Friday, July 15, 2011

அட்வைஸ்

"என்னடா என்னையே பார்த்துண்டு இருக்க.."

"என்னை என்ன பண்ணச் சொல்ற சித்தி..?"

"தலகீழ நிக்கிறான்டா..கொஞ்சம் புத்தி சொல்லேன். நீ சொன்னா கேப்பான்னு தோணறது. மேலத் தெரு நாராயணன் அவா ஆபிஸ்ல சொல்லி ஆபிஸ் பாய் உத்தியோகம் போட்டுக் குடுக்கச் சொல்றேங்கிறார் ஆனா பத்தாவதாவது ஜஸ்ட் பாஸ் பண்ணச் சொல்லுங்கோங்கிறார்"

"ம்..."

"நன்னா படிக்காட்டாலும் பாஸாவது பண்ணிண்டிருந்த பிள்ளை...இப்போ நாலு வேளையும் சினிமா கொட்டகையே கதின்னு இருக்கான்...நீ சித்த அறிவுரை சொல்லப் பிடாதா..."

"நல்ல ஆளப் பார்த்து தான் சொல்லச் சொன்னேள் போங்கோ..இவரும் விட்டா டிபனையும் காப்பியையும் கொட்டகைக்கு கொண்டு வா சொல்லிடுவார்"

"நீ கொஞ்சம் வாய மூடறியா...நம்ம பஞ்சாயத்த அப்புறம் வைச்சுக்கலாம்"

"நோக்கு தெரியாது கிரிஜா...இவன் அஞ்சு வயசுல எட்டாந் திருநாள்ல பச்சை பலூனை பிடிச்சிண்டு சேப்பு பலூன் தான் வேணும்னு அழுதுண்டு நின்னான்...நான்  போய் பலூன்காரன சண்டை பிடிச்சு மாத்திக் குடுத்தேன். எவ்வளவு பண்ணியிருக்கேன் இவனுக்கு...கும்மோணத்துல கிளப் காப்பிய தொண்டைல விடறதுக்குள்ள அவசரமா வருதுன்னு ட்ராயரோட...போய்"

"இப்ப என்ன தான் சொல்றான்.."

"சினிமால சேரப் போறானாம்... எல்லாம் என் தலையெழுத்து. எம்புள்ளை ப்ளஸ் டூ பாஸ் பண்ணுவான்னு நினைச்சேன்.. ஜம்புவோ சிம்புவோ...அவாள்லாம் படிச்சிருக்காளா...இன்னிக்கு கோடி கோடியா வாங்கலையாங்கிறான்..என்னத்த சொல்ல இவன் அப்பா மிராசுதாரா..இல்ல ஜெமினி கணேசனா. ஏதோ அவர் வேலைல இருக்கும் போதே போய் சேர்ந்ததுல எனக்கு கால்வயித்து பென்ஷன் வரது. எனக்கப்புறம் இவனுக்கு அதுவும் வராது"

"பாவம் சித்தி இவ்வளவு சொல்றாளே.. கொஞ்சம் பேசித்தான் பாருங்கோளேன்...நீங்க சொன்னா கேப்பானோ என்னம்மோ"

"எல்லாம் கேப்பான்...கேக்காம எங்க போறான். பலூன்காரன் சேப்பே இல்லைமான்னு சாதிச்சான்...விட்டேனா..?. கும்மோணத்துல..வாளியே இல்லை கக்கூஸுல..."

"சாயங்காலாம் வரச் சொல்லுங்கோ நான் பார்த்து பேசறேன்... பேசறதுக்கு வரச்சொன்னேன்னு சொல்லாதீங்கோ திசைக்கும் திரும்ப மாட்டான். புதுப் பட ப்ரிவியூ ஷோக்கு ரெண்டு டிக்கெட் இருக்காம் கூப்பிட்டேன்னு சொல்லுங்கோ"


"முந்திரி கொத்து பண்ணி குடுத்து விடறேன். தீர்க்காயுசா இருப்ப. அந்த வெங்கடாஜலபதி தான் நல்ல வழியக் காட்டணும்"

"நிஜமாவே ப்ரிவியூ ஷோக்கா கிளம்பறேள்? நீங்க சித்திட்ட சும்மா பேச்சுக்குத் தான் சொன்னேளோன்னு நினைச்சேன்"

"இல்ல நிஜமா ரெண்டு டிக்கெட் இருக்கு. கூட்டிண்டு போய் பேசி பார்க்கறேன். இங்க பேசினா மண்டய மண்டய ஆட்டிட்டு கல்தா குடுத்துடுவான். ப்ளாஸ்க்ல காப்பி போட்டுத் தாயேன்"

"ம்ஹுக்கும் அதொன்னு தான் குறைச்சல்"

"அதானே பார்த்தேன்..என்னம்மோ டெய்லி ப்ளாஸ்குல காப்பி போட்டு குடுக்கற மாதிரி ஊரெல்லாம் தம்பட்டம் அடி"


"படம் முடிய இவ்வளவு நேரமா...ரொம்ப நேரம் புத்தி சொன்னேளா..? பாஸ்கி என்ன சொல்றான். திரும்ப படிக்க போறேங்கிறானா? "

"போவான். டுடோரியல் காலேஜ்ல சேர்த்துவிடறேன்னு சொல்லியிருக்கேன்"

"என்னது நிஜமாவா..."

"ம்ம். "

"இதேது ஊர்பட்ட அதிசயமா இருக்கு.. என்ன சொன்னேள்..எப்படி ஒரே நாள்ல மாறினான்? "

"ம்.. "

"அதான் எப்படின்னேன்..ம்ம்..அதென்ன புஸ்தகம் கையில"

"..கேட்டுண்டே இருக்கேன்... ஒன்னும் சொல்லாம அலமாரில வைக்கறேளே..? என்ன புஸ்தகம்ன்னு கேட்டேன்"

"எல்லாம் நல்ல புஸ்தகம் தான்"

"ப்ச்..இப்போ காட்டப் போறேளா இல்லையா.."

"தொனத் தொனங்காதியேன்...ஃபிலிம் இண்ஸ்டியூட் ப்ராஸ்பெக்டஸ், டைரக்‌ஷன் கோர்ஸ் இருக்காம். அடுத்த இயக்குனர் சிகரம் நீங்க தான்னு பாஸ்கர் என்ன ஒரே புகழாரம். என்னோட திறமைய நன்னா தெரிஞ்சு வைச்சுண்டிருக்கான். பையன் கெட்டிக்காரன்.  இப்போ கோர்ஸுக்கு அப்ளிகேஷன் வாங்கறாளாம், உள்ள அவனுக்கு ஆள் தெரியுமாம். நானாச்சு உங்கள சேர்த்துவிடறேன்னு சொல்லியிருக்கான். நாளைக்கு பத்து மணிக்குள்ள ஃபாரத்த பூர்த்தி பண்ணிக் குடுக்கணும்"

"....?"

21 comments:

  1. சுத்தம்! இதுக்கு தான் என் தர்மபத்தினி உஷாரா யாருக்கும் அட்வைஸ் பண்ணவே விடறதில்ல (ஒரு நாள் தண்ணி அடிக்க கூடாதுன்னு ஒத்தருக்கு அட்வைஸ் பண்ணதுக்கு அப்புறம்)!

    ReplyDelete
  2. மறுநா பாரத்தை பில்லப் பண்ணினேளா.. இல்லையா? இல்லைன்னா இங்க அனுப்புங்கோ.!

    ReplyDelete
  3. பசங்களை இன்டர்நெட் , பேஸ்புக் இத்யாதிகளிடம் வெளியே வரச்சொல்லி ஸ்ட்ராங்கா அட்வைஸ் பண்ணிட்டே நாம நுழைஞ்சு சப்பரம் போட்டு உக்கந்துக்கிற மாதிரி .....

    ReplyDelete
  4. இன்னிக்கும் கும்மோணத்து காபி க்ளப் கக்கூஸுல வாளியே கிடையாது....

    ReplyDelete
  5. எனக்கும் ஒரு சீட் கிடைக்குமா...இந்த அமெரிக்கன் ரிட்டர்ன்...மாதிரி ரோல் கிடைச்சா கூட பரவாயில்லை.. நல்ல பதிவு...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. கோர்ஸ் சேந்தேளா இல்லியா :-))))

    ReplyDelete
  7. கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்கே ரெண்டு கொடுமை ***************** ஆடுச்சாம்!

    இது, பதிவின் சாராம்சம்! :)

    மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கி விட்டோமே! EKSI!?

    இது, பரிகாரம் தேடி வந்தவரின் கதி! :)

    ReplyDelete
  8. //Mahesh said...இன்னிக்கும் கும்மோணத்து காபி க்ளப் *****ல வாளியே கிடையாது....//

    நான் வேணும்னா ஒரு வாளி உபயம் பண்றேன்... ஏதோ நம்மால் ஆனது! பெயர்ப் பலகையிலேயே "இப்போது வாளி வசதி உண்டு" என்று கொட்டை எழுத்தில் போடச் சொல்லுங்கள்! Better late than never...! :)))

    ReplyDelete
  9. "சேப்பு பலூனும், கக்கூஸ் வாளியும்" ஹா... ஹா..ஹா.. டுபுக்கு ட்ரேட்மார்க்.

    ReplyDelete
  10. been a long time reader of this blog... this post was very good.. i really like these stories that you write..

    ReplyDelete
  11. கண்டிப்பாக ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் படித்து இருப்பீர்கள் என நம்புகிறேன். சுஜாதா சொன்னது பொல் telephone directoryஐ தவிர மூழுவதாக உண்மை உள்ள விஷயமும் இல்லை. மூழு பொய்யையும் யாரும் சொல்ல முடியாது . ஜொள்ளி திரிந்த காலம் கிரிகெட் பதிவுகளை ஏதேச்சேயாக படிக்க நேர்ந்தது சம்பவங்களை உன்னிப்பாக கவணிப்பவர் போலும்.

    ReplyDelete
  12. // "எல்லாம் நல்ல புஸ்தகம் தான்"

    "ப்ச்..இப்போ காட்டப் போறேளா இல்லையா.." //

    மாமிக்கு எவ்வளவு நம்பிக்கை உங்கள் மேல்! - ஜெ.

    ReplyDelete
  13. சூப்பர்!.. :)) இதுதான் பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்த கதையா??

    :)

    உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!!

    ReplyDelete
  14. unrelated, my 1st kurum padam ( or paattu, rather) :)

    http://www.youtube.com/watch?v=_cRtySd65u8

    pls popularize :)

    ReplyDelete
  15. பந்து - ஓ உங்க வூட்டுல இந்த சங்கதியா :))

    எல்கே - :)

    ஆதி - அட இங்க லண்டன்ல வந்து பிலிம் ஸ்கூல்ல சேர்ந்துட்டேன்ல

    பத்மநாபன் - அதே அதே சாரே :)

    மஹேஷ் - அட அப்படியா..அது அப்படி இருந்தா தான் நல்லாயிருக்கும்ன்னு விட்டுருப்பாங்க :)

    அப்பாவி - நன்றி -ஹை

    ரெவெரி - நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க? இங்கன லண்ட்ன்ல இருந்தா கண்டிப்பா

    அமைதிசாரல் - ஓ சேர்ந்து முடிச்சாச்சு அதாச்சு 2 வருஷம் :)

    மதி - :)))) அதே அதே. (கோனார் நோட்ஸ் வேற போட்டுட்டீங்க)

    அறிவிலி - அப்படியா. சேப்பு - அது தஞ்சாவூர் வழக்கு :)) நன்றி -ஹை

    மோனு - மிக்க நன்றி

    karges - மிக்க நன்றி சாரே உங்கள் பாராட்டுக்கு :)

    ஜெ - -ஹீ -ஹீ....ஆமாம்

    சுரேகா - எனக்கும் உங்களை நேரில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    சர்வேசன் - தாமத்துக்கு மன்னிக்கவும். அருமையான முயற்சி. இவ்வளவு பேரை ஒன்று சேர்த்து டேக் வாங்குவது என்பது லேசுப்பட்ட விஷயம் இல்லை. ப்ரொடக்‌ஷனுக்கு ஒரு ஷொட்டு. நன்றாக வந்திருக்கிறது. ஆமாம் அதென்ன சினிமேட்டோகிராபின்னு போட்டு ஏகப்பட்ட பெயர்களை போட்டிருக்கிறீர்கள்?

    ReplyDelete
  16. மதி - வாளி உபயம் :)) பெரிய மனசு சார் உங்களுக்கு

    ReplyDelete
  17. ///சினிமேட்டோகிராபின்னு போட்டு ஏகப்பட்ட பெயர்களை//

    20 நாள் நடந்த ஷூட்டிங்க். ஒவ்வொரு நாள் ஒவ்வொருத்தர் வந்தாங்க. புள்ள குட்டிக் காரங்க. எல்லா நாளும் லேட்டா இருந்தா வீட்ல ஒத விழும்னு, டீமை பெருசா வச்சுக்கிட்டேன்.
    btw, making பத்தி கதை எழுதிக்கிட்டு இருக்கேன்.
    http://surveysan.blogspot.com/2011/11/blog-post.html

    btw, please popularize :)

    ReplyDelete
  18. مشكوور والله يعطيك العافيه




    goood thenkss

    ReplyDelete