Saturday, January 24, 2009

உள்ளேன் ஐய்யா

உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்ன்னு சொன்னா "எந்த வருஷத்துக்கு..?"ன்னு கோச்சிப்பீங்கன்னா அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸா வைச்சிக்கோங்க. பொங்கல்லாம் சிறப்பா கொண்டாடியிரு...சரி வேணாம்...ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா...? வெக்கமாயில்ல....வேலை மெனெக்கெட்டு இங்க வந்து வாழ்த்து சொன்னா ஒரு மரியாதைக்கு திரும்ப ஒரு வாழ்த்து கூட சொல்ல வேணாம்...சின்னதா ஒரு டேங்க்ஸ் சொல்லக் கூடவா முடியலை..ஏன் எங்களுக்கெல்லாம் வேலையில்லையா...நீ மட்டும் தான் உலக மகா ஆபிஸரா?...திட்டி உங்க வாய் வலிக்க கூடாது..(ஐய்...ஐஸ் ஐஸ்..) நானே திட்டிக்கிறேன்.
புதுவருடம் அமர்களமாக ஆரம்பித்திருக்கிறது. நீங்க மறந்தாலும் நான் மறக்கவில்லை. பெரிய இவனாட்டம் சேரிட்டி சேலென்ஞ் என்று இரண்டு சவால்களை எடுத்திருந்தாலும் இரண்டையும் முடிக்கவேயில்லை. ஆனால் அபராதமாக குடுக்க இருந்த தொகையை இரட்டித்துவிடுவதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன். இந்த வருடமாவது முடிக்க முடிகிறதா என்று பார்ப்போம். இரண்டு சவால்களில் ஒன்று திரைப்படத்தில் தலையைக் காட்டுவது. ஆனால் சினிமா பித்தம் தலைக்கேறி இருக்கிறது. நடிப்பதற்கு இல்லை டைரடக்கராவதற்கு. லண்டன் ஃபிலிம் அகாடமியில் கோர்ஸ் புக் பண்ணி ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறேன்.
கிறிஸ்துமஸ் லீவில் ஒரு குறும்படம் எடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தேன். நம்ம ட்ரேட் மார்க் ஜொள்ளித்திருந்த காலத்தை குறும்படமாக எடுக்கவேண்டும் என்று ரொம்ப ஆசை. குடும்ப நண்பர் வட்டத்தில் நடிப்பதற்க்கு கேட்டதற்க்கு சரி சொன்னார்கள். பரவாயில்லை நான் இது வரை படமெடுக்கவில்லை என்றாலும் நம்பிக்கை வைத்து சரி சொன்னார்களே என்று ரொம்ப ஃபீலிங்ஸ்காக இருந்தது. அவர்கள் குடும்பத்திற்க்கு இங்கு எக்கச்சக்க நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஸ்காட்லாண்டிற்கு முதல் வாரம் நண்பர்களோடு போய்விட்டு வந்து அடுத்த வாரம் படப்பிடிப்பு என்று ப்ரொடெக்க்ஷன் ப்ளானிங்காயிருந்தது. ஸ்காட்லேண்ட் அருமையான இடம். இவ்வளவு நாள் இங்கிருந்தாலும் இப்போது தான் போகிறோம். நண்பரகளோடு சரி ஜாலியாக இருந்தது. லண்டன்லிருந்து ஸ்காட்லேண்ட்டின் ஒரு அத்த மூலைக்கு பத்து மணிநேரம் காரை ஓட்டிக்கொண்டேடேடே போனதில் போய் சேரும் போது நல்ல இருட்டியிருந்தது. கும்மிருட்டில் ஒரு அத்துவானக் காட்டில் தெக்காலே போய் வடக்காலே திரும்பினால் நீங்க தங்குகிற வீடு இருக்கும் என்று உத்தேசமாய் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இடம் பாலுமேந்திரா படத்தில் வருவது மாதிரி ஒரு பயங்கர காடு. மலைச்சரிவில் ஒரு கார் மட்டுமே போகக் கூடிய பாதை. சரிவில் கீழே தன்னீர் ஓடுகிற சத்தம் வேறு. மலையூர் மம்பட்டியான் பாட்டை பாடிக்கொண்டே போனால் வீடு வருகிற வழியைக் காணும். ஒருவேளை பாதை தவறிவிட்டோமோ என்றால் காரைத் திருப்பக் கூட வழியில்லை. மறக்க முடியாத சரியான திகில் அனுபவம். நம்பிக்கையே இல்லாமல் அப்புறம் எப்படியோ ஒரு வழியாக வீடு போய் சேர்ந்தோம். இப்படி ஒரு இடத்தில் திகில் படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு சாமி வந்துவிட்டது. கூட வந்த நண்பர்களை பேசி சம்மதிக்க வைத்து அவர்களும் இல்லாவிட்டால் இவன் தூங்கும் போது கல்லைத் தூக்கிப்போட்டாலும் போட்டுவிடுவான் என்று பயந்து போய் சம்மதித்தார்கள். நண்பர்களுக்கும் இங்கே நன்றியை சொல்லிக்கொள்கிறேன். ஆக இரண்டு படம் என்று ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொக்க்ஷனில் இருக்கிறது :)) சீக்கிரமே ரிலீஸ் பண்ணிவிடுவேன். நீங்க தான் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லவேண்டும்.

அதுனால தான் இங்க எழுத கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இருந்தாலும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கலாம் என்று தான் இந்தப் பதிவு. தோ..... வந்துக்கிடே இருக்கேன்.

நீங்க திட்டினாலும் பரவாயில்லை...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!