Thursday, May 07, 2015

யூகே - எலெக்க்ஷன்

இன்று யூ.கேயில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காமல் சென்ற முறை மாதிரி கூட்டணி ஆட்சி அமைந்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. அதை விடுங்கள் இங்கே நடக்கும் தேர்த்தல் முறைகளில் சில சுவாரசியங்கள் இருக்கின்றன. இங்கே ரெசிடண்டாக இருக்கும் விசா உடைய காமன்வெல்த் நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் இங்கே ஓட்டு போடும் உரிமை கொடுத்திருக்கிறார்கள். அதனால் இந்தியாவில் இருந்து இங்கே ஓராண்டுக்கு மேற்பட்ட வொர்க்பெர்மிட்டில் வந்தாலே இங்கே ஓட்டுப் போடலாம். இதற்கு முக்கியமாக செய்யவேண்டியது வாக்காளர் பட்டியலில் நம் பெயரை இணைத்துக் கொள்வது. அது ஓட்டுப் போடுவதற்கு மட்டுமல்ல, க்ரெடிட் கார்டிலிருந்து எந்த ஒரு க்ரெடிட் அக்ரிமெண்ட்டிற்கும் நம்முடைய க்ரெடி ஹிஸ்டரியை செக் செய்யும் பொழுதும் மிகவும் முக்கியம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்பது ஒரு அடிப்படை செக் இங்கே. இல்லாவிட்டால் நம் க்ரெடிட் ஸ்கோர் வெகுவாக குறையும. நிறைய இடங்களில் நம் அப்ளிகேஷன் ரிஜெக்ட் ஆக சான்ஸ் இருக்கின்றது. வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள கவுண்சிலுக்கு ஒரு ஃபோன் போட்டால், வீட்டிற்கு ஒரு ஃபாரம் போஸ்டில் அனுப்புவார்கள். பெரிய ஃபாரமெல்லாம் இல்லை. நேஷனாலிட்டி, பெயர், பிறந்த தேதி, என்றைக்கிலிருந்து இந்த அட்ரெஸில் இருக்கிறோம் இவ்வளவு தான். தகவல்களைப் பூர்த்தி செய்து திரும்ப அனுப்பினால் போதும் (அவர்கள் நம் தகவல்களை சரி பார்த்து செக் செய்து) நம் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும். அவ்ளோ தான் மேட்டர்.
ஓவ்வொருத்தருக்கும் நம்மூர் மாதிரி வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஓட்டுப் போடும் பூத் அலோகெட் ஆகியிருக்கும். ஆனால் அங்கே போய் ஓட்டுப் போடுவதற்கு, கையை வீசிக் கொண்டு போய் நம்முடைய பெயரும் அட்ரெஸும் சொன்னால் போதும் அடையாள அட்டை கூட கொண்டு போகவேண்டாம். மூனாவது தெரு முனுசாமியா ஆங் இதோ இருக்கேன்னு வோட்டு சீட்டைக் கொடுத்து விடுவார்கள். அதாவது இங்கே டெக்னிக்கலாய் கள்ள ஓட்டு போடுவது ரொம்ப ரொம்ப .ஸி. காலை 7மணியிலிருந்து இரவு 10 மணி வரை தேர்தல் நடக்கும். போஸ்டல் ஓட்டிற்கு பதிவு செய்து போஸ்ட் செய்ய முடியாமல் போய்விட்டால் அதையும் தேர்தல் நாளன்று நம்முடைய பூத்தில் கொண்டு சேர்க்கலாம். ஓட்டு போடுவது இங்கே இன்னமும் பேப்பரில் தான். அதைவிட காமெடி க்ராஸ் போடுவதற்கு வெறும் பென்சில் தான் தருவார்கள். இந்தியா மாதிரி இன்னும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்லாம் இன்னும் அமுலாக்கப் படவில்லை. ஒரு வேளை தப்பா க்ராஸ் போட்டுவிட்டீர்கள் என்றால் சாரி டீச்சர் நான் தப்பா போட்டுவிட்டேன் என்று சொன்னால், ஓகே ஒகே இனிமே இப்படி பண்ணக்கூடாது என்ன என்று கூட சொல்லாமல் இன்னொரு சீட்டு தருவார்கள். ஆனால் முந்தைய சீட்டை வாங்கி வைத்துக் கொள்வார்கள். பூத்தை இரவு 10 மணிக்கு கரெக்ட்டாய் மூடிவிடுவார்கள்., ஒரு வேளை வெளியே க்யூ இருந்தால் அந்த க்யூவை அதற்கு மேல் வளரவிடாமல் மூடிவிட்டு அதுவரைக்கும் சேர்ந்த கூட்டத்தை மட்டும் ஓட்டு பதிவு செய்ய அனுமதிப்பார்கள். பொதுவாக கூட்டம் இருக்காது. இதுவரைக்கும் நான் சென்ற போதெல்லாம் பூத் காத்தாடிக் கொண்டிருக்கும். நல்ல வேளை வந்தீங்க சார் இங்க பாருங்க இவரு சும்மா சும்மா தூங்கி எம்மேல சாய்ஞ்சிகிட்டே இருக்காருங்கிற மாதிரி பேசுவதற்கு ஆள் கிடைத்த சந்தோஷத்தை பூத் ஆபிஸர்ஸ் முகத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த முறை கொஞ்சம் கூட்டம் இருக்கும் என்று நினைக்கிறேன் (கொஞ்சம்ன்னா ஒரு பத்து பதினைஞ்சு பேர் அட் டைம்)
 
இரவு 10 மணியிலிருந்து எண்ண ஆரம்பித்து விடிவதற்குள் முக்கால் வாசி முடிவுகள் வந்துவிடும். கடந்த ஐந்து முறையாக Sunderland தான் இதுவரை 11 மணிக்குள் முடிவுகளை அறிவித்து, முடிவுகளை உடனே அறிவிக்கும் முதலிடத்தை இது வரை பிடித்துக் கொண்டிருக்கிறது. 2005-ல் 45 நிமிடங்களில் அறிவித்து ரெக்கார்ட் செய்தார்கள். இதற்காக ஸ்பெஷலாக ஸ்கூல் மாணவர்கள் லைனாக ஓட்டுப் பெட்டியை பாஸ் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்த முறை ஓட்டு போடும் சீட்டை கையாள்வதற்கு வசதியாக 20கிராம் குறைவான கணத்துடன் ப்ரிண்ட் செய்திருக்கிறார்கள். St.Ives எனும் இடம் தான் வழக்கமாக கடைசியாக முடிவுகளை அறிவிக்கும். நாளை மதியம் 1 மணி வாக்கில் தான் அங்கு முடிவுகள் வெளியாகும். அதற்குள் இங்கே யாரு ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது ஓரளவுக்கு தெரிந்திருக்குமாகையால் ராக்காயி இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன கதை தான்.
சிட்டிங் எம்.பி தோற்றால் கோட் சூட் போட்டுக்கொண்டு தோற்றால் கூட மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதை சொல்வது என்பது இங்கே சாங்கியம்.
எது எப்படியோ இன்றைக்கு இங்கு சிவராத்திரி :) நானும் முடிவுகளுக்காக ஆர்வமாய் இருக்கிறேன். லவுட் ஸ்பீகர், வேன் மீது நின்று கொண்டு பிரச்சாரம், லவுட் ஸ்பீகர், அவனே இவனே வசவுகள், அன்பளிப்புகள் இவையெல்லாம் இல்லாமல் கோட்டும் சூட்டும் போட்டுக்கொண்டு இவர்கள் சுற்றி வரும் போது நம்ம குஜராத்தி, பஞ்சாபிகள் நிறைந்திருக்கும் தொகுதியில் மட்டும் டோல் வாசித்து ஆட்டம் ஆடி எல்லாருக்கும் ஜிலேபி கொடுப்பார்கள். ஆனாலும் சொல்லுங்க ஜிலேபி பிரியாணிக்கு ஈடாகுமா?

Wednesday, May 06, 2015

உத்தம வில்லன்

டிஃபன் ஆச்சா? உங்க வீட்டுல இன்னிக்கு என்னன்னு கேள்வி கேட்டால் ஆச்சு/இல்லை, இன்னிக்கு எங்க வீட்டுல தோசை, இட்லி, பொங்கல் வடைன்னு சொல்லிப் பழகிய நம் சமகால தமிழ் படவுலகில், உள்ளே வரவிட்டு "தம்பி கேட்ட மூடுறா"ன்னு மிரட்டி "வாடா மகனே வா"ன்னு விருந்து வைத்திருக்கிறார். இலையப் போட்டு  ஓரமா தக்காளிச் சட்னியை ஸ்பூனோடு தரையில் "டட்" என்று தட்டிவிட்டு இந்தப் பக்கம்  இட்லிப் பானையிலிருந்து இட்லியைப் பரிமாறுவதற்குள்ளாகவே சட்னியை விரலால் தொட்டு நக்கிப் பழக்கமாகியிருக்கும் கூட்டம்.  கூடத்தில் உட்கார வைத்து "செந்தீ அணங்கிய கொழுநிணக் கொழுங்குறை" என்று லெவல் காட்டியிருக்கிறார்கள். என்ன சொல்றாங்க இன்னிக்கு சாப்பாடு இருக்கா இல்லீயான்னு நிறைய டவுட்டு வருது.

படத்தில் எனக்குப் பிடித்த விஷயங்கள், புதுமைகள் நிறைய இருக்கின்றன. ஸ்க்ரீன் ப்ளேயிலிருந்து அங்கங்கே புளி போட்டு விளக்காமல் பூடகமாக சொல்லும் விஷயத்திலிருந்து படம் நெடுக Technical excellence. ஆனால் அவற்றை மீறிய ஆயாசமும் இருக்கின்றது. கமலின் முதல் பாட்டிலேயே வயது தெரிகிறது. இவ்வளவு புதுமைகளைப் புகுத்தும் போது இந்த க்ளீஷே இண்ட்ரோ பாரின் லொக்கேஷன் சாங் தேவையே இல்லாதது. பூஜா ஆண்ட்டியை ஏன் கமல் கொணர்ந்தார் என்று எனக்கு சத்தியமாய் புரியவில்லை. பாலசந்தர் பேசுவது அப்படியே நாகேஷ் டப்பிங் பேசுவது மாதிரி உண்ர்ந்தேன். நாகேஷுக்கு இவரிமிருந்து இவ்வளவு பாதிப்பா இல்லை அவரிடமிருந்து இவருக்கு இவ்வளவு பாதிப்பா என்று யோசித்துக் கொண்டேயிருக்கிறேன்.

நீ கலக்கிட்டடா, உன்ன விட்டா வேற ஆளே இல்லைடா போன்ற பாலசந்தர் ஜிங்ஜக்குகள் கமலுக்கு தேவையே இல்லாதவை. பாத்திரங்கள் பெயர்களும் ஸ்க்ரிப்டுக்கு தோதாக இருக்கவேண்டும் என்று நினைத்தார்களா தெரியவில்லை.. தீர்க்கதரிசி ....மார்க்கதரிசி தாங்கல. உத்தமன் கதை ஒட்டவே இல்லை ஓட்டமும் இல்லை. வசனங்களில் நிறைய இடங்களில் கிச்சு கிச்சு மூட்டுகின்றன. நிறைய சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ரகம்.

நாலைஞ்சு பேராய் படம் பார்க்கப் போனால் படம் எப்படி இருக்குன்னு வேறு யாராவது முதலில் சொல்லட்டும் என்று தயங்க வைக்கிற ரகம். பிடிக்கவில்லை என்று சொன்னால் நம் ரசனையை மட்டமாக நினைத்துவிடுவார்களோ என்று யோசிக்க வைக்கும் ரகம். "என்னய்யா படம் இது" என்று கூட்டத்தில் யாரவது எடுத்துக் கொடுத்தால்  ஆமாங்க படமா இது சே ஒரு மண்ணும் புரியலன்னு கூட சேர்ந்து பாட்டுப் பாட வைக்கும் ரகம். இவையனைத்தையும் தாண்டி படத்தில் இயக்குனர் ஆர்வம் உள்ளவர்களுக்கு நிறைய தீனி இருக்கிறது. ஆனால் ஜனரஞ்சகமாய் கொடுக்கத் தவறிவிட்டார்கள் - அது மட்டுமே பெரிய குறை. கொஞ்சம் கேப் விட்டு இன்னுமொருதரம் பார்க்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

A classic case study of Operation Success Patient Dead