Wednesday, May 19, 2004

தஞ்சாவூர் உபசாரமும் திருநெல்வேலி பாயாசமும்

for picture version of this post click here

அரசியல் பற்றி எழுதவே கூடாதென்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது கை பரபரவென்கிறது.
எனக்கு அரசியல் ரொம்பத் தெரியாது. இன்றைய நிகழ்வுகளை இந்தியன் என்ற உணர்விலே எல்லாரையும் போல் கவனித்து வருகிறேன். காங்கிரஸின் மேல் எனக்கு பச்சாதாபம் உண்டே தவிர துவேஷம் என்று இல்லை. இருந்தாலும் திருமதி.சோனியா பிரதமர் ஆவதில் எனக்கு முழு உடன்பாடு இல்லைதான். ஏன் எதற்கு என்ற விபரங்களுக்குள் செல்லாமல் சொல்ல வந்ததைச் சொல்கிறேன்.

திருநெல்வேலிக்கும் தஞ்சாவூருக்கும் ரொம்ப ஆகாது. பெண் குடுக்கவோ எடுக்கவோ கொஞ்சம் தயங்குவார்கள். இந்த துவேஷம் காரணமாகவே தஞ்சாவூர் உபசாரம் பற்றி திருநெல்வேலியில் இப்படித்தான் சொல்வார்கள். வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால்.."நீங்க எங்காத்துலலாம் சாப்பிடுவேளா?..நீங்க ஏற்கனவே சாப்பிட்டுட்டு வந்திருப்பேளே... இந்த வெய்யில்ல உங்க ஊர்க்காராளெல்லாம் காபி குடிக்கமாட்டேளாமே...etc." - இது தஞ்சாவூருக்கு மட்டுமே உரித்தான குணம் என்று நான் நம்புபவனில்லை என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.

அதேபோல் திருநெல்வேலியில் ஒரு வழக்கு உண்டு. பந்தியில் உட்கார்ந்திருக்கிறவன் தனக்குப் பாயாஸம் வேண்டுமென்றால் "எனக்குப் பாயாஸம் வேண்டும் விடுங்கோ" என்று கேட்கமாட்டான். பக்கத்தில் உள்ளவன் இலையை காட்டி..."ஏன்பா இவருக்கு கூடகொஞ்சம் பாயாஸம் விடுங்கோப்பா...நல்லா கவனியுங்கோ" என்பான். பக்கத்திலிருப்பவன் சும்மா இருக்கமாட்டான் திரும்ப "எனக்கு விட்டது போறும் அவருக்கும் விடுங்கோ..." என்பான். இப்படியாக இவனுக்குப் பாயாஸம் கிடைக்கும்.

இது தான் இப்போ நடக்கிறதோ என்று எனக்குத் தோன்றுகிறது. சோனியா இரண்டையும் கலந்து அடிக்கிறார். நல்லது. எது எப்பிடியோ...என்னை மாதிரி தத்து பித்தென்று ஹிந்தி மட்டும் தான் பேசுவார் அன்னை என்று நினைத்தேன். வூடு கட்டி அரசியல் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் பயமாக இருந்தாலும்...இப்படிப்பட்ட ஆள் தான் வேண்டும் காங்கிரஸுக்கு. தார்பாய்ச்சிக் கட்டிக் கொண்டிருக்கிற ஹிந்தி மாமாக்களையும் நம்மாளுகளையும் கட்டி மேய்கிறதென்றால் சும்மாவா.

அட்ரா சக்கை இப்போ தான் களைக் கட்டியிருக்கிறது டெல்லி.

பி.கு - பி.பி.சி பார்கிறேளோ? டெய்லி இங்க லோக்கல் நியூஸ்லயே இதப் பத்தி 15நிமிஷம் ரிப்போர்ட் போடறான். எனக்கு என்னமோ அவன் ஓவரா சோனியக்கு ஜால்ரா அடிக்கிறான்னு தோன்றுகிறது

No comments:

Post a Comment

Related Posts