Wednesday, July 26, 2006

Help

Please pardon me for this english post. The tamil converters are not working here in this internet cafe. I need some urgent help from people who have acquaintances in San Diago, USA. I need some information. Thanks in advance.

- Dubukku
well and sound from Nellai :)

Tuesday, July 18, 2006

லீவு

நெல்லை செல்ல இருப்பதால் ஒரு மாதத்திற்கு என் தொல்லையிலிருந்து உங்களுக்கெல்லாம் லீவு. இந்தியாவிலிருந்து மீண்டும் ஆகஸ்டு 21ம் திரும்ப வருவேன். அதுவரை இந்த ப்ளாகை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

தேன்கூட்டில் ஓட்டுப்போடுங்கள் என்று என்னுடைய இந்த மாசக் கழுத்தறுப்பு இருக்காது. என்னுடைய ஓட்டையே என்னால் போடமுடியுமா என்று தெரியவில்லை. அனேகமாக முடியாது என்று தான் நினைக்கிறேன். அடுத்தமாத போட்டியிலும் கலந்துகொள்ள முடியாது. அப்புறம் உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள். மீண்டும் அடுத்த மாதம் சந்திப்போம். வணக்கம்.

Thursday, July 13, 2006

The Ring



விடலைப் பருவத்திலிருந்தே திகில்/ பேய்ப் படங்களை பார்ப்பது ரொம்பவும் பிடிக்கும். “பாதி ராத்திரி எக்ஸாசிர்ஸ்ட தனியா பார்த்தோம்ல” என்று பந்தா விட்டுக்கொள்வது படத்தை விட த்ரில்லாக இருக்கும். சமீபத்தில் தி ரிங்க் படத்தின் மேலோட்டமான கதையை கேள்விப் பட்டதிலிருந்தே இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும் என்று ரொம்பவும் ஆர்வமாக இருந்தேன். வீடியோ லைப்ரரியில் டி.வி.டியைப் பார்த்ததும் லபக்கென்று கவ்வி விட்டேன்.

இந்த மாதிரி ஆர்வமான படங்களைப் பார்ப்பதற்கு மனைவி குழந்தைகளை தாஜா காட்டி பேக்கப் செய்துவிட்டு தனியாளாக டுபுக்கு தியேட்டரில் படத்தை ஓடவிடுவது வழக்கம். இந்த படத்துக்கு தாஜா செய்வது அவ்வளவு கஷ்டமாக இல்லை. "பயமா எனக்கா...இந்த ரெண்டு மணி நேர படத்துக்கா?...இங்க நான் குடித்தனமே நடத்திகிட்டு இருக்கேன்.." என்று க்ளீனாக சமாளித்துவிட்டதாக நினைத்துக் கொண்டே மாடிக்குப் போய்விட்டார்கள். சரவுண்ட் சவுண்டெல்லாம் கும்முன்னு ஏத்தி ராத்திரி பதினோரு மணிக்கு ஆரம்பித்தாகிவிட்டது. படத்தின் கரு என்னவென்றால் இரண்டு நிமிடம் ஓடும் ஒரு வீடியோ கேஸட்டைப் பார்த்து முடித்தவுடன், பார்த்தவர்களுக்கு ஒரு போன் வருகிறது. அதில் ஒரு பெண் குரல் "இன்னும் ஒரு வாரம்" என்று டைம் குடுக்கிறது. கரெக்டாக ஒரு வாரத்தில் அவர்கள் (விகாரமாக) இறந்துவிடுகிறார்கள். படத்தின் கதாநாகியின் சொந்தக்கார பெண் இறந்துவிட, அதை துப்பறிகிறேன் பேர்வழி என்று அவரும் அவர் பையனும் பார்த்துவிடுகிறார்கள். அதில் ஆரம்பிகிறது வினை. அது ஏன், எப்படி, நடக்கிறது கதாநாயகி எப்படி தப்புகிறாள் என்பது தான் கதை.

கிங்காங்கில் கொரில்லாவுடன் லவ்ஸ் விட்ட நவோமி தான் கதாநாயகி. படம் நன்றாக எடுத்திருக்கிறார்கள். திகில் ரேட்டிங்கில் ஓகேக்கு அடுத்த மேல் ரகம். வழக்கமாக பேய்ப் படங்களில் வரும் ரத்தம், விகாரமாக சிதைந்த முகம் இதையெல்லாம் மட்டும் நம்பாமல் கதையில் "பேய் வருது பேய் வருது" என்று பீதியைக் கிளப்பி, நம்மை திகிலைடைய வைத்திருக்கிறார்கள். கதாநாயகியும் , அவர் பையனும் எப்படி தப்புகிறார்கள் என்ற முடிவு ஹாலிவுட் ரகம். ஆனால் அதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது. அப்படி என்ன அந்த வீடியோ டேப்பில் இருக்கு என்று ஆர்வம் கொப்பளிக்க, படத்தில் முதல் முக்கால் மணி நேரத்திலேயே காட்டி விடுகிறார்கள். கரெக்டாக அதைப் பார்த்து முடித்ததும் எதற்கும் இருக்கட்டும் என்று நான் எங்கள் வீட்டுப் தொலைபேசியை ஆஃப் செய்துவிட்டேன். இருந்தாலும் அடுத்த வீட்டில் இருக்கும் அம்மணி பாதி ராத்திரிக்கு மேல் பெருச்சாளி குடைவது மாதிரி குடைந்து பாத்திரங்களை தட தட வென்று கீழே போட்டு அவர் பங்குக்கு ஸ்பெஷல் எஃபெக்ட் குடுதத போது சரவுண்ட் சவுண்டை ஆஃப் செய்துவிட்டேன்.

பொதுவாக பேய்ப் படங்களில் பேயைக் காட்டும் வரை தான் பேச்சுலர் மாதிரி பயமாக இருக்கும். அப்புறம் பழகிவிடும். அதனால் தானோ என்னவோ இந்தப் படத்தில் கடைசியில் தான் பேயைக் காட்டுகிறார்கள். படத்தில் "ரிங்" என்றால் என்ன என்பதில் முக்கியமான கதை முடிச்சை வைத்திருக்கிறார்கள்.(ஆனால் இந்த ரிங் மேட்டரில் கொஞ்சம் டெக்னிக்கல் ஓட்டை இருக்கிறது. படம் பார்த்துவிட்டு ஐஎம்டிபியில் போய் பார்த்தீர்களானால் நான் சொல்லுவது புரியும். எதற்கு சஸ்பென்ஸை உடைப்பானேன்?)

திகில் படங்களில் பின்ணனி இசைக்கு முக்கிய பங்கு உண்டு. இந்தப் படத்தில் அது ஓ.கே ரகம் தான். இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோ என்று தோன்றியது. திரைக்கதை நன்றாக இருந்தது. முன்னர் சொன்னமாதிரி சஸ்பென்ஸை மெதுவாக உடைத்து நம்மையும் ஆர்வத்தோடு எதிர்பார்க்க வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தப் பேய் எதற்காக இவ்வாறு செய்கிறது என்பதையெல்லாம் விளக்கவில்லை. ரிங் 2வில் சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இப்பொது ரிங் 2 வைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது முதல் படம் மாதிரி அவ்வளவு நன்றாக இல்லை என்று கேள்விப்பட்டேன். வேறு உங்களுக்குப் பிடித்த நல்ல பேய்/திகில் படங்கள் இருந்தாலும் பின்னூட்டத்தில் சொல்லுஙகளேன். தேர்ந்தெடுத்துப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும். நன்றி.

Sunday, July 09, 2006

சாமியாண்டி

"வா சாமியாண்டி, அய்யா உன்னையத் தான் காலையிலேர்ந்து கேட்டுக்கிட்டிருக்காரு"

"பொண்ணுக்கு மாசம்ங்க..பொஞ்சாதிய வுடப் போயிருந்தேனுங்க...இப்பத் தான் சேதி கிடைச்சுது அய்யா கூப்பிடாங்கன்னு அப்பிடியே போட்டுட்டு ஓடியாறேன்"

ஒருமையில் அழைக்கப்பட்ட சாமியாண்டிக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். கண்கள் லேசாக பஞ்சடைய ஆரம்பித்திருந்தது. ஒல்லியான தேகம், கருத்துச் சுருங்கிய ஒட்டாத தோல், நெற்றியில் அழிந்தும் அழியாமலும் காலையில் பூசிய திருநீர். போட்ட கூழைக் கும்பிடு போலீஸ் மீதிருந்த பயத்தையும் மரியாதையும் பறை சாற்றியது.

"சாமியாண்டி பத்து வருஷத்துக்கப்புறம் நம்ம ஜெயிலுல ஒரு தூக்குத் தண்டனை தீர்ப்பாயிருக்கு. நீதான் முன்னாடி இதெல்லாம் பார்த்துக்கிட்டனு ரெக்கார்டு இருக்கு..இதையும் நீ தான் கூட இருந்து முடிச்சு குடுக்கனும் என்ன..."

"பெரிய மனசு பண்ணி சமூகம் என்னை மன்னிக்கனும்...உசுர எடுத்துட்டு வூட்டுல கால் வைக்காதன்னு பொஞ்சாதி கறாரா சொல்லி அந்த தொழில வுட்டு நாளாச்சுங்க..இப்போ திரும்பவும்..எப்படிங்க..அய்யாகிட்ட மாப்பு கேட்டுக்கிறேனுங்க"

"அதெல்லாம் ஒன்னும் பேசக்கூடாது...நீ கூட இருந்து கயிறு போடறத மட்டும் பார்துக்கிடாப் போதும்...மத்ததுக்கெல்லாம் ஆள் இருப்பாங்க.. நாங்கென்ன டெய்லியா கூப்பிட்டுக்கிட்டிருக்கப் போறோம்? எனக்கே என் சர்விஸ்லயே இது தான் முதல் தரம்னா பார்த்துக்கோ...பொஞ்சாதிக்கெல்லாம் சொல்லக்கூட வேண்டாம்... பிரபாகர்...சூப்பரிண்டன்ட் கிட்ட சொல்லி சாமியாண்டிக்கு ஆயிரத்தைநூறுன்னு சொல்லிடுங்க...ஐந்நூறு இப்போ கைல குடுக்கச் சொல்லுங்க, மீதிய விஷயத்த முடிச்சுட்டு வாங்கிக்க,...பேப்பர்ல வேண்டாம் நான் சொன்னேன் சொல்லிடுங்க...சாமியாண்டி...விஷயம் வெளியே போகாது...நீயும் இதப் பத்தி வெளில மூச்சு விட வேண்டாம்..என்ன சரியா...கூட்டிக்கிட்டு போய் ஆகிறதப் பார்க்கச் சொல்லுங்க"

சாமியாண்டியின் சம்மததுக்கெல்லாம் அங்கு யாரும் காத்திருக்கவில்லை. சாமியாண்டி அங்கேயே பென்ஞ்சில் உட்கார்ந்து கொண்டார். மனது மிகவும் குழப்பமாக இருந்தது. வெட்டியானாக இருந்த தனது தந்தையின் தொழிலை தான் ஏற்று நடத்தி..காசுக்காக தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதையும் ஏற்றுக்கொண்டு...அந்த தெம்பெல்லாம் இப்போது மனதில் கொஞ்சம் கூட இல்லை. அத்தோடு நல்லது கெட்டது குழப்பம் வேறு. "செத்து வர்ற பொணம் மாதிரி வேற..உசுரோடு இருக்கறப்பவே .துணியப் போட்டு முவத்த மூடறதுங்கிறது வேற..அவங்க மனசு என்ன பாடு படும்.. போகிற ஆத்மா சாவம் நமக்கு வேணாம்சாமி...இல்ல நீ காசு தான் முக்கியம்ன்னு இந்தப் பொழப்பு பாக்கிறதா இருந்தாச் சொல்லு நானும் என் புள்ளையளும் சுள்ளி பொறுக்கி கஞ்சியாக்கிக்கிறோம்...எங்கள்வுட்ரு சாமி" இசக்கியம்மா சொன்னதற்காக ஊரைவிட்டு ஊர் போய் நாலு வருஷம் இருந்துட்டு எல்லாம் முடிந்தது என்று திரும்ப வந்தால், ஆறு வருடங்களுக்கப் பிறகு இப்போ திரும்பவும் இது.

"அதெல்லாம் மாறியாச்சுடா…இப்போலாம் கவருமெண்டுலயே இதுக்கெல்லாம் ஆள் இருக்காங்க" என்று சாமிநாதப் பிள்ளை சொன்னதெல்லாம் உண்மையில்லையா? இல்ல பேப்பருல வேணாம்ன்னு அய்யா சொன்னது இதத் தானா?
“ தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி.”..சாமியாண்டியின் உதடுகள் அவரையும் அறியாமல் முனுமுனுத்துக் கொண்டிருந்தன

"சாமியாண்டி...வந்து பணத்த வாங்கிக்க...அடுத்த வாரம் புதன்கிழமை..செவ்வா ராவே வந்துறனும். பொஞ்சாதிக்கிட்ட என்ன சொல்லனுமோ சொல்லிக்கோ...காலைக் கருக்கல்லயே போயிடலாம்...என்ன"

"என்னவே டவுண் ஆஸ்பதிரிக்காக பொஞ்சாதிய பொண்ணு வீட்டுலயே வுட்டுட்டு வந்துட்டிராமே நம்மூர் மருத்துவச்சி பாக்காத பிரசவமா?" சோலையப்பன் குரல் கேட்டுத் தான் தன்நினைவே வந்தது சாமியாண்டிக்கு. வீட்டுக்கு எப்படி நடந்து வந்தோம் என்றெல்லாம் நினைவே இல்லை. இரவெல்லாம் தூக்கமில்லாமல் புரண்டு புரண்டு படுத்தார். வயது தான் மனதில் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வருகிறது. பத்து வருஷத்துக்கு முன்னால் சேதி வந்தால் துள்ளிக் குதித்து காரியங்கள் நடத்தியது என்ன, முன்பணம் வாங்கி சீலை துணிமணி வாங்குவதென்ன...இதோ வாங்கிய பணம் விளக்குப்பிறையில் சீண்டுவாரில்லாமல் காற்றில் தளர்ந்து கிடக்கிறது.

"சாம்பல் பூசிய சிவனான்டி சொரூபம் டா" என்று ஊரில் காத்து கருப்பு அண்டியவர்கள், வயதுக்கு வந்தவர்கள் என்று சாமியாண்டியிடம் தான் திருநீரு போட்டுக்கொள்வார்கள். கௌரவமாய் இருந்திருக்கிறது. ஆனால் இன்று ..? ஜெயில் பொழப்பு கொலை செய்வது மாதிரி இருக்கிறது. நான் என்ன கொலையா செய்கிறேன்...அரசாங்கம் சொல்லித் தான் செய்கிறேன் அத்தோடு தூக்கில போடுறவனெல்லாம் என்ன மகாத்மாவா? வேண்டாமென்று சொன்னால் விட்டுவிடுவார்களா? வட்டாரத்திலேயே அவனை விட்டால் இந்தத் தொழிலுக்கு ஆள் கிடையாது. தெரியாமலா தேடிப் பிடித்துக் கூப்பிட்டிருக்கிறார்கள்.

"அய்யா முட்டை, விளெக்கெண்ணை கொண்டாந்திருக்கேன்...கயிற கொடுத்தீங்கீன்னா..ஊறப் போட்டிருவேன்..முடிச்சு சுளுவா இறுகிடும்...நோவாத காரியம் ஆயிடும்" - சாமியாண்டி திரும்ப ஜெயில்லுக்குப் போன போது தெளிவு இருந்ததாக சொல்லமுடியவில்லை.

"அய்யா அப்பிடியே அந்தாளை கொஞ்சம் பார்க்கலாமுங்களா? மனசு கேக்கமாடேங்குதுங்க ரெண்டு வார்த்தை பேசனுங்க.."

"யோவ் அதெல்லாம் வழக்கம் கிடையாதுயா...அதுவும் இன்னும் ரெண்டு நாள்ல டேட்ட வைச்சிகிட்டு... ஒன்னுகிடக்க ஒன்னாச்சுன்னா நாங்க பதில் சொல்லி மாளாதுயா..அவன் கிட்ட போய் இன்னா பேசப் போற? வேணும்னா ஒரு நிமிஷம் தான்...தள்ளியிருந்து பார்த்துட்டு கரெக்டா வந்துரனும்...எதாவது சொல்லி கில்லி வைக்காத...அவனே கிலியடிச்சு சோறு வேண்டாம் தண்ணி வேண்டாம்ன்னு கிடக்கான்..பதமா நடந்துக்கோ"

சாமியாண்டி அந்த செல்லை நெருங்கிய போது அவன் விட்டத்தைப் பார்த்த மேனியாக படுத்திருந்தான். கண்களில் பாவை சலனமில்லமால் வெறித்துக் கொண்டிருந்தது. வைத்த சாப்பாடு சீண்டாமல் "ஈ" மொய்த்துக் கொண்டிருந்தது. முப்பத்தைந்து வயதிருக்கலாம். கண்களின் ஓரத்தில் ஈரம் மண்டிப் போயிருந்தது.

"சாமீ..." சாமியாண்டி குரல் கரகரத்தது.

அவன் உடம்பில் அசைவு இல்லை. கண்கள் மட்டும் குரல் வந்த திக்கை நோக்கின.

"சாமீ...இந்தப் பாவப்பட்டவன் தான் புதன்கிழமை உங்களுக்கு...." கம்மலாக வந்த குரலும் அதற்கு மேல் சாமியாண்டிக்கு வரவில்லை.

"சிவன் கோயில் துன்னூறு இருக்கு தரட்டுமா?" திருநீரை எடுத்து தனக்கும் இட்டுக்கொண்டு அவனைப் பார்த்தார். அவனிடம் இன்னமும் சலனமில்லை.

"ஏழப் பொழப்பு…பாவப்பட்ட பொழப்பு...மவ மாசமா கிடக்கா, மூத்தது பொட்டப் புள்ள...தாயில்லா புள்ளையா ஆகிடக்கூடாதுங்க...சாமீ பாவத்துக்கு நாங்க ஆளாகக் கூடாதுங்க..." அவன் எதிர்பார்க்காத தருணத்தில் கம்பிகளுக்கு வெளியே தலைக்கு மேல் கைகளைத் நீட்டித் தூக்கி கும்பிட்டு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் சாமியாண்டி. "திருச்சிற்றம்பலம்...திருச்சிற்றம்பலம்..தரையை முட்டிய நெற்றியுடன் சாமியாண்டியின் குரல் மட்டும் தழுதழுப்பாக வந்துகொண்டிருந்தது. அவன் எழுந்து உட்கார்ந்தான்.அவன் அதை எதிர்பார்க்கவில்லை.

செவ்வாய் இரவு சாமியாண்டிக்குத் தூக்கம் இல்லை. அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் ஜெயிலிலேயே குளித்து திருநீரணிந்து கொண்டு கிழக்கு பார்த்து கும்பிடு போட்டு வணங்கினார். நான்கு மணிக்கெல்லாம் தூக்கு மேடைக்கு போய் எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்த்தாகிவிட்டது.

அவனை இரண்டு காவலர்கள் கூட்டி வந்த போது சாமியாண்டிக்கு தொண்டை அடைத்தது. கூட்டி வரும் போது அவன் கால்கள் தள்ளாடிய மாதிரி இருந்தது. அவன் முகத்தில் கருப்புத் துணி போர்த்த அதிகாரி பணித்த போது அவன் கைகள் நடுங்குவதாக சாமியாண்டிக்கு பட்டது. அவன் கண்களில் இப்போதும் சலனமில்லை. துணி போடு மூடும் போது இருவர் விழிகளும் சந்தித்துக் கொண்டன. ஒரு வினாடி தான், அதற்கு மேல் சாமியாண்டியால் அதை நேர் கொள்ள முடியவில்லை. "என்னப்பனே...நோவாம நொடியில இந்த உசிரு பிரிஞ்சிரனும்..அருள் புரியப்பா..." அவர் மனதில் வேண்டிக்கொண்டது அவனுக்கும் கேட்டுக்குமளவுக்கு அவர் இதயத்தில் எதிரொலித்தது. அவன் கைகளை பின்னால் கட்டும் போது அவரையுமறியாமல் ஒரு நொடி ஆதரவாக தடவி பிடித்துக் கொடுத்தார். அவன் கைகள் பதில் சொல்லுவது போல லேசாக அசைந்தது.

அதிகாரி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே கையசைத்தததும், சாமியாண்டி லீவரை இயக்கிவிட்டு கண்களை மூடிக் கொண்டார். உதடு மட்டும் முனுமுனுத்துக் கொண்டிருதது

பரமேது வினைசெயும் பயனேது பதி ஏது
பசுஏது பாசமேது
பக்திஏ தடைகின்ற முத்தியே தருள் ஏது
பாவ புண்யங்கள் ஏது
வரமேது தவமேது விரதமே தொன்றுமில்லை...


******
****
இந்த மாத தேன்கூடு போட்டிக் கதை.
****

Friday, July 07, 2006

நெல்லையில் வலைப்பதிவர் சந்திப்பு

அன்பான வலைப்பதிவாளர்களே! வரும் ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதியோ ஆறாம் தேதியோ நெல்லையில் ஒரு வலைப்பதிவாளர் சந்திப்பு நடக்க இருக்கிறது. இந்த சந்திப்பு மிக மிக விஷேஷமானது. மற்ற அகில இந்திய/ இன்டர்நேஷனல் வலைப்பதிவர் சந்திப்புகள் மாதிரி நீங்கள் சாப்பிடும் போண்டாவுக்கு நீங்களே காசு கொடுக்கவேண்டாம். சந்திப்புக்கு வரும் வலைப்பதிவர்களுக்கு இலவச சைவ ரொட்டிசால்னா ஏற்பாடு செய்யப்படும். இந்த அறிவிப்பை உபயோகப்படுத்தி சில விஷமிகள் மாமா,மச்சான், மாப்ள கூட்டத்தைக் கூட்டி வந்து இலவச ரொட்டிதானம் நடத்திவிடுவார்கள் என்பதால் வலைப்பதிவர் சந்திப்புக்கு வருபவர்கள் முன்னமே தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன். அடையாள அட்டை தயாரிப்பதற்கு உபயோகமாக இருக்கும். நெல்லை மைந்தர்கள் வலைபதிவுலகத்தில் நிறைய இருந்தாலும் எத்தனை பேர் நெல்லைக்கு வரமுடியும் என்று தெரியாததால்..தயவு செய்து பின்னூட்டத்திலோ, r_ramn at yahoo dot com என்ற மின்ன்ஞ்சலிலோ தொடர்பு கொள்ள தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூட்டம் மட்டும் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்தால் இதையே முப்பெரும் விழாவாக மாத்திவிடுவோம்.

என்னைத் தவிர ஒருதருமே வராவிட்டாலும் இந்த வலைப்பதிவர் சந்திப்பு எங்க வீட்டு அடுக்களையில்(ரொட்டி சால்னா தவிர்தலாக) கண்டிப்பாக நடந்தே தீரும் என்று உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.

கடலென புறப்பட்டு ஆதரவு தாரீர்.

Wednesday, July 05, 2006

ஆத்தங்கரை மரமே...2

Previous Parts --> Part 1

ஆத்தங்கரை பாதையின் ஆரம்பத்தில் ஒரு அரசாங்க ஆஸ்பத்திரி இருக்கிறது. அதற்கு எதிரிலே பிள்ளையார் கோயில் ஒன்று உண்டு. மிகவும் பிரசித்தமான கோயில். அரசாங்க ஆஸ்பத்திரிக்கு அடுத்து ஒரு வாய்க்கால் உண்டு. பயிர் பாசனத்திற்காக ஓடும் இந்த வாய்க்கால், ஊரில் இருக்கும் எல்லா ஆஸ்பத்திரிகளையும் தொட்டுக் கொண்டு ஓடும். எல்லா ஆஸ்பத்திரி மருந்துக் கழிவுகளும் இந்த வாய்க்காலில் தான் கலக்கும். இதனாலேயே உள்ளூர் டாக்டர்கள் ஏதாவது வியாதியை தீர்க்க முடியாமல் திணறினால் இந்த வாய்காலிலிருந்து ஒரு அவுன்ஸ் தண்ணீரை மருந்தாக குடுத்துவிடுவார்கள், எல்லா ஆஸ்பத்திரி மருந்தும் இதில் கலந்திருப்பதால் தீராத வியாதியும் உடனே குணமாகிவிடும் என்று ஊரிலே ஒரு பலத்த நம்பிக்கை உண்டு.

சர்வரோக நிவாரணி தவிர ஆஸ்பத்திரிக்கு வரும் விசிட்டர் கூட்டத்திற்கு காலைக் கடன் சேவையும் இந்த வாய்க்கால் தான். காலை ஆறு டூ ஏழு காலைக் கடன் மற்றும் இலவச "திவ்ய தரிசன" சர்விஸ். மேற்சொன்ன காரணங்களினால் இந்த வாய்க்கால் சில இடங்களில் கூவத்திற்கு கூவிக் கூவி சவால் விடும். வானரப் படையின் சேட்டை இங்கேயே ஆரம்பித்துவிடும். ஆஸ்பத்திரி வந்ததுமே...பரபரவென்று ஆகிவிடுவார்கள். காலைக் கடன் பார்ட்டிகள் மறைவாக "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல் வருமா" என்று அக்கடா என்று உட்கார்ந்திருப்பார்கள். அது வானரப் படைக்குப் பொறுக்காது. வெறி நாய் மாதிரி கத்திக் கொண்டே அரக்கப் பரக்க ஓடிப் போவார்கள். காலைக் கடன் பார்ட்டி எதோ நாய் தான் தறிகெட்டு வருகிறது போல என்று அடித்துப் பிடித்து எழுந்திருப்பார்கள். வானரப் படை அவர்கள் பக்கத்தில் ஓடிப் போய் "வள்" என்று குலைத்து விட்டு பாதுகாப்பான தூரத்திலிருந்து சிரித்து மகிழும்.

பார்ட்டிக்கு மட்டும் கொஞ்சம் அவசரமாயிருந்து பூஜையில் கரடி மாதிரி புகுந்திருந்தோம் என்றால் அவ்வளவு தான். "வெரவாக்கிலம் கெட்ட நாய்களா...மனுஷன நிம்மதியா போகக் கூட விடமாடேங்கிறேங்களேடா.." என்று சொறிநாயை கல்லெடுத்து அடிப்பது மாதிரி விரட்ட ஆரம்பித்து விடுவார்கள். கல்லடியிலிருந்து தப்பிக்க நிறைய தரம் தலைதெறிக்க ஓடியிருக்கிறோம். சில மரத்தடி மகானுபாவர்கள் பாதி பூஜையில் தவத்தைக் கலைக்க முடியாது என்பதால் "இந்த பாவத்துக்கு நீங்களெல்லாம் மலச்சிக்கல் வந்து முக்கி மண்டைவெடிச்சுத் தான் போகப்போறீங்கன்னு" ரேஞ்சுக்கு இந்தா பிடி சாபமெல்லாம் குடுப்பார்கள்.

எங்க ஊர் ஆற்றங்கரையில் இரண்டு துறைகள் உண்டு. கல்துறை மற்றும் மண் துறை. கல் துறையில் தண்ணீரின் வேகம் ஜாஸ்தியாக இருக்கும். தண்ணீருக்கடியில் மணலில்லாமல் கருங்கல்லும் பாறைகள் இருக்கும். இந்த துறையில் குளிப்பதற்கு கொஞ்சம் பழக்கம் வேண்டும். இல்லாவிட்டால் அடி பட்டு தண்ணீர் அடித்துக் கொண்டு போய்விடும். மணல் துறையில் சுகமாக இருக்கும். கடற்கரை மாதிரி தண்ணீருக்கடியில் மணல் இருப்பதால் அடிபடாது. ஆனால் மணலாற்றங்கரையிலும் இழுப்பு இருக்கும். இட்லி பாறை, தோசை பாறை என்று இரண்டு பெரிய பாறைகள் உண்டு. இட்லி மாதிரியும், தோசை மாதிரியும் இருப்பதால் காரணப் பெயர். இது போக சிவன் பாறை ஒன்று உண்டு. அது ஒரு மினி குன்று மாதிரி இருக்கும். மேலே பாறையில் ஒரு அழகான சிவலிங்கம் ஒன்று இருக்கும். சிவன் பாறைக்கு கீழே ஆழம் மிகவும் அதிகம். அதனால் இட்லி பாறை, தோசை பாறையில் எக்ஸ்பீரியன்ஸ் போட்டவர்கள் மட்டும் தான் சிவன் பாறைக்கு பிரமோஷன் வாங்கிப் போவார்கள். மற்றவர்களெல்லாம் அங்கிருந்து குதித்தால் சிவலோகப் பிரமோஷன் தான் என்று பயமுறுத்தி வைத்திருந்ததால் நாங்கள் முதலில் அந்தப் பக்கம் போக மாட்டோம். வெறும் இட்லி, தோசை பாறைகளோடு சாகசங்களை நிறுத்திக் கொள்வோம்.

குளிக்கும் போது இட்லி பாறைக்கும் தோசைப் பாறைக்கும் நடுவில் நீச்சல் அடித்து தொட்டுப் பிடித்து விளையாடுவது மிக சுவாரசியமாக இருக்கும். நீச்சல் தெரியாமல் இதற்கெல்லாம் பயந்தால் "பேசாமல் போய் கல்லிடைக்குறிச்சியில் குளிக்கப் போ" என்று விரட்டிவிடுவோம்.

கோவில் இருக்கிற ஊர்ல எல்லாரும் கோவிலுக்குப் போகிறார்களா என்ன? அது மாதிரி எங்க ஊர்லயும் ஆத்தங்கரைக்கு வராத சில ஜென்மங்கள் உண்டு. எங்கள் தெருவிலும் ஒரு பிரகஸ்பதி இருந்தான். அவனைப் பொறுத்த மட்டில் "குளிப்பது" என்பது சினிமாவில் நாயகர்கள் முன்னால் கதாநாயகிகள் புடவை உடுத்திக் கொண்டு உதட்டைக் கடித்துக் கொண்டு மிட் நைட் மசாலாவில் வருவது. "டேய் குளிச்சியாடா" என்றால் "ஓ...முந்தாநேத்திக்கே குளிச்சாச்சு" என்று கூசாமல் பதில் சொல்லுவான். என் போறாத வேளை, "உன்னால் முடியும் தம்பி" கமல் மாதிரி நான் சும்மா இராமல் குளிப்பதினால் வரும் நன்மைகளை எடுத்துச் சொல்லி அவனை ஒரு நாள் ஆத்தங்கரைக்கு கூட்டிப் போனேன்.

-இன்னும் வரும்