Wednesday, August 30, 2006

பம்பாய்

பம்பாய் என்றால் எனக்கு காலேஜ் படிக்கும் காலத்தில் மனீஷா கொய்ராலா தான் நியாபகத்துக்கு வருவார். அப்புறம் ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வந்ததபோது (பம்பாயை) பயம், ஆச்சரியம், திகைப்பு, குதூகலம் எல்லாம் கலந்த கலவையான உணர்ச்சி தான் வந்தது. பம்பாய் இன்னமும் அதே மாயா லோகமாகத் தான் இருக்கிறது. நம் ஊர்களில் கக்கூஸ் கட்டக் கூட போதுமா என்று யோசிக்கும் இடத்தில், அட்டாச்ட் பாத்ரூமுடன் ஹால் கட்டி குடித்தனம் போய், கையை தட்டிக்கொண்டு பஜனை செய்து தீபாராதனை காட்டி பிரசாதம் குடுக்கிறார்கள். என்ன தான் விண்ணை முட்டும் கட்டிடங்கள், சிக்கனமாக உடையணிந்த பெண்கள், சீட்டுக் கட்டு மாதிரி பணம் புரளும் இடமாயிருந்தாலும் ஓரமாய் சாக்கடையும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

பம்பாய் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாய் இருக்கிறது. பள பளவென்று எந்த நாட்டிலும் பார்க்காத சர்வீஸுட்ன் பட்டயக் கிளப்புகிறார்கள். இமிகிரேஷன் கவுண்டரில் நிற்கும் போதே எங்கேயிருக்கிறது என்று தெரியாத கேமிராவால் படம் பிடித்துவிடுகிறார்கள். எனக்கு பயங்கர பெருமிதம். பின்னால் நின்று கொண்டிருந்த வெள்ளக்கார மொட்டைய தலையில் தட்டி "டேய் மொட்டை பார்த்தியா எங்க ஊர?" என்று சொல்லவேண்டும் போல இருந்தது. "சூப்பர் சர்வீஸ்..கலக்குறீங்க " என்று ஆபிஸர்களிடம் பாராட்டிவிட்டு வந்தேன்.

தங்கமணி முன்னால் ஆட்டோகாரரிடம் தெரிந்த அரைகுறை ஹிந்தியை வைத்துக் கொண்டு பந்தா விட்டதில் கடுப்பாகிவிட்டார் மனுஷன். கடைசியில் எவ்வளவாச்சு என்று சூப்பர் பந்தாவாக கேட்க இருபத்தெட்டு ரூபாய்க்கு ஹிந்தியில் ஏதோ சொன்னார். எனக்கு படிக்கும் போது ஹிந்தி மாமி சொல்லிக்கொடுத்ததெல்லாம் மறந்து போய், மாதுரி தீட்ஷித் "ஏக் தோ தீன்" பாட்டில் சொல்லிக்கொடுத்த பதிமூன்று வரை தான் மண்டையில் நின்றது. அப்புறம் கேவலமாக சமாளித்து அதுவும் வழக்கம் போல் ப்ளாப் ஆகி ஹிந்தியில் "அற்பப் பதரே" எப்படி சொல்வாரகள் என்று தெரிந்து கொண்டுவந்தேன்.

அக்கா பையன் "ஞாயிற்றுக் கிழமைகளில் ட்ரெயினில் கூட்டமே இருக்காது படுத்துக் கொண்டு போகலாம்" என்று சொன்னதை நம்பி ஏமாந்து எலெக்ட்ரிக் ட்ரெயினில் சி.எஸ்.டி போய் ரோட்டுக் கடைகளைப் பார்த்து வந்தேன். ட்ரெயினில் வடநாட்டு கதாநாயகி மாதிரி என்னை கசக்கி பிழிந்துவிட்டார்கள். அரைகுறை ஹிந்தியில் ரோட்டோர டி.வி.டி கடைகளில் வாங்கிய அனுபவம் அலாதியானது. முக்கால் வாசி கடையில் பர்மா பஜார் மாதிரி 'அத வாங்கிக்கோ இத வாங்கிக்கோ என்று ஒரே படுத்தல். ஒரு கடையில் மிக்கி மவுஸ் கலெக்க்ஷனை வாங்கி செல்லும் படி ரொம்பப் படுத்த "இந்தக் கலெக்க்ஷன் எங்க வீட்டுல நிறைய இருக்கு " என்று அக்கா பையன் அழகாக சமாளித்துவிட்டான். நான் தான் கற்பூரமாச்சே உடனே அதே டெக்னிக்கைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன். ஆனால் நமக்கு என்று வந்து சேர்வார்களே..அடுத்த கடையில் ஒரு மூதேவி என்னைப் பார்த்து என்ன நினைத்தானோ தெரியவில்லை குசுகுசுவென்று அதுவேண்டுமா இது வேண்டுமா என்று புரியாத ஸ்லாங்கில் கேட்டான். நானும் மிக்கி மவுஸ் தான் என்று நினைத்துக் கொண்டு வழக்கம் போல "அந்த கலெக்க்ஷன் எல்லாம் நிறைய இருக்குப்பா..பார்த்துப் பார்த்து போர் அடிச்சாச்சு" என்று மானே தேனே போட்டு சொல்ல...கடைக்காரனும் அக்கா பையனும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த மூதேவி உடையில்லாமல் நடிக்கும் முழு நீல வண்ணப்படம் வேண்டுமா என்று கேட்டானாம். "போங்கடா நீங்களும் உங்க ஹிந்தியும்" என்று வந்துவிடேன்.

பாவ் பாஜி, பேல் பூரி, ரகடா பேட்டிஸ், சிக்கு மில்க் ஷேக் என்று சகட்டு மேனிக்கு அடித்து நொறுக்கியதில் கார்க் புடுங்கிக் கொள்ளும் படலம் பம்பாயிலிருந்து ஆரம்பித்தது. மழைவேறு. பம்பாயே மிதக்கிற மாதிரி இருந்தது. அதிலும் "சலோ பாய், சலோ பாய்" என்று மும்பைகர்கள் ஓடத் தான் செய்கிறார்கள். வேகமாக ஹிந்தி பேசுகிறார்கள். "ஹிந்தி தெரியாது" என்றால் இன்னும் அதிவேகமாக ஹிந்தியில் பேசுகிறார்கள். பம்பாயில் விலைவாசி எகிறிவிட்டது என்று தோன்றியது. ஹோட்டலில் முப்பது ரூபாய்க்கு வாழ்நாளில் இதுவரை குடித்திராத அருமையான டீ கொடுத்தார்கள்.

வரும் போது இரண்டு நாள் ஹோட்டல் வாசம். வேளா வேளைக்கு ஏசியைப் போட்டுக்கொண்டு தூங்குவது. சாப்பாடு, டிபன் என்று மெனுவைப் பார்த்து ஆர்டர் செய்வது. இருக்கிற இடத்தை விட்டு நகராமல் சாப்பிடுவது, போர் அடித்தால் ஊர் சுற்றுவது என்று திவ்யமாக நேரம் போனதே தெரியவில்லை. வழக்கமாய் அங்காலாய்க்கும் "பேசாமல் நல்ல ஏரோப்பிளேன் கம்பெனி முதலாளி பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கொண்டிருக்கலாம்" என்ற டயலாக்கில் ஏரோப்பிளேன் காரனை தூக்கி விட்டு ஹோட்டல்காரன் பொண்ணுக்கு மாறிவிட்டேன். தங்கமணியும் " கடவுளே அடுத்த ஜென்மத்தில் ஏரோப்ப்ளேன்காரன் பொண்ணா மட்டும் பிறக்கக் கூடாது" என்ற டயலாக்கை ஹோட்டல்காரனுக்கு மாற்றிவிட்டார்.

Saturday, August 26, 2006

ஆவணி அவிட்டம்

ஒரு நல்லவன் உலக அமைதிக்காக சாமிய வேண்டி உண்மையா தவமிருந்தா, "ஓவர் சீன் உடம்புக்கு ஆகாது"ன்னு கண்ட கண்ட ஆங்கிள்ல படம் எடுத்து பெயரக் கெடுக்கிறதுன்னா இது தான். படம் எடுத்தவர் யாருன்னு சொல்லவேண்டியதில்லை திருமதி.டுபுக்கு (ஹூம் நமக்கு எதிரி வீட்டுக்கு வெளியிலயா இருக்கப்போறாங்க)

Wednesday, August 23, 2006

குக்புடு

என்னைப் பொறுத்தவரையில் வெள்ளைக்காரன் விடுமுறைக்கு போவதற்கும் நாம் போவதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. வெள்ளைக்காரன் ரெஸ்ட் எடுக்க விடுமுறைக்குப் போவான். நாம் விடுமுறைக்குப் போயிட்டு வந்தா ரெஸ்ட் எடுக்கவேண்டும். இந்தியா ட்ரிப் அவ்வளவு அலைச்சல். தொடர்ந்து ரெண்டு நாள் அந்த கால ஜெயமாலினி குலுக்கு டான்ஸ் ஆடிய மாதிரி உடம்பெல்லாம் வலி பின்னுகிறது. இந்த தீவிரவாத மூதேவிகள் புண்ணியத்தில் ஏர்போர்ட்டில் நோண்டி நொங்கெடுத்துவிட்டார்கள். உள்ளூர் ஏர் டெக்கானில், நேரம் காலம் தெரியாமல் மாமியார் வீட்டிலிருந்து வந்திருந்த ரசப் பொடி இருந்த ஒரு கைப்பையை செக்கின் செய்யாமல் கையிலெடுத்துக் கொண்டு சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. மாமியார் வீட்டிலிருந்து செய்துகொடுத்த பொடியை, கண்ணில் போட்டு ப்ளேனை கடத்துவது மாதிரியான அல்ப விஷயங்களுக்கெல்லாம் வேஸ்ட் செய்தால் வீட்டில் தீவிரவாதி ஆகி என்னைத் தொலைத்துவிடுவார்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

குழந்தைக்கு வைத்திருந்த பாலைக் கூட குடித்துக் காட்டச் சொல்லுகிறார்கள். ஏற்கனவே பால் குடிக்கப் படுத்தும் என் இரண்டாவது பெண் அந்த நேரத்துக்கு பால் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க கடைசியில் நானே பாட்டிலை லேசாக வாயில் வைத்துக் குடித்துக் காட்டினேன். நான் குடிக்கும் நேரம் பார்த்து வந்து சேர்ந்த இன்னொரு பெண் "இன்னுமா நீ பாட்டில் பால் குடிக்கிற?" என்கிற ரீதியில் என்னைப் பார்த்து சிரிக்க..எல்லாம் இந்த தீவிரவாத மூதேவிகளை சொல்லனும்.

இந்த முறை குழந்தைகளுக்கு உடம்புக்கு எதுவும் வராதது ரொம்ப ஆறுதலாக இருந்தது. எனக்குத் தான் வழக்கம் போல் கார்க் புடுங்கிக் கொள்ள..இருந்தாலும் இன்டேக்கை குறைக்காமல் சாப்பிட்டதில் மார்க்கண்டேயன் மாதிரி கூடாமல் குறையாமல் இருந்த வெயிட் நான்கு கிலோ ஏறியிருக்கிறது. இம்சை அரசன் பார்க்க சென்று குழந்தைகளுக்கு தியேட்டர்களை அறிமுகம் செய்தோம். எங்க ஊர் தியேட்டர்களில் இன்னமும் முக்கியமான காட்சிகளுகு சிவப்பு மற்றும் நீலத்தில் விளக்குகள் போட்டு ஸ்பெஷல் எபெக்ட் குடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் இன்னமும் செவிப்பறை கிழியும் அளவிற்கு வால்யூம். பாட்டு வந்தால் இன்னமும் கூடுகிறது. இந்த வால்யூமிலும் முன்னாடி இருந்தவர் எப்படி தூங்கினார் என்று ஆச்சரியமாக இருந்தது.

இந்த முறை சென்னை வழியாக இல்லாமல் பம்பாய், திருவனந்தபுரம் மார்க்கம். பம்பாய் அனுபவங்கள், மலையாளக் கரையோரம், நெல்லை சந்திப்பு, பகிர்ந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.சரி சரி எல்லாவற்றையும் ஒரே போஸ்டில் போட்டு முடித்துவிட முடியுமா? பாஸ்டன் பாலா மாதிரி இல்லாட்டியும் ஒரு ரெண்டு போஸ்டாவது படத்தோடு போடவேண்டாமா. மெயில் வேறு குமிந்து கிடக்கிறது. இன்னமும் க்ளியர் செய்து முடிக்கவில்லை. வழக்கமாக காத்துக்கொண்டிருக்கும் அகர்வால் பெண்கள் தவிர இப்பொது ஜெயின், மற்றும் பஞ்சாபி பெண்களும் கல்யாணத்துக்கு மெயிலில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஷாதி க்ரூப் இமெயில் தொல்லை தாங்க முடியவில்லை. தங்கமணி பார்ப்பதற்கு முன்னால் க்ளியர் செய்து விட்டு வருகிறேன். மீதி அடுத்த பதிவில்...:)