Wednesday, February 27, 2008

ரயில் ஸ்னேகங்கள்

இருபத்தி ஐந்தாம் பக்கம் வந்தும் அந்த புஸ்தகம் போரடித்துக்கொண்டிருந்தது. அதற்கு மேலும் அதைப் புரட்ட மனதில்லாமல் ட்ரெயினில் பராக்க பார்க்க ஆரம்பித்தேன். அண்டர்கிரவுண்ட் டெரெயினில் வெளியே ஒன்றும் தெரியாது என்பதால் கம்பார்ட்மென்ட்டில் இருப்பவர்களைத் தான் பாராக்கபார்க்கவேண்டும். "இந்த வெள்ளக்காரர்களுக்கு மட்டும் பொது இடத்தில் கஷ்கத்தில் சொறியவே செய்யாதா...எப்படி சமாளிக்கிறார்கள்" என்பது போன்ற அறிவுஜீவித்தனங்கள் இந்த நேரங்களில் தான் சில சமயம் பிரகாசிக்கும். இன்ன பிற நேரங்களில் நம்ம நேரத்துக்கு ஒரு வெள்ளக்கார குத்துவிளக்கு நின்று கொண்டிருக்கும் பக்கத்திலேயே இடுப்பை வளைத்துக்கொண்டு ஒருத்தன் குத்துவிளக்குக்கு பாலீஷ் போட்டு துடைத்துக் கொண்டிருப்பான். நடு நடுவே கே.டி.குஞ்சுமோன் பட ப்ஸ்ஸ்டாப்பில் நிற்பது மாதிரி முத்தம் குடுத்துக்கொள்வார்கள். நான் கிழக்கையும் மேற்கையும் திரும்பி யாராவது நான் பார்ப்பதைப் பார்க்கிறார்களா என்று சுத்தி முத்தி பார்த்து மீண்டும் குத்துவிளக்கு பாலீஷ் சர்வீஸை சூப்பர்வைஸ் செய்ய ஆரம்பிப்பதற்க்குள் மூக்கில் வேர்த்த மாதிரி பாலிஷ்காரன் குத்துவிளக்கை இழுத்துக் கொண்டு அடுத்த ஸ்டாப்பில் இறங்கிப் போய்விடுவான். நான் முன்னாடி நோட்டம் விட்டுக்கொண்டிருந்த போது இருந்த வெள்ளைக்கார மாமா மட்டும் இன்னமும் இறங்கிப் போகாமல் குத்துக்கல்லாய் அப்பிடியே இருப்பார். இந்த இழவை யார் பார்ப்பது என்று நான் கண்ணை மூடிக் கொண்டு பில்லா நயன் தாரா ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்துவிடுவேன்.

"ஏய் நேத்திக்கு ட்ராபல்கர் ஸ்கொயர் போயிருந்தேன் சூப்பரா இருந்தது" - திடீரென ஒலித்த அந்த சம்பாஷனை நிஷ்டையில் இருந்த என் தியானத்தைக் கலைத்தது. பில்லா சீனை பாஸ் செய்துவிட்டு கண்ணைத் இடுக்கி ஓட்டைக் கண் விட்டுப் பார்த்ததில் இரண்டு அம்மணிகள் என் சீட்டுக்கு முன்னாடி அமர்ந்திருந்தது தெரிந்தது. போட்டிருந்த சென்னை பாரிஸ் கார்னர் தொள தொளா லெதர் ஜாககெட் அனுமானத்தில் அனேகமாய் சூப்பராய் இருந்தது என்று சொன்ன அம்மணி போன வாரம் தான் முதன் முறையாய் இங்கிலாந்துக்கு வந்திருக்க வேண்டும். கூட இருந்த அம்மணி எம் அன்ட் எஸ் போட்டுக்கு கொண்டு உள்ளூர் எக்ஸ்பீரியன்ஸ் காட்டியிருந்தார்.

லண்டன் அண்டர்கிரவுண்டில் தமிழ் சம்பாஷனைகள் அவ்வளவு ஆச்சரியமான விஷயம் கிடையாது. கூட்டமான சென்ட்ரல் லைனில் "ங்கொய்யால இந்த வெள்ளக்காரன் குளிச்சி எத்தன நாளாச்சோ தெரியல கப்பு தாங்க முடியல...மச்சி லிவர்பூல் ஸ்ட்ரீட்ல இறங்கி அடுத்த ட்ரெயின் பிடிக்கலாமா ப்ளீஸ்", "வரும் போது டெஸ்கோல பிரெட் வாங்கிட்டு வந்திருடா..கதிர் இன்னும் ஆபிஸில தான் இருக்கான் இன்னும் பிராப்ளம் சால்வ் ஆகலை" - வாழ்வியல் பிரச்சனைகள் சகஜமாய் காதில் விழும் என்றாலும் இந்த மாதிரி இரண்டு அம்மணிகள் பேசிக் கேட்கும் பாக்யம் வாய்த்ததில்லை.

எனக்கு அடுத்தவர் பேசுவதை ஒட்டுக் கேட்பது பிடிக்காது என்பதாலும், அதுவும் பெண்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது அறவே பிடிக்காது என்பதாலும் காதைத் தீட்டிக் கொண்டு அவர்கள் பேசுவது அதுவாக எதாவது காதில் விழுந்தால் விழட்டும் என்று சிவனே என்று இருந்தேன்.

ஆனால் என்னளவுக்கு அந்தப் பெண்களுக்கு பொறுப்பு காணாது. என்னடா ஒரு மனுஷன் பில்லா நயன் தாராவை பாஸ் செய்துவிட்டு சிவனே என்று இருக்கானே என்று எண்ணாமல் புதிதாய் வந்த அம்மணி பக்கிங்ஹாம் பேலஸ் போனேன், பிக்காடிலி ஸ்கொயருக்குப் போனேன், மொட்டை மாடிக்குப் போனேன்னு எடுத்துவிட்டுக் கொண்டிருந்தார். அப்புறம் டெஸ்கோவிலேயே இப்போ நம்மூர் மளிகை சாமான் விற்க ஆரம்பித்துவிட்டார்கள், கூட படித்த காயத்ரிக்கும் சேகருக்கும் கல்யாணமாகிவிட்டது கலயாணத்துக்கு எல்லா ஃபிரண்ட்சும் வந்தார்கள் என்று வள வளவென்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். சரி தான் இந்த பேச்சைக் கேட்பதற்கா நான் நயன் தாரா ஸ்லோகம் சொல்லாமல் மண்டையக் கவுத்தி தூங்கிற மாதிரி நடிக்கிறேன்னு வெறுத்த சமயம் "அப்புறம் என்னடி உங்காள பத்தி பேச்சே எடுக்க மாட்டேங்கிற..?"ன்னு எம் அன்ட் எஸ் அம்மணி கரெக்டாக மேட்டருக்கு வந்தார். என்ன இருந்தாலும் உள்ளூர் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கல்லவா.நான் இன்னும் கொஞ்சம் மண்டையக் கவுத்தி நல்ல சவுகரியமாய் வைத்துக் கொண்டு மீண்டும் அதுவாக காதில் விழுவதைக் கேட்க ஆரம்பித்தேன்.

"அதயேன்டி கேக்குற..மெட்ராஸுக்கு வந்த முதல் வருஷம் ஃபுல்லா நாங்க பார்த்துக்கவே இல்லை"

"அடிப்பாவி...பார்த்துக்கவே இல்லையா..காலேஜ் படிக்கும் போது அப்பிடி மாங்கு மாங்குன்னு ரெண்டு பேரும் லவ்ஸ் விட்டீங்க .?.மேட்சிங்கா ட்ரெஸ் போடறதென்ன ஜோடியா எல்லா இடத்துக்கும் சுத்தினதென்ன...காலேஜ்ல எத்தன பேர் கடுப்ப கிளப்பியிருப்பீங்க...ஒரே கம்பெனில வேற காம்பெஸ்ல செலெக்ட் ஆனிங்களேடி..."

"இல்லடி வேலை ஜாயின் பண்றதுக்கு முன்னாடி எங்களுக்குள்ள மிஸண்டர்ஸ்டாண்டிங் ஆகிடிச்சு"

"ஏண்டி என்னாச்சு..?" உள்ளூர் அம்மணி கரெக்ட்டாய் கொக்கி போட்டு கன்டினியுட்டி மெயின்டெயின் பண்ணிக் கொண்டிருந்தார்.

"ஒரே இடத்துல வேலை கிடச்சா இந்தப் பிரச்ச்னையெல்லாம் வரும் யாரோ ஏதோ சொல்லி மனசக் கலைச்சிட்டாங்க..ஈ.கோ வந்திரிச்சி ரெண்டு பேருக்கும்..."

"ஏன்டி உங்களுக்குள்ள அன்டர்ஸ்டான்டிங்கே இல்லையா...அது இல்லாமலா...அப்பிடி சுத்தினீங்க."

"அத விடுடி என்னம்மோ அப்பிடி ஆகிடிச்சு...அப்புறம் அவங்க வீட்டுல கொஞ்சம் பிரச்சனை.கல்யாணத்துக்கு வேற பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.கேள்விப் பட்டதும் எனக்கு மனசு கேக்கலை நான் போய் சமாதானம் பண்ணி அப்புறம் சேர்ந்துட்டோம்.."

என்னடா மெகா சீரியல் மாதிரி போய்க் கொண்டிருக்கிறதுன்னு எனக்கு கொஞ்சம் சப்புன்னு இருந்தது. இவங்க காராசாரமா பசங்க மாதிரி பேசமாட்டாங்களா...டிஸ்ட்ரிக்ட் லைன் வேற இன்னிக்கு பிரச்சனையே இல்லாம கரெக்டாய் போய்கொண்டிருக்கிறதே இறங்க வேண்டிய ஸ்டாப் வந்துவிடுமே என்று நான் நினைக்க ஆரம்பித்தபோது எம் அன்ட் எஸ் அம்மணி கரெக்டாய் பாயிண்ட்டைப் பிடித்தாள்.

"ஹூம்...நம்ம காலேஜ் டேஸ்ஸ மறக்கவே முடியாதுடி...அதுவும் ஃபைனல் இயர்ல எல்லாரும் எஜூகேஷனல் டூர்ன்னு ஒரு கூத்து அடிச்சோமே...அதுலயும் நீங்க ரெண்டு பேரும் என்னா கூத்தடிச்சீங்க"

"அடிப்பாவி அதெல்லாம் எப்படி உனக்குத் தெரியும் நாங்க யாருக்கும் தெரியாதுன்ல நினைச்சிக்கிட்டு இருக்கோம்" - அவளுக்கு அவர்களது ரகசியம் வெளியே தெரிந்த படபடப்பில் தன்னையறியாமல் யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றி முற்றும் பார்த்தாள்.

நான் அரவிந்தசாமி கலர் என்பதால் என்னை வெள்ளைகாரனென்று நினைத்திருப்பாள் போலும் (இல்லை இந்த விஷயம் அரவிந்தசாமிக்கு தெரியாது) சரி சரி நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்று நினைத்தாள் போலும், சம்பாஷனை தொடர்ந்தது.

"நீங்க தான் ஒருத்தருக்கும் தெரியாதுன்னு நினைச்சிக்கிட்டு இருக்கீங்க ...உங்க கூத்து ப்ரொபசரை தவிர எல்லாருக்கும் தெரியும்"

"அடிப்பாவி.."

இதெல்லாம் அப்புறம் வைச்சிக்கோங்க முதல்ல என்ன கூத்தடிச்சாங்கன்னு ஒன்று இரண்டு என்று வரிசைப் படுத்தி விவரமா சொல்லுங்கம்மான்னு கூவ எனக்கு வாய் துடித்தது.

"அடிப்பாவியா... அத நாங்க சொல்லனும்...நீங்க ரெண்டு பேரும் யாருமில்லைன்னு நினைச்சிக்கிட்டு..அந்த டார்ம் பர்ஸ்ட் ப்ளோர் ரூமில ஒதுங்கின போதே எல்லாருக்கும் செம டவுட்..நான் ரேகா,ஸ்வேதா எல்லாரும் ஒளிஞ்சு நின்னு ஜன்னல் வழியா பார்த்தோம்.."

கரெக்டாய் மேட்டர் சூடு பிடிக்க ஆரம்பித்த போது நான் இறங்கவேண்டிய ஸ்டாப் அடுத்த ஸ்டாபாகியிருந்தது. சண்டாளப் பாவி ட்ரைவர் இன்னிக்குப் பார்த்து கரெக்டாய் வந்து கவுத்திட்டானே என்று கோபமாய் வந்தது. ஆனாலும் குலதெய்வம் ஏஞ்சி அம்பாள் கைவிடவில்லை. அவர்களும் என் ஸ்டாப்பில் இறங்கி பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்கள்.

"அதெல்லாம் அறியா வயசுடி..அன்னிக்குத் தான் முதலும் கடைசியும் அதற்கப்புறம் நாங்க தண்ணிய தொடவே இல்லை. செம கசப்புடி எப்படி தான் குடிக்கிறாங்களோ தெரியலை"

என்னாது தனியா ரூமுக்குள்ள போய் வெறும் தண்ணி தான் அடிச்சாங்களா...இந்த கருமத்த ஜன்னல் வழியா வேற பார்த்தாங்களா..இதெல்லாம் 80களில் வந்த சினிமாக்களிலேயே காட்டிட்டாங்களே இதுக்குத் தான் இவ்வளவு பில்டப்பான்னு எனக்கு சப்புன்னு ஆகிவிட்டது.

"ஹூம் இப்போ ஜீவா கூட டச்சில இருக்கியா"

"டச்ச்ல இருக்கேனா...டெய்லி பேசிக்குவோம் இப்பவும் எங்க ப்ரெண்ட்ஷிப் அப்பிடியே தான் இருக்கு...அவ யூ.எஸ்ல ஆன்சைட் போயிருக்கா...ஜூலைல அவளுக்கு கல்யாணம்..ஊருக்கு போவேன்"

அடத் தூ.."நீங்க ரெண்டு பேரும்"ன்னு எம் அன்ட் எஸ் சொன்னது வெறும் ஃபிரெண்டியா...கருமாந்திரம் இதுக்குத் தான் இவ்வளவு கஷ்டப்படேனா...இதுக்குத் தான் நான் ஒட்டுக் கேட்பதே கிடையாது ஆனாலும் அதுவாக காதில் விழுந்து கஷ்டப்படுத்திவிடுகிறது இதுக்கு ஆம்பிளக் கபோதிங்க பேச்சை ஒட்டுக் கேட்டாலே சில பல மேட்டர் தேறுமே என்று உங்களை மாதிரி நானும் கடுப்பாகிவிட்டேன்.

பி.கு- வழக்கம் போல் நடந்ததை மானே தேனே போட்டு ப்ளாகியிருக்கிறேன்

Wednesday, February 13, 2008

வாழ்க்கை கல்வி - 3

For previous Parts --> Part 1      Part 2

நம்ம ரேஞ்சுக்கு அந்த சமயத்தில் தமிழ் புத்தகங்கள் தான் கிடைத்தது. முதலில் இந்த மாதிரி புஸ்தகம் படித்த போது சிரிப்பு தாங்கமுடியமாட்டாமல் வந்தது. அதில் வரும் வர்ணனைகளும் டயலாக்குகளும் செம காமெடியாக இருக்கும். க்ரூப் ஸ்டடியில் மற்றவர்கள் சீரியசாக (இந்த புஸ்தகங்கள) படித்துக் கொண்டிருக்கும் போது நாம் மட்டும் கெக்க பிக்கவென்று சிரித்துக் கொண்டிருந்தோமேயானால், கபாலத்தை பிளந்து கைலாசத்தை காட்டிவிடுவார்கள், இன்ஸ்டன்ட் மோக்க்ஷம் தான். தமிழ் புஸ்தகங்களில் பாதிக்கு மேல் இங்கே நான் எழுதுவது மாதிரி நம்பமுடியாமல் இருக்கும். உதட்டை மடித்து கடித்துக் கொண்டு ஊரிலிருக்கும் எல்லோருக்கும் இருபத்திநாலு மணிநேரமும் இதான் ஜோலி என்பது போல் சித்தரித்திருப்பார்கள். மாமா, மச்சான், மதினி, கொளுந்தியா என்ற குடும்ப இணக்கங்கள் தவிர ஹெட்மாஸ்டர், பிச்சைக்காரி, வேலைக்காரி என்று வெரைட்டியும் காட்டியிருப்பார்கள். சினிமா கிசுகிசுக்கள் தூக்கி சாப்பிடும். "வி"ன்னா நடிகருக்கு மஞ்சள் கலர் ரொம்ப பிடிக்கும் அந்தக் கலரில் தான் உள்ளாடை அணிவார் என்பதை படித்து ரொம்ப நேரம் சிரித்திருக்கிறேன்.

கல்லூரி காலத்தில் இந்த மாதிரி புஸ்தகங்கள் படிப்பதற்கெல்லாம் ரொம்ப மெனெக்கடவேண்டாம். ஹாஸ்டல் பக்கம் போனால் போதும். மூலையில் தூசி படிந்திருக்கும் பெட்டியிலோ..மேலே லாஃப்டிலோ மூட்டை மூடையாக மலிந்து கிடக்கும். பொதுவாக அரட்டை அடிப்பதற்குத்தான் போவோம் என்பதால் குறைந்தது பத்துப் பன்னிரெண்டுபேராகத் தான் போவோம். குஷி கூரையைப் பிய்த்துக் கொண்டு போய்விட்டால் ரெண்டு மூனு பேர் இந்த் புஸ்தகத்தை எடுத்துக்கொண்டு என்னம்மோ ஷேக்ஸ்பியரின் மேக்பெத் நாடகம் மாதிரி டயலாக்குகளை உணர்ச்சிபிரவாகத்தோடு பேசி நடித்துக் காட்டுவார்கள். மற்றவர்கள் எல்லாரும் "சூப்பர்டா..."ன்னு விழுந்து விழுந்து சிரித்துவிட்டு நைசாக வீட்டுப்பாடத்திற்கு ஒரு புஸ்தகத்தை லவட்டி வந்துவிடுவோம்.

இந்த்க் காலக்கட்டத்தில் வழவழ பேப்பரில் முழுப் பக்கத்தில் வரும் வடநாட்டு, வெளிநாட்டு இலக்கியங்களெல்லாம் எட்டாக்கனி. "மெட்ராஸில் எங்க மாமா பையன் காட்டினான்டா கற்பூரம் ஏத்தி கண்ணுல ஒத்திகலாம் ஒவ்வொண்ணும் அவ்வளவு குவாலிட்டியா இருக்கு"ன்னு நானும் கச்சேரிக்குப் போனேன்னு சும்மானாச்சுக்கும் ஜம்பத்தோடு சரி ஒருத்தனும் பார்த்தே இல்லை. இதுவே இந்த பாடு என்றால் முழு நீல வண்ணப் படங்களைப் பற்றிக் கேட்கவேவேண்டாம். கிங்பெல் ஒருதரம் அவர்கள் வீட்டில் எல்லாரும் வெளியூருக்குப் போயிருந்தார்கள் என்று "டேய் இன்னிக்கி சாமி படம் பார்க்கலாமா ஆளுக்கு ஒரு ரூபா போட்டா போதும் இருபது இருபத்தி அஞ்சி பசங்க தேறினா போதும் குஜால்சா பார்க்கலாம்ன்னு" கல்லாபெட்டியை தேத்த ஆரம்பித்துவிட்டான். எனக்கு இந்த விஷயத்தை கேட்ட உடனேயே உண்மையான ஜுரம் வந்துவிட்டது. உத்தமனாக நடிக்கவில்லை உண்மையாக சொல்கிறேன். அந்த சமயத்தில் இதெல்லாம் ஊரில் ரொம்ப பெரிய விஷயம். மாட்டினால் வேற வினையே வேண்டாம். வீட்டிலிருந்து நாலு எட்டில் வந்துவிடுகிற இடத்தில் இந்தமாதிரி பக்திபடமெல்லாம் பார்க்க நெஞ்சில் மஞ்சாசோறு இல்லை. என்னம்மோ சொல்லி இதெல்லாம் எனக்கு ஆகாதுப்பான்னு நல்லவேளை வந்துவிட்டேன். கிங்பெல் சாமி படம் போடப் போகிறான் என்று ஊரெல்லாம் பசங்க நெட்வொர்க்கில் தெரிந்துவிட்டது. ராத்திரி பத்துமணிக்கு கிங்பெல் வீட்டுவாசலில் ஏக கூட்டம்...தோராயமாக ஒரு ஐம்பது பசங்கள் குமிந்துவிட்டார்கள். கிங்பெல் படமெல்லாம் இல்லை என்று சொல்லியும் ஒருத்தனும் நகருகிற வழியாய் இல்லை. கிங்பெல் வேறு வழியில்லாமல் ப்ளானை கேன்சல் செய்துவிட்டான். அடுத்த நாள் மாமாவிடம் சீனாதானா மாமா ஏகமாய் புலம்பிக்கொண்டிருந்தார். "கேட்டீரா ஓய்...சங்கண்ணா புள்ளை நேத்திக்கு ஆதுலயே அம்மணகுண்ஸ் படம் ஷோ காட்டறான்...ஊரோட தேரோட காலிப் பயல்கள் கூட்டம்...கேட்டா ரஜினி படம்ங்கிறான்...ஏன் விளக்குவைச்சோடனே போட்டா ரஜினி வரமாட்டாரா? ராத்திரி பதினோரு மணிக்கு என்ன ரஜினி படம் வேண்டியிருக்குன்னேன்??... சங்கண்ணா வரட்டும் வைச்சுக்கிறேன் பஞ்சாயத்த.." - எனக்கு அப்பாடா தப்பித்தோம் என்று இருநதது.

ஒரே ஒருதரம் என் பேஷன் குருவுடன் மெடிக்கல் காலேஜ் நண்பர்கள் ரூமிற்கு திருநெல்வேலிக்கு போயிருந்தேன். ஊருக்கு கிளம்புவதற்கு நேரமாகிவிட்டதால் ஐந்தே நிமிடங்கள் அங்கே இருந்தோம். அங்கே பசங்கள் ரூமில் யாரோ ரிப்பேர் செய்துகொண்டிருந்தது போல் ஒரு வீடியோ ப்ளேயர் ஸ்க்ரூவெல்லாம் கழட்டி கிடந்தது. விசாரித்ததில் அன்றைக்கு ரூமில் பக்தி பட ரிலீஸ். அந்த ஏரியாவில் பசங்கள் ஜாஸ்தி என்பதால் பக்தி பட புழக்கம் ஜாஸ்தி. போலிஸ் மாமூல் வேட்டைக்கு கரெண்ட்டை ஆஃப் செய்துவிட்டு கிள்ம்பிவருவார்கள் என்பதால் கரெண்ட் போனாலும் கேசட்டை உடனே வெளியே எடுப்பதற்கு தோதாக அப்பிடி கழட்டி வைத்திருந்தார்கள் என்று தகவல் சொன்னார்கள். நான் அதுவரை பக்தி படம் பார்ததில்லை என்பதால் கூட வந்த பேஷன் குருவுக்கு ஐந்து நிமிடமானாலும் பரவாயில்லை எனக்கு பக்தி சாம்ராஜ்ஜியத்தை அறிமுகம் செய்துவிடவேண்டும் என்று ஒரே ஆவல். அப்பிடியே அவனும் பார்த்துவிடலாம் என்று படத்தை பாஸ்ட் பார்வர்டில் ஓட விட்டான்.

பக்தி படத்தை முதன் முறையாக அதுவும் பாஸ்ட் பார்வெர்டில் பார்த்த போது எனக்கு சிரிப்பு தாங்கவில்லை. கூட இருந்த மற்ற பசங்களும் விழுந்து விழுந்து சிரிக்க...ஐந்தே நிமிடங்களில் ஞான உபதேசம் பெற்று ஊருக்கு கிளம்பினேன். அதற்கப்புறம் ரொம்ப்ப்ப்ப நாள் வேலைக்கு சேரும் வரை பக்தி பட சான்ஸே கிடைக்கவில்லை.

மேட்டர், மேற்படி என்று பலவிதத்திலும் வழங்கப்பட்டு வந்த இந்த விஷயம் நான் வேலைக்கு சேர்ந்த இடத்தில் "கஜா" என்று நாமகரணம் சூட்டப்பட்டு...டெக்ஸ்ட் கஜா, கஜா படம், கஜா மூவீஸ் என்று பல்வேறு அவதாரங்களில் கம்யூட்டர்களில் வலம் வந்து கொண்டிருந்தது. நான் வேலைக்கு சேர்ந்த டிப்பார்ட்மென்ட் காலேஜ் மாதிரி மிக ஜாலியாக இருக்கும். பசங்கள் எல்லாரும் சம வயதினர் என்பதால் கூத்துக்கு குறைவே இருக்காது. இந்த மாதிரி கஜா படங்கள் கம்யூட்டரில் ஓடும் போது யாராவது வந்துவிட்டால் உடனே மாற்றுவதற்கு ஒருத்தர் கஜா ஆப்ரேட்டர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். நான் வேலைக்கு சேரும் முன்னரே மாமா "வேலைக்குப் போற இடத்தில் பொறுப்பெல்லாம் கேட்டு வாங்கி தெரிஞ்சிக்கோ" என்று அட்வைஸ் செய்திருந்ததாலும், நான் சர்வரில் வேறு உட்கார்ந்து கொண்டிருந்ததாலும், சர்வரில் போட்டால் தான் பாஸ்டாக வரும் என்ற டெக்னிக்கல் ஸ்பெசிவிகேஷனினாலும் ட்ரெய்னீ கஜா ஆப்ரேட்டர் பொறுப்பு கூடிய சீக்கிரமே வந்தது. ஆனால் முதல் முறையே சத்திய சோதனையாக யாரோ வந்துவிட எனக்கு செல்வி சீரியல் லதா மாதிரி நெஞ்செல்லாம் ஒரே படபடவென்று வந்து பயத்தில் கையும் காலும் அப்பிடியே ஸ்தம்பித்து நின்று விட்டது. அப்புறம் கூட இருந்த சூப்பர்வைசர் கஜா ஆப்ரேட்டர் பொறுப்பெடுத்துக்கொண்டு நிலமையை அநாயசமாக சமாளித்துவிட்டார்.

இருந்தாலும் டிப்பார்ட்மென்டில் ஒரு சீனியர் சித்தப்பு என்னுடன் உட்கார்ந்து புரோகிராமை டீபக் செய்துகொண்டிருக்கும் போது எவனோ ஒரு கஜா கா தோஸ்த் அனுப்பிய "பிகினி சீரீஸ்" இமெயில் வந்து விட அவர் "என்னப்பா பிகினி சீரிஸ்லாம் வருது"ன்னு கேட்க...நான் முகத்தை ரொம்ப சீரியஸாக வைத்துக் கொண்டு பிகினினா என்னவென்றே தெரியாத மாதிரி கேட்க்...அவர் பேஜாராகிவிட நான் திரும்ப திரும்ப சந்தைக்குப் போனும் ஆத்தா வையும்ன்னு அடித்த கூத்துக்கள் மறக்க முடியாதவை.

இந்த மாதிரி விஷயத்தில் ஒருதரம் புஷ்பா தங்கத்துரை புஸ்தகத்துடன் மாட்டிக் கொண்ட போது "டேய் இதெல்லாம் படிக்கறது சரி வயசுக் கோளாறு ஆனா இதெல்லாம் தெரிஞ்சிக்கறதோட நிப்பாட்டிக்கோங்க...அதான் நல்லது" என்று கிங்பெல் அக்கா குடுத்த புத்திமதி எனக்கு மறக்கவே இல்லை. உதவியாகவும் இருந்தது. எனவே பக்த கோடிகளில்...வயசுப் பசங்கள் அல்லது பெண்கள் யாராவது இதை படித்துக்கொண்டிருந்தால் இந்த அட்வைஸையும் நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்...உங்களுக்கும் உபயோகமாக இருக்கும்.

(அப்பாடா மெசேஜ் சொல்லி முடிச்சாச்சு :)) )

- முற்றும்

Friday, February 01, 2008

வாழ்க்கை கல்வி - 2

For previous Parts --> Part 1

இந்த மாதிரி புஸ்தகங்களையெல்லாம் படிப்பது கெட்ட காரியம், மோசமான பையன்கள் தான் இதெல்லாம் படிப்பார்கள் என்று நம்மையும் கெட்ட பையனாக நினைத்துவிடுவார்களோ என்று வெளியே மூச்சே விடவில்லை. அந்த முதல் புஸ்தகத்துக்குப் பிறகு அப்புறம் கொஞ்ச நாளைக்கு வேறு கிடைக்கவும் இல்லை, மெனக்கடவும் இல்லை. ஸ்கூல் செட்டில் ஓவர் புத்திசாலியுமில்லாமல், ஓவர் மக்குமில்லாமல் எதோ முதல் ஆறு/ஏழு ரேங்கிற்குள் வாங்கிக் கொண்டிருந்தேன். இந்த முதல் ஆறு/ஏழு ரேங்க் குரங்குகளும் அப்பப்போ க்ரூப் ஸ்டடி பண்ணுவோம். இதில் இரண்டு வானரங்கள் மட்டும் அடிக்கடி மேத்ஸ் கெமிஸ்ட்ரீ என்று டைம்டேபிள் போட்டு படிப்பார்கள். ஒருவர் வீடு மாற்றி ஒருவர் வீட்டில் ஓவர் நைட் ஸ்டடியெல்லாம் வேறு உண்டு.

வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி என்னை ராத்திரி எல்லாம் வெளியே தங்க மாமா சம்மதிக்கமாட்டார். "நான் என்ன சின்னப் பையனா...அந்த பசங்களெல்லாம் க்ரூப் ஸ்டடி பண்ணி ஸ்டேட் பர்ஸ்ட் வந்துவிடுவார்கள் நான் மட்டும் இதே ஏழாவது ரேங்க்லயே இருக்கப் போறென்னு"ன்னு மாமியிடம் போய் ஒப்பாரி வைத்ததில் க்ரூப் ஸ்டடி பண்ண எனக்கும் ஒரு நாள் ரெக்கமண்டேஷனில் பெர்மிஷன் கிடைத்தது.

பொதுவாக க்ரூப் ஸ்டடி ராத்திரி ஒன்பது ஒன்பதரைக்கு ஆரம்பிக்கும். முதலில் தனித்தனியாக உட்கார்ந்து படிக்க ஆரம்பிப்போம். சரியாக பதினைந்து நிமிடங்களில் யாருக்காவது ஒருதனுக்கு "இது புரியவே இல்லைடா"ன்னு சந்தேகம் வரும். சந்தேகத்தை தீர்த்துவைக்கும் பொறுப்பை மேற்கொள்ளும் மற்றொருவன் "இப்படித் தான்டா அன்னிக்கி நான் வீட்டுல படிச்சிண்டு இருக்கும் போது"ன்னு ஆரம்பித்து சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்த போது என்ன நடந்ததுன்னு உபகதை ஒன்னு சொல்லி முடிக்கும் போது புஸ்தகத்தை மூடிவைத்துவிட்டு மற்ற ரெண்டு பேரும் எதிர்கதை சொல்வதற்கு தயாராக இருப்பார்கள். அப்புறம் ஒரு ஒரு மணிநேரத்தில் ப்ளாஸ்கிலிருந்து டீ குடித்துவிட்டு படிப்பைத் தவிர மத்த கதையெல்லாம் திரும்பவும் பேசுவோம். பண்ணிரெண்டு மணிக்கு "நாம படிக்கவே இல்லைடா"ன்னு உதறும். அதிகாலைல படிக்கிறது தான் என்னிக்கும் நியாபகம் இருக்கும்ன்னு யாரோட பாட்டியாவது சொல்லியிருப்பார்கள். அதை மேற்கோள் காட்டிவிட்டு இன்னும் இரண்டு மணி நேரத்துக்கு அரட்டையைப் போட்டுவிட்டு பிறகு தூங்கி அதிகாலை ஏழுமணிக்கு எழுந்து ஒரு அரைமணிநேரம் புஸ்தகத்தை புரட்டி விட்டு பரீட்சைக்குப் போனால் ராத்திரி பேசினதெல்லாம் கரெக்டாக நியாபகம் இருக்கும்.

இந்த க்ரூப் ஸ்டடியும் அதை மாதிரி தான் என்று போனால் மற்ற இரண்டு பேரும் ஒன்பதரை மணிக்கே சீரீயஸாகப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். என்னடா நாம க்ரூப் ஸ்டடி பண்ணலாம்ன்னு வந்தா இவனுங்க நிஜ ஸ்டடி பண்றாங்களேன்னு எனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. அப்புறம் கூர்ந்து பார்த்தால் பெரிய சைஸில் இருக்கும் பாட்டனி ரெக்கார்ட் நோட்டை வைத்துப் படித்துக்கொண்டிருக்கிறாகள். "டேய் பாட்டனி நோட்ட வைச்சிக்கிட்டு என்னடா படிக்கிறீங்கன்னு பிடுங்கிப் பார்த்தால்...பருவமலர் மட்டுமே உலகமில்லை என்று சிரித்துக்கொண்டே மருதத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

"இதெல்லாம் தப்பே இல்லை...கண்டதைப் படிப்பவன் பண்டிதனாவான்னு பெரியவங்களே பழமொழி சொல்லிருக்காங்க...நாமெல்லாம் ட்ரெய்னீ பண்டிதர்கள்" என்று சமாதானமெல்லம் கரைபுரண்டு ஓடியது. இப்படியே பேசிக் கொண்டிருந்தால் படிக்க முடியாது "படிக்கும் போது கவனம் வேண்டும்" என்று மீண்டும் பாட்டி சொன்னதை மேற்கோள் காட்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அன்றைக்கு க்ரூப் ஸ்டடி ஏகத்துக்கு சக்சஸ்.

பருவ மலருக்கும், மருதத்துக்கும் பெரிய வித்தயாசம் ஒன்றுமில்லை என்றாலும் மருதத்தை ரெக்கார்ட் நோட்டில் பிரவுண் அட்டைக்குள் ஈ.ஸியாக ஒளித்து வைக்கமுடிந்தது. மருதம் புஸ்தகத்தை மணி அண்ணாச்சி முக்கு கடையில் வெத்தலை வாங்கும் போது பார்த்திருக்கிறேன். மணி அண்ணாச்சி கடையில் மட்டும் தான் 25 பைசாக்கு வாங்கினால் நிறைய வெத்தலை தருவார் என்று மாமி அங்கு தான் என்னை வெத்தலை வாங்கிவரச் சொல்லுவார். அண்ணாச்சி கொடுவா மீசையும் குங்குமப் பொட்டுமாய் பயங்கரமாய் இருப்பார். "மருதம்" புஸ்தகத்தை வெறும் பெயர் மட்டும் தெரியுமாறு கயிற்றில் தொங்கவிட்டிருப்பார். அதற்கு மேல் ஞானபூமி மறைத்தவாறு தொங்கிக்கொண்டிருக்கும். அதனால் மருதமும் "வானாகி...மண்ணாகி...எம்பெருமான்" வகையறா என்று அதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஊரில் எல்லாரையும் எல்லாருக்கும் தெரியுமாகையால் இந்த மாதிரி புஸ்தமெல்லாம் ஊரில் வாங்க சான்ஸே இல்லை. திருநெல்வேலியில் பஸ்டாண்டு பக்க கடையிலிருந்து ஒருத்தனுடைய கசின் மூலம் புத்தகம் கிடைத்திருந்தது. அடுத்த முறை குரூப் ஸ்டடி கூடிய போது எத்தனை நாள் தான் ஒரே புத்தகத்தை ரிவிஷன் செய்வது என்று பசங்களுக்கு எரிச்சல் மண்டிப்போயிருந்தது. நான் வேறு அண்ணாச்சி கடையில் கிடைக்கும் என்று வேறு சொல்லிவிட்டேனா...பசங்களுக்கு முழு பண்டிதர்களாவதற்க்கு ஆர்வம் ஏகத்துக்கும் கூடியிருந்தது.

அப்பிடி இப்படின்னு இரண்டு ரூபாயைத் தேத்தி புஸ்தகம் வாங்கலாம்ன்னு கிளம்பியாயிற்று. "அவனே நீ போய் வாங்கு, இவனே நீ போய் வாங்கு" என்று குழப்பம் முந்தின தெருவிலேயே ஆரம்பித்துவிட்டது. "நீ தான் அந்தக் கடையில புஸ்தகத்த பார்த்திருக்க..உனக்கு தான் அது எங்க இருக்குன்னு தெரியும்" என்று எனக்கு மரியாதை செய்ய ஆரம்பித்தார்கள். "ஐய்யைய்யோ... மணி அண்ணாச்சிக்கு மாமவை ரொம்ப பழக்கம்...கையப் பிடித்து தரதரன்னு இழுத்துண்டு போய் மாமா முன்னாடி நிப்பாட்டிவிட்டுவார். இந்த புஸ்தகம் படிக்கறதுக்கெல்லாம் எங்க மாமா தொட்டனைத்தூறும் மணற்கேணி மேற்கோள் காட்டமாட்டார்..விளக்குமாத்தை எடுத்து காட்டு காட்டுன்னு காட்டிருவார்...அப்புறம் க்ரூப் ஸ்டடிக்கு என்னால் ஜென்மத்துக்கும் வரவே முடியாது" என்று என்க்கு ஜுரமே வந்துவிட்டது.

"ஹை..இவரு க்ரூப் ஸ்டடிக்கு வருவாராம்...நாங்க புஸ்தகம் வங்கி ரெடியா வைச்சிருக்கனுமாம் ஐய்யா நோகாம நொங்கெடுப்பாராம்..."

"ஏண்டா நாங்க மாட்டினா எங்க வீட்டுல மட்டும் என்ன ஆரத்தியா எடுப்பாங்க? எங்கவிட்டுலயும் செருப்பு தான் எடுப்பாங்க...அப்போ நாங்க மாட்டினா மட்டும் பரவாயில்லையா?"

"இதெல்லாம் சரிப்பட்டு வராது, சரிடா நாங்களே வாங்கிக்கறோம்...நீ அப்படியே வீட்டுக்கு ஓடிப்போயிடு...மவனே திரும்ப க்ரூப்ஸ்டடிக்கு வந்த... மாமா இவன் மருதத்த மாங்கு மாங்குன்னு படிக்கிறன்ன்னு உங்க மாமா கிட்ட நாங்களே போட்டுக்கொடுத்துருவோம்"

"ரீடிங் மேக்ஸ் அ ஃபுல் மேன்"ன்னு சர் ப்ரான்சிஸ் பேகான் சும்மாவா சொல்லியிருக்கார்? இவர்கள் அடித்த வேப்பிலையும், இலக்கிய தாகமும் மணி அண்ணாச்சி கடையில் ரிஸ்க் எடுக்கலாமோ என்று யோசிக்கவைத்தது.

அன்றைக்கு கரெக்டாக கடையில் மணி அண்ணாச்சி இல்லை. அவருடைய சின்னப் பையன் தான் நின்று கொண்டிருந்தான். அண்ணாச்சி சாப்பிட போகும் போது,சூச்சா போகும் போது, என்று அண்ணாச்சி இல்லாத சமயமெல்லாம் அவன் தான் கடையில் பிசினெஸ் கன்டினியுட்டி பார்த்துக்கொள்வான். அவனுக்கு எங்க மாமாவைத் தெரியாது என்பதால் எனக்கு தைரியம் பிறந்தது.

"டேய் உங்க புத்திய காட்ட்டீங்கல்ல...நம்ம பிரண்ட்ஷிபையே துச்சமா மதிச்சிட்டீங்கல்ல...காசக் குடுங்கடா..எத்தன புஸ்தகம் வேணும் உங்களுக்கு.. எது வேணும் மருதமா பாலையா நெய்தலா...துணிஞ்சவனுக்கு தூக்குமேடையும் பஞ்சு மெத்தை.."ன்னு கிடச்ச சான்ஸை விடாமல் வீரவசனம் பேசிவிட்டு இரண்டு ரூபாய் சில்லறையை அள்ளிக் கொண்டு கிளம்பினேன். "டேய் நான் வாங்கும் போது ஒருவேளை அண்ணாச்சியோ மாமாவோ அந்தப் பக்கம் வந்துட்டா...." என்று இவா ஊதினா அவா வருவா ஏற்பாடுகள் ஏற்பாடாகியிருந்தது.

மனசுக்குள் உதறல் பலமாக இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல், கடையிலிருந்த பையனிடம் புஸ்தகம் இருந்த திசையைக் காட்டி அத எடுப்பான்னு சொல்ல, பையன் பண்ணிய காரியம் என்னை தூக்கிவாரிப் போட்டது. வாழ்நாளில் மறக்கமுடியாதது. கடையில் இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த அண்ணாச்சி கீழே தரையில் சட்டப்பரக்க உட்கார்ந்து கொண்டு சோத்துச் சட்டியில் சாப்பாடு சாபிட்டுக்கொண்டிருந்தார். பையன் நான் குத்துமதிப்பாக காட்டிய புஸ்தக வரிசையை எட்டுவதற்காக அப்பாவை நகர்ந்துகொள்ள கூப்பிட்டே....விட்டான்.

நல்லவேளை அண்ணாச்சி புரியாம்ல் "என்னப்பா என்ன கேக்கிறாங்க"ன்னு எச்சிக்கையோடு யார் வந்திருக்கார்கள் என்று பார்க்க எழுந்திருக்க எனக்கு சப்த நாடியும் அடங்கிவிட்டது.

"ஓ தம்பியா...என்ன தம்பி வேணும்?..வழக்கம் போல வெத்தலையா?.."ன்னு அண்ணாச்சி கேட்ட போது என்னையுமறியாமல் தலையாட்டி, நாலணாவை குடுத்துவிட்டு பையன் குடுத்த வைத்தலையை வாங்கிக்கொண்டு விட்டால் போதும் என்று ஓடியே வந்து விட்டேன்.

மருதம் புஸ்தகம் வரும் என்று தெரு முக்கில் இருட்டில் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு தேவுடு காத்துக்கொண்டிருந்த இரண்டு வானர நண்பர்களுக்கும் நான் வெத்தலையை வாங்கிக் கொண்டு வந்தது ரசிக்கவில்லை.

"டேய் அறிவுகெட்ட கபோதி...நீ என்ன வாங்கப் போன..என்ன வாங்கிட்டு வந்து நிக்கற? அண்ணாச்சி இருந்தா என்னடா...என்னம்மோ துணிஞ்சவனுக்கு... குனிஞ்சவனுக்குன்னு வீர வசனமெல்லாம் பேசின? உன்னால முடியாதுன்னா முதல்லயே சொல்லி இருக்கலாம்ல...படிக்கனும்ன்னு இலக்கிய தாகம் இருந்தா மட்டும் போதாதுடா..தில்லு வேணும்..."

"டேய் அண்ணாச்சி இன்னிக்கு பெரிய குங்குமப் பொட்டு வைச்சிக்கிட்டு அய்யனார் மாதிரி பயங்கரமா இருந்தார்டா...எனக்கு உதறல் எடுத்திரிச்சி அதான் சொதப்பிட்டேன்.." என்னுடைய விளக்கமெல்லாம் அங்கு எடுபடவே இல்லை.

"போடா பரதேசி...உன்னால இருபத்தைஞ்சு பைசா நஷ்டம்..என்னம்மோ இங்க யாருக்கோ சீமந்தம் மாதிரி வெத்தலைபாக்கு வாங்கிட்டு வந்து நிக்கிறான்...போடா ..போய் வீடு வீடா கதவ தட்டி குடுத்துட்டு வா..." ரொமப நேரம் ஆயிற்று அவர்கள் கோபம் அடங்க.

அப்புறம் இதைச் சொல்லி சொல்லி கொஞ்ச நாளுக்கு வெறுப்பேத்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்கப்புறம் புஸ்தகம் வாங்கிக் கொண்டு வரும் பொறுப்பு மட்டும் எனக்கு வரவே இல்லை.

-தொடரும்