Friday, July 15, 2011

அட்வைஸ்

"என்னடா என்னையே பார்த்துண்டு இருக்க.."

"என்னை என்ன பண்ணச் சொல்ற சித்தி..?"

"தலகீழ நிக்கிறான்டா..கொஞ்சம் புத்தி சொல்லேன். நீ சொன்னா கேப்பான்னு தோணறது. மேலத் தெரு நாராயணன் அவா ஆபிஸ்ல சொல்லி ஆபிஸ் பாய் உத்தியோகம் போட்டுக் குடுக்கச் சொல்றேங்கிறார் ஆனா பத்தாவதாவது ஜஸ்ட் பாஸ் பண்ணச் சொல்லுங்கோங்கிறார்"

"ம்..."

"நன்னா படிக்காட்டாலும் பாஸாவது பண்ணிண்டிருந்த பிள்ளை...இப்போ நாலு வேளையும் சினிமா கொட்டகையே கதின்னு இருக்கான்...நீ சித்த அறிவுரை சொல்லப் பிடாதா..."

"நல்ல ஆளப் பார்த்து தான் சொல்லச் சொன்னேள் போங்கோ..இவரும் விட்டா டிபனையும் காப்பியையும் கொட்டகைக்கு கொண்டு வா சொல்லிடுவார்"

"நீ கொஞ்சம் வாய மூடறியா...நம்ம பஞ்சாயத்த அப்புறம் வைச்சுக்கலாம்"

"நோக்கு தெரியாது கிரிஜா...இவன் அஞ்சு வயசுல எட்டாந் திருநாள்ல பச்சை பலூனை பிடிச்சிண்டு சேப்பு பலூன் தான் வேணும்னு அழுதுண்டு நின்னான்...நான்  போய் பலூன்காரன சண்டை பிடிச்சு மாத்திக் குடுத்தேன். எவ்வளவு பண்ணியிருக்கேன் இவனுக்கு...கும்மோணத்துல கிளப் காப்பிய தொண்டைல விடறதுக்குள்ள அவசரமா வருதுன்னு ட்ராயரோட...போய்"

"இப்ப என்ன தான் சொல்றான்.."

"சினிமால சேரப் போறானாம்... எல்லாம் என் தலையெழுத்து. எம்புள்ளை ப்ளஸ் டூ பாஸ் பண்ணுவான்னு நினைச்சேன்.. ஜம்புவோ சிம்புவோ...அவாள்லாம் படிச்சிருக்காளா...இன்னிக்கு கோடி கோடியா வாங்கலையாங்கிறான்..என்னத்த சொல்ல இவன் அப்பா மிராசுதாரா..இல்ல ஜெமினி கணேசனா. ஏதோ அவர் வேலைல இருக்கும் போதே போய் சேர்ந்ததுல எனக்கு கால்வயித்து பென்ஷன் வரது. எனக்கப்புறம் இவனுக்கு அதுவும் வராது"

"பாவம் சித்தி இவ்வளவு சொல்றாளே.. கொஞ்சம் பேசித்தான் பாருங்கோளேன்...நீங்க சொன்னா கேப்பானோ என்னம்மோ"

"எல்லாம் கேப்பான்...கேக்காம எங்க போறான். பலூன்காரன் சேப்பே இல்லைமான்னு சாதிச்சான்...விட்டேனா..?. கும்மோணத்துல..வாளியே இல்லை கக்கூஸுல..."

"சாயங்காலாம் வரச் சொல்லுங்கோ நான் பார்த்து பேசறேன்... பேசறதுக்கு வரச்சொன்னேன்னு சொல்லாதீங்கோ திசைக்கும் திரும்ப மாட்டான். புதுப் பட ப்ரிவியூ ஷோக்கு ரெண்டு டிக்கெட் இருக்காம் கூப்பிட்டேன்னு சொல்லுங்கோ"


"முந்திரி கொத்து பண்ணி குடுத்து விடறேன். தீர்க்காயுசா இருப்ப. அந்த வெங்கடாஜலபதி தான் நல்ல வழியக் காட்டணும்"

"நிஜமாவே ப்ரிவியூ ஷோக்கா கிளம்பறேள்? நீங்க சித்திட்ட சும்மா பேச்சுக்குத் தான் சொன்னேளோன்னு நினைச்சேன்"

"இல்ல நிஜமா ரெண்டு டிக்கெட் இருக்கு. கூட்டிண்டு போய் பேசி பார்க்கறேன். இங்க பேசினா மண்டய மண்டய ஆட்டிட்டு கல்தா குடுத்துடுவான். ப்ளாஸ்க்ல காப்பி போட்டுத் தாயேன்"

"ம்ஹுக்கும் அதொன்னு தான் குறைச்சல்"

"அதானே பார்த்தேன்..என்னம்மோ டெய்லி ப்ளாஸ்குல காப்பி போட்டு குடுக்கற மாதிரி ஊரெல்லாம் தம்பட்டம் அடி"


"படம் முடிய இவ்வளவு நேரமா...ரொம்ப நேரம் புத்தி சொன்னேளா..? பாஸ்கி என்ன சொல்றான். திரும்ப படிக்க போறேங்கிறானா? "

"போவான். டுடோரியல் காலேஜ்ல சேர்த்துவிடறேன்னு சொல்லியிருக்கேன்"

"என்னது நிஜமாவா..."

"ம்ம். "

"இதேது ஊர்பட்ட அதிசயமா இருக்கு.. என்ன சொன்னேள்..எப்படி ஒரே நாள்ல மாறினான்? "

"ம்.. "

"அதான் எப்படின்னேன்..ம்ம்..அதென்ன புஸ்தகம் கையில"

"..கேட்டுண்டே இருக்கேன்... ஒன்னும் சொல்லாம அலமாரில வைக்கறேளே..? என்ன புஸ்தகம்ன்னு கேட்டேன்"

"எல்லாம் நல்ல புஸ்தகம் தான்"

"ப்ச்..இப்போ காட்டப் போறேளா இல்லையா.."

"தொனத் தொனங்காதியேன்...ஃபிலிம் இண்ஸ்டியூட் ப்ராஸ்பெக்டஸ், டைரக்‌ஷன் கோர்ஸ் இருக்காம். அடுத்த இயக்குனர் சிகரம் நீங்க தான்னு பாஸ்கர் என்ன ஒரே புகழாரம். என்னோட திறமைய நன்னா தெரிஞ்சு வைச்சுண்டிருக்கான். பையன் கெட்டிக்காரன்.  இப்போ கோர்ஸுக்கு அப்ளிகேஷன் வாங்கறாளாம், உள்ள அவனுக்கு ஆள் தெரியுமாம். நானாச்சு உங்கள சேர்த்துவிடறேன்னு சொல்லியிருக்கான். நாளைக்கு பத்து மணிக்குள்ள ஃபாரத்த பூர்த்தி பண்ணிக் குடுக்கணும்"

"....?"

Thursday, July 14, 2011

கன்னா பின்னா

வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம்ன்னு சொன்னால் என்னம்மோ எங்க மாமியாரப் பத்தி நான் ஜாடை மாடையா பேசறேன்னு தங்கமணியோடு அம்மா காண்டாகிவிடுவார் என்பதால் எந்த பழமொழியும் சொல்லாமல், இந்த வருடம் நிறைய எழுத வேண்டும், புக்கர் ப்ரைஸ் வாங்க வேண்டும் என்ற பக்கத்து வீட்டு வெள்ளைக்கார மாமியின் ஆசையை தோசையாக்கி, ப்ளாகிலிருந்து நான் ரொம்ப நாள் காணாமல் போனதற்க்கு முழு பொறுப்பேற்றுக்கொண்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்ளுமாறு சந்தன மாரியப்பனைக் கேட்டுக்கொள்கிறேன்.போதும் நிறுத்திகிறலாம். சில பேர திருத்த முடியாது. சந்தன மாரியப்பனை சொல்லிக் குற்றமில்லை...இந்த சமூகத்தை தான் சொல்லவேண்டும்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னேன்னு ஒரு மகான் சொல்லி இருக்காராம். பரதேசி அவன் கண்டி கைல மாட்டினான்..கைமா தான். பின்ன என்னங்க.. நீங்களே சொல்லுங்க நானே ரொம்ப நாள் கழிச்சி இங்க வந்து அட்டெண்டன்ஸப் போட்டா அடுத்த வாரமே இந்தியா ட்ரிப்புக்காக திரும்ப ஒரு லாங் லீவு போடுடான்னா மனுஷனுக்கு எரிச்சல் வருமா வராதா. சில சமயம் சமோசா காரமா இருந்தாலும் அதுலயும் முந்திரி பருப்பு போட்டிருப்பாங்க பாருங்க மனுஷ வாழ்க்கையும் அத மாதிரி தான். இந்த இந்தியா ட்ரிப்பில் நிறைய வலையுலக நண்பர்களை சந்திக்கனும்ன்னு இருக்கேன். இந்த ஒரு சந்தோஷத்துக்காகவே சந்தன மாரியப்பனை  பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடலாம்னு முடிவு எடுத்திருக்கேன்.(என்னாது யாரு சந்தன மாரியப்பனா...என்னக் கேட்டா..யாருக்குத் தெரியும்).

விடுங்க பதிவு ஒரே காராசாரமா போகுது கொஞ்சம் லைட்டா யோசிக்கலாம். ஊர்ல எங்க வீட்டுல வர்ற எல்லா லெட்டரையும் எங்க மாமா ஒரு கம்பில சொருகி ஆர்க்கைவ் பண்ணுவார். இந்த கம்பி ஆர்க்கைவ் மாடில புழுதியோட இருக்கும். தூக்கம் வராத மத்தியான வேளைகளில் “மாடிக்குப் போனா தான் கவனமா படிக்க முடியும்”ன்னு சொல்லிட்டு “நாம வடை குடுத்த சீனியர் பொண்ணு வித் லவ்வுன்னு அனுபின லெட்டர் மாதிரி மாமாவுக்கு எதாவது சுவாரசியமா லெட்டர் வந்திருக்கான்னு இந்த கம்பில இருக்கற பழைய லெட்டர்களையெல்லாம் நோண்டிக் கொண்டிருப்பேன். முக்கால் வாசி லெட்டர் “சுவாமி சுப்பிரமண்யம் சகாயம்”ன்னு ஆரம்பித்து “தீபாவளி, கார்த்திகை,பொங்கல் வகைக்காக ருபாய் பதினொன்று மணியார்டரில் தனியாக அனுப்பியுள்ளேன்,பெருமையுடன் பெற்றுக்கொண்டு குடும்பத்தையும் குழந்தைகளையும் ஆசிர்வாதம் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்”ன்னு முடித்திருக்கும், இல்லையென்றால் கோயில் கும்பாபிஷேகத்திற்கு அன்பர்களை நன்கொடை அனுப்பச் சொல்லி குங்குமம் வீபூதி மணக்க வேண்டிக் கேட்டுக்கொண்டிருக்கும். இதுக்கு பித்தோகோரஸ் தியரமே எவ்வளவோ மேல் என்று படிக்கப் போய்விடுவேன்.

ஒரே ஒரு முறை மட்டும் வேறு ஒரு விளக்குப் பிறையில் பாலிதீன் கவரில் சில போஸ்ட் கார்டுகள் இருப்பதைப் பார்த்தேன். எடுக்கப் போகும் சமயத்தில் மாமா வந்துவிட படக்கென்று பிடுங்கி பரணில் வைத்துவிட்டார். அதையெல்லாம் எடுக்காதே என்று ரெண்டுங்கட்டானாய் ஒரு ஆர்டர் வேறு போட்டுவிட, எனக்கு சிரங்கை சொறிந்து விட்ட மாதிரி அரிக்க ஆரம்பித்து விட்டது. மாமியும் வேறு சேர்ந்து கொண்டு அதையெல்லாம் தொடாதேன்னா தொடாதேன்னு கூடுதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க, இங்கயும் ஏதோ வடை மேட்டர் இருக்கு என்று எனக்கு கன்பஃர்ம் ஆகிவிட்டது. பின்னொரு நாளில் தெருவில் நடக்கும் கல்யாணத்திற்கு எல்லோரும் போயிருக்க,அவசரமாய் பாலிதீன் பையை பிரித்தால் முத்து முத்தான கையெழுத்தில் “வெங்கடாசலபதி துணை” என்று ஆரம்பித்து இந்த லெட்டரை இருபது பிரதி எடுத்து அடுத்த ஐந்து நாட்களுக்குள் அனுப்பவேண்டும் என்று செல்லமாய் கேட்டுக் கொண்டு,  அப்படி பிரதி எடுத்து அனுப்பாத ஒருத்தர் வீட்டில் பாம்பு வந்துவிட்டதாயும், கிழித்துப் போட்ட ஒருத்தரை எருமைமாடு முட்டிவிட்டதாகவும், பிரதி எடுத்து அனுப்பியவருக்கு அடுத்த வாரமே மாட்டுக் கொட்டகையில் ட்ரங்க் பொட்டி நிறைய தங்கம் கிடைத்து ரெண்டாவது கல்யாணத்திற்கு பெண்குடுக்க க்யூ நிற்பதாகவும் ஏகப்பட்ட மிரட்டல்கள். எங்கள் தெருவில் ஏகப்பட்ட எருமை மாடுகள் இருப்பதால் மாமா கிழித்து எறியாமல் பத்திரமாய் வைத்திருக்கிறார் என்று எண்ணிக் கொண்டேன்.

நிற்க. சமீபத்தில் பேஸ்புக்கில் இதே ரீதியில் ஒரு ஸ்டேடஸ் மெசேஜ். “இதை உங்கள் ஸ்டேடஸ் மேசேஜாகப் போட்டால் ஏகப்பட்ட அதிர்ஷட்ம் கொட்டும் என்றும் போடாவிட்டால்...” -- ஸ்ப்ப்ப்ப்ப்பா...ஏகப்பட்ட பேர் அதை ஸ்டேடஸாக வேறு போட்டிருந்தார்கள். எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாய் இருந்தது. இதை எதுக்கு சொல்கிறேன் என்றால் காலத்திற்கேற்ப டெக்னாலஜி மாறும் ஆனால் மனிதர்கள் மெண்டாலிட்டி மட்டும் மாறவே மாறாது.