசி ஒரு முடிவெடுக்கனும் ஓ.கேவா...

குழந்தை கிட்ட என்ன பேசறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லையா...அன்னிக்கு அவ ஸ்கூல்ல இன்னொரு பெண்ணும் இதே மாதிரி அவ வீட்டுல அவ தான் கடைசிப் பொண்ணுன்னு சொல்லியிருக்கா...இவ உடனே நீங்க சொன்னத அவ கிட்ட சொல்லி...நீ கடைசி பொண்ணா இல்லையாங்கிறத எங்கப்பா தான் முடிவு பண்ணனும்ன்னு சொல்லியிருக்கா..அந்த பொண்ணு அவ வீட்டுல அனேகமா சொல்லி இருக்கும்...அந்த தெரு பக்கம் போன இருக்கு உங்களுக்கு.

நீங்க வாழ்க்கையில எடுத்த ரெண்டாவது கரெக்ட் முடிவு காமிராக்கு பின்னாடி நிக்கனும்ன்னு எடுத்த முடிவு தான்....

என்ன இருந்தாலும் நீ செம ஷார்ப்டி...பயங்கர புத்திசாலி....உன்னளவுக்கு நான் போறாது...

என்னாச்சு இன்னிக்கு உண்மையெல்லாம் பயங்கரமா ஒத்துக்கறீங்க...?

ஆமா பின்ன உண்மை என்னைக்காவது உரைச்சுத் தானே ஆகனும்...நீ என்ன செலெக்ட் பண்ணின நான் உன்ன செலக்ட் பண்ணினேன்...இப்பவும் சொல்றேன் நீ பயங்கர ஷார்ப்மா...


அன்புள்ள தங்கமணிக்கு...தந்தை மகளுக்கு எழுதிய கடிதம், மகள் தந்தைக்கு எழுதிய கடிதம் வரிசையில் புருஷன் பெண்டாட்டிக்கு எழுதிய கடிதமாக இந்நேரம் இநத பதிவு மூலம் சரித்திரத்தில் இடம் பிடித்திருப்போம் (ஹீ ஹீ) . நம் மணவாழ்க்கையில் அஃபீஷியலாக பத்து வருடம் ஓடியே விட்டது. திரும்பிப் பார்க்கிறேன், ஓரமாய் நின்று பார்க்கிறேன் ஒன்றரைக் கண் விட்டுப் பார்க்கிறேன் என்று போரடிக்காமல் நேர விஷயத்திற்கு வருகிறேன். எத்தனையோ தரம் நீ சொல்லி நான் மறுத்திருந்தாலும்.....தஙகமணியில்லையேல் டுபுக்கில்லை என்று இன்று ஒத்துக்கிறேன். எனது வாழ்வில் நகைச்சுவையை மேம்படுத்தியது நீ தான் என்று ஒத்துக்கொள்கிறேன். எதைச் சொல்வேன் கண்மணி...தெள்ளிய நீரோடையில் வெள்ளியென..என்று ப்ளாக் கிடைத்ததே என்று ஓவராய் ஃபிலிம் காட்டாமல் "காக்க காக்க" ஜோதிகா மாதிரி (நினைப்பில்) நீ நம் வீட்டு கர்டன்களை திறந்துவிட்டு என்னைப் பார்த்து பேசும் டயலாக்கிற்கு அதில் என்றும் ஒரு சிறப்பிடம் என்ற ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

சொந்தக் கவிதை எழுதி டார்ச்சர் பண்ணாமல்...சமீபத்தில் நான் மிகவும் ரசித்த, நமக்கு மிகவும் பொருந்தும் சினிமா பாட்டையே போட்டுவிடுகிறேன்

நீ கோபப் பட்டால்...நானும் கோபப்படுவேன்
நீ பார்க்காவிட்டால்...நானும் பார்க்கமாட்டேன்
நீ திட்டி முறைத்தால்...நானும் திட்டி முறைப்பேன்
நீ சண்டை பிடித்தால்...நானும் சண்டை பிடிப்பேன்
நீ பேசாவிட்டால்...நானும் பேசமாட்டேன்
நீ என்னை மறந்தால் மட்டும்....உயிரை விடுவேன் (சும்மா உல்லாகட்டிக்கு)
நீ கேக்காமல் போனாலும்...கத்தி சொல்லுவேன்...பேபி ஐ...லவ்..யூ (பேபி யாருன்னு கேக்கப்பிடாது சொல்லிட்டேன் ஆமா)


எனக்குத் தெரியும் என்ன தான் வில்லு படத்திலேர்ந்து பாட்டெல்லாம் சுட்டுப் போட்டாலும் நீ சென்டி ஆக மாட்ட....அதே தான் கரெக்ட்...இந்த வாரம் சப்பாத்தி சன்னா மசாலா...அதே தான்...ப்ளீஸ்...சினிமாலேர்ந்து பாட்டெல்லாம் மேற்கோள் காட்டி போட்டிருக்கேன்....ஏதோ பார்த்து செய்யுங்க மேடம்...

Wednesday, April 29, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.8

இந்த தரம் ஒரு குறும்படம்.

தேர்வு சமயம், தொடர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம்/ கால கட்டம், உறைய வைக்கும் மைனஸ் நான்கு டிகிரி குளிர்...தொடர்ந்து அரைமணி நேரம் வெளியே நின்றால் நடுவில் முடிந்த போது காரிலோ பக்கத்தில் இருக்கும் கடையிலோ வீட்டிலோ போய் ஹீட்டரில் கை கொஞ்சம் குளிர் காய்ந்து ஏகப்பட்ட கமிட்மெண்டுடன் நடித்துக் கொடுத்த மூவருக்கும் மனமார்ந்த நன்றி. அதை விட ஏதோ கத்துக்குட்டி கேட்கிறானே என்று பெருந்தன்மையாய் அவர்களை நடிக்க அனுமதித்த அவர்களது பெற்றோர்களுக்கு கோடானு கோடி நன்றி.

இது மூன்றாவது குறும்படம் தான். இன்னும் கற்றுக்கொள்ளும் மாணவனாய் எடுத்த படம் தான்.எந்த வித பொரஃபஷனல் உபகரணங்களையும் உபயோகப் படுத்தாமல் சாதாரண கேம்கார்டரில் எடுத்த படம் தான். ஏதோ பார்த்து பெரிய மனது பண்ணி உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள், நன்றியுடையவனாய் இருப்பேன். இப்பொழுது வெகு சமீபத்தில் கேமிரா உட்பட பொரபஃஷனல் சமாச்சாரங்கள் வாங்கியுள்ளேன் அதனால் அடுத்த குறும்படத்தில் ஒலி மற்றும் ஒளி இன்னும் கொஞ்சம் தரமாகவே இருக்கும் என்று நம்புகிறேன் (படத்தின் தரம் அல்ல :) ). மற்றபடி அதே படபடப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் உங்கள் பின்னூட்டத்திற்கு காத்திருக்கிறேன்.

Monday, April 27, 2009

உதவி - வருத்தங்கள்

போன பதிவில் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி கேட்டிருந்தேன். வந்த பின்னூட்டங்களில் ஸ்ரீதர் நாராயணன் உங்களின் இந்த பதிவே பொறுப்பில்லாமல் இருக்கிறது என்று கூறியிருந்தார். அவரின் அந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். விஷயத்தை விவரமாய் கூறாமல் ஏனோ தனோ என்று போட்டதில் வட தென் துருவங்களுக்கு போய் வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமைக்கு பதில் அவர் ஏதோ அம்மாபட்டிக்கு போய் வந்த மாதிரி ஆகி, டி.வி.யில் அரைமணி நேர கச்சேரி ஸ்லாட்டுக்கு பிச்சையெடுப்பது மாதிரி ஆகிவிட்டது. பத்ரியின் அரைமணி நேர டி.வி. ஸ்லாட் பின்னூட்டம் எனக்கு மிக மிக எள்ளும் தொனியில் பட்டது (and felt very rude and offensive) ஆனால் தவறில் எனக்கும் பங்கு உண்டு. விஷயத்தை இன்னும் விவரமாய் பதிந்திருக்கலாம்.


விஷயத்துக்கு வருவோம். வட துருவத்துக்கோ தென் துருவத்துக்கோ ஏதோ ஒரு துருவத்துக்கு போவதே பெரிய விஷயம். இதைப் பற்றி சில ஹாலிவுட் படங்களே எடுத்திருக்கிறார்கள்.. ஆனால் சரஸ்வதி காமேஸ்வரன் ஏகப்பட்ட பிரயத்தனங்களுக்குப் பிறகு இரண்டே இரண்டு பெண்மனிகள் கொண்ட குழுவில் எந்த ஸ்பான்சரும் இல்லாமல் தன் சுயமுயற்சியில் இரண்டு துருவங்களுக்கும் 2007ல் போய் வந்திருக்கிறார். இவர் இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றிருப்பதாக நண்பி பொயட்ரீ கூறுகிறார்.

பத்ரீ மற்றும் ஸ்ரீதர் நாராயணன் கூறிய குறிப்புகள் பதிவுகள் அவர் அப்பொழுதே இங்கே மற்றும் இங்கே லைவாக விவரமாக அன்றாட குறிப்புகளாக படங்களுடன் பதிந்திருக்கிறார்.

இவரின் இந்த இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி தகவல் சரியான முயற்சி இல்லாமல் இந்த பெருமை சரியாக வெளியே வராமல் போய்விட்டது. இப்பொழுது சமீபமாக 2010ல் இதே இரண்டு துருவங்களுக்கும் போகப் போகும் ஒரு பெண்மணிக்கு "இதே இரண்டு துருவங்களுக்கும் போகப் போகும் முதல் இந்தியப் பெண்மணி" என்ற தவறான பட்டத்தை ஊடகங்கள் வழங்குவதைப் பார்த்து நண்பி பொயட்ரீ கொதித்துப் போய் எழுந்து உதவ முடியுமா என்று கேட்டு வந்தார். அதுவும் எப்பொழுது.. செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கும் எல்லா ஊடகங்களையும் ஆன மட்டும் தொடர்பு கொண்டு எழுதி பயனில்லாத போது.2010ல் பயணிக்கப்போகும் பெண்ணின் குழு அமைப்பாளருடன் பேசியும் பயனில்லை. எல்லாமே (Daily India, ANI International and Felicity Aston) கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.

ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிடுகிறேன் - முன்னால் அவர் எனது ப்ளாகில் பின்னூட்டம் இட்டிருந்தாலும் நண்பி பொயட்ரீயை எனக்கு இந்த விஷயத்தின் போது தான் அறிமுகம் கிடைத்தது. நம்மூர் பெண்மணியின் பெருமையை யாருக்கோ வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆன மட்டும் முட்டிப் பார்த்துவிட்டேன் இப்பொழுது வலைப்பதிவுகள் மூலமாகவாவது செய்தியைப் பரப்பி உதவி கிடைக்குமா என்று கேட்ட போது உடனே பதியவேண்டும் என்று தோன்றியது.


நான் பதிவில் போட்டதை மற்றவர் உல்டா பண்ணிப் போட்டாலே கோவம் வருகிறது, பதிப்புலகில் இதுவே பெரிய சர்ச்சையாகுகிறது...ஆனால் ஒருவர் 2007ல் "முதல் இந்தியப் பெண்மணி" என்ற பெற்ற சாதனையை இப்பொழுது மறுக்கப்படும் பொழுது கொதிக்கவே செய்கிறது. இவரின் இந்த சாதனை முதலில் இமயத்தை தொட்ட இந்தியப் பெண்மணி, முதலில் விண்வெளிக்குப் போன இந்தியப் பெண்மணி என்ற வரிசையில் தான் நான் பார்க்கிறேன். இதுவே இதே இடத்தில் கல்பனா சாவ்லாவாக இருந்த்திருந்தால் உதவி புரிந்திருக்க மாட்டோமா? "ப்ளாக்ல போடு சந்தோஷப் படு அதுவே பெரிய சாதனை தான் ....ஐய்யோ வரலையேன்னு புலம்பக் கூடதூன்"னு பின்னூட்டம் போட்டிருப்போமா? அதுவும் பதிப்புலகில் இருக்கும் பத்ரி மாதிரியான ஆட்கள் இதைச் சொல்வது மிக மிக வருத்தமாய் இருக்கிறது. கல்பனா சாவ்லா மாதிரி சாதனையில் இது எந்த விதத்தில் குறைந்து விட்டது? உங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவயில்லை...டி.வியில் அரைமணி நேர ஸ்லாட் என்றெல்லாம் அடுத்தவரின் சாதனையை ரொம்பவே கேவலப் படுத்தாதிர்கள்.

என் போன்ற ப்ளாகில் செய்தி வருகிறது என்பதால் அவரின் சாதனை எந்த விதத்திலும் குறைந்ததில்லை

Sunday, April 26, 2009

உதவி

எப்படி இருக்கீங்க. நம் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி தேவை. அவர்களின் நண்பி சரஸ்வதி காமேஸ்வரன் மிகுந்த முயற்சிக்கு பிறகு வட மற்றும் தென் துருவங்களுக்கு 2007ல் பயணித்திருக்கிறார். இரண்டு துருவங்களுக்கும் சென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றும் இவருக்கு சரியான மீடியா அறிமுகம் கிடைக்கவில்லை. அவர்கள் முயன்று பார்த்தும் இந்த செய்தி சரி வர ஊடக வாயிலாக வெளியே வரவேயில்லை. ஆனால் கொடுமை என்னவென்றால் சமீபத்தில் 2010ல் ஒரு பெண்மணி இதே இரண்டு துருவங்களுக்கும் போகிறார் என்றும் அவரே இந்தியாவின் முதல் பெண்ணாக இருப்பார் என்றும் செய்திகள் வெளி வரத் துவங்கி இருக்கின்றன. நம் வலையுல நண்பர்கள் யாரேனும் பத்திரிகை துறையில் இருந்தாலோ அல்லலது அவர்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தாலோ, இந்த செய்தி(உண்மை) வெளி வர உதவ முடியுமென்றால் தயவு செய்து பின்னூட்டம் மூலம் தெரிவியுங்களேன் ப்ளீஸ்....மிக்க நன்றி.

Sunday, March 29, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.7

முதல் பாகம் --> இங்கே
இந்த பாகத்தில் முந்தைய பதிவுகள் - Part 2.1    Part 2.2   Part 2.3    Part 2.4   Part 2.5   Part 2.6

"இன்னாருக்கு இன்னார் என்று எழுதிவைத்தானே தேவன் அன்று" கண்ணதாசன் எழுதிய பாடலை நம்பி வாழ்க்கையில் நிறைய இடத்தில் முயற்சியே பண்ணாமல் கோட்டை விட்டிருக்கிறேன். ஆனால் தேவன் சில இன்னார்களுக்கு மட்டும் வகை தொகையே இல்லாமல் எக்கச்சக்கமாய் எழுதிவைத்துவிடுகிறார். இந்த மாதிரி இன்னார்களை பார்க்கும் போது நாபிக் கமலத்திலிருந்து கப்புன்னு புகை மாதிரி ஒன்று எக்கச்சக்கதிற்கு கிளம்பும். அவனை முதல் முறை பார்த்ததே நாலைந்து பெண்கள் சுத்தி சூழத் தான். சுத்தியிருந்த யுவதிகள் கொள்ளை அழகு. எல்லாரும் மிஸ் யுனிவேர்ஸ் போட்டி நடக்கும் இடத்துக்கு வழி கேட்டுக்கொண்டிருந்த மாதிரி தான் இருந்தது. "இங்கே சகலவிதமான இடங்களுக்கும் வழி சொல்லப்படும்"ன்னு கழுத்தில் போர்டு மாட்டிக் கொள்ளத்தூண்டும் அழகு.

"எப்படீங்க இதெல்லாம்...அடுக்குமா அப்புறம் நாங்களெல்லாம் எங்க போறதாம்...?"

"....?"

"இல்ல...நீங்க ரெண்டு பேருக்கு வழி சொல்லிட்டு மிச்ச பேரெல்லாம் அங்க போய் வழி கேட்டுக்கோங்கன்னு இங்க எங்க பக்கம் கொஞ்சம் அனுப்பி இருக்கலாம்ல"

பெருமிதமும் வெட்கமும் கலந்து சிரித்தான். கபால்லுன்னு உடனே அவனை தோஸ்தாக்கிக் கொண்டேன். இந்த இந்தி படத்தில் அண்ணாக்கு கல்யாணம் ஆகும், அப்படியே அண்ணியோட குடும்பத்திலிருந்து தம்பிக்கு ஒன்னு செட் ஆகும்...உடனே ப்யார்...சிந்தகி...சப்னே. என்னைச் சொல்லி குற்றமில்லை ஹிந்தி படம் இந்த பச்சைமண்ணை கெடுத்துக் குட்டிச்சுவராக்கியிருந்தது. ஆனால் இதற்க்கெல்லாம் மேலே நேரம் என்று ஒன்று இருக்கிறதே. என்ன தான் தாடியெல்லாம் வைத்திருந்தாலும் ஆட்டுக்கு வால் அரை கிலோமீட்டரா வைத்திருக்கிறார் கடவுள்?

சில பெண்களுக்கு கண்ணே தெரியாது....என்னடா இங்க ஒருத்தன் வழி சொல்றதுக்குன்னே ராப்பகலா படிச்சிட்டு வந்து நிக்கிறானேன்னு ஒரு இங்கிதமே இருக்காது, நேரே போய் நம்ம இன்னாரிடம் போய் நிற்பார்கள். இன்னாரும் "நேரா போய் பீச்சாங்கைப் பக்கம் திரும்பு"ன்னு வழியைச் சொல்லாமல் தார் யாரு கண்டுபிடிச்சா, ரோடு யாரு போட்டான்னு பாடமெடுத்துக் கொண்டிருப்பான். "என்னாது கஜினியை ஹிந்தில எடுக்கப் போறாங்களா"ன்னு நைஸா ஜனரஞ்சகமாக ஜோதியில் ஐக்கியமாகப் பார்த்தாலும் நடக்காது. அந்தப் யுவதிகளுக்கு நம்மள மாதிரி ஹிந்தி பெர்சனாலிட்டியையெல்லாம் பிடிக்காது நடையைக் கட்டிவிடும். என்னடா இது அதிர்ஷடம் இமெயில்ல வந்தா தரித்திரம் இன்ஸ்டன்ட் மெசஞ்சர்ல வருதுன்னு இன்னாரிடம் ஒரு பாட்டம் அழுவேன். இன்னாரும் எனக்கு ஆறுதல் சொல்லுவது மாதிரி சிரித்துக்கொண்டே அந்தப்பக்கம் அந்தப் பெண்ணுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருப்பான்.

கன்னுக்குட்டி கணேசனிடம் கன்சல்டேஷன் பண்ணியதில்...இதற்கெல்லாம் சபையில் சொல்ல முடியாத ஒரு இடத்தில் மச்சம் இருக்கவேண்டும் என்று வாத்ஸ்யாயணர் சொல்லி இருப்பதாக தகவல் சொன்னான். அத்தோடு அவனையும் இந்தி பெர்ச்னாலிட்டியில் சேர்த்துக் கொண்டு "இதுக்கெல்லாம் கவலப்படாதடா மச்சி...நம்மள மாதிரி இந்தி பெர்சனாலிட்டிக்கெல்லாம் மெட்ராஸுல தான் மவுஸ் ஜாஸ்தி" என்றும், கிண்டியில் ஊரிலிருந்து வரும் பஸ் நிற்கும் ஆட்டோ ஸ்டாண்டுக்குப் பக்கத்திலேயே எங்கள் வரவை ஆவலோடு யுவதிகள் எதிரிபார்த்துக் காத்துக்கொண்டிருப்பார்கள் என்றும் உபரி தகவலும் குடுத்தான். சரி நம்பளுக்கான இன்னாரை மெட்ராஸுல எழுதிவைச்சிருக்கான் போல இருக்குன்னு ரொம்பவே ஆறுதலாக இருந்தது. மீசை ரொம்ப வளராவிட்டால் தெருவில் எல்லாரும் கன்வேர்ட்டேர்ட் ஹிந்தி பெர்சனாலிட்டி ஆகிவிடுவார்கள். எனக்கு வளர் சிதை மாற்றத்தின்(அடலெசன்ஸ்) ஆரம்பத்தில் அரும்பு மீசைக்கு முந்தய ஸ்டேஜில் இருந்தது.

ஆனால் இன்னார் கொஞ்சம் பர்சனாலிட்டியாய் கலராய் இருப்பான். அரும்பு மீசையும் அழகாய் இருக்கும். அதனாலேயே இன்னார் பக்கத்தில் இருந்தால் யுவதிகள் கூட்டம் நம்ம பக்கம் திரும்பி கூட பார்க்காது. இருந்தாலும் இன்னாரிடம் வழிகேட்டு விட்டு என்னிடம் இன்னார் சொன்ன வழி கரெக்ட்டு தானா என்று பேருக்கு சும்மா கன்பார்மாவது பண்ணிக் கொள்ளக்கூடாதா என்று நிறைய ஆதங்கப்பட்டிருக்கிறேன். ஆதங்கம் சில சமயம் சமுதாயத்தின் மீது வெறுப்பாய் மாறி பேசாமல் வெள்ளை ஜிப்பா போட்டுக்கொண்டு நெற்றியில் குங்கமத்தை கொழப்பி வெற்றித் திலகமிட்டுக் கொண்டு ஓம் கேசட்டை டேப்ரெக்கார்டரில் பிஜிம்யில் போட்டு விட்டு வெள்ளைக்காரர்களுக்கு குல சாமியாராய் போய்விடலாமா என்று தோன்றும். ஓம் கேஸட் வாங்க போதுமான பைனான்ஸ் இல்லாமல் வெள்ளைக்காரர்களுக்கு குலசாமியாய் போகும் முடிவுக்கு நிறைய தடவை (வெள்ளைக்காரர்களுக்கு) காலம் கனியட்டும் என்று ஒத்திவைப்பு தீர்மாணம் நடத்தியிருக்கிறேன்.

அப்புறம் காலம் கனிந்து "அட கிறுக்குப் பயலே உனக்கு இன்னார் கிண்டியில இல்லைடா இங்கயே பக்கத்திலயே அடுத்த ஊரில் இருக்கார்டா"ன்னு கடவுள் கனவில் வந்து சொன்னதுக்கப்புறம் ஓம் சாமியார் ஐடியாவை மூட்டைக் கட்டிவிட்டு...யுவதிகளுக்கு வழி சொல்வதெல்லாம் தூ....ஒரு பொழைப்பா...போங்கடா போங்கடா போய் புள்ளைக் குட்டிய படிக்க வைக்கிற வழியப் பாருங்கடான்னு பரம்பரை நல்லவனாய் மாறி..ஏறி உட்கார்ந்து மிதித்தால் ஒரு அட்ரெஸுக்கு தானாகவே போகிற மாதிரி சைக்கிளை ஆட்டோ ப்ரொக்ராம் செய்து விட்டேன்.

அப்புறம் காலம் போன போக்கில் வழி சொல்லிக் கொண்டிருந்த இன்னார் வெளியூருக்கு பெரிய படிப்பெல்லாம் படிக்கப் போய் இந்தியில் வழி சொல்லிக் கொண்டிருந்ததாக கேள்விப்பட்டேன். அனேகமாய் இப்போது அவனுக்கும் கல்யாணமாகி செட்டிலாகியிருப்பான். ஊருக்கே வழி சொன்ன அவனுக்கு ஒரு வழி அமையாமலா இருந்திருக்கும். இருந்தாலும் எந்த ஊரில் வழி அமைந்து எந்த இன்னாரோன்னு என்று இன்னாரைப் பற்றி நியாபகம் வரும்போதெல்லாம் ஆர்வமாய் இருக்கும்.

Monday, March 09, 2009

ஹாலிடே - குறும்படம்

ரொம்ப நாளாய் ஃபிலிம் காட்டிக்கொண்டிருந்த இரண்டாவது குறும்படம் ஹாலிடே உங்கள் பார்வைக்கு. முதல் குறும்படதின் அதே உதறலுடன் உங்கள் கிழிச்சுலு தொங்கப்போடலுவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இப்போது கொஞ்ச நாளாய் லண்டன் ஃபிலிம் அக்காடமியில் பாடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்த பிறகும், எடிட்டிங்கின் போதும் இந்த படதில் சில குறைகள் தெரிகின்றன. ஆனால் இந்தப் படத்தின் இடம் பொருள் ஏவல் வைத்துப் பார்க்கும் போது மனதுக்கு நிறைவாகவே இருக்கிறது. இதையே வேறு முறையில் சொல்லலாம் என்று இப்போது தோன்றினாலும் அதையெல்லம் பின்னொரு நாளுக்கு பின் தள்ளி இப்போது உங்கள் பார்வைக்கு. ஆனால் அதற்கு முன்

இடம்
காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தாலாவது ஏதாவது லாஜிக் இருக்கும், ஆனால் கமர்கட்டு வாங்கப்போய் கழுதை வாங்கி வந்தால்? வாழ்த்து சொல்லப் போன இடத்தில் மண்டபம் பிடித்து அங்கேயே உடனேயே கல்யாணம் செய்துகொண்ட கதையாய் ஹாலிடேக்கு போன இடத்தில் மனதுக்குப் பிடித்துப் போய் குறும்படம்.

பொருள்

கதை திரைக் கதை எல்லாம் ரூம் போட்டு யோசிக்க டைம் இல்லாமல் டாய்லெட்டில் கூட பத்து நிமிஷம் தியானம் செய்து மிச்சத்தை களத்திலேயே மானே தேனே பொன்மானே போட்டு எடுத்தது. கையில் ஒரு டப்பா கேமிராவும் 60 வாட்ஸ் பல்பும் போடறதுக்கு ஒரு ப்ளாகும் இருந்தா மனசுல பெரிய டைரடக்கர்ன்னு நினைப்பான்னு திட்டாதீர்கள் நிறைய எனக்கு நானே கேட்டாகிவிட்டது.

ஏவல்

பள்ளிக்கூடத்துல ஆபிஸுலன்னு எவ்வளவு நடிச்சிருப்போம் எல்லாம் அத மாதிரி தான்..நீங்க சும்ம போட்டோக்கு போஸ் குடுக்கிற மாதிரி நின்னா போதும் மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்னு அரி அரின்னு அரிச்சதில் இவன் கொசுக்கடி தாங்கலைடான்னு நடிக்க ஒத்துக்கொண்ட இரண்டு புண்யாத்மாக்களுக்கு கோடானு கோடி நன்றி. இவர்கள் ப்ரொபஷனல் நடிகர்கள் இல்லையென்றாலும் வந்த இடத்தில் உடம்புக்கு முடியாத போதும் நான் என்னமோ கோடியைக் கொட்டி எடுக்கிற மாதிரி சின்சியராய் முடித்துகுடுத்ததிற்க்கு ஸ்பெஷல் நன்றி.

சரி சரி இதுக்கு மேலே அப்புறம் நீங்க தம்மடிக்க போய்விடுவீர்கள் என்பதால் இத்தோடு முடிச்சிக்கிறேன்...பார்த்துட்டு என்ன பழிவாங்குறத வாங்குங்க ....ஐ ஆம் தி வெயிட்டிங் :)

யூ டியூப் வழக்கம் போல் படத்தின் தரத்தை குறைத்துள்ளது. புல் ஸ்க்ரீனில் பெரிதுபடுத்திப் பார்த்தால் பிக்சல்கள் பிசிறடிக்கின்றன.



யூ டியூப் சைட்டில் நேராக பார்ப்பதற்க்கு - http://www.youtube.com/watch?v=7cl_soBE8IM

Tuesday, March 03, 2009

தமிழ்மண விருது - நன்றி

குழப்பங்கள் அதிகமாகும், மன உளைச்சல் தீவிரமாக இருக்கும். பணம் விரயமாவதை தவிர்த்தல் நல்லது. அடுத்த வீட்டுக்காரர் குட்மார்னிங் சொல்ல மாட்டார். வீட்டு ஆட்டுக்குட்டிக்கு சுகப்பிரசவம் ஆகும் என்று வரும் பேப்பர் ஜோசியம் மாதிரி கொஞ்சம் நிஜமாகவே குழப்பம் இருக்கிறது. கவனம் வேறு இப்போது வேறு பக்கத்தில் இருக்கிறது. அதனால் தான் இங்கே கொஞ்ச நாளாக எழுதவே இல்லை. இங்கே கூடுதலாக கொஞ்சம் லீவு போடலாம் என்று வேறு எண்ணம். இந்த சமயத்தில் தமிழ்மணம் விருதுகள் ரொம்பவே ஆறுதலாக இருக்கிறது.


வழக்கமாக போட்டி வெச்சிருக்காங்க ஐய்யா போய் வோட்டு போடுங்கன்னு சொல்லுவேன்...நீங்களும் உங்களுக்கில்லாமயான்னு போய் வோட்டு போடாம கரெக்ட்டா கவுதிருவீங்க. ஆனா இந்த தரம் என்னம்மோ சொல்லாமலே உங்கள ஏமாத்திட்டேன். பார்த்தா குறும்படத்துக்கு பர்ஸ்ட் ப்ரைசும், நகைச்சுவை பிரிவில் மூனாவது இடமும் கிடைச்சிருக்கு. எனக்கே ஆச்சரியம் தாங்க முடியலை...பெரிய மனசு பண்ணி வோட்டு போட்டு செயிக்க வெச்ச அத்தனை சனத்துக்கும் கோடானு கோடி நன்றியைய்யா...!!!!!

எனக்கு இங்க எழுதாம முடியாது. இங்கே டெய்லி நிறைய பேர் வந்து பார்த்து ஏமாந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் ஸ்டட் கவுண்டர் சொல்லுது. உங்களை ஏமாற்றுவதற்கு ரொம்ப வருந்துகிறேன். ஆனால் ஏனோ தானோன்னு எழுதி கடுப்பேற்றுவதை விட இது எவ்வளவோ தேவலாம் என்று தோன்றுகிறது. நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு ஸ்டேட்மென்ட் விடுவது மாதிரி தோன்றலாம் எனக்கும் தெரியும் ஆனாலும் இங்கே வந்து போய்க்கொண்டிருப்பவர்களுக்காக நீங்கள் அப்படி நினைத்தாலும் இதைச் சொல்லிக்கொள்கிறேன்.

அடுத்த வாரத்திலிருந்து கண்டிப்பாக முடிந்தாலும் முடியாவிட்டாலும் எழுதுகிறேன். மார்ச் 9ம் தேதிக்கு முன்னால் அடுத்த பதிவு கண்டிப்பாக இருக்கும்.


தமிழ்மண விருதுகளில் தேர்ந்தெடுத்ததிற்க்கு மனமார்ந்த நன்றி.

Saturday, January 24, 2009

உள்ளேன் ஐய்யா

உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்ன்னு சொன்னா "எந்த வருஷத்துக்கு..?"ன்னு கோச்சிப்பீங்கன்னா அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸா வைச்சிக்கோங்க. பொங்கல்லாம் சிறப்பா கொண்டாடியிரு...சரி வேணாம்...ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா...? வெக்கமாயில்ல....வேலை மெனெக்கெட்டு இங்க வந்து வாழ்த்து சொன்னா ஒரு மரியாதைக்கு திரும்ப ஒரு வாழ்த்து கூட சொல்ல வேணாம்...சின்னதா ஒரு டேங்க்ஸ் சொல்லக் கூடவா முடியலை..ஏன் எங்களுக்கெல்லாம் வேலையில்லையா...நீ மட்டும் தான் உலக மகா ஆபிஸரா?...திட்டி உங்க வாய் வலிக்க கூடாது..(ஐய்...ஐஸ் ஐஸ்..) நானே திட்டிக்கிறேன்.
புதுவருடம் அமர்களமாக ஆரம்பித்திருக்கிறது. நீங்க மறந்தாலும் நான் மறக்கவில்லை. பெரிய இவனாட்டம் சேரிட்டி சேலென்ஞ் என்று இரண்டு சவால்களை எடுத்திருந்தாலும் இரண்டையும் முடிக்கவேயில்லை. ஆனால் அபராதமாக குடுக்க இருந்த தொகையை இரட்டித்துவிடுவதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன். இந்த வருடமாவது முடிக்க முடிகிறதா என்று பார்ப்போம். இரண்டு சவால்களில் ஒன்று திரைப்படத்தில் தலையைக் காட்டுவது. ஆனால் சினிமா பித்தம் தலைக்கேறி இருக்கிறது. நடிப்பதற்கு இல்லை டைரடக்கராவதற்கு. லண்டன் ஃபிலிம் அகாடமியில் கோர்ஸ் புக் பண்ணி ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறேன்.
கிறிஸ்துமஸ் லீவில் ஒரு குறும்படம் எடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தேன். நம்ம ட்ரேட் மார்க் ஜொள்ளித்திருந்த காலத்தை குறும்படமாக எடுக்கவேண்டும் என்று ரொம்ப ஆசை. குடும்ப நண்பர் வட்டத்தில் நடிப்பதற்க்கு கேட்டதற்க்கு சரி சொன்னார்கள். பரவாயில்லை நான் இது வரை படமெடுக்கவில்லை என்றாலும் நம்பிக்கை வைத்து சரி சொன்னார்களே என்று ரொம்ப ஃபீலிங்ஸ்காக இருந்தது. அவர்கள் குடும்பத்திற்க்கு இங்கு எக்கச்சக்க நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஸ்காட்லாண்டிற்கு முதல் வாரம் நண்பர்களோடு போய்விட்டு வந்து அடுத்த வாரம் படப்பிடிப்பு என்று ப்ரொடெக்க்ஷன் ப்ளானிங்காயிருந்தது. ஸ்காட்லேண்ட் அருமையான இடம். இவ்வளவு நாள் இங்கிருந்தாலும் இப்போது தான் போகிறோம். நண்பரகளோடு சரி ஜாலியாக இருந்தது. லண்டன்லிருந்து ஸ்காட்லேண்ட்டின் ஒரு அத்த மூலைக்கு பத்து மணிநேரம் காரை ஓட்டிக்கொண்டேடேடே போனதில் போய் சேரும் போது நல்ல இருட்டியிருந்தது. கும்மிருட்டில் ஒரு அத்துவானக் காட்டில் தெக்காலே போய் வடக்காலே திரும்பினால் நீங்க தங்குகிற வீடு இருக்கும் என்று உத்தேசமாய் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இடம் பாலுமேந்திரா படத்தில் வருவது மாதிரி ஒரு பயங்கர காடு. மலைச்சரிவில் ஒரு கார் மட்டுமே போகக் கூடிய பாதை. சரிவில் கீழே தன்னீர் ஓடுகிற சத்தம் வேறு. மலையூர் மம்பட்டியான் பாட்டை பாடிக்கொண்டே போனால் வீடு வருகிற வழியைக் காணும். ஒருவேளை பாதை தவறிவிட்டோமோ என்றால் காரைத் திருப்பக் கூட வழியில்லை. மறக்க முடியாத சரியான திகில் அனுபவம். நம்பிக்கையே இல்லாமல் அப்புறம் எப்படியோ ஒரு வழியாக வீடு போய் சேர்ந்தோம். இப்படி ஒரு இடத்தில் திகில் படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு சாமி வந்துவிட்டது. கூட வந்த நண்பர்களை பேசி சம்மதிக்க வைத்து அவர்களும் இல்லாவிட்டால் இவன் தூங்கும் போது கல்லைத் தூக்கிப்போட்டாலும் போட்டுவிடுவான் என்று பயந்து போய் சம்மதித்தார்கள். நண்பர்களுக்கும் இங்கே நன்றியை சொல்லிக்கொள்கிறேன். ஆக இரண்டு படம் என்று ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொக்க்ஷனில் இருக்கிறது :)) சீக்கிரமே ரிலீஸ் பண்ணிவிடுவேன். நீங்க தான் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லவேண்டும்.

அதுனால தான் இங்க எழுத கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இருந்தாலும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கலாம் என்று தான் இந்தப் பதிவு. தோ..... வந்துக்கிடே இருக்கேன்.

நீங்க திட்டினாலும் பரவாயில்லை...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!