Friday, January 27, 2006

ப்ளாக் குறுக்கெழுத்துப் போட்டி.

தமிழி வலைப்பதிவுகளும், ஆங்கில வலைப்பதிவுகளும் கலந்த கிறுக்கெழுத்துப் போட்டி இது. கன்னி முயற்சி. கட்டம் போட்டு கேள்வி கேட்பதற்கே மண்டை காய்ந்துவிட்டதால் கொஞ்சம் கடினமாக ஆக்க முயற்சித்திருக்கிறேன். யாராலும் பதில் சொல்ல முடியாவிட்டல் நானே வெற்றி பெறுவேன் ஆயிரம் பொற்காசுகளும் எனக்கே!! சவாலுக்கு நீங்க ரெடியா?...
(கேள்வி உங்களைப் பற்றியதாய் இருந்தால் நீங்கள் அனைத்திற்கும் பதில் சொன்னால் தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்...இல்லாவிட்டல் இருவர் சம எண்ணிக்கை பதிலளிதிருந்தால் உங்களைப் பற்றிய கேள்விக்கான பதில் உங்கள் ஸ்கோரில் தள்ளுபடி செய்யப்படும்)





குறியீடுகள்
மேலிருந்து கீழ் - மே.கீ
இடமிருந்து வலம் - இ.வ
கீழிருந்து மேல் -கீ.மே
() அடைப்புக்குள் எத்தனை எழுத்துக்கள் என்ற க்ளூ


1.Graffiti(3) - மே.கீ
2.திரும்பிப் பார் (3)- இ.வ
3.கேப்டன் படம் (5)- மே.கீ
4.தமிழ்மணம் (2) -மே.கீ
5.கண்ணழகி-(4)- இ.வ
5.அழகான ராட்சஸி -(3) - மே.கீ
6.ம்ளத -(3) - இ.வ
7.என் ___ பாடுது -(3) இ.வ
8.செய்யாதே (3) - இ.வ
9.ஒன்னும் "கு"றைந்துவிட மாட்டேன் -(3) கீ.மே
10.தமிழர்களுக்குப் பிடித்த காம்பினேஷனில் ரெண்டாவது (2) - மே.கீ

PS - Dont click on comments until you have solved. People have already started answering :)

Monday, January 23, 2006

Alma மேட்டர் - 3

For previous parts --> part1   part2

பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சல் என்பதற்கெல்லாம் கவலையே படாமல் நான் கோலிக்காய் விளையாட போய்விட்டேன். அப்பாவும் அம்மாவும் தான் நான் அந்தப் பள்ளியில் படிக்காவிட்டால் இங்கிலீஸில் ப்ளாக் செய்ய முடியாதே என்று ரொம்பவும் கவலைப்பட்டார்கள். அப்புறம் அப்பா அந்தப் பள்ளியின் பெரிய தலையைத் தனியாகப் பார்த்து "பார்த்து செய்யுங்க சார்..என் பையன் உங்க பள்ளியில் படித்துத் தான் பீட்டர் விடும் பெண்களுக்குப் போட்டியாக ஒரு ப்ளாக் ஆரம்பிக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டதால் அந்தக் க்ளாசில் கூடுதலாக ஒரு சீட் குடுத்து என்னையும் சேர்த்துக் கொண்டார்கள்.
(இந்தப் ப்ளாக் உலகில் பீட்டர் விடும் பெண்களைப் பார்த்திருக்கிறீர்களா?...என்னல்லாமோ கலக்கலாக வார்த்தைகளைப் போடுகிறார்கள்...பையன்களில் சில பேரும் இந்த விளையாட்டை நன்றாக விளையாடுகிறார்கள் என்றாலும் பெண்கள் ஜனத்தொகை ரொம்ப அதிகம் இவர்களெல்லாம்...டெய்லி சாப்பாடுக்கப்புறம் ஒரு டிக்க்ஷினரியை முழுங்குவார்கள் என்று நினைக்கிறேன்)

நானும் சாக்ஸ் ஷூவெல்லாம் போட்டுக் கொண்டு, தோள் பையை மாட்டிக் கொண்டு ஸ்கூல் பஸ்ஸில் போகலாம் என்று ஏக குஷியாக கிளம்பிவிட்டேன். ஸ்கூலில் இங்கிலீஸில் தான் பேச வேண்டும். சேர்ந்த புதிதில் எனக்கு இங்கிலிபிஸ் அவ்வளவாக வராது (இப்ப மட்டும் என்னவாம்). ஆரம்பத்தில் டீச்சர் எலிசபத்து மகராணி மாதிரி எதாவது கேட்பார். நான் டீ.வி. சீரியல் ஹீரோ மாதிரி முழிப்பேன். கொஞ்ச நேரம் பராக்கப் பார்த்துவிட்டு அப்புறம் உக்காச்சிக்க சொல்லிவிடுவார்கள். "டீச்சர் இவன் என்னை நுள்ளிட்டான்" என்பதைக் கூட இங்கிலீஸில் சொல்ல வேண்டுமே என்று நுள்ளியதை எல்லாம் பெரிய மனது செய்து தள்ளுபடி செய்து விடுவேன்.

ஸ்கூல் வீட்டிலிருந்து கொஞ்சம் தூரம். ஸ்கூல் வேனில் தான் பயணம். நான் சேர்ந்த வேளை அவர்கள் அப்புறம் நல்ல காசு பார்த்து இரண்டு பஸ் வாங்கி விட்டார்கள். ஸ்கூல் வேனில் ஒரு அக்கா கதையெல்லாம் சொல்லி பாட்டு பாட சொல்லித் தருவார். நானும் தெருவிலிருந்த இன்னும் மூணு நசுக்குகளும்தான் அக்காக்கு பின்பாட்டு. இந்த ஸ்கூலில் ஆரம்பத்தில் மத்தியான தூக்கத்திற்கு டகால்டி வேலையெல்லாம் செய்ய வேண்டி இருக்கவில்லை. அவர்களே மம்மம் சாப்பிட்ட பிறகு பாயைப் போட்டு ஒரு மணி நேரம் தூங்க விடுவார்கள். அப்புறம் பையன்கள் ஓரத்தை கடித்து சுவைத்திருக்கும் ஒரு ப்ளாஸ்டி தம்ளரில் பால் தருவார்கள். எல்லாம் கொஞ்ச நாளைக்குத் தான் நடந்தது. ஸ்கூல் கொஞ்சம் பாப்புலர் ஆகி கூட்டம் சேர்ந்தவுடன் தூக்கம், பாலெல்லாம் கோவிந்தா.

என்டரென்ஸ் பரீட்சையில் தான் பாஸுக்கு ஒரு மார்க் குறைச்சலே ஒழிய படிப்பில் ஓரளவு நன்றாகப் படித்து வந்தேன். தெருவில் கூடவே இரண்டு பேர் படித்து வந்த்தால் இந்தப் பியர் ப்ரஷ்ஷர்(peer pressure) தொல்லை தாங்க முடியாது. அதுவும் அதில் ஒருவன் க்ளாசில் முதல் மார்க் வேறு வாங்குவான். அதனாலயே வூட்டுல பெண்டு நிமிர்ந்துவிடும். அக்காக்களெல்லாம் அவர்கள் பாடத்தைப் படிக்காமல் என்னை "ஸ்டுடென்ட் நம்பர் ஒன்" ஆக்குவதிலிலேயே குறியாக இருப்பார்கள். எப்படியோ அப்போ அப்போ எதாவது செய்து அவனுக்கு அடுத்த மார்க்காவது வாங்கிவிடுவேன். அன்றைக்கு மட்டும் சீக்கிரமாகவே தெருத் தோழிகளுடன் கையைப் பிடித்துக் கொண்டு ஜோடிப் புறா விளையாடப் போய்விடலாம். மத்த நாளெல்லாம் பாதி விளையாட்டிலேயே திரும்ப வந்து விரலை மடக்கி மடக்கி விட்டதைப் பார்த்து கண்க்கு போட வேண்டியிருக்கும்.

ஒரு முறை ஒன்னாவது படிக்கும் போது முண்டந்துறைக்கு சுற்றுலா போய் வந்தோம். திரும்ப வரும் போது பஸ்ஸில் ஒரு வாத்தியார் "நேத்து ராத்திரி.." என்று பாட்டு எடுத்துவிடுவார் ....நாங்களெல்லாம் அர்த்தம் தெரியாமலே பல்லைக்க் காட்டிக் கொண்டு குஷியாக "யெம்மா..." என்று எசப் பாட்டு பாடுவோம். அவர் திரும்ப "தூக்கம் போச்சுடி..." நாங்கள் "யெம்மா...". வீட்டில் வந்து இதே எசப்பாட்டை சந்தோஷமாக எடுத்து விட தொடையில் நல்ல நிமிட்டாம் பழம் கிடைத்தது.

இந்த ஸ்கூலிலே தான் நான் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேனாகையால் என் படிக்கும் காலத்தின் முக்கால்வாசி இங்கேயே கழிந்துவிட்டது.எட்டாம் வகுப்பு வரை இந்த முண்டந்துறை சுற்றுல்லாவைத் தவிர இங்கே ப்ளாகில் சொல்லுமளவுக்கு விசேஷமாக ஒன்றும் நடக்கவில்லை. நான் எட்டாவது படிக்கும் போது க்ளாசில் முக்கால்வாசி பேர் ஸ்கூலுக்கு சைக்கிளில் வர ஆரம்பித்தார்கள். வீட்டில் ஒரு சைக்கிள் தான் இருந்தது அதுவும் மாமாவுக்கு வேண்டும் என்பதால் கிடைக்கவில்லை. நானும் இன்னொரு நண்பனும் மட்டும் இன்னமும் ஸ்கூல் பஸ்ஸில் வந்து கொண்டிருந்தோம். பொதுவாக ஸ்கூல் பஸ்ஸில் பெண்கள் தான் அதிகம் வருவார்கள். எங்கள் வயது பையன்கள் சைக்கிளில் தான் வருவார்கள் என்பதால் எங்களுக்கு கொஞ்சம் வெட்கமாக இருக்கும். எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத் தான். அப்புறம் நாங்கள் தான் பஸ்ஸில் சீனியர் (பையன்களில்). அந்த சமயத்தில் எங்களை விட ஒரு வருட சீனியர் பெண்கள் மூன்று பேர் வந்து கொண்டிருந்தார்கள்.

--தொடரும்

Friday, January 20, 2006

யவன ராணி

"எது எது எப்போ நடக்கனுமோ அது அப்போ தான் நடக்கும்" - ரஜினி பட டயலாக் மாதிரி இருந்தாலும் இது கொஞ்சம் உண்மையோன்னு தோனுது. சாண்டில்யனின் யவன ராணி புத்தகத்தை நான் ஊரில் லைப்ரரியில் குடியிருந்த போது பார்த்திருக்கிறேன். இங்கே லண்டனிலும் லைப்ரரியில் அவ்வப் போது பார்த்திருக்கிறேன். என்னவோ எடுக்கவே தோன்றவில்லை. கடல் புறா ஒரு பாகம் மட்டும் படித்து முடித்து அதுபற்றி எழுதிய பிறகு இந்தப் புத்தகத்தைப் பற்றிய உண்மையான அறிமுகம் கிடைத்தது. பிரேமலதா பாலன் தம்பதியினர் படிப்பதற்கு இந்த புத்தகத்தை தந்து உதவினர். அவர்களுக்கு மிகப் பெரும் நன்றி.

இந்தப் புத்தகத்தை இவ்வளவு நாளாகப் படிக்காமல் இருந்தற்காக வருத்தப் படுகிறேன். அவ்வளவு அருமையான புத்தகம். சாண்டில்யனுக்கு விழா எடுக்கலாம் இந்தப் புத்தகத்திற்காக. ஆனால் ஒன்று, புத்தகத்தின் முன்னுரையிலேயே முடிவைச் சொல்லி சொதப்பி விட்டார் மனுஷன். அதனால் புத்தகத்தை படிக்கும் போது முன்னுரையைப் படிக்காதீர்கள்.

பயங்கர விறுவிறுப்புடன் கதையை கொண்டு சென்றிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் சஸ்பென்ஸ் இருக்கும். காதல் ரசம் சொட்டச் சொட்டச் எழுத சாண்டில்யனை அடித்துக் கொள்ள ஆள் கிடையாது என்று நினைக்கிறேன். யாராவது இருந்தால் சொல்லுங்கள் படிக்கிறேன். கதையில் வேலைக்காரியைக் கூட அவ்வளவு அழகாக விவரித்திருக்கிறார். டைபரிஸ், இளஞ்செழியனின் புத்தி கூர்மை அசர வைத்தால் அதற்கு ஆசிரியரின் கடின உழைப்புத் தான் காரணம். ஒரு நாவல் எழுதுவதற்க்கு எவ்வளவு க்ரவுண்ட் ஒர்க் செய்யவேண்டும் என்பதை சாண்டில்யனிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

யவன ராணியைப் பற்றி தனி போஸ்டே போடலாம். ஹாரி பாட்டர் முதல் படத்தைப் பார்த்துவிட்டு இன்னமும் தினமும் பேடிங்க்டன் ஸ்டேஷனில் ட்ரெயின் ஏறுவதற்கு முன்னால் ஒன்பதே முக்காலாவது ப்ளாட்பாரம் இருக்கிறதா என்று தட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதே மாதிரி இந்த புத்தகத்தைப் படிக்க அரம்பிததிலிருந்தே ரோட்டில், ட்ரெயினில் என்று எல்லா இடத்திலும் யவன ராணியைத் தேடிக் கொண்டிருக்கிறேன். (சும்மா ஹலோ சொல்வதற்குத் தான் நீங்க நினைக்கிற மாதிரி இல்லை). "யவன ராணி...என்றுமே ராணி" என்று சன் டிவி டாப் டென் மாதிரி அப்பப்போ உளறல் வேறு ஆரம்பிச்சாச்சு. "வூட்டுக்கு வா நீ"ன்னு வேப்பிலை ட்ரீட்மெண்ட்டில் தான் போய் முடியும் என்று நினைக்கிறேன்.

ஏஞ்சலினா அம்பாளை பிரசவத்துக்கு அனுப்பி விட்டு யவன ராணி இதயத்தில் முடி சூடி விட்டாள்.(அதனால் இன்றிலிருந்து அம்பாள் அபீஷியலாக அபீட்டு) அப்பிடி ஒரு பிடிப்பை ஏற்படுத்தி விடுகிறார் சாண்டில்யன். இந்தப் புத்தகத்தை தனது சிறந்த படைப்பாக சாண்டில்யன் சொல்லியிருக்கிறார். கிடைத்தல் மிஸ் பண்ணாமல் படித்துப் பாருங்கள். என்னை மாதிரி கிறுக்குப் பிடித்து கொஞ்ச நாள் அலைவீர்கள். நான் எதற்கும் இருக்கட்டுமென்று கிரேக்க பாஷையெல்லாம் படிக்க ஆரம்பித்து விட்டேன், யவன ராணிக்கு தமிழ் தெரியும்..இருந்தாலும் கனவில் கிரேக்க பாஷையில் சம்சாரித்தால் ராணி ஒருவேளை இம்ப்ரெஸ் ஆகலாம் பாருங்கள்...

Thursday, January 19, 2006

படம் காட்டும் படலம்

என் மூத்த மகளுக்கு அவளுடைய போட்டோவைப் போடவில்லை என்று வருத்தம். அடுத்த பதிவில் என்னுடைய போட்டோவுடன் போடப் போகிறேன் என்று சொல்லியிருந்தேன். (சந்துல நம்ம போட்டோவையும் சிந்து பாடிருவோம்ல)

கீழே இருப்பது என் செல்ல மகள்கள்... ரெண்டும் சரியான வாலு...








கீழே இருக்கும் புகைப்படங்கள் புலனாய்வுத் துறையில் (கனரக)ஆயுதப் பயிற்சியின் போது எடுத்தது. இரண்டாவது படம் ஆப்பரேஷன் "குருதிப் புனல்" (அங்கயும் நான் தான் கமல் :)) கூட இருப்பது சக கமாண்டோ பாலன். மூன்றாவது படத்தில் ஆத்துக்காரர் கமாண்டோ பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதை மிகப் பெருமையுடன் தங்கமணி பார்த்துக் கொண்டிருக்கிறார்.









புகைப்படங்களில் விளையாட்டுத் தனமான சூழ்நிலை இருப்பதை பார்த்து உங்களுக்கு சந்தேகம் வந்திருக்கலாம். பிற நாட்டு உளவாளிகளுக்குத் தெரியக் கூடாதென்று இந்த மாதிரி செட்டப் செய்திருக்கிறோம். இதெல்லாம் தொழில் ரகசியம்.

Monday, January 16, 2006

பொங்கல் பார்ட்டி


பொங்கல் பார்ட்டி இனிதே நடந்தேறியது. பார்ட்டி உமா, தீபாவின் சிறப்பான ஏற்பாடுகளால் பட்டையைக் கிளப்பியது. பரிசுகள், குழந்தைகளுக்கு மாறுவேடப் போட்டி, விளையாட்டுப் போட்டி, சரவண பவன் சாப்பாடு, ஜோடிப் பொருத்தம், டம்ப் சேரட்ஸ், பாட்டு, ஆட்டம், குத்தாட்டம் என்று ஐந்து மணி நேரம் போனதே தெரியவில்லை. தீபாவளி கொண்டாட்டங்களைத் தொடர்ந்து, பொங்கல் பார்ட்டி என்று கூட்டம் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருக்கிறது. யாகுவில் ஆரம்பித்த குழுவிலும் மக்கள் சேர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்.

பார்ட்டியில் ஒருவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். பார்த்தால் நம்ம பாலாஜி ராஜன். ப்ரென்ச் தாடி எல்லாம் வைத்துக் கொண்டு ப்ளாக்கில் இருக்கும் போட்டோவிற்கும் ஆளுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தார். :)

நானும் தங்கமணியும் பாட்டெல்லாம் பாடினோம். விழாவின் ஹைலைட் வழக்கம் போல் கடைசியில் நடந்த குத்து ஆட்டம் தான். என்னையும் வெகு சில பேரையும் தவிர மற்ற ஆணகளெல்லாம் வெட்கப்பட்டுக் கொண்டு ஒளிந்து கொண்டிருக்க...பெண்களெல்லாம் சும்மா தூள் கிளப்பிவிட்டார்கள். ஆண்களெல்லாம் ஜுஜுபி எல்.கே.ஜி கணக்கா ஆடிக்கொண்டிருக்க எல்லா அம்மணிகளும் சாமியாட்டத்தில் முனைவர் பட்டம் ரேன்ஞ். ஹாலை காலி செய்யவேண்டும் என்று சொன்ன பிறகு தான் சாமியாட்டம் மலையேறியது. படங்களைப் பாருங்க தெரியும். குத்தாட்டத்ற்காகவே அடுத்த பார்டி எப்போ என்று எல்லோரும் கேட்க ஆரம்பிச்சாச்சு.

தினமலரில் இது பற்றிய தொகுப்பு வந்தாலும் வரலாம்.

இரண்டாவது மகள் ராதையாக




தங்கமணி அண்ட் கோ மும்முரமாக ஆடிக் கொண்டிருந்த போது க்ளிக்கியது





Thursday, January 12, 2006

தாயே.....


வாழ்த்த வயதில்லை...வணங்குகிறேன்....
பிரசவத்துக்கு ஊருக்குப் போனாலும் உலகத்த காப்பாத்தும்மா...

Monday, January 09, 2006

அன்பான வாக்காளப் பெருங்குடி மக்களே!

Indibloggies-ல் தேர்தல் முடிவடைய இன்னும் இருபத்தி நாலுமணி நேரமே இருக்கிறது. தமிழ் ப்ளாக் பிரிவில் டுபுக்கும் போட்டியிடுகிறார். டுபுக்கை தேர்தலுக்கு சிபாரிசு செய்த தமிழ்ரீடர், சித்ரா ஆகிவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

டுபுக்கு போன தடவையும் போட்டியிட்டார். முதல்ல நல்ல கும்முன்னு ஏத்திவிட்டு நல்லாத்தேன் போய்கிட்டு இருந்தது. நானும் ஜெயித்தவுடன் குடுப்பதற்கு எவர்சில்வர் குங்குமச் சொப்பும், ஸ்பூனும் வாங்கிக் கொண்டிருந்தேன். கடைசியில் பார்த்தா கொஞ்ச வோட்டுகள் வித்தியாசத்தில் பத்ரி ஜெயித்துவிட்டார். இந்த தரம் ஒரே ஒரு வேண்டுகோள். கவுத்தனும்ன்னு நினைசா முதல்லயே கவுத்துங்கப்பூ...போனதடவை மாதிரி கடைசி நேர டகால்டி வேலை பண்ணாதீங்கப்பூ.

அல்ரெடி ஓட்டு போட்ட மகா ஜனங்களுக்கும், ஆதரவு தெரிவித்து, திரட்டிக் கொண்டிருக்கும் ஜனங்களுக்கும் நன்றி. கவுத்த போற ஜனங்களுக்கும் ரொம்ப நன்றி.(உங்களையெல்லாம் என் குல தெய்வம் ஏஞ்சலினா அம்பாள் கவனிப்பா) ஜெயிச்சா போன தடவை வாங்கி வைச்ச சொப்பும், ஸ்பூனும் இன்னும் இருக்கு :) இல்லாட்டா அடுத்த எலீக்க்ஷன் இருக்கவே இருக்கு... மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கட்டுமே.


PS - இந்த மல்லிகை படமெல்லாம் சும்மானாச்சுக்கும்...அதப் படிச்சுட்டு வேறயார்க்காவது குத்தி தொலைக்கப் போறீங்க ஒழுங்கா டுபுக்குக்கு ஓட்ட குத்துங்கப்பூ.

Wednesday, January 04, 2006

The Village

சமீபத்தில் தான் இந்தப் படம் பார்த்தேன். கொஞ்சம் கூட ஏமாற்றவில்லை மனோஜ் ஷ்யாமளன். நீங்கள் இன்னும் படத்தைப் பார்க்கவில்லை என்றால் கதையை கேட்டுவிடாதீர்கள். நான் மொட்டைத் தாத்தா குட்டையில் விழுந்தார்ங்கிற ரீதியில் மட்டுமே தெரிந்து கொண்டு பார்த்ததால் தப்பித்தேன். கதையின் மையக் கருவில் கொஞ்சமூண்டு மசாலா இருந்தாலும் திரைக்கதையில் கலக்கியிருக்கிறார்.

கல்யாணமாகி இருந்தால் நீங்கள் மட்டும் மதியம் தூங்கி, மனைவி மற்றும் குழந்தைகளை சாயங்காலமாக வெளியே ஹோட்டலுக்கு கூட்டிப் போய் சாப்பிட்டு விட்டு ராத்திரி பத்து மணி வாக்குக்கு வீட்டுக்கு வந்தீர்களானால் அவர்கள் எல்லோரும் சீக்கிரம் தூங்கப் போய்விடுவார்கள். அப்புறம் மங்கலாக வெளிச்சம் தரும் ஒரு குட்டி லைட்டைப் போடுக் கொண்டு, சோபாவில் தலைக்கு ரெண்டு, காலுக்கு ரெண்டு தலையணை வைத்துக் கொண்டு, வால்யுமை நிறைய வைத்துக் கொண்டு கொறிப்பதற்க்கு மசாலா கடலையோ, நேத்திரங்காய் சிப்ஸோ வைத்துக்கொண்டு பார்க்க வேண்டிய படம் இது. வால்யும் குறைய வைத்தீர்களானால் எழவு சில டயலாக்குகள் புரியாது. இடைவேளையின் போது ஒரு இஞ்சி டீயும் போட்டுக் குடித்தீர்களானால் படம் கலக்குகிற கலக்கில் காலையில் சாப்பிட்ட அனைத்தும் தவமாய் தவமிருந்து வயிறு க்ளீனாகி விடும்.

அடுத்த அரைமணி நேரத்தில் அமெரிக்கா புஸ்வானமாகிவிடும், ஹீரோ ஒரு அரை குறை குட்டியுடன் சல்லாபம் பண்ணி சஞ்சீவி மலையைக் கொண்டு வராவிட்டால் 'ஊஷ்' உலகத்தை காக்காய் கொண்டுபோய்விடும் என்ற ரீதியில் கதை சொல்லாமல் இப்பிடிப் பட்ட சிக்கலான கருவையும் திறமையாக சொல்ல முடியும் என்று அழகாக சொல்லியிருக்கிறார். திரைக்கதை அமைத்த விதம் அருமை. ஒரு நிறைவான கதையை எழுத்தில் படித்த திருப்தி எனக்கு. சம்பிரதாயமாக எல்லோரும் சிரித்துக் கொண்டு போஸ் குடுத்து முடிக்காமல் பாதியை நம் கற்பனைக்கு விட்ட கவித்துவமான முடிவுக்கு ஒரு சபாஷ்.

இவரின் "Signs" படம்மும் பார்த்தேன். ஆனால் அது அவ்வளவு பிடிக்கவில்லை. பில்டப் நல்ல செய்திருந்தாலும் கதையமைப்பு கொஞ்சம் சொதப்பி விட்டதோ என்று தோன்றியது.

எனக்கு மனோஜ் நைட் ஷ்யாமளனைத் தெரியாது. ஆனால் அவரை மாதிரி படம் எடுத்து கூடிய சீக்கிரம் ஜொலிப்பார் என்று அருண் மேல் நம்பிக்கை இருக்கிறது. அருணைத் தெரியாதவர்களுக்கு - இங்கே சென்று அவரது குறும்படங்களை காணலாம்.

PS- அருண்..பிச்சைக்காரன் மாதிரியெல்லாம் நானும் தத்பரூபமா நடிப்பேன் ஹீ ஹீ ஒரு சான்ஸூ.....:P