Monday, December 08, 2008

"அச்சமுண்டு அச்சமுண்டு" அருண் - பேட்டி

முக்கியமான அப்டேட் - சினேகாவின் எக்ஸ்க்ளூசிவ் படம் (கடைசியில்) அப்டேட் செய்யப்பட்டுள்ளது..பக்தகோடிகள் க்யூவில் தள்ளுமுள்ளு செய்யாமல் தரிசனம் செய்யவேண்டி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - என்றும் இறைபணியில் தர்மகர்தா. படம் அன்பளிப்பு அருண் வைத்தியநாதன்





ஏ எல்லாரும் கேட்டுக்கோங்க பார்த்துக்கோங்க நானும் ரவுடி நானும் ரவுடி நானும் ரவுடி...என்னா கேட்டீங்க தமிழ் திரைப்பட உலகிற்கும் எனக்கும் ஏதாவது சமபந்தம் இருக்கான்னா.. யாரப் பார்த்து என்னா கேள்வி கேட்டீங்கோ....இப்போ ப்ரெஷ்ஷா வந்திருக்காரே அச்சமுண்டு அச்சமுண்டு அருண்....அவர டவுசர் போட்டுக்கொண்டு மூக்கு ஒழுகிக்கொண்டிருந்த காலதுலயே எனக்கு தெரியும்ன்னு சொல்ல ரொம்ப ஆசை தான். ஆனா இந்த போஸ்டை அவரும் படிப்பார் அதுனால அப்புறமா அவர் படிக்காத போது சொல்றேன்...:))

அருண் வைத்தியநாதன் - 2004/5 ல் தமிழில் ப்ளாகிக் கொண்டிருந்தவர்களுக்கு பரிச்சயமான பெயர். நம்மள மாதிரி ப்ளாகில் ஜொள்ளுவிட்டதை பற்றி எழுதாமல் நியூயார்க் பிலிம் அக்காடமி, குறும்படம்ன்னு லெவல் காட்டிக்கொண்டிருந்தார். இவரின் குறும்படங்கள் பார்த்து அப்பவே இது படிக்கற புள்ள...இவர் பின்னாளில் பெரிய டைரடக்கராக வருவார் என்று துண்டு போட்ட (நம்பிக்கை வைத்த) தொண்டரடிப் பொடியாழ்வாரில் அடியேனும் ஒருவன் (ஹி...ஹீ நல்ல படியில ஏறாத ரோலா பார்த்து மீட்டருக்கு மேல போட்டுக் குடுங்க அருண் :) ).

ப்ரெண்டு ஒருத்தருக்கு சுகாசினி மணிரத்னம் ரொம்ப தோஸ்த், அதுக்கே நான் "இந்த ஹாசினி இருக்காங்களே நம்பளுக்கு ரொம்ப க்ளோஸ்"ன்னு தான் ப்லிம் காட்டிக்கிட்டு திரியறது. இதுல அருண் வைத்தியநாதனை ஏற்கனவே ஐஸ் பொட்டில பாக்கிங் செஞ்சாச்சு விட்டுருவோமா...பேட்டி பேட்டின்னு கோட்டியா அலைஞ்சு...அவரு நேரம் அவரும் ஒத்துக்கிட்டாரு.



தற்போது அருண் அச்சமுண்டு அச்சமுண்டு தமிழ் திரில்லரை இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் ப்ரசன்னா, ஸ்னேகா நடிக்கிறார்கள். ஹாலிவுட் ஜான் ஷியா வில்லனாகவும் படத்தில் இன்னும் நிறைய ஹாலிவுட் நடிகர்களும் நடிக்கிறார்கள். "அச்சமுண்டு அச்சமுண்டு" இந்தியாவிலேயே முதன் முறையாக ரெட் கேமிராவினால் ஹை டெபினிஷனில் படமாக்கப்பட்டு போஸ்ட் பொரடக்க்ஷன் ஸ்டேஜில் இருக்கிறது.

இன்னும் வாயில் நுழையாத ஜார்கனெல்லாம் தட்டுப்படவே அருணையே கேள்விகளால் துளைத்தார் சினிமா நண்டு டுபுக்கார்.

1. வணக்கம் அருண். அச்சமுண்டு அச்சமுண்டு பற்றி ரெட் ஒன், ஹாலிவுடின் பிரபல பெயர்கள் என்று என்னவெல்லாமோ பெருமையாக கேள்விப் படுகிறோம். நேரா படம் சம்பந்தப்பட்ட டெக்னிகல் கேள்விகளுக்கு போய் விடுவோம். ஸ்னேகா படத்திற்க்காக அமெரிக்கா வந்திருக்கிறார் என்று படித்தோம். ஸ்னேகாவுக்கு பிடித்த டிபன் என்ன? ஸ்னேகா நம்மூர் இட்லி பூரிக்கிழங்கு சாப்பிட்டாரா இல்லை அந்தவூர் கெல்லாக்ஸ் கார்ன்ப்ளேக்ஸே அட்ஜீஸ் பண்ணிக்கொண்டாரா?

இந்தக் கேள்வியை நான் ஆண்வர்க்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். அது என்ன சினேகா பூரி சாப்பிட்டாரா, இட்லி சாப்பிட்டாரா என்றொரு கேள்வி? பிரசன்னாவையும் இந்தக் கேள்வியில் சும்மானாச்சுக்குமாவது சேர்த்திருக்க வேண்டும். ஊரிலிருந்து கிளம்பும் போது, 'We want only American food' அப்டீன்னு சப்புக்கொட்டிட்டுக் கெளம்புனவங்க...நாலாவது நாள், 'கொஞ்சம் ரவா உப்புமா கெடைக்குமா?' என்ற ரேஞ்சுக்கு இறங்கி, நமது உணவுக் கலாச்சாரத்தைப் பேணிக் காத்தார்கள்.

(நீங்க சொல்வது மிக்க சரி அருண்...பிரசன்னா என்னத்தையோ கொட்டிக்கும் போது சினகா இட்லி சாப்பிட்டாரான்னு கேட்டிருக்கனும்...இனிமே கவனமா கேக்கிறேன் )

2. சாப்ட்வேரிலிருந்து ப்ளாக் அடித்து சமபளம் வாங்கினது போதும் சினிமாவுக்கு போகனும்ன்னு என்று எப்படி தோன்றியது. இல்லை சாப்ட்வேரே நானும் கச்சேரிக்குப் போனேன் கதை தானா?

இது சாப்ட்வேர் காலத்தில் தோன்றியது இல்லை -அண்டர்வேர் அணியும் காலத்திலேயே தோன்றியது. ஆனால், அப்பா அம்மா இருவரும் ஆசிரியர்கள் என்பதால், எனது கனவுகளும் 'இனிய பாடல் சண்டைக்காட்சிகளோடு' அவ்வப்போது முடிவடைந்துவிடும். நான் உறுதியாய் இருப்பதைப் பார்த்தவுடன், 'சரி...உனக்குன்னு ஒரு உத்தியோகம் கெடைச்சதுக்கப்புறம், என்ன வேணும்னாலும் பண்ணு!' என்று ஒரு மாதிரி க்ரீன் சிக்னல் கிடைத்தது. சினிமாவுக்குத் தான் தடையேயொழிய, கலை சார்ந்த விஷயங்களுக்கும், சினிமா(க்கள்) பார்ப்பதற்கும் எனக்கு எந்தத் தடையும் இருந்ததில்லை என்பது ஒரு ஆறுதல் பரிசு. மனசு எப்போதும் சாப்ட்வேரில் ஒரு கால், சினிமாவில் ஒரு கால் என்று தான் வேலை பார்க்கும் தருணங்களிலும் இருந்தது. சாப்ட்வேரில் வேலை பார்த்தது, கச்சேரிக்குப் போன கதையென்றே சொன்னாலும்...தேங்காய்மூடிக் கச்சேரி கிடையாது! 9லிருந்து 5மணி வரை செய்யும் வேலையில் எனக்கான சலிப்பை அனுதினம் கேட்டு கேட்டு, எனது தங்கமணி (ஹி..ஹி) 'அப்புறம் எப்போ பட வேலையை ஆரம்பிக்கிறீங்க?' என்று கேட்காத குறைதான்!

3. தாலி, தாய்மாமா, காதல், ஆக்க்ஷன் எல்லாவற்றையும் விட்டுவிட்டு முதல் படத்திலேயே தமிழ் கூறும் நல்லுலகம் அதிகம் பார்த்திராத திரில்லர் களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். அதைப் பற்றி சொல்லுங்களேன்.

தாய்மாமா மட்டும் தான் நீங்கள் சொன்னதில் இல்லை. தாலி, காதல், ஆக் ஷன் எல்லாம் இருக்கிறது. தாலி எனது கதாநாயகி மாலினியின் கழுத்தில், காதல் செந்தில்குமார் - மாலினியிடத்தில், ஆக் ஷன் எங்கே எப்படி என்பது சஸ்பென்ஸ்! Genre films தமிழில் வரவேண்டும் என்ற ஆசையினாலும், த்ரில்லர்களுக்கு எப்போதுமே மவுசு என்ன கீபோர்டே உண்டு என்பதாலும்...இது போன்றதொரு முயற்சி. சுவாரஸ்யமாக ஒரு விஷயத்தை சொன்னால், 'அச்சு பிச்சு காமெடி', 'டண்டணக்கா டான்ஸ்' தேவைப்படாது என்ற எனது அபரிதமான நம்பிக்கையின் ஒரு வடிவம் தான் 'அச்சமுண்டு! அச்சமுண்டு!'. குறிப்பாக, இது 'இத்தாலி படத்திலேந்து சுட்டது, ஜெர்மன் படம் 'ப்ரிஞ்சால்'லே இதே சீன் இருக்கு' என்ற அபாயங்களும் இல்லாத படமாக இருக்கும்.

4.படத்தில் லைவ் சவுண்ட் உபயோகப் படுத்தியிருக்கிறீர்கள் என்று வேற நல்ல பேட்டிகளில் சொல்லி இருக்கிறீர்கள். ஹே ராமில் கமல் லைவ் சவுண்ட் உபயோகப்படுத்தி, கூட இருந்தவர் "மாப்ள படம் எப்போ போடுவாங்க"ன்னு கேட்டது தான் நியாபகம் வந்தது. ஏன் லைவ் சவுண்ட்...? த்ரில்லர் களம் என்பதால் ஏதாவது ஸ்பெஷல் காரண்ங்கள் உண்டா...?

பேட்டிகளில் நல்ல பேட்டி, டுபுக்கு பேட்டி என்று உண்டா என்ன? இந்தியத் திரைப்படங்களைத் தவிர, மற்ற முக்கால்வாசி நாடுகளில் 'லைவ் சவுண்ட்' முறையில் தான் படங்கள் எடுக்கப்படுகிறது. பாலிவுட்டில் பல பெரிய படங்கள் 'லைவ் சவுண்டு'க்கு மாறி ரொம்ப நாட்களாகி விட்டன. ஆனாலும், இன்னும் இந்தியாவில் பெரும்பான்மையான படங்கள் டப்பிங் முறையில் தான் எடுக்கப்படுகிறது. நீங்கள் சமையல் கட்டில் உங்கள் மனைவியோடு பேசுகிறீர்கள் என்பது தான் காட்சி என்றால், அங்கு கேஸ் அடுப்பு எரியும் சத்தம் கேட்க வேண்டும், ரசம் கொதிக்கும் சத்தம் கேட்க வேண்டும், வசனங்கள் நிஜ வாழ்வில் பேசுவது போலவே இருக்க வேண்டும் ...இத்தனை 'வேண்டும்'களும் வேண்டும் என்றால், லைவ் சவுண்ட் தான் ஒரே வழி. (பின்னணியில் கேட்கும் சத்தங்களில் சவுண்ட் எடிட்டிங்கிற்கும் பெரிய பங்குண்டு). இந்தப் படத்தில் லைவ் சவுண்ட் செய்த 'டென்னிஸ்', பல படங்களில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அதே போல 'மிக்ஸிங்'கும் 'Grudge','Exorcism of Emily Rose', 'Strangers' போன்ற படங்களை செய்த மார்ட்டி ஹம்ப்ரியோடு ஹாலிவுட்டிலேயே தான் நடக்கிறது. துல்லியமான துள்ளல் ஒலிக்கு நான் கியாரண்டி! (நான் சட்டசபை தேர்தல் கணக்கா வாக்குறுதிகளை அள்ளி வீசறேன்...மவனே அடங்குடா அப்டீன்னு மனசு சொல்ற சவுண்டு சப் வூஃபர்லே கேக்குது!)

5. இந்தப் படத்தில் "அப்பாடா பாதி கிணறு தாண்டிவிட்டோம்" என்று எந்த தருணத்தில் தோன்றியது?

பாதி கிணறு தாண்டிய உடனே.... (ஹி...ஹி)

(நான் சொல்லல...அருண் 2004லயே தமிழ் ப்ளாக் உலகில் பழம் தின்று மொக்கை போட்டவர்ன்னு :)))) )

6. CTRL C & CTRL V தவிர சாப்ட்வேர் உலகில் கற்றுக்கொண்டது ஏதாவது தற்போது தங்களைய டைரடக்கர் ரோலுக்கு உதவுகிறதா?

கணிப்பொறியில் தமிழ் அடிப்பதில் நல்ல பரிச்சயம் இருப்பதால், முழு திரைக்கதையையும் தமிழிலேயே அடிக்க முடிந்தது. அதனால் திருத்தங்களும் சுலபமாக செய்ய முடிந்தது. அதைத் தவிர, டைரடக்கர் ரோலுக்கு தேவை சாப்ட்வேர் அறிவு அல்ல - கதை சொல்லும் அறிவும், திரைப்படத் தொழில் நுட்ப அறிவும் தான்!

7. அமெரிக்காவிலிருந்து பார்க்கும் போது கோடம்பாக்கம் எப்படி தெரிகிறது?

இன்றைக்கு எத்தனையோ ஹாலிவுட் படங்களையும், வெளிநாட்டுப் படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றாலும்...எங்கள் ஊரில் நான் பார்த்த நடிகர் திலகம் படங்களையும், கமல்ஹாசன் படங்களையும் மறக்க முடியுமா? சினிமா மீதான காதல், இன்று கல்யாணத்தில் முடிந்ததற்கு கோடம்பாக்கம் தானே முன்னுரை எழுதியது! என்னைப் பொறுத்தவரை, மொழிகள் கடந்து, காலம் கடந்து நிற்கும் எந்தவொரு படைப்பும் சிறப்பான விஷயம். அப்படிப்பட்ட சினிமாவானது உலகின் மூலை முடுக்களிலிருந்தெல்லாம் வருகிறது - நமது ஊரிலிருந்தும் எப்போதாவது அத்திப் பூத்தால் போல் வருகிறது. இன்னும் புதுப்புது வித்தியாசமான முயற்சிகள் நிறைய வரவேண்டும். மக்களும், படைப்பாளிகளும் ஒரே அலைவரிசையில் மாற்றம் நோக்கி சிந்தித்தால் தான், கோடம்பாக்கம் கோல்டன்பாக்கமாக மாறும்!

8. ஒரு சக ப்ளாகரிலிருந்து டைரடக்கராக மாறியிருக்கிறீர்கள். படத்தில் இங்கே கதை லொட்டு அங்கே நடிப்பு லொசுக்கு, இரண்டாவது ரீலில் நாலாவது சீனை இப்படி எடுத்திருக்கலாம், க்ளைமாக்ஸில் லைட்டிங் நல்லா இருந்திருக்கலாம் என்று என்னை மாதிரி அரைவேக்காடுகள் ப்ளாகில் மூவி சுப்புடுகளாக விமர்சனம் பண்ணும் போது ஒரு டைரடக்கராக என்ன தோன்றும்?

கஷ்டப்பட்டு தங்கமணி சமைச்சுப் போட்டதை, 'இன்னும் கொஞ்சம் உப்பு ரெண்டு சிட்டிகை அதிகமா போட்டிருக்கலாம்!' என்று நீங்கள் சர்வ சாதாரணமாய் சொல்லும் போது 'சமைச்சுப் பார்த்தா தெரியும்!' என்று அங்கிருந்து டாணென்று பதில் வரும். ஆனால், அதே போல ஒரு பதில் சரவணபவனில் சாப்பிடும் போது வந்தால், பிரச்சினை தான்! காசு கொடுத்து பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அவர்களுக்கு அது சம்பந்தமான விமர்சனங்கள் இருக்கும். எல்லாவற்றையும் தாமரை இலை தண்ணீர் போல் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தான். ஆனால் ஒரு விஷயம், சினிமா எடுப்பது என்பது ஒரு பிரசவம், போர், வலி! ஒரு நல்ல விமர்சனம் என்பது 'சாண்ட்விச்' முறையில் இருக்க வேண்டும். படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை முதலில் சொல்லி, மெதுவாக பிடிக்காத விஷயங்களை வரிசைப்படுத்தி, மீண்டும் நல்ல விஷயத்தோடு முடிப்பதென்பது எந்த ஒரு கலைக்கும், கலைஞனுக்கும் இதமாய் இருக்கும்.

9. "நானும் ஒரு நாள் படமெடுத்தே தீருவேன்" என்று என்னை மாதிரி மந்திரித்த கோழிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன? எங்கே தொடங்குவது?

முதலில் 'திரைப்படம்' என்பது சுலபமான விஷயமில்லை. இதற்காக நீங்கள் கொடுக்க வேண்டிய விலை, செய்ய வேண்டிய தியாகங்கள் நிறைய. கேம்கார்டரில் நான்கு நண்பர்களை நடிக்க வைத்து, அதை சுமாராக எடிட் செய்து, பின்னணி இசையாக 'ஹௌ டு நேம் இட்'ன் வயலினிசையை ஜம்மென்று போட்டு...'ஆத்தா....நான் படமெடுத்துட்டேன்!' என்று சொல்வதல்ல சினிமா. மேற்கூறியவை ஒரு நல்ல தொடக்கம் என்று வேண்டுமானால் கூறலாம். திரைப்படமெடுக்க ஆசைப்படும் முன் நல்லதாய் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் படிப்பது சாலச்சிறந்தது. திரைக்கதை எழுதுவது சம்பந்தமாக பல புத்தகங்கள் (ஆங்கிலத்தில்) இருக்கின்றன, படமெடுப்பது குறித்தும் பல புத்தகங்கள் கிடைக்கப்பெறும். (தமிழிலும் இது போல புத்தகங்கள் பல வருவது அத்தியாவசியமான ஒன்று - பதிப்பாளர்கள் செய்வார்களென்று நம்புகிறேன்). குறிப்பாக, நண்பர்கள் வட்டத்தையும் தாண்டி, ஒரு புரொஃபஷனல் க்ரூவை வைத்து மூன்று குறும்படங்களாவது செய்ய வேண்டும். அது எத்தகைய வரவேற்பைப் பெறுகிறது என்பதும், எத்தனை திரைப்பட விழாக்களில் கலந்து கொள்கிறதென்பதும் உங்கள் திறமைக்கு அளவுகோலாய் இருக்கும். அசிஸ்டெண்டாக ஒரு ஐந்து ஆண்டுகள் இருந்து விட்டு, சந்து கேப்பில் ஹீரோவிடம் 'கதைப்படி நீங்க பொறுக்கி சார்!' என்று சொல்லி இம்ப்ரெஸ் செய்து தான் 'டைரக்டர்' ஆக வேண்டும் என்று அவசியமில்லை. நான் மேலே சொன்ன முறையான பயிற்சியும், குறும்படங்களும் கூட நல்ல இயக்குனராவதற்கு வாய்ப்புகளை உருவாக்கி தரும். இந்த முறை நான் சென்னை சென்ற போதே பல கல்லூரிகளில் திரைப்படம் குறித்தான பாடங்கள் வந்து விட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பாலுமகேந்திராவில் ஆரம்பித்து ராஜீவ்மேனன் வரை ஒளிப்பதிவு மற்றும் திரைப்படம் குறித்தான கல்லூரிகள் நடத்துகின்றனர், பிரசாத் ஸ்டூடியோ L.V.Prasad Academy என்று ஒன்று நடத்துகிறது - பல அட்டகாசமான மாணவர்களின் அசத்தலான குறும்படங்களை நானும் பார்த்தேன். படிப்பதற்கு வசதியில்லையென்று தோன்றினால், ஒரு இயக்குனரிடத்தில் வேலை செய்து விஷயங்களைக் கற்றுக்கொள்வது நல்ல முயற்சி தான். குறிப்பாக திரைப்படங்களில் இறங்க ஆசைப்படுபவர்கள், கமலின் இந்தப் பேட்டியைப் பார்க்க வேண்டும் - http://www.youtube.com/watch?v=ZjlD7IEQ3cE
பி.கு :- நான் கமலை இதில் உதாரணம் காட்டியிருப்பதற்கு, 'உன்னால் முடியும் தம்பி' கமலின் தம்பி போல தோற்றமளிக்கும் டுபுக்குக்காகத் தான் என்பதை சொல்லாவிட்டால் மண்டை வெடித்து சுக்கு, இஞ்சி நூறாகிவிடுமென்று வேதாளம் பயமுறுத்தியதால் தான் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகம் அறியக் கடவது. (வேதாளம் a.k.a டுபுக்கு)


(ஹீ ஹீ அருண் ...."உன்னால் முடியும் தம்பி" பட்டம் மக்கள் எனக்கு குடுத்தது....:)))

10. டுபுக்கு அவர்கள் - வேறு ஏதாவது சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் என்று எனக்கு ஒரு 'சாய்ஸ்' கொடுத்திருக்கிறார். நான் சொல்ல நினைக்கும் 'சில' விஷயங்களை சொல்லி விடுகிறேன்.

திரைப்படங்களைத் திருட்டு வீடியோவில் பார்க்காதீர்கள். திரையரங்கத்திற்குள் நுழையும் போது, செல்போனை ஆஃப் செய்து விட்டு உட்காருங்கள். ஒரு இரண்டரை மணி நேரம் உங்களால் போன் இல்லாமல் இருக்க முடியாதென்றால், திரையரங்கத்திற்கு செல்வதைத் தவிருங்கள். 'மச்சான்...கிளைமாக்ஸ் சீன்லே நம்மாளு பின்றான் இல்லே' என்று ரன்னிங் கமெண்டரி கொடுக்கக் கூடிய இடம் திரையரங்கம் கிடையாது என்பது ஒரு கொசுறு செய்தி. நல்ல திரைப்படங்களைத் தியேட்டரில் சென்று பார்த்து ஆதரிப்பதன் மூலம், நீங்களும் மாற்றத்தில் பங்குபெறுகிறீர்களென்பதை மகிழ்ச்சியோடு உணருங்கள். கடைசியாக, 'அச்சமுண்டு! அச்சமுண்டு!' படத்தைக் குறித்து நண்பர்களிடத்தில் என் சார்பாக ஒரு 'ஹாய்' சொல்லி நூறு பேருக்காவது இமெயிலின் மூலம் இன்னும் இருபத்தி நான்கு மணிநேரத்துக்குள் பகிர்ந்து கொள்ளுங்கள். இல்லையென்றால், உங்களுக்குத் தலைமுடி அரக்கு நிறத்தில் மாறி, காது சிகப்பு நிறமாகி விடும் அபாயமிருக்கிறது. ஒரு வேளை அனுப்பி விட்டீர்களென்றால், உங்களுக்கு 'நைஜீரியாவிலிருந்து கோடிக்கணக்கில் பணத்தை விட்டுச் சென்ற ராஜாவின் மகனிடமிருந்து' ஸ்பாம் மெயில் வருவது நின்று விடும்!

---------

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் கடைசி நேர வேலைகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி என்னையும் ஒரு ஆளா மதித்து பேட்டி கொடுத்தமைக்கு கோடானு கோடி நன்றி அருண். அச்சமுண்டு அச்சமுண்டு படம் மிகப் பெரிய வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.

அச்சமுண்டு அச்சமுண்டு பற்றி அருண். சுடச் சுட..படங்களுடன் தனது ப்ளாகில் அடிக்கடி அப்டேட் செய்து வருகிறார் இது போக அவரின் தளத்திலும் இவரின் முந்தைய குறும்படங்களை தரவிறக்கம்( அதான்பா தமிழ்ல சொன்னா டவுண்லோட்) செய்து கொள்ளலாம்.

இது போக அருணிடம் ஸ்னேகா கொஞ்சம் இளைத்த மாதிரி இருக்கே நம்ம வாசகர்களும் அதை சரி பார்க்க....கண்ணுல ஒத்திக்கிற மாதிரி exclusive சினேகா படம் இருந்தா அனுபுங்கன்னு சொன்னேன் அருண் அதைக் கண்டுக்காமல் சாய்ஸில் விட்டதோடு அல்லாமல் டுவாக்கியெல்லாம் இருக்கிற படத்தை காட்டி மிரட்டுகிறார். (Btwn- அந்த படத்தில் ஜானோடு இருப்பது தான் அருண்) . இதுகெல்லாம் அடங்குகிற பார்ட்டியா நாம...அருணிடமிருந்த நன்றி உணர்ச்சியோட நேர போய் சினேகா இருக்கிற மாதிரி ஒரு படத்தை அவரோட வெப்சைட்லேர்ந்து சுட்டு கீழே போட்டுள்ளேன்.. :))) இதுக்கும் ரொம்ப நன்றி அருண். படத்தைப் பார்த்துவிட்டு நீங்களும் போய் ஒரு வார்த்தை பாராட்டுங்கள் நண்பர் சந்தோஷப்படுவார்.








34 comments:

  1. நல்ல பேட்டி.

    கோடிகளில் புரண்டு கொண்டிருக்கும் தமிழ் சினிமா உலகத்தின் திறவுகோல் 2 படம் ஹிட் கொடுத்த ஒரு இயக்குநரின் வீட்டு வாசலில் இருப்பதாக நம்பிக் கொண்டிருக்கும் இளைஞர் பட்டாளம் இன்றும் வடபழனி டீக்கடைகளில் சிங்கிள் டீயோடு ஜீவனம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் ப்ரபொஷனலிசம் வருகிற மாதிரி தெரிகிறது. அருண் போன்றவர்களின் கனவு நனவாக வாழ்த்துகள்.

    //இந்தப் பேட்டியைப் பார்க்க வேண்டும் - http://www.youtube.com/watch?v=ZjlD7IEQ3cE //

    அந்தப் பேட்டியை ஏற்கெனவே பார்த்து கமல் வைத்திருக்கும் ‘விக்’ன் செயற்கைத்தனத்தையும் அவர் தனது தொப்பையை மறைக்க தன்னிச்சையாக கோட்டை எத்தனை தடவை மூட முயல்கிறார் என்பதையும் யோசித்திருக்கிறேன். சுட்டிகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. naanum pEtti kettu irunthein. intha arasiyalai kaNdippaaga kaNdikirein

    ILA

    ReplyDelete
  3. நல்ல விஷயம்தான் தல‌
    நன்பருக்கு வாழ்த்துகள்

    //(ஹீ ஹீ அருண் ...."உன்னால் முடியும் தம்பி" பட்டம் மக்கள் எனக்கு குடுத்தது....:)))//

    தல சொல்லவே இல்லை


    அன்புடன்
    கார்த்திக்

    ReplyDelete
  4. //சாயா வித் டுபுக்கு//
    இந்த நக்கல்தான் தல உங்ககிட்ட புடிச்சது

    அன்புடன்
    கார்த்திக்

    ReplyDelete
  5. சூப்பர் பேட்டி.

    'டைரடக்கர்' வெற்றி அடையணுமுன்னு தமிழ் கூறும் நல்லுலகம் சார்பில் வாழ்த்துகின்றேன். ( தனியா இருந்தா பயமா இருக்குல்லே)

    அச்சமுண்டு அச்சமுண்டு.

    (அச்சன் முண்டு இல்லைதானே டுபுக்கு?)

    சாயா..கட்டன் இல்லை:-)

    ReplyDelete
  6. சுவையான பேட்டி டுபுக்கு..

    சக பதிவரே இயக்குநராக அவதாரமெடுத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி..

    தமிழில் இப்போதைக்கு மாற்றுக் கதை, வித்தியாச திரைக்கதைகளுக்குத்தான் வரவேற்பு. பார்த்ததையே பார்த்து, பார்த்து சலித்துப் போன ரசிகர்களுக்கு யார் தீனி போடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்..

    நம்ம அருணும் வெற்றியாளர் பட்டியலில் சேர வாழ்த்துகிறேன்..

    அது ஏன் இப்படி ஆடிக்கு ஒரு பதிவு.. அமாவாசைக்கு ஒரு பதிவு..?

    ReplyDelete
  7. சரவணன்,

    //அது ஏன் இப்படி ஆடிக்கு ஒரு பதிவு.. அமாவாசைக்கு ஒரு பதிவு..?//

    இது ஏகாதசிக்கானப் பதிவுப்பா.

    ReplyDelete
  8. 9. "நானும் ஒரு நாள் படமெடுத்தே தீருவேன்" என்று என்னை மாதிரி மந்திரித்த கோழிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன? எங்கே தொடங்குவது?//

    டுபுக்கு என் இனிய நண்பர், சக பதிவர். அவருக்கு பல முறை கமெண்ட் போட்டு இருக்கிறேன். அவர் பிறந்த நாளுக்கு ஏழை பிள்ளைகளுக்கு இனிப்பு வழங்கியிருக்கிறேன். பொங்கல் வருஷ பிறப்புக்கு அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறேன் என்பதை அடக்கத்துடன் இவ்விடம் நினைவு கூறுகிறேன்.

    வாழ்த்துக்கள் அருண்

    ReplyDelete
  9. சூப்பர் பேட்டி.

    அருண் வைத்தியநாதனுக்கு வாழ்த்துக்கள்.தல,(for a change) படத்தைக் கண்டிப்பா தியேட்டர்ல போய் பார்க்கிறேன்.:)

    ///டுபுக்கு என் இனிய நண்பர், சக பதிவர். அவருக்கு பல முறை கமெண்ட் போட்டு இருக்கிறேன். அவர் பிறந்த நாளுக்கு ஏழை பிள்ளைகளுக்கு இனிப்பு வழங்கியிருக்கிறேன். பொங்கல் வருஷ பிறப்புக்கு அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறேன் என்பதை அடக்கத்துடன் இவ்விடம் நினைவு கூறுகிறேன்///

    த்தோடா, என்னோட கமென்டை போட்டுட்டு என் பேரைப் போடாம விட்டுட்டீங்களே உஷா.

    இவ்வண்
    சங்கர்,
    தலைவர், பொருளாளர்,செயலாளர்

    பேட்டி நாயகன், "உன்னால் முடியும் தம்பி " அன்ணன் டுபுக்கு தலைமை ரசிகர் மன்றம், சென்னை.

    ReplyDelete
  10. nalla post. all the very best to your friend.(வேதாளம் a.k.a டுபுக்கு)ithellam podanuma , ivlo naal padikirom engaluke theriyatha?
    அதான்பா தமிழ்ல சொன்னா டவுண்லோட்) செய்து கொள்ளலாம்.
    -nice.அது ஏன் இப்படி ஆடிக்கு ஒரு பதிவு.. அமாவாசைக்கு ஒரு பதிவு..?namma style athne-isthripotti

    ReplyDelete
  11. dear friend,
    how are you.
    i read all your post.very nice.
    i think you are from ambai.
    i am also from ambai now in UAE.
    nice to meet you.
    bye.
    sankararaman138@gmail.com

    ReplyDelete
  12. //பிரசன்னா என்னத்தையோ கொட்டிக்கும் போது சினகா இட்லி சாப்பிட்டாரான்னு கேட்டிருக்கனும்...இனிமே கவனமா கேக்கிறேன் )

    தல,
    நீங்க கேக்கறதை பார்த்தா, நீங்களே சமைச்சு பார்சல் அனுப்பி வைப்பீங்க போல இருக்கே......

    அப்புறம், "சார் போஸ்ட்" டயலாக் க்கு அப்ளிகேஷன் போடாம விட்டுட்டீங்க......



    //டுபுக்கு என் இனிய நண்பர், சக பதிவர். அவருக்கு பல முறை கமெண்ட் போட்டு இருக்கிறேன். ///

    அப்படியே லிஸ்ட் ல என் பெயரையும் சேர்த்துக்குங்க.....


    Kathir (Dubukku Disciple - 2),
    தலைவர்,
    டுபுக்கு ரசிகர் மன்றம்,
    அபு தாபி கிளை.

    ReplyDelete
  13. கண்டிப்பா படம் பிச்சிகிட்டு போகும். ஸிட்ல்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு. வாழ்த்துக்கள் அருண்.


    @மிஸஸ் டுபுக்கு,

    நாம எல்லாம் ஒரே ஊரு. உங்களுக்கு கல்யாணம் ஆவறதுக்கு முன்னாடியே நீங்க எனக்கு புக்ஸ், நோட்ஸ், ஜியாமெட்ரி பாக்ஸ் எல்லாம் தந்து இருக்கீங்க, அதை பத்ரமா நானும் திருப்பி தந்ருக்கேன்.


    இப்ப என்ன தான் நான் உங்களுக்கு மச்சினன் முறைன்னு வந்தாலும் நான் என்னிக்குமே உங்கள பாசத்தோடு அக்கா!னு தான் கூப்பிட்டு வரேன்! என்பது உங்களுக்கே தெரியும்.

    இப்படிக்கு
    என்னிக்குமே தொண்டன்
    (தெண்டன் இல்ல)
    அகில உலக மிஸஸ் டுபுக்கு ரசிகர் மன்றம்.

    - பெங்களூர் கிளை (உப கிளைகள் கிடையாது)
    :))

    ReplyDelete
  14. Looking forward to a good movie. Vaazhthukkal Arun.

    dubukks, paetti kalakkala thaan irukku. Snega paththi keteenga, Prasanna paththi kooda, pona porathunnu keteenga, aana shea-vai paththi kekkaliye (a la Nadigar thilagam).

    dubukks, ongalukku lift(elevator) scene aethavathu iruntha kodukka sollunga. Naan vena reco tharen, nalla yeri yerunguveengantu.

    makkalnu neenga yaara solreenga? athaiyum sollidunga appu.

    ReplyDelete
  15. சுவையான,நகைச்சுவையான பேட்டி. அருணின் குறும்படங்களை பார்த்தது பற்றி முன்னர் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். http://pitchaipathiram.blogspot.com/2005/03/blog-post.html

    அருணின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள். (அப்படியாவது preview-க்கு கூப்பிடறாரான்னு பாக்கலாம். :-)

    ReplyDelete
  16. சூப்பர். படம் கண்டிப்பாக வெற்றிபெறும்:):):) ஆனா அருண் சார் சொல்லிருக்க மாதிரி தியேட்டர்ல போய் பாக்க முடியாது. ஆனா கண்டிப்பா ஒரிஜினல் டிவிடி வாங்கிடறேன். ஆனா, டுபுக்கண்ணனுக்கு வேண்டப்பட்டவர். சக பதிவர்(எப்டி, நாங்கெல்லாம் இப்டி ஆல்டைம் டார்ச்சர் கொடுக்கத்தானே பிளாக் தொடங்கினோம்:):):)). அவரு படத்த மொதோ வாரமே பாக்கனும்னு பயங்கர ஆர்வக்கோளாறாகிடுமே அப்போ என்ன செய்றது:):):)

    ReplyDelete
  17. இதுக்கு பின்னூட்டமெல்லாம் போட்டுக் கட்டுபடியாகாதுன்னு பதிவே போட்டுட்டேன்... :)))

    http://thuklak.blogspot.com/2008/12/blog-post_2650.html

    ReplyDelete
  18. அருண் வைத்தியநாதனுக்கு வாழ்த்துக்கள்.

    உங்கள் வழக்கமான கலகலப்பான பேட்டி மூலம் படத்துக்கு ரொம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கீங்க!!!
    படத்துக்கு டிரெயிலரே தேவையில்லை.

    -அரசு

    ReplyDelete
  19. சூப்பர் பேட்டி தலீவா.. :)

    //கஷ்டப்பட்டு தங்கமணி சமைச்சுப் போட்டதை, 'இன்னும் கொஞ்சம் உப்பு ரெண்டு சிட்டிகை அதிகமா போட்டிருக்கலாம்!' என்று நீங்கள் சர்வ சாதாரணமாய் சொல்லும் போது 'சமைச்சுப் பார்த்தா தெரியும்!' என்று அங்கிருந்து டாணென்று பதில் வரும். ஆனால், அதே போல ஒரு பதில் சரவணபவனில் சாப்பிடும் போது வந்தால், பிரச்சினை தான்! காசு கொடுத்து பார்க்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ஒவ்வொரு விதமான எதிர்பார்ப்புகள் இருக்கும். அவர்களுக்கு அது சம்பந்தமான விமர்சனங்கள் இருக்கும். எல்லாவற்றையும் தாமரை இலை தண்ணீர் போல் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தான். ஆனால் ஒரு விஷயம், சினிமா எடுப்பது என்பது ஒரு பிரசவம், போர், வலி! ஒரு நல்ல விமர்சனம் என்பது 'சாண்ட்விச்' முறையில் இருக்க வேண்டும். படத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை முதலில் சொல்லி, மெதுவாக பிடிக்காத விஷயங்களை வரிசைப்படுத்தி, மீண்டும் நல்ல விஷயத்தோடு முடிப்பதென்பது எந்த ஒரு கலைக்கும், கலைஞனுக்கும் இதமாய் இருக்கும்.//

    கொய்யால.. இதை நம்ம ஊர் பேரிக்கா மண்டை அரைவேக்காட்டு அவசரக்குடுக்கை டரட்டருங்களுக்கு ப்ரிண்டு போட்டு அனுப்பனும். இந்த தீவெட்டி தலையனுங்க எடுக்கிற தண்ட கருமாந்திரப் படங்களை எல்லாம் நெகட்டிவா விமர்சனம் பண்ணிடா இன்னா குதி குதிக்கிறானுங்க..

    அருண் சொன்ன வீட்டு சாப்பாடு ஹோட்டல் சாப்பாடு ஒப்பீடு அருமையோ அருமை...

    ReplyDelete
  20. best wishes to arun vaidhyanathan.dubukku,inda madhiri oru naal ,neenga padam edukkum pothu naanga petti edukka varuvom,
    timeillannu bandha panna koodathu.sariyya.erkanave 60 adi ungallkku cutout mountroadill (cutout,nagathhukku thaan)vaikkum errpadu ready enru panivanbudan(ada vambu illa) therivikkirom.
    indhappa.dubukku selavil enakku rendu bonda parcel.....
    nivi.

    ReplyDelete
  21. நல்ல கேள்விகள்

    நல்ல பதில்கள்

    நல்ல லேபிள்

    நல்ல படங்கள் (அதிலும் கடைசி படம் ம்ம்ம்ம்ம்)
    yummy.. ithuku tamil artham enna....

    அருணுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. /
    ஸ்னேகாவுக்கு பிடித்த டிபன் என்ன? ஸ்னேகா நம்மூர் இட்லி பூரிக்கிழங்கு சாப்பிட்டாரா இல்லை அந்தவூர் கெல்லாக்ஸ் கார்ன்ப்ளேக்ஸே அட்ஜீஸ் பண்ணிக்கொண்டாரா?
    /

    கடைசிவரைக்கும் இதுக்கு அருண் பதில் சொல்லவே இல்லை. கண்டனங்கள் :))))))))))))

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் அருண்.

    சூப்பர் பதிவு டுபுக்கு அண்ணா.

    ReplyDelete
  24. இங்கே பெரும்பாலுன் ரெண்டு டாலர் டிவிடிதான் விக்கிறாங்க. நான் என்ன பண்றது.

    சரி தியேட்டர்ல பாக்கிறேன்.குருவியே தியேட்டர்ல பாத்துட்டேன்.

    ReplyDelete
  25. அட எங்க ஏரியாக்காரருங்கோ!

    :)))

    (சட்டை காலரை தூக்கிவிட்டுக்கிட்டேன்ப்பா!)

    ReplyDelete
  26. படத்தைப் பத்தி ஒரு தகவலுமே இல்லையேன்னு பத்து நாளைக்கு முன்னாலதான் ஒரு ட்விட்டு விட்டேன்.. மேலதிக தகவல்களோடு பேட்டியாவே கொடுத்துட்டீங்க!

    சகபதிவர்னு தைரியமாவே சொல்லிக்கலாம் (எனக்கே பின்னூட்டமெல்லாம் போட்டிருக்காரு :-) டுபுக்குதான் போட்டதில்லை ந்னு நினைக்கிறேன். யாரு பெரிய சகபதிவர்?

    ReplyDelete
  27. பேட்டி தூள். நன்றி டுபுக்கு

    ReplyDelete
  28. இன்ட்ரிவு டாப்புங்கோ.. ஆனா மாலினி'யோட மாமன் பேரு என்னான்னு சொல்லாம சஸ்பென்ஸ் வச்சிபுட்டீங்களே..

    ReplyDelete
  29. ஸ்ரீதர் - சரியா சொன்னீங்க...தரம் கோடிகளை மட்டுமே சார்ந்து இல்லை. கமலோடு பேட்டியில் நானும் அவரின் தொப்பையை நோட் பண்ணினேன் :))

    இளா - யோவ் அரசியல் கிரசியல்ன்னு கிளப்பாதீங்கய்யா...ஹீ ஹீ

    கார்த்திக் - அட பட்டம் குடுத்தது தெரியாதா...சும்மா டமாசு பண்ணாதீங்க :)))) அந்த சாயாவை விட சுண்டக்கஞ்சி வித்ன்னுலாம் ப்ளாக்ல மக்கள் கலாசியிருக்காங்க முன்னாடி

    துளசி - டீச்சர் எந்தா மலையாளத்துல சம்சாரிக்கின்னு...ஏது விசேஷம்?

    உண்மைத் தமிழன் - வாங்க நண்பரே. பதிவிகளுக்கிடையில் நிறைய இடைவெளி விழுவதை தவிர்க்க முடியமல் போய்விடுகிறது. கொஞ்சம் டைம் குடுங்க மீண்டு வரேன் :)

    துளசி - பாயிண்டா பொளந்து கட்டுறீங்க :))

    உஷா - எழுத்தாளர் ஏகாம்பரி என் இனிய நண்பி. அவருக்கு பல முறை கமெண்ட் போட்டு இருக்கிறேன். அவர் பிறந்த நாளுக்கு ஏழை பிள்ளைகளுக்கு இனிப்பு வழங்கியிருக்கிறேன். பொங்கல் வருஷ பிறப்புக்கு அவருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறேன் என்பதை நானும் அடக்கத்துடன் இவ்விடம் நினைவு கூறுகிறேன். :))

    சங்கர் - உன்க்க அன்புக்கு மிக்க நன்றி. இருந்தாலும் அந்த பொருளாளர் பதவிய நானே வெச்ச்சுகலாமா :)))) - "இப்படிக்கு உன்னால் முடியும் தம்பி" டுபுக்கு

    இஸ்திரிபொட்டி - வாங்க. நம்ம ஸ்டையிலாக்கிட்டீங்க அப்பாடா கொஞ்சம் நிம்மதி

    சங்கர் ராமன் - மன்னிக்கவும் மெயில் தட்ட முடியாமல் போய்விட்டது. இதோ இன்னிக்கே தட்டறேன். நீங்களும் அம்பையா ரொம்ப சந்தோஷம். அத்தோட ரொம்ப நல்லதா போச்சு. இங்க கல்லிடைகாரங்க அலம்பல் தாங்க முடியலை :)) கொஞ்சம் கை குடுங்க

    கதிர் - வாங்க..அருண் இனிமையானவர் நல்லவர் வல்லவர்...அவரே சார் போஸ்ட் ரோல் பார்த்து போட்டுக் குடுப்பார் அவ்வளவு நல்லவர் :)) ஹி ஹீ படமெடுக்க ப்ரொடியூசர தேடிக்கிட்டு இருந்தேன் ஏகப்பட்ட பேர் தேறுவீங்க போல இருக்கே :)))) உங்க அன்புக்கும் மிக்க நன்றி.

    அம்பி - வாடா நல்லவனே...அது டிசெக்க்ஷன் பாக்ஸாமே...ஜியாமென்ட்ரீ பாக்ஸ் இல்லையாமே...இருந்தாலும் உன் ஸ்ட்ராட்டிஜி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...நீ பேசாம நம்ம கட்சியில பொதுப்பணி துறைய எடுத்துக்கலாமே...

    முனிம்மா - ஸ்னேகா பத்தின கவலைல கொஞ்சம் மிஸ்ஸாகிடிச்சு. மக்கள் பத்தி கேள்வி கேட்டீங்க குட் கொஸ்டன். சிவாஜி கணேசன் நடித்த திருவிளையாடல் பார்த்திருக்கீங்களா...அதுல முதல் ரீல்லயே பிள்ளையார் கேட்பார்...உலகம் என்றால் என்னானு அத மாதிரி மக்கள்ன்னா யாருன்னு கேட்டிருக்கீங்கோ...இதுக்கு பதில் அந்தப் படத்துலயே நாரதர் சொல்லீட்டார்...மக்கள் தான் நாம. நாம தான் மக்கள் பிரிஞ்சுதா... :))))

    சுரேஷ் - உங்க பதிவைப் பார்த்தேன். நல்ல விமர்சனங்கள். ப்ரிவ்யூ டிக்கெட் தேத்திட்டீங்க போங்க...எனக்கு இதெல்லம் தோனாம போச்சே :))

    ராப் - முத வாரமே போய் தியேட்டர்ல பாருங்கோன்னு அருண் சொல்றார் :))))

    மகேஷ் - ரொம்ப ஓவரா புகழறீங்க கூச்சமா இருக்கு எனக்கு :))

    அரசு - நன்றி தல. நானும் உங்கள மாதிரி படத்தை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    பொடியன் - ரொம்ப சரி படித்ததும் எனக்கும் அது ரொம்ப பிடித்திருந்தது.

    நிவி - வாங்க மேடம். நீங்கள்லாம் இப்படி சொல்றதுக்கே நான் ரொம்ப குடுத்துவைச்சிருக்கனும். (உண்மையாத் தான் சொல்றேன்). மூனா போண்டா சொல்லுங்க :))

    நாகை சிவா - வாங்க...அதுக்கு தமிழ்ல ஜொள்ளுன்னு அர்த்தம் :)))))))

    மங்களூர் சிவா - அதே தான். அவரு தமிழ் ப்ளாகர் கணக்கா விவாததை திசை திருப்பி எஸ்ஸாகிட்டார்.

    குடுகுடுப்பை - வாங்க குருவி -:))))))))))))))) எப்படீங்க இதெல்லாம் :))

    ஆயில்யன் - ஓ அப்படியா...சூப்பர்.

    பினாத்தலார் - வாங்க சாரே நலமா. அட உங்க உள்குத்து செம ஸ்ட்ராங்கா இருக்கு :)))) நானும் உங்க ப்ளாகுல நிறைய கமெண்டியிருக்கேன்...நீங்க பார்த்திருக்கம் மாட்டீங்க :)))

    பாஸ்டன் பாலா - நன்றி ஹை

    செந்தில் - உங்கள் மெயில் கிடைத்தது. மிக்க நன்றி. போட்டிக்கு கண்டிப்பா முயற்சி பண்ணுகிறேன். நன்றி.

    பஸ்பாஸ் - வாங்க சார். எப்படி இருகீங்க.. ஏதோ யாரோ லண்டன் பக்கம் வரப் போறேன்னு சொன்னாங்க. தனி மடல் அனுப்பறேன். :)))

    ReplyDelete
  30. கலக்கல். படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

    மச்சி அருண், கலக்கர போ. நீயும் நானும் ஒண்ணா 'வேலை செஞ்ச' நாட்கள் நினைவுக்கு வருது.

    நான் இன்னும் ஆணிய புடுங்கிக்கிட்டே சமத்தா இருக்கேன் ;)

    ReplyDelete
  31. Vikatanil "Kelviyum naane, bathilum naan" endru oru paguthu varum. Muthalil intha petti antha vagaiyara and ninaithen...piragu than purinthathu, Dubukku has put a serious effort....really a good post.

    Kathirvel
    Chennai

    ReplyDelete
  32. Vikatanil "Kelviyum naane, bathilum naan" endru oru paguthu varum. Muthalil intha petti antha vagaiyara and ninaithen...piragu than purinthathu, Dubukku has put a serious effort....really a good post.

    Kathirvel
    Chennai

    ReplyDelete
  33. நல்லாயிருக்கு

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. சினிமா பைத்தியமான எனக்கும் இந்த பதிவு உபயோகமான தகவல்

    ReplyDelete