Monday, December 20, 2010

தேவுடு காத்தல்

தேவுடு காத்தல் எனும் அற்புதமான செயலில், சுவாரசியம் என்பது இடம் பொருள் ஏவல் பொறுத்து வித்தியாசப்படும். ஒன்றுமே செய்யாமல் பராக்கப் பார்ப்பதில் அப்படியென்ன சுவாரசியம் என்று சில அவசரத்தின் அக்கா பையன்களுக்கு டவுட்டு வரலாம். சில உதாரணங்களைப் பார்ப்போம். சொந்தக்கார வட்டத்தில் பென்ஷன் தகராறாகி அது விஷயமாய் ஏ.ஜி.எஸ் ஆபிசில் ஆபிஸரைப் பார்ப்பதற்காக தேவுடு காப்பது ஒரு வகை. இதில் சுவாரசியத்திற்கான சாத்தியக்கூறு 0.000000849 என்பதை முதுநிலை கணித பட்டதாரி கட்டம் கட்டி சொல்லிவிடுவார்.


"உங்க நிறத்துக்கு கோவாக் கலர் எடுப்பா இருக்கும்மா"ன்னு தொழில் நிமித்த கடலை போடும் துணிக்கடை பட்டு செக்க்ஷன் அதற்கு எவ்வளவோ தேவலை. "இவா மஞ்சக் லைட்டை போட்டு பளபளன்னு காட்டிடுவா....சூரிய வெளிச்சத்துல பார்த்தாத் தான் கரெக்ட்டான கலர் தெரியுமாம்...ஜானு கல்யாணத்துக்கு வாங்கின புடவை டல்லடிச்சு போயிடுத்து..ராமர் பச்சையில மாம்பழக் கலர் பார்டர் இருந்தா எடுப்பா" என்ற பெரிசுகளின் சம்சார இம்சைகளுக்கு நடுவில் பில் கட்டுவதற்காக கண்ணாடி பதித்த சுவர்களைப் பார்த்துக் கொண்டு தேவுடு காத்திருந்தால் அவ்வப்போது சுவாரசிய கீற்றுகள் கடப்பதற்கான சாத்தியம் அதிகம்.


குண்டலினி யோகம் இருப்பவர்களுக்கு மட்டுமே லேடீஸ் காலேஜில் போய் தேவுடு காக்கும் சந்தர்ப்பம் கிட்டும் என்று ஜோதிட சம்பூஷணம் தினமலரிலும், இதே யோகத்திற்கு கோடியில் ஒருத்தருக்கு மட்டுமே வாய்க்கக் கூடிய நாலாம் பிறை மச்சம் புட்டத்தில் இருக்க வேண்டும் என்று ஜோதிடலேகாவில் மச்சேந்திரரும் சொல்லியிருப்பதால், இல்லாதவர்கள் "சொக்கா சொக்கா இல்ல இல்ல எனக்கில்லை" என்று மனதை தேர்த்திக் கொள்ளுதல் நலம். அசூயையால் மேற்கூறிய இடத்தில் வரைந்து கொண்டு கண்ணாடியில் பார்ப்பவர்களுக்கு லீவு நாட்களில் அதே லேடீஸ் காலேஜில் தேவுடு காக்கும் தண்டணை தான் கிட்டும் என்று மச்சேந்திரர் அன்பாய் எச்சரிக்கிறார்.


"இந்த ட்ரெஸில நான் நயன் தாரா மாதிரி இருக்கேனா"ன்னு லோகவிசாரமாய் லைப் ஸ்டைல் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் நங்கையர் பகுதியில், "இது நல்லாயில்ல வேற ட்ரை பண்ணு, என்ன அவசரம்...நல்ல பிடிச்சதா வாங்கிக்கோ" என்று கூட வந்தவருக்கு வாயாலும், மற்றவர்களுக்கு கண்ணாலும் ஜாடை காட்டி தவமாய் தவமிருப்பதற்கு எங்கே மச்சம் இருக்கவேண்டும் என்று மச்ச சாஸ்திரத்தில் குறிப்புகள் ஏதும் தென்படவில்லை.  மச்சேந்திரர் காலத்தில் நயன் தாரா இல்லாதது காரணமா இல்லை பண்டைய காலத்து பொக்கிஷங்களை நாம் பாதுகாக்கும் லட்சணம் தான் காரணமா என்பது கவலைக்கிடமாக இருக்கிறது.

நிற்க. மேற்கூறிய உதாரணங்களை வைத்து "ஜொள்ளு" தான் பதிவின் மூலக்கூறு என்று நீங்கள் தவறாய் முடிவெடுப்பதற்கு முன்னால் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். எனக்கு மிகப் பிடித்த தேவுடு காத்தல் எங்கே தெரியுமா?...அலுவலக பரபரப்பில் இயங்கும் காலை நேர பஸ் ஸ்டாப் தான். எத்தனை மனிதர்கள்,  எத்தனை பரபரப்பு, எவ்வளவு சுவாரசியம். சென்னையின் பரபரப்பு எனக்கு அறிமுகமாகியது கே.கே.நகர் அம்மன் கோவில் ஏரியா. முதல் முறை கிண்டியிலிருந்து ஆட்டோவில் வந்து இறங்கிய ஐய்யப்பன் கோயில் வாசல் இன்றும் நெஞ்சில் பசுமையாய் இருக்கிறது. மரங்கள் அடர்ந்த சாலை, அம்மன் கோவில் பாட்டும் ஐய்யப்பன் கோவில் சரணமும் கலந்த கலவையான பிண்ணனி இசை என்று ஏரியாவே ரம்மியமாக இருக்கும்.

பத்மா சேஷாத்திரி ஸ்கூட்டி மம்மீஸ், பிதுங்கி வழியும் நிறைமாத 11ஈ-யும் 5ஈயும் கற்றுக் கொடுக்கும் “சர்வைவல் ஃபார் தி பிட்டட்ஸ்ட்” பாடங்கள், "இந்த கூட்டத்துல மாரடிக்கிறதுக்கு டெப்போ போயே ஏறிடலாம்" அங்கலாய்ப்புகள், "அடுத்த வாரம் வண்டி லோன் சாங்கஷன் ஆகிடும் அப்புறம் தெசைக்கு ஒரு கும்பிடு" நம்பிக்கைகள், சரியாய் மூடாமல் கமகமக்கும் டிபன் பாக்ஸ் கலவை வாசம், வரவே வராத சனியன் பிடித்த 12G, பாண்டிச்சேரி கெஸ்ட் ஹைவுசில் நிக்காத 11ஏ, மூச்சைப் பிடிக்கும் கூட்டத்தில் ஏறியதும் உதிரும் கூந்தல் மல்லிகை, "டூ ட்வன்டி ஒன்னுண்ணா" என்று பாசமாய் பாஸ் செய்யும் கூடப் பிறவாத சகோதரி, அவளுக்குப் பக்கத்திலிருந்து ரெண்டு நாளாய் என்னையே பார்பது போலிருக்கும் என்னவோ செய்யும் பிரயாண சுந்தரி, டாலடிக்கும் மண்டையில் இல்லாத முடியை வாரி போனசாய் மீசையையும் வாரிக்கொள்ளும் நாற்பத்தி சொச்சங்கள், கேட்காத  கூட்டத்திற்கு "படில நிக்காத மேலவா மேலவா" என்று சலிக்காமல் கத்தும் கண்டக்டர், யாரவது பிடுங்கிக் கொள்வார்கள் என்று புத்தகத்தை அணைத்துக் கொண்டு வரும் படிப்பாளினிகள், ஒவ்வொரு ஸ்டாப்பிலும் பஸ்ஸை தள்ளிவிட்டுவிட்டு ஏறிக்கொள்ளும் சக யூத்ஸ், "நாளைக்கு ஐய்யப்பன் கோவில்ல படி பூஜையாம் கரெக்ட்டாய் ஆறு மணிக்கு வந்துடும்" என்று கோயில்மேட்ஸுக்கு தகவல் பரிமாரிக்கொள்ளும் ரிட்டயர்ட் பக்தகோடிகள், சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல் ஆட்டோவை மட்டுமே பிடிக்கும் அவ்வப்போது தென்படும் அதீத அழகு கதாநாயகிகள், அவர்கள் ஆட்டோ போவது வரை மாடி ஜன்னலில் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாக்கள், பஸ் தகரத்தில் கிறுக்கப்பட்ட "பானு ஐ லவ் யூ" , அப்போது தான் திறந்த கடையில் சாமிக்கு லேசாயும், கல்லாவிற்கு பலமாயும் காட்டப்பட்ட ஊதுபத்தி வாசனை, நாராசமாய் ஒலிக்கும் திறக்கும் ஷட்டர்,  எதிர்கால முதலாளி கனவுடன் பளீர் சட்டையை அவிழ்த்துவிட்டு அழுக்கு சட்டையை அணிந்து கொள்ளும் மெக்கானிக் பொடியன்கள், எங்கேயோ குலைக்கும் நாய், யாரோ பெருக்கிய மெல்லிய தூசிப் புகை, முதல்போணி சென்டிமெண்டில் இன்னமும் இடிசொற்கள் ஏறாத இனிய ஆட்டோ டிரைவர்கள், ஆட்டோவிற்கு இணையாக புகுந்து புறப்படும் பல்லவன்கள் -  சொல்லிக் கொண்டே போகலாம். தேவுடு காத்தலை ஆவலோடு எதிர்நோக்க வைத்த வசந்த காலம் அது.

இப்போதும் நிதமும் பஸ்ஸிலும் ட்ரயினிலும் பிரயாணிக்கிறேன். குஞ்சுமோன் பட செட்டுக்குள் நுழைந்த மாதிரி  இருந்தாலும் சுவாரசியம் வேறு விதம். குனிந்த தலை நிமிராமல், நிஜத்தைப் புறந்தள்ளி ஐஃபோனுக்குள் மண்டயை விட்டு உலகைத் தேடும் செம்மறியாடுகள், அந்த நொடியே காந்தர்வ விவாகம் செய்து கொள்ளத் தூண்டும் அழகிய ரூபவதிகள், ஹெட்போன் வழியே ஊருக்கே ஒலிபரப்பும் நடமாடும் வானொலி நிலையங்கள், பஸ் ஸ்டாப்பில் கிறுக்கப் பட்டிருக்கும் "எம்மா இஸ் ப்ரெக்ணன்ட்", "அடுத்த வாரம் ஃபோன் பண்றேன் அதுவரைக்கும் உடம்ப பார்த்துக்கோப்பா" பாசமிகு ஐ.எஸ்.டி கால்கள், சுவாரசியமில்லா கட்டுக்கோப்பான ஒழுங்குமுறை போக்குவரத்து, "அடுத்த ஸ்டாப் மெக்காலே ரோடு", ஒரு நிமிடம் தாமதமான ரயிலுக்காக வருத்தப்படும் ரயில்வே நிர்வாகம், இயந்திரத்தனமான அறிவிப்புகள், எங்கேயோ டீ ஆத்த போகும் சைரன் போலீஸ் கார்கள், பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு "வாட் தா ஃப*" என்று காலங்கார்த்தால மங்களரகரமாய் ஃபோனில் முழங்கும் முரட்டுப் பெண்மணி, இரண்டாம் பிரசவத்திற்கு பேரனையோ பேத்தியையோ ஸ்கூலுக்கு கொண்டுவிட கூட்டி வந்திருக்கும் குளிர் குல்லாயும் தொள தொளா கோட்டும் அணிந்த இந்திய தாத்தா, குளிருக்கு சம்பந்தமே இல்லாமல் கிழித்து விட்ட ஜீன்ஸில் வெளிர் நிற தொடையைக் காட்டிக்கொண்டு சௌஜன்யமாய் பழகும் அரிவை, நேற்று யாரும் யாரும் எங்கே ஜல்சா செய்தார்கள் என்று பத்தி பத்தியாய் விளக்கும் டாபலாய்ட்கள், பக்கத்திலேயே துணியை அவிழ்த்து கொடியில் மாட்டிவிட்டு காத்தாட போஸ் குடுக்கும் லஜ்ஜையில்லா படங்கள், பொதுச் சொத்தில் எட்டு பவுண்டுக்கு அமைச்சரின் கணவர் போர்னோ வீடியோ பார்த்தார் என்று கூவும் செய்திகள், அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று ராஜினமா செய்யும் அமைச்சர், சர்ச் ஹாலில் சாய் பஜன் (மீல்ஸ் ப்ரொவைடட்), “தோசமாவு இன்னும் பொங்கவே இல்லையே” என்ற மனக் கிலேசத்துக்கிடையில் ஓசோன் லேயரைப் பற்றி கவலைப்பட சொல்லும் ஜெகத்ரட்சன்கன்கள், பண்ணிரெண்டு வயதில் அப்பாவான மேட்டர் பாலகன் என்று தேவுடு காத்தல் இன்னும் சுவாரசியமாய் தான் போய்க் கொண்டிருக்கிறது.

பி.கு
தமிழ்மண அவார்ட்ஸ் வோட்டு ஆரம்பித்துவிட்டது. இந்த முறை
வித்துவான் - காமெடி பிரிவிலும்
வந்தியா இந்தியா - பயண அனுபவங்கள் பிரிவிலும்
தி மேன் ஃப்ரம் ஏர்த் - உலக சினிமா விமர்சன பிரிவிலும்
சேர்த்திருக்கிறேன். படித்துப் பார்த்து உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் ஓட்டு போடுங்கள். 

39 comments:

Philosophy Prabhakaran said...

சுடச்சுட பின்னூட்டம்...

Philosophy Prabhakaran said...

அடடே என்ன ஒரு இலக்கிய நயம் கலக்குறீங்க...

Philosophy Prabhakaran said...

// அவசரத்தின் அக்கா பையன்களுக்கு
நாலாம் பிறை மச்சம் புட்டத்தில்
11ஈ-யும் 5ஈயும் கற்றுக் கொடுக்கும் “சர்வைவல் ஃபார் தி பிட்டட்ஸ்ட்” பாடங்கள் //

இது நான் ரசித்த வரிகளில் ஒரு பத்து சதவிகிதம்தான்.... சொல்லப்போனால் உங்கள் முழுப்பதிவிலும் இதுபோல ஏகப்பட்ட வார்த்தை பிரயோகங்கள் என்னை ஆச்சர்யப்பட வைத்தன...

கால்கரி சிவா said...

//சர்ச்ச் ஹாலில் சாய் பஜன் (மீல்ஸ் ப்ரொவைடட்)//

பஞ்ச் பஞ்ச் டுபுக்கு பஞ்ச்

Porkodi (பொற்கொடி) said...

ada pavigala!

Kavitha said...

"குனிந்த தலை நிமிராமல், நிஜத்தைப் புறந்தள்ளி ஐஃபோனுக்குள் மண்டயை விட்டு உலகைத் தேடும் செம்மறியாடுகள்" - adhu eppadi ivvalo azhaga nidharsanathai ezhuthil padam pidikkareenga? Konjam Dream of Conciousness technique illa? Romba nalla irukku!

Porkodi (பொற்கொடி) said...

தல உண்மையை செப்புங்க, இந்த போஸ்டுக்கு காரணகர்த்தா என்னோட 29சி போஸ்ட் தானே.. :P

//அந்த நொடியே காந்தர்வ விவாகம் செய்து கொள்ளத் தூண்டும் அழகிய ரூபவதிகள்//

கடலெண்ண நல்லெண்ண மண்ணெண்ண.. தர்ம அடி விழுந்தா எனக்கென்ன..

Porkodi (பொற்கொடி) said...

வழக்கம் போல கும்தலக்கடி போஸ்ட்..!

(சங்கத்து சிங்கங்கள் எனக்கும் சேர்த்து, 3 பதிவுகளுக்கும் மாறி மாறி ஓட்டை குத்துமாறு கேட்டுக் கொ'ல்ல' படுகிறார்கள்.)

Sathish Kumar said...

//சூழ்நிலைக்கு சற்றும் பொருந்தாமல் ஆட்டோவை மட்டுமே பிடிக்கும் அவ்வப்போது தென்படும் அதீத அழகு கதாநாயகிகள்//

பிரமாதம்..! அப்படியே ஒரு 8 வருடங்கள் கால எந்திரத்தில் பின்னோக்கி பயணித்த அனுபவம் பாஸ்...!
ஆனாலும் ரொம்பத்தான் ஜொள்ளு விடுறீங்க நீங்க...!

Ananya Mahadevan said...

//வழக்கம் போல கும்தலக்கடி போஸ்ட்..!// யெஸ்ஸூ.. சூப்பரோ சூப்பர்!

//"உங்க நிறத்துக்கு கோவாக் கலர் எடுப்பா இருக்கும்மா"ன்னு// அது கேவாக்கலர் இல்லையோ தல?

//அசூயையால் மேற்கூறிய இடத்தில் வரைந்து கொண்டு கண்ணாடியில் பார்ப்பவர்களுக்கு லீவு நாட்களில் அதே லேடீஸ் காலேஜில் தேவுடு காக்கும் தண்டணை தான் கிட்டும் என்று மச்சேந்திரர் அன்பாய் எச்சரிக்கிறார்.// தல.. குபீர் சிரிப்பு வரவழைச்ச இடம் இது!

எல்லாமே டாப்பு போங்க!

எறும்பு said...

நல்ல விவரணை. ரெம்ப கூர்ந்து கவனிச்சுருகிங்க. :)

சேலம் தேவா said...

நீங்க டைரடக்கராயிட்டிங்கன்னா கேமரா மேனுக்கு கவலையே இல்ல..!! சின்ன சின்ன ஷாட் இத்தன சொல்றீங்க..!!ஏரியாவோட ஸ்கீரின்ப்ளே அப்படியே நீங்க சொல்லசொல்ல படமா ஓடுது..!! சூப்பர்..!!

Vidhya Chandrasekaran said...

அந்த பேருந்து தேவுடு காத்தல் செம...

இதே விதமான எக்ஸ்பீரியன்ஸ் 29Cயில் கிட்டியதுண்டு:)

Porkodi said...

//இதே விதமான எக்ஸ்பீரியன்ஸ் 29Cயில் கிட்டியதுண்டு:) //

adhu!!!!!! :D

Karthik said...

போனவாரம் கேகே நகர் பக்கம் போயிருந்தேன். அடுத்த வாட்டி போகும்போது கண்ல ஒத்திக்கிறேன். ஜூப்பரு. :)

//"இந்த ட்ரெஸில நான் நயன் தாரா மாதிரி இருக்கேனா"ன்னு லோகவிசாரமாய் லைப் ஸ்டைல் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் நங்கையர் பகுதியில், "இது நல்லாயில்ல வேற ட்ரை பண்ணு, என்ன அவசரம்...நல்ல பிடிச்சதா வாங்கிக்கோ" என்று கூட வந்தவருக்கு வாயாலும், மற்றவர்களுக்கு கண்ணாலும் ஜாடை காட்டி தவமாய் தவமிருப்பதற்கு எங்கே மச்சம் இருக்கவேண்டும் என்று மச்ச சாஸ்திரத்தில் குறிப்புகள் ஏதும் தென்படவில்லை.//

:))))

ஒரு பதிவு எழுத எவ்ளோ ஹோம் வொர்க் பண்ண வேண்டியிருக்கு!!

தக்குடு said...

என்ன ஒரு இலக்கிய நடை தலைவரே!!

/அந்த நொடியே காந்தர்வ விவாகம் செய்து கொள்ளத் தூண்டும் அழகிய ரூபவதிகள்// எடுத்து வெச்ச குழவி கல்லு அக்காவிடம் பத்ரமாக இருப்பதால் இரவில் அஜாக்ரதையாக படுத்துறங்க வேண்டாம் என கெளலி சேதி சொன்னது...:)

அறிவிலி said...

கொஞ்ச நாளுக்கு முன்ன வரைக்கும் நாஙக டுபுக்கு போஸ்டுக்காக தேவுடு காத்திருந்ததும்.... ச்சே... போருப்பா........

Anonymous said...

ovvoru lineum nachh...kalakitteenga!!!gandharva vivaagama???oru dharam vivagam dhaan thavaru..innoru vivagamnna adhu peru suicide?????
suicide pannikka avvalavu assaiya???
nivi.

Anonymous said...

சூப்பர் பாஸ்..
டுபுக்குவின் பதிவுக்காக தேவுடு காத்தலும் சுவாரஸ்யம்தான் !!!

-ஆனந்த்

பத்மநாபன் said...

ஐந்து பத்தியில் ஐந்து தேவுடு காத்தல்களை சொல்லிவிட்டு அடுத்த பத்தியில் ஐம்பது அறுவது காத்தல்களை சரம் சரமா இறக்கிட்டிங்க...சுதாரிக்க கூட நேரமில்லாமல் சிரிச்சாச்சு...

Subhashini said...

devudu kaathalay ivvalavu vishyam irukka...:))
super annathai
anbudan
subha

Anonymous said...

Very nice! You paint a very vivid and lively picture it's like being there.
Had never heard of 'devudu kaathal' until now..thanks for advancing my thamizh arivu.
- thamizh slang virgin

Nila said...

//பண்டைய காலத்து பொக்கிஷங்களை நாம் பாதுகாக்கும் லட்சணம் தான் காரணமா என்பது கவலைக்கிடமாக இருக்கிறது//

மச்ச சாஸ்த்திரம் குறித்து என்னே கவலை என்னே அக்கறை..
Interesting narration though!

Then add these also to chennai bus stop/buses..

1 ) பஸ்ஸில் ஏறியதும், "இது லேடீஸ் சீட், கொஞ்சம் எழுந்துகோங்க" க்கள்
2 ) மொபைலில் "மன்மத ராசா" or "ஒ போடு" ரிங்டோன்ஸ் இன் அட்லீஸ்ட் 5 cellphones followed by loud "personal" calls...
3) also "all beautiful girls are already taken" law பிரகாரம் each one on hands-free cellphone conversations for hrs..Even if you overhear it will be the SAME everywhere.. boring.."சாப்டியா".. "நேத்து ஏன் டா ஒரு மணிகெல்லாம் கால் அ கட் பண்ணிட்ட?".. "ம் சொல்லு"..."என்ன பண்ற"....

Suresh said...

Idhai padichavudan, iPhone - i paarthaal neengal sonnadhu dhaan ngabagam varudhu... :-)

Brand new iPhone 4 for sale any one interested?? :-) :-)

Paavai said...

Adutha nimishame kandharva vivahamaa.... moochaidukkudu unga dairyathai pakkum podhu ... :) Anand comment madiri - dubukku postkku devudu kathalum svaraisyam dhan

Anonymous said...

ஆமா தல
சென்னைல K. K. நகர் மாதிரி வராது தல.
மலரும் நினைவுகள்ல மூழ்க வச்சிட்ட தல.
ச்சூப்பர் தல.

“கிழித்து விட்ட ஜீன்ஸில் வெளிர் நிற தொடையைக் காட்டிக்கொண்டு”
சரிதான்..............

By
Haji
Dubai

D. Chandramouli said...

I wish to disagree with you on this: தார்மீகப் பொறுப்பேற்று ராஜினமா செய்யும் அமைச்சர் - which world are you in, Mr. Raghavan. In this age, no minister ever resigns, whatever be the reason! Even if a minister is held directly responsible, he is never held accountable, nor does he even offer to accept responsibility, leave alone, resigning.

D. Chandramouli said...

Sorry, I thought I was commenting on Dondu Raghavan's blog and that's how I wrote Raghavan in my comment.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//"உங்க நிறத்துக்கு கோவாக் கலர் எடுப்பா இருக்கும்மா//
what a thought? what a thought?....me escape...

ஜில்பான்ஸ் - 141210 - போஸ்டல்ல கேட்ட கேள்விக்கு எப்ப பதில் எதிர்பாக்கலாம் டைரக்டர் சார்...

Ambika Rajesh said...

Dear Dubuku

Liked the post very much. My Mama`s house was just opposite to K.K.Nagar Padma seshadri. I used to visit a lot during those days for my Post graduate entrance exams. your post brought back my memories of K.K.Nagar Iyyappan and Amman koil. Those were the days where my Patti was alive and she used to wait for me in the gate to ask me how was the exam with sooda tiffin inside. Now my Patti is no more and my Mama has shifted his place to Adayar.
Your post suddendly brought back my memories.

Thanks
Ambika

Porkodi (பொற்கொடி) said...

appavi adhan neenga appavi nu ellarum othu kondache? kelvikku ellam badhile xpect vera panringa? podhum acting valikidhu!

Gayathri said...

sir , unga bloga valaisarathil share panniruken

http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_23.html

Porkodi (பொற்கொடி) said...

congratulations on moving to next round! (இந்த ரவுண்டெல்லாம் உங்களுக்கு ஒரு சப்ப மேட்டர்னு தெரியும் தல.. இருந்தாலும்..)

Dubukku said...

பிலாசபி பிரபாகரன் - மிக்க நன்றி ஹை. உங்களுக்கு பதிவு பிடித்தது பற்றி மிக்க சந்தோஷம்.

கால்கரி - அப்படீங்கிறீங்க...??? ஹீ ஹீ உங்க ஆசிர்வாதம்

பொற்கொடி - எதுக்குங்க அடப்பாவிகளா? அம்மணி உண்மையாய் சொல்லனும் என்றால் இதை மாதிரி ஒரு நாலு பதிவுகள் முதல் ட்ராப்டில் கிடப்பில் இருக்கின்றன. ஆனால் அந்த பஸ் விவரனைகள் உங்கள் 29cல் ஸ்பார்க்காகி அப்புறமாய் தூசி தட்டும் போது இணைத்திருப்பேன் என்று நினைக்கிறேன். (அதாவது இன்ஸ்பயர் ஆனது :P) ஆனால் கே.கே.நகர் பஸ் ஸ்டாப் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு மிருகம். அதே போல் அடையார் சர்தார் படேல் ரோடும் :)). வோட்டு கரீக்ட்டா போட்டுட்டீங்க போல. நீஙக வாழ வைக்கும் தெய்வங்கன்னு சொல்லவந்தேன்...கடலெண்ண மண்ணெண்ன...நீங்க எண்ணைய ஊத்துற தெய்வங்க.. :))

பொயட்ரீ - மிக்க நன்றிங்க...எதோ சொல்றீங்க ஆனா எனக்கு தெரியலைங்க...நானும் இந்த ஃபோனில் மண்டையைவிடுவதை அடிக்கடி செய்வேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன் :))


சதீஷ்குமார் - ஆமாங்க ஒரு எட்டு பத்து வருஷம் முன்னாடி நினைவலை தான் இது.//ஆனாலும் ரொம்பத்தான் ஜொள்ளு விடுறீங்க நீங்க..// - ஏங்க புதுசா ஏதாவது சொல்லுங்க :))

அநன்யா - மிக்க நன்றி மேடம்.

எறும்பு - வங்க அண்ணாச்சி.நம்மூர்காரர் நீங்க சொல்றீங்க கேட்டுக்குறேன் மிக்க நன்றி.

சேலம் தேவா - மிக்க நன்றிங்க ஜிவ்வ்வ்வ்ன்னு இருக்கு :)))))

வித்யா - மிக்க நன்றி ஓ நீங்க 29cயா...:))

கார்த்திக் - வாங்க சார். இப்போ எப்படியிருக்குன்னு தெரியலை ஹ்ம்ம்ம். ஆமாங்க மச்ச சாஸ்திரம் நயன் தாரான்னு நிறைய ஹோம் வொர்க் பண்ண வேண்டி இருக்கு. இலக்கிய தாகம் அப்படி

தக்குடு - நன்றி ஹை. எத எங்க எடுத்துக்குடுக்கனும்ன்னு உங்க ஊர்காரங்களுக்கு சொல்லியா தரனும். நீ நடத்து ராசா

அறிவிலி - ஹீ ஹீ போருன்னு உண்மைய சொல்றீங்க :))


நிவி - ஹா ஹா நான் சொன்னத எனக்கே திருப்பி சொல்லி நியாபகப் படுத்துறீங்க..நன்றி. ஆனா தொனும்ன்னு மட்டும் தான் சொல்லி இருக்கேன் பாருங்க :P

ஆனந்த் - ஆகா உங்க அன்பிற்கு மிக்க நன்றி பாஸ்

பத்மநாபன் - மிக்க நன்றி தலைவரே

சுபாஷினி - மிக்க நன்றி யெக்கோவ்

ஸ்ரீலதா - உங்களுக்கு சுவாரசியமாய் இருப்பது பற்றி மிக்க சந்தோஷம். அத்தோட பாராட்டுக்கு நன்றி மேடம்.

செல்ல நிலா - உங்க லிஸ்டும் கலக்கல்ஸ் ஆனா என்னோட லிஸ்ட் பத்து வருஷத்து முந்தையது அதான் செல் ஃபோன் இல்ல. இன்றைக்கு இவையெல்லாம் மிகப் பொருந்தும்.

சுரேஷ் - ஹா ஹா நானும் அந்த லிஸ்டுல உண்டு தல. சும்மாவா குடுக்கறீங்க ??:P

பாவை - மிக்க நன்றி. அது எண்ணம் மட்டும் தான். செயல் படுத்த மாட்டேனே :)))

ஹாஜி - மிக்க நன்றி தல. நீங்களும் நம்ம பேட்டையா சென்னைல

சந்திரமௌலி - இங்க யூ.கேல சமீபத்தில் நடந்தது சார் இது. இங்கே இதெல்லாம் ரொம்ப அதிசயமானது கிடையாது. இந்த லிங்க் பாருங்க - http://www.telegraph.co.uk/news/newstopics/mps-expenses/5428871/Jacqui-Smith-to-resign-as-Home-Secretary.html

Dubukku said...

அப்பாவி - நன்றி. ஏகப்பட்ட கேள்வி கேட்டிருக்கீங்க ரூம் போட்டு யோசிச்சு பதில் சொல்றேன் :)))) ஆனாலும் நீங்க இப்படி அப்பாவியா சீன் போடப்பிடாது :))))

அம்பிகா - வாங்க நலமா. ஓ உங்களுக்கும் கே.கேநகர் தொடர்பு இருக்கா...கலக்கல்

காயத்ரி - அறிமுகத்திற்கு மிக்க நன்றி மேடம்

பொற்கொடி - என்னாது இது சப்ப மேட்டரா...ஏங்க இப்படி உசுப்பேத்தறீங்க இதுக்கே மூச்சு தள்ளுது...அடுத்த ரவுண்டு முடியட்டும் பாருங்க எப்படி அப்பீட்டாகுதுன்னு :))))

Katz said...

//சாமிக்கு லேசாயும், கல்லாவிற்கு பலமாயும்//

reading all your post... excellent writing..

Anonymous said...

Iam from k.k.nagar and also a parent of padma sesahdri school . nice description about k.knagar amman kovil , iyyapan kovil a, bus stand . iam introduced to your only today and i read a few of them . one after the other ... could not stop reading . what life !!!! superb writing . planning to read all of them .
You write so much about your place which shows the yekkam of not residing here . am I correct . if you can reply will be happy . ssk

Dubukku said...

SSK - Thanks for your lavish compliments.Yes you are right. I am not living in Chennai currently. I moved out to London some 13 years ago. Sorry for my delayed reply.

Saraswathi said...

enjoyed every word of this
was nostalgic too

Post a Comment

Related Posts