Friday, September 30, 2005

பாரதியார் ஓணம் அவியல் சென்னை தோசா

எனது மகளையும் , மனைவியையும் நடனப் பள்ளியில் கொண்டு விட்டு கூட்டிக்கொண்டு வருவது ஞாயிற்றுக் கிழமை ஜோலிகளில் ஒன்று. அவர்கள் ஜாலியாக ஆடப் போய்விடுவார்கள். நான் இரண்டாவது குழந்தையை...பால் புட்டியுடன் பார்த்துக்கொள்வேன். இந்த இடைப்பட்ட நேரத்தில் நானும் அந்தப் பள்ளியை நடத்துபவரும் (மலையாளி) அரட்டை அடித்துக்கொண்டிருப்போம்.

இந்தப் பழக்கத்தினால் இரண்டு வாரங்களுக்கு முன் அவரிடமிருந்து ஒரு எதிர்பாராத அழைப்பு. ஓணத்திற்க்காக மலையாளிகள் சங்கமும் எங்கள் கவுன்சிலும் சேர்ந்து ஒரு விழா நடத்தப் போவதாகவும், அதில் பாரதியாரின் கவிதைகளைப் பற்றி நான் பேச முடியுமா என்றும் கேட்டார். கல்லூரி நாட்களில் நிறைய பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் உண்டென்றாலும், கொஞ்சம் உதறலாய் இருந்தது. ஓசிச் சாப்பாடு போடுகிறார்கள் என்று தெரிந்ததும் என்னையுமறியாமல் ஒத்துக்கொண்டேன்.

ஆரம்பித்தது வினை. "ஐய்யோ பாவம் பாரதியார்..." என்று ஆரம்பித்து மனைவி சொல்லிச் சொல்லி என்னை ஓட்டியது சொல்லி மாளாது.
"ப்ரிப்பேர் பண்ணியாச்சா? எங்கே ஒரு தரம் சொல்லுங்கோ பார்போம்" - தோசைக்கு ஒருதரம் துவையலுக்கு ஒருதரம் என்று பரீட்சை எழுதும் பத்தாம் கிளாஸ் மாணவன் மாதிரி நான் பட்ட துயரங்கள் எண்ணிலடங்கா.

பாரதியார் என் ஃபிரண்டில்லை...நான் அவரைப் பற்றிப் பேசப் போகிறேன் என்று தெரிந்ததும் என் மகள் வர்ஷாவிற்கு "Ohhh that will be funny..." என்று சிரிப்போ சிரிப்பு.... என் மனைவி இது போறாது என்று பக்கத்திலிருந்த இன்னொரு தமிழ் ஜோடியிடம் சொல்ல அவர்களும் நான் பேசுவதைப் பார்க்க ஆர்வமாகி வருவதாகச் சொன்னார்கள்.

இங்கே பிரேமலதா பாலன் தம்பதியினரைப் பற்றிச் சொல்லவேண்டும். இந்த ப்ளாக் மூலமாக கிடைத்த இனிமையான நண்பர்கள். அவர்களுடன் போன வாரம் முதன் முதலில் தொலைபேசியில் பேசிக் கொன்டிருந்த போது நான் இதுபற்றி லேசாக உளறிவிட...அவர்களும் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு கண்டிப்பாய் வருவதாய் சொன்னார்கள். தனியாக சொதப்பினாலாவது வெளியே தெரியாது. இப்பிடி எல்லாரையும் கூட்டிவைத்துக்கொண்டா சொதபுவது. அதுவும் முதல் சந்திப்பு இப்பிடி டென்ஷனிலா நடக்கவேண்டும் - எனக்கு உள்ளூர ஜுரம் ஏறிக்கொண்டிருந்தது.

நிகழ்ச்சிக்குப் போய் பார்த்தால் முழுவதும் சேட்டன்களும் சேச்சிகளுமாய் இருந்தார்கள். "என்ன சுகந்தன்னே.." என்று பட்டு உடுத்திக் கொண்டு விளித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் ஜீன்ஸ் பேண்டும் காட்ராய் சட்டையும் போட்டுக் கொண்டு பரட்டைப் பாண்டியாய் பாரதியார் கவிதைகளைப் பற்றி பேச நான். வீடியோ காமிராவை கொண்டு எடுத்துவிட்டால் அதை வீட்டில் போட்டு போட்டு கேலிச் சிரிப்பு சிரித்து எனக்கு மரியாதை செய்வார்கள் என்பதால் நைஸாக வைத்துவிட்டு வந்துவிட்டேன். நல்ல வேளை பிரேமலதா பாலனும் கொண்டுவரவில்லை. என்னைத் தவிர மற்ற எல்லா நிகழ்ச்சிகளும் பாட்டு, நடனம், கச்சேரி என்று கலை நிகழ்ச்சிகள். ஜலதோஷம் பிடித்து மூக்கு ஞொண ஞொண என்று இருந்தது. இன்னும் கொஞ்சம் மூக்கால் பேசி மலையாள வாடையில் பேசி பாரதியாரை காப்பாற்றி விட்டேன். ஒருவர் என்னை போட்டோ வேறு எடுத்தார். (புதுசா ஃப்லிம் மாற்றியிருப்பார் என்று நினைக்கிறேன். முதல் போட்டோ வருமோ வரதோ என்று என்னை வைத்து திருஷ்டி கழித்திருக்கலாம்). நான் பேச ஆரம்பித்தது சில வயசான சேட்டன்களுக்கும், இன்னும் சில பேருக்கும் "சூச்சா" போய்விட்டு வருவதற்கு வசதியாக இருந்தது.

முடிவில் சோறு போடுவார்களென்று காத்திருந்தால்...பரிமாறுவதற்கு உதவிக்கு கூப்பிட்டார்கள். பாயாசம், ரசம், சாம்பார், உருளைக்கிழங்கு கறி, முட்டைகோஸ் கறி என்று பிரமாதப் படுத்தியிருந்தார்கள். மலையாள அவியல் வாசனை மூக்கைத் துளைத்தது. நானும் பாலனும் பரிமாறும் கூட்டத்தில் சேர்ந்துகொண்டோம். வந்திருந்த கூட்டத்துக்கு இந்த சாப்பாடு காணாது என்று கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிட்டது. நமக்கு கடைசியில் கிடைக்காது என்று தெரிந்தும் பசியில் இன்முகத்தோடு சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் அள்ளிப் பரிமாறியது விளக்கெண்ணயும் தேனும் கலந்து குடித்த மாதிரி இருந்தது. கடைசியில் காக்காய்க்கு போடுவது மாதிரி கொஞ்சம் சோறும் ரசமும் மட்டும் கிடைத்தது. பாரதியார் புண்ணியத்தில் ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு படுத்தோம். ஆனால் அடுத்த நாள் பாரதியார் கைவிடவில்லை. பாலன் பிரமலதாவைக் கூட்டிக் கொண்டு சென்னை தோசா சென்று முந்தின நாளுக்கும் சேர்த்து ஒரு கட்டு கட்டினோம். நான் தான் பில்லு கொடுப்பேன் என்று முதலிலேயே பிட்டு போட்டு வத்திருந்தாலும் கடைசியில் "நான் குடுப்பேன்.. நீ குடுப்பேன்னு" பில்லு குடுப்பதற்கு நாடகம் நடத்தி கடைசியில் பாலன் தான் காசு குடுத்தார். சாப்பிட்ட சாப்பாடு கூடக் கொஞ்சம் இனித்தது. மனுசன் ரொம்ப வெள்ளந்தியாக இருக்கிறார். ப்ளாக் எழுதுவதாலும், பாரதியாராலும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று நன்றாகத் தெரிந்தது.

அடுத்த வாரம் யாராவது வீட்டுக்கு வர்றீங்களா? சென்னை தோசா போகலாம்...பில்லு நான் தான் குடுப்பேன் சொல்லிட்டேன் ஆமா...

Friday, September 23, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...7

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6

கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் இருந்தது. அடுத்த நாள் தான் மண்டபத்துக்குப் போவதாக ஏற்பாடு. தெருவில் இரண்டு வீடுகளை வாடைக்கு எடுத்திருந்தார்கள். நான், மெட்ராஸ், மற்றும் இன்னும் ரெண்டு பேரும் செட் சேர்ந்தோம். மெட்ராஸ் நல்ல கலகலப்பாகப் பழகினான். ராத்திரிக்கு தண்ணியடிக்க அழைத்துப் போவதாய் அன்பாகச் சொன்னான். பழக்கமில்லை என்றவுடன் கலாய்க்காமல் பண்பாக விட்டுவிட்டான்.நல்ல பையனாகத் தான் தெரிந்தான்.

பம்பாயும் அவளைவிட கொஞ்சம் வயது குறைந்த இன்னும் இரண்டு குட்டிகளும் செட்டு சேர்ந்திருந்தார்கள். என்னமோ பேசி க்ளுகென்று அடிக்கடி சிரித்துக் கொண்டிருந்தனர். அன்று மதியம் நான் இந்தப் பக்கம் போய் மோர் குடித்துவிட்டு வருவதற்குள் மெட்ராஸ் நைஸாக நூல்விட்டு கடலை வறுக்க ஆரம்பித்திருந்தான். நெல்லுக்குப் பாயறது புல்லுக்கும் பாயட்டுமே என்று நானும் சேர்ந்து கொண்டேன். என்ன இருந்தாலும் மெட்ராஸ் மெட்ராஸ் தான்! ஹிந்தியெல்லாம் பொளந்து கட்டினான். என்னோட ஹிந்தி மாமி அவ்வளவு தூரம் சொல்லிக் குடுக்கவில்லையாதலால் நானும் கச்சேரிக்குப் போனேன்ங்கிற ரீதியில் சும்மா அச்சா குச்சா என்று ப்ரவேஷிகா ஹிந்தியில் ஜால்ரா போட்டுக்கொண்டிருந்தேன். நல்லவேளை ரொம்ப நேரம் ஜால்ரா போடவேண்டிய அவசியமில்லாமல் பம்பாய் கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிட்டது. சும்மா அறிமுகம் தான் படுத்திக்கொண்டார்கள் என்பது புரிந்தது.

மெட்ராஸ் இருக்கும் போது பம்பாய் முன்னால் என்னால் ஷோபிக்க முடியாதென்று நன்றாகப் புரிந்தது. பம்பாய் ஐம்பதாயிரம் கலர் பட்டுப்புடவை ஜோதிகா மாதிரி அடிக்கடி ட்ரெஸ் மாற்றிக்கொண்டிருந்தாள். மெட்ராஸ் இதெல்லாம் அவனுக்காகத் தானென்றும், நான் எனக்காத் தான் என்றும் நினைத்துக் கொண்டோம். பம்பாய் நல்ல பதவிசாகப் பழகினாள். மெட்ராஸ் அடிக்கடி எதாவது சொல்லிக்குடுத்துக் கொண்டிருப்பான். பம்பாய் ஜன்னல் வைத்த சட்டை போட்டுக் கொண்டுவந்தால் வாஸ்து சொல்லுவான், பஜ்ஜியும் சொஜ்ஜியும் தின்று விட்டு ஜோக் அடிப்பான், பாட்டு பாடுவான். எனக்கு வெறும் காத்து தான் வரும். கூடவே காதிலிருந்து புகையும் வரும். "சுகப் பிரசவம் பார்பது எப்பிடி" என்பது தவிர கிட்டத் தட்ட எல்லா விஷயங்களையும் மெட்ராஸ் தெரிந்து வைத்திருந்தான். பம்பாய்க்கு என்மேல் ஒரு "இது" என்ற நம்பிக்கை வெகு சீக்கிரத்தில் புஸ்ஸாகிப் போனது.

கல்யாணங்களில் களை கட்டுவதே இரவு நேர அரட்டைக் கச்சேரிகள் தான். வெத்தலை போட்டுக்கொண்டு சில மாமாக்கள் அடுத்தாத்து மாமிகள் முன்னால் பிரதாபங்களை அளந்து விட்டுக் கொண்டிருப்பார்கள். ஒருபக்கம் பட்டுப் புடவை மாமிகள் தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள். அதுவும் இந்த முப்பதிலிருந்து நாற்பது வரை உள்ள அக்கா மாமிகளின் அரட்டையிருக்கிறதே...எஸ்.ஜே.சூர்யா ரகம். ஒரு தடவை காது குடுத்துக் கேட்டேன்...அடேயப்பா....ஆம்பளைகளையும் மிஞ்சி விட்டார்கள்.காதைப் பொத்திகறதுக்கு பத்து கைவேண்டியிருந்தது. சை என்று ஆகிவிட்டது. அதிலிருந்து இப்பொதெல்லாம் கல்யாணத்திற்கு போனால் இவர்கள் அரட்டையை மிஸ் பண்ணுவதே கிடையாது.

"அந்தாக்க்ஷரி" இல்லாத கல்யாணமும் கல்யாணமா? பம்பாய் அண்ட் கோ "அந்தாக்க்ஷரி" என்ற பாட்டுக்குப் பாட்டு விளையாட்டு ஆட ஆரம்பித்திருந்தார்கள். இத இத இதைத் தானே எதிர்பார்த்தோம். உடனே கூட்டத்தோடு கோவிந்தாக்களாய் நாங்களும் ஐக்கியமானோம். இந்த மாதிரி விளையாட்டுக்களில் வடகத்திய கூட்ட தொல்லை தாங்கமுடியாது. "சிந்தகி", "சப்னே", "மொஹபத்", "இஷ்க்" - இப்பிடி எதாவது வரும் ஹிந்தி பாட்டைப் பாட ஆரம்பித்துவிடுவார்கள். ஹிந்தி ப்ரவேஷிகா பரீட்சையில் எனக்கு இந்த மாதிரி சினிமா பட்டெல்லாம் சொல்லிக்குடுக்கவில்லை. என்னுடைய சுய ஆர்வத்தால் "சாரே ஜகான்சி அச்சா " மட்டும் ரெண்டு வரி தெரியும். கூட இருந்த ரெண்டு தீவட்டிகளுக்கு அதுவும் தெரியாது. இருந்தாலும் மெட்ராஸோடு சேர்ந்து கொண்டு கோவிந்தா பாட்டு பாடி ரொம்ப நாறாமல் சமாளித்தோம். முந்தின பாட்டிலிருந்து சில கீ வேர்ட்ஸ் நியாபகம் வைத்துக் கொண்டு அடுத்த அடுத்த கோவிந்தா பாட்டில் பாடுவோம். மிச்சத்தை மெட்ராஸ் பார்த்துக் கொள்வான்.

பம்பாய்க்கும் மெட்ராஸ்க்கும் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டேவந்தது. மண்டபத்துக்கு வந்த பிறகு ரெண்டுபேரும் திடீர் திடீரென்று காணமல் போய்விடுவார்கள். எங்கேயாவது ஒரு மூலையில் கடலை போட்டுக்கொண்டிருப்பார்கள். ஹிந்தி படித்துக் கொள்ளவேண்டும் என்று எனக்கு ஆர்வம் பிறந்ததே இப்பிடித் தான். காசியாத்திரை, ஊஞ்சல் என்று எல்லா இடங்களிலும் மெட்ராஸ் பம்பாய் பின்னாடியே மோப்பம் பிடித்துக்கொண்டு போனான்.


கல்யாண வீடுகளில் அரட்டை அடித்து அடித்து களைத்துப் போய் மதியம் இரண்டு மணிக்கு ஒரு தூக்கம் வரும் பாருங்கள்...ஒன்னு ரெண்டு டயாப்டீஸ் மாமாக்களைத் தவிர மண்டபமே தூங்கிப் போகும். நான் மட்டும் என்ன விதிவிலக்கா? கனவில் பம்பாயில் ஹிந்தி மாமியோடு "ருக் ருக் ருக்" பாட்டுக்கு கெட்ட ஆட்டம் போட்டு பிரவேஷிகா பரீட்சையில்...இந்தியாவிலேயே முதல் மாணவனாய்த் தேறி ராஷ்டிரபதி என் நெஞ்சில் பதக்கமும் குத்தி ஹிந்தி மாமியையும் கல்யாணம் பண்ணிவைத்த அந்த வேளையில்...மெட்ராஸும் பம்பாயும் எங்கேயோ கடலை சாகுபடி செய்துகொண்டிருந்தார்கள். ஹிந்திமாமியோடு குடித்தனம் நடத்த பிடிக்காமல் நான் முழித்துப் பார்த்தபோது...ஒரு மூலையில் மெட்ராஸும் பம்பாய் கையையைப் பிடித்துக்கொண்டிருந்தான். அதற்கப்புறம் கொஞ்சம் நேரத்தில் இருவரும் சிரித்துக் கொண்டே வந்தார்கள்.

அன்று சாயஙகாலம் நாங்கள் புறப்பட வேண்டியிருந்ததலால் மெட்ராஸ் பம்பாய் எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டேன். மெட்ராஸ் கண்ணைச் சிமிட்டி அவனுக்கு பம்பாய் தான் இனிமே எல்லாம் என்றான். வாழ்கைக்கு ஹிந்தி எவ்வளவு பிரயோஜனப் படும் என்று தெரிந்துகொண்டேன். ஆனால் அதற்கப்புறம் அவர்களை நான் பார்க்கவே இல்லை. இரண்டு வருடங்கள் முன்னாடி விசாரித்ததில் இருவரும் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன் - அவா அவா கணவன் மனைவியோட !

--இன்னும் ஜொள்ளுவேன்




Use this --> Comments(#)

Monday, September 19, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...6

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5

திருமண வைபவங்கள் மிகவும் குதூகலமானவை. அதுவும் நெருங்கிய சொந்த வட்டங்களில் என்றால் கேட்கவே வேண்டாம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி குஷி. சிறுவர் சிறுமியர்க்கு ஸ்கூலுக்கு லீவு, அப்பா அம்மா கண்டுகொள்ள மாட்டார்கள் விளையாடிக் கொண்டே இருக்கலாம். அப்பாக்களுக்கு அரட்டை அடிக்கலாம், அம்மாக்களுக்கு பிக்கல் பிடுங்கல் கிடையாது. சமைக்க வேண்டாம், வேளா வேளைக்கு வித விதமாக நகையும் உடையும் அணிந்து கொண்டு ஆற அமர அரட்டை அடிக்கலாம். டீனேஜ் பயன்களுக்கும் கல்யாணமாகத பிரம்மச்சாரிகளுக்கும் மட்டும் கொஞ்சம் ரெண்டுங்கெட்டானாய் இருக்கும். சரியான செட் அமையாவிட்டால் போர் அடிக்கும். செட் அமையாவிட்டாலும் கண்ணுக்குக் குளிர்ச்சியாய் பெண் வீட்டு சொந்தமோ, பையன் வீட்டு சொந்தமோ இருந்துவிட்டால் போதும். மனதில் ஒரு கிளுகிளுப்பு வந்து விடும். அவள் பார்ப்பாளே என்று கூட கொஞ்சம் ஷோக்காய் ஆடை அணிந்து கொள்ள ஆர்வம் பிறக்கும்.

இப்படி ஈடுபாடு இல்லாமல் ஓரளவு நெருங்கின சொந்தத்தில் ஒரு கல்யாணத்திற்கு ரெண்டு நாள் முன்னதாகவே போக வேண்டியிருந்தது. பாட்டிகளும் மாமாக்களும் மாமிகளும் சேர்ந்து நடத்தும் மாநாடு மாதிரி இருந்தது.

"ஏண்டியம்மா இந்தப் பச்சைக்கல் நெக்லெஸுக்கு தோதா ஒரு மூக்குத்தி வாங்கித் தரச் சொல்லப்பிடாதோ உன் ஆம்படையான?" - கவலையே படாமல் பாட்டிகள் ஆம்படையான்களுக்கு வேட்டு வைத்துக் கொண்டிருந்தார்கள்.

ஆம்படையான்கள் இது பற்றி கொஞ்சமும் தெரியாமல் "ஏண்டா அடுத்தாப்புல என்ன படிக்க போற? இந்தக் காலத்துல எவ்வளவு படிச்சாலும் காணாது பார்த்துக்கோ.." என்று எனக்குப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார்கள்.

பூச்சாண்டிகளை விட பாட்டிமார் கூட்டமே எவ்வளவோ தேவலை என்று அவர்களுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்ட போது தான் அவள் வந்தாள். எங்கள் ஊர் பக்கம் பெண்களெல்லாம் நன்றாக இருப்பார்கள். அதுவும் கல்லிடைக்குறிச்சியில் தெருவுக்குத் தெரு பஞ்சமே இருக்காது. என்ன கொஞ்சம் துடுக்குத்தனம் ஜாஸ்தியா இருக்கும் (ஹி ஹி...அம்மாடி நீ அப்பிடி கிடையாது நேக்குத் தெரியும்). இவளைப் பார்த்த போது கல்லிடைக்குறிச்சிக் களை தெரியவில்லை. அதையும் தாண்டி அழகாக இருந்தாள். இந்த ஷாம்பூ விளம்பரங்களில் ரெண்டு நிமிஷம் வந்து மனதைக் கொள்ளை கொள்வாளே அந்த மாதிரி பளிச்சென்று இருந்தாள். மார்டனாகவும் இருந்தாள். அன்றைக்கு எனக்கு கன்னி ராசி தூக்கலாக இருந்திருக்கவேண்டும். நேர நான் வம்பளந்துகொண்டிருந்த பாட்டியிடம் வந்து கட்டிக்கொண்டாள் (பாட்டியைத் தான்...) குடுத்து வைத்த பாட்டி. பாட்டி ஷேம லாபங்களை விசாரித்தலிருந்து பார்டிக்கு பம்பாய் என்று தெரிந்தது. (ஆல் இன்டியா லெவெலில் ஜொள்ளாட்டா ஜென்மம் சாபல்யம் அடையுமோ). பம்பாயும் பெங்களூர் லிஸ்டில் அன்று சேர்ந்துகொண்டது. கொஞ்ச நேரம் பாட்டியிடம் பேசி விட்டு பம்பாய் வேறு பாட்டியைக் கட்டிக்கொள்ள கிளம்பிவிட்டது. (ஹூம் பேசாம பாட்டியா பிறந்திருக்கலாம்).

பம்பாய் கலகலவென்று எல்லாரிடமும் பேசிக் கொண்டே தென்றலாய்த் தவழ்ந்தாள். இப்பிடி நான் பாட்டுக்குத் தேமேன்னு பம்பாயைப் பார்த்துக் கொண்டிருந்தபோது தான் அந்த வில்லன் வந்தான். சிரித்துக் கொண்டே அறிமுகப் படுத்திக்கொண்டான். புள்ளையாண்டன் மெட்ராஸிலிருந்து வந்திருந்தான். "என்ன அந்தப் பெண்ணை ரொம்ப லுக்கு விடறே? பிடிச்சிருக்கோ? " முகத்துக்கு நேர கெட்டவுடன் கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன். "அப்பிடியெல்லாம் இல்லை....அவ முகத்தை எங்கியோ பார்ர்தமாதிரி இருந்துது அதான் யோசிச்சிண்டிருக்கேன்...ஏன்?" சரளமாக வாயில் வந்தது.

"நல்லா இருக்கா இல்ல...ட்ரை பண்ணி பார்க்கலாம்னு இருக்கேன்" மெட்ராஸில் சிக்கந்தர் ஒப்பந்தம் பிரபலம் இல்லை போல. நேர பட்டா பண்ணி எடுத்துக் கொண்டான்.

"புரியறது. ம்...நீ நடத்து ராசா".

ஜொள்ளு விடுவது திங்கள்கிழமை காலைத் தூக்கம் மாதிரி. எழுந்திருக்க மனசே வராது. இனிய இம்சை. ஆனால் ஜொள்ளுவிடுவதைப் பக்கத்திலிருந்து பார்பது என்பது ஒன் டே கிரிக்கெட் மாட்சைப் பார்பது மாதிரி. விறுவிறுப்பாக இருக்கும். இப்பிடி விளையாடு அப்பிடி விளையாடு என்று சகட்டு மேனிக்கு வாரி வழங்கலாம். சொதப்பிட்டியேன்னு அங்கலாய்க்கலாம். ஜெயிச்சாலும் தோத்தாலும் காரணங்களை அலசிப் பொழுதைப் போக்கிக் கொள்ளலாம். மொத்ததில் நேகாமல் நொங்கெடுத்த திருப்தி கிடைக்கும்.

மெட்ராஸ் Vs பம்பாய் மேட்ச்சும் இப்பிடித் தான் விறுவிறுப்பாக இருந்தது.


--இன்னும் ஜொள்ளுவேன்




Use this --> Comments(#)

Thursday, September 15, 2005

கவிதெ!

சமீபத்திய திரையிசைப் பாடல்களில் ரசித்த வரிகள்.

"உன்னை நாக்கடியில் கற்கண்டாக ஒளிச்சேன்.." - ரெண்டக்கா பாட்டு.அந்நியன்


வித்தியாசமான சிந்தனை. அருமையான வரிகள். நினைச்சுப் பார்க்கவே அருமையாக இருக்கிறது. ஆனால் இதற்கு முன்னால் வரும் வரி தான் புரியவேஇல்லை. அதென்ன "உன்னை தேக்கடியில் யானையாக நினைச்சேன்" யானைதானா இல்லை டமீலில் பாடியதின் விளைவா? இல்லை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லையா என்று தெரியவில்லை. அதென்ன தேக்கடி யானை? எனக்கு விக்ரமைப் பார்த்த போது ஹிப்பி வைத்துக்கொண்ட வாழைக்காய் பஜ்ஜி மாதிரி தான் தெரிந்தார்.

கதவில்லா கழிவறைக்கு பக்கெட்டு காவல் - மச்சி
ஆச்சான்னு அடுத்த ஆளு உடனே தாவல்


- புறாக் கூண்டு போல பாட்டு, காதல்

:)))) பெண்கள் ஹாஸ்டலில் எப்பிடியோ தெரியாது ஆனால் எல்லா ஆண்கள் ஹாஸ்டல், டார்ம், மேன்சன் என்று எல்லா இடங்களிலும் நடக்கும் அன்றாட நிகழ்வு தான். அதுவும் முப்பத்தைந்திலிருந்து நாற்பது வரை உள்ள மீடியம் மாமாக்களுடன் இருந்துவிட்டால் போதும் தொல்லை தாங்க முடியாது. உள்ள போய் உலக விஷயங்களைப் பற்றி சிந்திக்க விட மாட்டார்கள், ஆச்சா ஆச்சான்னு அரித்துப் புடுங்கிவிடுவார்கள். (நமக்கு கற்பனை பிறப்பதே இங்கு தான்..உள்ள போனா சிந்தனா சிற்பியாகிவிடுவோம்ல). வரிகள் பாட்டில் அருமையாக சுருதி சேர்ந்திருக்கிறது.

Tuesday, September 13, 2005

பொன்னியின் செல்வன்

சமீபத்தில் லண்டன் ப்ளாகர்ஸ் மீட்டில், நாங்களெல்லாம் ஒரு ஓரத்தில் வடை தோசையை நொசுக்கிக் கொண்டு இருந்த போது இன்னொரு ஓரத்தில் குருவும் "மே மாதம்" ஆனந்தும் கல்கியின் பொன்னியின் செல்வனை படமாக்குவது பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். (நான் கூட அருண்மொழித் தேவர் பாத்திரத்துக்கு மறைமுகமாக அப்ளிகேஷன் போட்டுப் பார்த்தேன்...காதில் விழாதமாதிரி நடித்து விட்டார்கள் சதிகாரர்கள்). சமீபத்தில் இருவரும் அதைப் பற்றி பதிந்திருக்கிறார்கள்.(படமாக்குவதைப் பற்றி).

என்னைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வனை ஒரே படமாக எடுப்பது என்பது, பதினெட்டு முழப் புடவையை கழுத்தில் "டை" யாக கட்டிக்கொள்வது போல. அரண்மனை மண்டபத்தில் ஓப்பனிங் சீனில் குலுக்கு நடனமும் பரதநாட்டியமும் கலந்து நடன மாதர் ஆடும் ஒரு ஆட்டம் என்று ஆரம்பித்து, அருவிக் கரையில் சொட்டச் சொட்ட ரொமேன்ஸ், நடு நடுவே சென்டிமென்ட் வசனங்கள், யானை பூனையெல்லாம் வைத்து சண்டைக் காட்சி இப்பிடி கமர்ஷியல் காம்ப்ரமைஸ்களுக்கு நடுவே பொன்னியின் செல்வனை சொதப்பாமல் எடுக்க ரொம்ப பிரயத்தனப் பட வேண்டும். எடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று தெரிந்தால் போதும் ஒரு அரை குறை "பொன்னியின் மைந்தன்" என்று போட்டி படத்தை அவசர அவசரமாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்து கிடைச்சது லாபம் என்று உலகத் தொலைக்காட்சிகளிலே முதன் முறையாக உலவ விட்டுவிடும். "பீ", "சி" தியேட்டர்களில் ஓட வேண்டும் என்பதற்காக அஜீத் மாமா தொப்பையைக் காட்டிக் கொண்டும், ராணி வேஷத்தில் வசதியாக கவர்ச்சிக் கதாநாயகியும் (பிஸின்னோ அஸின்னோ ) "குந்தவை ராசா" , "வை வை குந்தவை பார்கிறவன் கண்ணுல் தீயவை" என்ற த்த்துவப் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டு மகிழவைப்பார்கள். கோயில் திருவிழா, மசாலா மிக்ஸ், டாப் டென் என்று எல்லா இடங்களிலும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் அப்புறம் பொட்டியில் போய் படுத்துக் கொள்ளும்.

முதலில் உண்மையான நோக்கத்துடனும், வெறியுடனும் எடுக்க ஆரம்பித்தவர் பாதி கிணறு தாண்டிய பிறகு பைனான்ஸ் பிரச்சனையால் உலக வங்கியில் கடன் வாங்க அப்ப்ளிகேஷன் போட்டுவிட்டு பட்த்தை கிடப்பில் போட்டுவிடும் அபாயமும் இருக்கிறது.

என்னவோ எனக்கு "பொன்னியின் செல்வன்" படமாக வரவேண்டும் என்றும் இருக்கிறது வேண்டாமென்றும் இருக்கிறது. பொன்னியின் செல்வன் படித்தவர்கள் எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் மனதில் ஒரு வடிவம் கொடுத்திருப்பார்கள். திரையில் அதைக் கொண்டு வந்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கும். அதில் தான் படத்தின் வெற்றியும் அடங்கி இருக்கும் என்று தோன்றுகிறது.

நான் "லக்ஷிமி"யாக நினைத்து வைத்திருக்கும் குந்தவை, இன்றைய காலேஜ் பசங்களுக்கு அஸினாகத் தெரியலாம் இல்லை டமீல் பேசும் வடநாட்டு நடிகையாகத் தெரியலாம்.

நான் படித்த போது என் மனதில் தோன்றியவர்கள்

அருண்மொழித் தேவர் - சிவாஜி கணேசன்
வந்தியத் தேவன் - ஜெமினி கணேசன்
(வேறு யாரையும் பேண்ட்டுக்கு மேல் குட்டைப் பாவாடை போட்டுக் கொண்டு நினைக்கத் தோன்றவில்லை)

குந்தவை - லெஷ்மி
(சின்ன வயது லெக்ஷ்மி ஓய்...இப்போ லெக்ஷ்மியை போட்டால் எங்க தாத்தா கூடப் பார்க்கமாட்டார்)

பெரிய பழுவேட்டரையர் - பி.எஸ்.வீரப்பா
சின்ன பழுவேட்டரையர் - ஆர்.எஸ்.மனோகர்

நந்தினி, வானதி - சாண்டில்யன் கதைகளுக்கு சித்திரங்களில் வரும் கதாநாயகிகள்

மற்ற எல்லார் பாத்திரங்களுக்கும் மனதில் பழைய படங்களில் வரும் நடிகர்களின் உருவம் இருக்கிறது ஆனால் பெயர்கள் தெரியவில்லை.

உங்களுக்குத் தோன்றிய கற்பனைகளையும் அறிய ஆவலாய் இருக்கிறேன்.

Tuesday, September 06, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...5

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4

அவன் நெட்டையன். அவனுக்கு கத்திரிக்காயைப் பிடிக்காது அதனால் காதலையும் பிடிக்காது. இவன் குட்டையன். இவனுக்கு கத்திரிக்காயையும் தெரியாது காதலையும் தெரியாது. ஆனால் தெரிந்த மாதிரி நடித்தால் தனது பென்சில் மீசையை அரும்பு மீசை என்று காலேஜில் நம்பி விடுவார்கள் என்று நடித்துக் கொண்டிருப்பான். இருவருக்கும் எதிர் துருவங்களில் வீடு. காலேஜ் நடுவில்.

மெகா சீரியல் மாதிரி நிதானமாய் போய்க் கொண்டிருந்த இருவர் வாழ்விலும் புயலாய் நுழைந்தாள் அவள். நடிகர் முரளி கனவில் கொலுசு போட்டு அழகு பார்த்து ஃபீலிங்காய் பாட்டு பாடுவாரே அந்த அழகு. துடைத்து வைத்த குத்து விளக்கு மாதிரி பளிச்சென்று இருப்பாள். அதிர்ந்து பேசமாட்டாள். ஆனால் எனக்கென்னவோ அவளை பார்த்த போது தீப்பொறி பத்தவே இல்லை. (ஹைய்யா..இன்னிக்கி தங்கமாளிகை பில்லு ஏறாது).

அதற்கப்புறம் நெட்டையனும், குட்டையனும் அநியாயத்திற்கு நல்லவர்கள் ஆகிவிட்டார்கள். இந்தப் படத்துக்குப் போலாமா அந்தப் படத்துக்குப் போலாமா என்று அலைபவர்கள் ஒழுங்காய் கல்லூரிக்கு வர ஆரம்பித்தார்கள். "தேவர் மகனில் கமல் கௌதமிக்கு உண்மையிலேயே உம்மா குடுத்தாரா" என்ற அறிவுப் பசியைத் தூண்டும் கலா தத்துவ விவாதங்களிலே கலந்து கொள்ளாமல், குத்துவிளக்கிற்கு தேவுடு காக்க ஆரம்பித்தார்கள். குத்துவிளக்கு எங்களுக்கு ஜூனியர். குத்துவிளக்குக்கு குட்டையனோட் ஊர். வசதியாய் போயிற்று. ஒன்பது மணி காலேஜுக்கு, குத்துவிளக்கு 8 மணிக்கே வருகிறதென்று குட்டையனும் அதே பஸ்ஸில் வர ஆரம்பித்தான்.

முதலில் குட்டையனுக்கும் நெட்டையனுக்கும் லேசாக மனஸ்தாபம் ஆரம்பித்தது. அப்புறம் "ஜோ ஜீத்தா வோ ஹீ சிகந்தர்" ஒப்பந்தம் செய்து கொண்டு இருவரும் அபூர்வ சகோதரர்கள் ஆனார்கள். ஆனால் இருவருமே ஜென்டில்மேன் சிகந்தர்கள். குட்டையன் குத்துவிளக்கு எப்போ எந்த பஸ்ஸில் ஏறினாள், எவ்வளவு சில்லறை குடுத்து டிக்கெட் வாங்கினாள், நெயில் பாலீஷ் போட்டிருக்கிறாளா, என்ன கலர் கர்சீப் கொண்டு வந்திருக்கிறாள் என்ற முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வான். நெட்டையன் குட்டையன் இல்லாத போது என்ன நடந்தது என்பதை கவனித்து நியாபகமாக அப்டேட் செய்வான். மொத்தத்தில் ஷிப்ட் முறையில் முழுநேர குத்துவிளக்கு வாட்ச்மேன் சர்வீஸ் இனிதாக நடந்தேறி வந்தது.

எங்கள் கல்லூரிக்குப் பெண்கள் புதுசாகையால் (பாகம் இரண்டு அதிகாரம் நான்கு) வகுப்பு இல்லாத நேரங்களில் பையன்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள பெண்களுக்குத் தனியாக ஒரு ஓய்வறை கொடுத்திருந்தார்கள். இது போதாதென்று அந்த கல் நெஞ்ச ப்ரின்ஸிபால், குஞ்சம்மா (உண்மையான பெயர்) என்ற ஒரு கடுத்த மூஞ்சி அம்மணியை வேறு அதற்கு காவலாக அமர்த்தியிருந்தார். பெண்கள் கமேண்டோ பிரிவில் கருப்பு பெல்ட் வாங்கின மாதிரி இருப்பார். எப்போதும் சந்தேகப் பார்வை தான். அபூர்வ சகோதரகளுக்கு தலைவலியே அவள் தான். அக்னிநட்சத்திரம் மாதிரி அடிக்கடி முறைத்துக் கொள்வார்கள்.

குட்டையன் நோட்ஸ் தருகிறேன் அது இதுவென்று அஜால் குஜால் பண்ணி ஒருவழியாக கடைசியில் குத்துவிளக்கை பஸ் சினேகம் பிடித்துவிட்டான். நெட்டையனும் ஒட்டிக் கொண்டான். இருவரும் குஞ்சம்மாவுக்கு தெரியாமல் மரத்தடியில் நைஸாக குத்துவிளக்கிடம் கடலை போடுவார்கள். அவளுக்கு நோட்ஸ் குடுக்கவேண்டும் என்று லைப்ரெரிக்கு சென்று ரெபரன்ஸ் புத்தகத்தையெல்லாம் பார்த்து நோட்ஸ் எடுப்பார்கள்.

"இந்தப் படிப்பை போன வருஷம் படித்திருந்தாலாவது பிரயோஜனமாக இருந்திருக்கும்...இன்னமும் கெட்டுப் போகவில்லை இந்தவருஷப் படிப்பை படிங்கடா..அடுத்த வருஷம் நோட்ஸ் குடுத்துக்கலாம் "

கேட்டால் தானே! மன்மதக் குஞ்சுகள் மிதப்பில் இருந்தார்கள். சீன் காட்டும் படலம் ரொம்ப நாள் தொடர்ந்தது. இப்படியாக ஒருநாள் குட்டையன் நோட்ஸ் குடுக்கிறேன் பேர்வழி என்று ராகு காலமும் யெம கண்டமும் கூடி வரும் வேளையில் அவள் வீடுக்கே ஒரு நாள் போய்விட்டான். நல்ல நேரம் பார்த்துப் போயிருக்க வேண்டாமோ. கூட இருந்த நல்லவர்களின் வயித்தெரிச்சல் வேறு சேர்ந்து கொண்டது. அப்புறம் மரக்தடி கடலை சாகுபடி கம்மியாகிவிட்டது. அதற்கப்புறம் என்னமோ குத்துவிளக்கு இவர்களைப் பார்த்தால் விஷயமாகப் பேசி விட்டு போய்விடுவாள். என்னமோ நடந்திருக்க வேண்டும்.

குத்துவிளக்கு ஒரு நாள் "நீங்கள் இருவரும் எனக்கு நோட்ஸ் குடுத்து அறிவுக் கண்ணைத் திறந்த அண்ணன்கள்" என்று ராக்கி கட்டிவிட்டது.

அண்ணன்களும் விஷயத்தை அமுக்கப் பார்த்தார்கள். ம்ஹூம்...அரசல் புரசலாகி வெளியே தெரிந்து விட்டது.

"டேய் குட்டையா உனக்கு நான் அப்பவே சொன்னேன்ல...ஆட்டுக்கு வால் அளந்து தான்டா வைச்சுருக்கான்..எதோ இந்த மட்டுக்கும் உன்ன தம்பீன்னு சொல்லாம அண்ணன்னு சொன்னாளே...அந்த மட்டுக்கும் சந்தோஷப் பட்டுக்கோ..."

ஆனாலும் அபூர்வ சகோதரர்கள் அதற்கப்புறமும் அடங்கவே இல்லை....

கேட்டால் - "அவளைப் பிடிக்கும் ஆனால் அந்த மாதிரியெல்லாம் இல்லை, அவள் எங்களை அண்ணன்னு சொன்னது எங்களுக்கு சந்தோஷம் தான்" என்று தங்கைக் கோர் கீதம் பாட்டுப் பாடுவார்கள்.

"சரி சரி என்னையும் உன் கூடப் பிறந்த தம்பியா நினைச்சு சாலிட் ஸ்டேட் நோட்ஸ் எடுத்துக் குடுடா "

"டேய் நீங்க குத்துவிளக்க பார்க்கறீங்களா இல்ல குஞ்சம்மாவ பார்க்கறீங்களா...என்ன கருமாந்திரம்டா...உங்க கேரக்டரயே புரிஞ்சுக் முடியலயே..."

சிவாஜி குரலில் "அம்மா அம்மாடி..உனக்கு நியாபகம் இருக்கா..நீ பர்ஸ்ட் செமெஸ்டர்ல இருக்கும் போது எல்க்டிரிசிட்டி நோட்ஸ் கேட்ட...யுனிவர்ஸிட்டி புக்க படிச்சா..ஊத்திக்கும்ன்னு லைப்ரேரிக்கு ஓடிப்போய் பிர்ஜ்லால் சுப்ரமணியம் புக்க பார்த்து நோட்ஸ் எடுத்துக் குடுத்தேனே..நீயும் படிச்சுட்டு 85 பெர்சன்ட் மார்க் வாங்கினியே...இப்பிடியெல்லாம் செஞ்சா உன் மனம் கவர்ந்த கண்ணனாக ஆவேன்னு நானும் நினைச்சேனே; ஆனா நீ...கண்ணன் இல்லடா வெண்ணை அண்ணன்னு அன்னிக்கு சொல்லிட்டியே..."

அடிக்கடி விதவிதமாய் பையன்கள் கலாய்ப்பான்கள்.

அண்ணன்கள் இந்த சலசலப்புகெல்லாம் அஞ்சவில்லை. ரொம்ப நாள் பாசமலர் படம் தொடர்ந்தது. அப்புறம் குத்துவிளக்கு கல்யாணத்திற்கும் போய் சாப்பிட்டுவிட்டு முறை செய்துவிட்டு வந்ததாகக் கேள்விப் பட்டேன்.

--இன்னும் ஜொள்ளுவேன்




Use this Comments(#)

Friday, September 02, 2005

சிறுவர் பூங்கா

அம்புலிமாமா, பூந்தளிர், பாலமித்ரா, கோகுலம் - இந்த புத்தகங்களையெல்லாம் படித்திருக்கிறீர்களா? நான் சின்ன வயதில் ரொம்பவும் விரும்பிப் படித்த புத்தகங்கள். வளர்ந்தாலும் இந்த புத்தகங்கள் எங்கேயாவது கிடைத்தால் படிப்பேன். இந்த புத்தகங்கள் இன்னமும் என்மனதில் பசுமையாக இருக்கின்றன. இது போக ஸ்பைடர்மேன், ஆர்ச்சி, இரும்புக்கை மாயாவி போன்ற புத்தகங்களும் மிகவும் பிடித்தவை. என் குழந்தைகளுக்கு தமிழ் படிக்கச் கற்றுக் கொடுத்து இவற்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்.

சமீபத்தில் தான் சிறுவர் பூங்கா என்ற இந்த வலைப்பதிவை படிக்க நேர்ந்தது. மிகவும் நேர்த்தியாக சிறப்பாக செய்து வருகிறார் பரஞ்சோதி. இவரின் பணி மிகவும் பாராட்டுக்குரியது. நான் மிகவும் ரசித்துப் படிக்க ஆரம்பித்திருக்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று. நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் பாராட்டுக்களையும் மறக்காமல் சொல்லுங்கள்.

Thursday, September 01, 2005

கார்காலம்

லண்டனில் போக்குவரத்து வசதிகள் நன்றாக இருப்பதால் 4 வருடங்களாக கார் வாங்க வேண்டும் என்று என்னமோ தோன்றவே இல்லை. குடும்பத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் செய்தி தெரிந்தபோது தான் லைசன்ஸுக்கே விண்ணப்பித்தேன். அதுவரை காரில் உட்கார்ந்து தான் போயிருக்கேனே தவிர காரைப் பற்றி ஏ.பி.சி (ஆக்ஸிலரேட்டர், பிரேக், காஸ்) கூடத் தெரியாது. யாரைக் கேட்டாலும் லைசன்ஸ் டெஸ்டில் குறைந்தது நான்கு முறையாவது பெயிலாயிப்பதாக பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள். சிலபேர் கஜினி முகம்மது கேஸ். சரிதான் நமக்கு ஒன்றுமே தெரியாதே...நாம் லைசன்ஸ் வாங்கி கார் வாங்குவதற்குள் ரிடையர் ஆகிவிடுவோம் என்று நினைத்தேன். நல்ல வேளை எங்கோ எப்போதோ தெரியாமல் செய்த புண்ணியத்தால் இரண்டாம் முறையே பாஸ் செய்து காரும் வாங்கிவிட்டேன். முதலில் கொஞ்ச நாட்கள் உள்ளூரிலேயே ஜானவாசம் மாதிரி சுற்றிக்காட்டினேன். ஆனால் என் மகளுக்கே அது போர் அடித்துவிட்டது. இந்த ஊரில் ரவுண்டானாக்கள் தான் கொஞ்சம் சிக்கலே. எந்த எக்ஸிட்டில் போகவேண்டும் என்பதைச் சொல்ல மனைவி பக்கத்திலிருப்பார் ஆனாலும் கரெக்டாகத் தப்பாகப் போய்விடுவேன். அப்புறம் எங்கே போகிறோம் என்று தெரியாமலே கொஞ்ச நேரம் பெக்க பெக்கவென்று ஓட்டிக்கொண்டுபோவேன். முதலில் சமாளித்து விட்டேன். வழியில் தேம்ஸ் நதி வந்து போட்டெல்லாம் நின்று கொண்டிருந்தது. என் மகளுக்கு ஜாலி.

"குழந்த ஆசப்படுவாளேன்னு தான் இங்க வந்தேன்...பாரு எவ்வளவு குஷி அவளுக்கு.."

இரண்டாம் தரம் ஒரு நண்பர் வீட்டுக்கு போகவேண்டியது ஏதோ ஒரு அத்துவானக் காட்டில் சினிமா காம்ப்ளெக்ஸில் போய் நின்றோம்.சமாளிக்க முடியவில்லை அப்புறம் நண்பருக்கு போன் போட்டு அவர் வந்து கூட்டிக்கொண்டு போனார். அங்கே எப்பிடி போனோம் என்று அவருக்கு ரொம்ப ஆச்சர்யம்.

அடுத்த தரம் ரவுண்டானா ரொம்பப் படுத்திவிட்டது.

"நாந்தான் நாலாவது எக்ஸிட்ன்னு கரெக்டா சொன்னேனே..."

"அப்பிடின்னு நீ நினைச்சுண்டு இருக்க...இது நாலாவது எக்ஸிட்டா? இப்போ பார் எங்கே இருக்கிறோம் என்றே தெரியவில்லை"

"நான் கரெக்டாத் தான் சொன்னேன்...நீங்க தப்பா போனா நானா பொறுப்பு.."

"என்ன சொன்னேன் நொன்னேன்னு...இப்போ எங்கே இருக்கோம்னு கரெக்டா கண்டுபிடி பார்ப்போம்.."

"இது நல்லா இருக்கே...நீங்க தப்பா போயிட்டு நான் கண்டுபிடிக்கனுமா..உங்களோட இந்த கச்சேரிக்கெல்லாம் என்னால வயலின் வாசிக்கமுடியாது...நீங்களே கண்டுபிடிச்சுக்கோங்கோ.."

"பேசாம எரோப்பிளேன் முதலாளி பொண்ண கல்யாணம் பண்ணி இருக்கலாம். எரோப்பிளேன் ஓட்டறது ரொம்ப ஈ.ஸி இந்த ரவுண்டானா இழவெல்லாம் கிடையாது"

போனவாரம் மாதர் குல டெலிபோன் உரையாடலை ஒட்டுக் கேட்டேன்..இந்த ரவுண்டானா இழவால எல்லா புது ட்ரைவர் வீட்டுலயும் புருஷன் பெண்டாட்டிப் பிரச்சனை வருதாம்.