Monday, December 30, 2013

கடுங்கண் ஐந்து

நான் Nintendo Wii கேம் விளையாடுவது குறைவு. அபூர்வமாய் ஒரு நாள் தோள்கள் தினவெடுத்து மகள்களுடனும் தங்கமணியுடனும் போட்டி போட்டுக்கொண்டு விளையாடுவேன். முதலில் அவர்கள் பிஸ்த்து காட்டும் விளையாட்டுகளில்லாம் சொல்லிச் சொல்லி என்னை தோற்கடித்து கழுவி ஊத்திவிடுவார்கள். அந்த மாதிரி நொந்து நூடூல்ஸாகும் தருணத்திற்கென்றே பிரம்மாஸ்திரமாய் டென்னிஸ் வைத்திருப்பேன். ஒவ்வொருத்தரா...ஒவ்வொருத்தரா வாங்கன்னு சொடக்கு போட்டு தோற்க வைக்க முனையும் போது தங்கமணி முதல் கேமில் தோத்த கடுப்பில் அடுக்களையில் குக்கரை வைத்து விட்டு, மூனு விசில் வந்தவுடன் கேஸை அமர்த்தச் சொல்லிவிட்டு மாடிக்குப் போய்விடுவார். "டேய் அதைப் போய் ஏன்டா குக்கர் விசில் அடிக்குதுங்கிறீங்க? எந்த குக்கர் மண்டயன்டா விசில உஸ்ஸ்ன்னு அடிக்கிறான்"ன்னு சுவத்தைப் பார்த்து கவுண்டமணி டயலாக் ஒன்னு விட்டுவிட்டு, "நீ போ ராஜாத்தி நான் பார்த்துக்கறேன்"-ன்னு சொச்சமிருக்கும் மானத்தை மகளிடமிருந்து செட் பாயிண்ட்டாக எடுக்க வியர்வை சிந்த ஆரம்ப்பிப்பேன். அடுத்த அம்பதாவது நொடியில் "கரெக்ட்டா ஆஃப் பண்ணிடுங்கன்னு..."ன்னு  அசரீரியாய் எச்சரிக்கை வரும். "அதெல்லாம் காலேஜ் காலத்திலேர்ந்தே எவ்ளோ விசில் அடிச்சிட்டிருக்கோம் எங்களுக்குத் தெரியாத விசிலா...அதெல்லாம் லெப்ட் ஹேண்டால அசால்ட்டா பண்ணுவோம்"ன்னு  சொல்லிவிட்டு ரெண்டாவது கேம் ஆடிக்கொண்டிருக்கும் போது குக்கர் ரொம்பக் கேவலமாய் உஸ்ஸூன்னு சத்தம் போடும். அப்ப மதுரை பாண்டிய மன்னனுக்கு வந்த மாதிரி வரும் பாருங்க ஒரு டவுட்டு... "இது எத்தனாவது விசில் சத்தம்....???"  தமிழ்சங்கம் தீர்த்துவைக்க முடியாத அந்த சந்தேகத்தை மகள்கள் கொடுக்கும் ஆளுக்கொரு ஆன்சரில் ஆவரேஜ் போட்டு குத்துமதிப்பாய் இன்னொரு சத்தம் போடவிட்டு அமர்த்தி, ஐந்து நிமிடம் கழித்துத் திறந்தால் ஒன்னு டைனோசர் வாந்தியெடுத்த மாதிரி குழைந்திருக்கும், இல்லை கஞ்சி போட்டு அயர்ன் பண்ணின மாதிரி வேகாத அரிசி விறைப்பாய் நின்று கொண்டிருக்கும். "ச்ச்சே நான் சொல்லல எல்லாம் கலிகாலம், சிகரெட் பிடிக்காதீங்கடான்னு தலை தலையா முகேஷ் அடிச்சிக்கிறார், கேட்டாத் தானே, மண்ணோடு மண்ணாப் போய் இப்போ பாரு அரிசி எப்படி வந்திருக்குன்னு" என்ற விளக்கமெல்லாம் எடுபடாது. அதற்கப்புறம் சங்கத்தில் இதற்கு தீர்ப்பு எப்படிச் சொல்லுவார்கள் என்பது இந்த பதிவுக்கு அவுட் ஆஃப் சிலபஸ்.

அடுத்த கடுங்கண் எனக்குத் தெரிந்து யுனிவேர்ஸலாய் எல்லா இடங்களிலும் நடக்கக் கூடியது. காய்கறி வாங்கும் கடையாகட்டும். சூப்பர் மார்க்கெட்டாகட்டும், தியேட்டர் இண்டர்வல் கூட்டத்தில் டாய்லெட்டாகட்டும், நாம் அவசரமாகப் போகவேண்டுமென்றால் அப்போது தான் நமக்கு முன்னால் பத்து க்யூ நிற்கும். பத்திலும் அனேகமாய் சமஅளவில் ஆட்கள் ரொம்பி வழிவார்கள். "வாழ்க்கை என்பது ஓட்டப் பந்தயம், டவுசர் அவிழ்ந்தது கூடத் தெரியாமல் அப்படியே ஓட்டமாய் ஓட வேண்டும் இல்லாவிட்டால் உட்காரத் தான் வேண்டும்" போன்ற தத்துவங்களெல்லாம் அப்போது தான் நியாபகத்துக்கு வரும். அதற்கேற்றபடியே இந்த தத்துவங்களையெல்லாம் நாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, க்யூ முன்பை விட தற்போது இரண்டடி வளர்ந்திருக்கும். முதலில் எல்லாம் கவுண்டரில் யார் இருக்கிறார்கள் என்று பார்ப்பேன் (டாய்லட் தவிர்தலாய்). பெண்கள் இருந்தால் கட் அண்ட் ரைட்டாக வேலை மளமளவென்று செய்வார்கள், க்யூவும் வேகமாய் கரையும். கவுண்டரில் ஆம்பிளைக் கபோதிகள் இருந்தால் முன்னாடி இருக்கும் க்யூவைப் பற்றிக் கவலைப் படாமல் "இங்கதான் சார் இருந்துது நேத்திக்குப் பார்த்தேன் இப்ப காணோம்ன்னு கீபோர்டில் க்யூவைத் தேடிக்கொண்டிருப்பார்கள். சார் அங்க தான் சார் அப்படியே ஸ்ட்ரெயிட்டா போய் கீழ கீழ என்று பக்கத்திலிருப்பவர் வழி சொல்லிக்கொண்டிருப்பார். அதே போல் க்யூவில் நமக்கு முன்னால் வயதானவர்கள் இருந்தால் "அந்த ஃபாரம் இல்லை தாத்தா இதைப் பூர்த்தி செய்யுங்க" என்று தாமதமாகும் வாய்ப்புகள் பிரகாசமாய் உண்டு. இப்படி எல்லாம் ஸ்ட்ராஜிக்கலாய் யோசித்து ஒரு க்யூவைத் தேர்ந்தெடுத்துப் போனால் நம்மளோட அதிர்ஷ்டம் மட்டும் பக்கத்து க்யூவிற்கு போய் நின்று கொண்டுவிடும். நமக்கப்புறம் பதினைந்து நிமிடம் கழித்து வந்த ஒருவர் அடுத்த க்யூவில் நமக்குப் பின்னால் நாலடி தள்ளி நிற்பார். நம்மிடம் "சார் ஒரு நிமிஷம் பேனா குடுக்கறீங்களா.." என்று உரிமையோடு கடன் வாங்குவார், திடீரென்று இரண்டு நிமிடம் கழித்துப் பார்த்தால் நம்மைவிட இரண்டடி முன்னால் நின்று கொண்டிருப்பார். நமக்கு ஸ்டாக் மார்கெட் சரிவது மாதிரி வயிற்றில் கரைச்சல் கரைக்கும். அதை விடக் கொடுமை அந்த க்யூவிலும் நம்மை மாதிரி ஒருவர் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டு பாஸ்டா போகிறதா என்று நம்ம க்யுவை நோட்டம் விடுவார். நம்மைப் பார்த்தவுடன் அவருக்கு உதட்டில் ஒரு புன்முறுவல் வரும் பாருங்க - அவுங்க க்யூ பாஸ்டா போகிறதாம்...துடப்பக் கட்டை. டாய்லெட்டில் கூட முன்னால் இருப்பவர் கூட போனோமா வந்தோமான்னு இல்லாம நிதானமாக பேரல் பேரலாய் இறக்கிக் கொண்டிருப்பார். ஆச்சா ஆச்சான்னு நாம் துடிப்பது கேட்கவே கேட்காது. நமக்கு அப்படியே முட்டிக் கொண்டும் வரும்...நம்ம யோகம் அப்படி.

அடுத்தது - ஒரு நாள் ஆபிஸிலிருந்து வந்து வந்து கொண்டிருக்கும் போதோ, இல்லை குடும்பத்துடனோ, நல்ல சாப்பாடு சாப்பிடலாமே என்று ஹோட்டலுக்குப் போவீர்க்ள். வயிறு கப கபன்னு பசிக்கும். என்ன சாப்பிடுறீங்கன்னு வாஞ்சையாய் கேட்கும் சர்வரையே முழுங்கிவிடலாமா என்றளவிற்கு பசி காதைடைக்கும் கண்ணை மறைக்கும். தந்த மெனு கார்டில் ஆசை ஆசையாய் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் சர்வர் "சாரி சார் அது சனி ஞாயிறு மட்டும் தான் இன்னிக்கு இல்லை" என்பார். உங்களுக்கு மெனுகார்டில் வேறு எதுவுமே செட்டாகாது. ரொம்ப மெனெக்கெட்டு இதக் கொண்டுவாப்பான்னு எதையோ ஒன்னை ஆர்டர் செய்துவிட்டு இந்தப் பக்கம் திரும்பினால் பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவருக்கு சாபிட எதுவாய் அவருடைய ஆர்டர் டெலிவரியாகியிருக்கும். அடாடா பார்ப்பதற்கே அவ்வளவு பிரமாதமாய் இருக்கும். அவரும் சப்புக் கொட்டிக் கொண்டு புகுந்து விளையாடுவார். சே அத ஆர்டர் பண்ணியிருக்கலாமே என்று தோன்றும். சர்வரைக் கூப்பிட்டு ஆர்டரை மாத்த சொன்னால் சாரி சார் ஆர்டர் போட்டுட்டாங்க இப்ப இப்ப வந்திடும்னு கொண்டு வைப்பார். சனியன் வாயில் வைக்க விளங்காது வீட்டு சாப்பாடே எவ்வளவோ தேவலாம் என்றாகிவிடும். இப்பல்லாம் என்ன வேணும்ன்னு கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பக்கத்து சீட் ஆர்டரை அப்படியே ப்ளஸ் ஒன் போட்டு டெலிவர் பண்ணிடுங்கன்னு சொல்லிடறேன்.

நல்ல புத்தகம் படிப்பது என்பது தியானத்தைத் தாண்டிய நிஷ்டையில் ஈடுபடுவது மாதிரின்னு பெரிய பெரிய விஞ்ஞானிகள்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க. (எந்த விஞ்ஞானின்னு கோட்டு கோபிமாதிரி கேட்டீர்களேயானால் -  வில்லேஜ் விஞ்ஞானிங்க) இந்த மாதிரி நிஷ்டையில் ஈடுபடுவது எப்பவாவது நடக்கும். அன்றைக்கு தங்கமணிக்கு கடைத்தெருவிற்குப் போக வேண்டியிருக்கும், கொஞ்சம் ட்ராப் செய்யக் கூடாதா என்று கேட்பார். "நானே ப் எங்கே போடனும் ஸ்பேஸ் எங்கே விடனும்னு தெரியாம இருக்கேன்..."ன்னு சலித்துக் கொண்டு தட்டிக் கழிப்போம். "அவள் கன்னத்தோடு கன்னம் இழைத்து மெல்லிடைப் பற்றி மெதுவாக தன்னருகில் அமரச்செய்தான்"னு இலக்கியத்திற்குள் தீவிரமாய் போய்க் கொண்டிருக்கும் போது, "மழை வர்ற மாதிரி இருக்கு, கார்டன்ல துணி உணர்த்தியிருக்கு, ஒரு கண்ணு வைச்சிக்கோங்க" என்று தங்கமணி சொல்வது காதில் விழும் ஆனா விழாது. இங்கே யவனகுமாரன் கடசலில் வேலை பார்பது மாதிரி தேவியோடு இழை இழைன்னு இழைத்துக் கொண்டிருப்பான், கரெட்க்டா இளையதேவி தன்னை மறந்து கண்ணைச் சொருகி அவன் கரம் பற்றி..அடுத்த லெவலுக்கு யத்தனிக்கும் போது....... இழவெடுத்த வேங்கைமாறன் எங்கேர்ந்தோ வாளோடு வந்து கைது செய்து, நமக்கு சமூக பிரஞ்கை வரும் போது "நான் சொன்னதும் மழை வந்துச்சான்"னு மழை காட்டு காட்டுவென்று காட்டிக் கொண்டிருக்கும். அடடான்னு பதறிப் போய் சீரியல் நாயகி மாதிரி பிழியப் பிழியப் பிழிந்து கொண்டிருக்கும் போது வேங்கைமாறன் மாதிரி தங்கமணியும் வந்துவிடுவார். அப்புறமென்ன திரும்பவும் மழை ஆரம்பிக்கும் - இந்த முறை இடியுடன்.

எங்கவூர் சாந்தி உயர் தர சைவாள் கபேயில் சோம்பல் படாமல் டெய்லி தோசைக்கரைப்பார்கள். கிச்சனில் அவ்வளவு தோதுப் படாது என்று ஹோட்டலுக்கு சைட் ரோடில் வைத்துத் தான் அரிசி மாவையும் உளுந்து மாவையும் மாஸ்டர் கலப்பார். ஒரு பெரிய அண்டாவில் முதலில் பாதி அரிசி மாவை கொட்டி பிறகு உளுந்து மாவு, அப்புறம் திரும்பவும் அரிசிமாவு. அதற்கப்புறம் அவருடைய கஷ்கம் வரை அண்டாவில் கையை விட்டு சும்மா கல கல கலவென்று கலப்பார் பாருங்கள். உப்பு கரெக்டாய் இருக்கும். நிற்க. சிறுது காலம் முன்னே பேஷன் என்ற பெயரில் லேடிஸ் ஒரு கிரடிட் கார்டை மட்டுமே வைக்க முடியமளவிற்கு கையகல பர்ஸை நீளமான வாரில் குறுக்காலே தொங்கவிட்டுக் கொண்டு ஹேண்ட்பேக் என்று சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். இதுவே கொஞ்சம் நாள் கழித்து Gucci,  Prada போன்ற ப்ராண்டுகள் புண்ணியத்தில் ஒரு மாத மளிகை சாமான் மொத்தமும் வாங்கி வருவது போன்ற சைஸில் வர ஆரம்பித்தது. நிதமும் இந்த மளிகை சாமான் ஹேண்ட் பேக்கை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் எனக்கு முன்னால் ஒரு பெண்மணியாவது ஏறுகிறார். இங்கே ட்ரைவர் தான் கண்டெக்டடுரும் என்பதால் பஸ் கார்டைத் தேய்த்து பச்சை லைட்டு வந்த பிறகு தான் பேருந்தின் உள்ளே போக முடியும். இந்த மளிகை சாமான் பெண்மணிகள் ஏறும் போதே பஸ் பாஸ்கார்டை எடுத்து வைத்துக்கொள்ளவேண்டாமோ, ஏறிய பின் கையை அந்த ஹேண்ட் பேக்கில் விட்டுத் துளாவுவார்கள் பாருங்கள், எங்கூர் சாந்தி கபே தோசைமாவு மாஸ்டர் தான் நியாபகத்துக்கு வருவார். ஹூம் ரெண்டு பக்கா தோசை மாவை சல்லிசாய் கலந்து வைத்துவிடலாம் ஆனால் அந்த பஸ் கார்டு மட்டும் இவர்களுக்கு மாட்டவே மாட்டாது.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Wednesday, December 11, 2013

பதிற்றுப் பத்து

பதின்ம வயது(டீன் ஏஜ்) போய் the so called யூத்தாகிக் கொண்டிருக்கிறேனோ என்பதற்கு ஏகப்பட்ட அறிகுறிகள் தென்படுகின்றன கவலையாய் இருக்கிறது.
a. பேஸ்புக் மற்றும் சாட்டில் ஹார்ட் படம் போட்டு நடுவில் அம்புக்குறி துளைத்த படம் எப்படிப் போடுவது என்பது இன்னும் பிடிபடவே இல்லை. அதே போல் கட்டை விரலைத் தூக்கிக் காட்டி லைக் போடும் படமும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. கொடுமை என்னவென்றால் கண்ணடிக்கும் ஸ்மைலி தவிர எந்த ஸ்மைலி பட ஷார்ட்கட்டும் மனதில் நிற்பதே இல்லை.
b. எப்பேற்பட்ட அரதப் படத்தையும் கடைசி கிரெடிட்ஸ் போடுவது வரை பார்த்த காலம் போய், இப்போதெல்லாம் மொக்கைப் படம் போட்ட பத்து நிமிஷத்திலேயே தூக்கம் வந்துவிடுகிறது
c. ROFLMAXXXX என்பதையாவது ஊகிக்க முடிகிறது. மற்ற சேட் சிலாங்ஸ்லாம் முழி பிதுங்கிறது. LOL, கொல்-ன்னு சிம்பிளாகவே இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
d. பொண்டாட்டி கூட ஷாப்பிங் போனா அடிக்கடி உச்சா வந்துவிடுகிறது.
e. எல்லாவற்றையும் சுருக்கி எழுதுகிறேன் பேர்வழின்னு come என்பதை cum என்று எழுதினால் கூப்பிட்டு காதைத் திருகத் தோன்றுகிறது
f. நல்ல முருகலா வார்த்துப் போடு என்று வக்கணையாய் நாக்கு கேட்கிறது. இன்னிக்கு என்ன சமைக்க என்ற தங்கமணித் தருணங்களில் டாண் டாணென்று விதவிதமாய் விவரிக்க முடிகிறது.
g. அட இன்னும் ஒரு முடி கூட நரைக்கலையே காத்ரேஜ் டையான்னு கேட்டால் கோபம் வருகிறது. நான் ஒன்லி shampoo basedன்னு கத்தத் தோன்றுகிறது
h. இப்போவெல்லாம் அடிக்கடி வீக்கெண்டுகளில் குளிக்கத் தோன்றுகிறது. டிபன் சாப்பிட்டால் டீக்கு மனம் ஆலாய் பறக்கிறது. Self-reliance-ஐ முன்னிருத்தி அட்டகாசமான டீ போடும் கலை கைவசமாகிக் கொண்டிருக்கிறது. ஊரில் வீட்டிற்கு யார் வந்தாலும் காப்பி குடிக்கிறேளா, சூப்பராய் போடுவேன் குடிக்காம போகக் கூடாது என்று உபசரிக்கும் டிகாக்க்ஷன் மாமாக்கள் நினைவுக்கு வருகிறார்கள்.
i. ஜிம்முக்கு போகவேண்டிய நாட்களில் எப்படியாவது சுண்டுவிரலில் சுளுக்கு வந்து தொலைத்துவிடுகிறது. கொடுமை என்னவென்றால் தங்கமணி அதை நம்ப மறுக்கிறார். ஜிம்மில பெருசு பெருசா டிவி வைச்சிருக்கீங்களேடா இப்படி ஐயோ ராமான்னு கத்தற இங்கிலீஷ் பாட்டப் போடாம, நல்ல படமும், கால நீட்டி உட்கார்ந்து பார்க்கிறதுக்கு ஒரு பென்ச்சும் போட்டா குறைஞ்சா போயிடுவீங்க, காசு வாங்குறீங்களே தவிர கஸ்டமர் சர்வீஸ் இல்லையேப்பான்னு கம்ப்ளைண்ட் பண்ணத் தோன்றுகிறது.
j. பெண்டாட்டி ட்ரஸ் செலெக்ட் செய்தது போய் எனக்கு இப்போது மூத்த பெண்ணும் ட்ரெஸ் செலக்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார், டைட்டன் வாட்ச் டாடி ஏனோ நினைவுக்கு வருகிறார். ஹூம்ம் இனிமேல் தான் ஸூடுலில் உட்கார்ந்து கொண்டு பியானா வாசிக்க கற்றுக் கொள்ளவேண்டும்
ஆனால் அதே சமயம் curious case of Benjamin Button மாதிரி இளமை திரும்பிக் கொண்டிருப்பதற்கான அறிகுறிகளும் நிறையவே தெரிகின்றன.
1. பிடிக்கவே பிடிக்காத இங்கிலீஸ் பாப் இசை ரகம் கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கிறது. வீடியோவில் ஷகிரா யாரு ரியானா யாரு பியான்ஸே யாருன்னு டக்கு டக்குன்னு சொல்லி விடுகிறேன்.
2. யாராவது ஊஞ்சலில் ஆடுவதைப் பார்தாலே தலை சுற்றுவது போய் இதெல்லாம் ஜுஜுபி லெஃப்ட் ஹேண்டால அசால்டா சுத்துவேன்ன்னு இப்போதெல்லாம் தீம் பார்க் ரைடுகளில் தெகிரியமாய் ஏறி மனம் குதூகலிக்கிறது.
3. சாயம் போன ஜீன்ஸெல்லாம் போடப் பிடிக்கிறது. அதுவும் நன்றாக இருப்பதாக நிறைய பேர்கள் (அதாவது பெண்கள்) கூறுகிறார்கள்.
4. ராக்கோழி மாதிரி எத்தனை மணி வரை வேண்டுமானாலும் முழிக்க முடிகிறது ஆனால் இந்த மிட்நைட் காலை ஆறரை மணிக்கு எழுந்திரிப்பதற்குத் தான்...ம்ஹூம்.. இன்னும் ஒரு பத்து நிமிஷம் ப்ளீஸ், அப்பவே எழுந்தாச்சுமா இன்னிக்கு என்னல்லாம் வேலைன்னு அப்படியே ப்ளான் பண்றேன்... சனியன் பிடிச்ச கடிகாரம், காலையில் மட்டும் ஒரு பத்து நிமிஷம் லேட்டா ஓடினாத் தான் என்ன.
9. சமந்தா போய் இப்போதெல்லாம் நஸ்ரியாவைப் பிடிக்கிறது. ஆனா நஸ்ரியாக்கு உங்களப் பிடிக்கனுமே என்று கேட்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். நாடு நமக்கு என்ன செய்தது என்று கேட்பதற்கு முன்னால் நாட்டுக்கு நாம் என்ன செய்தோம் என்று கேட்கணும்ன்னு எம்ஜியார் சொல்லியிருக்கிறார்.
10. ஆபிஸ் பார்ட்டியில் "ஹே..." என்று செளஜன்யமாய் தோளை தட்டிக் கூப்பிட்டு பெண்கள் கடலை போடுகிறார்கள்.
(இதையெல்லாம் முதல் பத்தியில் சேர்க்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு மேலே சொன்ன ஐந்து ஆறு ஏழு- காரணங்கள் தெரியாமல் போகக் கடவது. சிரிப்பவர்களுக்கு காரணம் நம்பர் எட்டும் கூடுதலாய் காணாமல் போகக் கடவது)

Saturday, November 23, 2013

இரண்டாம் உலகம்

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடம் இந்த மாதிரி மேக்கிங்கை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது

அனுஷ்கா ரசிகர்களுக்கும் ஆர்யா ரசிகைகளுக்கும் இந்த படத்தைப் பார்த்த பிறகு அவர்களைப் பிடிக்காமல் போவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கிறது. இரண்டாம் உலகில் ஆர்யாவிற்கு  ஷேவிங் செய்த காட்டுக் குரங்கு மாதிரி மேக்கப் வேறு -  சகிக்கலை.

இடைவேளையில் இடைவேளை என்று போடாமல் இரண்டாம் உலகம் என்று போடுகிறார்கள். இங்கே ஆங்கிலப் படங்களுக்கு இண்டர்வெல் கான்சப்ட் கிடையாது என்பதால் படம் அவ்வளவு தான் முடிந்துவிட்டது என்று நிறைய பேர்கள் குழம்பி ஒருத்தரை ஒருத்தர் பார்த்து திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கனவான் தியேட்டர் சிப்பந்திகளிடமே கன்பேர்ம் செய்து கொண்ட பிறகே குடும்பத்திற்கு பாப்கார்ன் வாங்கி வரப் போனார்.

அனுஷ்கா படம் முழுக்க வியாபித்திருக்கிறார். கொஞ்சம் சதை போட்டிருக்கோமோ என்று மனக் கவலையில் இருக்கும் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அனுஷ்கா தொப்பை அடிக்கடி படத்தில் காட்டப் படுகிறது. யோகா செய்து திரும்ப வராமல் இருந்தால் அனுஷ்கா ஆண்ட்டியாய் அப்கிரேட் ஆகிவிட்டார் என்றே தோன்றுகிறது.

படம் ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் திரும்பவும் இந்த மாதிரி மேக்கிங்கை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றியது

படம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் "சீக்கிரம் படத்த போடுங்கய்யா..." என்று கூவத் தொடங்குகிறோம். இடைவேளைக்கு அப்புறம் "சீக்கிரம் படத்த முடிங்கைய்யா..." என்று கூவுவதை மாற்றிக் கொள்கிறோம்.

அடிக்கடி காதல் என்றால் என்ன, எப்படி ஃபீல் பண்ணவேண்டும் என்று யாராவது ஒரு கதாபாத்திரம் விளக்கம் கொடுக்கிறார்கள். ஆஹா இந்த மாதிரி நிறைய ஃபாரின் ஆட்களை பஸ் ஸ்டாப்பில் முத்தம் குடுக்கவைத்து காதலை கே.டி.குஞ்சுமோன் டைரக்டர்கள் அல்ரெடி அக்கு வேறு ஆணி வேறாய் நிறைய பிரித்து மேய்ந்திருக்கிறார்களே என்று அப்போது தான் பல்பு  எரிந்தது.

"விந்தை உலகில்,....வேடிக்கை மனிதனின் அட்டகாசம்" என்று டீ.வியில் கட்டைக் குரலில் "இந்திய தொலைக்காட்சிகளில்..."  விளம்பரத்தில் வரும் டப்பிங் ஹாலிவுட் பட எஃபெக்ட் நிறையவே கிடைக்கிறது. இந்த படம் டீ.வியில் வரும் போது முக்காலே சதவீதம் கண்டிப்பாய் நீங்கள் டப்பிங் படம் என்று நினைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

வசனங்கள் எல்லாம் படு திராபை. படத்தின் மிகப் பெரிய பலவீனமே ஸ்க்ரீன் ப்ளேயும் வசனங்களும் தான் என்பது எனது தனிப்பட்ட கருத்து. நிறைய இடங்களில் மக்கள் பொறுமையிழந்து "ஷப்பா...டேய்...டேய் .....போதும்டா சொறியாதடா" என்று சவுண்டு விட ஆரம்பித்துவிட்டார்கள். வசனம் மட்டும் இல்லாவிட்டால் இசைக்கு அந்த திராபை பட்டத்தை அளித்திருக்கலாம்.

A film by Selvaraavan என்று கார்டு போடும் போது காதல் கொண்டேன் செல்வராகவனா இது என்று கண்டிப்பாகத் தோன்றும். செல்வராகவன் ஃபாலோயர்ஸுக்கு இப்படம் மிகப் பெரிய ஏமாற்றமாய் இருக்கும்.

லாஜிக் மேஜிக் எல்லாம் விடுங்கள், எந்த ஒரு களமாய் இருந்தாலும் முக்கியமான விஷயம் நம்பகத்தன்மையை கொண்டு வருவது. அதில் கில்லாடியான செல்வராகவன் இந்த படத்தில் கோட்டை விட்டிருக்கிறார்.

அந்த முக்கியமான அம்மா கேரக்டர் ஃபாரின் அம்மணி ஸ்ப்ப்ப்பா.... படத்திற்கு பெயர் இரண்டாம் கிரகம் என்று வைத்திருக்கலாம்.

உங்கள் வீட்டில் சின்னப் பசங்கள் இருந்தால் ட்ரைலரில் வரும் சிங்கத்தைப் பார்த்து படத்துக்கு கூட்டிப் போங்கள் என்று நச்சரிக்கலாம். படத்தில் பத்து நிமிஷம் தான் அவை வருகின்றன. மற்ற நேரங்களில் உங்களை அவர்கள் நச்சரித்துவிடுவார்கள் ஜாக்கிரதை.

இந்த ப்ரொடெக்‌ஷன் க்வாலிட்டி மிகப் பாராட்டப் படவேண்டிய ஒன்று ஆனால் திரைக்கதையும் மற்ற விஷயங்களும்  அதை விரயமாக்கிவிட்டன....ஹூம்ம் ஒன்னும் சொல்வதற்கில்லை. நார்னியாவை படு லோக்கலாய் எடுத்த மாதிரி இருக்கிறது.

Tuesday, November 05, 2013

தீபாவளி

தீபாவளிக்கு இன்னும் இரண்டே நாட்கள் இருந்தன. ஆறு மாதம் கழித்து ஊருக்குப் போகப் போகிறோம் என்பதை விட, எம்.எஸ்.ஸியை பாதியில் விட்டுவிட்டு வந்த  இரண்டுவருடங்கள் படித்த கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிகிறதே என்பதை விட, அன்று சாயங்காலம் ஆறு மணிக்கு பஸ்ஸில் தீபாவளிக்கு ஊருக்குப் போகப் போகிறோம் என்ற எண்ணமே முன்னோங்கி நிறைந்திருந்தது. காம்பஸ் இண்டர்வியூக்களுக்குத் தயாராக வேண்டுமே, வேலை கிடைக்குமா என்ற மனக் கிலேசங்களை எல்லாம் தீபாவளி சற்று ஓரம் தள்ளிவிட்டிருந்தது. பஸ் ரிசர்வேஷன் திறந்த முதல் நாளே பாரிஸ் கார்னரில் க்யூவில் காத்திருந்து வாங்கிய டிக்கெட் பத்திரமாய் பர்ஸில் இருந்தது. இரண்டே மணிநேரம் தான் எல்லா டிக்கெட்டும் விற்று தீர்ந்து விட்டன. தாமிரபரணித் தென்றல் பஸ் அப்படி. கப்பல் மாதிரி சொகுசாய் மிதந்து போய் காலை ஆறு மணிக்கெல்லாம் திருநெல்வேலி வந்துவிடும்.

அப்போதெல்லாம் என்.ஐ.ஐ.டியில் இரண்டு வருட படிப்பு முடியும் போது ஒரு ப்ராஜெக்ட் செய்து அதன் தீஸிஸ் சமர்பிக்கவேண்டும். அத்தோடு யாரோ மண்டபத்தில் எழுதிக் குடுத்ததைக் கொண்டு வந்துவிடக் கூடாது என்று அது சம்பந்தப்பட்ட ஒரு டெக்னிகல் இண்டர்வியூவும் இருக்கும். காலை ஒன்பதரை மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட். என்னுடன் படித்த நண்பனும் நானும் காத்திருந்தோம்.  நண்பன் அப்போது டி.டி.பி ஆப்பரேட்டராக வேலை பார்த்து வந்தான்.  நான் மட்டுமே வெட்டி ஆபிஸர். "நான் ஆபிஸில் பாதி நாள் தான் லீவு சொல்லிட்டு வந்திருக்கேன். இன்னிக்கு முக்கியமான வேலை இருக்கு அதுனால நான் முதல்ல முடிச்சிடறேனே, ஆபிஸுக்கு சீக்கிரம் போக வசதியாய் இருக்கும்" என்று நண்பன் முன்னமே சொல்லி வைத்திருந்தான்.


அன்றைக்கு எங்களுக்கு வாய்த்திருந்த எக்ஸாமினர் ரொம்ப டெக்னிக்கல் என்று கேள்விப் பட்டிருந்தோம். அது எப்படி செஞ்சே இது எப்படி எழுதின என்று ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்டுக் குடைவார் என்று கேள்விப் பட்டிருந்ததால்
 மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் சோதித்துக் கொண்டிருந்தோம். மணி பத்தரை -  ஆளை இன்னும் காணவில்லை. பதினொன்று ஆகி பதினொன்றரை ஆன போது நண்பனுக்கு முகம் வெளிறி விட்டது. "டேய் நான் இன்னிக்கு கண்டிப்பா போயே ஆகனும்டா இல்லைன்னா வேலை போயிடும்டா...நான் என்னோட அப்பாயிண்ட்மெண்டை இன்னொரு நாளைக்கு மாத்திக்கிறேன்" என்று கிளம்பிவிட்டான்.  எனக்கு இதை முடித்து விட்டு ஊருக்குப் போனால் இரண்டு வாரம் இருந்துவிட்டு வருவதாய் ப்ளான். பின்னாலிருந்து கணக்கு போட்டு நாலு மணிக்கு முடிந்தால் கூட போதும் என்று காக்க ஆரம்பித்தேன்.

பன்னிரெண்டு மணிக்கு ஆய்வாளர் அவசர அவசரமாய் அவரது கேபினுக்கு ஏதோ ஃபைலும் கையுமாய் வந்தார். கேள்விக் குறியோடு என்னைப் பார்த்தவருக்கு, என் கையிலிருந்த ப்ராஜெக்ட் பைலை பார்த்ததும் தான் என்னுடைய அப்பாயிண்ட்மெண்டே நியாபகத்துக்கு வந்தது. "ஓ மை காட், ஐ ஆம் டோட்டலி சாரி, இன்றைக்கு ஒரு மிக முக்கியமான க்ளையண்ட் மீட்டிங் மறந்தே விட்டேன், இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் முடிந்துவிடும், காத்திருக்கிறாயா.?" என்று கேட்டார். வேகமாய் தலையை ஆட்டினேன்.

மீண்டும் முதல் பக்கத்திலிருந்து ரிப்போர்ட்டை புரட்ட ஆரம்பித்தேன். அவர் திரும்ப வருவதற்கு மணி இரண்டாகிவிட்டது. "வெரி வெரி சாரி, மீட்டிங் முடிய ரொம்ப லேட்டாகிவிட்டது. நீ சாப்பிட்டாயா " என்று கேட்க, என்ன சொல்லலாம் என்று யோசிப்பதற்குள் "நீ போய் சாப்பிட்டுவிட்டு வந்துவிடு நானும் சாப்பிட்டு அரை மணியில் ரெடியாகிவிடுகிறேன் முடித்துவிடலாம்" என்று தீர்பெழுதிவிட்டார். போச்சு... பெட்டியை வேறு எடுத்து வரவில்லையே வீட்டுக்குப் போய்விட்டு 11A பிடித்து பாரிஸ் கார்னர் போவதற்குள் தாவு தீர்ந்துவிடுமே என்று கவலையாகிவிட்டது. சும்மா கீழே போய் ஒரு டீ குடித்துவிட்டு பத்து நிமிஷத்தில் வந்துவிட்டேன். உள்ளே ஆய்வாளர் காரியரை திறந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நான் வந்ததை கண்ணாடி கதவு வழியாக நிமிர்ந்து பார்த்து உள்ளே என்னை அழைத்த போது மணி இரண்டு ஐம்பது. சாப்பிட்ட சாம்பார் மணக்க மணக்க ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டை வாங்கிப் பார்த்தவர், சம்பிரதாயமாக சாப்பிடவில்லையா என்று கேட்டார். பசி காதடைத்து இல்லை பரவாயில்ல நீங்க கேட்டதே வயிறு நிறைந்து விட்டது என்ற ரீதிக்கு ஏதோ உளறினேன். அப்புறம் நேராக டெனிக்கல் கேள்விகளுக்குப் போய்விட்டார். மொத்தம் பத்து கேள்விகள் தான் கேட்டிருப்பார். திடீரென்று நிமிர்ந்து உன்னுடைய எல்லா மார்க் சர்டிபிகேட்ஸும் கொண்டு வந்திருக்கிறாயா என்று கேட்டார். நல்லவேளையாக முழு ஜாதகத்தையும் ஃபைலில் வைத்திருந்ததால் தலையாட்டினேன். காலேஜு நாட்களுக்கு நேர் எதிராய் இங்கே எல்லா செமஸ்டரிலும் மார்க்குகள் முத்து முத்தாய் தொன்னூறுக்குக் குறையாமல் வேறு வாங்கியிருந்தேன்

ஒரு வெள்ளைத் தாளைக் குடுத்து தொன்னூறுகளில் மிகவும் பிரசித்தமான லின்க்ட் லிஸ்ட் டிசிஷன் ட்ரீ அல்காரிதத்தை சி++ல் எழுதச் சொன்னார். மட மடவென்று எழுதினேன். உற்றுப் பார்ததவர், இண்டர்வியூ மாதிரி கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிட்டார். அடுத்த அரை மணியில் எழுந்து போனவர், பத்து நிமிடத்தில் திரும்ப வந்து என்னை இன்னொரு அறைக்கு கூட்டிப் போனார். அங்கே இன்னும் இரண்டு ஆய்வாளகள் உட்கார்ந்திருக்க, என்னை நடுவில் ஒரு சீட்டில் உட்காரச்சொன்ன தொனியிலேயே எனக்கு அது காம்பஸ் இண்டர்வியூ என்று தெரிந்துவிட்டது. நல்லவேளை பயம் படபடப்பெல்லாம் காத்திருக்கும் போது தான் வரும், அவர்கள் எனக்கு பயப்பட, பட படக்க சந்தர்ப்பமே அளிக்கவில்லை. பிட்டத்தை நாற்காலில் சாய்ப்பதற்குள்ளாகவே கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்புறம் ஏதோ ஒரு கணக்கு குடுத்து அதை c++ ப்ரோக்ராமில்  எழுதச் சொன்னார்கள். நான் எழுதிக்கொண்டிருக்கும் போதே முன்னால் எழுதிய ப்ரோக்ராமை சரி பார்க்க ஆரம்பித்தார்கள். மார்க் ஷீட்டில் வேறு ஒரு தட்டி ஏதோ சங்கேதம் காண்பித்தார். நான் ப்ரோக்ராம் எழுதிக் குடுக்கஅதை இரண்டு நிமிடம் பார்த்து விட்டு என்னையே திருத்தச் சொன்னார்கள். சும்மா ரெண்டு மூனு சிண்டெக்ஸ் தவறுகளை மட்டும் பென்சிலால் சுழித்து திரும்ப நீட்டினேன். கம்ப்யூட்டரில் ஏத்தியிருந்தால் முஹே பச்சாவ் முஜே பச்சாவ் என்று கதறியிருக்கும். இரண்டு கம்பெனி பெயர்களை சொல்லி எந்த மாதிரி வாய்ப்பை எடுத்துக்கொள்வாய் என்று கேட்டபோது அர்விந்த் சாமி மாதிரி நான் ரோசாவைத் தான் கட்டிப்பேன் என்று பதில் சொன்னேன். ஏன் என்று கேட்ட போது ஏன்னா எனக்கு ரோசாவத் தான் ரொம்ப பிடிச்சிருக்கு என்பதையும் பதவிசாய் டாண்ணு சொல்லிவிட்டேன்.


சிரித்துக் கொண்டே சரி எதுக்கும் நாளைக்கு காலைல எட்டு மணிக்கு இங்க வந்துடுன்னு சொன்ன போது எனக்குப் பகீரென்றது. இன்னும் ஒரு மணிநேரத்துல நான் தாமிரபரணித் தென்றல்ல திருநெல்வேலி போறேன் சார்னு டிக்கட்டை காண்பித்த போது ஒருவர் என் தோளை அணைத்து ரூமை விட்டு வெளியே கூட்டிக் கொண்டுவந்து ராசா உனக்கு வேலை கிடைச்சாச்சு பொண்ணு வேற யாருமில்ல உனக்குப் பிடிச்ச ரோசாவே தான் என்ற போதும் கூட விஷயத்தை உணராமல், சார் நாளக்கழிச்சு தீபாவளி சார்,  இதோ போய்ட்டு இப்படிங்கிறதுக்குள்ள வந்துடறேன், ரோசா அதுவரைக்கும் காத்திருக்க மாட்டாளா என்று தான் கேட்டேன். யோவ் என்னைய்யா பேசற நாளைக்கு காலைல நீ வேலைக்கு சேர்ற சந்தோஷப் படுய்யா என்று அவர் ஒரு அதட்டு போட்ட போது தான் எனக்கு விஷயம் உரைக்க ஆரம்பித்தது.

அப்புறம் அரக்க பரக்க பாரிஸ் கார்னர் போய் கஷ்டப்பட்டு வாங்கிய டிக்கெட்டை விற்க நாய் படாத பாடு பட்டதும், கண்டக்டர் அந்த டிக்கெட்டை ஆட்டையைப் போட பார்த்ததும் அப்புறம் வேறு ஒரு தெகிரியமான அம்மணி நீ குடு ராசா நான் கண்டெக்டர பார்த்துக்கிறேன்னு வாங்கிக் கொண்டதும், ஒன்பது மணிக்கு மேல் எஸ்.டி.டி சார்ஜ் கம்மியானதும் ஊருக்கு ஃபோன் போட்டு தீபாவளிக்கு வரவில்லை என்று தகவல் சொன்னதும், அவர்கள் ஏமாற்றமானதும் அப்புறம் வேலை கிடைச்சாச்சு என்று சொன்னதும் அவர்கள் சந்தோஷப்பட்டதும், நான் ரோசாவோடு தீபாவளி கொண்டாடியதும் படம் முடிந்து டைட்டில் கார்டு போடும் போது சைட்டுல குட்டியாய் ஓட வேண்டிய சீன்கள்.

மெசேஜ் என்னான்னா....ஆயிரம் தீபாவளி வரலாம் ஆனால் எனக்கு அந்த தீபாவளி தான் பொங்கல் அதாவது சர்கரைப் பொங்கல் !!!