Tuesday, June 27, 2006

ஆத்தங்கரை மரமே...

இதுவும் அம்மபாட்டுத் தேங்....:)
தாமிரபரணி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி இல்லை பக்கத்தூர்களின் பெயர்களைக் கேட்டாலே உடம்பெங்கும் பரவசம் பரவும் எனக்கு. இருக்காதா பின்ன? பிறந்து வளர்ந்து இருபது ஆண்டுகள் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமா? இதில் தாமிரபரணியின் சிறப்புகள் என்னவென்று முன்னால் ஒரு பதிவிலேயே (ஆறு) சொல்லிவிட்டேன். இதற்குமேலும் பிற ஜில்லாக்காரர்களின் பேரன்பை தாங்க முடியாது என்பதால் அதை விட்டுவிடுகிறேன். பொதிகை மலையில் உருவாகி பிரவாகமாக ஓடும் தாமிரபரணி பாபநாச மலயடிவாரத்தில் ஆரவாரமாக ஓடுவதைப் பார்ப்பதற்கு புண்ணியம் செய்திருக்கவேண்டும். இதில் தாமிரச் சத்து அதிகமிருப்பதால் இந்தப் பெயர் என்று ஒரு வழக்கும் உண்டு. தாமிரச் சத்து அதிகமாய் இருபதனால் இதில் குளித்தால் தோல் கொஞ்சம் கருக்கும் என்றும் நீச்சல் தெரியாத கூட்டம் சரடு விடும்.

இந்த வற்றாத ஜீவநதியின் தண்ணிரில் விழும் பொதிகை மலை அகத்தியர் அருவியும் ஜில்லாவில் மிகவும் பிரசித்தம். குற்றால அருவிகள் மாதிரி அகத்தியர் அருவிக்கு உயரம் கிடையாது. ஆனால் பொதிகை மலையில் நிறைந்திருக்கும் "சித்த வேர்களின்" குணங்களைத் தாங்கி வருவதால் இதில் குளித்தால் ஹெர்பல் பாத்துக்கு சமம் என்று சொல்லுவார்கள். உணமை தானா என்று மலைக்கு மேல் ஏறி அந்த சித்த வேர்களின் வாசத்தை முகர்ந்து பார்த்துவிடுவது என்று சோதிக்க கிளம்பி, வழியில் வழுக்கி விழுந்து வேறு ஏதோ ஒரு சித்த புருஷர் விட்டுச் சென்ற சாயம் போன அண்டர் வேரைப் பார்த்துவிட்டு வேரைப் பார்த்தது போதும் என்று நொண்டிக் கொண்டே திரும்பி வந்துவிட்டேன். அதிலிருந்து நானும் இதே மாதிரி சித்த வேர், பித்த தேர் என்று சங்கு ஊதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கப்புறம் அகத்தியர் அருவியில் உண்மையான சித்த வேர் சமாச்சாரம் இருக்கிறதா என்று நான் ரொம்ப ஆராய்ச்சி செய்யவில்லை. நான் வழுக்கிவிழுந்த இடத்துக்கு மேலே காட்டில் இருக்கலாம்...நக்கல் விட்டாலும் இந்த அருவில் குளித்தால் புத்துணர்ச்சியாய் இருக்கும். அருவியிலிருந்து வெளியே வரவே மனசு வராது.

ஓவ்வொரு ஊர் தண்ணிக்கும் ஒரு பெருமை இருக்கு என்று அந்தந்த ஊர்காரர்கள் மார்தட்டிக் கொள்வது மாதிரி எங்க ஊர் தண்ணியக் குடிச்சா வீரம் வரும் என்று சீவலப்பேரி பாண்டியில் நெப்போலிய சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். எல்லா ஊர் தண்ணிக்கும் இந்த மாதிரி "இந்தத் தண்ணியக் குடிச்சா வீரம் வரும். ஞானம் வரும், குசும்பு வரும்" என்று உசுப்பேத்துற வசனங்கள் நிறைய இருக்கும். விஜய்குமார் தாலி, தாய் மாமா, சீர் பெருமைகளை பேசாத சமயத்தில் இந்த மாதிரி ட்யலாக் நிறைய பேசுவார். விஜய்காந்தும் நிறைய படங்களில் பேசியிருக்கிறார். நானும் இவர்களையெல்லாம் நம்பி, ஊறவைத்த கொண்டக் கடலையை மென்று, கர்லா கட்டையை சுத்தி எக்சர்சைஸ் செய்து ப்ரொபைல் ஏத்தி, நிறைய தண்ணி குடித்திருக்கிறேன். வீரம் வந்ததா தெரியாது ஆனால் நிறைய தண்ணி குடித்ததின் பலனாக அன்றெல்லாம் வேறொன்று நிறைய வந்தது.

ஆண்டாளுக்கு மார்கழி மாதிரி எங்களுக்கு ஏப்ரல் மே, ஜூன். காலை ஆறு மணிக்கே "நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்" என்று கிளம்பி விடுவோம். ஆறு மணிக்கு கிளம்பி ஆறேமுக்கால் வரை குற்றாலத் துண்டு, சோப்புப் பெட்டி சகிதமாக தெரு முக்கில் வானரப் படையுடன் ஒரு அரட்டையைப் போடுவது, ஏப்ரல் மே சூடுக்கு காலை குளிர்ந்த நீரில் கால் வைக்கும் போது ஏற்படும் ஜில்லிப்பு இவற்றின் சுகமே தனி. நான் சொல்லும் இந்த ஆற்றங்கரையை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். புது நெல்லு புது நாத்து, ஜென்டில்மேன், டும் டும் டும், சாமி மற்றும் இன்ன பிற நாற்பது சொச்ச படஙகளில் விஸ்தீரணமாக காட்டிவிட்டார்கள்.திவ்ய பாரதி, பானுப் ப்ரியா, த்ரிஷா போன்றோர் நீராடிய புண்ய ஸ்தலம்.

மலையடிவாரத்தில் பச்சைப் பசேலென்று வயல் சூழ இருபக்கமும் ஆலமரம் தழைத்து வளர்ந்து, ஜிலு ஜிலுவென்று காற்றில் ஆற்றங்கரைக்கு போகும் பாதையே ரொம்ப ரம்மியமாக இருக்கும். டும் டும் டும்-ல் விவேக் அன்ட் கோ மாதவன் கல்யாணத்திற்கு பஸ்ஸிலிருந்து வந்திறங்குமே அந்தப் பாதை தான் இது. முதல்வனில் அர்ஜுன் மாறுவேஷத்தில் மணிஷா மாமியைப் பார்க்கப் போகும் போது பூ வாங்குவாரே அதே பாதை தான் இது. ஜலக்கிரீடை செய்யப் புறப்படும் குரங்குகளின் அட்டகாசம் இந்தப் பாதையில் காலடி எடுத்து வைத்தவுடனேயே ஆரம்பமாகிவிடும்.

-இன்னும் வரும்

Monday, June 26, 2006

நன்றி

தேன்கூட்டில் எனக்கு வோட்டுப் போட்ட பதினெட்டுப் பட்டி சனங்களுக்கும் நன்றி. (அதில ஒரு வோட்டு என்னோடது).எல்லோருக்கும் நாகில் சனின்னா நமக்கு டைப் அடிக்கிற விரல்ல சனி. ஏற்கனவே தமிழ்வாத்தியாரை இந்த தரம் ஊருக்குப் போகும் போது பார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். போட்டிப் பதிவுகளை விமர்சனம் பண்ணுகிறேன் பேர்வழி என்று இல்லாத சந்தேகத்தைக் கிளப்பிவிட்டு, ஊருக்கு போய் பார்த்து அவருக்கு பெண் இல்லை என்று கன்பர்ம் செய்தால் தான் வோட்டு என்று வீட்டிலேயே இந்த தரம் வோட்டு கிடைக்கவில்லை.

போட்டியில ஜெயிச்சவங்களுக்குப் போய் வாழ்த்துச் சொல்லாம "என்ன போட்டில (இந்த தரமும்) தோத்துப் போயிட்டீங்க போல இருக்கு...வாழ்த்துக்கள்" என்று தோற்றதுக்கு முதல் ஆளாய் ஓடி வந்து வாழ்த்துச் சொல்லும் இந்தப் பாசக்கார பயலுவ கூட்டம் - நான் ப்ளாக் எழுதி சமபாதித்திருக்கும் மிகப் பெரிய சொத்து. மெய்சிலிர்க்கிறது எனக்கு.

சும்மா மேம்போக்காய் எழுதுவது ப்ளாக்குக்கு வேணா ஒத்துவரும் போட்டிக்குப் போனா பிரிச்சு மேய்ஞ்சிருவாங்கன்னு நன்றாகவே உரைத்திருக்கிறது. ரூம் போட்டு யோசிச்சு அடுத்த தரம் "தரம்" ட்ரை பண்ணுகிறேன். நெக்ஸ்டு மீட் பண்றேன்.

முடிப்பதற்கு முன்னால் "ஜெயிக்கிறதா முக்கியம்...இன்டிப்ளாகீஸாகட்டும், தேன்கூடு போட்டியாகட்டும்...போட்டி போட்டியா போய் பதிவெழுதி அடிபட்டு, கடிபட்டு வருஷா வருஷம் தோத்து மாவீரனா நிக்கிறான் பாரு அவந்தான்டா மனுஷன்...அவனுக்குத் தான்டா கப்பு" என்று தல பாணியில் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

Wednesday, June 21, 2006

ஆறு

நண்பர் சிலந்திவலை ரமணி “ஆறு” விளையாட்டுக்கு அழைத்திருந்தார். அது சமபந்த்தப்பட்ட பதிவு இது. ஒன்று, இரண்டு, மூன்று… என்று ஆறு வரை எழுதவேண்டும். (நம்மைப் பற்றித் தான் எழுதவேண்டும் என்று எங்குமே சொல்லலையே ரமணி...அதான் ஜல்லியடித்துவிட்டேன் :) )

ஒன்று, இரண்டு - இந்த நம்பர்களை தமிழர்கள் உபயோகப்படுத்துவது மாதிரி யாருமே உபயோகப்படுத்தி இருக்க மாட்டார்கள்.இதை இப்போது நினைக்கும் போதெல்லாம் இதற்கு எப்படி இந்த உபயோகம் வந்திருக்கும் என்று அளவில்லாத வியப்பு வரும். ஒன்றுக்கு போய் விட்டு வருகிறேன். இரண்டிற்கு போய்விட்டு வருகிறேன் என்று விரலில் சின்ன வயதில் ஸ்கூலில் நிறைய சைகை பாஷை பேசி இருக்கிறேன். அதிலும் விரலை கொக்கி மாதிரி வைத்துக்கொண்டு சைகை காட்டினால் ரொம்ப அவசரம் என்று அர்த்தம். போரடிக்கும் க்ளாசிலிருந்து தப்பிக்க பையன்கள் அடிக்கடி கொக்கி குமாராகிவிடுவார்கள். ஆனால் இதிலும் சில டீச்சர்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட். மணியடித்தால் சோறு என்பது போல் மணியடித்தால் தான் ஒன்றும் இரண்டும். அவர்களை ஏமாற்ற கண்ணைச் சுறுக்கிக் கொண்டு லேசாக குதித்துக் கொண்டே கொக்கி குமாராக வேண்டும்.அப்போ தான் கருணை பிறக்கும். இப்படியாவது ஏமாற்றி அங்கே போய் சுத்திப் பார்த்துவிட்டு வருவதிலும் ஒரு த்ரில் இருக்கத்தான் செய்தது. இப்போது உள்ள கான்வென்ட் குழந்தைகளுக்கு இதெல்லாம் தெரியுமா என்று தெரியவில்லை. குழந்தைகள் ரொம்பத் தான் மிஸ் பண்ணுகிறார்கள். இப்பொதெல்லாம் இதற்கு வெவ்வேறு வழக்குச் சொல் வழங்கப்பட்டு வருகிறது என்று நினைக்கிறேன். எங்க வூட்டுக்காரி சொந்தக்கார வட்டதில் இதற்கு "லண்டன்" என்று நாமகரணம் செய்திருக்கிறார்கள். ஒரு தரம் இந்தியா போயிருந்த போது அந்த வீட்டுப் பெரியவர் "மாப்பிள்ளை எந்த ஊரில் வேலை பார்க்கிறார்" என்று கேட்க, நான் ரொம்பப் பெருமையாக "லண்டனில் வேலை பார்க்கிறேன்" என்று சொல்ல...அந்த விட்டுக் குழந்தைகள் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தன.

மூன்று - திருநெல்வேலி பக்கம் "முக்கா முக்கா மூனு தரம்" என்று ஒன்று உண்டு. சாட் பூட் திரீ(அப்பிடின்னா என்னான்னு தெரியுமா உங்களுக்கு?), க்விஸில் கேள்விக்கு பதில் சொல்வதாகட்டும், சீட்டு குலுக்கி போட்டு பார்ப்பது வரை நினைத்தது வரவில்லை என்றால் இந்த ரூலை உபயோகப் படுத்தி விடுவோம். திருநெல்வேலிக் காரர்களாக இருந்தால் விஷயம் தெரிந்து கொஞ்சம் உஷாராகிவிடுவார்கள். மற்ற ஜில்லாக்காரர்கள் "அப்படீன்னா?" என்று முழிப்பார்கள். கிரிக்கெட் டாஸ் போடும் போது "எங்க ஜில்லாவில மூனாவது தரம் தான்" என்று இந்தப் பழமொழியை மேற்கோள் கட்டி கதை விட்டு நிறைய தரம் மெட்ராஸ்காரர்களை ஏமாற்றி இருக்கிறேன். மூன்றாவது தரமும் நினைத்தது வரவில்லை என்றால்....???? வேறென்ன வேறெதாவது டகால்டி வேலை தான்.

நாலு - "எதுக்கும் ஒன்னுக்கு நாலு தரம் யோசிச்சு சொல்லு என்கிறார்களே"...எதற்காக? முதல் மூன்று தரம் பிடிபடாதது நாலாவது தரம் யோசித்தால் வந்துவிடுமா? நாலாவது தடவையா யோசிப்பது தான் கரெக்டாக இருக்குமா? யாமறியேன் பராபரமே. ஆனால் இப்படி சொல்லும் போதெல்லாம் நாலாவது தடவை நிறைய குழம்பியிருக்கிறேன். என்னைப் பொறுத்த வரையில் ரொம்ப குழப்பமாக இருந்தால் விஷயத்தை அப்படியே மூடிவிட்டு ஒரு தூக்கமோ வேறு வேலையோ பார்க்க போய்விடுவேன். அப்புறம் திரும்ப வந்து பார்க்கும் போது ஒரு தெளிர்ச்சி கிடைத்திருக்கும்.

ஐந்து - உளவு பார்ப்பவர்களை ஐந்தாம் படை வேலை என்றிகிறார்களே..ஏன்? இது ஏதாவது குறிச் சொல்லா? தெரிந்தவர்கள் கூறுங்களேன். இதுவும் ரொம்ப நாளாக மண்டையின் ஓரத்தில் குடைந்து கொண்டிருக்கிறது. (ஹீ ஹீ ஐந்துக்கு எதுவும் உருப்படியா தோன்றவில்லை பையன் சமாளிக்கிறான் என்றி நீங்கள் நினைக்கலாம்... தப்பே இல்லை)

"ஆறு" - ஆறு என்றால் தமிழகத்தில் அது தாமிரபரணி தான் அடிச்சுக்க ஆளே இல்லை. காவிரி, வைகைன்னு சொல்றவங்களெல்லாம் மே மாசம் உங்க ஊர்ல ஓடுகிற மணலாற்றை ஒரு தரம் சுத்தி பார்த்துவிட்டு அப்படியே ஓடிப்போயிடுங்க. தாமிரபரணிக்கு எப்போ வேண்டுமானாலும் வாங்க நல்லா தண்ணி காட்டுறோம். "வற்றாத ஜீவ நதி"ங்கிறதையும் தாமிரபரணிக்கு மட்டும் தான் என்று பட்டயம் போட்டு வைக்கனும். லீவு நாட்களில் காலை ஆறு மணிக்கு எழுந்து நண்பர்களோடு கூட்டமாக போனால் பத்து பதினோறு மனிக்கு வீட்டிலிருந்து கம்போடு ஆள் வரும். பயங்கரமாக ஆட்டம் போட்டிருக்கிறேன். அது பற்றி தனிப் பதிவு போடவேண்டும். மழைத் தண்ணி தேங்கியிருக்கிற மாதிரியான ஆறில்லை தாமிரபரணி...காட்டாறு..அதுவும் பொதிகை மலை அடிவாரம் என்பதால் என்ன வேகத்தில் ஓடும் என்று சொல்ல வேண்டியதில்லை. சுழலுடன் ஓடும் நதியில் நண்பர்களோடு தொட்டு பிடிக்கும் போட்டி விளையாடுவதென்பது தனி சுகம். இந்த முறை இந்தியா போகும் போது கண்டிப்பாக மகள்களை அழைத்துப் போவதாக சொல்லியிருக்கிறேன்.

ஆர்வமிருக்கும் நண்பர்கள் இந்த ஆறு விளையாட்டை தொடரலாம்.

Update - ஐய்யைய்யோ...சொல்ல மறந்துட்டேனே....தேன்கூட்டில் வாக்களிப்பு ஆரம்பிச்சாச்சு....ஒட்டக் குத்துறவங்களும் முதுகுல குத்துறவங்களும் குத்தலாம்....அங்கே மேலேயே "வாக்களிக்க இங்கு சுட்டுங்கள்..."ன்னு லிங்க் இருக்கும்.

Sunday, June 18, 2006

தி டாவின்சி கோட்

பொதுவாக நல்ல படங்கள் என பேசப்படும் படங்களைப் பார்ப்பதற்கு முன் விமர்சனஙகள் எதையும் படிக்க மாட்டேன். கதை தெரிந்துவிடும் அபாயம் இருந்தால் அந்தப் பக்கமே தலைவைக்க மாட்டேன். "நல்ல பிரிண்ட் தானா?? கொஞ்சம் போட்டுக் காடுங்க" என்று வழக்கமாக தொனதொனக்கும் நச்சரிப்பு இந்தப் படங்களுக்கு இருக்காது. இந்தப் படத்துக்கு இதையெல்லாம் சமாளிப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் சமாளித்துவிட்டேன். யேசுவுக்கும் இந்தக் கதைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதைத் தவிர ரொம்ப விஷயம் தெரியாமல் பார்க்க ஆரம்பித்தேன்.


கிறுத்துவர்களையும், கத்தோலிக்க குருமார்களையும் பற்றி இந்த கதைக் கரு அவதூறு பரப்புகிறது என்ற சீரியஸான வாதங்களுக்குள் போகாமல் அண்ட்ராயர் தெரிய லுங்கி கட்டிக் கொண்டு பீடி வலித்துக் கொண்டு ஃபீலீங்காய் படம் பார்க்கும் சராசரி "C" சென்டர் குடிமகனாகவே எனது விமர்சனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக வெகுசில கதைக் களம் மற்றும் முடிச்சுக்களே (ஸ்டோரி நாட்) "அட இன்னமா யோசிச்சிருக்கான்பா" என்று சொல்ல வைக்கும். இந்த கதையும் என்னைப் பொறுத்த வரை அந்த ரகம். பொய் சொன்னாலும் கிரியேட்டிவிட்டியோடு சொன்னால் தான் ரசிக்க முடியும். அதில் கதாசிரியர் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார். ஆனால் சில இடங்களில் அதுவே சறுக்கியதாகவும் உணர்ந்தேன். மேரி மெடலினின் தொடர்புகளை நம்ப வைப்பதற்காக காட்டும் ஆதாரங்களும் சம்பவங்களும் எனக்கு அத்தனை கன்வின்ஸிங்காக இல்லை. ஆனால் இவை கதையை தொய்யவிடாமல் திரைக்கதையை நன்றாக அமைத்திருக்கிறார்கள். டாம் ஹேன்க்ஸின் நடிப்பு பற்றி சொல்லவேண்டியதே இல்லை. மனுஷன் வழக்கம் போல் படம் நெடுக கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். படத்தில் எனக்கு ஒளியமைப்பும் மிகவும் பிடித்தது. ஒளியமைப்பு காட்சிகளுக்கு கூடுதல் வெயிட் தருகிறது.(நோண்டி நொங்கெடுக்கும் சங்கம் மன்னிக்கவும்.. இப்படி எதாவது சொன்னாத் தான் பந்தாவா இருக்கும்).

டேன் ப்ரவுன் கதை எழுதும் போதே ஹாலிவுட்டுக்கு என்று மனதில் நினைத்திருப்பார் என்று நினைக்கிறேன். உதவுதாக நடிக்கும் இயன் மெக்லீனும் அவரது கையாளும் அக்மார்க் ஹாலிவுட் ரகம். படத்தில் முதலில் ஹூட் எல்லாம் போட்டுக்கொண்டு கொலையெல்லாம் செய்யும் சிலாஸ் வெறும் திகில் பங்களிப்புக்காவே கதை முழுவதும் வருகிறார். கேப்டனாக வரும் ஜீன் ரெனோவின் நடிப்பு எனக்கு பிடிக்கும் (காட்ஸில்லா). ஆனால் அவர் நடிப்புக்கு இந்தப் படத்தில் ரொம்ப தீனியில்லை.

டேன் ப்ரவுனின் நாவலை இன்னும் படிக்கவில்லை ஆனால் முடிவு ஆரம்பத்திலேயே புரிந்து விட்டது. அது தான் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. சோபி தான் அந்த ஆதாரம் என்று சொல்லும் போது ஆச்சரியத்துக்கு பதில் தஙவேலு பட "அதான் எனக்குத் தெரியுமே" டயலாக் தான் வருகிறது. திரைகதையில் உள்ள மிகப் பெரிய ஓட்டை அதற்கப்புறம் வரும் மேரியின் சடலம் எங்கிருக்கிறது என்ற கடைசிக் காட்சி. சில விஷயங்களை என் பெண்டாட்டி பாத்திரம் தேய்ப்பது போல் ஓவராய் தேய்க்கக் கூடாது, என்னைப் போல் மேம்போக்காய் தேய்த்து விட்டு மீதியை பார்ப்பவர்களின் கற்பனைக்கு விட்டு விட வேண்டும். "நட்சத்திர கூரையின் கீழே" என்று உணர்ந்து டாம் கீழே பார்ப்பதாக முடித்திருந்திருக்கலாம்...அதை விடுத்து கிராபிக்ஸை தினித்து...ஹார்பிக் விளம்பரம் மாதிரி கீழே இருக்கும் பிரமிட்டுக்குள் நுழைந்து...அது சரி படத்துக்கு கொஞ்சம் திருஷ்டி வேண்டாமா?

நாவலை இன்னும் படிக்கவில்லை. படத்துக்காகவும் ஓஸி பார்ட்டிக்காவும் காத்திருந்தேன்..இனிமேல் கூடிய சீக்கிரம் படித்துவிடுவேன்.

Tuesday, June 13, 2006

அன்புள்ள டைரி

அடுத்தவர் டைரியைப் படிப்பது தப்பு. என்னைத் தவிர என் அனுமதி இல்லாமல் இந்த டைரியைப் படிப்பவர்கள் நூறு வருடம் நரகத்தில் எண்ணைக் கொப்பரையில் காய வேண்டும்.

அன்புள்ள டைரி,
இன்று பூனே மாமா வந்திருந்தார். இந்தப் பேனா பரிசாக கிடைத்தது. இதில் வாட்ச் வேறு இருக்கிறது. ஆனால் எழுதிக் கொண்டே நேரம் பார்ப்பது சிரமமாக இருக்கிறது. போகப் போக பழகிவிடும் என்று நினைக்கிறேன். ஆனால் பேனா நன்றாக எழுதுகிறது. இந்தப் பேனாவை டைரி எழுத மட்டும் வைத்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். ஓகே டைமாச்சு தூங்கப் போகனும் சி.யூ. பை

அன்புள்ள டைரி,
சாரி நேற்று நேரம் கிடைக்கவில்லை அதான் எழுதவில்லை. பூனே மாமா இன்று ஊருக்குப் போகிறார். மிச்சத்தை நாளைக்கு எழுதுகிறேன்.

அன்புள்ள டைரி,
நான் ரொம்ப மோசம். எனக்குத் தெரியும் ஒருவாரமாக டைரி எழுதவில்லை. இனிமேல் ஒழுங்காக எழுதுகிறேன். இன்று ஸ்கூல் திறந்தது. எங்க க்ளாஸில் புதிதாக நிறைய பேர் இருக்கிறார்கள். இன்னும் ரொம்ப பழகவில்லை. கேசவன் ரொம்ப பிகு பண்ணுகிறான். புது பையன்களை வைத்துக் கொண்டு நானே புதுசா செட் ஆரம்பிக்கலாமென்று இருக்கிறேன். என்னுடைய பிறந்தநாள் இந்த மாதம் வருகிறது. எப்போ என்று தெரியுமா? சொல்லு பார்ப்போம்.

அன்புள்ள டைரி,
இன்று எனக்குப் பிறந்தநாள். ஹேப்பி பர்த் டே டூ மீ. இன்றிலிருந்து நான் டீன் ஏஜாம். "நிறைய சுவரசியமாய் இருக்கும் மனச ரொம்ப குழப்பிக்காம என்ஞ்சாய் பண்ணு" என்று சித்ராக்கா சொன்னார்கள். சரி என்று சொல்லியிருக்கிறேன். இனிமேல் மனதை குழப்பிக் கொள்ளமாட்டேன். சித்ராக்கா அப்பா நிறைய சாக்லேட் அள்ளிவிட்டார். கணேஷுக்கு குடுக்க முடியவில்லை. பை ஸ்டார் வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கேன்.

அன்புள்ள டைரி,
இப்போவெல்லாம் தொடர்ந்து எழுதமுடியவில்லை. மன்னிச்சுக்கோ. உன்கிட்ட மட்டும் தான் நான் மனம் விட்டுப் பேசறேன். எங்கள் ஸ்கூலில் நேற்று ஸ்போர்ட்ஸ் டே. சந்துரு சைட் அடிக்க சொல்லிக் கொடுத்தான். நானும் சந்துருவும் சேர்ந்து சைட் அடித்தோம். இன்னும் கொஞ்ச நாளில் நானும் சைட் அடிப்பதில் தேறிவிடுவேன் என்று சந்துரு சொன்னான். எனக்கு சந்தோஷமாக இருந்தது. சந்தியா தான் என் ஆள் என்று முடிவு கட்டி விட்டேன்.

அன்புள்ள டைரி,
ராஜேஷும் சந்தியாவை டாவடிக்கிறான். ஆனால் சந்தியா என்னைப் பார்த்து தான் அடிக்கடி சிரிக்கிற மாதிரி இருக்கிறது. ஸ்கூல் டேயில் சந்தியா டேன்ஸ் ஆடப் போகிறாள். நான் நாடகத்தில் உண்டு. இனிமேல் நிறைய கோட்வேர்ட் யூஸ் செய்யவேண்டும் வீட்டில் யாராவது படித்துவிட்டால் அவ்வளவு தான்.இன்று ஜ்fஇச்ஜ்fச்ட். நாளையிலிருந்து மிட் டேர்ம் ஆர்ம்பிக்கிறது. சோ படிக்கப் போகிறேன்...பை

அன்புள்ள டைரி
பரீட்சை நன்றாக எழுதியிருக்கிறேன். ஹே...! இன்றைக்கு யாருமில்லாத போது அப்பாவுடைய ஷேவிங் செட் எடுத்து ஷேவ் செய்து பார்த்தேன். ஆனால் முகத்தைப் பார்த்து அப்பா கண்டுபிடித்துவிட்டார். அதுக்குள்ள என்ன அவசரம் என்று ரொம்ப சத்தம் போட்டார். ஒரு தரம் ஷேவ் செய்தால் அப்புறம் வளர ஆரம்பித்துவிடுமாம்.ஹீ ஹீ அதுக்கு தானே ஷேவ் செய்ததே.

அன்புள்ள டைரி
ஸ்கூல் கிரிக்கெட் டீமில் நான் தான் கீப்பர். அடுத்த வாரத்திலிருந்து டோர்னமென்ட் இருக்கு. இனிமேல் டெய்லி ப்ராக்டிஸ் போகனும். உடம்பு பெண்ட் எடுக்குது. சந்தியா இன்று ஹாஸ்டலுக்குப் போகும் போது நான் கீப்பிங் செய்ய்வதைப் பார்த்தாள். எனக்கு சந்தோஷமாக இருந்தது. இனிமேல் அவளை இம்ப்ரெஸ் செய்வது ஈ.ஸி என்று நினைக்கிறேன். நீ தான் ஹெல்ப் பண்ணனும். ஹி ஹி இதை ஏன் உன்னிடம் கேட்கிறேன்? தெரியலை...

அன்புள்ள டைரி
டோர்னமென்டில் சொதப்பி விட்டோம். எங்க பவுலிங் சரியில்லை. விளாசிவிட்டார்கள். நான் மூனு ஸ்டெம்பிங். ஒரு மேன் ஆப் த மேட்ச். ஸ்கூலில் ப்ரேயரில் வைத்து கொடுப்பார்கள். சந்தியா கண்டிப்பாக பார்ப்பாள். இன்று க்ளாசிலிருந்து அக்னி நட்சத்திரம் போனோம். செம கூட்டம். படம் சூப்பராக இருந்தது. எல்லோருக்கும் நிரோஷா பிடித்தது ஆனால் எனக்கு அமலா தான் பிடித்தது. சந்தியாவிற்கு கொஞ்சம் கொஞ்சம் அமலா ஜாடை இருக்கிறது.

அன்புள்ள டைரி
நான் இன்னிக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். சந்தியா என்னுடன் பேச ஆரம்பித்துவிட்டாள். ஸ்கூல் டேயில் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தோம். க்ளாசில் எல்லாப் பையன்கள் காதிலும் ஒரே புகை. சந்தியாவின் அப்பா எங்க ஸ்கூலில் தமிழ் எடுக்க சேரப் போகிறாராம். அனேகமாக எங்க க்ளாசுக்கு எடுப்பாராம். எப்படியாவது அவரையும் இம்ப்ரெஸ் செய்யவேண்டும். ஸ்கூல் டேயில் நாடகத்தில் தூள் கிளப்பிவிட்டேன். சந்தியா ரொம்ப பாராட்டினாள்.

அன்புள்ள டைரி
முகத்தில் நிறைய பரு வருகிறது. யாருக்கும் தெரியாமல் விக்கோ டர்மரிக் தடவிக்கொள்கிறேன். சே என் பொழப்ப பார்த்தியா. சித்ராக்கா ரொம்ப சைட் அடிக்காதடா என்று கேலி செய்கிறார்கள். சந்தியாவைப் பற்றி சித்ராக்காவிடம் சொல்லலாம என்று நினைக்கிறேன். குழப்பமாக இருக்கு. இப்போதைக்கு வேண்டாம்..அப்புறம் பார்ப்போம்.

அன்புள்ள டைரி
இன்றைக்கு கிங்பெல் ஒரு புத்தகம் கொடுத்தான். என்ன புக் என்று சொல்லமாட்டேன். நீயே புரிஞ்சுக்கோ. அடப் பாவிங்களா க்ரூப் ஸ்டடின்னு சதீஷ், சங்கர் எல்லாரும் இதைத் தான் படித்திருக்கிறார்கள். ரொம்ப தைரியம் கிங்பெல்லுக்கு. பக்கத்தூருக்குப் போய் வாங்கி வருகிறான். என்னிடமே விஷயத்தை மறைத்துவிட்டார்கள். இன்று தான் கிங்பெல் படிச்சுட்டு பெரியமனுஷனாகு என்று கொடுத்தான். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் ஆனால் எனக்குப் பிடிக்கலை. இனிமேல் படிக்க மாட்டேன் சத்தியம்.

அன்புள்ள டைரி
சந்தியாவும் நானும் அடிக்கடி ரொம்ப நேரம் பேசுகிறோம். அவ அப்பா என்னுடைய தமிழ் வாத்தியார். கொஞ்சம் கோபப்படுகிறார். வாத்தியார் என்றால் கோபம் வரத் தானே செய்யும். சந்தியாவிடம் காதலிக்கிறேன் என்று சொல்லிவிடலாமா என்று நினைக்கிறேன். ஆனால் பயமா இருக்கு. என்ன செய்ய? அவ மட்டும் என்னைக் காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டால் பிள்ளையாருக்கு தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டிக்கொண்டிருக்கிறேன். உனக்கு கல்யாணம் ஆகலங்கிற வருத்ததில என்னோட மேட்டர கவுத்திராத பிள்ளையாரப்பா. மேத்ஸ் கொஞ்சம் வீக்கா இருக்கு என்று நானும் க்ரூப் ஸ்டடி போய் வருகிறேன். இப்போ தமிழ் பேச்சுப்போட்டியில் எல்லாம் கலந்து கொள்கிறேன். வாத்தியார இம்ப்ரெஸ் பண்ணனும்ல...அடுத்து கவிதை எழுத ஆரம்பிக்கனும். "மாமா உன் பொண்ணக் குடுன்னு" பாட்டு எழுதினா பிச்சிப்புடுவார்...வேற எதாவது எழுதனும்.

அன்புள்ள டைரி,
சந்தியாவிடம் எப்படி சொல்ல எப்போது சொல்ல...பயமாய் இருக்கிறது. பப்ளிக் எக்ஸாம் வருகிறது அதற்கப்புறம் சொல்லவா? முன்னாடி சொல்லவா? அப்பா கூப்பிடுகிறார்..அப்புறம் எழுதுகிறேன் பை...


அதற்கப்புறம் டைரியில் வெத்துப் பக்கங்களே இருந்தன. எவ்வளவு முதிர்ச்சி இல்லாமல் எழுதியிருக்கிறேன் என்று இப்பொழுது படித்து பார்த்த போது சிரிப்பு வந்தது. சந்தியா பிறந்தநாளைக்கு அனுப்பிய பிறந்தநாள் வாழ்த்து இதே மேஜையில் ட்ராவின் அடியில் இடுக்கில் ஒளித்து வைத்திருந்தேன். டைரியை பழைய படி ஒளித்துவைத்துவிட்டு வாழ்த்தட்டையை தேடிப் பார்த்ததில் கிடைத்தது. “நேசமுடன் சஞ்சு” என்று கையெழுத்திட்டிருந்தாள். "நேசமுடன்" என்பதற்கு என்ன அர்த்தம் என்று எவ்வளவு ராத்திரி தூக்கமில்லமல் குழம்பி இருப்பேன்?

"என்னங்க...அங்க ஹாலில் எல்லோரும் வந்திருக்காங்க...எப்பவோ ஒரு தரம் ஊருக்கு வர்றோம்...அவங்க கூட பேசாம இங்க என்னத்த மேஜைல குடைஞ்சுகிட்டு இருக்கீங்க?"

"ஒன்னுமில்லமா சும்மா நோண்டிப் பார்த்துகிட்டு இருக்கேன்...இதோ வர்றேன்"

"...சுமி, என் தமிழ் வாத்தியார் இங்க பக்கத்தூர்ல தான் இருக்கார்...இந்த தரம் போய் பார்த்துட்டு வரலாம்"

"என்ன திடீர்ன்னு இவ்ளோ நாளில்லாமல அவர் நியாபகம்..."

"ரொம்ப நல்ல வாத்தியார்மா...அவர் எடுத்த பாடத்துல தான் நான் இன்னிக்கு கதை கவிதைன்னு எழுதிகிட்டு இருக்கேன்...ஒரு நடை போய் எப்படி இருக்கார்ன்னு பார்த்துட்டு வரலாம்"

***************
பின்குறிப்பு - "வளர்சிதை மாற்றம்" - தேன்கூடு இந்த மாதப் போட்டிக்கான பதிவு இது. வழக்கம் போல் ஓட்டுப் போடாம கவுத்துங்க...நானும் "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விகரமாதித்தன் வேதாளத்தைத் தேடி முருங்கைமரத்தின்...."

Wednesday, June 07, 2006

ஒரு பிரச்சனை

ஒரு வாரமாக இந்தப் பிரச்சனை. வெளியே சொல்ல வெட்கமாயிருந்தது. இங்கு அடிக்கடி எழுதாததற்கு கூட அது தான் உண்மையான காரணம். யாரிடமாவது சொல்லி அழலாம் என்றால் பெயர் கெட்டுவிடுமோ என்ற தன்மான உணர்ச்சி தடை போட்டுவிட்டது. தமிழ் ப்ளாகில் கொஞ்சம் நோண்டி நொங்கெடுத்தீர்களானால் நிறைய பேர், ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இந்தப் பிரச்சனையை சந்தித்திருப்பார்கள். இப்போ கொஞ்ச நாளாக எனக்கும் இந்த தொந்தரவு ஆரம்பித்து இருக்கிறது. சிலபேர் வெளியே வெளிப்படைசொல்லியிருப்பார்கள், சிலபேர் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டிருந்திருப்பார்கள். ஊர், பெயரைத் தெரியாமல் வைத்திருந்தாலாவது பெரிய சேதமிருக்காது. என் கதையில் அதுவும் இல்லை, இனி ஒன்றும் செய்யமுடியாது. ஒருவேளை நீங்கள் வலைப்பதிவராயிருந்து உங்களுக்கு இந்தப் பிரச்சனை இதுவரை வரவில்லையென்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். ஆனாலும் கொஞ்சம் உஷாராக இருங்கள்.

நீங்கள் தமிழ்வலைப்பதிவுகளை படித்துவருபவரானால் நான் எதைப் பற்றி சொல்லவருகிறேன் என்று இதற்குள் யூகித்திருப்பீர்கள். ப்ளாக் ஆரம்பித்தாலே இந்த மாதிரியான தொல்லைகளெல்லாம் வரும் என்று தெரிந்திருந்தாலும் நமக்கு வரும் போது தான் உரைக்கிறது. எப்படியாவது இதை சமாளித்து விடலாம் என்று நானும் ஒரு வாராமாக யோசித்து வருகிறேன், மண்டைக் குடைச்சல் தான் ஜாஸ்தியாகிறதே தவிர ஒரு வழியும் தெரியவில்லை. வலைப்பதிவுலகில் நண்பர்கள் இதே பிரச்சனையை சந்தித்த போது மக்கள் பின்னூட்டங்களில் நிறைய அறிவுரைகள் சொல்லியிருந்தார்கள். அவற்றையெல்லாம் நியாபகப் படுத்திப் பார்க்கிறேன்.ப்ளாக் உலகம் எனக்கு எவ்வளவோ அனுபவங்களை, படிப்பினைத் தந்து இருக்கிறது.

பேசாமல் ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டு கொஞ்ச நாள் கழித்து எழுத ஆரம்பிக்கலாமா என்று கூட யோசித்தேன். ஆனால் அதனால் பிரச்சனை ஓயுமா? சந்தேகமே. நான் திரும்ப எழுத ஆரம்பித்த பிறகு இதே பிரச்சனை வராது என்பது என்ன நிச்சயம்?

இந்தப் பிரச்சனைக்கெல்லாம் துவண்டால் அப்புறம் ப்ளாக் எழுதவே வந்திருக்ககூடாது என்று வீட்டில் அறிவுரை.இனியும் சும்மாயிருந்தால் பிரச்சனை ஒழியாது. பிரச்சனையை நாமே கையில் எடுத்துக் கொண்டு காரியத்தில் இறங்க வேண்டியது தான் என்று இந்தப் பதிவை எழுத ஆரம்பித்து விட்டேன்.

அப்படியென்ன ப்ளாக் எழுத முடியாமல் பிரச்சனை என்று கேட்பீர்கள் ...அதான் பிரச்சனையே...எதைப் பற்றி ப்ளாகில் எழுத என்று நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன்...ஒரு டாப்பிக்கும் மண்டையில் உரைக்க மாட்டேன்கிறது.இதைப் பற்றி எழுதலாமா அதைப் பற்றி எழுதலாமா என்று எவ்வளவு நேரம் தான் மனுஷன் யோசிப்பது? வெளியே சொன்னால் வெட்கக்கேடு அல்லவா? உங்களில் நிறைய பேர் இதே பிரச்சனையை சந்தித்திருக்கிறீர்கள் தானே? ஹப்ப்பா...நான் சொல்லிட்டேன்...பதிவும் போட்டாச்சு :)) இப்போ தான் ஒருவழியா பிரச்சனை சால்வ் ஆச்சுப்பா...


பி.கு- இன்று தேன்கூட்டில் "இன்றைய வலைப்பதிவு" பகுதியில் டுபுக்கு வல்லவர் நல்லவர் நாலும் தெரிஞ்சவர் என்று அங்கங்கே மானே தேனே பொன்மானே போட்டு போட்டோவுடன் போட்டிருக்கிறார்கள். தேன் குடித்த மாதிரி இருந்தது. தேன்கூட்டிற்கும், என்னைப் பற்றி நாலு வரி எழுதிய மானே தேனே மகராசனுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, June 05, 2006

புதுப்பேட்டை

நாராயணின் நிழலுகக்த்தைப் பற்றிய பதிவைப் படித்ததிலிருந்தே "புதுப்பேட்டை" படத்தை ரொம்ப எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். செல்வராகவனின் ஸ்கிரீன் ப்ளே அலுக்காமல் இருக்கும் என்ற நம்பிக்கை வேறு. ஒரு படம் பார்ப்பதற்குண்டான எந்த ஆம்பியன்ஸும் இல்லாமல் சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு பஸ்ஸில் போகும் போது பார்ப்பது மாதிரி பார்த்துத் தொலைத்தேன். நல்ல படங்களையெல்லாம் ஒரிஜினல் டி.வி.டியில் தான் பார்ப்பது என்ற கொள்கையை காலி செய்து, சொத்தை டி.வி.டியில் பார்த்தது அடுத்த தப்பு. எனக்குப் படம் பார்க்கும் போது காட்சியில் பேக்கிரவுண்டில் கூடையில் காய்கறி விக்கும் அம்மணி முதற்கொண்டு எல்லோரும் என்ன சொன்னார்கள் என்று புரிந்து பார்க்கவேண்டும் இல்லாவிட்டால் ர்ரிப்பீட்டு தான். இதனாலேயே இரண்டு மணி நேர படம் மூனேமுக்கால் மணி நேரம் ஓடும் எங்கள் வீட்டில். என் நேரம் இந்த டி.விடியில் ரீவைண்ட் வேலை செய்யவில்லை.

நல்ல படமா, சரி போடுங்கள் பார்ப்போம் என்று தங்கமணி மிக்ஸியில் தோசைக்கு அரைக்கப் போய்விட்டார். பேக்கிரவுண்டில் மிக்ஸி சத்தத்தில் வீட்டிலிருந்த வாண்டுகள் குறுக்கேயும் நெடுக்கேயும் ஓட குடும்பஸ்தனாய் படம் பார்ப்பதே சூப்பர் அனுபவம். நல்ல படமும் வெறுத்து போய்விடும். நடு நடுவே போய் சாம்பாருக்கு உப்பு பார்ப்பது, கேஸை அணைத்துவிட்டு வருவது, துணி காயப் போட்டிருப்பதால் மழை வருதா என்று அடிக்கடி ஒரு லுக்கு விடுவது, குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடுவது என்று ஏகப்பட்ட அடிஷனல் டியூட்டிகளை எடுத்துக் கொண்டு படம் பார்ப்பது இன்னும் விசேஷம்.

ஸ்கெட்சு போடுவது, போட்டுத் தள்ளுவது, மற்றும் இன்ன பிற தாத்பரியங்களை நாராயணின் பதிவிலிருந்து புரிந்து கொண்டு பார்த்ததால் இத்தனை இம்சைகளுக்கும் நடுவில் விஷயங்கள் முதலிலிருந்தே புரிந்தது. கதையை எதார்த்தமாக ஆரம்பித்து கொண்டு செல்வதே நன்றாக இருந்தது. ஸ்க்ரீன்ப்ளே நன்றாக இருந்தாலும் கொஞ்சம் ஓவர் காரமாக இருந்தமாதிரி தோன்றியது -அல்லது அது பட்டியல், தலைநகரம், சித்திரம் பேசுதடி என்று ஒரே ரவுடிகளைப் பற்றிய படமாய் பார்த்ததினால் வந்த அலுப்பாக இருக்கலாம். யுவன் வழக்கம் போல் தூள் கிளப்பியிருக்கிறார். படத்தை விட பாடல்கள் தான் மிகப் பிடித்தது. ஒரே ஒரு பாட்டில் மட்டும் "காசு மேலே காசு வந்து" சாயல் லேசாக வருகிறது. பாதி வரை படம் எப்படி போகும் என்று ஈ.ஸியாக ஊகிக்க முடிகிறது. எதிர் கோஷ்டியாயிருந்தாலும் ரவுடிகள் எல்லோரும் ஹோல்சேலில் கத்தி வாங்கி வந்தமாதிரி எல்லோரும் ஒரே விதமான கத்தியை வைத்துக் கொண்டிருப்பது...ராஜா கால சண்டையில் வருவது மாதிரி இருக்கிறது. தனுஷ் ரொம்ப மெனக்கெட்டிருக்கிறார். "தொண்டையில் ஆப்ரேஷன் காசு கொடு" என்று சொல்வது கலக்கல் :)

ஸ்னேகா கலக்கியிருப்பார் என்று ரொம்ப எதிர்பார்த்தேன். வரும் நாலைந்துக் காட்சியில் சும்மா பல்லைக் கடித்துக் கொண்டு அழுகிறார். சே இவ்வளவு தானா என்று அலுத்துக் கொள்ளும் போது சோனியா அகர்வால் நுழைகிறார். சும்மாவே சோனியா சிரிக்க மாட்டார் அதுவும் செல்வராகவன் படத்தில் சிரிக்கவா போகிறார் என்று நினைத்தது தப்பவே இல்லை. இரண்டு பேரும் என் இரண்டாவது பெண் சாப்பிட அழுவதைவிட அழுகிறார்கள்.

அடப் போங்கடா நானே பெரிய ரவுடி நிறையபோட்டுத் தள்ளியிருக்கேன் என்று ரவுசு விட்டதில் சாயங்காலம் வாஷிங் மிஷினில் நிறைய போட்டுத் தள்ளவேண்டிய டியூட்டி சேர்ந்து கொண்டது தான் மிச்சம். படம் ஓ.கே. ரகம். நான் எதிர்பார்த்த அளவு தீனியில்லை. இப்போதைய திரைப்பட ட்ரெண்டின் படி கடைசியில் ரவுடியைப் போட்டுத் தள்ளிவிடப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கையில் அந்த ரவுடி இப்போது நிறைய கல்வி நிறுவனங்களை நடத்திவருகிறார் என்று ஸ்லைடு போடுகிறார்கள். நாராயணன் சொன்ன ஆள் தானா அது?