Thursday, March 13, 2014

மாமா

இங்கே பல்வேறு இடுகைகளில் நான் குறிப்பிட்ட,  எனக்கு அப்பாவாக இருந்த மாமா போன மாதம் இறைவனடி சேர்ந்துவிட்டார். இதைப் பற்றி எழுதவே வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனால் ஏனோ மனதில் இருக்கும் இறுக்கம் எழுதாவிட்டால் அகலாதோ என்று தோன்றுகிறது.

எனக்குத் தாய் மாமா. அவருக்கு குழந்தை இல்லாததால் பத்து வயதில் அங்கே வளர ஆரம்பித்தேன். அம்மா அப்பா அடுத்த தெரு தான்.  எனக்கு இரண்டு அம்மா அப்பா என்று சொல்லுவதில் வரும் பெருமையை விட அடுத்தவர்களுக்கு வரும் ஆர்வக் கோளாறில் தான் ஈர்ப்பு அதிகம். சொல்லிக் கொஞ்சமும், சொல்லாமல் நிறையவும் கற்றுக் கொடுத்திருக்கிறார். முக்கியமாக பணத்தை எப்படி சேர்க்கவேண்டும், செலவு செய்யவேண்டும், போஷிக்க வேண்டும் என்று. விசில் அடித்தால் அறவே பிடிக்காது. நிறைய திட்டு வாங்கியிருக்கிறேன். "லஷ்மி ஊதினாப்புல பறந்து போய்டுவா, செல்வம் செல்வோம்ன்னு போய்டும்" போன்ற போதனைகள். சின்ன வயதில் சன்னமாய் ஏதோ பாட்டை விசில் அடித்து செமத்தியாய் திட்டு வாங்கியிருக்கிறேன். "காலிப் பயல்கள் தான் விசில் அடிப்பா...காலிப் பயலா நீ..?" ஆனால் அதே விசிலை அவர் பேத்தி சமீபத்தில் ஊரில் அடித்த போது கண்டுகொள்ளவில்லை. காது கேட்கவில்லையா தெரியவில்லை. "நம்ம காலேஜ்லயே நீதாண்டா செமையா காது கிழியற மாதிரி விசில் அடிக்கிற" என்று பட்டம் வாங்கும் போதும் சரி, இங்கே யூ.கேவிலும் இப்ப வரையிலும் காது கிழியற மாதிரி சத்தத்துடன் விசில் அடித்து பாராட்டுப் பட்டயம் வாங்கும் போதும் சரி மாமா நினைவில் வராத நாளே கிடையாது.

ஐஸ் பெட்டியில் கிடத்தியிருந்தார்கள். "அவர் ஒன்னும் இல்லைன்னு தான் சொல்றார், ஆனா எனக்கு என்னம்மோ மூச்சு வாங்குற மாதிரி இருக்கு, எதுக்கும் ஸ்கேன் உள்பட எல்லா டெஸ்டும் எடுத்துடுங்கோ ப்ளீஸ், முடிஞ்சா டாக்டர் கன்சல்ட்டிங் போது மிஸ்ட் கால் குடுங்கோ நான் ஃபோன் பண்ணி அவர்ட்ட ஒரு ஒப்பீனியன் கேட்டுக்கறேனே" சொல்லி வைத்திருந்தேன். கால் வந்தது...."சாரி செக்கப்புக்கு போற போது மாமா கார்ல அப்பிடியே. தூங்கினாப்புலயே.... முழிக்கலை ரொம்ப சாரி".

இவ்வளவு அழுவேன் என்று நினைக்கவில்லை. நல்ல ஜரிகை வேஷ்டி உடுத்தி ஜம்முன்னு கிடத்தியிருந்தார்கள். கை காலெல்லாம் ஜில்லிட்டு இருந்தது. தூக்கும் போது உடைந்துவிடுவாரோ என்று பயமாய் இருந்தது. "ஒரு வாய் காப்பியாவது குடி இனிமே தான் காரியம் இருக்கு தொலைவுலெர்ந்து வந்திருக்க உடம்புல தெம்பு வேணும்" ம்ஹும் இறங்கவில்லை."நேத்திக்கு உன்னைப் பத்தி தான் பேசிண்டு இருந்தோம், நமக்கு சொந்தப் பையன் இருந்தாக் கூட இவ்ளோ பாசமா இருந்திருப்பானான்னு" போன வாரம் ஃபோனில் சொன்னதை யாரிடமும் சொல்லக் கூடத் தோன்றவில்லை. தலை வலித்தது. கண்ணீர் வற்றிக் கொஞ்ச நேரத்தில் அழுகை நின்ற போது யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றிப் பார்க்கத் தான் தோன்றியது. இன்னும் கொஞ்சம் அழ வேண்டுமோ.?

"திஸ் இஸ் மை சன், ஹீ இஸ் மேனேஜர் ஃப்ரம் இங்கிலாண்ட், ஐ ஆம் ஃபாதர்" போத்தீஸ் கடை சிப்பந்தியிடம் முதல் முறை பேண்ட் மாட்டி அழகு பார்த்தபோது காட்டிய இங்கிலீஷ் பெருமை நெஞ்சை விட்டு அகலாது. "பேண்ட் போட்டாத் தான் ப்ளைட்ல ஏத்துவான், பாஸ்போர்ட் வாங்கிட்டு நீங்க பாட்டுக்கு வரலைன்னா எனக்கு அங்க வேலைக்குப் பிரச்சனை வரும், அப்புறம் என்னை ஊருக்குக்கு திரும்ப அனுப்பிடுவா" நிறைய புளுகியிருக்கிறேன். "உங்கப்பா எப்படிப் படிப்பான் தெரியுமா, உட்காருன்னா உட்காருவான் நில்லுன்னா நிப்பான் ஒரு வார்த்த மீறிப் பேச மாட்டான், ஹிந்தி எல்லா பரிட்சையும் பர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணியிருக்கான், டெல்லி, பாம்பேன்னு சரளமா பேசுவான், ஆல் இந்தியா லெவல்ல மிருத்தங்கத்துல ப்ரைஸ் வாங்கியிருக்கான்". "மாமா...அது ஆல் இந்தியா இல்லை ரிஜினல் லெவல்ல திருச்சி வரைக்கும் தான்.. மத்யமாக்கு அப்புறம் எல்லாம் செகண்ட் க்ளாஸ் தான்"  "இருக்கட்டுமே குறுக்கப் பேசாத,,, திருச்சியும் இந்தியால தானே இருக்கு, தக்‌ஷிண பாரத பிரசார் சபாலேர்ந்து ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட்ல ரிசல்ட் கார்டு அனுப்பலையா..". அவரும் என் மகள்களிடம் நிறைய புளுகியிருக்கிறார். இங்கே லண்டனில் வீட்டைப் பார்த்து எதுவும் சொல்லாமல் புன்னகையுடன் உணர்ச்சிவசப் பட்டு தோளில் தட்டிக் கொடுத்தார். நான் செய்யும் எல்லாம் ஏ க்ளாஸ் தான். ப்ளைட் சிப்பந்தியிடம் சொல்லி நான் ஒரு க்ளாஸ் ஜூஸ் வாங்கிக் கொடுத்தது அவ்வளவு ஆச்சரியம். "எப்படி பேசி வாங்கிக் கொடுத்தான் பார்த்தியா" என்று மாமியைப் பார்த்தார். ஒவ்வொரு தடவையும் இங்கிலாந்திலிருந்து ஹாலந்து எவ்வளவு தூரம் என்பதை மட்டும் ஏனோ கேட்ப்பார். அவரிடம் அந்தக் கால ஹாலந்து மனோரஞ்சித செண்ட் ஒன்று இருந்ததால் இருக்கலாம் என்று நினைத்துக் கொள்வேன்.

சின்ன வயதில் கையைப் பிடித்துக் கொண்டு ஆறு மணிக்கு குளிக்க ஆத்தங்கரைக்கு நிறைய போயிருக்கிறேன். "தீயினால் சுட்ட புண், அகலாது அணுகாது" இதெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்த குறள்கள். கர்னாடக சங்கீதம் என்றால் உயிர். மெட்ராஸ் டிசம்பர் சீசனுக்கு ஒருமுறை கூட்டிப் போய் முதல் வரிசையில் உட்கார வைக்கவேண்டும் என்று ஆசைப் பட்டுக்கொண்டிருந்தேன். ஆசை மட்டுமே பட்டேன் - முயற்சி எடுக்கவே இல்லை. எண்பதாவது ஆண்டு நிறைவில் சரி கட்டவேண்டும் என்று நினைத்திருந்தேன். "ஆகஸ்ட்ல சதாபிஷேகம் பண்ணவேண்டும், மண்டபம் புக் செய்ய வேண்டாமா நாள் குறிக்கணும்..காண்ட்ராக்ட் விட்டுடலாம்..பெரிய கச்சேரி ஏற்பாடு பண்ணப் போறேன் ஆனா யாருன்னு சொல்ல மாட்டேன்....சர்ப்ரைஸ்..." விசாகா ஹரி கதா காலட்சேபம் என்று உடைக்கும் போது அவரிடம் என்ன ரியாக்க்ஷன் என்பதைப் பார்க்க ஆவலாய் இருந்தேன். அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை. "எல்லாம் அடுத்த வாரம் வர்றியே நேர்ல பேசிக்கலாம்". விசாகா ஹரி என்று ஃபோனிலேயே சொல்லியிருக்கலாம். அவ்வை சண்முகி சினிமா கூட்டிப் போய் மிக ரசித்தது மட்டுமே மிச்சம். "ஓ...கமலஹாசன் ..அப்பிடியே பொம்மனாட்டி மாதிரியே..." என்று பொக்கைவாயைக் காட்டிக் கொண்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

பிடிவாதம் ஜாஸ்தி "இப்ப கடைக்கு எதுக்கு நடந்து போகனும், ஆட்டோவாவது வைச்சுக்க கூடாதா" என்று கெஞ்சியிருக்கிறேன். "படிச்சுப் படிச்சு சொல்லியிருக்கிறேன், நடந்து போய் விழுந்துட்டு வந்திருக்கிறேள் வர வர சொன்ன பேச்சு கேக்கிறதே கிடையாது.. நான் தான் அல்லாடிண்டு இருக்கேன்" நிறைய கோவித்துக் கொண்டிருக்கிறேன். "நீ ரெண்டு பெண் குழந்தைகள வைச்சிண்டு இருக்க, கல்யாணம் பணணனும்" - அடிக்கடி சொல்லுவார். "சின்னவ இப்பத்தான் அஞ்சாவது போறா..உங்கள என்ன சொல்லி புரிய வைக்கிறது எல்லாம் பிடிவாதம்" - கத்தியிருக்கிறேன். கடைசி வரையில் எளிமை.

மயானத்தில் வாய்க்கரிசி போடுவது என்பது ரொம்பக் கொடுமையான விஷயம். ராஜ்கிரணும் சினிமாவும் சொல்ல முடியாதது. செருப்பு போடாமல் தார் ரோட்டில் நடக்கும் போது உச்சி வெய்யில் கூட சொல்ல முடியாதது. ஆனால் வாழ்வு பற்றிய எல்லா மாயைகளையும் அடித்து தூள் தூளாக்க வல்லது. நான் ப்ளான் பண்ணி வீடு வாங்கினேன், நான் பளான் பண்ணி கல்யாணம் பண்ணினேன், ஃபாரின் போய் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு சேர்த்து வைச்சிருக்கிறேன் - ஃப்யூட்சர்ல எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது. ப்ளான் எவ்ரிதிங்க் அதான் சேஃப்டி நாளைக்கு ஒரு பய அசைச்சுக்க முடியாது. ப்ளான் ப்ளான் நான் நான் நான்

காரியம் செய்து மழித்து, குளித்து வீட்டுக்கு வந்து கூட சாப்பிடப் பிடிக்கவில்லை. ஃபோட்டோ ப்ளோ அப் பண்ணி மாலை போட வேண்டும். பத்து நாள் காரியங்களுக்கு ஏற்பாடு செய்யவேண்டும், வாழக்காய் வாங்க வேண்டும், தண்ணி கேன் சொல்ல வேண்டும். சாஸ்திரிகளுக்கு அமௌண்ட் பேச வேண்டும். அலைந்து திரிந்து ஏற்பாடு செய்துவிட்டு வந்த போது ராத்திரி எட்டு மணி. கப கபவென்று  பசித்தது. தக்காளிச் சட்னியோடு இட்லி சாப்பிட வேண்டும் போல இருந்தது.