Sunday, June 02, 2013

சோஷியல் நெட்வொர்க்

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வைபவம் எப்போதாவது நடக்கும். அதிலும் வீட்டில் யாருமே இல்லாத போது வேலை பார்க்கும் யோகம் அத்திப் பூத்த மாதிரி தான் வரும். பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டு பெண்டாட்டியை ஷாப்பிங்க்கு அனுப்பிவிட்டு இரைச்சல் இல்லாத நிசப்தத்தில் ஒருமுகமாய் வேலை பார்க்கும் போது productivity அமோகமாய் இருக்கும் என்று மேல் நாட்டு சைண்டீஸ்ட் கூறியிருக்கிறார். அதை கருத்தில் வைத்து சோபாவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேஸ்புக்கைத் திறந்தால், productivityக்கு தீனி போடும் வகையில் அப்டேட்ஸ் ஏகத்துக்கு முழித்துக் கொண்டிருக்கும். யாஹூ சேட், 123இண்டியா என்று எனக்குத் தெரிந்த முதலாம் சோஷியல் சங்கம் வளர்த்த தேசீ நெட்வொர்க்கிங் இன்று தமிழ் கூறும் நல்லுலகத்தில் பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் என்று மூன்று முக்கிய தொகுதிகளில் மட்டுமே போட்டி போடுகிறது. . இதற்கப்புறம் லிஸ்டில் ஆர்குட், ப்ளாகர் என்று பலவும் வந்தாலும் அதில் மட்டுமே புழங்குபவர்கள் எல்லாம் "அந்தக் காலத்துல நாங்களெல்லாம்" என்று தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.

இந்த மூன்றில் கூகிள் பிள்ஸுக்குள் எட்டிப் பார்த்துவிட்டு ஓடியே வந்துவிட்டேன். சை ஒரே ஆம்பிளப் பசங்க கூட்டம். அத்தோடு இங்கே போனாலே என்னாவோ மதுரை பக்கத்து கிராமத்தில் அருவாளும் கையுமா கிடா மீசைகள் கலந்து கொள்ளும் பங்காளி வீட்டு விசேஷம் மாதிரி திகிலாகவே இருக்கிறது. எந்தப் பக்கம் போனாலும் ஜீப்பில் கூட்டமாய் திரிகிறார்கள். "நீ நல்லா என்ன வெட்டுண்ணே எனக்கு இன்னும் ரத்தமே வரலை பாரு, எலேய் மொக்கராசு அண்ணன் வெட்டுறாருடா வந்து தலையக் காமி" என்று சிரித்துக் கொண்டே செளஜன்யமாய் வெட்டிக் கொள்ளுகிறார்கள். ரத்த பூமியா இல்லை நான் தான் தக்காளி சட்னியைப் பார்த்து பயப்புடுகிறேனா என்று தெரியவில்லை. காது குத்துக்கு வாங்கண்ணே-ன்னு தெனாவட்டாய் என்னையும் உள்ளே இழுத்து போடப் பார்த்தாரகள். "எலேய் தங்கராசு லைட்ட அமர்த்துடா, இன்னிக்கு ஒரு பய தப்பிச்சி போயிரக்கூடாது" என்று பலமாய் சவுண்டுவிட்டு லைட்டை அணைத்ததும் நைஸா ஓடி வந்துவிட்டேன். இப்பவும் என்னை யாராவது அவர்கள் வட்டத்தில் சேர்க்கும் போது முன்னாடி போய்கிட்டே இருங்கண்ணே, பால் கார்ட குடுத்துட்டு பின்னாடி வந்துகிட்டே இருக்கேன்னு நழுவிக் கொண்டிருக்கிறேன். எப்போதாவது ரொம்ப போர் அடிக்கும் போது மட்டும் முக்காடு போட்டுக் கொண்டு சத்தமே போடாமல் கோட்டுக்கு அந்தப்புறம் நின்று பார்த்துவிட்டு வருகிறேன்.

ட்விட்டர் கொஞ்சம் தேவலாம். திட்டினால் கூட 140 எழுத்துக்குள் திட்டவேண்டும் என்பதால் யாரும் ரொம்ப மெனக்கெடுவதில்லை. ஆனால் பெரும்பாலும் ட்விட்டர் மேட்டர் இல்லாத மலையாளப் படம் பார்பது மாதிரியே இருக்கிறது. எதைப் பற்றி ட்ரெண்டுகிறார்கள் என்பது புரிதலுக்கு அப்பாற்பட்டதாய் இருக்கிறது. திடீரென்று 1930ஜோக்குகள் என்று போய்க்கொண்டிருக்கிறது. திடீரென்று ஒரு கனவான் இதைப் பாருங்கன்னு சுருக்கெழுத்தில் இருக்கும் ஒரு லிங்க் அனுப்புகிறார். க்ளிக்கினால் ஏதோ சப்பான் எழுத்தில் எதையோ பற்றி இருக்கு. இதை எதுக்கு நமக்கு அனுபினாங்கன்னு யோசித்துக் கொண்டே திரும்ப ட்விட்டருக்கு வந்தால் ராதா ராதா என்று ஏதோ ட்ரெண்டிக் கொண்டிருக்கிறார்கள். யெப்பா யாருப்பா ராதா எந்த ராதா, எனக்கு ஏகப்பட்ட ராதாக்களைத் தெரியும்ன்னு தலையை சொறிந்து கொண்டே "who is ராதா"ன்னு டிவிட்டினால் ஏதோ ஒரு வெள்ளைக்கார பெண்மணி வந்து அந்த டிவிட்ட பேவரிட் செய்துவிட்டுப் போகிறது. பெரும்பாலும் குழப்பமான ரயில்வே ஸ்டேஷனில் நுழைந்த மாதிரி தான் இருக்கிறது. நானும் "டேய் அப்படியே லெப்ட்ல வா வா ஒடி ஒடி, வந்திகினே இரு"ன்னு சவுண்டி விட்டு எதாவது தேறுமான்னு பார்த்துக்கொண்டிருக்கிறேன். இது தவிர வாழ்க்கை, தோல்வி, காதல் பற்றி தத்துவங்கள் ஒரு நாளைக்கு 500 ட்வீட்டுக்கு குறையாமல் டைம்லைனில் குப்பை சேருகிறது.

இந்த பேஸ்புக் இருக்கே இருக்கே பேஸ்புக் இது தான் நம்ம பேட்டை.  சமந்தா போட்டோ போட்டால் டாண்ன்னு வந்து முகப்பில் நிற்கிறது. பல்வேறு காண்பதற்கு அரிய வீடியோக்கள், தகவல்கள் கிடைக்கின்றன. நம்மாட்கள் நிறைய பேர் ப்ளாக் மாதிரி அங்கேயே எழுதி நிறைய கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் பேஸ்புக்கும் மகா சத்ரு. முதலில் எல்லாம் "உயரமாய் இருக்கும் இடத்தில் உட்காராதே, கீழே பார்த்தால் கழுத்து வலிக்கும்" என்பது மாதிரி ஏதாவது ஒரு ரெண்டு வரி போதனை விவேகானந்தர் / நாராயணமூர்த்தி / அப்துல் கலாம் / ஜென் குரு  இதில் யாராவது ஒரு பெயரைப் போட்டு, எதாவது ஒரு படத்தோடு வந்து கொண்டிருந்தது. அப்புறம் "ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் ஒரு சின்னப் பையன் இருந்தான் அவன் அப்பா ஆபீஸ் போகும் போது பல்பம் கேட்டான்..." என்று ஒப்பனிங் சீனை ஆரம்பித்து கடைசியில் பொண்டாட்டி துடைப்பம் கேட்டா உடனே வாங்கிக் கொடுங்க என்று நெஞ்சை நக்கும் கதையாய் முடியும். அப்புறம் வெங்கடாஜலபதி போட்டோவோ சாய்பாபா போட்டோவோ அடுத்த அரை நிமிஷத்தில் ஷேர் செய்யச் சொல்லி ஆத்தீக சமாஜ அன்பர்கள் ஆரம்பித்தார்கள். இதற்கு அடுத்த படியாக பேஸ்புக் டாக்டர்ஸ், தனியா இருக்கும் போது உச்சா வந்தால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் போன்ற மெடிகல் இன்பர்மேஸன் கொடுக்க ஆரம்பித்தார்கள். அப்புறம் காக்கா வலிப்பு, ஹார்ட் அட்டாக் என்று எல்லா டீட்டெயில்ஸும் வந்து பேஸ்புக்கில் வழியே படித்து எங்க ஊரில் ரெண்டு பேர்கள் டாக்டர் ஆகியிருக்கிறார்கள். இதிலெல்லாம் சேதாரம் ரொம்ப இல்லையாதலால் பிரச்சினையில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் அதுக்கப்புறம் வைச்சாங்க பாருங்க ஒரு ஆப்பு. பரோட்டா சாப்டாதீங்க மைதா மாவு உடம்புக்கு நல்லதில்லை சாப்டீங்க செத்தே போவீங்க என்று அடி மடியில் கை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். ராத்திரி கனவில் "நான் தான் முகேஷ்....ஒரு நாளைக்கு பத்து பரோட்டா தின்பேன்" போன்ற காட்சிகளெல்லாம் வேறு வர ஆரம்பித்திருக்கிறது. சாப்பிட்டவுடன் டீ குடித்தால் இரும்புச் சத்து குறைந்து விடும்ன்னு பேஸ்புக்கில் படித்துவிட்டு தங்கமணி இப்போதெல்லாம் டீயே கண்ணில் காட்ட மறுக்கிறார். அதுல இது இருக்காம் இதுல அது இருக்காம்ன்னு சோத்துல கைவைக்கிற தகவல்கள் "Ignorance is bliss" தத்துவத்தை நாடச் சொல்லுகிறது. இப்படியே போனால் தண்ணீரில் இரண்டு பங்கு ஹைட்ரஜன் இருக்கிறது அந்த ஹைட்ரஜனை வைத்து பாமே தயாரிக்கிறார்கள் என்று அதையும் வாயில் வைக்க விளங்காது செய்துவிடுவார்கள் போல.

15 comments:

  1. Vadai enakkey!! Super post!!

    ReplyDelete
  2. ஒரே போட்டோ-வ, வீடியோ -வ வரிசையா ஒவ்வோருத்தரும் ஷேர் பண்ணி இம்சை பண்ணுவாங்க. இந்த குழந்தையை காணோம் னு 4 வருழம் முன்னாடி வந்த நியூஸ் போட்டு கொல்லுவாங்க. 'என் வீட்டு கொலு' னு wife upload பண்ணா போட்டோ -வ husband தான் மொதல்ல லைக் பண்ணுவாரு. ஆனாலும் அது பக்கம் போகாம இருக்க முடியலையே.

    ReplyDelete
  3. அமர்க்களம்..எனக்கு FBயில் மாமன்,மச்சான்,பெண் எடுத்தோர், பெண் கொடுத்தோர் என சிட்டிசனில் அஜீத் கோர்ட்டில் சொல்லும் அத்தனை உறவுகளும் இருப்பதால் அங்கு அடக்கிவாசிப்பேன். ட்விட்டர் நம்ம பேட்டை. ப்ளாக் பப்ளிசிச்சிட்டி (எழுதுறது 4 மாசத்துக்கு ஒருக்கா) போன்ற இன்னபிறக்கும் நன்கு வொர்க் ஒவுட் ஆகுது..

    ReplyDelete
  4. இதைப்பத்தி ரெண்டு போஸ்டுல டீட்டெயில்டா புலம்பி இருக்கேன்.. முடிஞ்சா வந்து பார்க்கவும்.
    http://ananyathinks.blogspot.in/2013/03/blog-post_24.html
    http://ananyathinks.blogspot.in/2013/04/blog-post.html
    :) அப்புறம் பேபி ஃபுட்டில் க்ளாஸ் பீஸ், மாம்பழ ஜூஸில் எய்ட்ஸ் பேஷண்ட் ரத்தம், (உங்களுக்கும் தங்கமணிக்கும் பிடிச்ச) கரும்புஜூஸில் பாம்பின் விஷம்(பாம்போட சேர்த்தே பிழிஞ்சுட்டாங்களாமா) அப்புறம் ஃபோன் சார்ஜ் பண்ணும்போது பேசினால் வெடிச்சிரும், சார்ஜ் பண்ணிண்டே இருக்கும்போது கால் வந்தால், காக்காய் வலிப்பு வரும் போன்ற பல அரிய தகவல்களை அள்ளித்தரும் ஃபேஸ்புக்கு கூறும் நல்லுலகத்தை பத்தி இப்படி குண்டக்க மண்டக்க போஸ்டு போட்ட தலைவா... நீ வாழி!

    ReplyDelete
  5. //தண்ணீரில் இரண்டு பங்கு ஹைட்ரஜன் இருக்கிறது அந்த ஹைட்ரஜனை வைத்து பாமே தயாரிக்கிறார்கள்// ஆமாம் ரெண்டு நாலாவும், நாலு எட்டாவும்... அதை குடிச்ச நாம் டெட்-ஆவோம். :)
    எதுக்கும் தண்ணிகிட்ட இருந்து தள்ளியே இருங்க.

    ReplyDelete
  6. வழக்கம் போல நல்ல காமெடி பதிவு :)

    ReplyDelete
  7. சீ சீ இந்தப்பழம் புளிக்கும்னு தெரிஞ்சிதான் அந்தப் பக்கமே போறதில்லை. இதிலே முகநூல்னு தமிழ்ப் "படுத்தல்" வேற. இதைச் சொன்னா, உங்களுக்கு வயசாவுது போல, அதான் இதெல்லாம் பிடிக்க மாட்டேங்குதுன்றாய்ங்க...!! யாருகிட்ட?!

    ReplyDelete
  8. haha.. your blog is always a mind refreshing one.. this one is very funny too :))

    ReplyDelete
  9. chinna vayasula josiyar thanni la gandam nnu sonnappave edho matter irukku nnu yosichirukkanum..... ;)

    ReplyDelete
  10. Could you please let me know your email ID or contact details. A long lost friend made contact and is in the UK. I told her about your 'arumai perumai' :-) that you are active in the UK tamil scene. She said she has heard about you but does not know you and would like to contact you. thanks. Lakshmi

    ReplyDelete
  11. வெட்டி - :)) எனக்கு ஒன்னு பார்சல் ப்ளீஸ்

    ஷ் - ஹா ஹா, நீங்க சொல்றதெல்லாம் சூப்பரு அண்ட் ரொம்ப கரெக்ட்டும் கூட

    நடராஜ் - அவ்வ்வ்வ் அந்த பேமிலி மேட்டர ஏன் கேக்கிறீங்க. இந்த ப்ளாக்கே சொந்த பந்தத்துல யாருக்கும் தெரியவேண்டாம்ன்னு இருந்தேன். மார்க் புண்ணியத்துல எல்லாருக்கும் இப்போ தெரிஞ்சாச்சு :)))

    அனன்யா - ஆஹா சூப்பர் படிச்சேன்..:)))) யெப்பா....நீங்க எழுதின சில எக்ஸாம்பிள்ஸ் படிச்சா அந்த பதார்த்தங்கள் வாயில வைக்க விளங்காது போல இருக்கே

    அரசூரான் - :)))) அதே அதே

    கார்த்திக் - நன்றி ஹை

    சன்யாசி - :))) முகநூல் ட்விட்டர்ன்னா கீச்சர் :))))))

    அனானி - மிக்க நன்றி உங்கள் ஊக்கமான கமெண்டிற்கு

    அகிலா - அடடா என்ன ஒரு சிந்தனை :))) இருந்தாலும் இருக்கும்ங்க

    Lakshmi - ஆஹா அருமை பெருமையா சர்தான் :))) பப்ளிசிட்டிக்கு மிக்க நன்றி. என்னுடைய இமெயில் r_ramn அட் யாஹூ டாட் காம். தொடர்பு கொள்ளச் சொல்லுங்க. எனக்கு தெரிந்த வட்டத்தை அறிமுகப் படுத்தி வைக்கிறேன் :))

    ReplyDelete
  12. all social networking sites-yum pathi neenga sonnathu fact-u fact-unga.
    As usual semma entertainment. ROFL :)

    ReplyDelete
  13. உத்ரா என்ற பெயர் வித்தியாசமாக இருக்கிறதே என்று உங்கள் பக்கத்திற்குப் போனால், திருமணத்திற்காக ஒரு வலைப்பக்க விநோதம் !

    வித்தியாசமான முயற்சி..

    அறிவன்,சிங்கை

    ReplyDelete
  14. விழுந்து விழுந்து சிரிச்சேன் super

    ReplyDelete