Monday, October 31, 2005

தீபாவளிப் பார்ட்டி படங்கள்!!

மொத்தம் ப்ரேமலதா அக்கா புண்யத்தில் ஐந்நூற்றுக்கும் மேலாக படங்கள். அவ்வளவையும் அவர்கள் அப்லோட் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கே சாம்பிளுக்கு சில.

"உன்னால் முடியும் தம்பி" டுபுக்கு


சக்ராவிற்கு தங்கச் சங்கிலி பரிசு

கிடார் பென்ஞ்சமின்

மஹாலிங்கம் ஜோடிக குத்து


டுபுக்கு ஜோடி குத்து

இதான் ஒரிஜினல் குத்து - சக்ரா, டுபுக்கு

சுரேஷ் ஜோடி குத்து

விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற அணி

மழலை விளையாட்டு


மற்றவைக்கு ப்ரமேலதா அக்கா ப்ளாக்கிற்கு செல்லவும். (யெக்கோவ்...ஹிட்டுக்கு இவ்வள்வுன்னு பேசின அமௌன்ட குடுத்திறனும்...சொல்லிட்டேன் ஆமா)

தீபாவளி வாழ்த்துக்கள்...!

சொன்ன மாதிரி வெள்ளிக்கிழமை பதியமுடியவில்லை. மன்னிக்கவும். வேலைப் பழு மிக அதிகமாகிவிட்டது. அதோடு தீபாவளி பார்டி வேறு. தீபாவளி பார்ட்டி மிக ஜாலியாக இனிதே நடந்தது. எல்லோருக்கும் காலேஜ் நாட்களுக்குச் சென்று வந்த நிறைவு. வலைப்பதியும் கும்பலிலிருந்து நான், சக்ரா, சுரேஷ், ப்ரேமலதா ஆகியோர் கல்ந்துகொண்டோம். மொத்தம் ஐம்பது பேர் என்று நினைக்கிறேன். பெரும்பாலோனோர் குடும்பத்தோடு வந்திருந்தார்கள். மிக அழகான மேடை, பல மைக்குகளுடன் கூடிய அற்புதமான ஸ்பீக்கர் ஸிஸ்டம் வேறு. தனிப் பாட்டு, கிடார், கீபோர்ட், ஜோடிப் பாட்டு என்று பாட்டுக்களில் பலவகை. தனிக் குத்து, கும்மிக் குத்து, பாம்பு டான்ஸ், ஜோடி நடனம் என்று எல்லோரும் குத்து குத்துவென செம குத்து குத்தினார்கள். நிறையபேர்களை சந்தித்தேன். நிறைய எழுத வேண்டும்....பிறகு முயற்சிக்கிறேன். என்னமோ இப்போது ப்ளாகரிலிருந்து படங்கள் அப்லோட் செய்ய முடியவில்லை. சாயங்காலம் மீண்டும் முயற்சிக்கிறேன்.

மற்றபடி தீபாவளி வாழ்த்துக்கள்!!

Tuesday, October 25, 2005

அறுசுவை

போன வாரம் ரொம்ப பிஸியாக ஓடி விட்டது. வீட்டில் மனைவிக்கு உடல் நலக் குறைவு. ஐய்யா தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. குழந்தை பராமரிப்புலேர்ந்து சமையல் நேரம் வரை பார்பதற்குள் எட்டு புள்ளை பெத்த மாதிரி உடம்பு பென்ட் நிமிர்ந்துவிட்டது. பொதுவாக மனைவி சில ஸ்பெஷல் பதார்த்தங்கள் செய்தால் என்னிடம் தான் உப்பு, உரப்பு சரியாக இருக்கா என்று பார்க்கச் சொல்லுவார். இதனாலேயே எனக்கு மனதில் அறுசுவை நடராஜன் என்று நினைப்பு இருப்பதாக அடிக்கடி மரியாதை செய்வார்.

ஸ்பெஷல் பதார்த்தங்களுக்கே உப்பு உரப்பு பார்க்கும் எனக்கு சாதரண சமையலா பெரிது என்று சென்னா மசாலா செய்ய இறங்கினேன். தேவையான கிரேவி தயாரானதும் உப்பு உரப்பு ஸ்டையிலா போட்டு ஸ்பூனால் எடுத்து டேஸ்ட் பார்த்தால் ஒரே உப்புக் கரிப்பாக இருந்தது. சரி கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் விட்டு சரி பண்ணிவிடலாமென்று விட்டு விட்டு மீண்டும் சரி பார்த்தால் உப்பே இல்லை. அப்புறம் தான் மணடையில் உரைத்தது. உப்பு போட்ட ஸ்பூனாலே டேஸ்ட் பார்த்தேன் என்று. மீண்டும் கொஞ்சம் உப்பைப் போட்டு விட்டு சரி பார்த்தால் சரியாகி இருந்தது. டின்னில் இருந்து சென்னாவை போட்டு கொதிக்கவிட்டு பார்த்தால் மீண்டும் உப்புக் கரியாக இருந்தது. கடங்காரன் டின்னில் உப்புத் தண்ணியில் சென்னாவை வைத்திருக்கிறான். சரி மீண்டும் எலுமிச்சாபிஷேகா தான் என்று தெளித்ததில் மூடி சென்னாவில் உள்ளே விழுந்து ஜூஸ் பொல பொலவென சென்னாவில் கொட்டிவிட்டது. மூடியை சென்னாவில் தேடி எடுக்கும் போதே தெரிந்துவிட்டது என்ன லட்சணமாக இருக்குமென்று. கர்பஸ்தீகள் கூடத் தொடமாட்டார்கள் அப்பிடி ஒரு புளிப்பு. இருந்தாலும் தேவாமிர்தமாக இருக்கு என்று சொல்லிக்கொண்டே முழுங்கி வைத்தேன். "உனக்கு உடம்பு சரியில்லை சென்னா மசாலா சாப்பிடக்கூடாதென்று டாக்டர் சொல்லி இருக்கார்" - மனைவிடம் வள்ளுவர் பெயரால் பொய்மையும் வாய்மையிடத்திவிட்டு சொன்ன கையோடு மிச்சத்தை ஆபிஸுக்கு எடுத்துக் கொண்டு போய் தூரப்போட்டிருக்கவேண்டாமோ...மனுஷன் சாப்பிடுவானா இத என்று மனதிற்குள் சொல்லிவிட்டு கையை வீசிக்கொண்டு சென்று பிட்ஸா சாப்பிட்டுவிட்டேன். ஆத்துக்காரர் ஆசையோடு பண்ணிவைச்சதை டேஸ்ட் பார்த்துவிட்டு "இதெல்லாம் ஒரு பொழப்பா..." என்று நேற்றெல்லாம் ஒரே புகழாரம் தான்.

மற்றபடி தீபாவளி பார்ட்டி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. வருகிறவர்கள் எண்ணிக்கை 51 தொட்டுவிட்டது. இடத்திற்கு சொல்லியாகிவிட்டது, சாப்பாடுக்கு சொல்லியாகிவிட்டது. வேலைகள் மளமளவென்று நடந்துகொண்டிருக்கிறது. நான் சக்ரா பாலன் என்று கான்பரன்ஸ் கால் போட்டு நல்லா அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம். இது போக இதுபற்றி திருமதி.உமா கிருஷ்ணாவிடம் வேறு அரட்டை. பிரமேலதா பாலன், உமா கிருஷ்ணா என்று ஒரு கூட்டமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். பாட்டு, ம்யூஸிக் , நடனம் என்று ஒரே கும்மாளமாய் இருக்கிறது. நாளைக்கு விளையாட்டுக்களைப் பற்றி சொல்கிறேன். பார்டி மூலமாகவும் இந்த ப்ளாக் மூலமாகவும் புதிதாக நிறைய நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன். அடுத்த ஜொள்ளித் திரிந்த காலத்தை வெள்ளிக்கிழமைக்குள் பதிந்து விடுகிறேன். அதுவரைக்கும்...

Wednesday, October 19, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...9

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7    Part 8

வறுக்காத ரவை கேட்டதும் கண்ணாடிக் கிளி ரொம்பவே குழம்பிப் போனாள்.
"ரவையா?
"ஆமாம் கேசரி செய்வார்களே அதே ரவை"
"கேசரியா?!%?"
"ஆமாம் பெண் பார்க்க வரும்போதெல்லாம் செய்வார்களே..கேசரி"
இந்த மாதிரி விழாக்களில் பையன்கள் சகட்டு மேனிக்கு கலாய்ப்பான்கள் என்பதால் நான் அவளை கலாய்க்கிறேன் என்று முடிவே கட்டிவிட்டாள்.
"இப்ப உங்களுக்கு என்ன வேண்டும்..."
"ரவை வேண்டும்..வறுக்காதது"
"..." அவளுக்கு என்னத்திற்கு ரவை வேண்டும் அதுவும் வறுக்காத ரவை வேண்டும் என்று புரியவே இல்லை. நான் அவளுக்கு கேசரி செய்ய சொல்லிக்குடுக்கலாமா இல்லை மிருதங்கம் வாசிக்கும் முறை பற்றிச் சொல்லிக்குடுக்கலாமா என்று யோசிப்பதற்குள் அடியில் பற்றிக் கொண்டால் போல் ஒருவன் ஓடிவந்தான்.
"ஹீ வான்ட்ஸ் கேசரி..ஐ டொன்ட் நோ வொய்" - கிளி அவனிடம் இங்கிலீஸில் பாட்டு பாடியது.
"கேசரியா..?"
"இல்லை கேசரி செய்யற ரவை...மிருதங்கம் வாசிக்கறதுக்கு கொஞ்சம் வறுக்காத ரவை வேணும்"
"மிருதங்கத்துக்கு ரவையா... எதுக்கு?" - நான் கடலை போடுவதற்கு என்னமோ ரவை கேட்ட மாதிரி மிரட்டினான்.

கிளி கேட்டிருந்தாலாவது விலாவாரியாக சொல்லியிருப்பேன்.. இந்தத் தடியனுக்கு சொல்லிக்குடுப்பதற்கா எங்க மாமா என்னை மிருதங்கம் படிக்க வைத்தார்..

"ரவை இல்லாட்ட மிருதங்கத்தில் சரியா சத்தம் வராது. தொட்டு தொட்டுன்னு தான் வரும்"

"ஏன் தொட்டுனக்கு தொட்டுனக்குன்னு தான் வாசிங்களேன்.." - நக்கல்

தொட்டு நக்கறதுக்கு இதென்ன மாம்பழப் பச்சடியா.. கேட்டிருப்பேன் வேளைக்கு இருபது இட்லி நோகாம சாப்பிடுவது மாதிரி திடகாத்திரமாக இருந்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது. "இல்ல வறுக்காத ரவை கிடைக்குமா.." என்று பழைய பல்லவியையே பாடினேன்.

"எங்க காலேஜில் ரேஷன் கடையெலாம் இல்ல சாரி ஹீ ஹீ" கிண்டல் அடித்துவிட்டு கிளியைப் பார்த்து சிரித்தான். பக்கத்தில் கிளி இருந்தால் எல்லாப் பையன்களுக்கும் வரும் நக்கல் சின்டிரோம் தான். கிளியும் சுமாராய் சிரித்து வைத்தது.

"....உங்க காலேஜில் ஹாஸ்டல் இருக்குமே அங்கே மெஸ் என்று ஒன்று இருக்குமே அங்கே கேட்டால் கிடைக்கும் அதான் கேட்டேன்" - கிளி நான் கடலை பார்ட்டி என்ற சந்தேகம் போய் ஜென்டில்மேன் தான் என்று புரிந்து கொண்ட மாதிரி தெரிந்தது.

மேற்காலே போய் பீச்சாங்கைப் பக்கம் போன்னு வழிகாட்டிவிட்டான். கிளிக்கு மட்டும் "ரொம்ப தேங்ஸ்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

போகிற வழியில் எதுக்கும் இருக்கட்டும் என்று பரதநாட்டியப் பெண்களிடமெல்லாம் வறுக்காத ரவை கிடைக்குமா என்று வறுத்துக் கொண்டே போனோம். மெஸ்ஸில் ரவை கிடைத்து வாங்கிக் கொண்டுவரும் போது அந்தப் பெண்களிடம் ரவை கிடைத்து விட்டது எங்களுக்காக கஷ்டப்பட்டுத் தேடவேண்டாமென்று திருப்பியும் ஒரு தரம் வறுத்து விட்டுப் போட்டியில் வாசித்தேன். கண்ணாடிக் கிளி நான் எப்பிடி வாசிக்கிறேன் என்று பார்த்துவிட்டு கை தட்டினாள்.

இப்படியாக நான் யூத் பெஸ்டிவல் போய்வந்துகொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டுப் பல்கலைகழங்களுக்கு இடையே நடத்தும் இன்டர் யுனிவேர்ஸிட்டி பெஸ்டிவல் நடத்தும் பொறுப்பு எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்தது. இந்த விழா எங்கள் ஊருக்கு பக்கத்திலிருக்கும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடப்பதாக முடிவாகியிருந்தது. மிகவும் அருமையான இடம். பொதிகை மலையில் அமைந்திருக்கும் கல்லூரி இது. மலையில் ரொம்பவும் ஏறாமல் ஆரம்பத்திலேயே இருக்கும். கல்லூரி அமைந்த இடமே ரம்மியமாய் இருக்கும்.

போட்டி காலேஜ்களுக்கிடையே இல்லாமல் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடக்கும் என்பதால் எங்கள் பல்கலைக்கழக குழுவை தேர்ந்தெடுப்பதற்காக எங்கள் மாவட்ட கலூரிகளுக்கிடையே போட்டி வைத்தார்கள். அவற்றில் சிறந்தவர்களை ஒரு குழுவாக எங்கள் யுனிவர்ஸிட்டி சார்பாக பங்கேற்க வைப்பார்கள்.

இந்த இடத்தில் குற்றாலம் பராசக்தி கல்லூரி பற்றி சொல்லிவிட வேண்டும். குற்றாலம் என்றால் உங்களுக்கு அருவி நியாபகத்துக்கு வந்தால் எங்க ஊர் வயசுப் பசங்களுக்கு பராசக்தி கல்லூரி தான் நியாபகம் வரும். அவ்வளவு அருமையான கல்லூரி. பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய டீம்ட் யுனிவர்ஸிட்டி. அதுவும் எங்கள் கல்லூரி தான் அவர்களுக்கு அந்த வட்டாரத்திலேயே பக்கம் என்பதால் இரு கல்லூரிகளுக்குமிடையே இருக்கும் இணக்கம் அதிகம்.

தகுதிப் போட்டியே பலமாக இருந்தது. தகுதிப் போட்டி முடிந்ததும் உடனே முடிவை அறிவிக்காமல் ஊருக்குப் போய் லெட்டர் போடுகிறோம் என்கிற ரீதியில் அறிவித்தார்கள். இல்லாவிட்டால் காலேஜுகளுக்குள் சண்டை வரும் என்று நினைத்தார்கள் போலும். நானும் சரி ஆச்சு அம்புட்டுத்தான் என்று வந்துவிட்டேன். போட்டி நடப்பதற்கு முந்தின நாள் வரை தகவலே இல்லை. முந்தின நாள் குண்டு வாத்தியார் க்ளாஸ் நடக்கும் போது நடுவில் வந்து நான் செலெக்ட் ஆகியிருப்பதாகச் சொன்னார். மெடல் வாங்கிவந்தால் காலேஜுக்குப் பெருமை என்று இன்னும் எதெல்லாமோ சொன்னார். எனக்கு எங்க டீமில் வேறு யார் யார் இருப்பார்கள் என்று தயக்கம். ஒருவழியாக லிஸ்டை நைசாக லவட்டிப் பார்த்தேன்.


எங்கள் யுனிவர்ஸிட்டி குழுவில் மொத்தம் பதினாறு பேர்கள். பத்து பெண்கள் - அனைவரும் பராசக்தி கல்லூரியிலிருந்து. என்னையும் சேர்த்து ஆறு ஆணக்ள். ஐந்து பேர் திருநெல்வேலி கல்லூரிகளிலிருந்து. அட்ரா சக்கை அட்ரா சக்கை...மனம் குதூகலித்தது.


--இன்னும் ஜொள்ளுவேன்



Wednesday, October 12, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...8

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7

கல்லூரி நாட்கள் பெரும்பாலும் எல்லோருக்குமே இனிமையாகத் தான் இருந்திருக்கவேண்டும். எனக்கும் தான். அதிலும் கல்லூரி நாட்களில் "யூத் பெஸ்டிவல்" என்று அழைக்கப்படும் கலை நிகழ்சிகள் நிறைந்த விழாக்களின் பெயரால் அடித்த கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அட்டென்டன்ஸ் விழுந்துவிடும் என்பதால் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னாலேயே பயிற்சி என்ற பெயரிலே வால்தனத்தை ஆரம்பித்துவிடுவோம். நான் பள்ளிக் காலங்களிலிருந்தே பேச்சுப் போட்டி, மிருதங்கம், டம்ப் சேரட்ஸ், அந்தப் போட்டி, இந்தப் போட்டி என்று கோட்டி பிடித்து அலைந்து கொண்டிருப்பேன். எல்லாக் கல்லூரிகளிலும் இந்த மாதிரி போட்டிகளுக்குப் போவதற்கென்றே ஒரு டீம் இருக்கும். நான் முதல் வருடம் படித்த போது எங்கள் கல்லூரியில் அந்த மாதிரி ஒருத்தரும் இல்லை. பேச்சுப் போட்டி பொறுப்பை மட்டும் ஒரு ஆசிரியர் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை நச்சரித்துப் புடுங்கி ஸ்பான்சர்ஷிப்பை பேச்சுப் போட்டியிலிருந்து மெதுவாக மிருதங்கப் போட்டிகளுக்கும் விஸ்தரிப்பு செய்தேன். ஆனாலும் நான் மிருதங்கத்தை சுமந்து கொண்டு வந்தால்
"வந்துட்டியா வா..என்னடா காணோமே பார்த்தேன். இன்னிக்கு எங்கப்பா கொட்டடிக்கப் போற?" என்று எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்குகிற ரீதியில் தான் பேசுவார். கொஞ்ச நாளில் பொறுப்பு இன்னோர் சங்கீத ஞானம் நிறைந்த வாத்தியார் கையில் போயிற்று. அவர் கொஞ்சம் பரவாயில்லை. கலைத்துறையில் உறுப்பினராய் இருந்ததால் போட்டிகளுக்கு போவதற்கு நிறைய ஊக்குவிப்பார். ஆனால் அவரிடம் இம்சைகள் வேறு விதமாய் இருக்கும்.

"தம்பி இன்னிக்கு நம்ம பெருமாள் கோவில்ல எனக்குத் தெரிஞ்ச ஒரு அம்மா பாட்டுப் பாடறாங்க நல்ல பாடுவாங்க...மிருதங்கம் வாசிக்க ஒரு ஆள் வேணும்ன்னு கேட்டாங்க...நான் தான் நீயிருக்கன்னு சொல்லியிருக்கேன்...சாயங்காலம் வீட்டுக்குப் போயிடாத என்ன ..". மனுஷன் உசிர விட்டு வாசிச்சா கடைசியில் ரெண்டு தேங்காய் மூடியும், லொளு லொளு பழமும் தருவார்கள். கூடக் கொஞ்சம் சுண்டல் கிடைக்கும். மாமியிடம் தேங்காய் மூடியைக் கொடுத்தால் அடுத்தநாள் இட்லிக்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி கிடைக்கும்.

இந்த தேங்காய் மூடிக் கச்சேரி அடிக்கடி நடக்காதென்பதால் பொறுத்துக் கொள்வேன். முதலில் யூத் பெஸ்டிவல்களுக்குத் தனியாக போய்க்கொண்டிருந்தேன். எல்லா யூத்பெஸ்டிவல்களிலும் கல்லூரிகளிலும் வரவேற்பதற்கும், ரெஜிஸ்டிரேஷனுக்கும் இருப்பதிலே நன்றாக இருக்கும் மூன்று பெண்களும் அவர்களிடம் கடலை போட்டவண்ணம் இரண்டு ஆண்களும் இருப்பார்கள். இவர்கள் தான் பெயர் சரி பார்த்து, பதிந்து, தங்கும் வசதிகள் பற்றி சொல்லி, அடையாள அட்டை வழங்குவார்கள். பதிவு செய்யும் போது அந்தப் பெண்களிடம் கூட இரண்டு வார்த்தை பேசிவிட்டால் அவ்வளவு தான், கூட இருக்கும் கடலைப் பார்ட்டிகளுக்குப் பொறுக்காது. நான் தனியாக போகும் காலத்தில் இவர்களிடம் ரொம்ப வைத்துக்கொள்ள மாட்டேன். ஓரமாக உட்கார்ந்து கண்ணோடு கான்பதெல்லாமோடு சரி.

இந்தப் பிரச்சனைக்காகவே கல்லூரியில் மெதுவாக யூத் பெஸ்டிவலின் அருமை பெருமைகளைச் சொல்லி ஒரு கலைக் கூட்டத்தைச் சேர்த்தேன். பெரிய கூட்டமெல்லாம் இல்லை மிஞ்சி மிஞ்சிப் போனால் மொத்தம் ஐந்து பேர் இருப்போம். ஒருத்தன் நன்றாகப் பரதநாட்டியம் ஆடுவான். ஒருத்தன் நன்றாக படம் வரைவான். மத்த ரெண்டு பேரும் உப்புக்குச் சப்பாணி கேஸ். சும்மா எதாவது ஒரு போட்டி என்ற பெயரில் வரும் பறவைகளை வாய் பார்க்க வருவார்கள். இந்த போட்டிகளுக்கெல்லாம் திருச்சி வரையிலும் உள்ள கல்லூரிகளில் இருந்து வருவார்கள். நல்ல வேளை மெட்ராஸில் இருந்து வர மாட்டார்கள். வரும் கூட்டத்தின் பந்தாவைப் பற்றி கேட்கவே வேண்டாம். எல்லாரும் வெளிநாட்டில் பிறந்து வளர்ந்து இப்போது தான் தமிழ்நாட்டுக்கு முதன் முதலில் வருவது மாதிரி தாங்க முடியாமல் இருக்கும். எங்கள் ஐவர் குழுவிற்கு ஃபேஷன் என்றால் வெத்தலபாக்கு வைத்து குடுக்கும் பேஸனைத்(தட்டு) தவிர எதுவும் தெரியாது. அதுவும் மிருதங்கத்தை முதுகில் சுமந்து கொண்டு ரெஜிஸ்டிரேஷனுக்கு போனாலே "கரகாட்டக்காரன்" ராமராஜன் கும்பல் வந்த மாதிரி தான் லுக்குவிடுவார்கள். இருந்தாலும் இதுக்கெல்லாம் அசர மாட்டோம். ஆனால் இந்த கிடார் வைத்திருக்கும் பையன்களின் அலம்பல் தாங்கமுடியாது. சேர்ந்தாப்புல நாலு பெண்கள் வந்தால் போதும் உடனே மரத்தடியில் கடையை விரித்து வாசிக்க ஆரம்பித்து விடுவார்கள். நின்று கொண்டுவாசிப்பான், முட்டி போட்டுக்கொண்டு வாசிப்பான், தலையை சிலுப்பி விட்டுக் கொண்டு வாசிப்பான், ஆடிக் கொண்டே வாசிப்பான் - சேட்டை தாங்க முடியாது.

நானும் ஒருதரம் தில்லானா மோகனாம்பாள் டி.எஸ்.பாலைய்யா மாதிரி மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு உசிர விட்டு வாசிச்சு பார்த்தேன்...ம்ஹூம் ஒன்னும் தேறல. இருக்கற பெண்கள் கூட்டமெல்லாம் கிட்டார் மரத்தடியில் தான் கூடியது. அப்புறம் நானும் ஒரு கிட்டார் பையனை ப்ரெண்டு பிடித்து அவன் கிடார் வாசிக்கும் போது கிடார் பையை கடன் வாங்கிக் கொண்டு, வெறும் பையை தோளில் மாட்டிக் கொண்டு கிழக்கயும் மேற்கயும் அலைந்து பொண்ணுகளிடம் கடலை தேற்றுவேன். வெறும் கிடார் பையை வைத்துக் கொண்டே அவனோட கடலை சாகுபடியை நான் கெடுக்கிறேன் என்று கடுப்பாகி அந்தப் பையன் அப்புறம் கிடார் பையைக் கடன் குடுப்பதை நிப்பாட்டி விட்டான்.

மிருதங்கம் வாசிப்பதற்கு சில விஷயங்கள் இருக்கிறது. இதை "கொட்டு" என்று யாரவது சொன்னால் எனக்கு கொஞ்சம் கோபம் வரும். மண்டையில் கொட்டிவிடுவேன். மிருதங்கத்தின் இடது கைப் பக்கத்தில் ரவையை (உப்புமா செய்வார்களே அதே சூஜி தான்) தண்ணியில் நனைத்து கோந்து மாதிரி உருட்டி ஒட்ட வேண்டும். இது வாசிப்பதற்கு முன்னால் தான் செய்யவேண்டும். ரொம்ப முன்னாடியே ஒட்டிவிட்டாலோ , பதமாக இல்லாவிட்டாலோ சத்தம் நன்றாக இருக்காது. இதற்காகவே வறுக்காத ரவையை ஒரு சின்ன டப்பாவில் எடுத்துக் கொண்டு போக வேண்டும். ஒரு முறை இந்த ரவை டப்பாவை மறந்து விட்டுப் போய்விட்டேன். போட்டி ஆரம்பிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னால் தான் கவனித்தேன். ரவைக்கு எங்கு போவது? இன்னிக்கு கோவிந்தா தான் என்று நினைத்தேன். போட்டியில் பெயர்களை ஒரு அழகான கண்ணாடி போட்ட கிளி மைக்கில் அறிவித்துக்கொண்டிருந்தது. மிருதங்கத்தை முதுகில் தூக்கிக் கொண்டு நேர அவளிடம் போய் நின்றேன்.
"இன்னும் போட்டி ஆரம்பிக்கவில்லை...நான்...உங்கள் பெயரை கூப்பிட்டதுக்கப்புறம் நீங்க வந்தாப்.."
"இல்ல கொஞ்சம் வறுக்காத ரவை கிடைக்குமா?..."
"..."


--இன்னும் ஜொள்ளுவேன்



Monday, October 10, 2005

தீபாவளி பார்ட்டி / Diwali Party London

தீபாவளிக்கு இங்கு லண்டனில் ஒரு சந்திப்பு நடத்தலாம் என்று நண்பர்கள் சேர்ந்து முடிவெடுத்துள்ளோம். இப்போதைக்கு நடத்தும் பொறுப்பை நான், சக்ரா, பாலன் மூவரும் பகிர்ந்துகொண்டுள்ளோம். ஏற்பாடுகள் துரிதமாக(?!) நடந்து வருகின்றது.

நாள் - 29 அக்டோபர் சனிக்கிழமை மாலை
கட்டணம் - தலைக்கு பத்து பவுண்டு (10 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது)

ஸ்வீட்லிருந்து ஆரம்பித்து வித விதமான மெனுவோடு மிகச் சிறந்த உணவு (சென்னை தோசாவிலிருந்து). ஜோடிகளுக்கு, குடும்பத்துக்கு, குழந்தைகளுக்கு, பிரம்மச்சாரி/ரினிகளுக்கு ஜாலியான விளையாட்டுகள் என்று நான்கு மணி நேரத்தை அடுத்த தீபாவளி வரை நினைவில் வைத்துக்கொள்ளுமாறு அமைக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். யூ.கே,இங்கிலாந்து, ஐக்கிய ராச்சியம் (எல்லாம் ஒன்னு தாங்க) ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் வர ப்ரியப்பட்டால் r_ramn at yahoo dot com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும். மேலும் விபரங்களை அனுப்பி வைக்கிறேன். வெளியூரில் இருக்கும் அன்பர்கள் இந்த தேதியில் இங்கு வர சௌகரியப்படால் அவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

விழாவிற்கு அஸின் மட்டும் போதுமா இல்லை த்ரிஷாவையும் கூட்டிக்கொண்டு வருவதா என்று பொதுக்குழு சண்டை நடந்து வருகிறது. பாலனுக்கு நயன் தாராவும் வர வேண்டுமாம். எனக்கு ஆட்சேபனை இல்லை என்று சொல்லிவிட்டேன்.(ஆட்சேபனை எல்லாம் வூட்டுல தான் இருக்கும்). பெண்கள் ஏமாற்றமடையக் கூடாதே என்று சத்யராஜ், விஜயகாந்த்,பொன்னம்பலம், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோரைக் கூட்டிக் கொண்டு வரலாமென்றிருக்கிறோம்.

Thursday, October 06, 2005

டீஜே

இரண்டு வாரங்களுக்கு முன்னால் அலுவலகத்தில் வேலை பார்ப்பது போல் நடித்துக் கொண்டிருந்த போது மொபைலில் ப்ரைவேட் நம்பரிலிருந்து ஒரு அழைப்பு.

"ஹலோ டுபுக்கா..! என் பெயர் ஷ்ரேயா...நான் உங்கள் வலைப்பதிவை ரொம்ப நாளாக படித்துவருகிறேன்...ரொம்ப நன்றாக எழுதுகிறீர்கள் நான் உங்கள் ரசிகை..." என்ற ரீதியில் ஆரம்பித்து தொடர்ந்தது.

எனக்கு ஒரே படபடப்பு...ஓவராய் தாக்குதல் தொடர்ந்தது. என்ன பதில் சொல்லுவது..."ம்ம்ம் ஹீ ஹீ.." என்ற ரீதியில். நல்ல வேளை அன்று வெண்டைக்காய் சாப்பிட்டதால் சீக்கிரமே மண்டையில் பல்பு எரிந்து என்னோட தங்கமணி தான் ஷ்ரெயா பெயரில் குரலை மாற்றி மாட்லாடிக் கொண்டிருக்கிறதென்று புரிந்து "ஐய்யா யாரு...எங்கிட்டயேவா..." என்று தெளிவாக சமாளித்துவிட்டேன்.

இந்த வாரம் வேலைப் பார்ப்பது போல் தூங்கிக் கொண்டிருந்த போது மீண்டும் ஒரு அழைப்பு...இந்த முறை ஆண் குரல்
"ஹலோ டுபுக்கு நாந்தான் ஜே.ஜே பேசுறேன்...நாம இன்னிக்கு மீட் பண்ணலாமா " என்று நேர விஷயத்துக்கு வந்துவிட்டார். கொஞ்சம் முழித்துக் கொண்ட பிறகு தான் பேசியது டீ.ஜே என்று புரிந்தது. நேற்று சந்தித்தோம். "இந்த மாமா எல்லாரையும் பார்க்கும் போது ஆரஞ்சு ஜூஸ் பரிசளிப்பார்..இன்னிக்கு சாயங்காலம் உனக்கும் ஒன்று கிடைக்கும்" என்று மகளிடம் சொல்லியிருந்தேன். ஆனால் டீஜே ஏமாற்றிவிட்டார். ஆனாலும் ரொம்ப நாள் பழகியவர்களைப் போல் எடுத்தலிருந்தே...ரெண்டு பேரும் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டோம். அவருக்கு ஆபிஸில் ஜோலியிருந்ததால் ஒரு மணிநேரம் தான் பேசினோம். ஆனாலும் இனிமையாக இருந்தது.

அம்பாசமுத்திரத்தில் எங்களுக்கு நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள் என்று டீஜே ஆரம்பித்தார்...கடைசியில் யாரென்று பார்த்தால் ஹிந்தி மாமியின் நாத்தனார். எதுக்கு வம்பு என்று உண்மையைச் சொல்லிவிட்டேன். நல்லவேளை ஹிந்தி மாமி நேரடி சொந்தமில்லையாதலால் தப்பித்தேன். இனிமே கொஞ்சம் உஷாரா இருக்கனும்பா.

லிவர்பூல் ஸ்டிரீட்டில் சென்னை தோசா இல்லாததால்...மெக்டோனால்டில் இலைதழைகளை மென்று கொண்டே பேசினோம். நான் தான் பில்லு குடுத்தேன். ப்ளாகினால் என்னென்ன செலவுகள் வரும் என்றும் தெரிந்து கொண்டேன். :)
(சும்மா டமாஸு..கோவிக்காதீர்கள் டீஜே)

(வர வர எழுத்தாளர் சாருநிவேதா மாதிரி புலம்ப ஆரம்பித்துவிட்டேன் என்று தோன்றுகிறது. சாருநிவேதா இதைப் படித்தால் கெட்ட கெட்ட வார்த்தையால் வையப்போகிறார்...சொல்லிவிடாதீர்கள் ப்ளீஸ்)

Tuesday, October 04, 2005

காயமே இது....


காயமே இது பொய்யடா வெறும்
காற்றடைத்த பையடா...



படத்திலிருப்பவர் யாரென்று தெரிகிறதா? இல்லையென்றால்..இவர் தான் நாங்கள் ஜொள்ளுவிட்ட காலங்களில் எங்களுக்கு எமனாக வந்து எம்குலப் பெண்களின் கனவைத் திருடியவர்.

எங்களைப் பற்றி கனவு காணாமல் அரவிந்த் சாமியை கனவு கண்ட எங்குலப் பெண்களே...(நீங்களெல்லாம் அனேகமாக இப்போது கல்யாணமாகி குழந்தைப் பெற்றுக் கொண்டிருப்பீர்கள்) கானுங்கள் உங்கள் கனவு நாயகனை.

(இதுக்குத் தான் நான் என்னை வெறும் கமலஹாசன் என்று சொல்லிக்கொள்வது கிடையாது .."உன்னால் முடியும் தம்பி" கமலஹாசன் என்று சொல்லிக்கொண்டால் எவ்வளவு சேஃப் பாருங்கள்)

என்னை மாதிரி ஆண்களுக்கு வயற்றில் பால் வார்த்த மாதிரி இருக்கும். ஆனால் எங்குலப் பெண்கள் அனேகமாக பொங்கி எழந்தாலும் எழலாம்...அதனால் வுடு ஜூட்.

பி.கு - சக்ரா இந்தப் படத்தை அனுப்பியபோது அரவிந்த் சாமியைப் பார்க்கவேஇல்லை. சொன்ன அப்புறம் தான் தெரிந்தது. ஆமா ஒரத்தில சித்திக்கு அடுத்தாப்புல இருக்கும் குட்டி யாருப்பா? சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான்யா கேட்கிறேன் மத்தபடி ஒன்னுமில்லை)